இந்த வலையில் தேடவும்

Thursday, June 9, 2011

கலைடாஸ்கோப்- 21

லைடாஸ்கோப்- 21 உங்களை வரவேற்கிறது

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
==============================

சில பேருக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. நான் எழுதிய ஒரு கவிதைக்கு Anonymous என்ற ஒருவர் எழுதிய பின்னூட்டத்தைப் பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.

கவிதை

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?
வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...
தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..
தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..
காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..
மனைவியின் சமையலை
நேரலையாய் கண்டு ரசிக்கலாம்..
நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...
நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...
ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...

இப்போது இதன் பின்னூட்டம்:

நிஜ வாழ்க்கையில், நடப்பவை எல்லாம் மனைவியின் பதில் களாக!

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?

வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...
அன்பு மனைவி - ஏங்க, இன்னிக்கி லீவு தான, கொஞ்சம் குழந்தைய பார்த்து கிட்டு தூங்க வைச்சிடுங்களேன்

தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..
- சும்மாவே இருக்க மாட்டீங்களா? நேத்து தான் தண்ணி ஊத்துனேன், இதுல மழை வேற பெஞ்சது.
உதவி பண்ணலனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கலாம் ?

தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..
அன்பு மனைவி- எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க? சீரியல்ல வர்ற பொண்ண கூட சைட் அடிக்கனுமா?

காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..
அன்பு மனைவி- ஒரே நியூஸ் பேப்பர எத்தன தடவ படிப்பீங்க? இந்த பழைய பேப்பர் எல்லாம் அடுக்கி வைச்சீங்கன்ன, போட்டு எவர் சில்வர் பாத்திரமாவது வாங்கலாம்.

மனைவியின் சமையலை
நேரலையாய் கண்டு ரசிக்கலாம்..
அன்பு மனைவி - வந்து கிச்சன் வேடிக்கை பாக்குறத விட, இந்த தேங்காய் கொஞ்சம் உடைச்சி குடுங்க.

நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...
அன்பு மனைவி - இன்னிக்கி ஒரு நாள் எதோ லீவு. இன்னிக்காச்சும் போன் ஆப் பண்ணி வைங்க. எப்ப பார்த்தாலும் பேச வேண்டியது. அப்படி என்னத்த தான் பேசுவீங்களோ?

நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...
அன்பு மனைவி - என்னங்க, அது பக்கத்துக்கு வீடு. நம்ம வீட்ட விட்டுட்டு வேற எல்லாத்துலயும் ஒட்டடை அடிங்க...கடவுளே.. (தலையில் அடித்து கொள்கிறார்)

ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...
அன்பு மனைவி- அதான், உங்களுக்கு வராதுல்ல...அப்புறம் என்ன இன்னும் சின்ன பையன் மாதிரி..மானம் போகுது. ப்ளீஸ் வீடுக்குள்ள வாங்க.

என்ன தான் சொன்னாலும்
வழக்கமான விடுமுறைகளை விட
எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எப்போதும் அழகாய் இருக்கின்றன,,

அன்பு மனைவி- அதெப்படி அழகா இல்லாம போகும் னு கேக்குறேன். வேல வெட்டி எதுவும் இல்லாம, நாள் பூரா சாப்டுட்டு தூங்கிட்டு இருந்தா, இப்படி லாம் கவிதை வேற வரும். எல்லாம் எங்க அப்பா சொல்லணும். இப்படி ஒருத்தர எங்க தான் தேடி பிடிச்சி.....ம்ம்ம்ம்
--------- அன்பு மனைவி

பயணம்
=======

சமீபத்தில் கே.பி.என் சொகுசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 20 க்கும் மேற்பட்டவர்கள் பலியான விபத்தைப் பற்றி படித்திருப்பீர்கள். பாட்டி மிகவும் FEEL செய்து சொன்னாள் என்பதற்காக இப்போதெல்லாம் பெங்களூரில் இருந்து கோயமுத்தூருக்கு மைசூர் வழியாக செல்வதில்லை. (வழியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன)
ஆனால் சேலம் வழியாக சென்றாலும் உயிருக்கு பெரிதாக உத்தரவாதம் இல்லைதான் போலத் தோன்றுகிறது. கதவுகள் ஜன்னல்கள் மூடியிருக்க ஏ.சி யின் மயக்கத்தில் போய்ச்
சேர்ந்து விடுவோம் (ஊருக்கு தான்!) என்ற நம்பிக்கையில் எவ்வளவு ஹாயாக நாம் ஸ்லீப்பர் பஸ்சுகளில் தூங்கிக் கொண்டு வருகிறோம் என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

