இந்த வலையில் தேடவும்

Sunday, January 17, 2016

ஜோதிடம்


ஜோதிடம் கொஞ்சம் நெருடலான விஷயம். ஜோ. அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்டது என்கிறார் ஓஷோ. இந்தப்பக்கம் அறிவியல் அந்தப்பக்கம் ஆன்மிகம். முற்றிலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாத முற்றிலும் பொய் என்று ஒதுக்கி விட முடியாத ஒன்று ஜோதிடம். முதலில் ஜோதிடமும் வானவியலும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. வானியல் என்றால் ஒன்பது கிரகங்கள், சில நட்சத்திரங்கள் அவ்வளவே. இப்போது தான் காஸ்மாலஜியில் காலக்ஸிகள் , நெபுலாக்கள் , சூப்பர் நோவாக்கள் என்று போய் விட்டோம். பின்னர் சில சாமார்த்திய  ஆசாமிகள் ராஜாவை தாஜா செய்து எதிர்காலம் கணித்தல், போருக்கு செல்ல நல்ல நாள் குறித்துக் கொடுத்தல் போன்றவற்றை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். அது இன்று வரை 'பெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருப்பதால் கணவனிடம் சுகம் பெறுவதில்லை'  என்ற ரேஞ்சுக்கு படுக்கை அறை வரை டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது.

ஜோதிடம் ஆன்மிகம், அறிவியல் என்ற தன் இரண்டு துருவங்களில் இருந்தும் விமர்சனத்துக்கு ஆளாகி வந்துள்ளது. அறிவியல், கிரகங்கள் உயிரற்ற வெறும் பாறைகள். சூரியனுடைய பந்தத்தால் பிணைக்கப்பட்டு சுற்றி வருபவை உனக்கு திருமணம் எப்போது ஆகும் என்று அவை எப்படி நிர்ணயிக்கும் என்று கேட்கிறது. அடுத்த துருவத்தில் பக்தர்கள் , எனக்கு இறைவன் ஒருவன் போதும், நாள் நட்சத்திரம் எல்லாம் வேண்டாம். சந்திரனே அபிராமிக்கு குண்டலம் தானே!

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த        

கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு    
 தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்          
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

எல்லாமே கோள்கள் தான் என்றால் கடவுளுக்கு என்ன வேலை?

சரி...

நம்மைச் சுற்றிக் கவிழ்ந்திருக்கும் வானத்தில் அரைக் கோளத்தில் இந்த ஒன்பது கோள்கள் சுற்றுகின்றன. அந்தக் காலத்தில் இதை ஒரு வான கடிகாரமாகப் பயன்படுத்தினார்கள். அவ்வளவே. கடிகாரம், காலண்டர் எல்லாம் மிகவும் பின்னால் வந்த சமாச்சாரங்கள். அந்தக் காலங்களில் அறுவடைக்கு காலம்  தெரிய வேண்டி இருந்தது. விதைப்பதற்கு காலம் அறிய வேண்டி இருந்தது. திசை அறிய வேண்டி இருந்தது. ஒருவரின் வயது தெரிய வேண்டி இருந்தது. இஸ்லாமியர்கள் மெக்காவின் திசை நோக்கித் தொழ வேண்டி இருந்தது. இப்படி.. இதற்கெல்லாம் வானத்தைத் தான் பார்த்தார்கள். perfect clock !! உதாரணமாக திருவாதிரை நட்சத்திரம் எழும் போது மழை பொழியும். விதை விதைக்க ஏற்ற நேரம். ஆடிப்பட்டம் தேடி விதை. பன்னெடும்காலமாக Polaris எனப்படும் துருவ நட்சத்திரத்தை வைத்தே வட திசையை அறிந்து வந்துள்ளார்கள் பயணிகள். துருவ நட்சத்திரம் வானத்தில் கண்டபடி அலைந்து திரியாமல் வடக்குத் தொடுவானில் அப்படியே நிற்கும். எனவே காம்பாஸ் வரும்வரை அது ஒரு சிறந்த திசைகாட்டி.


