இந்த வலையில் தேடவும்

Friday, October 26, 2012

கலைடாஸ்கோப்-75

லைடாஸ்கோப்-75 உங்களை வரவேற்கிறது
“Knowledge is knowing a tomato is a fruit; Wisdom is not putting it in a fruit salad.” - Brian Gerald O’Driscoll

இன்றைய உலகம் தகவல்களால் நிரம்பி இருப்பதாகத் தோன்றுகிறது. மூட்டை மூட்டையாக, குப்பை குப்பையாகத் தகவல்கள்! நியூஸ் பேப்பர்கள், டி.வி.சானல்கள், பத்திரிக்கைகள் , இன்டர்நெட் ....எல்லாம் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றன.ஒரு பத்திரிக்கையை ,ஒரு செய்தித்தாளை படித்து முடித்தால் எந்தத் திருப்தியும் ஏற்படுவதே இல்லை....இந்த தகவல் ஞானம் உண்மையான அறிவு என்று தவறாக எடுத்துக் கொள்ளப்படுவது தான் வேதனை.
இதில் நான்கு நிலைகள் உள்ளன என்று தோன்றுகிறது.

1 . Information : தகவல்: பத்திரிக்கையைப் பார்த்து , நியூஸ் கேட்டு, இன்று எங்கெல்லாம் மழை பொழிந்தது ,எத்தனை செ.மீ.பொழிந்தது,எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது என்று 'வெறுமனே' தெரிந்து கொள்வது.
2 . Knowledge :அறிவு: மழை எப்படிப் பொழிகிறது , கடல் நீர் ஆவியாகி மேகம் குளிர்ந்து நீர் எப்படி மழையாகப் பொழிகிறது என்று அறிவியல் பூர்வமாக மழையைப் பற்றிய அறிவு கொண்டிருப்பது.

3 .Awareness : ஞானம்:ஞான திருஷ்டி மூலம் அல்லது அறிவியல் கணிப்புகள் மூலம் எங்கெங்கே நாளை மழை பொழியும் எத்ததனை நாள் மழை நீடிக்கும் என்ற அறிவை பெற்றிருப்பது.

4 . Wisdom : புரிதல்:இது முதல் மூன்று நிலைகளையும் கடந்த ஒரு வித 'ஜென் நிலை' என்று சொல்லலாம்.அதாவது, மழை பொழியும் போது நிகழ்காலத்துடன் முழுவதும் ஒருங்கிணைந்து மனமற்ற நிலையில் அந்த மழையாகவே மாறி விடுவது...

இந்த நான்கில் எது உயர்ந்தது என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். 
*************************************

ஜென் என்றதும் சில ஜென் கவிதைகள் ஞாபகம் வருகின்றன.


ஞானம் என்பது யாதப்பா
நீரில் தெரியும் நிலவப்பா
நீரும் நிலவை நனைத்திடுமோ -இல்லை
நிலவு நீரினைக் கிழித்திடுமோ

நீர் அது  கொஞ்சம் என்றாலும் -அதில்
நிலவின் பிம்ப
ம் சிதைந்திடுமோ
புல்லின் முனையின் தண்ணீரில்
பிரபஞ்சமே பிரதிபளித்திடுமே!

-டோஜென்

அழகைப் பார் அங்கே அசிங்கமும் இருக்கும்
நன்மை பார் அங்கே தீமை ஒளிந்திருக்கும்
அறிவைப் பார் அதில் இருக்கும் அறியாமை
ஞானம் பார் அதில் நடமிடும் மாயை

எப்போதும் இது இப்படித்தான்
இருமை இருமை இருமை!!
ஒன்றை அல்ல நீ இரண்டையும் கைவிடு -அதுவே
பெருமை பெருமை பெருமை

-ரியூகன்

கடந்த காலம் போயிற்று
கனவிலும் அதை நீ நினையாதே
நிகழ்காலம் நிலையாது
நீ அதைத் தொடவும் முயலாதே

எதிர்காலம் இன்னும் வரவில்லை
ஏன் நீ நினைந்தே வருந்துகிறாய்
கண்முன் வருவதை ஏற்றுக்கொள்
கவலை இன்றி இருந்திடுவாய்

விதிகள் இங்கே ஏதும் இல்லை
வாழ்வில் நெறிகள் ஒன்றுமில்லை
மனமது இறக்கும் கலை அறிந்தால் -நீ
மார்க்கம் தன்னை அடைந்திடுவாய்

-பாங்
அப்பா? உன் அறிவு எத்தனை ஆழம்?
ஆழத்திலும் ஆழம்!
அப்படியா?
அண்டத்தின் அகண்டாகாரத்தில்
அது ஒரு முடிக்கு சமானம்

அப்பா? உன் அனுபவம் எத்தனை பெரிது?
அகன்று விரிந்த  அனுபவம் எனது!
அப்படியா?
காலத்தின் கரையில்லாக் கடலில்
உன் அனுபவம் துளியினும் சிறிது!

