இந்த வலையில் தேடவும்

Thursday, August 22, 2013

கலைடாஸ்கோப் -100

லைடாஸ்கோப் -100 உங்களை வரவேற்கிறது.

கலைடாஸ்கோப்- 1 எழுதும் போது ஒருநாள் இதன் பின்னே இரண்டு ஜீரோ சேர்ப்பேன் என்று நினைக்கவில்லை. எப்படியோ எழுதியாகிவிட்டது. கலைடாஸ்கோப் எழுதுவதில் சில சவால்கள் இருந்தன. முதலில் டாபிக் தேடுவது. ஒவ்வொரு கலைடாஸ்கோப் எழுதி முடிக்கும் போதும் இனி அடுத்ததற்கு எழுத டாபிக்கே இல்லை என்று தோன்றும். பிறகு எப்படியோ அடுத்த கலைடாஸ்கோப்பிற்கு டாபிக் கிடைத்து விடும்.அடுத்து முடிந்த வரை டாபிக்கை repeat செய்யாமல் இருப்பது. எனக்கு இருக்கும் ஞாபக சக்திக்கு இது பெரிய சவால். முடிந்தவரை டாபிக் -களை repeat செய்யாமல் பார்த்துக் கொண்டுள்ளேன். கலைடாஸ்கோப்பில் இசை, இலக்கியம், ஆன்மீகம் , அறிவியல், உளவியல், சினிமா, கவிதை, மதம், மொழி , நகைச்சுவை என்று எல்லா டாபிக்கும் பேசி இருக்கிறோம். எல்லாருக்கும் முக்கியம் நாம் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று அவ்வப்போது கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது. அந்த விதமாக இதுவரை வந்த கலைடாஸ்கோப்புகளில் இருந்து சில பகுதிகள்:-

கலைடாஸ்கோப் -1

கலைடாஸ்கோப் என்ற தொடருக்கு உங்களை வரவேற்கிறேன்...
 
 ஒரு சின்ன முன்னுரை
====================

'கலைடாஸ்கோப்' பலதரப்பட்ட விஷயங்களின் கலவையாக இருக்கும் . நம்  எழுத்தின்  மூலம் பலதரப்பட்ட , வெவ்வேறு  ரசனை கொண்ட வாசகர்களைக் கவர வேண்டும் என்பதில் எல்லாருக்கும் விருப்பம் தான் .. ஏனென்றால் ஜோக்குகளை மட்டும் படித்து ரசிக்கும் கூட்டம் இங்கே இருக்கிறது. சிலர் கவிதைகளை மட்டும் தேடிப் பிடித்து படிக்கிறார்கள்.
சிலர்அரசியல்  இல்லை என்றால்  பதிவுகளைப் படிப்பதே இல்லை.அறிவியலைப் பற்றி எழுதினால் 'நன்றாக இருக்கிறது' என்று சொல்லும் நிறைய பேர்  அதே பதிவர் ஒரு கவிதை எழுதினால் எதோ அவர் செய்யக்  கூடாத ஒன்றை செய்து விட்டது போல நினைக்கிறார்கள்..ஆம் அறிவியலும் கவிதையும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று எதிரும்  புதிருமான  விஷயங்கள் தான்.. ஜே.ஜே.தாம்சன்  எலக்ட்ரானை  கண்டுபிடித்து விட்டு லேபை விட்டு வெளியில் ஓடி வந்து  "பொன்  சுமக்காமல் மின் சுமந்த ஒரு மங்கையைக்  கண்டேன்.. அவள் அணுவினும்  சிறியவள், அணுவை சதா  சுற்றிக்கொண்டு  திரிபவள்'  என்றெல்லாம்  கவிதை பாடினால் அது ஏற்புடையதாக இருக்காது தான்..  என்னதான்  சொன்னாலும் LIFE IS எ MIX OF CONTRADICTING THINGS  இல்லையா? இனி முதல் பகுதி....

முதல் பின்னூட்டம் இட்டவர்: ரேவா

கலைடாஸ்கோப் -15

கவிஞர்கள் ,ஞானிகள் ,இலக்கியவாதிகள் இவர்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து தங்களை அர்ப்பணித்து எழுதியதை, அவர்களின் பரவச அனுபவத்தில் விளைந்த கவிதைகளை, பாடல்களை, அவர்களின் ஜீவானுபவத்தை, நாம் இன்று ரெண்டு மார்க் , ஐந்து மார்க் கேள்விகளாக தரம் தாழ்த்தி விட்டோம் என்பது ஒரு வருந்தத்தக்க விஷயம்.

தேரா மன்னா என்று விளித்து 'வாயிற் கடைமணி நாடு நா நடுங்க ' என்று எழுதிய போது இளங்கோவடிகளுக்கு உண்மையிலேயே நடுநா துடித்திருக்கும்.ஆனால் அதுவே மனப்பாடச் செய்யுளாக வரும்போது இன்று எத்தனை மாணவர்களுக்கு அந்த ஒரிஜினல் பரவசத்தின் ஒரு கீற்றாவது வந்து போகும் என்று தெரியவில்லை (நடுநா எல்லாம் நடுங்காவிட்டாலும் பரவாயில்லை)

சரி இப்போது கபீரின் ஒரு தோஹெ பார்க்கலாம்

கால் கரே ஸோ ஆஜ் கர், ஆஜ் கரே ஸோ அப்
பல் மே பிரளய் ஹோயேகி பஹூரி கரோகே கப்

தமிழில்:

நாளை செய்யவிருப்பதை இன்று செய்; இன்று செய்வதை இப்போ
பேரழிவு எப்போது
ம் வரலாம்..நீ நற்செயல் செய்வது எப்போ ?

நம் ஆட்கள் தான் தப்பர்த்தம் செய்து கொள்வதில் கில்லாடிகள் ஆயிற்றே ? ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது: ஒரு ஆபீசில் மானேஜர் தன் துணை மானேஜரைப் பார்த்துக் கேட்கிறார்: "நாளை செய்ய நினைப்பதை இன்றே செய்யுங்கள்" என்று ஆபீசில் எழுதி வைக்கச் சொன்னேனே? ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா? என்று

துணை மானேஜர் சொன்னார் : "ஆம் நல்ல பலன்..தலைமை குமாஸ்தா டைப்பிஸ்டை இழுத்துக் கொண்டு ஓடி விட்டார்..காசியர் பத்தாயிரம் பணத்துடன் தலைமறைவாகி விட்டார் ..ஐந்து பேர் வேலையை ராஜினாமா செய்து விட்டார்கள்!"


கலைடாஸ்கோப் -28

தீவிரவாதிகள் தாக்கப் போகிறார்கள் என்று தகவல் வந்திருப்பதால் எல்லா விமான நிலையங்களிலும் செக்யூரிட்டி 'டைட்' செய்யப்பட்டிருக்கிறதாம். (செக்யூரிட்டி வேலை செய்பவர்கள் இன்னும் கொஞ்சம் டைட்டாக பெல்ட் ,டை இதையெல்லாம் அணிந்து வருவார்களோ???) ஆனால் உண்மை என்னவென்றால் செக்யூரிட்டி டைட் ஆக இருக்கும் போதோ சுதந்திர தினங்களில் நாம் படு உஷாராக இருக்கும் போதோ எதுவும் நடப்பதில்லை. பயணிகளுக்கு நேரம் தான் செலவாகிறது. இரட்டை கோபுர தாக்குதலோ, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலோ ஒரு சாதாரண நாளில் நாம்  எல்லாரும் 'லூசாக' (புத்தியிலும்) இருந்த போது தான் நடந்தன. போலீஸ் வேலை செய்பவர்களுக்கு ஒரு பெரிய கடுப்பு என்ன என்றால் வதந்திகள் பெரும்பாலும் பொய் தான் என்று தெரிந்திருந்தாலும் துப்பாக்கிகளை 'லோட்' செய்து கொண்டு நாய்களைக் கூட்டிக் கொண்டு ஒரு திருவிழா போல ஜீப் ஏறி புறப்பட வேண்டி இருப்பது!