சந்திரன் நம் பூமியை சுற்ற கிட்டத்தட்ட 27 நாட்கள் ஆகின்றன.இந்த 27 நாட்களும் சந்திரன் தன் பின்னணியில் இருக்கும் 27 நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து செல்கிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை கற்பனையாக கோடு இணைத்து வரைந்து குதிரைத்தலை (அஸ்வினி) , கை (ஹஸ்தம்) என்றெல்லாம் பெயர் இட்டார்கள். சில தனி விண்மீன்கள். (மகம், சித்தரை...) பல, பெரும்பாலும் விண்மீன் கூட்டங்கள். குழந்தை பிறக்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் பின்னணியில் இருக்கிறதோ அதுவே அந்தக் குழந்தையின் பர்த் ஸ்டார். சில நட்சத்திரங்கள் நல்ல நட்சத்திரங்கள் என்று சொல்வது நாம் முதலிலேயே கூறிய பருவ நிலைகளை வைத்துத் தான். சூரியன் தன் பின்னணியில் இந்த 27 நட்சத்திரங்களையும் கடந்து செல்ல ஓர் ஆண்டு ஆகிறது. உதாரணமாக இன்று சூரியன் மக நட்சத்திரத்தில் உள்ளது என்றால் சூரியன் இன்று எழும் போது கூடவே மகம் எழுந்தது என்று அர்த்தம். தோராயமாக இரண்டு வாரங்கள் சூரியன் மகத்தில் இருக்கும். சில நட்சத்திரங்கள் தோன்றும் போது நல்ல மழை பொழிந்து சுபிட்சம் ஏற்பட்டதால் அவை சுப நட்சத்திரங்கள் எனப்பட்டன. சில நட்சத்திரங்கள் தோன்றும் போது பஞ்சம் வந்தது. இவை ஐந்தாறு முறை ரிபீட் ஆனதும் அந்த நட்சத்திரம் கெட்டது ஆகி விட்டது. உண்மையில் எல்லா நட்சத்திரங்களும் எரியும் ஹைட்ரஜன் பந்துகள் அவ்வளவே. நல்லதாவது கெட்டதாவது !


பூமி சூரியனை சுற்றி வருவதால் ஒவ்வொரு மாதமும் சூரியனின் பின்னணியில் உள்ள விண்மீன்கள் மாறுகின்றன. இந்த சுற்றுவட்டப் பாதையை 12 பகுதிகளாகப் பிரித்து அதில் கற்பனை உருவங்களை வரைந்து அதை ராசி என்றார்கள். சில நட்சத்திரக் கூட்டங்கள் கற்பனையாக ஆட்டை உருவாக்கின. ( மேஷம்) சில ஒரு  குடத்தை. (கும்பம்) இப்படி.