-டோகூசான்


###############################

ஒரு 'சிறிய' சிறுகதை.......

செந்தில் ஒருவன் தான் அவனது கிராமத்தில் பட்டப்படிப்பு முடித்தவன்.. மிகவும் நேர்மையானவன்.நல்லவன்.பிறருக்கு உதவும் உள்ளம் படைத்தவனும் கூட.கிராமத்தில் மற்றவர்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாத ஏழைகள். வறுமைக்கோட்டுக்கு சற்றே சற்று மேலே வாசம். செந்திலின் திறமைக்கு ஏற்ப பெருநகரம் ஒன்றில் பிரபலமான தொழிற்சாலையில் அவனுக்கு இஞ்சினியர் வேலை  கிடைத்தது. முதன் முறையாக தன் கிராமத்தை விட்டு நகரம் வந்து சேர்ந்தான்.

வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திலேயே தன் கடின உழைப்பால் நல்ல பெயர் பெற்று பதவி உயர்வும் பெற்று விட்டான். நல்ல சம்பளமும் கூட.ஒரு நாள் நகரத்தில் காலாற நடந்து கொண்டிருக்கும் போது செந்திலுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் சிலரை நகரத்துக்கு அழைத்து வந்து காட்டினால் என்ன? இந்த நகரம் அறிவால் நிரம்பி வழிகிறது.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் , கணினி மையங்கள் நூலகங்கள், பதிப்பகங்கள், பொருட்காட்சிகள்!இதையெல்லாம் செயல்முறையில் காட்டினால் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை உதவியாக இருக்கும்? என்னைப் போலவே அவர்களுக்கும் பின்னாளில் நல்ல வேலையும் கிடைக்கும்.

நினைத்தபடியே  அடுத்த வாரமே தன் கிராமத்துக்கு சென்று 
+2 படிக்கும் ஐந்தாறு பையன்களை கூட்டி வந்து விட்டான் செந்தில். பையன்களுக்கு இதுதான் முதல் மாநகரப் பயணம். நகரத்தின் விஸ்தாரத்தை, பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்தார்கள் கிராமத்து மாணவர்கள். 

ஒரு நல்ல ஹோட்டலில் மாணவர்களுக்கு ரூம் போட்டுத் தந்தான் செந்தில். அன்றிரவு " இதைப் பாருங்க பசங்களா,,,நீங்கள் வாழ்க்கையில் முன்னேறனும்னு தான் இங்க ஒரு வாரம் கூட்டி வந்திருக்கேன்...பாடத்தில் படிப்பதை எல்லாம் நீங்க இங்க செயல்முறையாப் பார்க்கலாம்.இந்த வாய்ப்பை நல்லா உபயோகப்படுத்திக்கிட்டு வாழ்க்கையில் முன்னேறனும்
நல்லாப் படிச்சு அப்பா அம்மாக்கு ,நம்ம கிராமத்துக்கு நல்ல பேர் வாங்கித் தரணும் "என்றான்.

'சரி சார்' என்ற பையன்கள் முகத்தில் ஒரு வித தயக்கம் நிழலாடியதை உணர்ந்தான் செந்தில்.

'இதப் பாருங்க...சார் கீர் எல்லாம் வேண்டாம். அண்ணான்னே கூப்பிடுங்க... நான் உங்க செந்தில்..என்னை உங்க சொந்த அண்ணன் போல நினைச்சுக்குங்க. உங்க முன்னேற்றம் தான் எனக்கு முக்கியம். எந்த உதவி வேணும்னாலும் தயங்காமே கேளுங்க...நாளைக்கு சிடி லைப்ரரி போலாம்.. அப்புறம் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் இன்டெர்னல் டூருக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்..'

'அண்ணா ...அது வந்து....வந்து...தப்பா எடுத்துக்காதீங்க...  அது என்னவோ சொல்லுவாங்களே.. பப்பு..இந்த பொம்பளைப் புள்ளைகள் எல்லாம் ராத்திரி  டான்ஸ் ஆடுமே...அந்த இடத்துக்கு ஒருநாள் எங்களை எல்லாம் கூட்டிப் போறீங்களா??. சும்மா பாக்கறக்கு தான் அண்ணே....' என்று எச்சில் முழுங்கியபடி பேசினான் ஒரு பையன்..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


தமிழர்களுக்கு 'சர் நேம்' என்ற இணைப்புப் பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. ஆபீசில் சர் நேரம் கேட்டால் தமிழர்கள் அப்பா பெயரையே கொடுத்து விடுகிறோம்.மற்ற எல்லா மாநிலத்தவர்களுக்கும் இருக்கிறது. ஆபீசில் சிலரது சர்- நேம்கள் விசித்திர விசித்திரமாக இருக்கின்றன..

