இந்த வலையில் தேடவும்

Tuesday, February 28, 2012

கலைடாஸ்கோப்-56

லைடாஸ்கோப்-56 உங்களை வரவேற்கிறது.
Δ

I wake up every morning at nine and grab for the morning paper. Then I look at the obituary page. If my name is not on it, I get up-Benjamin Franklin

உங்கள் பெயர் என்ன? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை ஒரு மூன்று முறை உரக்க சொல்லுங்கள். ஒரு மாதிரி இருக்கிறது அல்லவா? நம் பெயரை நாம் பயன்படுத்துவதே இல்லை என்பதால் தான் அது. பெயர் என்பது நமக்கு அல்ல. மற்றவர்களுக்கு. பெயரை வைத்து செய்யும் ஓஷோவின் தியானம் ஒன்று இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன்.

ஸ்கூலில் படித்தபோது ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக ஒரு சேகர், ஒரு மணிகண்டன், ஒரு குமார், ஒரு செந்தில், ஒரு தினேஷ் ஒரு கணேஷ், இருப்பார்கள்.ஒரு பிரியா, ஒரு சங்கீதா, ஒரு வனிதா ஒரு வித்யா இருப்பார்கள்.இங்கே கர்நாடகாவில் ஸ்ரீநிவாஸ், மஞ்சுநாத், லிங்கப்பா போன்ற பெயர்கள் பிரபலம்.

'common ' பெயர்கள் இருப்பவர்கள் நமக்கு ஸ்பெஷல் பெயர் இல்லையே என்று வாழ்க்கையில் ஒரு முறையாவது நினைத்து வருந்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. [இதற்கு வடிகாலாகத்தான் ப்ளாக் எழுதும் போது பேயோன், வேதாளம், சிறுத்தை, புலிக்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி, அக்னிக்குஞ்சு,வெட்டிப்பயல்,தண்டப்பயல்,பெயரிலி என்றெல்லாம் நமக்கு நாமே பெயர் வைத்துக் கொள்கிறோம்] இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பெயர்களை வைக்காமல் புதிது புதிதாக அனிருத், சங்கல்ப், ரியா, ரிதன்யா,ஆதனா, கௌசிக், மிலன், என்றெல்லாம் வைக்கிறார்கள்.

சரி. இந்தியாவில் பஞ்ச பூதங்களுக்கும் பெயர்கள் இருக்கின்றன.

வானம் - ஆகாஷ்
பூமி - பிருத்வி
காற்று - பவன்
நீர் - சுதா
நெருப்பு -பிரஜ்வல்

பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்லும் ஒரு கோஷ்டி இருக்கிறது. பெயரில் தான் எல்லாமே இருக்கிறது என்று சொல்லும் கோஷ்டியும் இருக்கிறது.எனக்கு நியூமராலஜியில் நம்பிக்கை கிடையாது.J என்ற எழுத்தில் பெயர் இருந்தால் ஜே ஜே என்று வருவார்கள் . R என்ற எழுத்தில் தொடங்கினால் ராஜா மாதிரி வாழ்வார்கள் ;M என்ற எழுத்தில் தொடங்கினால் மத்யஸ்த வாழ்க்கை தான் ; இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.என்னைப் பொறுத்தவரை Name is just a Name ...

ஆனால் பெயர் என்பது நம்முடன், நம் வாழ்வுடன் மிகவும் ஒன்றிக் கலந்து விட்ட ஒன்று போலத் தோன்றுகிறது. எனவே பெயரை மாற்றினால் வாழ்க்கை மாறுமோ இல்லையோ நம் மனநிலை மாறும். அது ஒரு மறுபிறப்பு போல; இதனால்தான் பெண்கள் புகுந்தவீடு போகும்போது பெயரை மாற்றுகிறார்கள். சந்நியாசம் ஏற்கும் போது பெயரை மாற்றுகிறார்கள். நீ அதே பழைய மனிதன் அல்ல. நீ புதிதாகப் பிறந்திருக்கிறாய் என்று நினைவுபடுத்த!

நம்முடைய பெயர் நம் மனதில், அடியாழத்தில், விழிப்பற்ற நிலையில் புதைந்துள்ளதாக ஓஷோ சொல்கிறார். யாராவது நம் பெயரை அழைத்தால் உடனே ஆட்டோமேடிக்-ஆகத் திரும்புகிறோம் இல்லையா?

ஓஷோவின் 'பெயர்' தியானம் என்பது உங்கள் பெயரை ஒரு மந்திரம் போல உபயோகிப்பது. உதாரணமாக உங்கள் பெயர் இசக்கி என்றால் (வேற பேரே கிடைக்கலையா?) இசக்கி இசக்கி இசக்கி என்று உங்கள் மூளையை கசக்கி தொடர்ந்து விடாமல் உச்சரிப்பது.அப்படி உச்சரிக்கும் போது உங்களுக்கும் உங்கள் பெயருக்கும் ஒரு சிறிய இடைவெளி உருவாகிறது. நான் இசக்கி அல்ல என்ற உணர்வு மெல்ல மெல்ல வருகிறது.மேலும் நீங்கள் ஒன்றை கண்டிப்பாக செய்ய விரும்பினால் உங்களுக்கு நீங்களே உங்கள் பெயருடன் கட்டளை இடுங்கள்..உதாரணமாக இசக்கி, நாளை காலை சரியாக ஐந்து மணிக்கு எழுந்து கொள் ..இசக்கி, நீ அந்தப் பெண்ணை திரும்பிப் பார்க்காதே, இசக்கி , தூங்கப்போ, இசக்கி ஜொள்ளு விடாமல் இயல்பாகப் பேசு என்றெல்லாம்! IT WORKS ..(நான் சொல்லலைங்க ஓஷோ சொல்கிறார்)


ΔΔ
சத்தம் என்பதைப் பற்றி மேலும் ஓஷோ சொல்கிறார்; (டேய், உனக்கு சொந்தமா எதுவும் தெரியாதா ???)

இந்து மதம் சத்தம் என்பதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. நவீன அறிவியல் ஒளியை பிரபஞ்சத்தின் ஆதாரம் என்கிறது. ஆனால் மதங்கள் ஒலிக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.ஒரு குறிப்பிட்ட சப்தத்தின் மூலம் உங்கள் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியும்.வேத மந்திரங்கள் அதைத் தான் செய்கின்றன. குறிப்பிட்ட மந்திரங்கள் மூலம் காட்டு விலங்குகளையும் கட்டிப்போட முடியும். மேலும் 'ராகங்களுக்கும்'மனித உணர்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.

[அமிர்த வர்ஷிணி பாடினால் மழை வரும் ; புன்னாக வராளி பாடினால் பாம்பு வரும்; குந்தள வராளி பாடினால் சிரிப்பு வரும்; முகாரி பாடினால் சோகம் வரும் சஹானா பாடினால் காதல் வரும்
ஆஹிரி பாடினால் சாப்பாடு வரும்; சாரி வராது; என்றெல்லாம் சும்மா சொல்லவில்லை. பாடும் விதத்தில் பாடினால் உண்மையிலேயே இதெல்லாம் வரும்.தான்சேன் பாட்டுப்பாடி தீபங்களை ஏற்றி வைத்தார் என்று கேட்டிருக்கிறோம்.ஏதோ ஒரு ஏடாகூட ராகத்தைப் பாடியதன் காரணமாக கோவலன் மாதவி உறவு பிரேக் ஆனது என்று படித்திருக்கிறோம்.எந்தெந்த ராகங்கள் எந்தெந்த நோயை தீர்க்கும் என்று ஒரு லிஸ்டே இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் பைரவி கேளுங்கள் என்றும் தோல்வியாதி ஏதாவது இருந்தால் அசாவேரி கேளுங்கள் என்றும் சொல்கிறார்கள். அதற்காக ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா ரேஞ்சுக்கு சொரிந்து கொண்டிருக்கும் போது 'தசரத நந்தனா' கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். டாக்டரை அணுகவும்]