இப்படி மாதம் ஒரு ராசி வீதம் சூரியன் ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் கடக்கிறது. (அல்லது கடப்பது போல தோன்றுகிறது)  ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சூரியன் செல்வது சூரியப் பெயர்ச்சி அல்லது சங்கராந்தி எனப்படுகிறது. நாம் பொங்கல் என்று அழைப்பது பொதுவாக சூரியன் மகர ராசியில் நுழைவது. எனவே பொங்கல் புத்தாண்டு கிடையாது. ராசி சக்கரத்தை முடித்து சூரியன் மீண்டும் மேஷத்தில் பிரவேசிக்கும் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டு. இதே போல மற்ற கிரகங்களும் இந்த ராசிக் கட்டங்களின் பின்னணியில் பயணம் மேற்கொள்கின்றன. ஒவ்வொரு ராசியையும் சந்திரன் சீக்கிரமாக 2 1/4 நாட்களில் கடந்து விடுகிறது. வியாழன் ஒரு ராசியைக் கடக்க 1 வருடம் ஆகிறது. சனி கடந்து செல்ல 2 1/2 ஆண்டுகள். சனி ரொம்ப ஸ்லோ. இதனால் தான் சனியின் காலை கொஞ்சம் ஊனமாக்கி வைத்தார்கள். சனியை வாரத்தின் கடைசி கிழமையாகவும் வைத்தார்கள். வருடம் ஒருமுறை நமக்குத் தவறாமல் ஜோதிட சிகாமணிகள் கணித்துத் தரும் குரு  பெயர்ச்சி பலனும் 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சிப் பலனும் கிடைத்து விடுகிறது. 2 நாட்களுக்கு ஒருமுறை 'சந்திரப் பெயர்ச்சிப் பலன்' என்று புத்தகம் போட்டால் அடிக்க வந்து விடுவார்கள். வாரத்தின் ஏழு நாட்களைத் தவிர இந்த ராகு மற்றும் கேது என்ற சாயா கிரகங்கள். சூரியன் பூமியை சுற்றும் நீள் வட்டமும் சந்திரன் சுற்றும் நீள்வட்டமும் எதிர் எதிர் புறங்களில் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளிகள். உண்மையில் சந்திரன் சுற்றும் வழி இங்கிருந்து 384000 கி .மீ தூரத்திலும் சூரிய சுற்று வழி இங்கிருந்து 15 கோடி கி .மீ தூரத்திலும் உள்ளதால் அறிவியல் படி தேர் ஈஸ் நோ ராகு-கேது ஸ்நேக்ஸ்.

ஒரு குழந்தை பிறக்கும் போது வானத்தில் கோள்கள் எந்த
நிலையில் உள்ளன என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியம். 9  கோள்களும் எந்தெந்த  ராசியின் பின்னணியில் இருக்கின்றன என்று பார்த்துக் குறித்து வைப்பார்கள். சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அதுவே அந்தக் குழந்தையின் ராசி. நம் ஜாதகக் கட்டம் என்பது 12 கட்டங்களைக் கொண்டது. இவை உண்மையில் வானத்தை கிழக்கில் இருந்து மேற்காக 12 பிரிவுகளாகப் பிரித்த கற்பனைப் பிரிவுகள். வானத்தில் மீனோ, ஆடோ, கன்னிப்பெண்ணோ எதுவும் இல்லை. நாம் பிறந்த கணத்தில் சில கோள்கள் மட்டுமே வானத்தில் பார்வைக்குக் கிடைக்கும். சில மேற்கு வானில் மறைந்து கொண்டிருக்கும். சில வானத்தில் தென்படாது.  நம் ராசிக் கட்டத்தில் சில கட்டங்கள் காலியாக இருக்கும். நாம் பிறந்த போது வானில் அந்த ராசிகள் தென்படவில்லை(அந்த ராசியின் பின்னணியில் எந்த கிரகமும் இல்லை) என்பது பொருள். பிறந்த நேரத்தில் கிழக்கில் எழும் ராசி தான் அந்தக் குழந்தையின் லக்னம் அல்லது முதல் வீடு. அதற்கு அடுத்தது இரண்டாம் வீடு. சிம்ம லக்னம் என்றால் குழந்தை பிறந்த சமயத்தில் கிழக்கு வானில் சிம்ம ராசி இருந்ததாக அர்த்தம். லக்னத்தில் இருந்தே clockwise ஆக வீடுகளை எண்ணுகிறார்கள்.



கீழே உள்ளது ராசிக்கட்டம். இதில் மேஷம் முதல் மீனம் வரை ராசிகள் கடிகாரமுள் திசையில் காட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அதிபதி. மேஷத்துக்கு செவ்வாய் . குழந்தை பிறந்த போது செவ்வாய்  மேஷத்தில் இருந்தால் அந்த மேஷத்துக்கு உரிய முதல் கட்டத்தில் "செ" என்று குறிப்பார்கள். இது ஆட்சி வீடு எனப்படும். கிரகங்கள் அவற்றின் ஆட்சி வீட்டில் இருப்பது நல்ல பலன்களைக் கொடுக்குமாம்.




ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் உச்சம் பெறுகிறது. உதாரணமாக சூரியன் மேஷத்திலும் செவ்வாய் மகரத்திலும் . may be , இந்த ராசியில் இருந்தால் அந்தக் கிரகம் ஒளி மிகுந்து இருக்கும் என்பதாக இருக்கலாம். சூரியன் மேஷத்தில் இருக்கும் சித்திரையில் தானே பலமாக தகிக்கிறது? சில கிரகங்கள் சில ராசிகளில் நீசம் அடைகின்றன. உதாரணமாக சூரியன் துலாம் ராசியில் நீசம் அடைகிறது. may be , இந்த ராசியில் இருந்தால் அந்தக் கிரகம் ஒளி குறைவாக  இருக்கும் என்பதாக இருக்கலாம். பிறந்த போது கிரகங்கள் அவற்றுக்கு உரிய உச்ச ராசிகளில் இருந்து விட்டால் அதிர்ஷ்டமாம். வானவியல் ரீதியாக குழந்தை பிறந்த போது ஒன்பது கிரகங்களும் பிரகாசமாக இருந்திருக்க வேண்டும். இப்படி யாருக்கும் நடக்காது. ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் என்று அடிக்கடி கேட்பீர்கள். அவன் தொட்டதெல்லாம் தங்கம் தானாம். உண்மையில் 2, 3 கிரகங்கள் உச்சத்தில் இருந்து
விட்டாலே பயங்கர அதிர்ஷ்டம் தானாம். என் ஜாதகத்தில் ஒரு கிரகம் கூட உச்சம் இல்லை.ஹிஹி ..


இது அம்மாவின் ஜாதகம். மகத்தில் பிறந்ததால் ஜகம் ஆகிறார். சுக்கிரன் மீனத்தில் உச்சம். அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் உள்ளதைக் கவனிக்க.
 
. கிரகம் வக்கிரம் ஆவது என்று ஒரு கான்செப்ட் உள்ளது. உண்மையில் கிரகங்கள் பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றுவதால் அவைகளின் வேக மாறுபாடு காரணமாக கிரகங்கள் u turn அடிப்பது போலத் தோன்றுவது. 



ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? 


அடுத்து இந்த செவ்வாய் தோஷம். ஜாதகரின் லக்னக் கட்டத்தில் இருந்து எண்ணும் போது அல்லது சந்திரனில் இருந்து எண்ணும் போது  2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.இப்படி இருந்தால் வாழ்க்கைத் துணை மரணம், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு இவைகள் அமையுமாம். :)  கீழே செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகம் காட்டப்பட்டுள்ளது. சந்திரனில்  இருந்து 7 ஆம் வீட்டில் செவ்வாய் உள்ளது.

சரி. கடைசியாக இவை எல்லாம் எந்த அளவு உண்மை என்று விவாதிக்கலாம். முதலில் அறிவியல் ரீதியாக கோள்கள் நம்மை ஈர்ப்பு மற்றும் காஸ்மிக் கதிர்களால் மட்டுமே பாதிக்க முடியும். ஜோதிடம் பூமியை நிலையானது என்று கருத்தில் கொண்டு உருவான ஒன்று. ஆனால் பூமி அண்ட வெளியில் சுற்றும் ஒரு சின்னப்பையன் அவ்வளவே. மேலும் சூரியன் தவிர மற்ற கிரகங்களின் ஒளி சூரிய ஒளியே. இந்த லட்சணத்தில் குரு லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார் என்றால் என்ன அர்த்தம்? ஆனால் அந்த பாதிப்புகள் பூமியில் உள்ள எல்லாருக்கும் பொதுவாகவே இருக்கும். மேலும் ஏன் ஒரு ஜாதகருக்கு ராஜ வாழ்க்கை? இன்னொருவருக்கு நாய்ப்பாடு? இதற்கு போன ஜென்மத்தைக் காரணம் காட்டுகிறார்கள். சரி, போன ஜென்மத்தின் கணக்குப்படி நான் இந்த ஜென்மத்தை வாழ்ந்து முடிக்கிறேன். அப்படியென்றால் இந்த ஜென்மம் எப்படி அடுத்த ஜென்மத்தை பாதிக்கும்? போன ஜென்மத்தில் இந்த குழந்தை இந்தப் பாவம் செய்தது, எனவே இது பிறக்கும் போது நாம் 7ஆம் இடத்தில் போய் நின்று கொள்வோம் என்று செவ்வாய் நினைக்குமா? மேலும் ஜோதிடத்திலேயே ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள், விதிகள், விதி விலக்குகள், பரிகாரங்கள்.. செவ்வாய் தோஷத்துக்கே 1008 விதி விலக்குகள் உள்ளன. எது உண்மை?எல்லாமே கிரகங்கள் என்றால் மனித முயற்சிக்கு என்ன மதிப்பு?

