இந்த வலையில் தேடவும்

Monday, May 30, 2011

அணு அண்டம் அறிவியல் -27

அணு அண்டம் அறிவியல் -27 உங்களை வரவேற்கிறது

ஹைசன்பெர்க்-இன் நிச்சயமில்லாத் தத்துவத்தின் (Uncertainty Principle ) ஃபினிஷிங் நோட்ஸ்:

நிச்சயமில்லாத் தத்துவம் இயற்பியல் உலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக DETERMINISM எனப்படும் தீர்க்க தரிசனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது. ஒரு சாலையில் முதியவர் ஒருவர் நடந்து போவதைப் போல நேரான , சீரான நிச்சயிக்கத்தக்க பாதையை இயற்கை பெற்றுள்ளது என்று நியூட்டன், லாப்லாஸ் போன்ற வி ஞ்ஞானிகள் தீர்க்கமாக நம்பினார்கள்..ஆனால் குவாண்டம் இயற்பியலின் முடிவுகள் வி ஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருங்கே ஏற்படுத்தின. இயற்கையின் பாதை சாலையில் ஒரு குழந்தை நடந்து செல்வது போல துல்லியமாக தீர்மானிக்க முடியாமல் வளைந்து நெளிந்து கணத்திற்கு கணம் மாறுபடுவதாக Dynamic - ஆக இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வந்தது. சில வி ஞ்ஞானிகள் இதை எதிர்த்தார்கள்..சிலர் எரிச்சல் அடைந்தார்கள்..சிலர் விரக்தி அடைந்தார்கள்..ஆனால் அதற்காக இயற்கை அதன் இயல்பை மாற்றிக் கொண்டு விடுமா என்ன?

படம் 2 ஐப் பாருங்கள். மேலே உள்ள 'P ' என்ற புள்ளியை நாம் இரண்டு விதங்களில் அடையலாம். வேகத்தில் மிகக் குறைந்த வேறுபாடுகளுடன் மலை மீது மெதுவாக ஏறுவது போல.. ஆனால் இப்படிச் செய்தால் நம் இருப்பிடம் மிகப் பரவலாக ஆகி விடுகிறது. அதாவது வேகத்தில் நிச்சயமின்மை குறைவாக இருக்கும் போது இருப்பிடத்தில் நிச்சயமின்மை அதிகரிக்கிறது. இரண்டாவது விதத்தில் மலையின் அடிவாரத்தில் இருந்து பயங்கர வேகத்துடன் திடீரென்று மேலே எழும்புவது. இப்போது இருப்பிடத்தில் நிச்சயமின்மை மிகக் குறைவாக இருக்கும்..ஆனால் திசைவேகம் கண்டபடி அதிகரிப்பதால்
திசைவேகத்தின் நிச்சயமின்மை கணிசமாக இருக்கும். ஆக மொத்தம் delta p x delta x = h



இயற்கை தன் இரண்டு பண்புகளை ஒரே நேரத்தில் தவறின்றி அளவிடுவதை அனுமதிப்பதில்லை. மனிதனின் அளவிடுதலில் உள்ள எல்லைகள் (limitations ) காரணமாக நிச்சயமின்மை ஏற்படுகிறதா
என்றால் இல்லை. இது இயற்கையின் உள்ளார்ந்த பண்பு. அதாவது ஒரு குவாண்டம் துகள் ஒரே நேரத்தில் துல்லியமான உந்தத்தையும் இருப்பிடத்தையும் கொண்டிருப்பதில்லை. இது எப்படி என்றால் ஒருவரின் இயல்பான முகத்தையும் போடோவையும் ஒன்றிணைப்பது போலத்தான்.
போட்டோ எடுக்கிறார்கள் என்று தெரிந்த உடன் ஒருவரின் இயல்பான முகம் மாறி கொஞ்சம் செயற்கையான முகம் வந்து விடுகிறது. (துளி டென்ஷன் கூட) இயல்பான முகம் இருக்கிறது ஆனால் அதை நேருக்கு நேர் அப்படியே படம் பிடிக்க முடியாது.

ஹைசன்பெர்க் இன் இந்தத் தத்துவம் இயற்பியலில் நிறைய புதிர்களை விடுவித்தது. அணுக்கள் ஏன் மிகப் பெரியவையாக இருக்கின்றன (என்னது?) என்பதற்கான விடையைத் தந்தது.(ஆமாம் அணுக்கருவுடன் ஒப்பிடும் போது அணு மிகப் பெரியது) அணுவினுள் ஏன் தேவை இல்லாமல் பரந்த அசாதாரணமான வெற்றிடம் இருக்க வேண்டும்? ப்ரோட்டான்களை
அணுக்கருவிற்குள் அமுத்தும் போது அவற்றின் இருப்பிடத்தில் உள்ள துல்லியத்தன்மை அதிகரிக்கிறது. எனவே அவற்றின் உந்தத்தில் (mV ) உள்ள துல்லியத்தன்மை குறைவாக இருக்க வேண்டும். எனவே அவை அதிக வேகத்துடன் அதிர வேண்டும்.ப்ரோட்டான்களின் நிறை அதிகமாக இருப்பதால் அவை குறைவான எதிர்ப்பையே (V ) காட்டுவதால் அவற்றை அணுக்கருவிற்குள் வைக்க முடிகிறது..ஆனால் எலக்ட்ரான்கள் ப்ரோடான்களை விட 2 ஆயிரம் மடங்கு சிறியவை என்பதால் அவற்றை அணுக்கருவிடம் நெருங்கிக் கொண்டு செல்லும் போது அவை ப்ரோட்டான்களை விடவும் ஆயிரம் மடங்கு அதிக வேகத்தில் (V ) திமிர வேண்டி இருக்கிறது
(ப்ரோடானின் நிறை x ப்ரோடானின் வேகம் = எலக்ட்ரானின் நிறை x எலக்ட்ரானின் வேகம் ) எனவே எலக்ட்ரான்கள் அணுக்கருவிற்குள் இருந்தால் அவை ப்ரோடான்களை விடவும் ஆயிரம் மடங்கு வேகத்தில் இயங்க வேண்டியிருக்கும். இந்த வேகத்தில் அவை அணுக்கருவையே சிதைத்து விட்டு வெளியே ஓடி விடக்கூடும்.

மேலும் ப்ரோடான்களை அணுக்கருவுடன் பிணைக்கும் அணுக்கரு வலிய விசை எலக்ட்ரான்களை அணுக்கருவுடன் பிணைக்கும் மின் காந்த விசையை விட மிக மிக வலுவானது. எனவே உள்ளே ப்ரோட்டான் ஒன்று திமிறினால் அதை அணுக்கரு வலிய விசை அடக்கி விடும். எலக்ட்ரான் அந்த வேகத்தில் அதிர்ந்தால் அதை மின் காந்த விசை தாக்குப் பிடிக்க முடியாது.

குழந்தைகளை (எலக்ட்ரான்கள்) சிறிய இடத்திற்குள் நாம் அடைத்து வைத்தால் அவர்கள் திமிருவது போல தான் இது .பெரியவர்கள் (ப்ரோட்டான்கள்) ஒரே இடத்தில் அமைதியாக இருக்க முடியும்,
குழந்தைகள் அதிகமாக திமிறவும் கூடாது அதே சமயம் நம் பார்வையை விட்டு விலகியும் போகக் கூடாது. எனவே ஒரு பெரிய வட்டம் (அணு) வரைந்து இதற்குள்ளாக விளையாடுங்கள் என்று சொல்லி விட்டால் அவை சமர்த்தாக இருக்கும் அல்லவா?

எலக்ட்ரான்களை அணுக்கருவிடம் இருந்து அபாரமான தூரங்களில் (உதாரணத்திற்கு கால்பந்து அணுக்கரு என்றால் கால்பந்து மைதானம் தான் அணு) தள்ளி வைப்பதால் அவற்றின் உந்தத்தின் துல்லியத்தன்மையை அதிகரிக்க முடியும்..அதாவது உந்தத்தில் ஏற்படும் நிச்சயமின்மையை குறைக்க முடியும் ..எனவே அவை இப்போது மெதுவான வேகத்திலேயே நகரும்.. இந்த வேகம் அணுக்கரு அதன் மீது செலுத்தும் மின் காந்த விசையை விடுவித்துக் கொண்டு எலக்ட்ரான் தப்புவதற்கு போதுமானதாக இல்லாததால் எலக்ட்ரான்கள் அணுவிடமே அடைப்பட்டு இருக்கும்.

சில சமயங்களில் வித்வான்கள் மிகச் சிறிய புல்லாங்குழல் அல்லது பீப்பீ (வழக்கமான அளவில் பாதி) வைத்துக் கொண்டு வாசிப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். [நிறைய பேர் ஏன் ஏழு ஸ்வரங்கள் தான் உள்ளன என்று கேட்கிறார்கள். (உண்மையில் பன்னிரண்டு) இது கூட குவாண்டம் மெக்கானிக்ஸ் தான். ஒரு வாத்தியமோ அல்லது நம் குரல் வளையோ (நம் குரல்வளை கூட ஒரு பீப்பீ தான்) எல்லா அதிர்வெண்களிலும் தொடர்ச்சியாக சும்மா கண்டபடி அதிர முடியாது. நம் குரல்நாண் அல்லது ஒரு வாத்தியம் சில குறிப்பிட்ட அதிர்வெண்களில் தான் DISCRETE -ஆக அதிர முடியும். இந்த அதிர்வெண்களில் ஒலிக்கும் ஒலியை நாம் ஸ்வரம் என்கிறோம்.
சாதாரணமாக நாம் பாட்டு கிளாஸ் போய் உட்கார்ந்து குருதட்சிணை எல்லாம் கொடுத்து விட்டு 'ஸா' என்று ஆரம்பித்தால் நம் குரல்வளை அதிர்ந்து அதில் இருந்து வெளிப்படும் ஒலி 240 ஹெர்ட்ஸ் இல் ஒலிக்கும். (அதாவது ஒலி அலை நொடிக்கு 240 தடவை அதிரும்) அடுத்து 241 ஹெர்ட்ஸ் எல்லாம் இல்லை. ராகம் மாயா மாளவ கௌளை என்பதால் அடுத்து 'ரீ' பாடும் போது அது 270 ஹெர்ட்ஸ் இல் ஒலிக்கும். அடுத்து 'க' - 300 ஹெர்ட்ஸ்..இப்படியே போய் மேல் ஸ்தாயி ஷட்ஜத்தில் நிற்கும் போது 480 ஹெர்ட்ஸ் இல் ஒலிக்கும். (தொடங்கிய அதிர்வெண்ணில் இரண்டு மடங்கு) இப்போது அதிர்வெண் 510 ஹெர்ட்ஸ் என்றால் அது சுருதி கூட்டப்பட்ட 'ரி' யாக ஒலிக்குமே தவிர அது வேறு ஸ்வரமாகக் கேட்காது. இந்த அதிர்வெண் வரம்பை (240 - 480 ஹெர்ட்ஸ் ) நாம் ஒரு ஆக்டேவ் (Octave ) (கர்நாடக மொழியில் கட்டை) என்கிறோம்.மொத்தம் ஐந்து கட்டை சுருதியில் சாதாரணமாக ஒருவரால் பாட முடியும்.ஒவ்வொரு கட்டையிலும் இந்த பன்னிரண்டு ஸ்வரங்களே மீண்டும் மீண்டும் ஒலிக்கும்.