piezo electric effect என்று ஒன்று இருக்கிறது.அதிர்வுகளால் மின்சாரம் பிறக்கும் என்று சொல்லும் ஒரு அறிவியல் தத்துவம். [உங்கள் வாட்சில் நடப்பது உல்டா. மின்சாரத்தால் அதிர்வுகள் பிறக்கின்றன] ஒலியும் ஒருவித அதிர்வு தானே?
எனவே ஒலியால் ஏன் மின்சாரம் பிறக்காது?Sonoluminescence என்ற ஒன்றும் அறிவியலில் இருக்கிறது.இது என்ன என்றால் சில திரவங்கள் சத்தத்தின் மூலம் அதிரும் போது அதிலிருந்து வெளிச்சம் பிறக்கிறது என்னும் கண்டுபிடிப்பு!டெலிபோனில் நாம் பேசும் சத்தம் மின் துடிப்புகளாக மாறி தான் மறுமுனைக்கு செல்கிறது. ஆனால் சத்தத்தின் மூலம் ஒரு வீட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. நம்மை சுற்றி எத்தனையோ சத்தங்கள் கேட்டபடி உள்ளன. டிராப்பிக்கில் சிவப்பு எரிவது தெரிந்தும் பொறுமை இன்றி ஹாரன் அடிக்கும் வண்டிகளின் சத்தம், மெஷின்கள் ஓடும் சத்தம் புல்டவுசர் சத்தம், ரேடியோ சத்தம், அரசியல் பிரசார சத்தம்,மனைவி கணவனை ஹை பிட்சில் திட்டும் சத்தம், பக்கத்து வீட்டுக்காரர் அபஸ்வரமாக வயலின் கற்றுக் கொள்ளும் சத்தம் என்று நிறைய. இதையெல்லாம் சோலார் செல் போல சேகரித்து ஒரு குண்டு பல்பை எரிய வைக்க முடியுமா? விஷயம் தெரிந்தவர்கள் சொல்லவும்.ELECTRICITY FROM NOISE POLLUTION என்பதை யாராவது கடைசி வருட இஞ்சினியரிங் மாணவர்கள் ப்ராஜக்ட்-ஆக எடுத்துக் கொண்டு செய்யலாம். மின் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழ் நாட்டுக்கு புண்ணியமாகப் போகும். [இங்கே பெங்களூருவில் அவ்வளவாக பவர் கட் இல்லை. போனாலும் ஒரு இருபது நிமிடத்தில் சமர்த்தாகத் திரும்பி விடுகிறது]

ΔΔΔ
ரசித்த கவிதை

அப்பா
டாட்டா காட்டும் போது

உற்சாகமாக
கையசைக்கும் குழந்தை -
ஏனோ

அம்மா
டாட்டா காட்டும் போது

முகம் மாறி
அழத் தொடங்குகிறது.


ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.

ஒரு ஆல்பத்தைப் பார்த்து சின்னப்பையன் ஒருவன் கேட்கிறான்.

அம்மா அந்தப் போட்டாவில் அழகா, கரு கரு முடியோட , எடுப்பா மீசை வைச்சுக்கிட்டு இருக்காரே அவரு யாரும்மா?

அம்மா 'டேய், அதான்டா உங்க அப்பா'

சின்னப்பையன் : 'அப்ப எப்பவாச்சும் வீட்டுக்கு வந்து போறாரே, அந்த சொட்டைத் தலை யாரும்மா?'

[இதற்கு தான் அப்பாக்கள் ஆபீஸே கதி என்று கிடக்கக் கூடாது. அவ்வப்போது குழந்தைகளுக்கு உங்கள் திருமுகத்தைக் காட்டவும்]

ரசித்த ஒரு ட்விட்:

#அம்மா, முதன் முதல்ல நில அபகரிப்பு பண்ணவர் நம்ம மகா விஷ்ணு, வாமன அவதாரத்துல, அவர் மேல ஒரு கேஸ் போட்டுடலாமா?



ΔΔΔΔ



இப்போது நிறைய பேர் விருது வழங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பி இருக்கிறார்கள். எனக்கு கூட இரண்டு மூன்று பேர் விருது(?) கொடுத்திருக்கிறார்கள். இது தவறு என்று சொல்ல வரவில்லை. VERSATILE BLOGGER என்று ஒருவருக்கு
விருது கொடுக்கிறார்கள். அவர் எழுத்தைப் படித்துப் பார்த்தால் அவர் எழுதுவதில் எவ்வளவோ முன்னேற வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.VERSATILE ஆக எழுத வேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்படுவது சரிதான். ஆனால் அதற்கு நிறைய படிக்க வேண்டும்.கண்டதையும் படிக்க வேண்டும். (சாரு நிவேதிதா உட்பட)நிறைய அனுபவப்பட வேண்டும். அப்போது தான் VERSATILITY கிடைக்கும். சும்மா கூகிளில் தேடி காபி பேஸ்ட் செய்வதில் பயன் இல்லை. (இன்று அறிவியலை சரியாகப் படிக்காமல் நிறைய பேர் பரிணாமமே தவறு ; மனிதன் பிரம்மாவின் மூஞ்சியில் இருந்துதான் வந்தான் என்றெல்லாம் எழுதக் கிளம்பி இருக்கிறார்கள்.)காபி பேஸ்ட் என்று அதுவே காட்டிக் கொடுத்து விடும். அல்லது உங்கள் எழுத்து காப்பி அடித்தது என்று
யாருக்கும் தெரியாத படி (நான் எழுதுவது போல) தில்லுமுல்லு செய்து எழுத வேண்டும்.ஒருவர் எழுத்தைத் திருடினால் திருட்டு. நூறுபேர் எழுத்தைத் திருடினால் ஆராய்ச்சி :) :)

நமக்கு நாமே விருது கொடுத்துக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது ? ஒருவர் உங்கள் ப்ளாக்குக்கு தவறாது வந்து பின்னூட்டம் இடுகிறார் என்றால் அவருக்கு விருது கொடுத்து விடுவதா? இந்த ப்ளாக்கிலும் தான் J .D . தாஸ் என்பவர் விடாப்பிடியாக கமென்ட் போடுகிறார். (நான் தான் அவரை கண்டுகொள்வதே இல்லை :( :( ).உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை என்பது இன்னும் இன்னும் நன்றாக எழுதுவது தான். 'உங்கள் கருத்துரைக்கு நன்றி ' என்று சொல்லக் கூடத் தேவை இல்லை. எனவே என்னைப் பொறுத்தவரை விருது என்பதெல்லாம் சின்னப் பிள்ளை சமாச்சாரம். ANYWAY ,என்னையும் மதித்து விருது கொடுத்தவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அடியேனை மன்னித்தருளவும்.



ΔΔΔΔΔ

கன்னடத்தில் ஒரு பிரபலமான பாவ கீதே மொழிபெயர்ப்புடன்:







ತೆರೆದಿದೆ ಮನ ಓ ಬಾ ಅತಿಥಿ
ಹೊಸಬೆಳಕಿನ ಹೊಸ ಗಾಳಿಯಾ
ಹೊಸ ಬಾಳನು ತಾ ಅತಿಥಿ

ಆವ ರೂಪದೊಳು ಬಂದರು ಸರಿಯೇ
ಆವ ವೇಷದೊಳು ನಿಂದರು ಸರಿಯೇ
ನೀಸೆರುದಯದೊಳು ಬಹೆಯಾ ಬಾ
ತಿಂದಳನ್ದದಲಿ ಬಹೆಯಾ ಬಾ ||


தெரெதிதே மனே பா அதிதி
(திறந்துள்ளதில்லம் ஓ வா விருந்தே)

ஹொஸ பெளகின ஹொஸ காளியா
ஹொஸ பாளனு தா அதிதி
(புது வெளிச்சத்தின் புது காற்றினை புது வாழ்வினைத் தா விருந்தே)

ஆவ ரூபதொளு பந்தரு சரியே
ஆவ வேஷ
தொளு நிந்தரு சரியே
(எந்த வடிவினில் நீ வரினும் சரிதான் எந்த வேடத்தினில் வரினும் சரிதான்)

ಇಂತಾದರು ಬಾ ಅಂತಾದರೂ ಬಾ
ಎಂತಾದರು ಬಾ ಬಾ ಬಾ
இந்தாதரு பா அந்தாதரு பா
எந்தாதரு பா பா பா
இப்படியேனும் வா அப்படியேனும் வா எப்படியேனும் வா வா வா

-அப்போதெல்லாம் விருந்தினர்களை எவ்வாறு உயர்வாக (கடவுளைப்போல)மதித்தார்கள் என்பதற்கு இந்தப் பாடலே உதாரணம், அதிதி என்ற சொல்லுக்கே -திதி நேரம் காலம் இல்லாமல் வருபவர் என்றுதான் பொருள். அதிதி எப்போது வந்தாலும் அவரை உபசரிக்க வேண்டுமாம். அவர் என்ன கேட்டாலும் கொடுக்கவேண்டுமாம். உங்கள் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது; கல்யாணம் செய்து வையுங்கள் என்று ஆசைப்பட்டால் அதிதிக்கு பெண்ணைக் கொடுத்து விட வேண்டுமாம்; (பெண் , பிள்ளைக்கறி இதெல்லாம் கேட்பது கொஞ்சம் ஓவர்)எனவே யார் வேண்டுமானாலும் வரட்டும் ...என் வீடு திறந்து தான் இருக்கிறது ..நீ எப்போதுவேண்டுமானாலும் வரலாம். உன்னால் தான் என் வாழ்வு விளங்கும்; உன்னால்தான் என் வீடு துலங்கும் என்று பெருந்தன்மையுடன் சொல்கிறது இந்தப் பாடல்!