பெரும்பாலான விஷயங்கள் நாம் தயாராக இருக்கும் போது நடப்பதே இல்லை. விகடனில் ஒரு கவிதை வந்திருந்தது. அது தாத்தா சாகட்டும் என்று காத்திருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றியது.வெட்டியானுக்கு சொல்லியாகி விட்டது. தாரை தப்பட்டை எல்லாவற்றுக்கும் அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது. உறவினர்களுக்கு சொல்லி அனுப்பியாயிற்று இனி தாத்தா சாவது ஒன்று தான் பாக்கி என்று அந்த கவிதை போகிறது. (கடைசியில் தாத்தா வைகுண்டப் ப்ராப்தி அடைந்தாரா தெரியவில்லை!) ஆனால் பெரும்பாலான மரணங்கள் எதிர்பாராமல் தான் நடக்கின்றன. நேற்று வரை திடகாத்திரமாக இருந்தவர் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் 'பொட்' என்று போய் விடுகிறார்! யாராவது இப்படி எதிர்பாராமல் இறந்து விட்டால் சிலர் 'நேத்து கூட பாத்தேனே, ஜாக்கிங் போறப்ப என்னோட சிரிச்சு சிரிச்சு பேசினாரே' என்று சொல்லும் போது அதைக்கேட்க வேடிக்கையாக இருக்கிறது. நாளை இறக்கப் போகிறவர் இன்று மரணத்தின் சாயலை சுமந்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை நண்பர்களே!


ஆம்.


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு !


கலைடாஸ்கோப் -36

 தெய்வீகத்தின் உடனான காதலில் வலிகள் அதிகம்.மனிதக் காதலியாவது நாலு நாள் பின் தொடர்ந்தால் ஐந்தாம் நாள் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாள். தெய்வம் அவ்வளவு சீக்கிரம் RESPONDசெய்யாது.அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.மனிதக் காதலுக்கு ஒன்றோ இரண்டோ அல்லது அதிகபட்சம் சின்னத்தம்பி குஷ்பு போல மூன்று சகோதரர்கள் வில்லன்களாக இருக்க முடியும். ஆனால் தெய்வீகக் காதலுக்கு ஐம்புலன்கள் , மனம் ,புத்தி, அகங்காரம் என்று ஏகப்பட்ட வில்லன்கள். நாம் இறைவனை நோக்கி கொஞ்சம் நூல் விட்டாலே பயங்கர ஆயுதங்களைத் தூக்கிக்  கொண்டு  அடிக்க  வந்து விடுவார்கள் அவர்கள்! .என்ன தான் இருந்தாலும் கடவுள் மேல் கொள்ளும் காதல் ஸ்பெஷல் தான். அஜித்தும் தேவயானியும் கட்டிய காதல் கோட்டைகள் சில காலங்களில் மக்களின் மனங்களில் இருந்து இடிந்து விழுந்து விடும். மீராவின் பஜன்களும் ஆண்டாளின் பாசுரங்களும் உலகம் உள்ள வரை வாழ்ந்திருக்கும்.  

அப்துல் ரகுமான் தமிழில் அழகாக கஜல்கள் எழுதி இருக்கிறார். ஆனால் பாடுபொருளாக இறைவனைத் தேர்ந்தெடுக்காமல் காதலியைப் பார்த்து எழுதுகிறார். அந்தப் புத்தகத்தின் பெயர்'மின்மினிகளால் ஒரு கடிதம்' . புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்..
இதயத்தைஉருக்கும் கவிதைகள் அவை. 





"ஒரு மழைக்கால இரவு. எங்கும் இருட்டு. நடுசாமத்தை தாண்டிவிட்டது நேரம். நானக் இன்னும் தூங்காமல் பக்திப்பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். பக்கத்து அறையில் இருந்த அவரது தாய், 'நானக், நேரம் ஆகி விட்டது, பாட்டை முடித்து விட்டு தூங்கு' என்கிறார். கொஞ்ச நேரம் பாட்டை நிறுத்திய நானக், எங்கோ தொலைவில் ஒரு குருவி 'குவிக் குவிக்' என்று கூவுவதைக் கேட்டு விட்டு மீண்டும் பாடத் தொடங்கினார். தன் தாயாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்,  "அம்மா,  அந்தக் குருவி இந்த நேரத்திலும் தன்  துணையை  அழைக்கிறது; நானும் என்  துணையை(கடவுளை) அழைக்க வேண்டும் குருவியின் துணை  அருகிலேயேபக்கத்து  மரத்திலேயே  இருக்கலாம்ஆனால் என் துணையோ மிக  தூரத்தில்   இருக்கிறதுபிறவி பிறவிகளாக  அவனைஅழைத்தாலும் அது போதாது. எனவே  நான்  காலத்தை வீணடிக்க விரும்பவில்லை"- நானக் மனமுருகிப் பாடுவதன் மூலமாகவே இறைவனை அடைந்தவர். தியானம், யோகம், சடங்குகள்  இவை நானக்கின் வழிமுறைகள் அல்ல"

சீக்கிய மதத்தை ஒரு வீர மதமாக, சீக்கியர்களை குருவின் (கடவுளின்) படை வீரர்களாக சித்தரித்தவர் குரு கோவிந்த் சிங். 'தெய்வீக வீரர்கள்'!)


இந்தத் தளத்தில் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிப்பது போல நம் பிரபஞ்சம் முழுவதையும் வியப்புடன் தரிசிக்கலாம்.ஒரு குறிப்பிட்ட ஸ்கேலுக்கு மேல் நம்மால் வெறும் கண்களால் பிரபஞ்சத்தைப் பார்க்க முடியாது இல்லையா? ஆனால் இங்கே VIRTUAL ஆகப் பார்த்துக் கொள்ளலாம்.பிரபஞ்சத்தின் பெரிய எல்லை OBSERVABLE UNIVERSE ..ஒரு சக்தி  வாய்ந்த தொலைநோக்கியால் எதுவரை பார்க்க முடியும் என்ற எல்லை.சில காலக்ஸிகளில் இருந்து வரும் ஒளி இன்னும் நம்மை வந்து அடையவில்லை என்றால் அவற்றை நம்மால் பார்க்க முடியாது.அதனால் நம்மால் பார்க்க முடிந்த பிரபஞ்சத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம்.அதே போல சிறிய எல்லை.அணுவின் உள்ளே அணுத்துகளின் உள்ளே , குவார்க்குகளின் உள்ளே என்ன இருக்கும்? சங்கு சக்ர தாரியாக மகாவிஷ்ணு இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு முட்டை மார்க்.அப்படி இல்லை. என்ன இருக்கிறது என்று நீங்களே சென்று பார்த்துக் கொள்ளவும்.


சில விசித்திரமான Quotes :

நான் இந்த உலகத்தை மாற்ற விரும்புகிறேன்.. ஆனால் அதன் Source code தான் கிடைக்கவில்லை -யாரோ

காலம் என்பது ஒரு நல்ல ஆசான். ஆனால் அது தன் எல்லா மாணவர்களையும் கொன்று விடுகிறது - ஹெக்டர் பெர்லியாட்ஸ்

இன்று தான் கடைசி என்பது போல ஒவ்வொரு நாளும் வாழுங்கள். ஒருநாள் உங்கள் அனுமானம் உண்மையாக இருக்கும் -யாரோ

இளமையாக இருப்பதற்கு மூன்று வழிகள். ஒன்று சந்தோஷமாக இருப்பது இரண்டு ஆரோக்யமான உணவுகள் சாப்பிடுவது மூன்று உங்கள் வயதைப் பற்றி பொய் சொல்வது -லூசில் பால்

உங்களுக்கு வயதாகும் போது மூன்று விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று உங்கள் ஞாபக சக்தி பழுதடைகிறது. மற்ற இரண்டும் என்ன என்று ஞாபகம் இல்லை -சர் நார்மன் விஸ்டம் 

என் கிரடிட் கார்ட் தொலைந்து விட்டது என்று நான் போலீசிடம் புகார் கொடுக்கவில்லை. அதைத் திருடியவன் என் மனைவியை விட குறைவாகவே செலவு செய்து வருகிறான் -இலி நாச்ட்ஸ்


வயதாகிறதே என்ற கவலை பட்டினத்தாரில் இருந்து பக்கத்து வீட்டு பத்மநாபன் மாமா வரை எல்லாரையும் ஆட்டிப் படைத்துள்ளது.


வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயதுமுதிர்ந்து 
நரைதிரை வந்து
வாதவிரோத 
குரோதம் அடைந்து -

என்று பட்டினத்தாருக்கு தத்துவார்த்த கவலைகள் என்றால் பத்மநாபன் மாமாவுக்கு ரிட்டையர் ஆனதும் பென்சன் கிடையாதே,,எப்படி காலம் தள்ளுவது? என்ற கவலை ....சரி.

மனித உடலின் வடிவமைப்பின்படி அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்கள் வி
ஞ்ஞானிகள். வயதாவதற்கு உயிரியல் காரணங்கள் எதுவும் இல்லையாம். பின்னே நமக்கு ஏன் வயதாகிறது? இயற்கையின் வஞ்சனைகளில் இதுவும் ஒன்று. வயதாகி செத்துப் போ என்ற செய்தி நம் ஜீன்களிலேயே எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து வருகிறார்கள். உயிரியல்விஞ்ஞானிகள். எந்திரன் ரஜினிகாந்த் போல எப்போதும் இளமையாக இருக்கும் சிலரிடம் ஜீன் ஆராய்சிகள் செய்து வருகிறார்கள். Aging ஜீன்களைத் தேடும் வேலை கடற்கரை மணலுக்கிடையே கடுகைத் தேடுவது போல என்கிறார்கள். (அதானே? சுலபமாக வைத்தால் மனிதன் அதைக் கண்டுபிடித்து ஹிரண்யகசிபு போல அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விடுவான்!) .

வயதாவதற்கு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை Free radical கொள்கை. இதன்படி நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக கருதப்படும் ஆக்ஸிஜனே நமக்கு எமனாக மாறி நம்மை தாத்தா பாட்டி ஆக்குகிறது.அமுதமே விஷம்! இரும்பு துருப்பிடிப்பது போல வெள்ளி கறுத்துப் போவது போல ஆக்சிஜனால் நம் செல்கள் மெல்ல மெல்ல சேதாரம் அடைகின்றன. அதாவது நம் செல்களிலும் துருப்பிடிக்கிறது.



இதன் உச்சகட்டமாக, VHEM (Voluntary Human Extinction Movement) என்ற அமைப்பு, உலகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் தயவு செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறது. பூமி மனிதனுக்குப் படைக்கப்பட்டது அல்ல; அது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்குமானது. எனவே மனிதன் மெல்ல மெல்ல பூமியை விட்டு அகல வேண்டும்..இனப்பெருக்கத்தை நிறுத்திவிட்டு மெல்ல மெல்ல நாம் பூமியிடம் இருந்து விடைபெற வேண்டும் என்கிறது.

 மேலும், எதற்கு இந்த மனித வாழ்க்கை? அதன் வலிகள் , கஷ்டங்கள், வேதனைகள், கவலைகள்? இ .எம்.ஐ கவலைகள், இன்கம் டாக்ஸ் பயங்கள் !அரக்கப் பறக்க கனவு கலையாமல் எழுந்து, தீர்ந்து போன டூத் பேஸ்டை இம்சை செய்து பிதுக்கி பல் துலக்கி , பக்கெட் தண்ணீரில் எந்திரம் போல  குளித்து விட்டு, அண்டர்வேர் தேடி, எதையோ உடுத்திக் கொண்டு, பஸ் பிடித்து கூட்டத்தில் நசுங்கி, ஆபீஸுக்கு  சென்று, இன்று மேனேஜர் என்ன மெயில் அனுப்பி இருக்கிறானோ என்று பயத்துடன் mail பாக்ஸ் ஓபன் செய்யும் அவலங்கள்? எதற்கு அர்த்தமற்ற இந்த வாழ்க்கை ..உண்டதே உண்டு நித்தம் உடுத்ததே உடுத்து! சும்மா வழக்கொழிந்து போய் விடலாம்! ஜிம் ஜோன்ஸ் செய்தது போல mass suicide செய்து கொள்ளாமல் ஒரு புது வித ஐடியா...நம்முடைய சந்ததிகளை வாழ்வின் அத்தனை கஷ்டங்க -ளிலிருந்தும் நாமே விடுவித்து விடுவது தான் இந்த VHEM . sounds different ???


ஓஷோ ஜோக்.

திருடன் ஒருவன் பெரிய வசதியான ஒரு வீட்டில் , நள்ளிரவு நேரத்தில் நுழைந்து , யாரும் விழித்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு 
சுதந்திரமாக பொருட்களைத் திருட ஆரம்பித்தான்.

அப்போது கூண்டில் இருந்த கிளி ஒன்று " சாமி உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது..." என்றது.

திருடன் ஒன்றும் பேசாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.

கிளி மீண்டும் " சாமி உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறது" என்றது.

திருடன் ஒன்றும் பேசவில்லை. சில வினாடிகள் கழித்து கிளி மீண்டும் அதையே சொன்னது. 

எரிச்சல் அடைந்த திருடன் " முட்டாள்,,,கிளியே வாயை மூடு...என்ன விதமான கிளி நீ, மதப் பிரசாரம் செய்யும்  கிளியா? உன் பெயர் என்ன?" என்றான்.

"என் பெயர் பூசாரி" என்றது கிளி.

"எந்த மடையன் உனக்கு பூசாரி என்று பெயர் வைத்தான்?"

"ஏன், இந்த வீட்டின் எஜமானர் தான். அவர் தான் தன் வேட்டை நாய்க்கும் சாமி என்று பெயர் வைத்தார்" என்றது.


நன்றி ..

மேலும் உங்கள் ஆதரவையும்  அன்பையும்  கலைடாஸ்கோப்- பிற்கு தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

சமுத்ரா ..

Friday, August 16, 2013

கலைடாஸ்கோப் -99

லைடாஸ்கோப் -99 உங்களை வரவேற்கிறது

இந்திய இல்லங்களின் தொலைக்காட்சிகளை விட்டு இந்த ராமாயணம், மஹாபாரதம் இரண்டும் எப்போதும் அகலாது போலிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஏதோ ஒரு வகையில் டி .வி களில் ரா மற்றும் ம தொடர்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. எத்தனை தடவை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் சலிப்பு தராத இதிகாசங்கள் அவை. அடுத்து நடப்பது தெரிந்தாலும் கூட, இப்போது கூனி வருவாள், இப்போது கைகேயி மனம் மாறுவாள், இப்போது பொன்மான் வரும் இப்போது ராவணன் வருவான் என்று அடுத்து நடப்பது தெரிந்தாலும் கூட அதே சுவாரஸ்யத்துடன் இருக்க முடியும் ...

சன் டி  .வி யில் தமிழிலேயே எடுக்கப்பட்ட மகாபாரதம் வருகிறது. இதுவரை ஹிந்தி சானல்களின் காப்பி ரைட்டாக இருந்த இந்தத் தொடர்களை தமிழில் எடுக்க முன் வந்தது ஒரு பாராட்டத்தக்க விஷயம்.உச்சரிப்பு, உதட்டசைப்பு, மொழி பெயர்ப்பு குழப்பங்கள் இல்லாமல் nativity உடன் பார்க்கலாம்.  ரா. எடுப்பதை விடவும் ம. எடுப்பது கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம். ராமாயணத்தில் நிறைய எபிசோடுகளை காட்டிலேயே ஒட்டி விடலாம். இங்கே, செட்டுக்கே அதிக செலவாகும். தமிழில் , சில காட்சிகளில் ஹிந்தி அளவு பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் திருப்தியாகவே வந்திருக்கிறது !சத்தியவதி, பீஷ்மர், விதுரன், சகுனி , நல்ல தேர்வுகள். ராஜ மாதா சத்தியவதியாக வரும் தேவிப்ரியா chance -less !


விசித்திரவீர்யன் திருமணம் 


ஆனால் சில நடிகைகள் அசல் தமிழ் நாட்டுப்புற கிராம கெட் -அப்பில் பூ, பட்டுப் புடவையுடன் வருவது உறுத்துகிறது . கௌ (gow )ரவர் , ச(sa ) க்கரவர்த்தி,அஸ்தினாபுரம் என்று சொல்லும் தமிழ் நடிகர்களின் உச்சரிப்பும்.