எலக்ட்ரான்கள் கூட அலைகள் தான் . அவை கூட அணுக்கருவை சுற்றி ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் மட்டுமே அதிர முடியும் என்று குவாண்டம் இயற்பியல் சொல்கிறது. எப்படி ஒரு குறிப்பிட்ட ஸ்வரங்களை மட்டுமே நம்மால் கேட்க முடியுமோ அதே போல் எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட ஆற்றல் மட்டங்களில் மட்டுமே அணுவின் இடம் பெற முடியும்.

புல்லாங்குழலின் நீளத்தை பாதியாகக் குறைக்கும் போது அதில் ஒலிக்கும் ஸ்வரங்களின் PITCH (சுருதி) அதாவது அதிர்வெண் அதிகமாக இருக்கும் . ஹைசன்பெர்க் இன் விதியின் படி குறுகிய இடத்தில் அலைகளை அடைக்கும் போது அவை தம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக அதிகமான அதிர்வெண்களில் இன்னும் நெருக்கியடித்துக் கொண்டு அதிரும்.

அணுக்கள் ஏன் சிதைந்து விடுவதில்லை என்று ஹைசன்பெர்க் தத்துவம் இவ்வாறு விளக்கியது..அதே சமயம் ஏன் வானத்து நட்சத்திரங்கள் சிதைந்து விடுவதில்லை என்றும் அது விளக்கியது. ஈர்ப்பு என்பது ஒரு அபார சக்தி. நட்சத்திரங்கள் எரிந்து கொண்டிருக்கவில்லை என்றால் அவற்றின் சுய ஈர்ப்பினாலேயே அவை சுருங்கி சிதைந்து காணாமல் போய் விடும். கோள்கள் எல்லாம் கோளமாக இருப்பதற்கும் இந்த சுய ஈர்ப்பு தான் காரணம். இது ஒரு பலூன் மாதிரி இருக்கிறது. பலூனில் அடைக்கப்பட்ட காற்று அதை பெரிதாக்க முயற்சிக்கிறது. பலூன் சவ்வின் டென்ஷன் பலூனை சிறியதாக்க முயற்சிக்கிறது.
இவை இரண்டுக்கும் இடையே ஒரு BALANCE இருக்கும் வரை பலூன் உடையாமல் இருக்கும். ஒரு விண்மீனின் சுய ஈர்ப்பு அதை சிதைக்க முயற்சிக்கிறது.அதே சமயம் அதன் எரிபொருள் எரிந்து
வெளியாகும் சக்தி அதை விரிவடையச் செய்கிறது . இது இரண்டுக்கும் Balance இருக்கும் வரை விண்மீன் அப்படியே எரிந்து கொண்டிருக்கும். எரி பொருள் தீர்ந்து விட்டால் விண்மீனின் கடைசி காலம் ஆரம்பிக்கிறது. விண்மீன் தன் ஈர்ப்பை எதிர்க்க யாரும் இல்லாததால் தனக்குள் தானே சுருங்க ஆரம்பிக்கிறது. எல்லாம் அமுக்கப்படுவதால் வெப்பம் பயங்கரமாக அதிகரிக்கிறது. இந்த வெப்பம் எலக்ட்ரான்களை அணுவை விட்டு ஓடச் செய்கிறது. எலக்ட்ரான்கள் தான் அமுக்கப்படும் போது அதை எதிர்க்கும் என்று பார்த்தோம். அப்படி இந்த எலக்ட்ரான்கள் ஈர்ப்புக்கு ஒரு தற்காலிக எதிர்ப்பைக் காட்டி விண்மீன் சிதைவதைத் தடுக்கின்றன. இப்படிவிண்மீன் சுய ஈர்ப்பை எலக்ட்ரான் எதிர்ப்பு தடை செய்து நிறுத்தி வைத்த விண்மீன்கள் 'வெள்ளைக் குள்ளன்கள் ' (white dwarf ) எனப்படுகின்றன. இந்த வெள்ளைக் குள்ளன் தற்காலிகமானது தான்..ஈர்ப்பு அழுத்த அழுத்த எலக்ட்ரான்கள் பயங்கர வேகத்தில் சூடாகி அதிருகின்றன, கிட்டத்தட்ட அவை ஒளி வேகத்தில் உள்ளே நகரும் போது ரிலேடிவிடி உள்ளே வருகிறது.எலக்ட்ரான்களின் நிறை அதிகரித்து அவை தம் சண்டை போடும் சக்தியை மெல்ல மெல்ல இழக்கின்றன. ஒரு வெள்ளைக் குள்ளன் சந்திரசேகர் நிறையை விட அதிகமாக இருந்தால் அது கடைசியில் சுருங்கி ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக மாறி நம் பார்வையில் இருந்து மறைந்து விடும்.

இப்படியாக ஹைசன்பெர்க் இன் நிச்சயமின்மை அணுக்களில் இருந்து அண்டம் வரை எல்லாவற்றையும் விளக்குகிறது


முத்ரா

Tuesday, May 24, 2011

கலைடாஸ்கோப் - 19

லைடாஸ்கோப் - 19 உங்களை வரவேற்கிறது

இயற்கையின் மடியில்- 2
=========================

ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு ஒரு சவாலாக இருப்பது leeches எனப்படும் ரத்தம் குடிக்கும் அட்டைகள். என்ன தான் ஷூ, சாக்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தாலும் எப்படியோ உள்ளே புகுந்து தோலில் ஒட்டிக் கொண்டு ஓட்டை போட்டு ரத்தம் குடித்து விடும். அட்டைகளில் (மற்ற புழுக்களைப் போலவே) ஆண் பெண் என்று தனியாக கிடையாது. எல்லாம் அர்த்த நாரி தான்..(ஆண் பெண் இரண்டு இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே அட்டையில் இருக்கும்.மனிதர்களிலும் இப்படி இருந்தால்? நினைக்கவே
பயமாக இருக்கிறது ) மனிதர்களின் உடலில் எப்படியோ ஒட்டிக் கொள்ளும் இவை முதலில் நமக்கு அனஸ்தீஸியா கொடுத்து விடுகின்றன. எனவே அட்டை கடிக்கிறது என்று நமக்குத் தெரியாது. பிறகு இன்ஜெக்ஷன் போடுவது மாதிரி நம் தோலைத் துளைத்து வேண்டிய மட்டும் ஜோராக ரத்தம் குடிக்கின்றன. மனித ரத்தத்திற்கு உள்ள ஒரு பண்பு
coagulation எனப்படும் வெளியே வந்தால் உறைந்து போய் விடும் தன்மை. இந்த அட்டைகள் இந்த உறைதலைத் தடை செய்யும் anti - coagulation agent ஆன ஹிருடின் என்ற வேதிப் பொருளை ரத்தத்தில் கலந்து விடுகின்றன. எனவே சூடான ரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் அட்டைகளுக்கு விருந்தாகிறது. அட்டைகளின் எச்சிலில் உருவாகும் இந்த ஹிருடின் மருத்துவத்தில் மிகவும் பயன்படுகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிகளின் போது ரத்தக் குழாய்களை வெட்டி ஓட்டும் போது ரத்தம் உறைந்து விடாமல் இருக்க அட்டைகள் உதவுகின்றன. சில நாடுகளில் அட்டைகள் பியூட்டி பார்லர்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. முகத்தில் அட்டையைக் கடிக்க விட்டு
ரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு முகம் பிரகாசமாகிறதாம் . அட்டைகள் வாழ்க! மனிதனால் தான் யாருக்கு என்ன உபயோகம் என்று தெரியவில்லை. ரஜினி சொல்வது போல மீன் செத்தால் கருவாடு நீ செத்தால் வெறும் கூடு !

PEDICURE எனப்படும் பாதங்களை அழகு படுத்தும் கலையில் மீன்களை உபயோகிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

BIRD WATCHING எனப்படும் பறவை வேடிக்கை பார்த்தலுக்கு அதிகாலையில் அழைத்துச் சென்றார்கள். நமக்கெல்லாம் ஒரு ஏழெட்டு பறவைகளுக்கு மேல் தெரிந்திருக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.
காக்காய், குருவி, குயில் , மயில் ,மைனா. புறா, கொக்கு இது மாதிரி.. அந்தக் காட்டில் மட்டும் நூற்றுக்கணக்கான வேறுபட்ட பறவை இனங்களை அடையாளம் காட்டினார்கள். Red vented bulbul
Racket tailed Drongo (இதன் இறக்கை நீண்டு டென்னிஸ் பேட் மாதிரி இருக்குமாம்..படம்)Red-whiskered Bulbul என்றெல்லாம் இது வரை நாம் கேள்விப்படாத பெயர்கள். ஒரு பறவை brain fever -brain fever என்று (மூன்று ஸ்வரங்களில்)கத்துவது போல இருக்குமாம்..அதன் பெயர் BRAIN FEVER BIRD ..
Racket tailed Drongo



இன்னொரு பறவையைப் பற்றி சொன்னார்கள். அதன் பெயர் Lyre Bird ..(Australia) இதன் விசேஷம் என்னவென்றால் இது தன்னைச் சுற்றி கேட்கக்கூடிய இயற்கை மற்றும் செயற்கை ஒலிகளை அப்படியே
மிமிக்ரி செய்கிறது. பிற பறவைகளின் குரல், கேமராவின் ஷட்டர் ஒலி, ஆம்புலன்ஸ் சைரன், விமானத்தில் சப்தம், கிட்டார் ஒலி, சில சமயம் மனிதக் குரலைக் கூட மிமிக்ரி செய்கிறதாம். காட்டில் என்னவெல்லாம் நடந்தது என்று அறிந்து கொள்ள இந்தப் பறவையின் மிமிக்ரியை பயன்படுத்துகிறார்கள்.. தீவிரவாதிகள் சிலர் காட்டில் தங்கியிருந்து அவர்கள் பேசினால் அதைக் கூட இந்த பறவை மிமிக்ரி செய்யக் கூடும் என்பதால்.(படம்)

மிமிக்ரி மாஸ்டர்


கூண்டுக்குள் அடைத்து ஜோதிடம் பார்க்க வைக்கார்களே? எஸ்..கிளி..அதற்கு ஆங்கிலத்தில் என்ன? PARROT என்று சொன்னால் தவறு..அதன் பெயர் PARAKEET ..Parrot என்பது கொஞ்சம் பெரிய சைஸ் கிளி.இது இந்தியாவில் இல்லை.

