இந்த வலையில் தேடவும்

Thursday, November 22, 2012

கலைடாஸ்கோப்-77

லைடாஸ்கோப்-77 உங்களை வரவேற்கிறது  

“Home is where you hang your head” - Groucho Marx
 
எந்த ஒரு குழந்தையும் கீழ்க்கண்ட இரண்டையும் கடந்து வர வேண்டி இருக்கும். 1. Home work 2. Home Sick. Home work பற்றி இப்போது பேசப் போவது இல்லை. [கவர்மென்ட் ஸ்கூல் என்பதால் சனி ஞாயிறு வீட்டுப் பாடங்களை வெள்ளிக் கிழமை ஸ்கூலிலேயே முடித்து விடுவோம் :)....] சில குழந்தைகளுக்கு எத்தனை வயதானாலும் அதாவது  home work போனாலும் home sick மட்டும் அவர்களை விட்டுப் போகவே போகாது. (என்னைப் போல!) ஆபீசில், இப்போது தானே ஊரில் இருந்து வந்தாய்? மெயில் பாக்ஸ் கூட ஓபன் செய்யவில்லை அதற்குள் KSRTC.IN ஓபன் செய்கிறாயே என்று கேட்பார்கள். என்ன செய்வது ? என் ஹொம் சிக் அத்தகையது!இதனாலேயே வெளிநாடு போகும் வாய்ப்புகளை பெரும்பாலும் தவிர்த்து இருக்கிறேன்.ஆபீசில் வடநாட்டுக் காரர்கள் சில பேர் வருடம் ஒருமுறை தான் பெரும்பாலும் தீபாவளிக்கு ஊருக்குப் போகிறார்கள். சின்ன வயதிலிருந்தே ஹாஸ்டலில் வளர்ந்தவர்களாம் ....வீட்டில் ஒருவாரம் இருந்தாலே HOMESICK வந்து விடுமாம்!!!!


சொந்த வீட்டில் இருந்தே தினமும் ஆபீசுக்கு சென்று வருபவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தோன்றுகிறது...!!! ஊரில் இருப்பவர்களை இங்கேயே கூட்டி வந்து விட வேண்டியது தானே? பெங்களூரிலேயே வீடு வாங்கி விட வேண்டியது தானே என்று கேட்கிறார்கள்....வீட்டை வேண்டுமானால் இங்கே shift செய்யலாம்.. ஆனால் ஊரை!???சொர்
க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வராது இல்லையா?

=====================




'போகோ' டி .வி யின் 'சோட்டா பீம்' பார்ப்பீர்களா? எனக்கு ஏனோ
சோட்டா பீம் பிடிப்பதே இல்லை. குழந்தைகளை சூப்பர் ஹீரோவாகக் காட்டும் கார்ட்டூன்களை நான் எப்போதும் வெறுத்து வந்திருக்கிறேன். குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்..

அரக்கர்களை, வில்லன்களை, திருடர்களை, காட்டு விலங்குகளை சோட்டா பீம் அனாயாசமாக கையில் சுழற்றி எறிகிறான். வானில் சர்வ சாதாரணமாக பறக்கிறான். குதிரை ஓட்டுகிறான்.....ராஜு என்ற ஒரு வயதே நிரம்பிய குழந்தை 'கெட்டவர் ' களை கையால் குத்தியே அடக்குகிறது! ஓடி வரும் காளை என்ன? பதுங்கி வரும் பாம்பு என்ன எல்லாமே சோட்டா பீமுக்கு 'ஜுஜுபி' தான்.

 இத்தகைய கார்ட்டூன் கேரக்டர்களால் குழந்தைகளுக்கு தைரியம் வளரும் என்கிற வாதம் என்னவோ உண்மை தான். ஆனால் குருட்டு தைரியம் ஆபத்தானது அல்லவா? பாம்பைப் பார்த்தால் விலகி வந்து விடு என்று நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது தான் நல்லது. தன்  குழந்தை சோட்டா பீமாக இருப்பதை எந்த தாயும் விரும்ப மாட்டாள் என்றே தோன்றுகிறது. தன் கண் முன்னே தன் மகன் ஆரோக்யமாக எந்த வில்லங்கமும் வியாதியும் வேதனையும் இன்றி  வளர வேண்டும் அதுவே போதும் என்பது தான் எந்த ஒரு தாயின் விருப்பமாக இருக்கும். எதற்கு பயப்பட வேண்டும் எதற்கு பயப்படக் கூடாது என்று 'அஞ்சுவதஞ்சலை'நாம் தான் குழந்தைகளுக்கு  சொல்லித் தர வேண்டும் ...இல்லாத பேய்க்கு பயப்படும் படி குழந்தைகளுக்கு சொல்லித் தருவது முட்டாள்தனம் . பாம்பு வந்தால் பயப்படாமல் சோட்டா பீம் மாதிரி அதை எதிர்க்கணும் என்ற எண்ணத்தை மனதில் விளைவிப்பது அதைவிட வடிகட்டிய முட்டாள்தனம்.

================

ஸ்பூனர் ,ஸ்பூனர் என்று ஒரு ஆள் இருந்தாராம். அவருக்கு பாவம் நாக்கில் ஏதோ கோளாறோ இல்லை சும்மா கிக்குக்காகவோ வார்த்தைகளில் எழுத்துகளை மாற்றி மாற்றி பேசுவாராம்.

Go and take a shower என்று சொல்வதற்கு பதில் Go and shake a tower என்பாராம்.இதனாலேயே இதற்கு spoonerism என்று பெயர் வைத்து விட்டார்கள்.  நாமும் நிறைய தடவை டங் -ஸ்லிப் ஆகி இதற்கு ஆட்பட்டிருப்போம்! தமிழில் Exact 
spoonerism கொஞ்சம் அரிது என்றாலும் வார்த்தைகளின் முதல் எழுத்துகளை மாற்றிப் போட்டு இப்படி சிலவற்றை உருவாக்கலாம் :-(இரண்டுக்கும் அர்த்தம் இருக்க வேண்டும்)

- கேட்டு பாக்கலாம் - பாட்டு கேக்கலாம்
- கொற்றவன் விழித்தான் -விற்றவன் கொழித்தான்
- கடலில் குளி  - குடலில் களி
- தாங்கி வந்தான் -வாங்கி தந்தான்
- வாடிய பயிறு -பாடிய வயிறு
- வாக்கு தந்தான் -தாக்க வந்தான்
- பறவைக் காய்ச்சல் -கறவை பாய்ச்சல்
- மாடு கறந்தா
ள்- காடு மறந்தாள்
- சாமி மாலை -மாமி சாலை
- காட்டு மலர் -மாட்டு கலர்
- பாட்டு கட்டணம் -காட்டு பட்டணம்
- முதிர் அரசு -அதிர் முரசு 

-  பாக்கு வெட்டி -வாக்குப் பெட்டி
- தேசம்  பாடு -பாசம் தேடு
-ஆச்சி பேரு -பேச்சி ஆரு (?)
- குட்டை மணம் -மட்டை குணம்
- பூட்டை மாட்டு -மாட்டை பூட்டு
- ஊனை படை -பானை உடை (இதில் மனித வாழ்வு முழுதும் அடங்கி விட்டதே :))

=====================

'நம்பர்' (Number)என்றால் என்ன என்று சில வேளைகளில் சிந்தித்திருக்கிறீர்களா? (என்னது , இல்லையா?! அப்ப நான் மட்டும்தான் லூசா?) சரி....

ஒன்று என்றால் என்ன? ஒன்று என்றால் ஒன்று என்று சொல்லக் கூடாது ( தத்துவம் வேதாந்தம் எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்)நம்பர் ஒன்று என்பதற்கு ஆச்சரியமாக எந்த வரையறையும் இல்லை. ஒன்றிலிருந்து இரண்டுக்கு செல்லும் போது விஷயங்கள் இன்னும் குழப்பமடைகின்றன.
இரண்டு என்பது என்ன? 'ஒன்று' , அது போல் இன்னும் 'ஒன்று' ..அதுதான் இரண்டா? இரண்டு ஒன்றுகள் சேர்ந்தது இரண்டு என்று சொன்னால் நாம் மீண்டும் ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொள்கிறோம். அதாவது இரண்டுக்கான வரையறையில் மீண்டும் நாம் இரண்டையே உபயோகிக்கிறோம்.  இரண்டு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரி இருக்கும் பொருளை குறிக்க பயன்படுகிறது என்று சொல்லலாம். உதாரணமாக வள்ளியிடம் ஒரு ஆடு, ஒரு நாய், ஒரு கோழி ஒரு பன்றி இருக்கிறது என்று சொல்லும் போது இரண்டின் தேவையே ஏற்படுவது இல்லை.in fact , அப்போது ஒன்று என்பது கூட தேவைப்படுவது இல்லை. ஒரே ஆடு மாதிரி இன்னொன்று இருந்தால் அதை எப்படி குறிப்பிடுவது? 
ஒன்று அல்ல என்றா ? ஒன்றைப் போன்ற இன்னும் ஒன்று என்றா? தலை சுற்றுகிறது.