இதற்கு முன் விநாயகர் திருவிளையாடல் என்று ஒன்று வந்து கொண்டிருந்தது. பாதியிலேயே நின்று விட்டது.மகாபாரதம் கு(ku)ருச் சேத்திரப் போர் வரை போகிறதா என்று பார்ப்போம் ! ok ..

கம்ப ராமாயணம் போன்று வில்லியின் பாரதம் ஏனோ அத்தனை பப்ளிசிட்டி பெறவில்லை. மூன்று பாட்டுகளைப் பார்ப்போம் !


கண்ணன், போரைத் தடுக்க நான் துரியோதனாதிகளிடம் தூது போகிறேன் என்கிறான். நகுலன், அவனிடம்  போகாதே , சுத்த வேஸ்ட் ! நீ எப்படிப்பட்டவன் ! மழை இடையர்களை நனைத்து விடக்கூடாதே என்று initial stage  இலேயே  கருணையுடன்  மலையை எடுத்தவன்..உன்னை அவன் மதிக்கமாட்டான், கூப்பிட்டு கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்க மாட்டான் ! மேலும், பாண்டவர்கள் நிலத்தை பிச்சை கேட்டார்கள் என்ற பழி வேறு வரும் ...சண்டை செய்யலாம்.
ஏ .கே .47 எல்லாம் வேலை இன்று துருப்பிடித்து விடும் போலிருக்கிறது என்கிறான்.


'கேவலம் தீர் வலிய பகை கிடக்க, முதல் கிளர் மழைக்குக் கிரி ஒன்று ஏந்து 
கோவலன் போய் உரைத்தாலும்,குருநாடும் அரசுமவன் கொடுக்கமாட்டான்; 
நாவலம் பூதலத்து அரசர், நாடு இரந்தோம் என நம்மை  நகையாவண்ணம், 
காவலன்தன் படை வலியும், எமது தடம் புய வலியும்   காணலாமே!

அர்ஜுனனுக்கு வேறு  கவலை. சபையில் எல்லார் முன்னிலையிலும் திரௌபதி அவமானப் பட்டாளே !அப்போது நாமெல்லாம் பிணங்கள் போல நின்றிருந்தோமே அந்தக் களங்கத்தை துடைக்க வேண்டாமா என்கிறான்.


தீண்டாத கற்புடைய செழுந் திருவைத் துகில் உரிய,  செயல் ஒன்று இன்றி, 
"நீண்டானே! கரியானே! நிமலா!" என்று அரற்றினளாய்  நின்று சோர, 
மாண்டார்போல், அது கண்டும், மன் அவையில் யாம்   இருந்த மாசு தீர 
வேண்டாவோ? வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ?  வேந்தர் வேந்தே!

கம்ப ராமாயணத்தை விட எளிமையாய் இருக்கிறதா ? படித்தால் புரிகிறதா ? ஒய்வு நேரத்தில் வில்லி பாரதம் படியுங்கள். இன்டர்நெட்டில் எல்லாமே கிடைக்கிறது.  


சகதேவன் மட்டும்தான் ,


ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான் அறிவேன், உண்மையாக

திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!' 

என்கிறான் !



%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

நண்பர் ஒருவர், "No artificial flavors and colors' என்கிறார்களே.....artificial என்று ஏதேனும் உண்டா ? மனிதனால் எதையும் உண்டாக்க முடியுமா ? எல்லாமே 'Natural ' தானே என்றார்.உண்மை தான். தெளிவான வரையறை இல்லாமலேயே நாம் நிறைய சொற்களை உபயோகித்து வருகிறோம்.
'பழையது' , 'புதியது' என்பது கூட அப்படித்தான்.

When a man opens a car door for his wife, it's either a new car or a new wife.
Prince Philip 


A  trillion years from now an advanced civilization will look back at us with envy and say "They knew the Universe when it was young." -Arthur C Clarke 


நாம் புதியது என்று நினைப்பது ஒரு விதத்தில் மிகப் பழையது ..!


ஒரு விதத்தில் பார்த்தால் எல்லாமே பழையது....மிகப் பழையது . அறிவியல் , பிரபஞ்சத்தின் வயது 13 பில்லியன் ஆண்டுகள் என்கிறது...(13000 கோடி வருடங்கள் !) 
இப்போது இருக்கும் கார்பன், சிலிக்கான், கருப்புசாமி எல்லாம் அத்தனை பழையவைகள் !இன்னொரு விதத்தில் எல்லாமே புதிது ,எல்லாமே மாறுகிறது. முந்தைய நொடி இருந்தது இப்போது  இல்லை...எல்லாமே சுழற்சி முறையில் மாறுகிறது.நம் உடலின் செல்கள் ஒவ்வொரு நிமிடமும் மாற்றப்படுகின்றன. சில பேர், மனித உடல் ஏழு வருடங்களில் முற்றிலும் மாறி விடுகிறது என்ற கருத்தை நம்புகிறார்கள். அதாவது ஏழு வருடம் முன்பு இருந்த செல்கள் ஒன்று கூட இப்போது இல்லை. நீங்கள் முற்றிலும் வேறு மனிதர்....இதை சில பேர் மறுக்கிறார்கள்.. .எல்லாமே மாறி விட்டாலும் 'நான்' என்ற உணர்வு தொடர்கிறதே, சின்ன வயதில் நடந்தது ஞாபகம் இருக்கிறதே ? எனவே மூளை மற்றும் தண்டு வடத்தின் சில ஆதார நியூரான் செல்கள் எப்போதும் மாறுவதில்லை  (cerebral cortex )என்கிறார்கள்.நம்மை சுற்றிச் சூழ்ந்துள்ள வெட்ட வெளி கூட...நாம் நேற்று பார்த்த வெளி இன்றைக்கு இல்லை. in fact , அதை வேறெப்போதும் பார்க்க முடியாது பூமி சூரியனை சுற்றுவதால் தினமும் வேறு வேறு வெட்டவெளி...சூரியன் பால்வெளி வீதியை சுற்றுவதால் வருடா வருடம் வேறு வேறு வெளி. ஆனால் நமக்கு இது தெரிவதில்லை..ஒன்றுமே இல்லாததை , சூனியத்தை  எப்படிப் புதியது, பழையது என்று வேறுபடுத்த முடியும் ?? இறைவன் போல !!! பழையதும் அவன்...புதியதும் அவன்... பழையதில் ஒயின் அவன். புதியதில் இன்றைய நியூஸ் பேப்பர் !



"முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே " - மாணிக்கவாசகர் 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%5

'ராக ரஞ்சனி'  என்ற பதிவை ப்ளாக்கில் எழுதி வந்தேன். பல பேர் பேரைப் பார்த்ததுமே காத தூரம் ஓடிப் போனதால் இனிமேல் கலைடாஸ்கோப்-இலேயே ராகங்களைப் பற்றி அவ்வப்போது எழுதலாம் என்று.. now  you have no choice !

ராக ரஞ்சனி ..
ராகம் : சாருகேசி 

'சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது' என்கிறது ஒரு தமிழ் சினிமா பாட்டு. ஆனால் , சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் ரொம்பவே தூரம் என்று தோன்றுகிறது. 'தூக்கம்' என்ற சொல்லுக்கும் தூங்குவதற்கும் என்ன சம்பந்தம் ? இந்த association எப்படி ஏற்பட்டது ? முதன் முதலில் மொழி வந்த போது இந்த association ஏற்பட ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. சரி.

சாருகேசி எல்லா ஸ்வரங்களும் வரும் ஒரு சம்பூர்ண (முழுமையான) ராகம்.இதன் ஸ்வரங்கள் 
ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ் ,
 ஸ் நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ



முதலில் சினிமாப் பாட்டில் இருந்து ஆரம்பிப்போம். 

ராகவேந்திரருடன் போட்டிக்கு வரும் நாட்டியப் பெண் , நீங்கள் பாடும் பாடலுக்கு நான் சரியாக அபிநயம் பிடிக்க வராவிட்டால் நான் தோற்றதாக ஒப்புக் கொள்கிறேன் என்கிறாள். ராகவேந்திரர் பாடுகிறார். 'சாருகேசி' என்ற ராக முத்திரையை பிரயோகித்து அவளை ஆட முடியாமல் நிறுத்தி விடுகிறார் அவர். இந்தப் பாடலைப் பார்க்கும் போது பாட்டி, 'சாருகேசின்னா அழகான கூந்தலை உடையவள்' -ன்னு அர்த்தம் வர்றதே , அதை அபிநயத்தில் காட்ட வேண்டியது தானே ? என்பாள். அதை ஏன் அவள்  காட்டவில்லை ?சொல்லுக்கும் அர்த்தத்தும் ரொம்ப தூரம் ஆகி விட்டதோ என்னவோ ? 