ஜோதிடம் statistics படி வேலை செய்கிறது. 10 பேரில் 6 பேருக்கு கணிப்பு சரியாக அமைந்து விட்டால் ஆகா ! ஜோதிட சிரோன்மணி சொன்னது பலித்து விட்டது!  தப்பாக அமைந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். 
எனிவே, எதுவும் கெட்டது நடந்து விடவில்லை. மே பி , கடவுளின் கருணை! ஒரு நிகழ்ச்சி. 1186 ஆம் ஆண்டில் ஏழு கோள்கள் ஒரே ராசியில் கூடும் எனவும் அப்போது பெரும் சூறாவளி வரும் எனவும் இங்கிலாந்தில் ஜோதிடர்கள் பயமுறுத்தினார்கள். ஐரோப்பாவில் பல இடங்களில் தரைக்கடியில் பதுங்கு அறைகள் அமைக்கப்பட்டன. மக்கள் உண்ணாநோன்பு இருக்கப் பணிக்கப் படுகிறார்கள். ஆனால் அஞ்சியது போல எதுவும் நடக்கவில்லை, அன்றைய நாளில். இதைக் கிண்டலடித்து யோர்க் க்ரோனிகள் என்னும் பத்திரிகையில் ஒரு பாதிரியார் இவ்வாறு எழுதுகிறார்: "மேடையில் இருந்து பேராயர் விட்ட குசுவைத் தவிர வேறெந்த காற்றும் அடிக்கவில்லை".. :)

10 க்கு 8 குசுக்கள் வந்தாலும் கோ -இன்சிடன்ஸ் ஆக வரும் 2 சூறாவளிகளால் ஜோதிடம் இன்னும் பிழைத்துக் கொண்டுள்ளது. ஜோதிடர்களின் பணப்பையையும் நிரப்பி வருகிறது. அடியேன் எப்போதும் நாள் என் செயும் கட்சி மட்டுமே.

சமுத்ரா ..







Thursday, January 7, 2016

பாண்டிச்சேரி - பயணக் கட்டுரை

நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாக்-இல் சந்திக்கிறோம். :)