சரி. இந்தக் காலத்தில் யார் வீட்டை திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?பெரும்பாலான கதவுகள் மூடியே இருக்கின்றன. வெளியே இருப்பவன் எல்லாம் திருடன் கிராதகன் கொலைகாரன் என்ற எண்ணத்திலேயே யாரும் வீட்டை திறப்பது கூட இல்லை. தப்பித் தவறி திறப்பவர்கள் கூட குருவி போல தலையை மட்டும் வெளியே நீட்டி காரியத்தை முடித்து விட்டு பட்டென்று கதவை சாத்தி விடுகிறார்கள். அதிதிக்காக இல்லாவிட்டாலும் கொஞ்சம் புதுக்காற்று உள்ளே வரட்டும் என்பதற்காகவாவது கதவை கொஞ்ச நேரம் திறந்து வையுங்கள்! அப்புறம் இன்னொரு வேண்டுகோள். கொரியர் காரரோ, காய்கறி விற்பவரோ, பேப்பர் காரனோ, கொஞ்ச தூரம் போனபிறகு கதவை சாத்துங்கள். ஆள் இருக்கும் போதே முகத்தில் அறைவது போல கதவை மூடாதீர்கள்.



ΔΔΔΔΔΔ

ஓஷோ ஜோக்..
(Partially ' A ' )

சார்டினி, போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்றான்.

யார் மீது? என்றார் இன்ஸ்பெக்டர்..

'ஒரு நாதாரி லாரி டிரைவர் மேல சார், நான் ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்தேன். அந்த நாய் நான் வெளியே வருவதற்கு அவகாசமே கொடுக்காம பூத் டோரை ஒடச்சு வெளியே தள்ளி விட்டுட்டான்.ஒரு நிமிஷம் நானும் டைம் கேட்டுப் பார்த்தேன். அவன் ஒத்துக்கலை. என்னதான் அவசரம்-னாலும் இப்படியா வன்முறையா நடந்துக்கறது? 'என்று பரிதாபமாக சொன்னான் சார்டினி.

"சரிதான். உண்மையிலேயே அவன் ஒரு ராஸ்கல் தான். அந்த சமயத்தில் நீங்கள் எப்படி மோசமாக உணர்ந்திருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகிறது"

'ரொம்ப சரி இன்ஸ்பெக்டர். ரொம்ப மோசமா உணர்ந்தேன்.அந்த பரதேசிநாய் என் காதலி மேலாடையை அணிந்து கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கவில்லை' !

சமுத்ரா



Friday, February 24, 2012

அணு அண்டம் அறிவியல் -61

அணு அண்டம் அறிவியல் -61 உங்களை வரவேற்கிறது

[௮-௮-௮ கொஞ்சம் லேட் ஆகி விட்டது. இதை தவறாமல் படிக்கும் ஓரிரு (?) அறிவியல் வாசகர்களுக்கு SORRY. As I have been telling , இந்த அவசர யுகத்தில் இதையெல்லாம் யார் படிக்கிறார்கள்? Most of them want Entertainment, not education..டேய், நீ என்ன பெரிய அப்பாடக்கரா? எல்லாம் தெரியும் என்ற நினைப்பா? என்று கேட்காதீர்கள். எல்லாம் தெரியும் என்று நிரூபிக்க இதை எழுதவில்லை. [In fact , எனக்கு எதுவும் தெரியாது என்று நிரூபிக்கவே இதை எழுதுகிறேன் ] பிரபஞ்சத்தைப்பார்த்து நான் வியந்த , அதிசயித்த சில அரும்கணங்களை உங்களுடன் என்னால் இயன்ற முறையில் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறுமுயற்சியே இது.நூறு எபிசோடுகள் முடிந்ததும் சமர்த்தாக முடித்து விடுகிறேன் DO NOT WORRY ]

பார்த்தால் அது ஒரு சூனியம்
பரவிக் கிடக்கும் பாழ்வெளி !

ஆனால் அது ஓர் அமுத சுரபி
அனைத்தும் அதனிடமிருந்தே வருகின்றன
அதிலேயே மீண்டும் ஒடுங்குகின்றன!

ஒன்றுமே இல்லாததற்குள்
எல்லாமே இருக்கிறது! -லவோத் சூ Tao Te Ching



ஃபெயின்மேன் வரைபடங்களை எப்படி வரைவது என்று பார்க்கலாம். நம் வசதிக்கேற்ப காலத்தை X அச்சிலும் வெளியை Y அச்சிலும் வரையலாம், OR VICE -VERSA ..X Y அச்சுகளை வரைய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் எதில் காலம் எதில் வெளி என்று முதலில் சொல்லி விட வேண்டும்.இதில் பொதுவாக எலக்ட்ரான் நேர்க் கோடுகளாகவும் ஃபோட்டான் வளைந்த ஸ்ப்ரிங் போலவும் குறிக்கப்படும். எலக்ட்ரான் நேராக செல்கிறது ஃபோட்டான் வளைந்து வளைந்து செல்கிறது என்று அர்த்தம் அல்ல. இவை வெறும் குறியீடுகள் மட்டுமே.பொதுவாக எலக்ட்ரான் முதலிய துகள்களுக்கு மேலே ஓர் அம்புக்குறி போடப்படும்.அது காலத்தில் எந்த திசையில் பயணிக்கிறது என்று குறிப்பிட . ஆனால் ஃபோடான்களுக்கு காலம் பற்றிய கவலை இல்லை.எனவே அவற்றின் மீது அம்புக்குறி தேவையில்லை.

வயதாகி விட்டது எங்களுக்கு
அந்த இளமை எங்கு சென்றது? இனி வருமோ?

-போன்ற புறநானூற்றுக் கவலைகள் அவைகளுக்கு இல்லை. காலம் கடந்தவை அவை. ஒருவர் எல்லாப் பிறந்த நாளுக்கும் ஒரே வயது சொன்னால் எப்படி இருக்கும்? போட்டான்களைப் பொறுத்தவரை இதுதான் உண்மை. பிக் பாங்கில் இருந்து அவற்றின் வயது ஏறவே இல்லை.கால ஓட்டத்தில்
போட்டான்களின் ஆற்றல் குறையலாமே தவிர , அவைகளுக்கு நரை திரை மூப்பு இல்லை.

சரி. கீழே உள்ளது ஓர் எளிய பெயின்மேன் வரைபடம். படத்தில் உள்ளது போல, ஒரு எலக்ட்ரானும் போடானும் இப்படித்தான் வினை புரியும் என்று அர்த்தம் இல்லை. இருக்கின்ற மில்லியன் கணக்கான சாத்தியங்களில் இது ஒன்று. சில சமயங்களில் இவை இரண்டும் கண்டும் காணாமல் தம் வழியில் சென்று விடலாம். சில சமயம் எலக்ட்ரான் ஒளியை ஸ்வாகா செய்து விடலாம்.சில சமயம் ஒளியை உமிழலாம் etc


t =0 என்ற காலத்தில் இரண்டு எலக்ட்ரான்கள் e1 மற்றும் e2 நிலையாக இருக்கின்றன.e1 நகர்ந்து (சிறிது காலம் நகர்ந்ததும்) வெளியில் A என்ற புள்ளியை அடைகிறது.அங்கே ஒரு போட்டானை உமிழ்கிறது.பிறகு பாதை மாறி இறுதியில் X என்ற புள்ளியில் உணரப்படுகிறது.போட்டான் B என்ற புள்ளிக்கு நகர்கிறது. போட்டான் A யில் இருந்து B க்கு நகரும் போது காலம் நகருவதில்லை என்பதை கவனிக்கவும்.இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.ஆனால் எலக்ட்ரான் களுக்கு இது அனுமதி இல்லை. அதாவது காலத்தில் மாறாத ஒரு செங்குத்துக் கோட்டை (நேர்கோடு) ஃபெயின்மன் வரைபடத்தில் வரைய முடியாது.எனவே போட்டான் வெளியில் இரண்டு புள்ளிகளுக்கு இடையே காலமே இன்றி நகருகிறது! இப்படி B யில் வந்து சேர்ந்த போட்டானை அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்த e2 கிரகித்துக்கொள்கிறது.e2 வின் பாதை விலகுகிறது.அது இடத்தில் Y என்ற புள்ளியில் உணரப்படுகிறது.

[எலக்ட்ரான் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியாது. எனவே எலக்ட்ரான் NOT EQUAL TO போட்டான்.ஒயரின் உள்ளே மின்சாரம் ஒளிவேகத்தில் பயணிக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும். மின்சாரம் (charge ) ஒரு நத்தை.ஒருநாளுக்கு அது இரண்டு மீட்டர்கள் மட்டுமே நகர்கிறது என்று கணக்கீடுகள் சொல்கின்றன. பின்னர் சுவிட்சைப் போட்டதும் லைட் எத்தனை தூரத்தில் இருந்தாலும் உடனடியாக எரிகிறதே என்று நீங்கள் கேட்பது நியாயமான சந்தேகம். வரிசையாக வைக்கப்பட்டுள்ள சைக்கிள்களில் முதலாவதைத் தள்ளினால் கடைசி சைக்கிளும் விழுகிறதே அதுபோலத்தான் இது.ஒரு பெரிய குழாய் முழுவதும் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் ஒரு
முனையில் சிறிது தண்ணீரை எக்ஸ்ட்ரா-வாக ஊற்றினால் அடுத்த முனையில் உள்ள தண்ணீர் உடனடியாக வெளியேறி விடும் அல்லவா? தண்ணீர் ஒளிவேகத்தில் பயணித்தது என்று சொல்ல முடியாது. இது போல தான் மின்சாரமும் பயணிக்கிறது.]