இனி மேல் புறப்படும் போது ஆஞ்சநேயரை வழிபட்டு 'புத்திர்பலம்' என்ற ஸ்லோகத்தை சொல்லி விட்டு ஒரு பத்து ரூபாய் நோட்டை நேர்ந்து கட்டி வைத்து விட்டு புறப்படு என்கிறாள் அம்மா.நம் உயிரை ஆஞ்சநேயர் காப்பாற்றுவாரா இல்லையா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். பஸ்ஸில் உள்ள அனைவரின் உயிரும் பஸ் டிரைவரின் கையில் தான் இருக்கிறது. விபத்து நடந்து விட்டால் அந்த டிரைவரை தூக்கில் போடு என்றெல்லாம் டென்ஷன் ஆகி குரல் கொடுக்கும் நாம் அதே டிரைவர் இத்தனை நாளாய் ஆயிரக்கணக்கான பேர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்த்ததற்கு ஒரு நன்றியாவது சொன்னோமா தெரியவில்லை. நன்றி வேண்டாம் பஸ்ஸை விட்டு இறங்கும் போது நமக்காக தூக்கம் துறந்து வண்டி ஒட்டிய மகானுபாவர் யார் என்று ஒரு முறை டிரைவரைத் திரும்பிப் பார்த்திருக்கிறோமா என்பது கூட சந்தேகம் தான். ஒரு வினாடிக்கும் குறைவான காலத்தில் முடிவெடுப்பதில் ஏற்படும் குளறுபடிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் அந்த டிரைவருக்கு தண்டனை கொடுப்பது மகா அபத்தம். கே.பி.என் டிரைவர்கள் (நான் அறிந்த வரை) அனுபவம் உள்ளவர்கள். மிக அதிக வேகத்தில் ஒட்டுவதில்லை. பத்து மணிக்கு புறப்பாடு என்றால் அதிக பட்சம் பத்து ஐந்துக்குள் புறப்பட்டு விடுகிறார்கள்.என்ன தான் இருந்தாலும் விபத்துகள் நடக்கவே நடக்காது என்று யாராலும் சொல்ல முடியாது.

வீடியோ கேமில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போது கொஞ்சம் கை பிசகி வண்டி விழுந்து விட்டால் பெரிதாக எதுவும் இல்லை. மீண்டும் ஒரு வண்டி Fresh ஆக திரையில் எங்கிருந்தோ தோன்றும். இல்லை GAME OVER என்று வரும் அவ்வளவு தான். ஆனால் நிஜ பஸ்ஸில்? GAME (called life) OVER என்று எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்கெல்லாம் இல்லை.

என்ன ஒரு துரதிர்ஷ்டம் என்றால் அந்த பஸ் தீப்பிடிக்காமல் இருந்திருந்தால் சில பல காயங்களுடன் நிறைய பேர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (பத்தடி பள்ளம் தான்) ஆனால் இன்றைய சொகுசு பேருந்துகள் பல கம்சனின் சிறை போல எல்லா வழிகளையும் அடைத்துக் கொண்டல்லவா பயணிக்கின்றன? நிறைய பஸ்களில் எமர்ஜன்சி எக்ஸிட் இருப்பதில்லை. இருந்தாலும் அதை திறப்பதற்கு ஒரு Ph .D செய்திருக்க வேண்டும் போலிருக்கிறது. எடுத்ததற்கெல்லாம் முன்னாள் ஆட்சியாளர்களைக் குறைகூறிக் கொண்டிருக்கும் அரசாங்கம் இதையெல்லாம் கொஞ்சம் கவனித்தால் பரவாயில்லை.

(கொசுறு: நாளை ஊருக்கு போகிறேன்.(KPN இல் தான்!) கலைடாஸ்கோப் -22 எழுதுவதற்கு திரும்பி வருவேனா என்பது ஆஞ்சநேயருக்கே வெளிச்சம்)

a Tear and a Smile
=================

கடைசியாக நீங்கள் எப்போது சிரித்தீர்கள்? அது ஒரு நிமிடம் முன்பு இருக்கலாம். ஒரு மணி நேரம் முன்பு இருக்கலாம். ஆபீசில் பக்கத்து சீட்டுக் காரார் சொன்ன மொக்கை ஜோக்குக்கு கூட கெக்கே பிக்கே என்று காரணமில்லாமல் சிரித்திருப்போம். இல்லை மேனேஜரோ நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரோ ஏதாவது அபத்தமாக சொன்னார்கள் என்றால் அவரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று விழுந்து விழுந்து சிரித்திருப்போம்.(உண்மையில் அழுதிருக்க வேண்டும் ) இல்லை டி.வி யில் கவுண்டமணி 'பேரிக்காய் தலையா' என்றோ 'தீஞ்சு போன ரப்பர் வாயா' என்றோ செந்திலை செந்தமிழில் திட்டிக் கொண்டிருந்தால் அப்போது சிரித்திருப்போம்.