காட்டுக்குள் அழைத்துச் சென்று காடுகளை எப்படி சர்வே செய்வது, மரத்தை அணைத்துக் கொண்டு அதன் அகலத்தைக் கணக்கிடுவது ,காடுகள் எந்த அளவு அடர்த்தியாக இருக்கின்றன என்று சொல்லும் Canopy யை எப்படி அளப்பது , GPS கருவியை எப்படி உபயோகப்படுத்துவது என்றெல்லாம் விளக்கினார்கள்.யானை போடும் லத்தியின் அளவை வைத்துக் கொண்டு அதன் வயதைக் கணக்கிட முடியுமாம். (யானையில் ஆசன துவாரம் அதற்கு வயது ஆக ஆக அதிகரித்துக் கொண்டே வருவதால் ) யானை லத்தியின் சுற்றளவு முப்பது செ.மீ ஆக இருந்தால் யானைக்கு வயது முப்பது..சிம்பிள் !

புலிகளை எப்படி சென்சஸ் செய்வது என்று விளக்கினார்கள். புலிகளிடம் ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு போய் 'உங்களுக்கு ரெண்டு பொண்டாட்டியா'? என்றெல்லாம் கேட்க முடியாது இல்லையா? மேலும் எல்லாப் புலிகளும் பார்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் எப்படி கணக்கிடுவது?

பிரிட்டிஷ் காலத்தில் புலிகளை கொன்று எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு பரிசுகள் தருவார்களாம். அந்தக் கணக்கின் படி பார்த்தால் இந்தியா சுதந்திரம் அடைந்த போது சுமார் நாற்பதாயிரம் புலிகள் இந்தியாவில் இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த புதிதில் பெங்களூர் பகுதியில் மாதத்தில் இரண்டு புலிகள் பிடிபடுமாம்..இது படிப்படியாகக் குறைந்து இந்திரா காந்தி காலத்தில் 2700 என்ற எண்ணிக்கைக்கு வந்து விட்டது. புலிகள் அழிந்து வருவதை உணர்ந்த இந்திரா காந்தி அதை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவித்து (1973 ) புலிகளைக் காப்பாற்ற
PROJECT TIGER என்ற திட்டத்தைத் தொடங்கினார்.இப்போது இந்தியாவில் வெறும் 1700 புலிகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலத்தில் புலிகளை PUG MARK எனப்படும் அதன் நகக் கீறல்களை வைத்துக் கொண்டு எண்ணினார்கள். 'இது என் ஏரியா, உள்ளே வராதே' என்று புலிகள் மரங்களில் ஆழமாகக் கீறும் அடையாளங்கள் அவை. புலிகள் பெரும்பாலும் தாங்கள் மார்க் செய்த பகுதிக்குள் மட்டும் வசிக்கும் என்பதால் அதை வைத்துக் கொண்டு புலிகளின் எண்ணிக்கையை கணக்கிடலாம். ஆனால் இந்த டெக்னிக் அவ்வளவு சரியானதல்ல என்கிறார்கள்.

புலிகளின் சென்சஸ் பெரும்பாலும் கோடைக்காலம் ,இலையுதிர் காலங்களில் செய்யப்படுகிறது. மழைக் காலங்களில் தாவரங்கள் அடர்ந்து வளர்ந்து புலிகளை மறைக்ககூடும் என்பதால்.

சில பேர் ஒரு புலி ஒரு நீர்நிலையில் இருபத்து நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் குடிக்க வரும் என்று நம்பினார்கள். மேலும் அது பெரும்பாலும் ஒரே நீர்நிலையில் மட்டுமே தண்ணீர் குடிக்குமாம்.கோடைக் காலத்தில் நீர்நிலைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் அந்த நீர் நிலையை 24 மணிநேரத்திற்கு தொடர்ந்து கண்காணித்து எத்தனை புலிகள் வருகின்றன என்று கணக்கு போட்டார்கள்..ஆனால் இந்த டெக்னிக்கும் இப்போது தவறானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

புலிகளின் பாத சுவடுகளை வைத்து கணக்கிடுவது இன்னொரு முறை. தெளிவான பாத சுவடு ஒன்று தென்பட்டால் அதில் மெழுகை ஊற்றி ஒரு படிவம் எடுத்துக் கொள்ள வேண்டியது. புலிகளின் பாத சுவடுகள் பெரும்பாலும் ஒன்றுக்கு ஒன்று வேறுபடும் என்பதால் இந்த முறை உபயோகப்படுத்தப் படுகிறது.

காடுகளை GRID எனப்படும் பாகங்களாகப் பிரித்துக் கொண்டு அதில் எத்தனை புலிகள் தட்டுப்படுகின்றன என்று எண்ணுவது இன்னொரு முறை.ஒரு GRID இல் இருக்கும் புலி இன்னொன்றுக்குப் போகாதா என்றால் சாதாரணமாகப் போகாது.மேலும் ஒவ்வொரு GRID டிலும் சர்வேயர்கள் ஒரே சமயத்தில் சென்சஸ் நடத்துவார்கள்.

இன்னொன்று CAMERA TRAP என்று அழைக்கப்படும் ஒரு முறை. புலிகள் அதிகம் நடமாடும் இடங்களில் நேர்க்கோட்டில் இரண்டு கேமராக்களை மாட்டி விட வேண்டியது. கேமராக்களுக்கு இடையே ஒரு மெல்லிய அகச் சிவப்பு ஒளி நேர்க்கோட்டில் போய்க் கொண்டிருக்கும்..புலி இடையே வந்தால் இந்த ஒளி சிறிது நேரம் மறைக்கப்பட்டு PHOTO ELECTRIC EFFECT எனப்படும் ஒளி மின் விளைவினால் கேமராக்கள் உடனே இயங்கி சர் சர் என்று புலியை பல கோணங்களில் படம் பிடித்துத் தள்ளும்..(புலியின் முழு உருவம் கிடைக்க வேண்டும் என்பதால்) மறுநாள் காலையில் கேமராக்கள் எடுக்கப்பட்டு புலியின் புகைப்படங்கள் ஒரு PATTERN MATCHING SOFTWARE க்கு அனுப்பப்படும். ஒவ்வொரு புலிக்கும் அதன் உடலில் உள்ள கோடுகள் வேறுபடும் என்பதால் கம்ப்யூட்டர் இரண்டும் ஒரே புலியா இல்லை வேறு வேறா என்று சொல்லி விடும்.


இத்தனை விஷயங்களையும் முடித்துக் கொண்டு திரும்பி வரும் போது முள்ளைய்யன கிரி என்று அழைக்கப்படும் மலைக்கு சென்றோம். Awesome ! இங்கே பாபா புட்டன கிரி அல்லது தத்த பீடம் என்று அழைக்கப்படும் ஒரு இடம் இருக்கிறது. அயோத்திக்கு அடுத்து சர்ச்சைக்கு பெயர் போன இடம். ஏனென்றால் இங்கே உள்ள கோயிலில் இந்துக்கள் முஸ்லிம்கள் இருவரும் வந்து வழிபடுகிறார்கள்.இங்கே வாழ்ந்த பக்கிரி ஒருவர் அல்லாவையும், தத்தாத்ரேயரையும் ஒருங்கே வழிபட்டு வந்தாராம். (நாங்கள் போன போது கலவரம் காரணமாக உள்ளே விடவில்லை) இங்கே வழியும் மாணிக்க தாரா என்ற அருவியில் குளித்து உடைகளை அங்கேயே விட்டு வர வேண்டும் என்ற ஒரு சாஸ்திரம் முஸ்லிம்களுக்கு இருக்கிறதாம். பழைய , கிழிந்த உடைகள் ஒரு சிகரமாக அங்கே குவிந்து கிடக்கின்றன. சிலர் அதை புகை போட்டு எரிக்க வேறு செய்கிறார்கள். சுற்றுச் சூழல் நலமிகள் இதை கவனித்தால் பரவாயில்லை.

ஓகே இனி இந்த கேம்பில் எடுத்த சில புகைப்படங்கள் கீழே:









முத்ரா



Monday, May 23, 2011

கலைடாஸ்கோப் -18

லைடாஸ்கோப் -18 உங்களை வரவேற்கிறது

இந்த முறை கலைடாஸ்கோப் முழுவதும் ஒரே டாபிக் தான்..

இயற்கையின் மடியில் -1
======================

எப்போதுமே நமக்கு Botany , zoology என்பதெல்லாம் அலர்ஜியான விஷயங்கள். இதற்கு முக்கியமான காரணம் அதில் வரும் தாவரங்கள் விலங்குகளின் வாயில் நுழையாத அறிவியல்(லத்தீன்) பெயர்களாக இருக்கலாம். தாமரை இதழ் போன்ற கண்கள் என்று வர்ணித்தால் அதை கவிதை எனலாம். 'நிலம்போ நூசிஃபெரா (Nelumbo nucifera )' போன்ற கண்கள் என்று
எழுதினால் அது படிப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பதில்லை.

ஆனால் விலங்குகள் மீதும் பறவைகள் மீதும் காடுகள் மீதும் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது சமீபத்தில் attend செய்த ஒரு Nature Camp ..

இயற்கையை நேசிக்கும் உள்ளம் கொண்ட சில மனிதர்களால் இந்த Camp நடத்தப்படுகிறது. பெரும்பாலும் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், வக்கீல்கள், பணியில் உள்ள சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் போன்றவர்களால் நடத்தப்படுகிறது. இன்று நிறைய பேர் 'இயற்கையைப் பாதுகாப்போம், காடுகளை பாதுகாப்போம்' என்று நான்கு சுவர்களுக்குள்
உட்கார்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் 'ஸ்லைடு' போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் (USHA CHARITABLE TRUST , பெங்களூர்) அப்படி இல்லாமல் இயற்கை களிநடனம் ஆடும் ஓர் இனிய சூழலுக்கு நம்மை அழைத்துச் சென்று அங்கே நமக்கு காடுகள் பற்றியும், Wild life பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

வெஸ்டர்ன் காட்ஸ் என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் குஜராத்தில் இருந்து தமிழ் நாடுவரை நீள்கின்றன. மழைக்காடுகள் நிறைந்த இந்த மலைத்தொடர்கள் BIO DIVERSITY எனப்படும் உயிர்ப்பன்மை க்குப் பெயர் பெற்றவை. குதுரே முக், நீலகிரி, முன்னார், ஜோக் நீர்வீழ்ச்சி என்று நிறைய சுற்றுலாத் தளங்கள் இதில் தான் உள்ளன.கடல் மட்டத்தில்
இருந்து சுமார் நாலாயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலைத்தொடர்களில் சுமார் 5000 தாவர வகைகள்,500 பறவை வகைகள், சுமார் 150 விலங்கின வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மனிதன் மட்டும் போதாதா? எதற்கு இத்தனை விதம் விதமான உயிரினங்கள்? பாக்டீரியாவில் இருந்து தொடங்கி நீலத்திமிங்கலம் வரை கலர் கலராக உயிரினங்கள்? உலகில் உள்ள மனிதர்களின் மொத்த எடையை மிஞ்சக்கூடிய பூச்சி வகைகள்? நினைத்துப் பார்த்தால் இயற்கை கஞ்சூஸ் -ஆக இல்லை என்று தெரிகிறது. Nature believes in abundance ! ஒரு விதத்தில் பார்த்தால் நாமெல்லாம் வாழ்வதற்கு சூரிய மண்டலம் மட்டும் போதும்..எதற்காக அதைத் தாண்டி தேவை இல்லாமல் பல கோடிக் கணக்கான காலக்ஸிகள்? சில வி
ஞ்ஞானிகள் இந்தப் படைப்பை UNIVERSE என்று சொல்லாமல் MULTIVERSE என்கிறார்கள்..இதே போல பல பிரபஞ்சங்களாம் ..தலை சுற்றுகிறது!