ராகத்தின் பெயரைப் பார்த்து இது பெண் ராகம் என்று நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஆண் ராகம். அதாவது அழகிய கூந்தலை  உடையவன் ! அந்தக் காலத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் கூந்தல் அழகன்-களாக இருந்தார்கள் போலும் ! பாடலின் காணொளி கீழே !





சாருகேசியில் சில பிரபலமான திரையிசைப் பாடல்கள்.

* மன்மத லீலையை வென்றார் உண்டோ 
* தூது செல்வதாரடி 
* சின்னத்தாயவள் தந்த ராசாவே 
* காதல் கசக்குதையா 
* உதயா உதயா உளறுகிறேன் 
* நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ 

கர்நாடக இசை 
லால்குடி ஜெயராமன் இயற்றிய சாருகேசி வர்ணம் ரொம்பவே பிரபலம்.
'இன்னும் என் மனம் அறியாதவர் போல இருந்திடல் நியாயமா ?'

ப த நி தா ப ம த ப ம க ரி க ம பா ....

பாடல் கீழே 




என்னுடன் பேசுவதற்கு என்னப்பா பிகு பண்ணுகிறாய் , ராமா என்று கேட்கும் தியாகராஜரின் 'ஆட மோடி கலதே' ...  விசாகா ஹரி கதையுடன் சொல்கிறார். எப்படிப் பேச வேண்டும் என்றும் ஒரு communication கிளாஸ் எடுக்கிறார் விசாகா ஹரி இதில்...




கடைசியாக ஸ்வாதித் திருநாளின் 'கிருபயா பாலய சௌரே '...ரொம்ப அறிவு உள்ளவர்கள், ஜீனியஸ்கள் சீக்கிரமே பூமியை விட்டுப் போய் விடுவார்கள் என்பார்கள்.சமஸ்கிருதத்தில் சொகசான கிருதிகள் 400க்கும் மேல் இயற்றி விட்டு 31 வயதிலேயே போய் விட்டார் திருநாள் ! 




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

வாழ்க்கையின் பெரிய அபத்தம் எது ? ஆசைப்பட்டது கிடைத்து விடாமல் இருப்பதா ? இல்லை... ஆசைப் பட்டது கிடைத்து விடுவது என்கிறார்கள். 
புத்தரின் தந்தை அவருக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும்படிச் செய்து ஒரு மிகப் பெரிய தவறு செய்து விட்டார் என்கிறார் ஓஷோ. அப்படிச் செய்திருக்கக் கூடாது. சின்னச் சின்னத் தோல்விகள் , ஏமாற்றங்கள், விரக்திகள் இவற்றை சித்தார்த்தன் அனுபவிக்கும் படி செய்திருக்க வேண்டும் என்கிறார். சித்தார்த்தன் என்ற பெயரே சித்த அர்த்தன் -ஆசைகளின் நிறைவு என்று பொருள்படும் படி வைத்து விட்டார்கள். எல்லாமே கிடைத்து விடுகிறது. செல்வம், ஆடை, ஆபரணம், பணியாட்கள், தூக்கம் , பெண்கள் எல்லாமே ! இந்த எல்லாம் -கிடைத்து-விடும் சூழ்நிலையில் எல்லாமே சலித்துப் போவது இயல்பு தான். 

மேல்நாட்டு சிந்தனையாளர் ஒருவர் மனிதகுலம் எதிர்காலத்தில் பசி, பட்டினி, பஞ்சம், போர் இவற்றால் அழிவதை விட எல்லாத் தேவைகளும் நிறைவடைந்து , எல்லாமே கிடைத்து, எல்லாமே கொடுக்கப்பட்டு வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொண்டு விடும் என்கிறார்.

ஏழைகளை விடப் பணக்காரர்கள் அதிக விரக்தியில் இருக்கிறார்கள் என்கிறார் ஓஷோ. ஏழைகளுக்காவது hope , நம்பிக்கை இருக்கிறது. நாளை ஏதோ ஒன்று நடக்கும், நாளை நாம் பணக்காரர் ஆவோம் என்று. பணக்கார்களுக்கு அதுவும் இல்லை. எல்லாமே இருக்கிறது. நம்பிக்கை விழுந்து விட்டது.! 

ஆசைகளின் பூர்த்தியில் வரும் ஞானமே உண்மையானது. ஆசைகளின் அடக்குதலில் அல்ல.கனிந்த பழம் தானாகவே கீழே விழுந்து விடும் !

ஸ்கூலில் படிக்கும் போது   , +2 வில் நல்ல மார்க் வாங்கி நல்ல கட்-ஆப் வாங்குவது லட்சியமாய் இருந்தது. வாங்கியாயிற்று. பின் நல்ல இஞ்சினியரிங் காலேஜில் சேர்ந்தாக வேண்டுமே ! என்று.. பின்னர் நல்ல கம்பெனியில் place ஆகவேண்டும் என்று. பிறகு நல்ல project , onsite கிடைக்கணுமே என்று..பின்னர் நல்ல location இல் வீடு வாங்க வேண்டுமே என்று.! கல்யாணமும் ஆகி இடுகிறது. எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்பிக்கை வாசல் மூடப்படுகிறது. ...எல்லாமே நடந்து விடுகிறது. கல்யாணம் ஆகாவிட்டால் at least கற்பனைகளில் வாழலாம். நாளை அழகான பெண் , மிஸ். மெட்ராஸ் ஒருத்தி வந்து மலர்க்கொத்தை நீட்டி  நம்மிடம் ஐ -லவ்-யூ சொல்லலாம். யார் கண்டது ? there seems to be a  chance ...கல்யாணம் ஆகி விட்டால் அதுவும் விழுந்து விடுகிறது.

ஹி ஹி...அதனால் தான் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை...
வீடு கார் எதுவும் வாங்கவில்லையாக்கும் ! இவ்வளவு சின்ன வயதில் (?) ஞானம் அடைய (??) நான் விரும்பவில்லை....


%%%%%%%%%%%%%%%%%%%%%


Discovery சானலின் food factory  பார்த்திருக்கிறீர்களா ? பார்த்தாலே ஒரு ஃ புல் மீல்ஸ் சாப்பிட்டு விட்ட திருப்தி ஏற்படும். மாவிலிருந்து தொடங்கி குளோப் -ஜாமூன் பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு வெளியேறுவது வரை விலாவாரியாக ! நாக்கில் எச்சில் ஊறும் ! என்னைக் கவர்ந்தது factory -யில் 
இருக்கும் இயந்திரங்கள் தான். அவை கலக்குகின்றன; உடைக்கின்றன; சேர்க்கின்றன , தள்ளுகின்றன,பிரிக்கின்றன,  பிசைகின்றன, கட்டுகின்றன , ஒட்டுகின்றன ! அழகான சொன்ன சொல் கேட்கும் pre programmed இயந்திரங்கள் ..!

விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தும் விஷயம் சிரிப்பு என்பார்கள். வேறுபடுத்தும் இன்னொரு விஷயம் 'சமையல்' ..எந்த மிருகமும் சமைத்து சாப்பிடுவதாகத் தெரியவில்லை. மனிதனின் நாக்கு தான் ஸ்பெஷல் ! அதற்காக எத்தனை பிரயத்தனங்கள் ! பிசினஸ்கள் ! ரசனையான நாக்கு ! ஆங்....சமஸ்கிருதத்தில் நாக்குக்கு ரசனா (Rasana )என்று பெயர் !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சமஸ்கிருதம் ஏன் ஸ்பெஷல் என்று யோசிக்கலாம். இத்தனை அழகான மொழியை நம்மிடம் வைத்துக் கொண்டு நாம் பிரெஞ்சு , ஸ்பானிஷ் என்று கற்றுக் கொண்டிருக்கிறோம்.