பெயின்மேன் வரைபடங்களில் கீழ்க்கண்ட சாத்தியங்களும் இருக்கின்றன.


சரி. இந்தப் படத்தைப் பார்க்கவும்.



படத்தில் இரண்டு எலக்ட்ரான்-களின் பாதைகள் காட்டப்பட்டுள்ளன.e1 எலக்ட்ரான் A என்ற புள்ளியில் இருந்து கிளம்பி X என்ற புள்ளியில் ஒரு போட்டானை உமிழ்கிறது.பிறகு அது காலத்தில் திரும்பி Y என்ற புள்ளியை அடைகிறது .B என்ற புள்ளியில் புறப்படும் e2 T1 என்ற நேரத்தில் ஓர் போட்டானை உமிழ்ந்து விட்டு தன் திசையில் பயணிக்கிறது. இந்த போட்டான் T2 நேரத்தின் போது Y என்ற புள்ளியில் (காலத்தில் பின்னோக்கி பயணித்து) வந்து சேரும் e1 எலக்ட்ரான்-ஆல்
கிரகிக்கப்பட்டு C என்ற புள்ளியை அடைகிறது. e2 அதே நேரத்தில் D என்ற புள்ளியை அடைகிறது.இங்கே நாம் T2 என்ற புள்ளியில் போட்டான் ஒன்று எலக்ட்ரான்-பாசிட்ரான் இணைகளை உருவாக்கிகிறது என்றும் சொல்ல முடியும்.ஆற்றலில் இருந்து பொருள்-எதிர்பொருள் ஜோடிகள் தோன்றுவது!பின்னர் T3 என்ற புள்ளியில் இவை மீண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஆற்றலை (போட்டானை) வெளிப்படுத்துகின்றன.

.படத்தில் ஒரு முக்கோணம் தோன்றுகிறது அல்லவா.இதுவும் அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஒன்றுமே இல்லாத வெட்டவெளியில் இருந்து பொருளும் எதிர்ப்பொருளும் மாயமாகத் தோன்றுவது.பின் மறைவது!இப்படி தான் நம் பிரபஞ்சமும் அதன் எதிர்ப்ரபஞ்சமும் சூனியத்தில் இருந்து தோன்றி இருக்கலாம் என்கிறார்கள்.

மேலும் நாம் ஒன்றும் இல்லாத சூனியம் என்று நினைப்பது தவறு. அதில் மில்லியன் கணக்கான பொருள்-எதிர்ப்பொருள் ஜோடிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கலாம்.(ஆற்றல் இல்லாமலேயே கூட!)இவற்றையெல்லாம் நாம் ௮-௮-௮ வில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனாலும் இவற்றை பெயின்மன் வரைபடங்கள் மூலம் மீண்டும் விளக்கினோம்.

இப்போது ஒரு பௌத்தத் தத்துவம்:


"வடிவம் என்பதோ வெற்றிடம். வெற்றிடம் என்பதும் வடிவமே. வடிவம் வெற்றிடத்தில் இருந்தோ, வெற்றிடம் வடிவத்திலிருந்தோ வேறுபட்ட ஒன்றல்ல. எது வடிவமோ அதுவே வெற்றிடம்,எது வெற்றிடமோ அதுவே வடிவம்:


சமுத்ரா

Wednesday, February 22, 2012

கலைடாஸ்கோப்-55

லைடாஸ்கோப்-55 உங்களை வரவேற்கிறது


==

சிறுகதை என்பதில் வரும் 'சிறு' என்பதன் இலக்கணம் என்ன ? முப்பது பக்கத்துக்கு எழுதி விட்டு அதை சிறுகதை என்று அழைக்கும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.எத்தனை பக்கத்துக்கு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் 'தொடரும்' என்று போடாமல் இருந்தால் சரி என்கிறீர்களா? :) சரி. இப்போது நான் முயற்சி செய்த ஒரு 'சிறு' கதை. பயப்படாதீர்கள். இது சீக்கிரமே முடிந்து விடும்.

அய்யனாரு பீடியைப் பற்ற வைத்தான்.காசு கொடுத்து விட்டுத் திரும்பியபோது யாரோ நான்கு பேர் வந்து "ஏய், ஊர்வலத்துக்கு வாரியா? இருபது ரூபாய் தாரோம்.நால்ரோடு வரை வந்தால் போதும்" என்றார்கள்.

சற்று யோசித்து விட்டு "இருபது கட்டுபடியாகாது சார். முப்பது கொடுத்தா வரேன்" என்றான். டீல் ஓகே ஆனது.அவர்கள் கொடுத்த கருப்பு சட்டையை தன் சட்டைமேல் அவசரமாக மாட்டிக் கொண்டான். கொஞ்சம் புழுக்கமாக உணர்ந்தான். வெய்யில் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது.அந்த ஊர்வலம் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆட்கள் அதிகமாக இல்லை. கறுப்புச் சட்டை அணிந்த அதிகபட்சம் ஒரு 25 பேர் இருக்கலாம்.

அய்யனாரு ஊர்வலத்தில் கலந்தான்.அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லும் நாலு வரியை அப்படியே ரிபீட் செய்யவேண்டும்.ஆஜானுபாகுவாக ஒரு ஆள் கையை உயர்த்தி உயர்த்தி கத்திக் கொண்டிருந்தான்.அய்யனாரு அதையே திரும்ப சொன்னான்.முப்பது ரூபாய்க்கு அதிகமாகவே குரல்கொடுத்தான் :

தூணுக்குள்ளே பார்த்தோம் தோழா
தூசி உண்டு; கடவுள் இல்லை

துரும்புக்குள்ளும் பார்த்தோம் தோழா
துகள்கள் உண்டு கடவுள் இல்லை

துகளுக்குள்ளும் பார்த்தோம் தோழா
அணுக்கள் உண்டு கடவுள் இல்லை

அணுவுக்குள்ளும் பார்த்தோம் தோழா
எலக்ட்ரான் உண்டு கடவுள் இல்லை. !!!

கடவுள் என்பது மாயை தோழா
கடமை செய்வோம் கடவுள் இல்லை!

ஊர்வலம் நால்ரோடை அடைந்ததும் அய்யனாரு விலகிக் கொண்டான். முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டு கருப்பு சட்டையை
திரும்பக் கொடுத்தான்,. 'பவானி மெஸ்ஸில் ' இன்று சிக்கன் பிரியாணி வெட்டி விட வேண்டும் என்ற உற்சாகத்துடன் மேலே நடந்தான்.வழியில் பாடிகார்ட் முனீஸ்வரன் கோயில் எதிர்ப்பட்டது. பரபரவென்று செருப்பை கழற்றி விட்டு உள்ளே நுழைந்து கைநிறைய விபூதியை எடுத்து நெற்றியில் அப்பிக் கொண்டான்;காணிக்கை ஐந்து ரூபாய் போட்டான். 'முனீஸ்வரா, கொமாரு மூணுநாளா உடம்பு சொகமில்லாம கிடக்கான். கொழந்தைக்கு சீக்கிரம் குணம் பண்ணு சாமி.தென்னம்பாளையம் வந்து குடும்பத்தோட கெடாவெட்டி பொங்க வெக்கறேன்" என்று கண்களை மூடி மனதார வேண்டிக் கொண்டான்.


=

* ஒரு கவிதை :- (கவிதை என்றதுமே சிலபேர் விழுந்தடித்து ஓடி விடுவார்களே!)

முதலில் நான் புன்னகைப்பேன் என
அவளும்
முதலில் அவள் புன்னகைப்பாள் என
நானும் -
இறுதியில் புன்னகைக்கவே இல்லை.
இரண்டு புன்னகைகள்
பயன்படாமல் ஜீரணமாகி விட்டன!

-சமுத்ரா (சும்மா ஒரு விளம்பரம்! :) )

** கவிதைகளின் தளம் ஒன்றை அறிமுகம் செய்கிறேன். மிக அருமையான கவிதைகள். ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் தானே. கீழே ஒரு EXAMPLE :

என் இருப்பை,
என் ச‌ந்தோஷ‌த்தை,
என் ச‌ம்பாத‌னையை,
என் க‌வ‌லைக‌ளை,
என் க‌ன‌வுக‌ளை

கேள்விக்குறியாக்கினான்

நெடுஞ்சாலையின்
மீடிய‌னில்,
எதிர்ப்ப‌க்க‌த்தில்
நேரான‌ ம‌ன‌நிலையோடு
சிரித்த‌ப‌டி க‌ட‌ந்த‌

ஒரு பெருந்தாடிக்கார‌ன்.