கர்நாடகாவின் சிக்-மங்களூர் மாவட்டத்தில் வருகிறது Badra wild life sanctuary .. அங்கே தான் எங்களை ட்ரெக்கிங் அழைத்துச் சென்றார்கள்.. மழைக் காடுகள் நிறைந்த பிரதேசம்..இந்த அக்னி நட்சத்திரத்திலேயே இரண்டு ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளும் அளவு குளிர்! செல் போன்களின் தொந்தரவுகள் இல்லாத மூன்று நாள் சொர்க்க வாழ்க்கை..
இரவானதும் ரீங்காரமிடும் லட்சக் கணக்கான பூச்சிகளின் ஒருமித்த நீலாம்பரி அதி காலையில் ஆயிரக்கணக்கான பறவைகளின் இனிய பூபாளமாக ஒலிக்கிறது ..(எனக்கு ஒரு சந்தேகம்..தன் இணையக் கவர பூச்சிகளும் பறவைகளும் சத்தமிடுகின்றன சரி..எல்லா பூச்சிகளும் ஒரே நேரத்தில் கத்தினால் எப்படி தான் அவை தத்தமது இணையின் குரலை அடையாளம் கண்டு கொண்டு
'சரி நம்ம ஆறுமுகம் தான் கூப்பிடறான், பாவம் ரொம்ப நாளா அலையறான்,,இன்னிக்கு போய் தான் பார்ப்போமே ' என்று முடிவு செய்கின்றனவோ தெரியவில்லை.மனித இனத்தில் பெண் பார்க்கப் போகும் போது பெண் தான் 'சாமஜ வர கமனா ' என்றெல்லாம் பாட்டுப் பாடி ரொமான்டிக் மூடுக்குப் போய் ஹிந்தோளத்தில் 'ரி' யை நுழைத்து அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்..ஆனால் பூச்சிகளிலும் பறவைகளிலும் ஆண் தான் அதிகம் ராகம் பாடுகிறதாம். ஆண் ரொம்ப மெனக்கெட்டு ஆலாபனை செய்து பாட்டுப் பாடி நிரவல் செய்து ஸ்வரம் எல்லாம் போட்டால், பெண் நிதானமாகக் கேட்டு விட்டு 'கூ, குக்கூ, குக்குக்கூ, என்று பதிலுக்கு வெறும் ACKNOWLEDGE மட்டும் செய்யும்..என்ன ஒரு வில்லத்தனம்!

மேலும் மனித இனத்தில் தான் பெண் அழகு. ஆம்

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள."


மற்ற இனங்களில் ஆணுக்கு மட்டும் தான் கண்ணைக் கவரும் அழகு! அந்தரியோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ' என்ற பாட்டை விட 'மன்மத ராசா மன்மத ராசா ' தான் அதிகம்.

நகர்ப் புறங்களில் தவளைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்திய சர்வே என்று சொல்கிறதாம்..இது ஏன் என்றால் நகர்ப் புறத்தில் ஆண் தவளை கத்துவது பெண் தவளைக்கு டிராபிக் இரைச்சலில் கேட்பதில்லையாம்.ஆயிரம் பூச்சிகள் கத்தினாலும் தன் இணையை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளும் உயிர்கள் பாவம் வாகன இரைச்சலுக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை.ஆம் மனிதன் நடந்த இடத்தில் புல் முளைப்பதில்லை..உலகிலேயே கொடூரமான மிருகம் எது என்று கேள்விக்கு 'ஹாய் மதனில்' 'மனிதன்' என்று அவர் அளித்த விடை ஞாபகத்தில் வருகிறது

..நடுக் காட்டில் பச்சை வண்ணம் அடிக்கப்பட்ட,சுவர்களில் மரங்கள் வரையப்பட்ட அழகாததொரு காட்டேஜ் கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு பின் புறத்தில் பத்ரா நதி மெல்லிய சலசலப்புடன் விஸ்தாரமாக ஓடி வருகிறது.. அருகே ஓர் அழகான சிறிய பிள்ளையார் கோயில்..அப்படிப்பட்ட அழகிய சூழலில் அமர்ந்து கொண்டு
பூச்சிகள் பற்றியும் , பறவைகள் பற்றியும் ,பாம்புகள் பற்றியும் ஏராளமான சுவையான தகவல்களை அந்த கேம்ப்-இன் போது இயற்கை விஞ்ஞானிகள் எடுத்துச் சொன்னார்கள்..புலி கிலி வந்து விடுமோ என்று பயமாகவே இருந்தது. ஆனால் கடைசி வரை ஒரு புலி கூட கண்ணில் தட்டுப் பட வில்லை. :-(

காட்டின் அமைதி கெட்டு விடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்..அதிர்ந்து பேசாதீர்கள் என்கிறார்கள்..மிகக் குறைந்த அளவு மின் விளக்குகளையே காட்டேஜை சுற்றி உபயோகிக்கிறார்கள்..இருபது பேர் தங்கும் ஒரு பெரிய அறைக்கு ஒரு சிறிய குழல் விளக்கு மட்டும் எரிகிறது. டி.வி இல்லை..ஹீட்டர் இல்லை..விளக்குகளுக்கு மின்சாரத்தை பத்ரா நதியின்
Gravity fall கொண்டு அவர்களே தயாரிக்கிறார்கள்..காட்டுக்குள் எக்காரணம் கொண்டும் perfume களை உபயோகிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்..இது ஏன் என்றால் இந்த வினோத வாசத்தை மோப்பம் பிடித்து விலங்குகள் வந்து விடாமல் இருக்கவும் , அவைகளில் இருந்து வெளிப்படும் கெமிக்கல்கள் காட்டில் கலந்து விடாமல் இருக்கவும் என்கிறார்கள். காமிராவில் தயவு செய்து பிளாஷ் உபயோகிக்காதீர்கள் என்கிறார்கள்..இப்போதெல்லாம் நிறைய இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்த இயற்கை ஆர்வலர்கள் ட்ரெக்கிங் செய்யும் போது விஷமிகள் சிலர் காட்டில் வீசிச் சென்று தண்ணீர் பாட்டில்களையும், குர்குரே , லேஸ் ,பான் பராக் பாக்கெட்டுகளையும் பொறுக்கி (மீண்டும் )பெங்களூருக்கு எடுத்து வருகிறார்கள்

பாம்புகள் பற்றி சொல்லும் போது: பத்து பாம்புகளுக்கு ஒன்பது பாம்புகள் விஷம் இல்லாதவை என்று சொன்னார்கள்..விஷம் என்பது பாம்பின் வாயில் ஊறும் எச்சிலாம்.மனிதன் பாம்பின் விஷத்தால் இறப்பதைக் காட்டிலும் பாம்பு கடித்து விட்டதே என்ற பயத்தால் இறப்பது தான் அதிகம். எனவே நீங்கள் அடுத்த முறை பாம்பு கடித்தால் டென்ஷன் ஆகாமல் சும்மா கையை உதறிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம்.பாம்பின் தாடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஒரு மலைப்பாம்பு ஒரு நன்கு வளர்ந்த முழு மானை அப்படியே ஸ்வாகா செய்ய முடிகிறது. மேலும் பாம்புகளின் ஞாபக சக்தி வெறும் மூன்று வினாடிகள் தானாம் (கஜினி சூர்யாவை விட ரொம்ப மோசம்) எனவே பாம்பு தன் இணையை அடித்தவனை தேடி வந்து பழி வாங்கும், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்று பாட்டெல்லாம் பாடும்..மாணிக்கத்தைக் கக்கி இரவில் இரை தேடும் என்பதெல்லாம் கட்டுக் கதை..பாம்புக்கு பயங்கர தாகமாக இருந்தால் அது தொண்டையை நனைத்துக் கொள்ள சிறிது பாலைக் குடிக்குமே தவிர தமிழ் படங்களில் வருவது போல குடம் குடமாக பாலைக் குடிக்காது


பறவைகள் பற்றி அவர்கள் சொன்ன தகவல்கள் அருமை..முதலில் ஒன்று

தூக்கணாங்குருவி கூடு கட்டி முடித்து விட்டு அதன் மனைவியிடம் சென்று பவ்யமாக 'வாம்மா மின்னலு ,வந்து கிச்சன் , ஹால், பெட்ரூம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்' என்று கேட்டுக் கொள்ளுமாம்.அது வந்து பார்த்து ஒ.கே சொன்னால் தான் உண்டு..இல்லை வாஸ்து சரியில்லை என்று சொல்லி விட்டால் அதையெல்லாம் கலைத்து விட்டு மீண்டும் வைக்கோல் சேகரித்து கூடு கட்டத் தொடங்கும். சில பாவப்பட்ட ஆண்
தூக்கணாங்குருவிகள் எட்டாவது attempt -இல் தான் பாஸ் பண்ணுமாம்..இத்தனை செய்தும் கடைசியில் வீட்டுக்குள் அய்யாவுக்கு இடம் இல்லை..மகா ராணி குழந்தைகளுடன் உள்ளே இருக்க வேண்டியது...இவர் உணவு தேடுவது, வெளியே போய் காய்கறி வாங்கி வருவது..காவல் காப்பது..இன்றைய நவீன உலக கணவர்களின் நிலை தான் அங்கும்..!