இயற்கைக்கு எண்களைப் பற்றிய ஐடியா இல்லை என்ற கருத்தை முன்வைக்கிறார் ஓஷோ. இங்கே இரண்டு விதமான வாதங்கள் இருக்கின்றன

ஒன்று
* இயற்கை கணக்கில் Ph .D வாங்கியிருக்கிறது அதற்கு கணிதம் கால்குலஸ் எல்லாம்  தெரியும் என்று நம்புவது ( ஆண் பெண் பிறப்பு விகிதம், சில இயற்கை Fractal pattern கள் இவற்றையெல்லாம் பார்த்து விட்டு சொல்வது)

இரண்டு
* எண்கள் , கணிதம் என்பதெல்லாம் மனிதனின் படைப்பு ..இயற்கைக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று நம்புவது.(அந்த ரூமில் ஆறு நாற்காலிகள் இருக்கின்றன என்று சொல்கிறோம்... உண்மையில் அங்கே 'ஆறு' நாற்காலிகள் இல்லை....அங்கே மனிதர்கள் யாரும் இல்லை என்றால் வெறுமனே நாற்காலிகள் இருக்கும்...'ஆறு' இருக்காது )

மேலும், மனிதன் ஒன்பது வரை எண்ணி விட்டு பிறகு இலக்கங்களை Repeat செய்து விடுகிறான் ..மனிதனுக்கு பத்து விரல்கள் இருப்பதால் இந்த MODE -10 ஏற்பட்டது என்று சொல்கிறார்கள்.இப்படி இலக்கங்களை repeat செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நூறு வரை ஆயிரம் வரை பிரத்யேக எண்களை  வைத்துக் கொண்டு அதன் பிறகு Repeat செய்யலாம்....எல்லாம் நம் சௌகரியம் தான்....

மேலும் ஒன்று ,இரண்டு, மூன்று என்று எண்ணி விட்டு பிறகு அவற்றையே (அந்த digit -களையே )திரும்ப உபயோகிக்கலாம். தப்பில்லை. மனிதனுக்கு கையில் மூன்றே விரல்கள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும் ....நான்கு ஐந்து ஆறு எல்லாம் தேவையில்லை. உதாரணமாக 1,2,3 என்று எழுதி விட்டு பிறகு நான்கு என்பதை 11 ஐந்து என்பதை 12 ஆறு என்பதை 13 ஏழு  என்பதை 21 எட்டு:22 ஒன்பது:23 பத்து: 31 பதினொன்று: 32 பன்னிரண்டு : 33 பதிமூன்று : 111 என்று எழுதலாம். ஏன் நம் கம்ப்யூட்டருக்கு கூட இரண்டு மூன்று ,நாலு எல்லாம் தெரியாது. ரெண்டே ரெண்டு எண்களை   தெரிந்து வைத்துக் கொண்டு அது உலகையே ஆட்சி செய்யவில்லையா? ரெண்டும் ரெண்டும் 4 (நாலு )அது என்றும் மாறாதுடா கோபாலு என்று சொல்வதெல்லாம் சும்மா relative ....நாம் பார்த்த mode -3 முறையில் ரெண்டும் ரெண்டும் 2+2 = 11 (இப்போதைய பதினொன்று ) என்று வரும்....

mode -3 வாய்ப்பாடு ஒன்று:

1x1=1
1x2=2
1x3=3
2x1=2
2x2=11
2x3=13
3x1=3
3x2=13
3x3=23
11x1=11
11x2=22
11x3=33
12x1=12
12x2=31
5x 3=113
:):):()

இப்போதைய நம் mode -10 இல் நம்பர்-9 கொஞ்சம் ஸ்பெஷல்... குழந்தைகளிடம் கீழ்க்கண்ட விளையாட்டை விளையாடிப் பாருங்கள்:

ஏதோ ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளவும். (எத்தனை இலக்க  எண்ணாயினும் சரியே) அதன் இலக்கங்களை கூட்டி வரும் எண்ணை அந்த முதல் எண்ணில்  இருந்து கழிக்கவும் .இப்போது வரும் எண்ணில் இருந்து ஏதாவது ஒரு இலக்கத்தை (digit -ஐ) அழித்து விடவும். மீதி இருக்கும் எண்ணை  அப்படியே சொல்லவும். அதில் இருந்து எந்த இலக்கம் அழிக்கப்பட்டது என்று சுலபமாக சொல்லி விடலாம்.

உதாரணம்: விளையாடுபவர் 36578 என்ற எண்ணை  நினைத்துக் கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது 36578 - (3+6+5+7+8) = 36549

36549 இல் நடு இலக்கமான 5 ஐ அழித்து விட்டு மீதி 3649 என்று சொல்வார்கள்....இப்போது சொன்ன எண்ணின் இலக்கங்களை மறுபடியும் கூட்டவும்.3+6+4+9= 22 =4.. இந்த நான்கை ஒன்பதில் இருந்து கழித்து விட வேண்டியது. 9-4 =5....5 என்ற எண்  தான் அழிக்கப்பட்டது  என்று பந்தாவாக சொல்லி விடலாம். நமக்கு விடை பூஜ்ஜியமாக வந்தால் விளையாடுபவர் ஒன்பதையோ அல்லது பூஜ்ஜியத்தையோ அழித்திருக்க  வேண்டும் ....

===========================================

ஒரு 'சிறிய' சயின்ஸ் பிக்ஷன் கதை...

தேதி -30:2:5012*

ஷீலா சமையல் செய்து கொண்டிருக்கிறாள். ..அவள் கண்களில் இருந்து bio light வேலை செய்து கொண்டிருக்கிறது.இப்போது டார்ச் லைட், கேண்டில் எமர்ஜென்சி லைட் எல்லாம் இல்லை.எல்லாருக்கும் சிறு வயதிலேயே ஆபரேஷன் செய்து கண்ணில் பயோ லென்ஸ் பொருத்தி விடுகிறார்கள்... கரண்ட் போய் விட்டால் சுவிட்ச்-ஐ ஆன்  செய்தால் நம் கண்ணில் இருந்தே வெளிச்சம் வரும்...உடலில் இருக்கும் bio -எனர்ஜியை ஒளியாக மாற்றுகிறது அது. உடலில் இதயம் துடிக்கிறது நுரையீரல் வேலை செய்கிறது...வயிறு வேலை செய்கிறது. இதில் இருந்தெல்லாம் மின்சாரம் எடுத்து அதில் இருந்து வெளிச்சம் வரவைப்பது....

"டி ,ஷீலா! ரெண்டு நாளா உடம்பு சரியில்லை....அதனால என் bio  light வேலை செய்யலை...கொஞ்சம் சார்ஜ் ஏத்திக் கொள்கிறேன் வாடி" என்றால் வர மாட்டேன் என்கிறாள் .சார்ஜ் ஏற்றும் சாக்கில் நான் வேறு ஏதாவது செய்த ஆரம்பித்தால் சமையல் வேலை நின்று விடுமாம்! அதனால் என்ன? வழக்கம் போல நியூட்ரிஷன் காப்ஸ்யூலை முழுங்கலாம் என்றால் கேட்க மாட்டேன் என்கிறாள். அரசாங்கம் ஞாயிறு ஒரு நாள் மட்டும் இப்படி traditional ஆக சமைத்துக் கொள்ள அனுமதித்து அன்று ஒரு நாள் மட்டும் டியூபில் கேஸ்  சப்ளை செய்கிறது. அதை ஏன் விட வேண்டும் என்று இன்று பாட்டி சமையல் செய்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் .அதுவும் ராத்திரி  21 மணிக்கு மேலே சமையலை ஸ்டார்ட் செய்திருக்கிறாள்!

காய்கறி எல்லாம் கொள்ளை விலைக்கு ஏறிப் போச்சு! international பார்ம் சென்டரில் மட்டுமே விளைவிக்கிறார்கள் ....கொஞ்சம் கேரட் , கொஞ்சம் கத்திரிக்காய் , கொஞ்சம் பீன்ஸ் தக்காளி கொத்தமல்லி எல்லாம் நூறு  இண்டோ என்கிறான் படுபாவி......ஆங்..இந்த இண்டோ இப்போதைய காசு... ரூபாய் ,யூரோ, டாலர் எல்லாம் மலையேறி ஆயிரம் வருஷம் ஆகிறது ....உலகில் கண்டங்கள் எல்லாம் முட்டிக் கொண்டு ஒன்று சேர்ந்த பின் ஒரே இன்டர்நேஷனல் கரன்சி தான்..இண்டோ ...அதைப் பார்க்க முடியாது எலக்ட்ரானிக் கரன்சி..சும்மா மாடலுக்காக ஒன்று ஐ.மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்...உலக கண்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின்னும் ஆசியா அமெரிக்கா என்று பிரிவினை தொடர வேண்டுமா எல்லாம் ஒரே உலகம் ஒரே கண்டம் 'பாஞ்சியா' என்று கொண்டு வர வேண்டும் என்று அரும்பாடு பட்டு போராடிய ரீமேனின் படத்தை இண்டோவில் அச்சிட்டு போட்டிருக்கிறார்கள்....இப்போது கண்டங்களை கடல்கள் அல்ல மலைகள் பிரிக்கின்றன..கண்டங்கள் மோதிக் கொண்டபோது உருவானவை.. .அவைகளுக்கு ஹிமாலயன் -2
ஹிமாலயன் -3....என்று பெயரிட்டு விட்டார்கள்...நம் இந்திய ஹிமாலயம் இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறது!