* சேத்தன் தெங்கின்காய் (தெங்கின்காய் என்றால் கன்னடத்தில் தேங்காய்)
* பிரவீண் கரிச்சட்டி ( கரிச்சட்டி என்பது ஒரு ஊராம்!!!)
* சௌம்யா தும்மலா ( ஆமாங்க ஜலதோஷம்)
* ரகு கரபாகுலா
* விஜய் பெசரிட்டு (பெசரிட்டு என்றால் பயத்த மாவு!)
* அபிஷேக் பஹுகுணா
* அஜித் கங்கன்வாடி
* மகிந்தர் யாவாகனி
* வேணுகோபால் பாமிடிபட்டி
* ஹரிஹரன் பங்குலூரி
* மேனகா பப்பலா
* கேசவன் கோமுகுட்டி (நான் கன்னுகுட்டின்னு நினைச்சேன்!) 
* மனோகர் கொண்ட்ரகொண்டா (என்னத்தை கொண்டாறது?)
* ஷீதள் பாப்பா (இன்னும் பாப்பா தானா?)
* ஷஷிதர் கனுமரலாபுடி ( என்னது கண்ணுல மொளகாப்புடியா?!)
* ராமகிருஷ்ணா குண்டுரெட்டி (தெலுங்குப் படத்தில் வில்லன் சான்ஸ் கேட்கவும்)
* அபினவ் கரக்கா  (நா கொடுகா!)
* ரவீந்தர் கோனகஞ்சி 
* ராஜு பெரிச்சாலா (பெருச்சாளின்னு வைக்கலை!)
* கிருஷ்ண ரெட்டி உம்மா (கேரளாப்பக்கம் பேரை சொல்லிறாதீங்க)
* குப்புசாமி மயில்வாகனம் (ஆஹா! அப்படியே முருகனை தரிசிச்ச பீலிங்!)
* ரவிகுமார் பொம்மிசெட்டி
* ராஜேந்தர் குண்டுகுன்ட்லா (குண்டு குண்
டா பேர் வச்சுருக்கீங்களே!)
* செந்தில் சுடலையாண்டி
* கபில் உள்ளவாலே (லே! நீ வெளில போலே!)
* கோபு மதாமஞ்சி (என்ன பேரு மச்சி?)
* ஜனார்தன உடுப்பி சபாபதி பெரிய ஐயங்கார் ரெட்டி (டேய் நீ எந்த மாநிலத்துக் காரன்?)

நாமும் கொஞ்சம் கிரியேடிவ்-ஆக சுகுமார் சும்மாதான் இருக்கேன் ,  கோபி கத்தரிக்காய், பரமசிவம் பைப்பில்தண்ணிவரலை ,உமாபதி உப்புமாகிண்டி, ஆயிஷா அரிசிக்கடை, விவேக் வீடுகாலி, கோடீஸ்வரன் கூடவரியா, மேனகா மிளகாய்பொடி, கதிர்வேல் காதுகேக்கலை, அகிலா அம்மா அடிச்சிட்டா , விவேக் வீடுபூட்டி , வாசுதேவன் வேலைவேனும் , சபாபதி சம்பளம்பத்தலை, தினேஷ் தூங்குமூஞ்சி , செந்தில் சரியாயிருக்கா
திவ்யா தலைபொடுகு, சங்கரன் சாப்பிட்டாச்சா , டேனியல் டின்னர்வேனும் என்றெல்லாம் தினம்தினம் புதுப்பெயர் வைத்துக் கொள்ளலாம்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 ஐன்ஸ்டீனைப் போலவே இருக்கும் ஒரு குரங்கைப் படம் பிடித்துள்ளார்கள் ..... போட்டோ கலாட்டா..:)

இங்கே பார்க்கவும்....(படம் காபிரைட்) 
குரங்கு என்றதும் கேவலமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.. நம்முடைய டி.ஏன்.ஏ வும் எலியினுடையதும் 90 % மேட்ச் ஆகிறதாம்.உராங் உடான் என்ற குரங்குடன் 96 % மேட்ச் ஆகிறதாம்.  நாலு சதவிதத்தில் நாம் 'மனிதன்' ஆகிவிடுகிறோம்...சினிமாப்படம் எடுக்கிறோம்.. டயலாக் பேசுகிறோம்!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%



ஓஷோ ஜோக்.