கூடு கட்டுவதில் பறவைகளுக்கு உள்ள அறிவு வியக்க வைக்கிறது..காக்காவின் கூடு வடிவத்தில் உள்ள ஸ்டேடியம் ஒன்று ஜப்பானில் உள்ளது.காகம் சில சமயம் காப்பர் கம்பிகளை எடுத்து வந்து வளைத்து வலுவான கூடுகள் கட்டுமாம்..ஒரு முறை காக்கா கூட்டில் ஒரு லேஸ் பாக்கெட் இருந்ததாம்.(evening snacks?) .கரையான்களும் தேனிக்களும் வீடு கட்டுவதில் பட்டம் வாங்காத சிவில் இஞ்சினியர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.கரையான்கள் வீடு கட்டி முடித்து விட்டு அதை AIR CONDITIONING கும் செய்கின்றன ..ப்ரோகிதரை அழைத்து கிரகப் பிரவேசம் எல்லாம் செய்யுமா தெரியவில்லை..

ஏதோ ஒரு பறவை (பெயர் மறந்து விட்டது) தன் உணவான பூச்சியை அப்படியே சாப்பிடாமல் வீட்டுக்கு பார்சல் வாங்கி வருமாம். கூடவே அந்த பூச்சிக்கு பிடித்தமான சில இலைகளையும் எடுத்து வந்து பூச்சியை தன் கூட்டில் வைத்து மனிதர்கள் ஆடு வளர்ப்பது போல சில நாட்கள் வளர்க்குமாம்..
பூச்சியும் இலையைத் தின்று கொழு கொழு என்று அப்பாவியாக வளருமாம்..அப்புறம் என்ன?குஞ்சு பொறித்து குட்டிப் பறவைகள் வெளியே வந்ததும் சுடச் சுட அவைகளுக்கு பூச்சி பக்கோடா ரெடி!

வெட்டுக் கிளிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்..அந்தப் பெயர் அதற்குப் பொருத்தம் தான்..'மேட்டர்' முடிந்ததும் இன்ப நிலையில் தன்னை மறந்து இருக்கும் ஆண் வெட்டுக்கிளியை பெண் சிரச்சேதம் செய்து விடுகிறது. எனவே வெ.கி எப்போது
ம் விதவை தான். என்னே ஒரு பதிபக்தி!.. மண்ணானாலும் மனைவி புல்லானாலும் பொண்டாட்டி கதை தான் அங்கே.. மனித இனத்தில் கூட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெண் இனம் தான் ஆண் மீது ஆதிக்கம் செலுத்தியதாக சொல்கிறார்கள்..பெண் தான் prototype , பெண் தான் basic model .. ..ஆண் எதற்கு வேண்டும் என்றால் அப்பாவியாக ஏமாந்து போய் தன் விந்தை பெண்ணுக்கு தானம் கொடுக்கத்தான்..

தற்கொலைப் படை மனிதர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்து விடாதீர்கள்..தேனீக்களுக்கும் எறும்புகளுக்கும் கூட தான்..ஏதாவது ஒரு புதிய இடத்திற்கு செல்லும் போது இந்த த. கொ படை தான் முதலில் செல்லுமாம். அவை திரும்பி வந்தால் அந்த இடம் Safe ..இல்லை என்றால் அடுத்த நாள் ஹிண்டு பேப்பரில் 'இறைவனடி சேர்ந்தார்' என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளம்பரம் கொடுத்து விட வேண்டியது!

சரி இன்னும் இந்த கேம்ப் பற்றி சுவையான தகவல்களை அடுத்த கலைடாஸ்கோப் இல் சொல்கிறேன்.

ஓஷோ ஜோக்
=============

ஒரு தம்பதி காட்டில் விலங்குகளைப் படம் பிடிக்க சென்றிருந்தார்கள்..தற்காப்பிற்காக ஒரு துப்பாக்கியும் இருந்தது

நீண்ட நேரம் கழித்து நடுக்காட்டுக்கு வந்து விட்டிருந்தார்கள்.. அங்கே ஒரு பயங்கர சிங்கம் தோன்றி அந்த மனைவியைப் பிடித்துக் கொண்டு விட்டது..

மனைவி " ஷூட் இட் ஜான் , ஷூட் இட் என்று கத்தினாள் "

அதற்க்கு அவன் " ஐயோ, அன்பே என் காமிராவில் பிலிம் தீர்ந்து விட்டது " என்று பதிலுக்குக் கத்தினான்.


முத்ரா




Tuesday, May 17, 2011

அணு அண்டம் அறிவியல்- 26

அணு அண்டம் அறிவியல்- 26 உங்களை வரவேற்கிறது


குவாண்டம் இயற்பியலில் இரண்டு விஷயங்களை சொல்வதாக சொல்லியிருந்தோம். ஒன்று நிச்சயமின்மை (Uncertainty ) இரண்டு மேற்பொருந்துகை (Superposition )

ஹைசன்பெர்க் -இன் நிச்சயமின்மை இயற்பியலில் நிறைய புதிர்களை விடுவித்தது. உதாரணமாக அணுவின் 99 .9999999 சதவிகிதம் ஏன் வெற்றிடமாக உள்ளது? ஏன் எலக்ட்ரான்கள் அணுக்கருவின் உள்ளே சென்று விழுந்து விடுவதில்லை என்பவைகளுக்கான விடைகளைத் தந்தது. ஏன் ப்ரோடான் என்றும் எலக்ட்ரான் என்றும் அணு என்றும் கார்பன் என்றும் இருக்க வேண்டும்? எல்லாம் ஒன்று சேர்ந்து சூனியமாக மாறி விடலாமே?

'தந்த்ரா' என்ன சொல்கிறது என்றால் ஒன்றுமற்ற சூனியமான இறைமை தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறது.அதாவது 'ஜீரோ' வில் இருந்து +1 ஐயும் -1 ஐயும் பிரித்தெடுப்பது போல..

ஏன் இறைமை சூனியமாக இல்லாமல் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் பிரித்துக் கொண்டு கஷ்டப்படுகிறது? எதற்காக ஹார்மோன்களின் அலைக்கழிப்புகள்? பெருமூச்சுகள்? பின் தொடரல்கள்? காதல் கடிதங்கள்? தூக்கமில்லா இரவுகள்? உரையாடல்கள்? ஏக்கங்கள்? 'என்னைக் காணவில்லையே நேற்றோடு' 'அன்பே அன்பே
கொல்லாதே '
என்றெல்லாம் இதயத்தைப் பிடித்துக் கொண்டு பாடும் தமிழ் சினிமா பாடல்கள்?

இதற்கான விடையைத் தேடி எங்கேயும் போக வேண்டாம்..நம் கம்பரே சொல்லியிருக்கிறார்:

"---
---
அலகிலா விளையாட்(டு) உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"

இந்த பிரபஞ்சமே இறைவனின் விளையாட்டு..கடவுளின் அவதாரங்களை நாம் இந்தியாவில் 'லீலா' என்று தான் சொல்கிறோம்..ராம லீலா, கிருஷ்ணா லீலா என்று..பிரபஞ்சம் சும்மா ஒரு டைம்-பாஸ் அவ்வளவு தான்..ராமனும் அவனே(அல்லது அதுவே), சீதையும் அவனே , ராவணனும் அவனே , அனுமானும் அவனே ...ஆனால்
Just for Game 's sake ..

குவாண்டம் மெக்கானிக்ஸ் , இந்த பிரபஞ்சம் ஒரு தீர்மானிக்கப்படாத பகடை (Dice ) போல செயல்படுகிறது ,யாரோ இதை வைத்து
விளையாண்டு கொண்டிருக்கக் கூடும் என்று கண்டு பிடித்து சொன்ன போது ஐன்ஸ்டீன் உட்பட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்..பிரபஞ்சம் ஒரு விளையாட்டு அல்ல என்று அவர்கள் தீர்க்கமாக நம்பினார்கள்.

ஆனால் பிரபஞ்சம் ஒரு விளையாட்டு..எனவே அடுத்த முறை இண்டர்வியூ ஃபெயில் ஆனால் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் !


விளையாட்டு என்று வரும் போது 'துவைதம்'(இருமை) தேவையாக இருக்கிறது. எதுவுமே இல்லை எல்லாம் சூனியம் என்று இருந்தால் அத்வைதம் (இருமையின்மை)சரியாக இருக்கும். ஆனால் விளையாட்டு என்று வரும் போது 'இரண்டு' இருந்தால் தான் சரியாக வரும். கிரிக்கெட்டில் Batsman னும் பந்தைப் போடும் bowler ரும்
ஒரே அணி தான் என்றால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? கடவுளின் விளையாட்டுக்கு இருமை தேவைப்படுகிறது. ஆண் என்றும் பெண் என்றும் இரவு என்றும் பகல் என்றும் எலக்ட்ரான் என்றும் பாசிட்ரான் என்றும் இருமை தேவைப்படுகிறது

அடிமட்டத்தில் அத்வைதமே இருக்கிறது என்றாலும் நம் விளையாட்டை சுவாரஸ்யமாக்க , சினிமாவில் NAIL BITING CLIMAX இல் ஹீரோவும் வில்லனும் சண்டை போடும் போது நாம் சீட்டு நுனியில் உட்கார த்வைதமே தேவையாய் இருக்கிறது.

இந்தியாவில் தோன்றிய இந்த இரண்டு மாபெரும் தத்துவங்களுக்கு ஒரு Golden -mean ஆக
இரண்டையும் compromise செய்யும் படி தோன்றியது தான் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் ..அது என்ன சொல்கிறது என்றால் இந்த உலகத்தில் இருமை இருக்கவே செய்கிறது.ஆனால் அடிமட்டத்தில் எல்லாமே ஒன்று தான்...இறைவனை நெருங்க நெருங்க இருமை மறைந்து அத்வைதம் மேலோங்குகிறது.அதாவது நெருப்புக்குள் போடும் முன்னர் எல்லாம் தனித்தனி இது விறகு , இது குச்சி, இது சுள்ளி, இது தேங்காய் மட்டை,இது சோளக்கட்டை என்று இருமை...நெருப்பில் விழுந்து எரிந்த பின் எல்லாவற்றுக்கும் ஒரே பெயர் 'சாம்பல்' தான்! கொஞ்சம் சினிமா பாஷையில் சொல்வதென்றால் "கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி ? , காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி'!


ஓகே..அறிவியலில் இருந்து விலகுவது போலத் தோன்றினால் பயப்படாதீர்கள்...I wont lose the track ! இவ்வளவு தூரம் வந்து விட்டோம்..அப்படியே திரும்புவதற்கு முன் சாந்தோக்ய உபநிஷதத்தின் நாலாவது அத்தியாயத்தில் வரும் ஒரு கதையையும் பார்த்து விடலாம்..இதிலும் ஒரு பகடை வருகிறது


'ஜனஸ்ருதி' என்ற அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தான தர்மங்களில் சிறந்து விளங்கினான். இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவன் சமையலறை 24 x 7 பிஸியாக இருந்தது. சிறந்த குணவானாகவும், நல்லவனாகவும் ஆட்சி செய்தான்.மக்கள் சேவையில் மட்டும் அன்றி ஆன்மீகத்திலும் அவன் நாட்டமுள்ளவனாக இருந்தான்.