நான் இப்போ போய் ஷேவ் செய்து கொண்டு ஷீலா செய்ததை சாப்பிட வேண்டும்....சாப்பாடு எப்படி இருக்கிறதோ..! ஆண் குழந்தைகளுக்கு இப்பவெல்லாம் சின்ன வயதிலேயே ஆபரேஷன் செய்து தாடி மீசை முளைக்காமல் செய்து விடுகிறார்கள்...டெய்லி  ஷேவிங் செய்வது நியூசென்ஸ் -ஆம்! எனக்கு தாடிமீசை வேண்டும் என்பதால்  டி -ஆபரேஷன் செய்து கொண்டு மாசா மாசம் பணம் அழுது கொண்டிருக்கிறேன்....நான் மீசை வைத்துக் கொண்டிருப்பது ஷீலாவுக்குப் பெருமை.....! 1521 ஆவது floor -இல் நான் மட்டுமே மீசை வைத்துள்ளேன்...மற்றவன்கள் கஞ்சப் பயல்கள்!இதனால் நாம் ஆண் என்று எல்லாருக்கும் சுலபமாக தெரிந்து விடுகிறது..இப்போது ஆண் பெண் எல்லாருக்கும் ஒரே டிரஸ் தான்...அதில் ஆக்சிஜன் பில்டர்கள் இருக்கும்...இருட்டில் ஒளிரும்...சோலார் சார்ஜர்!

சமையல் ரெடி என்றாள்  ஷீலா...டேப்லெட்டை சாப்பிட்டு சாப்பிட்டு மரத்துப் போன நாக்குக்கு வாரம் ஒருமுறை வீட்டு சமையல்......அப்படியே பாட்டி கைப்பக்குவம் ஷீலாவுக்கு.பாட்டி அறுபதிலேயே போய் சேர்ந்து விட்டாள் ....அறுபதுக்கு மேல் இருந்தால் மாதம் முன்னூறு இண்டோ அரசாங்கத்துக்கு அழ வேண்டும்... பாட்டி ! போகாதே !நீ இரு நான் சம்பாதிக்கிறேன் தானே நீ இரு என்று சொன்னாலும் கேட்காமல் போய் விட்டாள் ...அவள் ஒரு கஞ்சப் பெண்மணி! தாத்தா பிடிவாதமாக இன்னும் இருக்கிறார்...வயது என்பது!தானே சம்பாதித்து தானே LIFE PENALTY கட்டுகிறார்.

டைனிங் டேபிளில் அமர்ந்தோம். ஐ.லேபில் இருந்து போன் வந்தது!குழந்தை ரெடியாம் ...ஷீலா எஸ்பரேன்டோவில் பேசி விட்டு போய் பார்த்து விட்டு வரலாம் என்றாள் .வெளியே 
எஸ்பரேன்டோ வில்தான் பேச வேண்டும்.. எழுத வேண்டும்...வீட்டுக்குள் அவரவர் தந்தை மொழி பேசிக் கொள்ளலாம்... நாங்கள் தந்தை மொழி தமிழ் தான் பேசிக் கொள்வது வீட்டுக்குள்...தமிழை எப்படி எழுதுவது என்று தெரியாது...யாருக்கும் தெரியாது......தமிழ் எழுத்து வழக்கொழிந்து விட்டது.. டி...தலைமுடி மட்டும் பாட்டி மாறி கொஞ்சம் சுருட்டையா வேணும்னு சொல்ல சொன்னேனே என்றேன்...சொன்னேன் சொன்னேன் என்றாள் ....அது என்னதான் பெண் குழந்தையோ? ஆண் வாங்கலாம் என்றால் கேட்டால்தானே என்று அலுத்துக்கொண்டாள் ....என்ன செய்வது....ஒரே ஒரு குழந்தைக்கு தான் அனுமதி....இன்னொன்று வேண்டும் என்றால் கட்டணமாக சொத்தை எழுதி வைக்க வேண்டும்...

ஆங்..சொத்து இப்போது எங்கே இருக்கிறது? காலம் தான் இப்போது சொத்து !வாழ்நாளில் பத்து வருடங்களை எழுதி வைக்க வேண்டும்...அதாவது ஐம்பதிலேயே ஊசி போட்டு விடுவார்கள்...பக்கத்து பிளாட்டில் ஒருத்தன் மூன்று குழந்தை பெற்றுக் கொண்டு நாற்பதிலேயே செத்துப் போனான்! இதற்கு மட்டும் இல்லை...வீட்டில் பங்ஷன் என்று பத்து இண்டோ அதிக சம்பளம் கேட்டால் வாழ்நாளில் ஒருநாள் குறைத்து விடுவார்கள்.... உலகத்திற்கு ஏதாவது சேவை செய்தால்  புதிய கண்டுபிடுப்புகள் நிகழ்த்தினால் தான் பெனால்டி கண்ஷஷன் உண்டு....அந்த எளவு எல்லாம் எனக்கு எங்கே வருகிறது?!

'என்ன ஒரு இயந்திரத்தனமான ' வாழ்க்கை இது....என்றாள் ஷீலா...ரோபோ தண்ணீர் கொண்டு வந்து வைத்தது....அப்பவெல்லாம் பெண்கள் ஒன்பது மாதம் சுமந்து குழந்தை பெத்துக்குவார்களாம் ...அந்த சுகமான சுமையே அலாதி தானாம்...எனக்கும் ஆசையா இருக்குது.யூட்ரஸ் மீண்டும் பொருத்திக்கறேன் " என்றாள் ..

"அய்யோ ,இவள் எனக்கு ஐந்தாயிரம் இண்டோ சிலவு வைத்து விடுவாள் போலிருக்கிறதே" என்று நினைத்துக் கொண்டு 'பாரு ஷீலா , இப்பவே எல்லாரும் நான் சம்பளம் ஜாஸ்தி வாங்கறேன்னு பொறாமைப்படறா ..அதுல இது வேறயா? கொஞ்ச நாள் பார்ப்போம்....இப்பத்திக்கு ரெடிமேட் குழந்தை போதும்" என்றேன்.,

சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் virtual பீச்சில் உலாவினேன்....மெஷின் காற்று நிஜ கடற்கரைக்கு சற்றும் குறைவில்லாததாய் இருந்தது...எனக்கு வரவேண்டிய கனவை செட் செய்து கொண்டு உறங்கினேன்...அந்த ப்ரோக்ராமை எட்டிப் பார்த்த ஷீலா என்ன கனவிலும் என் முகம் தானா? வேற மாத்திக்குங்க ,பரவாயில்லை...ஈ னே க்ராவாஸ்" என்றாள்

"நேநியூ"என்றேன்..

"மியா தோட்ல்சா எட்ஜோ , போனான் நோக்டன் " என்றாள் ....

நாங்கள் தூங்கி விட்டதை உணர்ந்து விளக்குகள் தானாக அணைந்தன. பெட் ரூம் தவிர வீட்டின் மற்ற பாகங்கள் மடங்கிக் கொண்டன.அந்த இடத்தில் நைட் ஷாப் ஒன்று உருவாகும்...காலையில் மீண்டும் வீடு விரிந்து கொள்ளும்..குட் நைட்!

(* சமீபத்தில் வந்த சூப்பர் நோவாவுக்கு பிறகு இப்போது பூமி சூரியனை வருடத்துக்கு ஆறுமணிநேரம் அதிகமாக சுற்றுகிறது. எனவே இப்போது பிப்ரவரி 30 ஐயும் சேர்த்து விட்டார்கள்!)


========================================

ஓஷோ ஜோக்...

சேல்ஸ் மேன்  ஒருவன் ஒரு சிறிய நகரம் ஒன்றில் ஹோட்டல் ஒன்றுக்கு வந்து தனக்கு ஒரு ரூம் வேண்டும் என்றான்.

"மன்னிச்சுக்கங்க சார்..ரூம் காலியா இல்லை" என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.

"சரி" என்று அவன் திரும்பிப் போகும் சமயம் மீண்டும் அழைத்து "சார்..ஒரு ரூம் காலி இருக்கு...ஆனால் அங்க ஏற்கனவே ஒரு லேடி இருக்காங்க
அவங்க பெட், திரை போட்டு மறைக்கப்பட்டிருக்கும்..அவங்க பாட்டுக்கு தூங்கிட்டு இருப்பாங்க..டிஸ்டர்ப் பண்ணாம இருந்துக்கரீங்களா ?" என்றாள் 

"சரி" என்ற சேல்ஸ் மேன் ரூமுக்கு சென்றான் 

சுமார் ஒரு மணி நேரம் கழித்து கீழே வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான் 

"என்னாம்மா , ரூம் குடுத்திருக்க...அது பொண்ணு இல்லை.. பிணம்...
செத்துப் போச்சு" என்றான்.