ஆனால் நீங்கள் கடைசியாக எப்போது அழுதீர்கள் என்று நினைவில் கொண்டுவர முடியுமா? தாத்தா இறந்த போது? ஹ்ம்ம்..அப்போதும் உண்மையாக அழவில்லை. ரொம்பவும் எதிர்பார்த்த இன்டர்வியூ ஃபெயில் ஆகி வீடு திரும்பியதும் ஓ என்று அழ வேண்டும் போல தோன்றினாலும் வேறு ஏதோ விஷயத்தில் மனதைத் திருப்பியோ 'You can win ' போன்ற லூசுத் தனமாக புத்தகங்களைப் புரட்டியோ வந்த அழுகையை அப்படியே யு டர்ன் அடித்து உள்ளேயே திருப்பி விட்டு விடுகிறோம். சிரிப்பது உடல்நலத்துக்கு எவ்வளவு நல்லதோ அழுவதும் அந்த அளவு நல்லது என்று இன்றைய மனநல வி
ஞ்ஞானிகள் சொல்வதை நீங்கள் படித்திருக்கலாம். எனவே இனிமேல் அழவேண்டும் என்று தோன்றினால் தயவு செய்து சிரிக்காதீர்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியோ . உங்கள் social image பற்றியோ கவலைப்படாமல் Leave me alone என்று சொல்லி விட்டு உங்கள் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டு கண்ணீர் வற்றும் வரை அழுது தீருங்கள்.. அதே போல வாழ்ந்து முடித்து இறந்த ஒரு ஆளின் இழவு வீட்டில் உங்களுக்கு ஏனோ காரணமில்லாமல் சிரிப்பு வந்தாலும் Excuse me சொல்லி விட்டு தனியாக சென்று கெக்கே பிக்கே என்று சிரிக்கவும். இனி கலீல் கிப்ரானின் a Tear and a Smile என்ற ஒரு கவிதை:

என் இதயத்தின் துயரங்களை - ஒரு
கூட்டத்தின் மகிழ்ச்சிக்காக விட்டுக் கொடுக்கமாட்டேன்
என்னிடம் இருந்து வெளியேறும் கண்ணீரை
சிரிப்பாய் மாற்ற முயற்சிக்கவும் மாட்டேன்

என் கண்ணீர் என் கண்ணீராய் இருக்கட்டும்
என் புன்னகை என் புன்னகையாய் இருக்கட்டும்

என் இதயத்தைக் கழுவி வாழ்வின்
ரகசியங்களை வெளிக் கொணரட்டும் என் கண்ணீர்
என் நண்பர்களின் சங்கமத்தில்
இறைத்தன்மையை உணர்த்தட்டும் என் புன்னகை

என் கண்ணீர் என் கண்ணீராய் இருக்கட்டும்
என் புன்னகை என் புன்னகையாய் இருக்கட்டும்

ஒரு கவிதையை மொழிபெயர்ப்பது ஒரு விதத்தில் அதன் அழகைக் கெடுத்து விடுகிறது. முழு கவிதையையும் படிக்க இங்கே கிளிக்கவும்.

Google
========


இன்று கூகிளில் நீங்கள் கிடார் வாசிக்க முடியும். (http://www.google.co.in/) கிடார் இசைக் கலைஞரான லெஸ்டர் வில்லியம் பால் என்பவரின் 97 ஆவது பிறந்த நாளுக்காக கூகுள் இதை செய்கிறது. உங்கள் வீட்டில் ஒரு கீபோர்ட் இல்லையே என்ற ஆதங்கத்தை இன்று நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம். உங்கள் கணினியின் கீபோர்டையோ மவுசையோ பயன்படுத்தி பிரமாதமாக (?) கிடார் வாசிக்கலாம். நம் ரிநி வாசிக்க ASDFGHJK என்று அழுத்தவும்.