If traveling was free, you will never see me again என்பது எனக்குப் பொருந்தும். :) புதிய இடங்களை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரங்களை எக்ஸ்ப்ளோர் செய்வது மிகவும் பிடிக்கும். பொதுவாக, தனியாகவே கிளம்பி விடுவேன். தனியாகச் செல்வதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. செலவுகளை ஒருவரே ஏற்க வேண்டும். உடம்புக்கு ஏதாவது என்றால் ரிஸ்க். ஆனாலும் அதில் கொஞ்சம் சவுகரியங்கள் இருக்கவே செய்கின்றன. நானே ராஜா நானே மந்திரி. யாருக்காகவும் காத்திருக்கத் தேவை இல்லை. நினைத்த இடங்களுக்குச் செல்லலாம். பாண்டிச்சேரிக்கு ஒரு சோலோ ட்ரிப் கிளம்பி விட்டேன். பெங்களூரு கிருஷ்ண ராஜ புறத்தில் இருந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் .11005 பெங்களூருவில் பயங்கரக் குளிர். இரண்டு ஜாக்கெட்டுகள் போட்டுக் கொண்டிருந்தாலும் குளிர் ஊடுருவிக் கொண்டு உள்ளே பாய்கிறது. அந்தக் குளிரிலும் பிளாட் பாரத்தில் ஒருவர் லேசான சட்டை மட்டுமே அணிந்து படுத்திருந்தார். "சுர மந்திர தரு மூல நிவாஸ :" என்று ஆதி சங்கரர் சொல்வது போல. வானமே கூரையாய் ...நமக்குத் தான் ஜாக்கெட், ஸ்வட்டர், ஷூ என்று ஆயிரம் சுமைகள். எனிவே, டிரெயின் சரியாக 10:30 க்கு குறித்த நேரத்தில் பந்து சேரி விட்டது. மும்பையில் இருந்து வந்தாலும். குர்லா குர்லா என்று பெங்களூருவில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் உண்டு. மறுநாள் கோயமுத்தூரில் ஏதேனும் அவசர வேலை என்றால் அதை தயவு செய்து புக்கி விடாதீர்கள். ஸ்கெட்யூல் டைம் 22:15 தான். அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருநாள் SBC க்கு அதிகாலை 3:30 மணிக்கு சாவகாசமாக வந்து சேர்ந்தது. ஆற அமற கோவைக்கு காலை 11:30 க்குப் போய்ச் சேர்ந்தது.

ம்ம்ம்..

கூட்டம் அதிகம் இல்லை. வீக் டே என்பதால். லோயர் பர்த் . எதிர் சைடு லோயரில் ஆர். ஏ  .ஸி என்று 3 பெண்கள் ஒன்றாக அமர்ந்திருந்து அரட்டை அடித்துக் கொண்டே வந்தார்கள். அடுத்ததில் நண்பர்கள் குழாம் ஒன்று சிரத்தையாக சீட் ஆடிக் கொண்டிருந்தார்கள். லைட்டை அணைக்கவில்லை. ட்ரையின் பயணத்தின் போது எனக்கு இந்த அரட்டை ஆசாமிகள் அலர்ஜி. கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பர்த்தை மேலே மாட்டி லைட்டை அணைத்து தூங்கி விட வேண்டும் எனக்கு. நல்ல வேளையாக அரட்டை ஆசாமிகள் காட்பாடியில் இறங்கி விட்டார்கள்.

சரியாக ஏழு மணிக்கு புதுச்சேரியை அடைந்து நின்றது வண்டி.

ஆட்டோ வாலாக்கள் லிட்டெரல் ஆக பகல் கொள்ளை அடிக்கிறார்கள். பாண்டியில் முழுவதும் ஆட்டோ ராஜ்ஜியம் தான் போலும். சிடி பஸ்கள் மருந்துக்கும் கண்ணில் தென்படவில்லை. பிளாட்பாரத்துக்கே வந்து ஆட்டோ வாலாக்கள் பையைப் பிடுங்குகிறார்கள். ஸ்டேஷனுக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் unofficial ஆக நின்று கொண்டு வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஈ .ஸி .ஆர் போவதற்கு வாய் கூசாமல் 200-250 கேட்கிறார்கள். ஸ்பெஷலாக அங்கே நிற்பதற்கு அவர்கள் பணம் கட்ட வேண்டும் என்று சொல்வது நம்ப முடியவில்லை. மீட்டர் என்ற ஜந்துவை எதற்கு வம்பு என்று நன்றாக பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி வைத்து விட்டார்கள். மீட்டர் என்றால் ஏதோ கெட்ட வார்த்தையை செவி மடுத்தது போல முகம் சுளிக்கிறார்கள் .சரி. நமக்கு முதல் ட்ரிப் என்பதால் வேறு வழி இன்றி ஏறினேன். தெரியாமல் லாஸ்பெட்டில் ஹோட்டல் புக் செய்து விட்டேன். 