ரிசப்ஷனிஸ்ட், "அது தெரியும்...ஆனால் சார் அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள்

சமுத்ரா

Thursday, November 15, 2012

அணு அண்டம் அறிவியல் -72


அணு அண்டம் அறிவியல் -72 உங்களை வரவேற்கிறது


Next time when you say just a second, remember a second is worth 1,80,000 miles of space! - Carl Sagan
 
ஸ்ட்ரிங் தியரி என்பது மிகப் பெரியதையும் மிகச் சிறியதையும்  இணைக்கும் ஒரு முயற்சி எனலாம். பெரிய அளவில் ஐன்ஸ்டீனின் பொது சார்பியலும் சிறிய அளவில் குவாண்டம் இயற்பியலும் கோலோச்சுகின்றன என்று பார்த்தோம். இந்த இரண்டு பேரரசர்களும் வாலி சுக்ரீவர்கள் போல தங்கள் தனித்தனி ராஜ்ஜியங்களில் தனித்தனியாக கோலோச்சுகின்றன. இருவரையும் இணைத்து சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. அருகருகே கொண்டு வந்தாலே இருவரும் முரண்டு
பிடித்துக் கொண்டு விலகி விடுகிறார்கள்.




பிரபஞ்சத்தை முறையாக அறிந்து கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் பருப்பொருளை ZOOM IN செய்து பார்த்த போது சில பல அடிப்படைத் துகள்கள் கிடைத்தன. அவற்றை மேலும் ZOOM IN செய்ய முடியவில்லை. அல்லது செய்யும் வசதிகள் தற்போது நம்மிடம் இல்லை. இந்த அடிப்படைத்  துகள்கள் தான் பிரபஞ்சத்தின் காரண கர்த்தாக்கள் என்ற தோராயமான முடிவுக்கு வந்தபோது இதில் ஈர்ப்புவிசை* சிக்காமல் முரண்டு பிடிக்கிறது. அதாவது ஈர்ப்பைக் கடத்தும் ஈர்ப்புத் துகள் (boson-அடிப்படைத் துகள்) கிராவிட்டான் இன்னும் சிக்கவில்லை. சரி இப்படி துகள் மேல் துகளாக கண்டுபிடிக்க வேண்டுமா இவற்றுக்கெல்லாம் பின்புலத்தில் பொதுவாக வேறு ஏதேனும் இருக்கிறதா என்று யோசித்தனர் ஸ்ட்ரிங் தியரிஸ்டுகள்.

உதாரணமாக ஹோட்டலுக்கு செல்கிறோம்...அங்கே இட்லி தருகிறார்கள். தோசை தருகிறார்கள். பணியாரம் தருகிறார்கள். அவை வேறு வேறாக வேறு வேறு சுவை உடையனவாக நமக்குத் தோன்றலாம்.இது நம் அறியாமை ... கொஞ்சம் சமையல் ரூமில் எட்டிப் பார்த்தால் ஓ! இவையெல்லாம் ஒரே மாவு தானா என்று தெரிய வரும். அது போல இந்த அதிகப்ரசங்கி  ஸ்ட்ரிங் தியரிஸ்டுகள் 'NO permission' என்ற போர்டை சட்டை செய்யாமல் இயற்கையின் சமையலறைக்குள் எட்டிப் பார்க்கத் துணிந்திருக்கிறார்கள். எலக்ட்ரான், ப்ரோடான், போட்டான் கிராவிடான் என்று பல்வேறு விதமாகப் போக்குக் காட்டி நம்மை குழப்பும் இந்த அயிட்டங்களை செய்ய இயற்கை சாமார்த்தியமாக ஒரே மாவு தான் உபயோகிக்கிறது என்று வாதிடுகிறார்கள்.

சரி.

பொது சார்பியல் கொள்கை, (GR )  , நிறை (mass) இல்லாத போது வெளி வளைக்கப்படாமல் சீராக இருக்கும் என்று கணிக்கிறது. (நிறை இருக்கும் போது [கால]வெளி வளைந்து ஈர்ப்பாக உணரப்படலாம்) ஆனால் இது ஒரு approximation தான். வெட்ட வெளியைப் பார்த்து அங்கே நிறை எதுவும் இல்லை, பொருள் எதுவும் இல்லை எனவே காலவெளி இங்கே நேராக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. நிறை தன்னுடைய இன்னொரு உருவமான ஆற்றலாக அங்கே ஒளிந்திருக்கலாம். ஐன்ஸ்டீனின் கொள்கை இந்த virtual energy யை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.



 பை -யின் மதிப்பு என்ன என்றால் சாதாரண ஐந்தாம் வகுப்பு கணக்குகளுக்கு 3 .14 என்று சொன்னாலே போதும். மிக நுணுக்கமான ராக்கெட் கணக்கீடுகளுக்கு பையை பத்து தசமஸ்தானங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பையின் மதிப்பு புள்ளிக்குப் பின் எப்போதும் நிற்காமல் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கும் (irrational)என்று படித்திருப்பீர்கள். எனவே துல்லியமான கணக்கீடு என்றால் அது பையின் அத்தனை ஸ்தானங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சதுரம் ஒன்றின் சுற்றளவு அதன் பக்கத்தைப் போல நான்கு மடங்கு என்று சொல்லிவிடலாம். இது definite ! ஆனால் வட்டம் ஒன்றுக்கு அவ்வாறு சொல்ல இயலாது. வட்டம் ஒன்றின் சுற்றளவு அதன் ஆரத்தைப் போல மிகச் சரியாக இத்தனை மடங்கு என்று நம்மால் அறுதியிட்டு சொல்ல இயலாது. பை என்ற விசித்திர எண்ணின் irrationality தான்  இதற்குக் காரணம். இதனால் தான் Squaring the circle இதுவரை சாத்தியப்படாமல் உள்ளது!


வாழ்க்கையில் நாம் நிறைய விஷயங்களில் இந்த approximation செய்து கொள்கிறோம். உன் வயது என்ன என்று கேட்டால் 24 வருடம் ஏழு மாதம் நான்கு நாள் பதினைந்து நிமிடம் 27 நொடி இப்போது 28 இப்போது 29 நொடி என்று யாரும் சொல்வதில்லை.சும்மா 24 என்று தான் சொல்கிறோம். [அதுவும் ஒரு வருடம் குறைத்து தான் சொல்வோம். !] உன் பையன் எப்போ வந்தான் என்றால் போன வாரம் என்றோ அதிக பட்சம் போன வாரம் சனிக்கிழமை என்றோ சொல்வோம். போன சனிக்கிழமை காலை பத்து மணி இருபத்து ஏழு நிமிடம் பதினொரு நொடிக்கு வந்தான் என்று சொல்ல மாட்டோம். இப்படி கூடுதல் தகவல்கள் நமக்கும் தேவையில்லை கேட்பவருக்கும் தேவையில்லை. ஐன்ஸ்டீனின் சார்பியல் இப்படி ஒரு approximation எடுத்துக் கொண்டு தவறு செய்து விட்டது.மாணவன் மேல் இரக்கப்பட்டு  மேலோட்டமாக பேப்பர் திருத்தும் ஆசிரியர் போல! ஸ்டெப் ஐப் பார்க்காமல் Answer ஐ மட்டும் பார்த்து! உதாரணமாக ஒரு ஸ்கொயர் மாட்ரிக்ஸ் கொடுத்து இதற்கு Cayley–Hamilton தியரத்தை நிரூபி என்றால் எப்படி இருந்தாலும் அதன் விடை ஒரு பூஜ்ஜிய அணியாக (ஜீரோ மட்ரிக்ஸ்)  இருக்கும். ஆனால் இதை நிரூபிக்க இடையே நிறைய  படிகள் இருக்கும். சோம்பேறி மாணவன் ஒருவன் இடையே ஏதோ ஒப்பேற்றி விட்டு கடைசியில் கொட்டை எழுத்தில் 

என்று எழுதி விட்டு சோம்பேறி டீச்சரை ஏமாற்றி விடலாம். அப்படியானால்  ஐன்ஸ்டீனின் சோம்பேறி டீச்சர் என்று சொல்ல முடியாது. குவாண்டம் லெவலுக்கு புகுந்து சென்று அதன் ஈர்ப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொள்வது தேவையற்றது என்று அவர் நினைத்தார். கறாரானது என்று கருதப்படும் கணிதம் கூட இந்த தோராயமாக்கலை  சில சமயம் அனுமதிக்கிறது [perturbation theory]
 சீரான வெளியில் உள்ளே செல்ல செல்ல  ஏற்படும் மேடு  பள்ளங்கள்


பொது சார்பியல், வெறுமனே வெளியைப் பார்த்து இங்கே ஒன்றும் இல்லை..எனவே ஈர்ப்பு பூஜ்ஜியம் என்று சொல்லி விடுகிறது. ஆனால் அங்கே ஜூம் இன் செய்து பார்க்க பார்க்க இயற்கையின் திருநடனங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வருகின்றன.ஒன்றும் அற்ற வெளியில் மிக மிகக் குறுகிய கால இடைவெளியில் Virtual துகள்கள் தோன்றி இணைந்து பின் மறைகின்றன.குவாண்டம் இயற்பியலின் நிச்சயமில்லாத் தத்துவம் இதை அனுமதிக்கிறது. ஆற்றல் , காலம் என்று இரண்டு தராசுத் தட்டுகளை கொடுத்து 'பாரப்பா நீ ஒரே சமயத்தில் இரண்டையும்  பார்க்க முடியாது' என்கிறது.ஒரு நொடியில் லட்சம் பகுதிக்கு காலத் துல்லியம் எனக்கு வேண்டும் என்று சொன்னால் அதற்கு தண்டைனையாக ஆற்றல் துல்லியமின்றி சகட்டு மேனிக்கு அதிகரித்து விடுகிறது.இதை குவாண்டம் நுரை [quantum foam ] என்கிறார்கள். எத்தனை உள்ளே ஜூம் இன் செய்கிறோமோ இந்த virtual energy அத்தனை அதிகமாக இருக்கும். இந்த ஆற்றலுக்கு ஒரு நிறை உண்டு என்பதால் இந்த நிறை ஈர்ப்பை ஏற்படுத்தி காலவெளியை ஒரு சிறிதேனும் வளைக்க முயலும். 