ஒரு கோடைக்கால இரவில் அவன் தன் மாளிகையின் உப்பரிகையில் மஞ்சத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது இரண்டு அன்னப் பட்சிகள் வானில் பறந்து செல்கின்றன.அவற்றில் ஒன்று வேகமாக முன்னே பறந்து போகிறது .அதைப் பார்த்து பின்னால் பறக்கும் பறவை "முட்டாள் பறவையே, கண்களைத் திறந்து முன்னால் பார்த்துக் கொண்டு கவனமாகப் பறந்து செல்..
கீழே அரசன் ஜனஸ்ருதி தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனது தேஜஸ் நாம் பறக்கும் போது நம்மை சுட்டு விடக் கூடும்..எனவே கவனமாகப் பறந்து செல் " என்கிறது.

அதற்கு அந்த முதல் பறவை " யார் அந்த ஜனஸ்ருதி, அவன் தேஜஸ் நம்மை எரிக்கும் அளவு அவன் ஆன்ம பலம் வாய்ந்தவனா? அவன் அவ்வளவு பெரிய ஆளா? மாட்டு வண்டி வைத்திருக்கும் 'ரைக்வா' வை விட அவன் ஆன்மீகத்தில் பெரியவனா?" என்று ஏளனம் செய்கிறது

இதையெல்லாம் கீழே படுத்துக் கொண்டிருக்கும் அரசன் கேட்கிறான்

அடுத்த நாள் காலை அரசவையைக் கூட்டி ரைக்வாவைக் கண்டுபித்துக் கொண்டு வருமாறு ஆணையிடுகிறான்..வீரர்கள் நாலாபக்கமும் ரைக்வாவைத் தேடிச் செல்கிறார்கள். ஒரு வீரன் மாட்டு வண்டி அருகே ஓய்வாக அமர்ந்திருக்கும் ரைக்வாவைக் கண்டுபிடிக்கிறான்..அரசனும் அறுநூறு பசுக்கள், நூறு குதிரை வண்டிகள், தங்க மாலைகளுடன் ரைக்வாவை சந்தித்து 'எனக்கு ஞானத்தின் வழியைக் காட்டுங்கள் ' என்று கேட்கிறான். ரைக்வா கோபம் அடைந்து 'மூடனே, இதையெல்லாம் திரும்பிக் கொண்டு போய் விடு, என் கண் முன்னே நிற்காதே' என்று கூறி விடுகிறார்..

அரசன் மிகுந்த வேதனையுடன் திரும்பப் போகிறான்

இரண்டாவது முறை ஜனஸ்ருதி ஆயிரம் பசுக்கள், எழு கிராமங்களுடன் திரும்ப வந்து 'இவற்றை ஏற்றுக் கொண்டு எனக்கு உபதேசம் அருளுங்கள்' என்கிறான்..அதற்கு ரைக்வா 'நீ ஞானத்தின் தேடலில் உண்மையானவனாக இருக்கிறாயா இல்லையா என்று சோதனை செய்யவே உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டேன்..சாதாரண ஆளாக இருந்திருந்தால் இரண்டாவது முறை திரும்ப வந்திருக்க மாட்டான்" என்று கூறி அவனுக்கு 'சம்வர்க்க வித்யா' என்ற வித்யையை உபதேசிக்கிறார்.



'யத் க்ருத
யா விஜிதயாதரேயா சம்யந்தி ஏவம் ஏவம் சர்வம் ததாபிசமேதி
யத் கிஞ்ச பிரஜா சாது குர்வந்தி ..." என்று பறவைகள் ரைக்வாவைப் பற்றி சொல்கின்றன. பகடையில் நாலு விழுந்தால்(கிருதையா ) அது எப்படி ஒன்று , இரண்டு , மூன்று எல்லாவற்றையும் உள்ளடக்கியதோ அதே மாதிரி தன்னை அறிந்தவன் உலகில் எல்லாவற்றையும் அறிகிறான்..சரி...

ப்ரோடான்களும், எலக்ட்ரான்களும் செய்யும் காதல் விளையாட்டுகளால் தான் நாமெல்லாம் இருக்கிறோம். எலக்ட்ரான்கள் அப்படியே போய் அணுக்கருவில் விழுந்து விட்டால் என்ன ஆகும்? நாமெல்லாம் இருக்க மாட்டோம் அவ்வளவு தான்..

இது சாதாரண வாழ்க்கையில் நடக்காது என்றாலும் 'neutron star ' எனப்படும் நியூட்ரான் நட்சத்திரங்களில் இது நடக்கிறது. ஒரு நட்சத்திரத்தின் எரிபொருள் தீர்ந்து (அதன் நிறை சந்திரசேகர் எல்லையை விட அதிகமாக இருந்தால்) அதன் கடைசிக் காலங்களில் அது தன் சுய ஈர்ப்பால் சுருங்க ஆரம்பிக்கிறது. இந்த ஒடுக்கம் எந்த அளவு இருக்கும் என்றால் அது அணுவின் வெளியே தூரத்தில் சுற்றும் எலக்ட்ரான்களை நெருக்கி உள்ளே சென்று அணுக்கருவில் வலுக்கட்டாயமாக விழ வைக்கிறது. இப்போது எலெக்ட்ரான் ப்ரோடானுடன் இணைந்து விண்மீன் ஒரே நியூட்ரான் மயமாக காட்சியளிக்கிறது.அணுவின் வெற்றிடம் எல்லாம் இப்போது ஒடுக்கப்பட்டு விடுவதால், நட்சத்திரத்திற்கு அபாரமான அடர்த்தி கிடைக்கிறது.( ஒரு சிறிய குன்றின் அளவே இருக்கும் நியூட்ரான் நட்சத்திரத்திற்கு நம் சூரியனின் இரண்டு மடங்கு நிறை இருக்கும்.)

இது எப்படி என்றால் ஒரு கோலிக் குண்டை பலூனுக்குள் போட்டு ஊதுங்கள்..பலூன் பெரிதானதும் அதன் வாயைக் கட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் போடுங்கள்..இப்படியே நிறைய கோலிக்குண்டு பலூன்களை பாத்திரத்தில் போட்டு அதை நிரப்புங்கள்..பாத்திரத்தை சுலபமாக நம்மால் தூக்க முடியும்.(அடர்த்தி குறைவு) இப்போது பலூன் வேண்டாம்..பாத்திரத்தை வெறும் கோலிகுண்டுகளால் மட்டும் நிரப்பினால் அதன் அடர்த்தி அதிகமாக இருக்கும் இல்லையா? அணுவின் உள்ள தேவையில்லாத வெற்றிடம் நீங்கியதால் இப்போது நியூட்ரான் நட்சத்திரம் அபாரமான அடர்த்தியுடன் இருக்கும்.

ஆனால் சாதாரணமாக எலக்ட்ரான்களை நம்மால் அமுக்க முடியாது.. வெறி கொண்ட சிங்கத்தை ஒரு சிறிய கூண்டில் அடைக்க முயல்வது போல அவை திமிரும்..தம் எதிர்ப்பைக் காட்டும்..ஆனால் ஈர்ப்பு விசை இதை சாதிக்கிறது..


முத்ரா




Monday, May 16, 2011

கலைடாஸ்கோப்- 17




லைடாஸ்கோப்- 17 உங்களை வரவேற்கிறது

FREEWILL
==========

ஜென் குரு ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது வழியில் இருந்த கிணற்றில் ஒருவன் விழுந்து 'உதவி' 'உதவி' என்று கத்திக் கொண்டிருந்தானாம், அவர் எதுவுமே நடக்காதது மாதிரி கண்டு கொள்ளாமல் கடந்து போய் விடுகிறார். 'ஏன் அவனைக் காப்பாற்றவில்லை?' என்று சீடர்கள் கேட்டதற்கு 'அவன் விதியில் நான் தலையிட விரும்பவில்லை' என்று சொல்கிறார்,

மனிதன் சுதந்திரமானவனா? இல்லை கண்ணுக்குத் தெரியாத விதிகளால் கட்டுப்பட்டவனா ?என்று விவாதிப்பது FREEWILL என்று பிலா
பியில் ஒரு hot topic ! இன்னொரு ஜென் குருவிடம் அவரது சீடன் இதே கேள்வியைக் கேட்கிறான்: அதற்கு அவர்

"உன் காலைத் தூக்கு " என்கிறார்

அவனும் காலைத் தூக்குகிறான்

"இப்போது இன்னொரு காலையும்
தூக்கு"

"அது எப்படி குருவே முடியும்?"

"ஆம்..மனிதன் ஒரு காலைத் தூக்கும் அளவு சுதந்திரமானவன்" என்கிறார். ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே!

நம்முடைய கடந்த காலம் நம் நிகழ்காலத்தையும் நிகழ்காலம் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.(கர்மா?) மேலும் நாம் ஒவ்வொரு முறை ஒரு முடிவெடுக்கும் போதும் நம் வாழ்க்கை மாறுகிறது.

தண்டவாளத்தில் ஏற்படும் ஒரு சிறிய ட்ராக் மாற்றம் எப்படி அந்த ரயிலின் பாதையையே ஒட்டு மொத்தமாக மாற்றி விடுகிறதோ அப்படி.12 - பி படத்தில் ஹீரோவுக்கு பஸ்ஸைப் பிடித்திருந்தால் ஒரு வாழ்க்கையும் பஸ்ஸை நழுவ விட்டதால் ஒரு வாழ்க்கையும் நடப்பது மாதிரி..இதை பொதுவாக 'கேயாஸ் தியரி' என்றும் டெக்னிகலாக 'Parallel Universe ' என்றும் அறிவியல் சொல்கிறது. நமக்கு இரண்டு வாழ்க்கைகள் மட்டும் இல்லை..நிறைய இருக்கின்றனவாம். ஒவ்வொரு முறை நாம் ஒரு முடிவெடுக்கும் போதும் நம் வாழ்க்கையில் ஒரு Branching நடக்கிறது. இன்றைக்கு பச்சை டிரஸ் போடுவதா நீல டிரஸ் போடுவதா என்று நீங்கள் காலையில் குழம்பி கடைசியில் நீலம் என்று முடிவெடுத்தால் அங்கேயும் ஒரு Branching ! அதாவது அன்று பச்சை போட்டிருந்தால் உங்கள் வாழ்க்கை நீலம் போட்டதால் வரும் வாழ்க்கையை விட கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்..

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு பெண்ணின் குழந்தை இறந்து விடுகிறது. அதன் பிரிவை அவளால் ஆற்றவே முடியவில்லை. இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு ஊரின் ஒதுக்குப்புறமாக வாழும் ஒரு துறவியிடம் செல்கிறாள்.
"சாமி நீங்க தான் எப்படியாவது என் குழந்தையை உயிர்ப்பிக்கணும் " என்று கதறி மன்றாடுகிறாள்.