முதலில் மங்கலகரமான மீன் வாசனையுடன் உங்களை வரவேற்கிறது புதுச்சேரி.
சாலைகள் சுத்தமாக இருக்கின்றன. காலைக் குளிர் கொஞ்சம் காற்றில் கலந்திருந்தது. எம்.ஜி.ஆர் ரீகென்சி என்ற விதோனப் பெயர் கொண்ட ஹோட்டல். ஹோட்டலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு மதியம் 12 மணி வாக்கில் ஆரவில் கடற்கரைக்கு சென்றேன்.
வாவ். கடற்கரை மனித நடமாட்டம் இல்லாமல் அழகாக  இருந்தது. சென்னை கடற்கரையைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு பாண்டிச்சேரியின் சுத்தமான கடற்கரைகள் ஆச்சரியத்தைத் தரும். வெயில் அதிகம் என்பதால் திரும்பி வந்து விட்டேன். வழியில் வெளிநாட்டுப் பெண்கள் ஜோராக பைக்குகளில் பறக்கிறார்கள். ஒரு நல்ல வெஜ் ஹோட்டலுக்குச் செல்லுமாறு ஆட்டோவைப் பணித்தேன். அவர் சர்குரு என்ற ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழையத் தயக்கமாக இருந்தது. ஏனெனில் உள்ளே முழுவதும் வெளிநாட்டுக் காரர்கள். நம் நாடுதான் என்றாலும் அவர்கள் உளவியல் ரீதியாக நமக்குள் ஒரு inferiority யை ஏற்படுத்தி விடுகிறார்கள். சர்வர்களும் வெளி நாட்டவர்களை கொஞ்சம் எக்ஸ்டிரா கவனத்துடன் கவனித்தார்கள். இருப்பினும் அவர்கள் நம் சவுத் இன்டியன் மீலை வெறும் கைகளில் பிசைந்து சாப்பிடுவது பார்க்க அழகாக இருக்கிறது. யுவதி ஒருவர் பெரிய அப்பளத்தைக் கையில் வைத்துக் கொண்டு இந்த வஸ்துவை கடிப்பதா, உடைப்பதா, என்று தெரியாமல் நோக்கிக் கொண்டிருந்தார். பாண்டியில் எல்லா இடங்களும் ஒருவித exotic (தமிழில் என்னவோ) இருக்கின்றன. இந்த உணவகமும் அப்படியே. பில் 180 
ரூபாய் வந்தது. உணவு நன்றாகவே இருக்கிறது.ஐரனி என்ன என்றால் நம் நாட்டுக் காரர்கள் ஒன் நூடுல்ஸ் ப்ளீஸ் என்று ஆர்டர் செய்து கொண்டிருக்க அவர்கள் நம்மூர் பூண்டு ரசத்தை இன்னும் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உணவகத்தின் வெளியே லோக்கல் பெண்கள் சுருக்குப் பைகளை பரப்பி வைத்து விற்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் அதை ஆர்வமுடன் வாங்குகிறார்கள். 



ஆட்டோ எம். ஜி. ரோடு வழியே செல்கிறது. எம்.ஜி ரோடு பழமையும் புதுமையும் கலந்து அழகாக இருக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத சிறிய பொதுக்கூட்டம் ஒன்றில் ஒருவர் கர்ம சிரத்தையுடன் ஜெயலலிதாவை திட்டிக் கொண்டிருக்கிறார். பழங்காலக் கட்டிடங்கள் காணக் கிடைக்கின்றன. சைக்கிள் ரிக்ஷாக்கள் இருக்கின்றன. அதில் யாரும் பயணிப்பதாகத் தெரியவில்லை. வழியெங்கிலும் ஏழை மாரியம்மன், ரட்சக மாரியம்மன் என்று வினோதப் பெயர்கள் கொண்ட கோயில்கள் காணக் கிடைக்கின்றன. அம்மாவைப் புகழும் போஸ்டர்கள் ஒன்றிரண்டு அங்கேயும் விதிவிலக்கு இல்லை போலும். ஆட்டோக்காரர் இப்போது காந்தி சிலை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.