எனவே There is NO smooth road in the universe! nothing is straight!  மேலும் உதாரணம் வேண்டும் என்றால் நம் கம்ப்யூட்டர் மானிட்டர் ஒரு படத்தைக் காட்டும் போது அவள் பிரபஞ்ச அழகியாகவே இருந்தாலும் அதை புள்ளி புள்ளியாகத் தான் காட்டுகிறது. இந்தப் புள்ளியை இந்த அடர்த்தியில் (சிவப்பு, பச்சை ,நீலம்) காட்ட வேண்டும் என்பதுதான் அதற்குத் தெரியும்.  தூரத்தில் இருந்து பார்த்தால் புள்ளிகள் தெரிவதில்லை. ஆகா , மீனாவுக்கு கண் அழகு ரம்பாவுக்கு தொடை அழகு என்று சொல்வதெல்லாம் மாயை தான். கம்ப்யூட்டருக்கு கண்ணாவது தொடையாவது!


எனவே மிக அதிக தூரங்களுக்கு கணக்கிடும் போது ஐன்ஸ்டீனின் கொள்கை மிகத் துல்லியமாக வேலை செய்கிறது. தூரத்தை குறுக்கக் குறுக்க அது குவாண்டம் அரசனின் ஆளுகைக்குள் நுழைந்ததும் , தன் வாலை சுருட்டிக் கொண்டு விடுகிறது.ரிசியமுக பர்வதத்தின் எல்லையில் வாலியின் வல்லமை செல்லுபடியாகாமல் போய்விடுவது போல!

பட் வெயிட்! சீரான வெளியின் மேடு பள்ளங்களை காண நாம் பிளான்க் தூரம் என்ற மிக மிக குறுகிய நீளத்துக்குள் நுழைய வேண்டும். (10 ^ -33 செ.மீ)[பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியம் வைத்துள்ளான் இந்த கில்லாடி சுக்ரீவன்!] இங்கே தான் அதிகப்படியான பரிமாணங்கள், இழைகள் [strings ] என்ற சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.பிரபஞ்சம் ஒரு காலத்தில் மிக மிகச் சிறியதாக இருந்த போது இந்த குவாண்டம் irregularities மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள். இந்த irregularities காரணமாகத்தான் காலக்ஸிகளும் சூரிய மண்டலங்களும் நாமும் வந்திருக்கிறோம். பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய இந்த சுருக்கங்கள் அயன் செய்யப்பட துணியில் சுருக்கங்கள் மறைவது போல மெல்ல மெல்ல நம் பார்வையில் இருந்து மறைந்து விட்டன ;என்னதான் 'நீட்' ஆக இஸ்திரி செய்திருந்தாலும் துணியில் சுருக்கங்கள் இருக்கவே இருக்கும் ..அதுபோல இன்றும் சீரான Flat

spacetime-இல் கூட சுருக்கங்கள் இருக்கவே செய்கின்றன 

இன்றும் பல விஞ்ஞானிகள் வாலிக்கும் சுக்ரீவனுக்கும் எதற்கப்பா வேலை மெனக்கெட்டு சமாதானம் செய்ய வேண்டும் ? அவரவர்கள் அவரவர் சாம்ராஜ்ஜியத்தில் மஜா செய்து கொண்டு இருக்கட்டுமே? என்று கேள்வி கேட்கிறார்கள்.வாலி சும்மா இருந்தால் விட்டு விடலாம். அவன்தான் சுக்ரீவனின் மனைவியை எடுத்துக் கொண்டு விட்டானே ? உண்மையில் ஒருபரிமாண  இழைகளுடன் தொடர்புடைய, சூக்சும உலகிற்கு சொந்தமான  க்ராவிடி -யை தன்னது என்று ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் சொந்தம் கொண்டாடலாமா? இது பிறன்மனை கவர்தல் அல்லவா? என்று கொதிக்கிறார்கள் ஸ்ட்ரிங் தியரிஸ்டுகள்.பாவம் அப்பாவி ஐன்ஸ்டீனையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விட்டார்கள்.


ஸ்ட்ரிங் தியரி என்ற ராமனை வரவழைத்து ஐன்ஸ்டீன் என்ற வாலியை வதம் செய்ய நினைக்கிறார்களா ஸ்ட்ரிங் தியரிஸ்டுகள்? இந்த விசித்திர ராமாயணத்தில் வாலிவதம் நடக்குமா இல்லை அண்ணன் தம்பி ரெண்டு பேருமே செத்துப் போவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்...



[*ஈர்ப்பு விசை மற்ற மூன்று விசைகளுடன் மிகவும் வேறுபட்டு இருக்கிறது. பிரபஞ்சம் ஆரம்பித்த கணங்களில் முதலில் மற்ற விசைகளிடம் இருந்து அவசரமாகப் பிரிந்ததும் ஈர்ப்பு தான்.மேலும் ஈர்ப்பு மிக மிக வலிமை குறைந்த பலவீனமான விசை...ஒட்டுமொத்த பூமியின் ஈர்ப்பை மீறி நம்மால் ஒரு பொருளை நம் தசைகளின் சக்தியால் ( (மின் காந்த விசை)மேலே தூக்க முடிகிறது.காந்தம் ஒன்று ஈர்ப்பை மீறி மேலே வந்து இன்னொரு காந்தத்துடன் ஒட்டிக் கொள்கிறது.ஈர்ப்பு விசை மட்டும் அணுக்கரு வலிய விசை போல அவ்வளவு வலுவுள்ளதாக இருந்தால் நாம் ஒவ்வொரு முறை பூமியில் இருந்து ஒரு கல்லை மேலே தூக்கும் போதும் ஒரு அணுகுண்டு வெடிக்கும்! (நல்ல வேளை !)ஈர்ப்பு ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்றால் அது பதினோரு பரிமாணங்கள் (dimensions)வழியே தொடர்ந்து LEAK ஆகிறது என்கிறார்கள். மற்ற விசைகள் அதிகபட்சம் ஐந்து பரிமாணங்கள் வரை மட்டுமே  பரவுகின்றன .உதாரணமாக ஒரு குழாயை எடுத்துக் கொண்டு அதன் முனை வழியே ஒருவர் பேசினால் அது இன்னொரு முனையில்(2D ) துல்லியமாகக் கேட்கும்.அதே சத்தம் காற்றில் பரவி வந்து மற்றொருவருக்கு கேட்கும் போது(3D) வலிமை குறைந்து போயிருக்கும். ]


சமுத்ரா

Tuesday, November 13, 2012

கலைடாஸ்கோப்-76

லைடாஸ்கோப்-76 உங்களை வரவேற்கிறது 

*சன் டி வி யில் தோன்றி டைலி சமையல் செய்து கொண்டிருந்த செப் . ஜேக்கப்  மாரடைப்பால் இறந்து விட்டதாகப் படித்தேன்.Irony என்ன என்றால் தன் நிகழ்ச்சியில் ஜேக்கப், எப்போதும், இதை சாப்பிடாதீங்க, அதை அளவா சாப்பிடுங்க , இதை சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வந்திடும் ,இது இதயத்துக்கு ஆபத்து என்று அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருப்பார். அப்படியென்றால் அவர் சொல்வதை அவரே கடைபிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. இல்லை, என்னதான் டயட்டில் இருந்து காய்கறி இலைதழை எல்லாம் சாப்பிட்டுக் கொண்டு அருகம்புல் ஜூஸ் குடித்துக் கொண்டு உயிர் வாழ்ந்திருந்தாலும் மரணத்தை நிர்ணயிப்பதில் விதி வலியது என்று தோன்றுகிறது ..இதைப் பாருங்க இது தான் கேரட் சலாட்...இதை அடிக்கடி சாப்பிட்டால் நூறுவயது வரை ஹெல்தியா வாழலாம் என்று ஜேக்கப் கூறும் போது விதி மெல்ல புன்னகை புரிந்திருக்க வேண்டும்!



*FLIPKART .COM என்ற ஆன்லைன் ஷாப்பிங் சைட் வெறும் புத்தகங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. நான் எல்லா புக்கும் அதில்தான் வாங்குகிறேன்.[flipkart 'பேக்கிங்' இற்குப் பெயர் போனது! பேக்கிங் பிரிக்கவே அரை நாள் வேண்டும்!] இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாட்ச், காலணிகள்,டி வி , மொபைல், துணிமணி, லேப்டாப், கேமெரா, ஸ்டேஷனரி, பேக் , பொம்மைகள் என்று என்ன எல்லாமோ வந்து விட்டது.எதிர்காலத்தில் என்ன வெல்லாம் ஆன்லைனில் கிடைக்குமோ தெரியவில்லை. பயமாக இருக்கிறது!குழந்தைகள் கூட ஆன்லைனில் கிடைத்து விடும் போலிருக்கிறது.  ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கு குழந்தை பார்சல் வந்து விடும்.ஹலோ இது நாங்கள் ஆர்டர் செய்த குழந்தை இல்லை கலர் கொஞ்சம் கம்மியா இருக்கு என்று திருப்பிக் கூட அனுப்புவார்கள்!