=
எனக்கு சில SILLY சந்தேகங்கள்...யாராவது தீர்த்து வைத்தால் நலம் :

*அயோக்யன் என்றால் ௮-யோக்யன். ஒரு செயலை செய்ய யோக்கியம் , தகுதி அற்றவன் என்று அர்த்தம். அதை ஏன் தமிழில் கெட்டவன் , கிரிமினல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள்? அதே போல நிரபராதி(நிர்-அபராதி) என்ற வார்த்தையை (நல்லவன் என்பதைக் குறிக்க ) எடுத்துக் கொண்ட நாம் அபராதி (குற்றவாளி) என்ற வார்த்தையை ஏன் விட்டு விட்டோம்?

*திரைப்படங்களில் கதை-திரைக்கதை-வசனம் என்று போடுகிறார்களே? கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம்?

* ஆட்டோவில் கையால் இயக்கும் பாம் பாம் என்று அழுத்தும் பச்சைக்கலர் சைரன்கள் இன்னும் எங்காவது இருக்கின்றனவா?

*வலதுகால் ஷூ இடது கால் ஷூ இருப்பது போல வலதுகால் சாக்ஸ் இடதுகால் சாக்ஸ் ஏன் இல்லை? (ஹலோ, யார் அது ஷூவைக் கழற்றுவது? )

*JUST A SEC என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் ஏன் திரும்பி வர ஒருமணிநேரம் எடுத்துக் கொள்கிறார்கள்?

*ஃபேனை ஒன்று ஸ்பீடில் சுற்றினாலும் ஐந்து ஸ்பீடில் சுற்றினாலும் ஒரே அளவு கரண்ட் (கரண்ட் சார்ஜ்) தான் ஆகும் என்று ஒருவர் சொன்னார். இது உண்மையா?

*shut down செய்த பின்னும் கம்ப்யூட்டர் டைமை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?

[ஹலோ இப்படியெல்லாம் யோசித்தால்தான் வி
ஞ்ஞானி ஆக முடியும்]


=

உங்களுக்கு எந்த இசைக்கருவி பிடிக்கும்? எது பிடிக்காது?

சில பேர் வீணை இசை என்றால் மகுடிப்பாம்பாக மயங்கி விடுவார்கள்.நான் வீணை வந்தாலே டி.வியை ஆப் செய்து விடுவேன்.(சரஸ்வதி மேடம் மன்னிப்பாராக)டொய்ங்
டொய்ங் என்று தலைவலி ஏற்படுத்தும் சத்தம் அது.சில பேருக்கு புல்லாங்குழல் பிடிக்கும்.'காற்றினிலே வரும் கீதம் அல்லவா அது? (டேய் மத்த கீதம் எல்லாம் கடல்லையா வருது? என்று சந்தானம் வாய்சில் படிக்கவும்) ஆனால் புல்லாங்குழலை சரியாக வாசிக்கும் விதத்தில் வாசிக்க வேண்டும். பு.கு பார்க்க தான் சிம்பிளாக இருக்கிறதே தவிர எமகாதகன் அது. சரியாக வாசிக்கவில்லை என்றால் 'வெறும் காத்துதான் வருது' (இது விவேக் குரலில்) என்று பரிதாபமாக சொல்ல வேண்டி இருக்கும்.(எவனோ ஒருவன் இம்சிக்கிறான்!)அடுத்து எஸ் , நிறைய பேரின் ஃபேவரட் இந்த வயலின் அல்லது பழைய பாசையில் ஃபிடில் ..மனதில் இருக்கும் ஸ்வரங்களை அப்படியே (குரலுக்கு அடுத்து) வெளியில் கொண்டுவர வயலின் தான் சிறந்தது.சரி. எனக்கு வயலினும் அவ்வளவாகப் பிடிக்காது. (எது பிடிக்கும் என்று பின்னர் சொல்கிறேன்).அடுத்து இந்த நாதஸ்வரம். இதையும் வாசிக்கத் தெரிந்தவர்கள் தான் வாசிக்க வேண்டும். இல்லை என்றால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல ஒரு பீலிங் வரும்.என்னதான் பிரியாணி எல்லாம் வெட்டி விட்டு தெம்பாக தம்பிடித்து வாசித்தாலும் அபஸ்வரம் 'நான் இங்கே தான் காணும் இருக்கேன்' என்று இளித்துக் கொண்டு எட்டிப் பார்த்து விடும்.

சரி. எனக்குப் பிடித்த இசைக்கருவி இந்த 'ஜலதரங்கம்' (யாரது ஒருமாதிரி பார்ப்பது) ஜ.தவில் கமகங்கள் கிட்டத்தட்ட ஜீரோ. ஆனாலும் அதைக் கேட்கும் போது ஒருவித இனம்புரியாத சுகத்தை உள்ளே உணரமுடியும். உங்கள் காதலி சலங்கை கட்டிக் கொண்டு ஆடுவதைப் போலவே கேட்கும்.


=

அணிகள் வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது 'தற்குறிப்பேற்ற அணி'.......

இயல்பாக அதுபாட்டுக்கு நடக்கும் ஒரு விஷயத்தின் மீது நம் கற்பனையை ஏற்றிக் கூறுவது. இது நம் எல்லாருக்கும் கைவந்த கலை. கிரகணம் ஒரு இயல்பான நிகழ்வு.ஆனால் அதை பாம்பு விழுங்குகிறது என்று அதன் பின்னே ஒரு பெரிய கதையை ஏற்றி விட்டதும்
தற்குறிப்பேற்ற அணிதான்.

சில சமயங்களில் நம் வீட்டில் ஏற்றி வைத்த சாமி விளக்கு இயல்பாக காற்று அடித்து அணைந்து விடும். அதை நாம் சும்மா விடுவோமா? இல்லையே ? ஐயோ ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது போலிருக்கிறதே?பையன் வேறு பைக்கில் போயிருக்கிறானே? மகளுக்கு அடுத்த மாசம் பிரசவம் நன்றாக நடக்குமோ இல்லையோ என்று வடிவுக்கரசி ரேஞ்சில் சிந்திக்க ஆரம்பிப்பதும் த.கு.அணி தான். இவள் அழகைக் கண்டு நாணி நிலா மேகப் போர்வையைப் போர்த்திக் கொண்டது என்று கவிர்கள் பாடுகிறார்களே? அதுவும் இதுதான். நிலா மேகத்தால் மறைக்கப்படுவது இயற்கை. நிலாவில் இருந்து பூமியைப் பார்த்தால் அட்லாண்டிக் கடல் கூட தெரியாது .இதில் ஐஸ்வர்யாராயின் மூஞ்சி தெரிகிறது என்று பாடுவது உயர்வு நவிற்சி அணி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை

வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்

கூவினவே கோழிக் குலம்.


-அதிகாலையில் கோழி கூவுவது இயற்கைதான்.அதைப் போய் 'ஐயோ இந்த தமயந்தி படும் துயரை பொறுக்க முடியவில்லையே' (நளன் அவளை விட்டு விட்டு கிரேட் எஸ்கேப்) சூரியனே நீ சீக்கிரம் வந்து தொலையேன் என்று சொல்வது போல கூவின என்கிறான் புகழேந்தி.

[என்னதான் இரவில் கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் காலையின் முதல் கிரணத்தைப் பார்க்கும் போது மனதில் ஒரு தெம்பு வருமே? ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! அதனால்..நானெல்லாம் முதல் கிரணத்தைப் பார்த்தால் இன்னிக்கும் ஆபீஸ் போகவேண்டுமே என்ற 'திகில்' தான் வருகிறது!]

சினிமா உதாரணம் வேண்டும் என்று கேட்கிறீர்களா? எனக்கு இந்த சாயங்காலப் பசியில் அதிக உதாரணங்கள் தேடும் பொறுமை இல்லை. எனவே ஒன்னே ஒன்னு:

'உன் பேர் மெல்ல நான் சொல்கையில்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன' [டேய் ரோஜாப் பூக்குற நேரத்துல பல்லு வெளக்காம நாற வாயால என் பேரை ஏன்டா சொன்ன? என்று கலை உணர்ச்சி இல்லாத காதலி சண்டை போட்டாலும் போடலாம்...]


=

ஓஷோ ஜோக். ஒரு ஜோக் போதும். இப்போது அவசரமாக கேன்டீன் சென்று மசாலா தோசை சாப்பிட வேண்டும். ஜோக் இனிமேல் தான் தேடவேண்டும். எனவே ஜோக் மொக்கையாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான்.

அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள் என்றார்.

அதற்கு அவன் 'அங்கே பாருங்க 21 என்று ஹைவேயில் எழுதி இருக்கிறது' என்றான்


'அது ஸ்பீட் லிமிட் இல்லை சார்,அதுதான் ஹைவே நம்பர், எனவே அதைப் பார்த்து வண்டி ஓட்ட வேண்டாம்' என்ற இன்ஸ்பெக்டர் , பின் சீட்டில் இருந்த அவன் மனைவியை எதேச்சையாக கவனித்து,

'அது சரி சார், இந்த அம்மா ஏன் இப்படி உடம்பெல்லாம் நடுங்கி வியர்த்து வழிந்து கொண்டு இருக்காங்க' என்று கேட்டார்
'ஒ அதுவா, கொஞ்சம் முன்னாடி தான் ஹைவே நம்பர். 210 இல் இருந்து பிரிந்து வந்தோம் ' என்றான் அவன்.