மது மறுவாழ்வு மையத்துக்கு ஒருவன் வருகிறான்.டாக்டர் அவனுக்கு நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்து அனுப்புகையில்

"இதைப் பாரப்பா, இனிமேல் கண்டிப்பா குடிக்காதே, தப்பித் தவறி நீ  தவிர்க்க முடியாம குடித்து விட்டால் மறுநாளே வந்து என்னிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விடு" இது நீ மீண்டும் குடிக்காம இருக்க உதவும்" என்றார்.

சிறிது நாள் கழித்து அதே ஆள் வந்தான்.

"டாக்டர், நான் எதுக்கு வந்தேன்னா, நான் நேத்து தவிர்க்க முடியாம குடிக்கும் படி ஆயிடுத்து" என்றான். 
டாக்டர் " ஆனா உன்னைப் பார்த்தா இப்பவே நல்லா தண்ணி அடிச்சுட்டு வந்த மாதிரி இருக்கே?" என்றார்.

"அமாம் டாக்டர்..அனால் இதைப் பற்றி நான் உங்க கிட்ட நாளைக்கு வந்து சொல்வேன்".....


Osho: The drunkard has his own logic!
உங்களுக்காக இன்னொரு ஜோக்.. சிரியுங்கள்...Happy Weekend !

ராணுவ கார்போரல் புதிதாக வந்த ராணுவ வீரர்களிடம் பேசுகிறார்.

முதல் வரிசையில் முதல் ஆளாக நின்று கொண்டிந்த ஒருவனைப் பார்த்து , "ராபர்ட், உன்னைப் பொறுத்த வரை கொடி என்றால் என்ன?"
என்றார்.

அந்த ஆள், "கொடி என்பது வண்ணங்கள் நிறைந்த ஒரு துணி" என்றான்.

"என்ன, என்ன சொன்னாய் நீ? முட்டாளே, தேசத்தின் கொடி! அது தான் எல்லாம்....கொடி என்பது உன் தாய், உன் தாய்! நினைவிருக்கட்டும்.. கொடி உன் மாதா"

பிறகு வரிசையில் அடுத்ததாக நின்றிருந்த ராணுவ வீரனைப்பார்த்து "நீ, சொல், கொடி என்பது என்ன?" என்றார்.

அவன் உடனே " ராபர்ட்டின் அம்மா  சார்" என்றான்.

முத்ரா

Thursday, October 25, 2012

அப்பா...


"
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" ,
 
"தந்தை தாய் இருந்தால்" ...

-இப்படி உணர்ச்சிப் பூர்வமான கவிதைகளில் தந்தைக்கே முதலிடம். இதை சொல்வதற்கு இப்போது காரணம் இருக்கிறது.07 -10 -2012 ,ஞாயிறு
அன்று அப்பா எங்களை எல்லாம் பிரிந்து வைகுண்டப் ப்ராப்தி அடைந்து விட்டார். நீண்ட நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.மருத்துவம் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். கடைசியில் தன் இறுதி மருந்தை (ultimate medicine ) அப்பா எடுத்துக்கொண்டு தன் துன்பங்களில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றுவிட்டார்.

நம்மிடம் ஒரு பொருளைக் கொடுத்து அதனுடன் உறவு ஏற்படுத்தி , அளவளாவச் செய்து , அன்பு செலுத்த வைத்து  பின் திடீரென்று ஒரு நாள் நம்மிடம் இருந்து அதை வெடுக்கெனப்
பிடுங்கிக் கொண்டால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்டது தான் மரணம். நாம் தான் நம் அப்பா நம் அம்மா நம் மனைவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயற்கையோ 'இவர் என்னுடையவர்' என்று கருணையின்றி ஒருநாள் தன் வசம் எடுத்துக்கொண்டு விடுகிறது. ஓஷோவின் புத்தகங்களை அதிகம் படித்ததால் அப்பாவின் மரணம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.'மரணம் என்பது வாழ்வின் மலர்தல்',
மரணம் ஒரு கொண்டாட்டமாக வேண்டும் என்கிறார் ஓஷோ.

குழந்தை எங்கிருந்து வருகிறது என்பதும் இறந்தவர் எங்கே போகிறார் என்பதும் இன்னும் மர்ம முடிச்சுகள் தான்.