*விளம்பரம் ஒன்றில் "வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களை எங்கள் வைரங்களுடன் கொண்டாடுங்கள்' என்று போட்டிருந்தது. அப்படியானால் அது 'சின்ன' சந்தோஷம் இல்லை பாஸ்! காஸ்ட்லியான சந்தோஷம்! மகிழ்ச்சியின் விலை எவ்வளவு என்பது ஒரே புதிராக இருக்கிறது.அந்தக் காலத்தில் மனைவிக்கு வாங்கிப் போகும் ஐந்து ரூபாய் மல்லிகைப் பூவில் மகிழ்ச்சி இருந்தது. இப்போது பிறந்த நாளைக்குப் பரிசாக அளிக்கும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள வைரத்தில் இருக்கிறது போலிருக்கிறது.சரி அப்படியே வைரம் வந்தாலும் எத்தனை நாள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? முதல் கொஞ்ச நாள் கல்யாணத்துக்கெல்லாம் போட்டுக் கொண்டு போய் சீன் காட்டலாம். பிறகு நம் சந்தோஷம் இந்த வைரத்தில் இல்லை என்று தெரிந்ததும் வாழ்க்கை மீண்டும் அர்த்தமற்றதாக மாறி போரடிக்க ஆரம்பித்து விடும்....எனவே கணவன்மார்களுக்கு ஒரு வேண்டுகோள்: 

விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்... மகிழ்ச்சி என்பது தொடுவானம் மாதிரி ..அதை நெருங்க நெருங்க அது தூரம் போய்க் கொண்டே இருக்கும்...

*எனக்குப் பிடித்த இ -மெயில்:

புதிய அபார்ட்மென்ட் ஒன்றுக்கு கணவன் மனைவி குடி வருகிறார்கள்... மறுநாள் காலை கண்ணாடி ஜன்னல் வழியே பக்கத்து பிளாட்-ஐ பார்க்கும் மனைவி ,கணவனிடம் 'அந்த பிளாட்டில் காயப்போட்டிருக்கும் துணிகளைப் பாருங்கள்..அந்த பெண்ணுக்கு சரியாக துவைக்கவே வராது போலிருக்கிறது பாருங்கள் எவ்வளவு அழுக்கு ' என்கிறாள்..இதே போல் மறுநாளும் சொல்கிறாள்...இப்படியே ஒருவாரம் போகிறது ..ஒவ்வொரு நாளும் ஜன்னலைப் பார்க்கும் மனைவி , இதே போல துவைத்தது சரியில்லை டிடர்ஜென்ட் அல்லது சோப்பு சரியில்லை என்று ஏதேனும் சொல்கிறாள். சில நாட்கள் கழித்து ஒருநாள் காலையில் ஜன்னலைப் பார்க்கும் போது பக்கத்து பிளாட்டில் வெள்ளை வெளேர் என்று துணி ஒன்று காயப் போட்டிருப்பதை பார்க்கிறாள்..கணவனைக் கூட்டி வந்து காட்டி , 'என்னங்க பாருங்க பக்கத்து பிளாட் பெண்மணி துவைக்க கற்றுக் கொண்டு விட்டாள் போலிருக்கிறது... இல்லை அந்த மோசமான டிடர்ஜென்ட்-ஐ மாற்றி இருக்க வேண்டும்'  என்கிறாள்...அதற்கு கணவன் "..........இரண்டும் இல்லை ..இன்று காலை சீக்கிரம் எழுந்து நான் நம் வீட்டு ஜன்னலின் கண்ணாடியை சுத்தம் செய்தேன்' என்கிறான்.

நீதி: மற்றவர்களை குறை சொல்லும்முன் நமது ஜன்னல் சுத்தமாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்..

*போன வாரம் ஆபீசில் டீம் லஞ்ச் -இற்கு e -inn கூட்டிப் போயிருந்தார்கள்.. .பபே  சிஸ்டம்....ஒரு ஆளுக்கு நானூறு ரூபாய்...ஸ்டார்டர் -ரில் இருந்து டெசர்ட் -வரை வித விதமான கலர் கலரனான பலகாரங்கள் ஐஸ் கிரீம்கள்!.. பார்த்ததுமே வயிறு நிறைந்து விட்டது...நான் ஒரு பன் , கர்ட் ரைஸ், சில பழங்கள் இவற்றை தட்டில் எடுத்து வந்ததும் எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்!!டீம் லஞ்ச் என்றாலே சில பேர் காலையில் இருந்து பட்டினியாக இருக்கிறார்கள் அப்போதுதான் வயிறுமுட்ட சாப்பிட முடியுமாம்! 

!பிறந்ததில் இருந்து எத்தனை விதமான லஞ்ச் -களை நாம் சாப்பிட்டிருப்போம்? சில சமயம் வெறும் வாழைப்பழம் சாப்பிட்டு லஞ்சை முடித்திருப்போம்! சில சமயம் சிம்பிளான ரசம் சாதம்! சில சமயங்களில் கல்யாண சாப்பாடு! சில சமயம் ஏதோ வடமாநிலத்தில் நமக்கு ஒத்துக் கொள்ளாத ரொட்டி! சில சமயம் செரிக்காத கேரளா அரிசி! சில சமயம் கையேந்தி பவன் பிரியாணி! சில சமயம் ரயிலில் லெமன் ரைஸ்!சில சமயம் நாமே சமைத்த மாகி! சில சமயம் ஏதோ ஒரு ரிசார்ட்டில் ராஜ விருந்து! சில சமயம் பட்டினி! சில சமயம் ஜூஸ்! சில சமயம் ஆஸ்பிடல் கஞ்சி !சில நேரங்களில் பிஸ்கட்!சில நாட்களில் பீட்சா! சில நாள் ஆந்திரா மெஸ்! சில நாள் மாமி மெஸ்!சில சமயம் (கல்யாணம் ஆன புதிதில்) மனைவியைப் பார்த்து 'இன்னிக்கி நீதான் லஞ்ச் !' என்று பேசும் சுகமான அபத்தங்கள்! வாழ்க்கை எத்தனை விதமான லஞ்ச் களை நமக்கு அளித்துள்ளது!  வாழ்க்கையின் versatility - யை அனுபவிக்க இதுவரை நாம் சாப்பிட்ட லஞ்ச்-களை நினைத்துக் கொண்டாலே போதும்!

*'உழைப்பு ஓரிடம், பலன் ஓரிடம்' என்று சொல்வார்களே..அதற்கு உதாரணமாக ஒரு பாடல்...

பாடல் : ஹரி நாராயண, இயற்றியவர்: புரந்தர தாசர்.

மனமே, நாராயண நாமத்தை ஸ்மரணை செய்!

நாராயண நாமத்தின் விதையை உலகில் நாரதர் விதைத்தார் .
துருவன் என்பவனால் அதன் ஓடு உடைந்தது.
பிரகலாதனால் அது முளை விட்டது.
ருக்குமாங்கதன் என்பவனால் அது மொக்கானது
பிதாமகர் பீஷ்மரால் அது மலர்ந்தது.
திரௌபதியால் அது காயானது.
கஜேந்திரன் என்ற யானையால் பழமானது
சுக முனிவரால் அது பழுத்த பழமாகக் கனிந்தது.
...

...
சரி.. இப்படிக் கனிந்த பழத்தை அப்படியே சாப்பிட்டு ஜூஸ் குடிக்கும் பாக்கியம் யாருக்கு வாய்த்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?Any guess ?? எப்போதும் இறைவனையே நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு என்று தானே?அதுதான் இல்லை. சில விஷயங்களில் பகவான் crazy யாக நடந்து கொள்கிறார்!அந்தப் பழத்தை சுவைத்தவன் அஜாமிளன் என்னும் ஒருவன்.பரம நாத்திகன்.பகவானின் நாமம் எங்கே தன் காதுகளில் விழுந்து விடுமோ என்று காதுகளில் மணியைக் கட்டிக் கொண்டு அலைந்தவன்.....அப்படி இருந்தவன் தன் சாவு நேரத்தில் தப்பித்தவறி ஹரிநாமம் கேட்டுவிட ,அவனுக்கு வைகுண்டப்பதவி வாய்க்கிறது ...

இரவும் பகலும் பாடுபட்டு வெயில் மழை என்று பாராமல் தங்கள் வியர்வை சிந்தி கட்டிடம் கட்டுபவர்கள் இருக்க பிறகு அங்கே ஜாலியாக ஏ .சி. போட்டுக் கொண்டு குடி வருவார்களே அது போல!அதானே! காசு கொடுத்து விட்டால் ஒரு கட்டிடம் ஒருவருக்கு எப்படி சொந்தமாகும்! நாமெல்லாம் ஒரு விதத்தில் அஜாமிளன்கள் தான்!இந்த சோஷியல் சிஸ்டமே சரியில்லை போங்கள் ...