;-)

போப் புதிய நகரம் ஒன்றுக்கு சுற்றுலா சென்றார்.

அவர் தங்கவிருக்கும் ஹோட்டல்காரர்கள் அவரை மரியாதையுடன் அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர்.

போப் திடீரென்று கத்தினார்.

'நான் யார் தெரியுமா? ஒரு பெரிய மதத்தின் தலைவர். என்னை இப்படியா கேவலமாக அவமானப்படுத்துவது? இந்த சிறிய காற்றோட்டமில்லாத , குட்டி அறையில் நான் எப்படித் தங்குவது? 'என்று வெடித்தார்.

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது" ஹோலினெ
ஸ் , இது லிஃப்ட் "

சமுத்ரா


Friday, February 17, 2012

கலைடாஸ்கோப்-54

லைடாஸ்கோப்-54 உங்களை வரவேற்கிறது.

ಒಂದು
====

பெங்களூருவில் குளிர் மெல்ல மெல்ல மறைந்து குளிரும் இல்லாத வெம்மையும் இல்லாத மழையும் இல்லாத ஒரு வானிலை நிலவுகிறது. பிப்ரவரி , மார்ச் மாதங்கள் சிலருக்கு மிகவும் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கொஞ்சம் முன்னே ஜனவரி என்றால் குளிர் வாட்டி எடுக்கும். ஏப்ரல் வந்து விட்டால் விளம்பரங்களில் வருவது போல ஒரு பனிக்கரடி நம்மை கட்டிப் பிடித்துக் கொண்டு ஆடாதா என்று ஏங்க வைக்கும் வெய்யில்!இது இரண்டுக்கும் நடுவே உள்ள ஒரு Pleasant weather இப்போது.

ஹ்ம்ம்.., பருவங்கள் ,இயற்கை, வானிலை, மழை எதுவும் மாறவில்லை..மனிதன் மாறிவிட்டான்!

ಎರಡು
====

* ப்ளாக்கின் STATS பார்த்துக் கொண்டிருந்தபோது 'தற்கொலை செய்து கொள்வது எப்படி' என்ற கூகிள் தேடலுக்கு விடையாக Samudrasukhi .com வந்திருந்தது.
'தற்கொலை செய்து கொள்வது எப்படி'என்று நான் போஸ்ட் எதுவும் எழுதியதாக நினைவு இல்லை. இந்த ப்ளாகைப் படிப்பதுவே தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்று கூகிள் நினைத்து விட்டதோ என்னவோ?:(

** மனிதர்களுக்கு 'கலவி' மிகவும் முக்கியம் (நண்பன் படம் போன்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல. 'கலவி' தான்) உலகம் இயங்குவதற்கு 'அந்த' ஆசையும் ஒருவிதத்தில் காரணம். மனிதனின் எல்லா செயல்களுக்குப் பின்னும் செக்ஸ் மோட்டோ இருக்கிறது என்கிறார் ஃப்ராய்ட் .(குறைந்த பட்சம் நாற்பது வயது வரை) இதனால் தான் 40 + 50 + மக்கள் சாதனை செய்வது குறைவாகவே இருக்கிறது. அப்படி செய்தாலும் பிஸினசில் தான் முன்னேறுவார்கள்.(பணம் என்பதே காமம் என்பதன் இன்னொரு வடிவம் என்று சொல்பவர்களும் உண்டு)இள வயதினரின் (நன்றாகப் பாடுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, ஏன் ஆபீசில் வேலை செய்வது) செயல்களுக்குப் பின் காமமே முன்நிற்கிறது (அல்லது பின்னிற்கிறது) என்பது அவருடைய வாதம். சரி. மனிதர்களுக்கு மட்டுமே COLORFUL SEXUAL LIFE வாய்த்திருக்கிறது. பிட்டுப்படத்தில் தொடங்கி ,புத்தகத்தில் நடிகையின் படத்தை ஒளித்து வைப்பதில் தொடங்கி, காமசூத்திரா வரை எத்தனை சம்பிரமங்கள்? கோலாகலங்கள்?. ஆனால் விலங்குகளுக்கு? பாவம் கிடைக்கும் அற்ப நேரத்தில் அவை தங்கள் அவஸ்தையை முடித்துக் கொள்ள வேண்டும். இந்தத் தளம் விலங்குகளின் செக்ஸ் வாழ்க்கை எப்படி விநோதமாக,சுவாரஸ்யமாக இருக்கிறது என்று நகைச்சுவையாக விவரிக்கிறது. சில அப்பட்டமான சொற்கள் உங்களுக்கு நெருடலாகப் படலாம். ஆனால் அதை மறந்து விட்டு அறிவியலை ரசிக்கவும்.

ಮೂರು
=====

சமீபத்தில் வெப் சைட் ஒன்றில் படித்த ஒரு திருக்குறள்.

கண் களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்
செம்பாகம் அன்று, பெரிது!

-திருக்குறள் என்றால் நாம் பெரும்பாலும் ஒரு TAKE IT FOR GRANTED அணுகுமுறையுடன் தான் அணுகுவோம். திருக்குறள் தானே எல்லாம் தெரிந்தது தான் என்ற ஒருவிதமான் அலட்சியப் போக்கு. ஆனால் நம்மிடம் ஒரு பத்து தி.கு. இப்பவே சொல்லு என்றால் அதோ என் பஸ் வந்து விட்டது; நாளைக்குப் பார்க்கலாம் என்றோ மௌனமான செல்போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு சும்மானாச்சும் ஹலோ என்று சொல்லியோ எஸ் ஆகி விடுவோம்.சரி.

'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்' என்னைக் கட்டி இழுத்தாய் என்று சினிமாவில் பாடுவார்கள். ஆனால் உண்மையில் முழுப் பார்வையை விட,இரண்டு கண் பார்வையை விட, கள்ளப் பார்வையே (ஒன்றரைக்கண், ஒரு கண், அரைக்கண், முக்கால் கண் இவைகளில் குமரிமுத்து போல நோக்குதல்) காதலனை திக்குமுக்காட வைக்கிறது.ஆயிரம் பேர் கூடி இருக்கும் ஒரு பரபரப்பான இடம் என்று வைத்துக் கொள்ளலாம்.அதில் காதலன் காதலிக்கு நூல்விட்டுக் கொண்டு இருக்கிறான்.இந்த களேபரத்தில் அவள் ஒரே ஒரு முறை , அப்படி, பார்த்தும் பார்க்காதது போல், ஓரக் கண்ணால் அவனை நோக்குகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது காதலனுக்கு கிடைக்கும் பக்திப் பரவசம், ஆஹா, நீங்கள் காதலித்துப் பார்த்தால் தான் தெரியும்.

-கலமனு முக2 கள கலிகி3 ஸீத
குலுகுசு(னோ) கன்னுலனு ஜூசு

- என்கிறார் தியாகராஜர். சீதை மட்டும் விதிவிலக்கா என்ன? அவளும் ராமனை 'ஏண்டி இந்த வளையல் மேட்ச்சாவே இல்லையே 'என்று தோழியிடம் சொல்லும் சாக்கில் தலையை உயர்த்திப் பார்க்கிறாளாம்!

* hello , இவ்ளோ பெரிய வில் , கொஞ்சம் ஓவர் * மாலையை கீழே வை அம்மணி, வில்லு முழுசா உடைஞ்சதுக்கு அப்புறம் போட்டுக்கலாம்.


பாற்கடலில் உதித்த திருமணியே- சௌ
பாக்யலக்ஷ்மி என்னைக் கடைக்கணியே

என்கிறார் பாபநாசம் சிவன். திருமகளின் கடைக்கண் பார்வை போதும் என்கிறார். முழுவதும் பார்த்தால் எங்கே தங்க மழை பொழிந்து என்னையே மூழ்கடித்து விடுமோ என்ற (லேசான)பயம் போலும்!

தனக்கு நெல்லிக்கனி அளித்த ஏழைப்பெண்ணுக்கு கனகதாரா
ஸ்தோத்திரம் பாடி தங்கமழை வரவழைக்கிறார் சங்கரர்


ஆதிசங்கரர் கூட திருமகளின் கடைக்கண் பார்வை போதும் என்கிறார்.தன் கனகதாரா ஸ்தோத்திரத்தில்:

காமப்ரதா பகவதோ()பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:

(பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே)


கடாட்சம் என்றால் சைடில் ஓரமாக ஒரு GLANCE ...பார்த்தும் பார்க்காமல்

ஆனால் ஒருசில மகான்கள் கடைக்கண் பார்வை என்ற பிசினஸே வேண்டாம். , பார்ப்பதென்றால் முழுவதும் பார் , என்னதான் நடக்கிறது, ஒளிவெள்ளத்தில் மூழ்கி நான் செத்துப் போய் விடுவேனா என்ன தான் நடக்கிறது பார்த்து விடலாம் என்ற தொனியில் பாடுவார்கள்.