இறந்தவுடன் யமலோகம் என்று சும்மா சொல்லிவிட்டாலும் ஜீவன் அங்கே யாத்திரையாக நடந்து செல்ல ஒரு வருடம் ஆகிறது என்கிறது கருட புராணம்.ஒவ்வொரு மாதமும் புத்திரன் அளிக்கும் மாசிக பிண்டத்தை உண்டு அது படிப்படியாகக் கடக்கிறதாம். போகிற
வழியில் ஜீவனுக்கு வழி தெரிய வேண்டி இங்கே தீப தானம்,குளிர் அடிக்காதிருக்க இங்கே கம்பளி தானம் , தாக சாந்தி நீங்க உதுகும்ப தானம். வைதரணி நதியைக் கடக்க இங்கே கோதானம் முதலியவை செய்தல் வேண்டுமாம். இவையெல்லாம் சுத்த ஹம்பக்  என்று
நினைக்கத் தோன்றினாலும் இறந்தவர்கள் பெயரை சொல்லியாவது மனிதனை தானம் செய்விக்கத் தூண்டும் உத்திகள் தான் இவை.என்ன, இந்தத் தானத்தை எல்லாம் சுமோ வீரர்கள் போல வயிறை வளர்த்து வைத்திருக்கும் ப்ரோகிதர்களுக்குக் கொடுக்காமல் உண்மையிலேயே
கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் இறந்து விட்டால் 'அடடா அவர் இருந்த போது இன்னும்  நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கலாமே?"என்ற ஆதங்கம் தோன்றுவது இயல்பு தான். ஆனால் இறந்து விட்ட ஒருவருக்காக நாம் என்ன செய்ய முடியும்? அது நம் கூண்டை விட்டு அகன்று விட்ட, இனிமேல் எப்போதும் திரும்பி வராத பறவை.என்னதான் தத்துவம் பேசினாலும் நமக்கு நெருக்கமான ஒருவரது இழப்பு நம்மை எப்படி நிலைகுலைய வைத்து விடுகிறது? 

அப்பேர்ப்பட்ட பட்டினத்தாரே

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்ய 
இருகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

என்று கதறுகிறார். அன்னையின் மரணத்தைப் பார்ப்பதே கொடுமை என்றால் பெற்ற மகனின் மரணத்தைப் பார்க்கும் கொடுமை வந்துவிட்டது பாட்டிக்கு.என்ன செய்வது?

அப்பாவின் மரணத்திற்கு  பட்டினத்தார் செய்யுள் எழுதியதாய்த்  தெரியவில்லை...நாம் எழுதி விடுவோம்...

மன்மதனோ மாதவனோ மன்னனும் தானோஇவன்
என்மகனோ என்றுமிக இன்புற்று -தன்மனதில்
களிப்புடன் நான் பிறக்கையிலே கையேந்தும் தந்தைக்கோ
குளிப்பாட்டி சடங்கு செய்வேன்!

தோள்மீதும் மார்மீதும் தூக்கி எனைசுமந்து
மாளாமல் அனுதினமும் அரவணைத்து- ஆளாக்கப்
பள்ளிக்குப் போயமர்த்தும் தந்தைக்கோ இன்றுயான்
கொள்ளிதனைக் கையேந்து வேன்.

கேட்ட பொழுதிலெல்லாம் காசுதந்து என்னிதயம்
வேட்டதெல்லாம் அன்புடனே விளைவித்து -நாட்டமுடன்
அள்ளி அரவணைத்த அத்தனுக்கோ இன்றுயான்
எள்ளெடுத்து  இறைத்திடுவேன்

உள்ளுடலின்  கருப்பைதனில் உளமார சுமந்திட்ட
நல்லகத்தாள் அன்னைதனை மிஞ்சிடவே -உள்ளமெனும்
கருப்பையில் எனையிருத்தி காலமெல்லாம் சுமந்தவர்
க்கோ
தருப்பையை விரலேந்து வேன்.

நானுலகில் உதித்திடவே உயிரளித்து என்னிடத்தில்
தேனொழுகும் தண்மொழிகள்  உரைத்திட்டு -நான்விரும்பும்
பண்டமெல்லாம் எனக்களித்த பாசமிகு தந்தைக்கோ
பிண்டமதைப் பரிமாறு வேன்.

அறிவெல்லாம் எனக்களித்து அரவணைத்து யான்கொண்ட
குறையெல்லாம் கருதாமல் காத்திருந்து -பரிவுடனே
வாத்சல்யம் காட்டியிவ
ண் வாழ்ந்திருந்த அப்பனுக்கோ
தீச்சட்டி கரமேந்து வேன்.

நடைகொடுத்தாய் நாலும் கொடுத்தாய் நான்வாழ நல்லோர்
படை கொடுத்தாய் பாயதனில் பணிந்து நின்பதத்தில்
உடைகொடுத்த  உயிரன்னை உவந்தணிந்த தாலிக்கும்

விடைகொடுத்தாய் பாவியிங்கே விழைந்திடவும்  வேறுளதோ!