 *

 நாம் 'புக்' செய்த பஸ் மட்டும் வரவே வராது என்பது ஒருவித 'மெர்பி ' விதி போலும் ...தீபாவளிக்காக வெள்ளிக்கிழமை பெங்களூருவில் இருந்து கோயமுத்தூருக்கு புக் செய்திருந்த பஸ் சாந்தி நகரில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் லேட்டாக வந்தது...இப்படிப்பட்ட சமயங்களில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க அசாத்திய பொறுமை வேண்டும்! இந்தியாவின் மக்கள்தொகையை கண்டிப்பாக நொந்து கொள்ளத் தோன்றும்...பட்டினத்தார் சொல்வது போல புற்றீசல்கள் போலக் கிளம்பி வருகிறார்கள்! சரிதான்...நானும் அவர்களுக்கு ஒரு ஈசல் போல தான் தெரிந்திருப்பேன்...நம்முடைய 'ஈகோவை''நானை' எவ்வளவு சீக்கிரம் மக்கள் கூட்டம் சரித்து விடுகிறது!

சரி 

உதாரணமாக, 21:53 என்ற ஸ்பெஷல் பஸ்ஸை புக் செய்திருந்தால் 21:53 மட்டும் வரவே வராது.21:51 வரும், 21:52 வரும் 21:54 வரும்....ஏன் 22:15, 22:30 23:00 எல்லாம் சரியாக வரும்... இந்த பாழாய்ப் போன 21:53 மட்டும் வரவே வராது!ஒரு வேளை 21:53 என்ற ஒரு நம்பரே இல்லையோ, நாம் 21:53 க்கு புக் செய்தது இங்கே வந்து கால்கடுக்கக் காத்திருப்பது எல்லாம் ஒருவித மாயையோ என்று கூட நினைக்கத் தோன்றும்.பிறகு இரண்டு மணிநேரம் கழித்து எந்த வித அறிவிப்பும்  இல்லாமல் உடலுக்குள் நோய் நுழைவதைப் போல 21:53 பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும்... மற்ற பஸ்ஸுக்கு எல்லாம் 21:51 பஸ் நம்பர் K A 7786  என்று நூறு முறை Announce செய்யும் ஆள் 21:53க்கு மட்டும் கடனே என்று ஒரே ஒரு முறை தொண்டைக்குள் announce செய்து விடுவார்... கொடுமை!Murphy! you are too bad....இந்த மாதிரி சமயங்களில் எனக்கு உற்சாகம் தரும் வாசகம் ஒன்று உள்ளது...அது என்ன தெரியுமா?THIS TOO SHALL PASS !!!



*கடைசியாக ஒரு ஓஷோ ஜோக்....


ரோட்டில் நடந்து கொண்டிருந்த  கிளெவர் -ஹெட் -டிடம் பூச்செண்டு விற்பவன் ஒருவன் " சார், உங்க மனைவிக்கு ஒரு பூச்செண்டு வாங்கிக்கங்க " என்றான்...
"இல்லைப்பா ..எனக்கு மனைவி இல்லை..." என்றான்.

"அப்படியானா உங்க கேர்ள் பிரென்ட் -டுக்கு ஒன்னு வாங்கிக்கங்க" என்றான்.
"இல்லைப்பா ..எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை..." என்றான்.
"ஓ ,அப்படியானா நீங்க கண்டிப்பா ரெண்டு வாங்கியே ஆகணும் ஆமா..உங்க அதிர்ஷ்டத்தைக் கொண்டாட" என்றான்..

சமுத்ரா  

Wednesday, November 7, 2012

பேய் இருக்கிறதா? ...


 பேயை விட பேய் வரும் அறிகுறிகள் தான் திகிலானவை -யாரோ 

ஒரு சிறந்த திரைப்படம் எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? படம் முடிவை நெருங்கும் சில நிமிடங்களுக்கு முன்பே ஆடியன்ஸ் முடிவை ஒருவாறு ஊகித்து படம் விட்டதும் கிளம்புவதற்கு வசதியாக கழற்றி வைத்த ஷூவை அணிந்து கொள்ள , பாப் கார்ன் -ஐ  அவசரமாக காலி செய்ய வைக்கும் படி இருக்க வேண்டுமா?இல்லை படம் முடிந்து பெயர் போட்டதும் ஒ படம் முடிந்து விட்டதா என்ற சர்ப்ரைஸ் தரவேண்டுமா?சமீபத்தில் பார்த்த 'பிட்சா' படம் அந்த இரண்டாவது வகை சர்ப்ரைசை தந்தது. ..


பேய் பிசாசு அமானுஷ்யம் என்று எழுதப்படும் நாவல்களில் அல்லது எடுக்கப்படும் திரைப்படங்களில் கண்டிப்பாக ஏதேனும் ஒரு சமூக விரோத சமாச்சாரம் Default ஆக இருந்தே தீரும். சுஜாதா , ராஜேஷ் குமார் , இந்திரா சௌந்தர ராஜன் யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ..பேய் ஆவி பிசாசு என்று சூடு பிடிக்கும் கதைக்குள், பின் புலத்தில்  மெயின் மோடிவ் -ஆக வைரம் கடத்துவதோ போதைப் பொருளோ சிலை கடத்தலோ கொலையோ கொள்ளையோ இருக்கும்.அதாவது விஷயம் பண்ணுவது சாமி அல்ல ஆசாமி தான் என்று தெரிய வரும்.பிட்சா திரைப்படமும் இதற்கு விதி விலக்கு  இல்லை என்று தோன்றுகிறது.


காலம் முன்னேற முன்னேற பேய் பிசாசு சாமி விஷயங்களை நாவல்களிலும் திரைப்படங்களிலும் மிகவும் சூசகமாக மக்கள்  நம்பும்படி கையாள வேண்டி இருக்கிறது....பேயை நேரடியாகக் காட்டினால் அது அன் ரியலிஸ்டிக் ஆகி விடும்! சில பேர் பேய்ப்படம் என்றால் பேயை காட்டவே கூடாது என்று கூட வரையறை சொல்வார்கள்.ஈவில் டெத் போல க்ளோஸ் அப்பில் பேயைக் காட்டினால் இன்று அது காமெடி பீஸ் ஆகி விடும். காஞ்சனா கூட பேய்க்காக ஓடாமல் காமெடிக்காக ஓடியது என்று நினைக்கிறேன்.

பிட்ஸாவில் கூட நிறைய இடங்களில் ஆடியன்ஸ் சிரிக்கிறார்கள்! நம் மக்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறேன்.அல்லது  They have become matured...பேய் என்பது இப்போது காமெடி சப்ஜெக்ட் ஆகி விட்டது....இந்தத் திரைப்படத்தில் ஹீரோயும் ஹீரோயினும் ஹீரோவின் முதலாளியின் பேய் வீக்னசை காமெடி செய்கிறார்கள்!மேலும் நம் மக்களை கன்வின்ஸ் செய்வதும் கஷ்டம். பேயை காட்டவில்லை என்றால் 'என்னடா மச்சா ஒரு இடத்துல கூட பேயே வரலை,,,காசு வேஸ்ட்' என்பார்கள்.. (அதான் ஒரு சீனில் ஹீரோயின் மேக்கப் இல்லாமல் வந்தார்களே அது போதாதா என்ற ஜோக் Apart !)பேயை சும்மா சும்மா காட்டினால் பயம் போய் விடும். படத்தில் வடிவேலு அல்லது காமெடியனின் ரோலை பேயே செய்து விடும்....எனவே மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து ஓரளவு நம்பும்படியான பேய்க்கதையை தந்ததற்கு Pizza இயக்குனருக்குப் பாராட்டுகள்...

அறிவியல் ரீதியாக இந்த பேய் சமாசாரத்தை அணுகுபவர்கள் மிகக் குறைவு....முதலில் ஒன்று! மனிதன் இறந்து மீண்டும் பிறக்கும் இடைவெளிக்குள் இருக்கும் நிலையை மட்டுமே இப்போது நாம் பேய் பிசாசு அல்லது ஆவி whatever என்று வரையறை செய்வோம்.
இதைத்தவிர தனியாக பேய் என்று ஒன்று இல்லை...அல்லது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் பேய் என்ற ஒன்று தேவையில்லை என்று இயற்கை நினைத்திருக்கலாம். கறுப்பு சாரி உடுத்தி காலை எழுந்து கண்ணாடியின் முன் தலை சீவும் மனைவியை பார்க்கும் பேறு உங்களுக்குக் கிடைத்திருந்தால் ஏன் இயற்கை பரிணாம வளர்ச்சியில் பேயை தனியாக சேர்க்கவில்லை என்று விளங்கும் . இதன் மூலம் பெண்கள் பேய் என்று சொல்ல வரவில்லை. நாம் எல்லாருமே சில சமயங்களில் பேய் மாதிரிதான் காட்சி அளிப்போம்! cant help !

மனிதன் இறந்த பின் நீடிக்கும் மர்மம் ,பல்வேறு கற்பனைகளுக்கு இடமளிக்கிறது.இறந்தவனுக்கு இதை செய் அதை செய் என்று சொல்லும்  பணத்தாசை பிடித்தவர்களை இந்த மர்மம் தான் வாழ வைக்கிறது. 'உன் அப்பா உன்னைக் கொன்று விடுவார்' என்று சொன்னால் அப்பா உயிருடன் இருந்தால் எந்த மகனும் நம்ப மாட்டான்! உன் அப்பாவின் ஆவியால் உனக்கு ஆபத்து! ஆயிரம் ரூபாய் செலவு செய்து பரிகாரம் செய் என்றால் நூறில் தொண்ணூறு பேர் எதற்கு வம்பு என்று செய்து விடுவார்கள்.பேய் பிசாசு சமாச்சாரங்களையும் இந்த மர்மம் தான் இதுவரை ஏதோ ஒரு உருவில் நம் நாவல்களிலும் டி .வியிலும் திரைப்படங்களிலும் வாழ வைக்கிறது!