'கடெகண்ணில் ஏகென்ன நோடி- பிடுவே
கொடு நின்ன தியானவ மனசுத்தி மாடி'

-இது புரந்தரதாசர்.


நம் ஆண்டாளும் இதே கேஸ் தான் போலிருக்கிறது சும்மா இப்படி அப்படி பார்த்தால் அவளுக்குப் பிடிக்காது போல.அப்படியே ரெண்டு கண்ணையும் கொண்டு சீரியலில் வரும் வில்லி போல எங்கள் மீது முறைத்துப் பார் என்கிறாள்:

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர்

சைடு பிட்: காண்பது என்றால் நம்மை விட உயர்ந்தவர்களை நோக்குவது. 'கண்டேன் சீதையை' ..பார்ப்பது என்றால் நம்மை விட சிறியவர்களை நோக்குவது 'சீதை அனுமனைப் பார்த்தாள்'

ನಾಲ್ಕು
=====

இரண்டு படங்கள்.
இரண்டாவதைத் தமிழில் திருத்த இயலவில்லை. அப்படியே படித்துக் கொள்ளவும்.




ಐದ್ಹು
===

இந்தத் தளத்தில் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிப்பது போல நம் பிரபஞ்சம் முழுவதையும் வியப்புடன் தரிசிக்கலாம்.ஒரு குறிப்பிட்ட ஸ்கேலுக்கு மேல் நம்மால் வெறும் கண்களால் பிரபஞ்சத்தைப் பார்க்க முடியாது இல்லையா? ஆனால் இங்கே VIRTUAL ஆகப் பார்த்துக் கொள்ளலாம்.பிரபஞ்சத்தின் பெரிய எல்லை OBSERVABLE UNIVERSE ..ஒரு சக்தி வாய்ந்த தொலைநோக்கியால் எதுவரை பார்க்க முடியும் என்ற எல்லை.சில காலக்ஸிகளில் இருந்து வரும் ஒளி இன்னும் நம்மை வந்து அடையவில்லை என்றால் அவற்றை நம்மால் பார்க்க முடியாது.அதனால் நம்மால் பார்க்க முடிந்த பிரபஞ்சத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம்.அதே போல சிறிய எல்லை.அணுவின் உள்ளே அணுத்துகளின் உள்ளே , குவார்க்குகளின் உள்ளே என்ன இருக்கும்? சங்கு சக்ர தாரியாக மகாவிஷ்ணு இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு முட்டை மார்க்.அப்படி இல்லை. என்ன இருக்கிறது என்று நீங்களே சென்று பார்த்துக் கொள்ளவும்.

ಆರು
===

ஓஷோ ஜோக்.


இது ஒரு A ஜோக். படிப்பதோ படிக்காமல் விடுவதோ உங்கள் இஷ்டம்.

A ஜோக் என்றதும் கிளுகிளுப்பான படம் எதிர்பார்த்தீர்களாக்கும்
ஆசை தோசை!


நிர்வாண பீச் ஒன்றில் ஒரு பெண் ஒருவனுடைய 'பைப்பில்' (அதை வேறு எப்படி அழைப்பது??) WY என்று எழுதி இருப்பதைப் பார்த்து அது என்ன வார்த்தை என்றாள்.அதுவா WANDY என் GIRL FRIEND பெயர். சுருங்கி இருக்கும் போது WY என்று இருக்கும். மூடு வந்தால் அதில் என் காதலி பெயர் தெரியும்படி பச்சை குத்தி இருக்கிறேன் என்றான். சரி என்று அவள் கொஞ்ச தூரம் போனதும் இன்னொரு ஆளை சந்தித்தாள். அவனுடையதிலும் WY என்று எழுதி இருந்தது. ஹலோ என்ற அவள் 'உன் காதலி பேரும் WANDY யா ?' என்று கேட்டாள்.இல்லையே என்றான் அவன். பின் அங்கே என்ன பச்சை குத்தி இருக்கிறாய் என்று கேட்டாள்.அதுவா? அது தான் WELCOME TO THE BEACH AND HAVE A NICE DAY!

(பெண் இப்போது மயங்கி விழுகிறாள்!)

உங்களுக்காக இன்னொன்று. வாழ்வைக் கொண்டாடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். நாளை என்பதே இல்லை என்பது போல இன்றை அனுபவியுங்கள்!

சர்கஸில் மிருகங்களை பழக்கும் வேலைக்கு ஒரு ஆண் ஒரு பெண் இரண்டு பேரும் வந்திருந்தனர்.சர்க்கஸ் முதலாளி LADIES FIRST என்று முதலில் பெண்ணை சிங்கத்தின் கூண்டுக்கு அனுப்பினார். சிங்கம் அவளை நோக்கி பாய்ந்து வந்தது. உடனே அந்தப் பெண் தன் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றாள். திடுக்கிட்ட சிங்கம் உடனே பணிந்து அவள் கையை நக்கி விட்டு ஓரத்தில் சென்று படுத்துக் கொண்டது.

சர்க்கஸ் முதலாளி , 'இதப் பாருப்பா இப்ப உன் முறை. அதை விட சிறப்பாய் உன்னால பண்ண முடியுமா? முடியாதுன்னா அப்படியே வெளியில் போய் விடு' என்றார்

'கண்டிப்பா முடியும் சார். அதை விட ரொம்ப சிறப்பாகவே செய்வேன். அந்த முட்டாள் சிங்கத்தை மட்டும் எப்படியாவது கூண்டில் இருந்து வெளியேற்றுங்கள்' என்றான் அவன்...

சமுத்ரா

Monday, February 13, 2012

அச்சமுண்டு அச்சமுண்டு




'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ' என்ற பாரதியாரின் (OVER ) confidence எப்போதும் பொருந்தாது என்று யோசிக்க வைத்தது சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம். சினேகா மற்றும் பிரசன்னா நடித்த படம்.

படத்தின் ஒரு ரத்தினச் சுருக்கம்: பிரசன்னா சினேகா தம்பதிகள் தம் பெண் குழந்தையுடன் வெளிநாடு ஒன்றில் தனியாக வசிக்கிறார்கள்.பிரசன்னா வேலை செய்கிறார். சினேகா ஹவுஸ் WIFE . சினேகா இரண்டாம் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். முதல் குழந்தை என்பதால் அந்தப் பெண் குழந்தை மீது சினேகா அளவுக்கதிகமாகவே பாசம் வைத்திருக்கிறார். அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று எப்போதும் பயப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இதை விரும்பாத பிரசன்னா இது தன் மனைவியின் அதீத மனக்கற்பனை என்று உதாசீனம் செய்து அந்தக் குழந்தையை கராத்தே பயிற்சி பள்ளியில் சேர்த்து தைரியமாக வளர்க்க நினைக்கிறார். இதற்கிடையில் தம் வீட்டை பெயின்ட் செய்ய ஒரு வெளிநாட்டு ஆளை (வில்லன்) அவர்கள் நியமிக்கிறார்கள். அவன் மிகவும் நல்லவனாக இருப்பதாலும் அடிமாட்டு விலைக்கு வீட்டை பெயின்ட் செய்ய ஒத்துக் கொள்வதாலும் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் அந்த ஆள் குழந்தைகளைக் கடத்தி அவர்களை பாலியல் வன்முறை செய்யும் ஒரு சைக்கோ. இது தெரியாமல் வீட்டுக்குள்ளேயே வினையை வைத்துக் கொண்டு வளைய வருகிறார்கள் இருவரும். ஒரு நாள் பிரசன்னா வெளியூர் போய் விட்டார் என்ற தைரியத்தில் சைக்கோ
குழந்தையை கடத்த முடிவெடுக்கிறான். ஆனால் ஏனோ பிரசன்னா வெளியூர் போகாமல் அன்று வீட்டிலேயே இருக்கிறார். வில்லன் தன் கடத்தல் பிளானை அரங்கேற்றுகிறான். சினேகாவை காலில் சுட்டு விட்டு குழந்தையை கடத்தும் போது (உள்ளே குளித்துக் கொண்டிருக்கும்)பிரசன்னா எதிரில் வந்து சண்டை போட்டு கடைசியில் வேறு வழி இன்றி அவனை வன்முறையுடன் சுட்டு வீழ்த்தி குழந்தையைக் காப்பாற்றுகிறார்.சினேகா ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்படுகிறார்.

இதிலிருந்து மூன்று விஷயங்களைப் பேசுவோம்.முதலில் இந்த திரைப்படம் கூறும் சில சுருக்கமான நீதிகள் :-

* வெளியூரிலேயோ வெளிநாட்டிலேயோ தனியாக வசிக்கும் போது வெளியாள்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். இப்படி சொல்வதால் எல்லாரையும் சந்தேகப்படுங்கள் என்று அர்த்தம் இல்லை. யார் மீதும் அசட்டுத்தனமான குருட்டு நம்பிக்கை வைக்க வேண்டாம்.

* உங்கள் மனதில் எதை திரும்பத் திரும்ப நினைக்கிறீர்களோ அதுதான் நடக்கும். (நல்லதோ கெட்டதோ)

* சில சமயம் உங்கள் உன்மனது (intuition ) சொல்வதற்கு செவி சாய்க்கவும்.