* சுருக்கம் : 

பார்வதி இமயத்தில் தவம் செய்யும் போது , மகளே தவம் செய்தது போதும் என்று பொருள் வரும்படி சமஸ்கிருதத்தில் அவள் தாய் சொல்கிறாள். 
அது என்ன வாக்கியம் என்று யோசியுங்கள் ! வாக்கியம் கூட இல்லை. சொல் தான். இரண்டே எழுத்து:-   'உமா'

*கடவுள்களில் பெரியவர் யார் ?
who is the greatest of Gods ?
கிமேகம் தைவதம்  ?

*யாரை வழிபடுவதால் மனிதனுக்கு அமைதியும் செல்வமும் கிடைக்கிறது ?
By worshiping whom can a man reach auspiciousness (peace and prosperity)?
*கிம் அர்ச்சனாத் ப்ராப்னுயுர் மானவா : சுபம் ?

*எப்போதும் சாந்தமானவரும் , அகில உலகத்துக்கு நாயகரும் ஆனவரை வந்திக்கிறோம்.
We meditate  upon the master of the universe , lord Vishnu, who is ever peaceful 
சாந்தாகாரம் வந்தே சர்வ லோகைக நாதம் 

-எது சுருக்கமானது என்று தெரிகிறதா ?

* வாக்கிய அமைப்பு.

தமிழில் இப்படி எழுதினால் நன்றாக இருக்காது :

வாங்கி வருவாயா சாயங்காலம் வரும்போது காய்கறி ?

இங்லீஷில் இப்படி எழுத முடியாது:

 In the evening when you come, vegetables, will you bring?

சமஸ்கிருதத்தில் இரண்டு விதத்திலும் எழுதலாம்.
(ஏன் இன்னும் பல விதத்தில் எழுதலாம் )

ஆனயந்தி வா சாயம் ஆகமன சமயே ஷாகம் ?
சாயம் ஆகமன சமயே ஷாகம் ஆனயந்தி வா ?
सायं आगमनसमये शाकं आनयन्ति वा?


புரியாத மொழி என்றே நாம் எடுத்துக் கொண்டு விட்டோம். உண்மையில் பிரெஞ்சு கற்பதை விட சம்ஸ்க்ருதம் சுலபம் தான் . கற்றுக் கொண்டால் இன்னொமொரு விஷயம் நமக்கு advantage . கோயிலில் அர்ச்சகர் என்ன சொல்கிறார் தப்புத் தப்பாக சொல்கிறாரா , அதன் அர்த்தங்கள் எல்லாம் தெரிந்து விடும்.

தெரியாதவரை நல்லது என்கிறீர்களா...ஆமாம் தெரிந்தால் சில விஷயங்கள் உறுத்தும்.

அம்மாவுக்கு ஸ்ரார்தம் செய்யும் போது ,'யன் மே மாதா ப்ரலுலோபா ஸ்சரந்தி அநனுவ்றதா' - என் அப்பா யார் என்று எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இவளை என் தந்தைக்கு உண்மையான மனைவி என்று நினைத்துக் கொண்டு ஸ்ராத்தம் செய்கிறேன்.என் தாய் என் தந்தைக்கு உண்மையானவளாக இல்லாதிருந்திருந்தால் இந்த பிண்டம் வீணாகாமல் என் தந்தைக்கே போய் சேரட்டும்.!


அப்பாவுக்கு சொல்லும் மந்திரத்தில் 'அப்பா என் அம்மாவுக்கு துரோகம் செய்திருந்தால்...' என்றெல்லாம் வருவதில்லை....ஹ்ம்ம்..ஆணாதிக்கம் !!

அர்த்தம் தெரியாத வரைக்கும் நல்லது ! தர்ப்பணம் கொடுத்தோமோ , சம்பாவணை செய்தோமா சாப்பிட்டோமா மத்தியானம் ஆபீசுக்கு ஓடினோமா மீட்டிங்கில் "I already told u many times ...'என்று (உண்மையிலேயே ஒருதரம் தான் சொல்லி இருப்பார் ) வெட்டி பந்தா காட்டினோமா என்று இருக்கலாம்.


ஓஷோ ஜோக்.


ஒரு பெண் அவசரமாக முல்லாவின் வீட்டில் நுழைந்து . 'டாக்டர்,  தயவு செய்து என்னைப்பார்த்து என்னிடம் என்ன குறை என்று சொல்லுங்கள்.. அவர் ஏன் என்னை விட்டு ஓடி விட்டார்' என்றாள் .

முல்லா அவளை பொறுமையாக மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு  ' அம்மையாரே  , மூன்று விஷயங்கள் ...

ஒன்று : நீங்கள் முப்பது கிலோ ஓவர் -வெயிட்டாக உள்ளீர்கள்.

இரண்டு : உங்கள் உதட்டில் இருக்கும் அடர்த்தியான லிப்-ஸ்டிக்கை அழித்து விட்டால் நீங்கள் கொஞ்சம் அழகாகத் தெரிவீர்கள்.

மூன்று : நான் டாக்டர் அல்ல... அது எதிர் வீடு'

என்றார்.


சமுத்ரா 

Tuesday, August 13, 2013

கலைடாஸ்கோப் -98

கலைடாஸ்கோப் -98 உங்களை வரவேற்கிறது.


உன்னோடும் என்னோடும் உடம்போடும் வேர்த்தாலும்
உதட்டு மேல வேர்க்காதய்யா நீ நம்பணும் 


தலையெழுத்து என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? ஒவ்வொரு குழந்தைக்கும் பிரம்மா உட்கார்ந்து பொறுமையாக பால் பாயிண்ட் பேனாவால் தலை எழுத்தை எழுதுவாரா என்று தெரியவில்லை. இல்லை , advanced ஆக ஒவ்வொரு குழந்தையையும் ஒரு மெகா சைஸ் dot -matrix -printer  இன் உள்ளே அனுப்பி விடுவாரா என்பதும் தெரியவில்லை. நம்முடைய வாழ்க்கை முழுவதையும் சுருக்கி நெற்றியில் எழுத வேண்டும் என்றால் அதுதான் உண்மையான short -hand ! உண்மையான compressed zip file ! உலகின் எல்லா நாகரீகங்களும் தலையெழுத்தை நம்புகின்றன என்று தோன்றுகிறது. ஆனால், ஆங்கிலத்தில் தலையெழுத்து என்பதற்கு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. head -writing ???

கன்னடத்தில் புரந்தர தாசர்,

"நா மாடித கர்ம  பலவந்தவாதரே
நீ மாடுவதேனோ ரங்கா
சாமான்ய வல்லவிது பிரம்ம பரெத பரஹ' - என்கிறார்.

தமிழில்,

'என் வினைப்பயன் அப்படி இருந்தால்
நீ என்ன செய்ய முடியும்- அய்யா ?
இது சாமான்யமா? பிரம்மன் எழுதிய எழுத்தாயிற்றே! '

-பின்னே மாற்றமுடியாதபடி Read Only யாக   hard -code செய்து விடுகிறான் போலும் பிரம்மன்.



தியாகராஜர் தன்னுடைய பாட்டு ஒன்றில்

மீவல்ல குண தோஷமேமி ஸ்ரீ ராமநாவல்லனே கானி நளின தள நயன - என்கிறார் 

தங்கம் சரியில்லை என்றால் பொற்கொல்லனை நொந்து கொள்ளலாமா என்கிறார்.

பாடலை கீழே கேட்கலாம்.




சரி.. எது வலியது? கர்ம பந்தமா இறைவனின் அருளா என்பது ஒரு முடிவில்லாத வாதம். கர்ம பந்தம் தான் வலியது என்றால் இறைவனின் கருணைக்கு மதிப்பே இல்லை. எல்லாம் கர்மப்படி நடக்கும் என்றால் இறைவனின் கருணைக்கு வேலையே இல்லை. மேலும், கருணை தான் பெரியது என்றால் சரி, என்ன வேணா தப்பு பண்ணிக்கலாம் இறைவனிடம் நெக்ஸ்ட் ஜென்மத்தில் கருணையை வேண்டினால் போறது! என்ற மனோபாவம் வந்து விடுகிறது. 