அறிவியல் பேயை நம்புவதில்லை . பார்க்க முடிந்த உணர முடிந்த புலன்களுக்கோ கருவிகளுக்கோ தட்டுப்படக் கூடிய விஷயங்களை மட்டுமே அறிவியல் நம்புகிறது.பேய் வந்தால் மீட்டரின் முள் அசைவது கட்டுக் கதை தான்.உடல் அழிந்ததும் எல்லாம் பூஜ்ஜியம் என்று சொல்லி கணக்கை முடித்து விடுகிறது அறிவியல்.உடலின் கார்பன் இரும்பு போன்ற தனிமங்கள் மெல்ல மெல்ல Recycle ஆகி பிரபஞ்சத்தில் வேறுவிதத்தில் உலவும் அவ்வளவே. திரைப்படங்களில் காட்டுவது போல செத்தபின்  ஆசாமி மீண்டும் அப்படியே உயிர் பெற்று வருவது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிக்கு (Second law of thermodynamics)எதிரானது. உயிருடன் இருப்பது என்பது ஒரு வித Orderly state! ஆள் செத்ததும் உடல் அவசரமாக Disorderly state ஐ நோக்கி நகர ஆரம்பிக்கிறது. பார்யா பிப்யதி தஸ்மின் காயே என்று பஜகோவிந்தம் சொல்வது போல மனைவியே பயப்படும் அளவு உடல் மிக வேகமாக அழுகத் தொடங்குகிறது; கிருமிகள் எங்கிருந்தோ ஆள் செத்து  விட்டான் என்று தெரிந்து கொண்டு அட்டாக் செய்ய ஆரம்பிக்கின்றன  ..எனவே இத்தகைய ஒழுங்கு குலைந்த நிலையில் இருந்து மீண்டும் ஆள் புதுப் பொலிவோடு திரும்பி வருவது கனவில் மட்டுமே நடக்கும்.அல்லது அப்படி நடப்பதற்கு போதுமான வெளிப்புற ஆற்றலை இயற்கை செலவு செய்ய வேண்டி இருக்கும். இயற்கை சில சமயங்களில் ரொம்பவே கஞ்சம்!
எனவே மாண்டவர் மீள்வதில்லை (பேயாகக் கூட!)
 
ஆனால் ஆன்மிகம் உடலின் வெளிப்புற அடுக்கு மட்டுமே அழிகிறது என்கிறது. ஆள் பூஜ்ஜியம் என்றால் அவன் செத்ததும் -1,-2,-3...
என்று உல்டாவாக இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்கிறது. புனரபி ஜனனம்!  முற்றும் ஞானம் அடைந்த யோகிகள் மட்டுமே தமது ஏழு உடம்புகளையும் துறந்து விட்டு பிரபஞ்சத்தில் கலக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.நம்மைப் போன்ற பாவிகள் ஆசா பாசங்களுக்கு அடிமையாகி நள்ளிரவில் பிட்டுப் படம் பார்த்தவர்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம்
ஏழு உடலையும் உருவிப் போட்டு விட முடியாது. சாகும் போது வேறு வழி இன்றி நம் மேற்புற அடுக்கு பிரிகிறது. அப்புறம் சூக்சும சரீரம் சாகாமல் அப்படியே இருக்கிறதாம்!

இந்த சூக்சும சரீரம் பெரும்பாலானவர்களுக்கு,இயற்கையாக இறந்தவர்களுக்கு  relaxed ஆக , unconscious ஆக இருப்பதால் அதை பிறர் உணர முடிவதில்லை.அவை விழித்துக் கொள்ளும் முன்பே இன்னொரு கருப்பையில் புகுந்து விடலாம்!ஆனால் சாகவே இஷ்டம் இல்லாமல் செத்தவர்கள் , ஆக்சிடெண்டில் போனவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் இவர்களின் சூக்சும சரீரம் மிகவும் துடிப்போடு மற்றொரு அல்லது தனது  பழைய பௌதீக சரீரத்தைப் பெற உயிர்ப்போடு இருக்கலாம். அந்த சமயங்களி
ல் அவர்களது இருப்பை சிலரால் (எல்லோராலும் அல்ல) (தியான நிலையில் உள்ளவர்களால் ) உணர முடியும்...உண்மையில் எந்த அளவு நாம் விழிப்பின்றி இருக்கிறோமோ அந்த அளவு நாம் ஆவிகளை உணரும் வாய்ப்பு குறைவு என்கிறார் ஓஷோ. எனவே பிட்சா விற்பவருக்கோ குடிகாரருக்கோ ஆவி கண்ணில் தெரிவது ரொம்பவே அபூர்வம். மேலும் ஆவி பேய் என்பதெல்லாம் Subjective experiences!கனவு போல பிரத்யேகமானது. என் கண்ணுக்கு ஆவி தெரிந்தால் அது உங்களுக்கும் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை....

ஒருவரை பேய் அல்லது ஆவி பிடிப்பது உண்மை என்கிறார் ஓஷோ. மிகுந்த பயந்த ஸ்வாபம் உள்ள ஒருவர் கடுமையான பயத்தில் இருக்கும் போது அவரது உயிர் மிகவும் சுருங்கிப் போய் விடுகிறது. அப்போது அருகே இருக்கும் சரீர வேட்கை மிகுந்த ஆத்மாக்கள் அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்து விட முடியும் என்கிறார். மேலும் விவரங்களுக்கு ஓஷோவின் Dimensions beyond the known படித்துப் பார்க்கவும்.


எனவே பேய் இருக்கிறதா? என்று கேட்டால் ஒரு விதத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். ரெம்யா நம்பீசன் சொல்வது போல அது அவரவர் அனுபவங்களைப் பொருத்தது.பேயும் கடவுள் போன்றது தான் ..நம் அனுபவத்தில் உணரப்படும் வரை அது கற்பனை தான்..



[N.B:


படத்தில் வரும் ஹீரோவுக்கு நிகழ்வது போல நாம் பிட்சா டெலிவரி செய்யப் போன இடத்தில் ஒரு வீட்டினுள் இருட்டில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வோம்? ப்ளாக்கில் ரொம்ப matured  ஆக பேயாவது பிசாசாவது என்று கோவை சரளா மாதிரி வசனம் பேசும் நாம் உண்மையில் ஆடித் தான் போவோம்! 

தனிமையும் இருட்டும் நம்மை எவ்வளவு பயப்படுத்தி வைத்திருக்கின்றன? எத்தனை வயதானாலும் இவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன ! உண்மையில் இவை இரண்டும் அழகான விஷயங்கள்! தியானத்துக்கு உதவக் கூடிய விஷயங்கள்...ஆனால் இவை இரண்டையும் நாம் எவ்வளவு அசிங்கமாக மாற்றி வைத்திருக்கிறோம்! உண்மையில் தனிமையிலும் இருட்டிலும் ஏற்படும் பயம் நம்மைப் பற்றிய பயம் தான் என்கிறார் ஓஷோ.பேய் என்பது ஒரு சாக்கு தான். நம்மை நாமே நேருக்கு நேர் பார்க்க பயப்படுகிறோம் அவ்வளவு தான். பகலிலும் பிறரது கம்பெனி- யிலும் நாம் நம்மையே avoid செய்கிறோம்..பிட்சா டெலிவரி செய்யப் போகும் இடத்தில் உள்ளே அடைபட்டு கரண்டும் போய்  விட்டால் நம்மைத் தவிர யாருமே இல்லை. எல்லையில்லாத நான் !அந்த 'நான்' ஐ நாம் எந்தவித மறுப்பும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.காதலி இல்லை..நண்பர்கள் இல்லை. டி . வி இல்லை.. தன்னைப் பற்றிய பயமே மனிதனை கொன்று விடுகிறது..

தனிமையை இருட்டை பயம் இன்றி எதிர் கொள்ளும் கலையை நாம் நம் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். இருட்டை நண்பனாக்கிக் கொள்வது எப்படி என்று கற்றுத் தர வேண்டும்.. இருட்டில் போகாதே, பூச்சாண்டி தூக்கிட்டுப் போயிடுவான் என்று சொல்லி வளர்க்கக் கூடாது. அம்மா வயிற்றில் நீ இருட்டில் தான் இருந்தாய்...இருட்டு உனக்கு இன்னொரு தாய்...ஆகவே பயப்படாமல் இருட்டில் போய் வா என்று சொல்ல வேண்டும். வீட்டில் யாரும் இல்லாத தனிமையில் தனக்குள்ளே உற்றுப் பார்க்கும் தியானத்தை குழந்தைக்கு நாம் தான் சொல்லித் தர வேண்டும்...

அப்படி வளர்த்தால் தான் யாரும் இல்லாத வீட்டில் கரண்ட் போய் விட்டால் கூட கொண்டாட்டத்துடன்  தியானத்தில் மூழ்கும் முதிர்ச்சியான மனிதனை நம்மால் உருவாக்க முடியும்.]


சமுத்ரா