கொஞ்சம் குசும்பு
=================




சின்னப்பயல்
===========

என்பவரின் ஒரு கவிதை இப்போது ...கவிதையைப் பார்த்தால் அவர் 'பெரிய பயல்' போலத் தோன்றுகிறது

சில நிபந்தனைகளுடன்
சிலரை
ஏற்றுக் கொள்ள முடிகிறது

சில புரிதல்களுடன்
சிலருடன்
ஒத்துப்போக முடிகிறது

சில வேறுபாடுகளுடன்
சிலருடன்
வாழ்ந்து விட முடிகிறது

சில சகிப்புகளுடன்
சிலருடன்
பயணிக்க முடிகிறது

சில துருத்தி நிற்கும் உண்மைகளுடன்
சிலரைக்
கடந்து செல்ல முடிகிறது

சில மறைத்துவைக்கப்பட்ட
பொய்களுடன்
சிலருடன் தொடர்ந்து இருக்க முடிகிறது

சில உறுத்தல்களுடன்
இது போன்ற கவிதைகளை
வாசிக்கவும் முடிகிறது


ஓஷோ ஜோக்
=============

துப்பறியும் நிபுணர் ஜேம்ஸின் வீட்டுக்கு டாக்டர் பொட்டேட்டோ
மிக அதிகாலையில் வந்திருந்தார்.

கதவைத் திறந்ததும் ஜேம்ஸ் "வாங்க டாக்டர். பொட்டேட்டோ , என்ன விஷயம்? உள்ள வாங்க..ஆனால் நீங்கள் ஒரு மட்ட ரகமான சாயம் போன சிவப்பு அண்டர்வேர் போட்டிருப்பது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது" என்றார்..

அதைக் கேட்டு டாக்டர் பொட்டேட்டோ "அருமை, அற்புதம் மிஸ்டர் ஜேம்ஸ்! அது எப்படி? என்ன தான் பெரிய துப்பறியும் நிபுணராக இருந்தாலும் எப்படி நான் போட்டிருக்கும் அன்டர்வேரை கூட நீங்கள் ஊகித்தீர்கள்? அற்புதம்! எப்படி அது?" என்றார்

"அது ரொம்ப சுலபம் தான் டாக்டர்...நீங்கள் பேண்ட் போட மறந்து விட்டீர்கள்"

முத்ரா



8 comments:

ஷர்புதீன் said...

கடந்த இரண்டு வருடங்களாக பஸ்ஸை விட்டு இறங்கு பொது டிரைவருக்கு " safe டிரைவிங்குக்கு நன்றி சார்" என்று சொல்லுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

பத்மநாபன் said...

நவ ரசமாக இருந்தது கலைடாஸ்கோப்.... பேருந்து சோகம் கொடுமை .. நொடி தவறுதல் எவ்வளவு இழப்பு ..தவறிய சூழலின் மீது தான் குற்றம் ..
மனைவியர் இலக்கண பிழையில்லாமல் தெளிவாக இருக்கிறார்கள் ... கவிதையின் எசப்பாட்டாக வசனம் கச்சிதம் ...

கேபினுக்கு திரும்பியவுடன் சரிகமபதநி வாசித்து பார்க்கும் ஆவல் ( அலுவலக எந்திரத்தில் காற்று கூட வருவதில்லை )

டக்கால்டி said...

Kavithaiyum athan nija vaazhvu nidharsanamum arumai...

Private Travels patthi evlo ezhuthunaalum vibathukkal nadanthukonde thaan irukkindrana...

Super post...

சென்னை பித்தன் said...

ஓஷோ ஜோக் சூப்பர்.குசும்பு கொஞ்சம் இல்லை..நிறை....ய!ரொம்ப கலர்ஃபுல் கலைடாஸ்கோப்!

vidivelli said...

வானம் வெட்டி விரிய
சிறு தூறல் போடுதோ?

நல்லாயிருக்குங்க......


நம்ம பக்கமும் உங்க கருத்தை எதிபார்க்கிறேன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... அழகா எழுதறீங்க. முதல் தடவை உங்க பதிவு படிக்கிறேன்... அப்படியே அ.அ.அ ஒரு சில படித்தேன்... நான் சயின்ஸ் ஸ்டுடென்ட் இல்ல... எப்பவும் சயின்ஸ்'னா எட்டிக்காய் தான் எனக்கு... அமைஞ்ச Teachers கூட ஒரு காரணம்... நீங்க எழுதின விதம் சயின்ஸ் பிடிக்காத எனக்கே பிடிக்கும் விதமா அழகா விளக்கம் சொல்லி இருக்கீங்க...அதிலும் ஆன்மீகத்தையும் குழைத்து சொன்ன விதம் அருமை. இனி தொடர்ந்து படிப்பேன்.. நானும் கொஞ்சம் கத்துக்கலாமே..:) ஆல் தி பெஸ்ட் இன் KPN travels.. ஹா ஹா... கொஞ்சம் எங்க ஊர் டச் இருக்கற feel... நீங்களும் கோவையோ?

Nagasubramanian said...

wow! nice.
You to have a great humor like any one else(especially like writer sujatha- atleast in your way of writing)

Unknown said...

GOOD HABIT. KEEP IT ON.