மனிதனின் பார்வை மிகக் குறுகியது. வயிறு முட்ட எண்ணெய் அயிட்டங்களை 
சாப்பிட்டு விட்டு மறுநாள் வயிற்றுவலி வந்தால் சாமியிடம் ' நீ கடவுள் தானே, என் மீது கருணை இல்லையா ? நான் நல்லவன் தானே, எனக்கு எப்படி வயிற்றுவலி வரலாம்?' என்று கேட்கிறான். எனவே கடவுள் என்பவர், எப்போதும் தன பக்தர்களின் வினைப் பயனுக்கும் , தன் கருணைக்கும் ஒரு trade -off செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.


இந்த குட்டிக் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்.

ஆஸ்திகன் ஒருவன், கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து இருவரும் கோயில் பிரகாரத்தை சுற்றி வருகின்றார்கள். வழியில் , ஆஸ்திகனுக்கு காலில் முள் குத்தி விடுகிறது. இன்னொருவனுக்கு நாணயம் ஒன்று தட்டுப்படுகிறது. நாஸ்திகன் , 'பார்த்தாயா, கடவுளை நம்பிய உனக்கு முள் வலி, எனக்கு அதிர்ஷ்டம்' என்கிறான்.

உண்மையில் அன்று அவனை பாம்பு கடிக்க வேண்டும் என்று விதி. ஆனால் கடவுள் அதை வெகுவாகக் குறைத்து முள்-குத்தோடு நிறுத்தினார். மேலும், இன்னொருத்தனுக்கு புதையல் கிடைத்திருக்க வேண்டியது. அவன் அவநம்பிக்கையால் நாணயத்தோடு நின்றது.


பட்டினத்தாரை திருடன் என்று தப்பாக முடிவு செய்து அரசன் முன்னர் நிறுத்துகிறார்கள். 
அரசனும் நேற்றைய இரவின் hang -over இல் ஆராயாமல் திருடனை கழுவில் ஏற்றுங்கள் go go என்று சொல்லி விடுகிறான். அப்போது பட்டினத்தார் , 'இப்பிறப்பில் என் மனம் அறிந்து யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. முன் ஜென்ம வினை தான் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இப்போது வந்து என்னை வாட்டுகிறது போலும் ' என்று பொருள்வரும்படி பாடுகிறார்.


என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினையோலிங்ஙனேவந்து மூண்டதுவே

நல்லவன் ஒருவன் கஷ்டப்படுவதை விதி என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும் என்று திருவள்ளுவரும் சலித்துக் கொள்கிறார்.

சரி. தலை-எழுத்தை விடுவோம். இந்த கையெழுத்தை பற்றி கொஞ்சம். கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து  நன்றாக இருக்காது. vice -versa என்பார்கள். டாக்டர்களைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. எனவே உங்கள் குழந்தை ஹோம் ஒர்க் நோட்டில் கோழி கிறுக்குவது போல எழுதினால் சந்தோஷப்படுங்கள்!

டாக்டர்கள் கையெழுத்தைப் பற்றி இப்படி சொல்வார்கள்.

டாக்டர் ஒருவருக்கு மருந்துக்கடை கம்பவுண்டர் ஒருவர் நண்பராக இருந்தாராம். ஒருநாள், டாக்டர் வழியில் சென்ற பையனை அழைத்து, ஒரு சீட்டில் ' நாளை என் வீட்டில் ஒரு விசேஷம். கண்டிப்பாக வந்துவிடவும். நேரில் வந்து அழைக்க முடியவில்லை' என்று எழுதி 'மருத்துக்கடை அங்கிளிடம் கொடுத்துவிடு' என்று சொல்கிறார். பையன் அங்கே சென்று அவரிடம் பேப்பரைக் கொடுத்த உடனேயே அதை மேலோட்டமாகப் பார்த்து விட்டு அவர் உள்ளே மறைந்து போய் விடுகிறார்.திரும்பி வரும்போது அவர் கையில் கலர் கலராக மாத்திரைகள், சிரப்புகள் !!!


யாருக்கும் புரியாமல் எழுதுவது ஒரு கலை போலும்!

என்ன தான் இருந்தாலும் இந்த ஆசாமியை மிஞ்ச முடியாது.

இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களிலேயே இதுதான் மிகவும் புதிரான புத்தகம் என்கிறார்கள். நூற்றுக்கணக்கான பக்கங்கள் ஏதோ ஒரு புரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளன. படங்கள் வரைந்து விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியவில்லை. இதை
வாய்நிச் manuscript என்கிறார்கள். (Voynich manuscipt ) .இதுவரை நாம் அறிந்திராத தாவரங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.மருத்துவக் குறிப்புகளாக இருக்கலாம் என்கிறார்கள்.  இது என்ன புத்தகம்? யார் எழுதியது? இதைப் புரிந்துகொண்டால் மனித இனத்துக்கு உபயோகமாக ஏதேனும் இருக்குமா? ஒன்றும் தெரியவில்லை. இந்தப் புத்தகம் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள்.


&*&*&*&*&*&

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் - பாரதி

Prediction is very difficult, especially if it's about the future.
Niels Bohr

"Drill for oil? You mean drill into the ground to try and find oil? You're crazy." -- Workers whom Edwin L. Drake tried to enlist to his project to drill for oil in 1859.

எதிர்காலத்தை கணித்தல் என்பது ஒரு திரில்லான சப்ஜெக்ட் ஆக இருந்து வந்திருக்கிறது.
கணிப்பது என்றால் "உங்களின் சப்தமாதிபதியான சூரியன் வலுவாக 3ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த தமிழ்  வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப் பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம்..." இப்படி தனி மனிதனின் எதிர்காலத்தை அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்தை, பொருளாதாரம், இலக்கியம், மொழி , தொழில்நுட்பம் போன்றவற்றின் எதிர்காலத்தை சாமார்த்தியமாக கணிப்பது.

எதிர்காலம் கணிப்பதில் பெரும்பாலும் பலர் கடைபிடிப்பது இறந்த காலத்தை கணக்கில் வைத்து செய்வது.
ஏற்கனவே வரையப்பட்ட ஒரு நேர்கோட்டை இழுத்து விடுவது போல! உதாரணம் மூரின் விதி : கணினிகளின் செயல்திறன் ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கும் இரட்டிப்பாகும்; விலை பாதியாகும் என்ற இந்த கணிப்பு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு சரியாக இருந்திருக்கிறது. இன்னொன்று சும்மா வாய்க்கு வந்த ஏதோ ஒன்றை உளறி வைக்க பின்னால் அது பலித்து விடுவது! ....மூன்றாவது மனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றினால் vision எனப்படும் காட்சியில் கண்டு சொல்வது.



ஜான் வாட்கின்ஸ் என்ற பொறியாளர் 1900-ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகள் கழித்து உலகம் எப்படி இருக்கும் என்று கணித்திருந்தார். அவைகளில் பெரும்பாலானவை அப்படியே பலித்து விட்டன.

அவரின் கணிப்புகளில் சில:

1. 2000 ஆம் ஆண்டில் கேமிரா தொழில்நுட்பம் வளர்ந்து புகைப்படம் எடுத்து அதை சில நிமிடங்களில் உலகின் இன்னொரு மூலைக்கு அனுப்ப இயலும்.

2. கம்பியில்லாத (wireless ) தொலைபேசி உலகை ஆளும். தொலைபேசிகள் மூலம் கண்டம் தாண்டி கண்டம் பேச இயலும்.

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படும்.

4. மணிக்கு நூறு மைல் வேகம் செல்லும் ரயில்கள் வரும். ( வாட்கின்ஸ் காலத்தில் ரயிலின் வேகம் மணிக்கு இரண்டு மைல் !)

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தகவல் தொடர்பு என்பது  வெறும் கருக் குழந்தையாக இருந்தது என்பதை கவனிக்கவும். 

வாட்கின்ஸ் செய்த தவறான கணிப்புகள் சில:

1. ஆங்கில எழுத்துகளில் X  மற்றும் Q  இருக்காது.

2. அடுத்த நூற்றாண்டுகளில் நகர போக்குவரத்து முழுவதும் தரைக்கு அடியே இருக்கும்.

3. கொசுக்கள் சுத்தமாக ஒழிக்கப்படும் .

(எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கொசுவை ஒழிக்க முடியாது போலிருக்கிறது!)