அதற்கு அந்தத் துறவி "நான் உன் கண் முன்னே உன் மகள் பற்றிய இரண்டு காட்சிகளைக் காட்டுகிறேன்..அவற்றைப் பார்த்து விட்டு உன் குழந்தையை காப்பாற்றுவதா வேண்டாமா என்று நீயே முடிவு செய் " என்கிறார்

முதல் காட்சியில் அந்தக் குழந்தை ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு பணம், புகழ், நகை, மாளிகை, சேவகர்கள் என்று சொகுசாக வாழ்கிறது. விழா ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. யாரோ ஒருவர் அவளை நெருங்கி வந்து ஒரு விலை உயர்ந்த முத்து மாலையை பவ்யமாக அவளிடம் பரிசளிக்கிறார்.

இரண்டாவது காட்சியில் அதே குழந்தை பஞ்சப் பரதேசியாக வறுமையில் வாடுகிறது. அழுக்கேறிய உடைகளுடன் சாலையோரத்தில் பரிதாபமாகக் குடும்பம் நடத்துகிறது. அங்கே கடந்து செல்லும் ஒரு வண்டியில் இருந்து சில காய்கறிகள் கீழே உருளுகின்றன. அது ஓடிச் சென்று வெறி பிடித்தவள் போல அந்த காய்கறிகளைப் பொறுக்குகிறது.

இரண்டு காட்சிகளையும் பார்த்து விட்டு அந்தப் பெண் "சாமி சுடுகாடு எந்தப் பக்கம் இருக்கு ?" என்று கேட்கிறாள்...


இரண்டு முடிவுகள்
==================

இந்த மாதத்தில் இரண்டு முடிவுகள் தமிழ்நாட்டில் வெளியாயின. +2 தேர்வு முடிவுகள் மற்றும் தமிழக சட்ட சபை தேர்வு முடிவுகள்.(இரண்டாவதைப் பற்றி கருத்து சொல்ல நமக்கு எந்த அனுபவமும் இல்லை,anyhow மம்மி ரிடர்ன்ஸ் !)ஒவ்வொரு வருடமும் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதன் பின்பு அவர்கள் ஏனோ காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார்கள்.They are never heard of again ! ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் ஒருவரை எடுத்துக் கொண்டால் கூட நமக்கு இது வரை நூற்றுக் கணக்கான வி
ஞ்ஞானிகள் ,நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். எல்லாரும் அறிவியலின் அனைத்துப் பிரிவுகளிலும் 200 க்கு 200 மார்க் வாங்குகிறார்கள். then where is it going wrong ? மனப்பாடம் செய்து உமிழும் தேர்வு முறையை, கல்வி முறையை நாம் என்று தான் விடப் போகிறோமோ தெரியவில்லை!


S .M .S
======

நம் நம்பர் இவர்களுக்கெல்லாம் எப்படி கிடைக்கிறதோ தெரியவில்லை. முடி வளரவைக்கும் தைலம், இரண்டு நாள் பிசினஸ் வொர்க் ஷாப், ப்ளாட்டுகள் விற்பனைக்கு , 24 மணி நேரத்தில் லோன், MBA அட்மிஷன்,

எடை குறைய வேண்டுமா? என்றெல்லாம் எஸ்.எம்.எஸ் கள் வருகின்றன. ஒருவர் தன் வுட் -பி இடம் இருந்து ஒரு முக்கியமான (?) காதல் எஸ்.எம்.சைஸை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது இப்படியெல்லாம் மெசேஜ் வந்தால் அவருக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்..சமீபத்தில் வந்த ஒரு எஸ்.எம்.எஸ்: அப்படியே :


Rehabilitation for mentally depressed and Drug addicts.If you are depressed and getting suicidal thoughts contact :

:) :) :)

உறவுக்குக் கை கொடுப்போம்
============================

பொதுவாக கலைடாஸ்கோப்-இல் டாபிக் களை Repeat செய்வதில்லை. சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி Repeat செய்ய வைக்கிறது. கலைர் தொலைக்காட்சியில் வரும் ஒரு நெடுந்தொடரில் ஐந்து வயதே மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை 'யார் கூட மோதறே, உனக்கு விஷம் வைத்து கொன்னுடுவோம்' என்றெல்லாம் வசனம் பேசுகிறது. விளம்பரங்கள் 'Next Generation ' 'Next Generation ' என்று அலறுகின்றன.ஆனால் உண்மையில் நம் Next Generation களான குழந்தைகளுக்கு நாம் எதையெல்லாம் கொண்டு செல்கிறோம் என்று நினைக்கும் போது பயமாக இருக்கிறது. ஐந்து வயதிலேயே விஷம் வைத்துக் கொன்றால் இருபத்தைந்து வயதில் உலகத்தையே அணுகுண்டு வீசி அழித்து விடுவார்களோ என்னவோ!


நாங்க இருக்கோம்
=================

கண்ணாடி போடாதவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. என்னதான் ஸ்டைல் ஸ்டைல்களாக கண்ணாடிகள் வந்து விட்டாலும் அதை அணிவது ஒரு சுமை தான்..சரி Laser Treatment செய்து கொஞ்சம் அழகாக (?) மாறலாம் என்று 'வாசன் ஐ கேர்' போயிருந்தேன். விளம்பரங்களில் காட்டுவது போலவே நிஜத்திலும் இன்முகம் காட்டி வரவேற்கிறார்கள். 'கன்சல்டேஷன்' என்று நூறு ரூபாய் தான் வாங்குகிறார்கள். (ஆனால் laser treatment 35 ,000 ரூபாயாம் !) குடிக்க ஜூஸ் கொடுக்கிறார்கள். டாக்டர்கள் கனிவாகப் பேசுகிறார்கள்.தினப்படி வாழ்க்கையில் தியானம் செய்ய நேரம் இல்லை என்று யார் சொன்னது? கண் ஆஸ்பத்திரிகளில் அவை கிடைக்கக்கூடும்! கண்ணுக்கு DROPS போட்டு விட்டு ஒரு மணி நேரம் அப்படியே கண் மூடிக் கொண்டு அசையாமல் உட்கார்ந்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஞானிகள் ஒரு மனிதன் 48 நிமிடங்கள் மட்டும் முழு விழிப்புணர்வோடு இருந்தால் அவனுக்கு ஞானம் வாய்க்கும் என்று சொல்லியிருக்கிறார்களாம். சரி நமக்கு பன்னிரண்டு நிமிடங்கள் அதிகமாகவே இருக்கிறதே, கண் மூடி தியானம் செய்யலாம் என்றால் அப்போது தான் ஆபீசில் நாளை செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் ஞாபகம் வந்து பயமுறுத்தின. மிஸ்டர். ஸ்ரீனிவாசன், மிஸ்ஸஸ். ரேவதி, மிஸ்டர். அவிஷேக் என்று பெயர்களை அழைக்கும் ஒலிகள் வேறு! வடிவேலு சொல்வது போல சும்மா உட்கார்ந்திருப்பது அத்தனை எளிதல்ல என்று உணர்ந்தேன்...

இரண்டு லென்சுகளை மாட்டி எது தெளிவாகத் தெரிகிறது என்று கேட்கிறார்கள்..எனக்கு இரண்டுமே ஒரே மாதிரி தான் தெரிந்தது. பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களைக் காட்டி எது பிரகாசமாத் தெரிகிறது என்கிறார்கள்..It is very difficult to make a choice !

இப்போது கொஞ்சம் சிரிக்கலாம்


ஓஷோ ஜோக்
==============


ஒரு முதியவர் ஒரு சாலையோர பெஞ்சில் உட்கார்ந்து விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார்..

அவரை நெருங்கி வந்து ஓர் இளைஞன் "பெரியவரே , ஏன் அழறீங்க, என்ன பிரச்சனை ?" என்று கேட்டான்..

"எனக்கு நிறைய பணம் இருக்கு... ஒரு பங்களா.. அப்பறம் கப்பல் மாதிரி கார்..வேலைக்காரங்க...அப்பறம் இளம் மனைவி ஒருத்தி"

"ஐயோ,,,இவ்வளவும் இருந்தா அழறீங்க? இது எல்லாம் வேணும் அப்படின்னு தான் நிறைய பேர் ஏங்கறாங்க " என்றான் இளைஞன்..

"அதுக்காக அழலை..என் வீடு எங்க இருக்குன்னு மறந்து போச்சு"


முத்ரா

Sunday, May 8, 2011

அணு அண்டம் அறிவியல் -25

அணு அண்டம் அறிவியல் -25 உங்களை வரவேற்கிறது.
'குவாண்டம் Tunneling ' புரியவில்லை என்கிறார்கள். எனக்கும் புரியவில்லை..:) புரியக்கூடாது. புரிந்தால் அது குவாண்டம் மெக்கானிக்ஸ் அல்ல.. :)
குவாண்டம் மெக்கானிக்ஸ்-ஸின் பிதாமகர்களில் ஒருவரான பெயின்மன் என்பவர் "To tell the truth, No one understands Quantum Mechanics" என்கிறார்.அவரே அப்படிச் சொல்லும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்? குவாண்டம் மெக்கானிக்ஸ் என்பது ஒரு கடல். கம்பர் ராமாயணத்தை எழுத முற்படும் போது 'பாற்கடலை பூனை நக்கிக் குடிப்பது போல' என்கிறார். நாமும் அதே மாதிரி இங்கே குவாண்டம் மெக்கானிக்ஸ்ஸை நுனிப்புல் மேய்கிறோம். இதே புரியவில்லைஎன்றால் 'Interference, Feynman's Diagrams, Quantum Chromo dynamics (QCD)இதையெல்லாம் சொல்லாமலேயே விட்டுவிட்டு
ரிலேடிவிடி -க்குப் போய் விடலாம் என்று தோன்றுகிறது.

சரி. Tunneling பற்றி கொஞ்சம் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கலாம்.