வாசகர்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கவும்.



  சமுத்ரா

Friday, October 5, 2012

கலைடாஸ்கோப் -74

லைடாஸ்கோப் -74 உங்களை வரவேற்கிறது.
Ф

There's Plenty of Room at the Bottom என்கிறார் விஞ்ஞானி ரிசார்ட்ஃ பெயின்மேன்.

மெஷின்கள் எவ்வளவு சிறிதாக இருக்க முடியும்? நமக்கெல்லாம் தெரிந்த மிகச் சின்ன மெஷின் எது?பென்சில் சீவும் மெஷின் என்று சொல்லக் கூடாது :) ... நம் உடலின் செல்கள் கூட ஒருவிதத்தில் மெஷின்கள் தான். இப்போது ஒரு அணுவையே ஒரு மெசினாக மாற்ற முடியாதா என்று யோசித்து வருகிறார்கள். உதாரணமாக கம்ப்யூட்டர் சிப் ஒன்றில் ஆயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்-கள் இருக்கின்றன.ஒவ்வொரு டிரான்சிஸ்டருக்குள்ளும் மில்லியன் கணக்கில் அணுக்கள் இருக்கின்றன. இப்போது ஒவ்வொரு தனித்தனி அணுவையும் நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் மிகச் சிறிய இடத்தில் ஒரு தொழிற்சாலையையே அமைத்து விடலாம். (Lab on a chip !)மெஷின்களை இவ்வளவு சிறியதாக அமைப்பதன் மூலம் மிகப் பெரிய நன்மைகள் விளையும்.

*இப்போது கேன்சர் செல்களை குத்துமதிப்பாக அழிக்க வேண்டி உள்ளது. 'மாலிக்குலார் மெஷின்கள்' வருமேயானால் ஒவ்வொரு கேன்சர் செல்லையும் தனித்தனியாக கண்டுபிடித்து அழிக்கலாம். ஹெச்.ஐ.வி வைரஸ்களையும்!

* குட்டிக் குட்டி மெஷின்கள் அடங்கிய மாத்திரைகளை உட்கொள்ளும் போது அது மிகச் சரியாக எங்கே பிரச்சினை இருக்கிறதோ அங்கே சென்று அதை சரி செய்கிறது.இந்த மெஷின்களை இதயத்தில், ரத்தக் குழாய்களில் ஏற்படும்
அடைப்புகளை சரிசெய்ய உபயோகிக்கலாம்.[அதாவது பிற்காலத்தில் வியாதி வந்தால் டாக்டரையே முழுங்கி விடுவோம்!]

* வைரஸ்கள் பரவுவதையும் கதிரியக்க கழிவுகள் சுற்றுச்சூழலுடன் கலப்பதையும் இந்த குட்டி மெஷின்கள் மிகத் திறமையாக செயல்பட்டு  அ
ழிக்க முடியும்.

இந்த தொழில் நுட்பத்தை நானோ டெக்னாலஜி என்கிறார்கள்.

ஒரு எளிய உதாரணம் சொல்வதென்றால், தொழிற்சாலை ஒன்றின் உற்பத்தியை அதிகரிக்க, மேல்மட்ட நிலையில் அதன் எம்.டி யை சந்தித்து ஆலோசனை செய்யலாம். மீட்டிங் வைக்கலாம்.புரியாத பாசையில் பேசிக் கொள்ளலாம்.சார்
ட்டுகள் வரையலாம்,இண்டஸ்ட்ரியல் எக்ஸ்பெர்ட் களை வரவழைக்கலாம்! இப்போதைய நம் எலக்ட்ரானிக் மற்றும் மருத்துவ சமாச்சாரங்கள் இப்படி தான் இருக்கின்றன. நானோ டெக்னாலஜி என்பது ஒவ்வொரு தொழிலாளியின் வீட்டுக்கும் தனித்தனியே சென்று அவரை சந்தித்து அவர் இப்போது செய்யும் வேலை என்ன? அதை எப்படியெல்லாம்
மேம்படுத்தலாம்.
அதனால் அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன  தொழிற்சாலைக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று எடுத்து சொல்லி அவரை நன்றாக வேலை செய்ய ப்ரைன் வாஷ் செய்வது!இரண்டில் எந்த அணுகுமுறைக்கு அதிக பலன் கிடைக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!
ФФ

பிடித்த ஈமெயில்:

பிரபலமான ஹார்ட் சர்ஜன் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். காரை பழுது பார்த்த மெக்கானிக்,


"டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்...நானும் வா
ல்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்.அடைப்பை சரி செய்கிறேன்.புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்..நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்..அப்படி இருக்கும் போது உங்களுக்கு  மட்டும் எப்படி அதிக பணம்,புகழ்?" என்று கேட்டான்.

சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் ,"நீ சொன்ன வேலைகளையெல்லாம் இஞ்சின் ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்!" என்றார்.

ФФФ

இரண்டு கவிதைகள்:


அப்பா:

ஒருநாள் நான் காலேஜில் இருந்து
பத்து  மணியாகியும் வரவில்லை.
அப்போது எங்கள் வீட்டில் ஃபோனும் இல்லை
என்னிடம் செல்போனும் இல்லை.
அம்மா அழத்துவங்கி இருந்தாள்...
அவளுக்கு அதுதான் சீக்கிரம் வரும்..
அக்கா நொடிக்கொருதரம்
வெளியே வந்து வெறித்துப் பார்த்து
'பச்' என்றாள்..
பாட்டி ஹனுமத் கவசம் சொல்லிக் கொண்டிருந்தாள்...
அண்ணன் 'ஆண்பிள்ளை தானே
வந்திருவான் 'என்றான்..







நான் எப்போதோ  எழுதிக் கொடுத்திருந்த
சிநேகிதன் வீட்டு போன் நம்பரை
குறித்துக் கொண்டு
சட்டையை மாட்டியபடி இருளில் கரைகிறார் அப்பா!


அப்பா ரொம்பவே கம்பீரம்
அவர் மீசை என்ன, மேல்துண்டு என்ன!
மேலே பார்த்தபடி தான் நடப்பார்...
வேட்டி கட்டும் அழகு என்ன?
முன்னே வந்தால் கிராமத்து
ஜனங்கள் விலகி வழிவிடுவார்கள்!
அன்று நான்
ஹாஸ்டல் சுவரேறிக் குதித்து
காலேஜில் என்னை
சஸ்பென்ட் செய்து விட்டார்கள்
முதல்வர் அப்பாவை கூப்பிட்டார்
தன் உயரத்தில் அரை அடி குறைந்து
தாழ்ந்த பார்வை பார்த்து
'எனக்காக மன்னிச்சுங்கங்க ' என்ற
அப்பாவை அன்று தான் பார்த்தேன்!


ФФФФ


சிவா சொன்ன 112 தியானங்களில் ஒன்றைப் பார்ப்போம். (நன்றி : விக்யான் பைரவ் தந்த்ரா -ஓஷோ)

ஒரு பொருளை முழுமையாகப் பார்ப்பது! நாம் ஒரு பொருளை முழுமையாகப் பார்ப்பதே இல்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் முகத்தை மட்டுமே முதலில் பார்க்கிறோம். பிறகு அவர் உடலைப் பார்க்கிறோம். நம் கண்களை முகத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு அசைக்கிறோம். அப்படி இல்லாமல் ஒரு பொருளை அல்லது ஒரு நபரை ஒட்டுமொத்தமாக ஒரேயடியாக முழுமையாகப் பார்க்கவும்.இதை முதலில் கடைபிடிப்பதற்கு கடினமாக இருக்கும். ஏனென்றால் நாம் பகுதிகளைப் பார்க்கவே பழக்கப்பட்டிருக்கிறோம். முழுமையை அல்ல! ஆனால் கடைபிடிக்க கடைபிடிக்க இந்த தியானம் மிகச்சிறந்த பலனை அளிக்கும். 

ஒரு பொருளை முழுமையாக பார்க்கும் போது நம் கண்கள் நகருவதில்லை. எனவே நம் மனமும் நகர்வதில்லை. இதனால் ஒரு தெளிந்த ஸ்திரத்தன்மை நமக்குள் விளைவிக்கப்படுகிறது. (STILLNESS ).திடீரென்று நம்மை நாமே  சந்திக்கிறோம்! ஆச்சரியமாக இந்த முறையில் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்க்கும் போது ஒருவருக்குள் காம உணர்வும் எழுவதில்லை. 

சினிமா ஒன்றை இந்த முறையில் பார்க்க முயற்சிக்கவும். மிகவும் கஷ்டம் தான். திரையில் பொதுவாக நாம் ஹீரோ , அவர் முகம்,,,கார், வில்லன்... ஹீரோயின் என்றால் ....:):):) ஹி ஹி ..அப்படிப் பார்க்காமல் திரையையே ஒட்டு மொத்தமாக கண்களை அசைக்காமல் பார்ப்பது!!!! இப்படிப் பார்ப்பதால் படத்துடன் ஒன்ற முடியாது. அதனால் என்ன? அந்த குப்பை மசாலாப் படத்துடன் ஒன்றவில்லை என்றால் என்ன குடியா முழுகி விடும்???