"Radio has no future. Heavier-than-air flying machines are impossible. X-rays will prove to be a hoax." -

என்று 1899 இல் வில்லியம் தாம்சன் என்ற விஞ்ஞானி சொன்னார்.
நாம் 2013 -னிலும்  ரேடியோ மிர்ச்சி கேட்டுக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் பொய்த்துப் போன மிகப் பெரிய கணிப்பு 2012 இல் உலகம் அழியும் என்ற மாயன்களின் கணிப்பு என்கிறார்கள். 

இதையும் கவனியுங்கள்.

  • "Everything that can be invented has been invented." -- Attributed to Charles H. Duell, Commissioner, U.S. Office of Patents, 1899, but known to be an urban legend.
  • "Louis Pasteur's theory of germs is ridiculous fiction." -- Pierre Pachet, Professor of Physiology at Toulouse, 1872.
  • "The abdomen, the chest, and the brain will forever be shut from the intrusion of the wise and humane surgeon." -- Sir John Eric Ericksen, British surgeon, appointed Surgeon-Extraordinary to Queen Victoria 1873.
இன்று கூட நாம் எல்லாமே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 2113-இல் என்னவெல்லாம் வருமோ? சும்மா 
predict செய்யலாம்.காசா பணமா?



* குழந்தைகள் பயங்கர புத்திசாலியாக இருப்பார்கள். 15 வயதிலேயே graduate ஆகி இரண்டு மூன்று டிகிரிகள் வைத்திருப்பார்கள். மாணவர்களிடம் டீச்சர்கள் பயப்படுவார்கள். 

* திரையே தேவைப்படாத முப்பரிமாண டி .வி கள் வந்து விடும்.
நிஜத்துக்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசங்கள் வெகுவாய்க் குறைந்து விடும்.

*  இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள்  தடை செய்யப்படும். சைக்கிள்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* காகிதங்களின் பயன்பாடு 50% குறைந்து விடும்.

* 100 ஆண்டுகளில் நான்கைந்து ராட்சச சுனாமிகள் கடற்கரைகளைத் தாக்கும்.

* எல்லா வீட்டிலும் கம்ப்யூட்டர் இருந்தே தீரும். பட்ஜெட் போடுதல், பொருளாதார நிர்வாகம் இவைகளை கம்ப்யூட்டரே கவனிக்கும். மனைவி மாதிரி 'ஆயிரம் ரூபாய் உதைக்குதே' என்று சண்டை கூட போடும்.

* வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஒருத்தருக்கு ஏழெட்டு வேலைகள் க்யூவில் இருக்கும். மக்கள் தொகை தொடர்ந்து வளராமல் saturate ஆகும். 

* உலகின் 50% இளைஞர்கள்  live -in relationship இல் இருப்பார்கள். 

* மனித வாழ்க்கை மேலும் அர்த்தம் இழக்கும். ஹை -டெக் சாமியார்கள் அதிகரிப்பார்கள். 

* இந்தியாவின் சில மாநிலங்கள் இரண்டாகப் பிரிந்து விடும். 

இதெல்லாம் இன்னும் நூறு வருடத்துக்கு நடக்காது.

* கேன்சர், எயிட்ஸ் முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் 
* செவ்வாய்க்கு மனிதனை அனுப்புதல் 
* மரபணு முறையில் நோய்களை குணப்படுத்தல் 
* வேற்றுக் கிரக உயிர்களுக்கான ஆதாரம் 

நூறு வருடம் கழித்தும் கூட இவையெல்லாம் மாறாது.

* நீங்கள் (வாசகர்கள்) தான் சொல்லுங்களேன்?




கீழ்க்கண்ட பத்தியில் என்ன ஸ்பெஷல் என்று கண்டுபிடியுங்கள்.

குரங்கு ஒன்று ஒரு தட்டெழுத்து எந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு  விசைகளை அதன் இஷ்டத்துக்கு அழுத்தி அந்தத் தாளை வெளியே எடுத்து நோக்கினால் ஒரு தலை சிறந்த கவிஞரின் கவிதை ஒன்று கிடைத்தால் எவ்வாறு உணர்வீர்கள்? இதற்கான சாத்தியக்கூறு சுழி அல்ல. ஆனால் குரங்கு அசலான கவிதையை தட்டச்சு செய்ய அண்டத்தின் வயது வரை உட்கார்ந்து அடித்துக் கொண்டே இருத்தல் தேவையாகிறது. ஒழுங்கில்லாத நிலையில் இருந்து ஒழுங்கு உருவாவது இவ்வாறு தானா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.சரி, சிறு வயதில் தட்டெழுத்து கற்றுக் கொள்கையில்  ஒரு குரங்கு தட்டுவதற்கு நிகராகவே நான் அடித்திருக்கிறேன். :)

clue : ஆரம்பத்தில் உள்ள பாட்டு!

***************************

பக்தன் ஒருவன் இறைவனிடம் எனக்கு முக்தி தரமாட்டாயா என்று கெஞ்சுகிறான்.

இறைவன் அவனிடம் அசரீரியாக , மடையனே, 'உன்னிடம் பக்தி, வைராக்கியம், மனோதிடம், விரக்தி என்று ஒன்றுமே இல்லையே உனக்கு எப்படி நான் மோட்சம் தர முடியும்?' என்கிறான்.

பக்தன், 'அட ராமா, உனக்கு நான் சொல்ல வேண்டியதாய் போய் விட்டதே,
ஒரு குட்டிக் கதை சொல்லுகிறேன் கேள், ஒரு ஊரில் கோடீஸ்வரன் ஒருவன் தன்னிடம் இருக்கும் தங்கம், வைரம், வைடூரியம் , நகைகள் , நாணயங்கள் எல்லாவற்றையும் தானம் செய்ய முடிவு செய்து அறிவிப்பு விட்டானாம். மறுநாள் அவன் வீட்டின் முன் ஏகப்பட்ட கூட்டம். எல்லாரும் அண்டா, குண்டா, சாக்குப்பை , மூட்டைகளுடன் குவிந்து விட்டார்களாம். ஒருத்தன் மட்டும் வெறும் கையை வீசிக் கொண்டு வந்தானாம். அவன் முறை வந்த போது ,செல்வந்தன் ,'ஏம்பா , எடுத்துட்டு போக பை ஒண்ணும் கொண்டு வரலையா?' என்று கேட்டதற்கு ,அவன், 'சாமி, நீங்க இவ்வளவு தங்கம் , வெள்ளி என்று அள்ளி அள்ளிக் கொடுக்கும் போது சாக்குப் பை உங்களுக்குப் பெருசா? அதையும் நீங்களே சேத்துக் கொடுத்துடுங்க' என்றானாம். அப்படி தான் நானும் சொல்கிறேன். அதி உயர்ந்த மோட்சத்தையே நீ கொடுக்கும் போது மற்றதெல்லாம் உனக்குப் பெரியதா? இந்த பக்திப் பை, வைராக்கிய மூட்டை, இவைகளை நீயே கொடுக்கலாகாதா? என்கிறான் பக்தன்.

-நன்றி....' ஜீரோ டிகிரி ' - சாரு நிவேதிதா



ஒரு காதல் கவிதை:

-பா. மதியழகன்


பூக்களுக்கு
புனிதர் பட்டம்
உன் கூந்தலை
அலங்கரித்ததினால்.

மாலையில் தான் பூங்காவில்
அவளைப் பார்த்து வந்தேன்
இருந்தாலும்
கதகதப்பு தேடும்
இரவு தான்
எத்தனை நீளம்.


ஓஷோ ஜோக்.


முல்லா நசுருதீனின் கழுதைக்கு என்னவோ ஆகி விட்டது. ஒருநாள் அவர் மனைவியை கீழே தள்ளிவிட்டு கொன்றே விட்டது.

முல்லாவின் மனைவிக்கு இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.
சடங்குகளை செய்து வைக்கும் குரு முல்லாவைப் பார்த்து, 'உங்கள் மனைவி ரொம்பவே பிரபலம் போல, இறுதி சடங்குக்கு இவ்வளவு கூட்டம்?' என்றார்.

முல்லா , ' இல்லை ஐயா, இவர்கள் எல்லாம் சடங்கு முடிந்ததும் கழுதையை விலை பேசி ஏலத்தில் எடுக்க வந்திருக்கிறார்கள்' என்றார்.


சமுத்ரா