ஒரு கண்ணாடியில் பார்த்தால் நம் உருவம் தெரிகிறது. கண்ணாடி ஒளியை முழுவதும் திருப்பி விட்டு எதிரொளிப்பது தான் இதற்குக் காரணம். ஒளி ஓர் அலை என்பதால் அது மிகச் சரியாக கண்ணாடியின் பரப்பில் பட்டு எதிரொளிக்காமல் (பந்துகள் போல) கொஞ்சம் கண்ணாடியின் பின்புறமும் நீண்டு செல்கிறது. கண்ணாடியின் தடிமன் மிக மிக சிறியதாக இருக்கும் பட்சத்தில்
துல்லியமான சில கருவிகள் ஒளியை கண்ணாடியின் 'பின்பக்கத்திலும்' Detect செய்துள்ளன. ஒரு பந்தை சுவரில் எறிந்தால் அது சரியாக சுவரின் பரப்பில் பட்டு நம்மிடம் திரும்பி வருகிறது. ஆனால் 'ஒளி ' சுவரில் படும் போது (சுவர் எதிரொளிக்கும் தன்மையுடன் இருந்தால்) சுவரின் உள்ளே சில நானோ மீட்டர்களுக்கு ஊடுருவி விட்டு பின்னர் திரும்பி வருகிறது. அதாவது ஒரு மிக மெல்லிய முகம் பார்க்கும் கண்ணாடியின் பின் புறத்தில் மிக நெருக்கமாக இன்னொரு கண்ணாடியை வைத்தால் இரண்டிலும் உங்கள் முகம் தெரியக்கூடும்!

உங்கள் வீட்டுக்கு மெல்லிய சுவர் இருந்தால் (ஒரு சில நானோ மீட்டர் அகலத்தில்) வெளியே இருந்தே உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.it will be transparent !

உதாரணமாக ஒரு பானை முழுவதும் கற்களால் (துகள்) நிரம்பி இருப்பதாக வைத்துக் கொள்வோம். கற்கள் பானையின் உட்பக்க விளிம்பு வரை மட்டுமே கச்சிதமாக இருக்கும். அதே பானையை தண்ணீரால் (அலை) நிரப்பினால் தண்ணீர் பானையின் உட்பக்கச் சுவர்களை கொஞ்சம் ஊடுருவி கொஞ்சம் வெளியேயும் கசியும். இது தான் குவாண்டம் tunneling .அதாவது புராதன இயற்பியல் பொருட்களை கற்களாக கற்பனை செய்கிறது. குவாண்டம் இயற்பியல் பொருட்களை நெளியும் தன்மை கொண்ட தண்ணீர் என்கிறது.

புராதன இயற்பியலின் (classical physics ) படி
பொருள் இருப்பதற்கான சாத்தியகூறு சுவரின் விளிம்பைத் தாண்டியதும் உடனே பூச்சியத்திற்கு விரைவாக இறங்குகிறது. ஆனால் குவாண்டம் இயற்பியலில் ஒரு பொருளின் இருப்பிடத்தை WAVE FUNCTION என்ற ஒன்றை வைத்துக் கொண்டு தான் (தோராயமாக) நாம் சொல்ல முடியும்.(பார்க்க படம்) சுவரின் விளிம்பில் சாத்தியக்கூறு உடனே கீழே இறங்காமல் மலை போல சரிந்து மிக மிக மெதுவாக பூச்சியத்தை நெருங்குகிறது.



சரி சூரியனுக்குள் tunneling நடப்பதாகச் சொன்னோம்.அது என்ன என்று பார்க்கலாம்.

நம் பிரபஞ்சத்தில் பெரும்பாலும் இருப்பது ஹைட்ரஜன் தான். பிரபஞ்சத்தின் ஆரம்ப காலங்களில் நிலவிய Density fluctuations (அடர்த்தி வேறுபாடுகள்) காரணமாக ஹைட்ரஜன் வாயு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேகம் போல ஒன்று திரண்டது. இப்படித் திரண்ட ஹைட்ரஜன் மேகம் தன் நிறை காரணமாக மேலும் மேலும் அதிக ஹைட்ரஜனை ஈர்த்து ஒரு பூதாகாரமான ஹைட்ரஜன் கோளமாக வளர்ந்தது. தன் சுய ஈர்ப்பு காரணமாக ஹைட்ரஜன் அணுக்கள் மிகவும் பக்கத்தில் வரும் படி ஈர்த்தது. ஹைட்ரஜனுக்கு இருப்பது அணுக்கருவில் சிம்பிளாக ஒரே ஒரு ப்ரோடான் மட்டுமே. இப்படி நெருக்கப்பட்ட (நான்கு) ஹைட்ரஜன் அணுக்கள் (அணுக்கருக்கள்) ஒன்றோடு ஒன்று இணைந்து (ஒரு) ஹீலியம் அணுக்கருவாக மாறின. ( ஹீலியம் அணுக்கருவில் இரண்டு ப்ரோட்டான் + இரண்டு நியூட்ரான்) இப்படி தான் நம் சூரியன் உட்பட நட்சத்திரங்கள் தோன்றின என்கிறார்கள்

இயற்பியலிலும் வேதியியலிலும் வினை நடக்கும் முன் இருந்த நிறையும் வினை முடிந்த பின் இருக்கும் நிறையும் சமமாக இருக்க வேண்டும்.

அதாவது நாம் உப்புமா செய்யும் போது முதலில் மூலப் பொருட்களை எடை போடுவதாக வைத்துக் கொள்வோம். அதாவது (ரவை + தண்ணீர் + உப்பு + ப. மிளகாய் + கடுகு + எண்ணெய் + கறிவேப்பிலை ) எடை = உப்பும்மாவின் எடை + வெளியேறிய நீராவியின் எடை என்று இரண்டு பக்கமும் கச்சிதமாக பாலன்ஸ் செய்ய முடியும். இதை இயற்பியல் நிறை அழிவின்மை (conservation of mass ) என்கிறது.

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்வது: (சாங்கிய யோகம் சுலோகம் 24 ,25 ) ஆத்மாவை ஆயுதங்கள் துளைக்காது, நெருப்பு எரிக்காது நீர் நனைக்காது..அது எப்போதும் இருக்கும். எப்போதும் மாறாமல் இருக்கும்.


அதே போல இயற்பியல் நிறைக்கும் ஆற்றலுக்கும் அழிவில்லை என்கிறது.

சரி இப்படி அணுக்கருக்கள் இணைந்து உருவாகும் ஹீலியம் அணு(கரு) வின் நிறை அதன் மூலப் பொருட்களான நான்கு ஹைட்ரஜன் அணு(கரு)க்களின் நிறையை விட கொஞ்சம் குறைவு. அப்படியானால் அந்த மிச்ச நிறை எங்கே போனது?

ஹைட்ரஜனின் நான்கு புரோட்டான்களின் மொத்த நிறை = 4.02912 u

(ஒரு புரோட்டானின் நிறை : 1.00728 u )

ஒரு ஹீலியம் அணுக்கருவின் நிறை = 4.00151 u

நிறை இழப்பு =
4.02912 u - 4.00151 u = 0.02761 u (இங்கே u என்பது ஒரு ப்ரோடானின் நிறை அலகு , slightly higher than unity )
இந்த நிறை இழப்பு எங்கே போகிறது? ஐன்டீனின் E =MC2 இன் படி நிறை தன்னுடைய இன்னொரு முகமான ஆற்றலாக வெளிவருகிறது. இந்த நிறை மிக மிகச் சிறியது என்றாலும் அதை ஒளி வேகத்தின் இருமடியால் பேருக்கும் போது நமக்கு 26 MeV அளவு ஆற்றல் கிடைக்கிறது. சூரியனில் ஒவ்வொரு நொடியும் சுமார் 3.7×10^38
ப்ரோட்டான்கள் ஹீலியமாக மாற்றப்படுகின்றன. இந்த வேகத்தில் ஹைட்ரஜன் உபயோகப்படுத்தப்பட்டால் ஒரு நாள் நம் சூரியத்தாய் நம்மிடம் 'எனக்கு கேஸ் தீர்ந்து போச்சு, இனிமேல் உங்களுக்கு சமைக்க முடியாது என்று சொல்லிவிடலாம் ' என்று தானே பயப்படுகிறீர்கள்? இது நியாயம் தான்..ஆனால் இது நடக்க இன்னும் ரொம்ப நாள் ஆகும், நம் சூரியத்தாயின் Gas தீர்ந்து போவதற்கு இன்னும் ஐந்து கோடி வருடங்கள் ஆகும்! அது வரை அது நமக்கு வடைபாயாசத்துடன் விருந்திடும் என்கிறார்கள்.

(நிறை அழிக்கப்பட்டு ஆற்றலாக 'மாற்றப்படுகிறது' என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.இது தவறு. நிறை ஆற்றலாக தன்னை வெளிக்காட்டுகிறது. கடையில் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து பஞ்சு வாங்கி வருவதுபோலத்தான். ஐநூறு ரூபாய் (அளவு) ரொம்ப சின்னதாக இருந்தாலும் அதற்கு சமமாகக் கிடைக்கும் பஞ்சின் அளவு அபாரமாக இருக்கிறது. அந்த ரூபாய் நோட்டு இப்போது பஞ்சாக 'வெளிப்படுகிறது' என்று சொல்லலாம்..அதே மாதிரி தான் ஒரு சிறிய அளவு நிறை அபாரமான ஆற்றலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.)

புராதன இயற்பியலின் படி அணுக்கரு இணைவு என்பது சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஒரு புரோட்டானும் இன்னொரு புரோட்டானும் ஒன்றை ஒன்று பக்கத்தில் நெருங்கும் போது அவைகளுக்கிடையே மின் காந்த எதிர்ப்பு விசைபயங்கரமாக அதிகரித்து விலக்கித் தள்ளுகிறது. (ப்ரோடான்களை ஓட்ட வைக்கும் வலிய விசையானது ப்ரோட்டான்கள் மிக மிக அருகில் வந்தால் மட்டுமே செயல்படுகிறது). இந்த எதிர்ப்பையும் மீறிக் கொண்டு ப்ரோட்டான்கள் அதிவேகத்தில் மோதிக் கொண்டு இணைய வேண்டும் என்றால் சூரியனின் உள்ளக வெப்ப நிலை கிட்டத்தட்ட 10 பில்லியன் செல்சியஸ் களாக இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் நாமெல்லாம் என்றோ சூரிய வெப்பத்தில் DEEP FRY ஆகி இருப்போம்.கணக்கீடுகள் சூரியனின் உள்ளக வெப்பம் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் என்று காட்டின.

ஒரு ப்ரோடான் இன்னொன்றை நெருங்கும் போது அது ஒரு விதத்தில் ஒரு துளைக்க முடியாத பெருஞ்சுவர் ஒன்றை எதிர்கொள்கிறது. ஆனால் நம் குவாண்டம் Tunneling தான் இருக்கிறதே? அந்த சுவரில் அனாயாசமாக ஒரு சுரங்கம்தோண்டிக் கொண்டு இந்த ப்ரோட்டான் இன்னொன்றுடன் இணைந்து , yes they become Gay couple now !

அதாவது கம்சனின் பயங்கர காவல் உள்ள சிறையைக் கடந்து வசுதேவர் வெளியே போகவும் முடியும் (alpha emission ) கிருஷ்ணன் உள்ளேயும் வர முடியும் (nuclear Fusion ) !!!

சரி enough of tunneling ...அடுத்த டாபிக் -கிற்குப் போவோம்... Superposition !


முத்ரா