ФФФФФ


பச்சை நிறமே பச்சை நிறமே,,,,என்றெல்லாம் நாம் அவ்வப்போது காதலியைப் பார்த்துப் பாடுகிறோம்.உண்மையில் நிறம் என்பதே இல்லையாம்!இந்தப் படத்தைப் பாருங்கள்...இடப்பக்கம் இருப்பது நமக்குத் தெரிகிற உலகம். வலப்பக்கம் இருப்பது நம் வீட்டு நாய்க்குட்டிக்குத் தெரியும் உலகம்...எது உண்மை?நிறம் என்பது நம் கண்களின் ஏற்படும் வினைகள் தான்...

கீழே உள்ள படம் நாம் பச்சை நிறமே பச்சை நிறமே என்று பாடிய இயற்கை இன்ப்ரா ரெட் அலைநீளத்தில் எப்படித் தெரியும் என்று காட்டுகிறது.


எல்லாமே மாயை தான். நிறங்கள் உட்பட..அடுத்தமுறை உங்கள் கணவர் வாங்கி வந்த டிரெஸ்ஸை 'அய்யே கலரே சரியில்லை' என்று திருப்பிக் கொடுக்கச் சொல்ல வேண்டாம்!

ФФФФФФ


சில ஓஷோ ஜோக்குகள்....நன்றாக சிரித்து வாழ்வைக் கொண்டாடுங்கள்.... ஜோக்குகள் மூலம் :- தம்மபதம் -VII

டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்தவன்.சர்ச்சில் முழந்தாளிட்டு தன்னை ஆசிர்வதிப்பதற்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறான்."ஆறு வீடுகள் தந்திருக்கிறாய், இறைவா, அதற்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால் இன்னும் ஒன்றிரண்டும் எனக்குத் தரலாமில்லையா? ரோல்ஸ்ராய்சும் அந்த ஆறு கெடிலாக் கார்களும் சரிதான்.நன்றி.ஆனால் எனக்கு ஓரிரண்டு படகுகள் இருந்தால் நன்றாக இருக்குமே! என் சொத்தாக இருக்கும் பாங்குகளுக்கு நன்றி.இன்னும் ஐந்து பாங்குகளுக்கு நான் முதலாளியாக இருந்தால் நன்றாக இருக்குமே!

அவனுக்குப் பக்கத்தில் உருவத்தில் சிறிய ஒருவன் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.கடவுளிடம் பேசினான். "எனக்குக் கொஞ்சம் ரொட்டியும் ஒரு சின்ன வேலையும் கொடு, கடவுளே! உனக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்"

டெக்சாஸ்காரன் உடனே ஒரு நூறு டாலர் நோட்டை உருவினான். அவனிடம் நீட்டி ,'இந்த சில்லறை விவகாரத்துக்கெல்லாம் கடவுளை போய்த் தொந்திரவு செய்கிறாயே!" என்று கடிந்து கொண்டான்.

*************

ஓர் ஏழை. வீட்டுக்கு வருகிறான். மனைவியிடம் ,"பிளின்ட்ஸ் சமைக்கிறாயா?" என்று கேட்டான்.

"சரிதான்." அவள் சொன்னாள். "அது கொஞ்சம் செலவாகுமே. பாலாடைக் கட்டி வேணும்."

"அதை விட்டுட்டுப் பண்ணலாம் இல்லியா?"

"அப்படியும் முட்டை வேணுமே."

"அதையும் விட்டுடலாமே"

"சரி. ஆனா வெண்ணை வேணும். லவங்கம் வேணும்.சர்க்கரை வேணும்."

"இதெல்லாம் இல்லாம பண்ணினா என்ன?"

அப்படியே அவளும் செய்தாள்.சாதாரண கேக் போன்ற ஒன்று.மாவும் தண்ணீரும் தவிர அதில் வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதை சுவைத்துப் பார்த்தவன் , "ஏன் இந்தப் பணக்காரங்க எல்லாரும் பிளின்ட்ஸ் -சுக்கு இந்த அடி அடிச்சுக்கரானுகளோ!" என்றான்.

***************

ரயில் நயாகரா நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. மேரியும் பாபியும் மேல் பர்த்தில் இருக்கிறார்கள். "பாபி நமக்கு கல்யாணம் ஆகிப்போச்சுங்கறதையே நம்ப முடியல்லே!" என்கிறாள் மேரி.

கீழ் பெர்த்தில் இருந்து தூக்கக் கலக்கத்தில் ஒரு குரல் , "அடாடா , சீக்கிரம் அவளை நம்ப வையப்பா .நாங்க தூங்கணும்"...

முத்ரா