*குழந்தைகளை தைரியமாக வளர்க்கவும். பாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் அந்த பாசமே அவர்கள் வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடாது.

௮-1
====

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுப்போகும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது என்னவோ உண்மை தான்.இந்த நெருப்பு பெற்றோரின் Maturity level ஐப் பொறுத்து குழந்தை பெரியவனா(ளா)கும் வரையோ இல்லை சாகும் வரையோ தொடரும்.(50 வயது மகன் இன்னும் ஆபீசில் இருந்து வரவில்லையே என்று புலம்பும் பாட்டிகளும் உண்டு!) 'கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே' என்று பாடுகிறாள் ஆண்டாள். கம்சன் வயிற்றில் மட்டும் அல்ல. யசோதையின் வயிற்றிலும் தினம் தினம் நெருப்பு தான். மாடு மேய்க்கச் சென்ற தன் பிள்ளை இன்னும் வரவில்லையே என்று தோழியிடம் இவ்வாறு புலம்புகிறாள்:

ராகம்: பூர்வி கல்யாணி

என்னாச்சுதோ ஏதாச்சுதோ -என் கண்மணிக்
கென்னாச்சுதோ
ஏதாச்சுதோ

விண்ணாளும் பரிதி விளையும் பொழுதில் சென்றான்
மண்ணாளும் கம்சன் மாமன் துயர் செய்தானோ (என்னா)

எழிலாடும் வதனி பூதனி என்றொருத்தி வந்தாள்
உடுத்த உடை விலக்கி எடுத்து விஷப்பால் தந்தாள்
பழியாய்க் கிடப்பார் பார் பாரில் அவ்வரக்கரெல்லாம்
பாலனன்றோ என் மகன் பரிதவிக்குதே நெஞ்சம்
(என்னா)

தன் பிள்ளைதான் உலகாளும் பரமாத்மா என்று அரசல் புரசலாகத் தெரிந்த யசோதையே இப்படிப் பாடும் போது சாதாரண குழந்தைகளின் தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருப்பார்கள் ? சரி . சின்னப்பாப்பா என்றால் நாம் தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு (5 +)பெற்றோர்கள் தான் இதுமாதிரி விஷயங்களில் கொஞ்சம் ட்ரைனிங் கொடுக்க வேண்டும். வீட்டு அட்ரஸ் என்ன? , அப்பாவின் போன் நம்பர் என்ன?, எப்படி மொபைல் போனை உபயோகிப்பது, தவறான நோக்கத்துடன் தொடுபவர்களை, பழகுபவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது,யாராவது ஏதாவது சாப்பிடக் கொடுத்தால் பறக்காவெட்டி போல வாங்கிக் கொள்ளாமல் எப்படி சாரி அங்கிள் என்று சொல்லி மறுப்பது என்றெல்லாம்.

௮-2
====

'எனக்காக என்ன செய்தாய்'? என்று அப்பா அம்மாவைப் பார்த்து நீங்கள் கேட்பதற்கு முன் ஒரு விஷயம். உங்களை உடம்பிலும்
மனத்திலும் ஒரு குறை இல்லாமல் இது வரை வளர்த்து ஆளாக்கியதே ரொம்பப் பெரிய விஷயம். ஸ்கூலில் இருந்து நம் பையன்/பெண் நல்லபடியாகத் திரும்பி வரவேண்டுமே , டூருக்கு சென்ற பிள்ளை எந்த அசம்பாவிதமும் இன்றி நல்லபடியாக வந்து சேரவேண்டுமே என்று உங்கள் பெற்றோர்களும் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு நிறைய நாட்கள் வருந்தி இருப்பார்கள். தெய்வங்களை வேண்டி இருப்பார்கள். கண்ணீர் விட்டிருப்பார்கள்.

மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து -சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்? -என்கிறார் பட்டினத்தார்.

பிள்ளை பித்தானாலும் பரவாயில்லை. பின்னொருநாள் 'நீ எனக்காக என்ன செய்தாய் (செய்து கிழித்தாய்)?' என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் அவர்கள் தாங்க மாட்டார்கள்.

௮-3
====

இந்தியாவில் தான் CHILD ABUSE எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் என்று அந்த திரைப்படத்தில் சொல்கிறார்கள்.சரி. குற்றங்களின் அறிகுறிகளை (symptom ) அழிப்பதில் தான் நாம் எப்போதும் கவனம் செலுத்துகிறோம்.
குற்றவாளியை அடித்து உதைப்பது, நீ எல்லாம் அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா என்று திட்டுவது தூக்கு தண்டனை அளிப்பது இப்படி. குற்றங்களின் வேர்கள் (Cause )எங்கே என்பதை நாம் மறந்து விடுகிறோம். Eliminate the causes; not the symptoms! திரைப்படங்களும் வில்லனை ஹீரோ வெறியுடன் கொன்று விடுகிறான் சுபம் என்று முடிந்து விடுகின்றன!

நாம் என்னவோ இயேசுவின், புத்தனின் நேரடி வாரிசுகள் மாதிரி நம்மை சில சமயங்களில் நினைத்துக் கொள்கிறோம். .பொது இடத்தில் நாம் பத்தோடு பதினொன்றாக பர்ஸ் திருடியவனை அடிப்பது ஒருவித PSYCHOLOGICAL PROTECTION என்கிறார் ஓஷோ. அதாவது நான் நல்லவன் நான் ஒழுக்கமானவன் நான் எதையும் திருடவில்லை என்று மறைமுகமாக சொல்வது. அடிக்காமல் ஒதுங்கி நின்றால் தன்னையும் திருடன் என்று சமுதாயம் நினைத்து விடுமோ என்ற பயம்.

நாம் எல்லாக் குற்றங்களையும் (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, CHILD ABUSE ) என்றாவது ஒருநாள் மனதளவில் கண்டிப்பாக செய்திருப்போம்.
அதை உடலளவில் செய்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக குற்றவாளியை அருவருப்பாக பார்க்கிறோம். ஆம்..They need a treatment..not punishment. சமூகத்தில் நடக்கும் ஓவ்வொரு குற்றத்துக்கும் நாமும் ஏதோ ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்கிறான் பாரதி.நார்மலான (?) மனிதன் ஒருவன் பிஞ்சுக் குழந்தைகளைக் கற்பழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் யார்? அவனுக்கு தாள முடியாத தனிமையை,இயலாமையை பரிசளித்தது யார்? இயல்பாக கிடைக்கும் வாழ்வின் சின்னச்சின்ன சந்தோஷங்களை அவனுக்கு மறுத்தது யார்? நாம் தான்!




சிக்காட்டிலோ என்ற சீரியல் கில்லர் பற்றித் தெரியுமா? படத்தில் அப்பாவியாக போஸ் கொடுக்கிறானே அவன் தான்.அவன் குறிவைத்தது பெரும்பாலும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியரைத்தான் . 'நீ ஆண்மை அற்றவன்' 'நீ ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவன்' என்று அவன் மனைவி அவனை அடிக்கடி திட்டியது அவன் உள்மனதில் ரணமாக உறுத்தி இருக்கிறது. எனவே ஒவ்வொரு கொலையை செய்யும் போது
ம் அவன் தன் ஆண்மையின் உச்சத்தை உணர்ந்து இருக்கிறான். அவனது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு கடைசியில் அவனுக்குதான் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவனை மனதளவில்
உளைச்சலுக்கு உள்ளாக்கிய மனைவிக்கு வெறும் கண்டனங்கள் தான்.

இன்னொரு சீரியல் கில்லர் கோர்டில் இப்படி வெடித்தான். "இப்போது என்னை எல்லாரும் இத்தனை பிரபலமாக கவனிக்கிறீர்களே? கேமராவைத் தூக்கிக் கொண்டு வந்து படம் பிடிக்கிறீர்களே? இதே சமுதாயம் தான் என்னை என் சிறுவயதில் புறக்கணித்தது. தனிமையில் , இருட்டில் , இயலாமையில் என்னை குமுற வைத்தது. சாப்பாடு இல்லாமல் தெருக்களில் அலைய வைத்தது. அப்போது எங்கே இருந்தது இந்த சமுதாயம்? நீங்கள் வைத்திருக்கும் கேமெராக்கள் ஒன்றின் விலையில் எனக்கு சாப்பாடு வாங்கித் தந்திருந்தால் இந்த அவல நிலைக்கு நான் வந்திருப்பேனா?"

நார்மலான ஒரு மனிதன் மனத்தில் CHILD ABUSE , HOMO SEXUALITY போன்ற பாலியல் விகாரங்கள் உருவாவதற்கு இந்த சமுதாயம் தான் முழுக்க முழுக்க பொறுப்பு.

விவேக் கோர்டில் வசனம் பேசுவதை நாம் எல்லாரும் காமெடியாகத் தான் பார்க்கிறோம்.ஆனால் அதன் பின்னே இருக்கும் கசப்பான உண்மைகளை மறந்து விடுகிறோம்.


~சமுத்ரா