இன்னோர் அழகிய கடற்கரை. இங்கே மணல் இல்லை. நுரை ததும்பும் பெரிய அலைகள் மெகா சைஸ் கருங்கற்களை மோதி மோதி பாலிஷ் செய்கின்றன. கடலில் இறங்க இந்த அபாயகரமான கற்களைக் கடந்து செல்ல வேண்டும். தைரிய இளைஞர்கள் சிலர் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள். காந்தி சிலைக்கு எதிரே பாண்டிச்சேரி அரசின் சார்பில் சர்வதேச யோகா பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கே ஈயாடியது. ஏழெட்டு தலைகள் அங்கே வெயிலுக்கு ஒதுங்கி விருந்தன. மைக்கில் ஒரு பெண்மணி கடமை உணர்ச்சியுடன் கிட்டத்தட்ட தமிழ் போல் இருந்த ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தார். concentrate  anagatha chakra; concentrate  moolaadhar chakra என்றெல்லாம். எனக்கு உண்மையில் சக்ரா கோல்ட் டீ தான் சாப்பிட வேண்டும் போலிருந்தது. குண்டலினி எழும்புகிறதா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மட்ட மட்ட மத்தியான வேளையில். வெல் எனக்கு ஏப்பம் தான் எழும்பியது.



நிற்க. இப்படி பல்க் ஆக யோகாவை கற்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது குரு சீடன் இருவருக்கு இடையேயான one -to -one relationship . மருத்துவர் ஒருவர் ஆயிரம் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு மாஸ் வைத்தியம் பார்த்தால் எப்படி இருக்கும்? அது போலத்தான் இது. ஒவ்வொருவரின் உடல் மன சித்தங்கள் வேறு பட்டவை. எனிவே மாஸ் யோகாவில் ஒரு அரை மணிநேரம் பொழுது போனது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள சில கபே க்கள் நம்மை அரை நூற்றாண்டு பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. ஹிலாரியஸ்! 



மீண்டும் ஹோட்டல் அறைக்குத் திரும்பி லோக்கல் சானல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
தூக்கம் வரவில்லை. மாலை 5:15 மணிக்கு மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பி விட்டேன். கொண்டுவந்த பணத்தில் பெரும்பாலான பகுதி ஆட்டோவுக்கே கரைந்து கொண்டிருந்தது. ஆசிரமம் மற்றும் கணேஷா டெம்பிளுக்கு மீண்டும் ஒரு 150/-


அரவிந்தரின் ஆசிரமம் நகருக்கு நடுவே அமைதியான இடத்தில் சுத்தமான சுற்றுப் புறத்தில் வீற்றிருக்கிறது. சாலைகள் அதி சுத்தம். ஆசிரமத்தின் 10% பகுதி மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப் படுகிறது. அதுவும் மாலை ஆறு மணிவரை மட்டுமே. நான் போகும் போது  5:40 ஆகி விட்டிருந்தது. ஆசிரமத்தின் உள்ளே ஒரு பெரியவர் நின்று கொண்டு பேஷாதீர்கள் என்று உதட்டின் மேல் விரல் வைத்து செல்லமாக அதட்டிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஈஷா யோக மைய தியான லிங்க மண்டபம் போல் இருக்கிறது. அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அதைச் சுற்றிலும் மக்கள் மண்டியிட்டு அமர்ந்து வணங்குகிறார்கள். சுற்றிலும் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். பறவைகளின் ஒலி அந்த சூழ்நிலைக்கு அழகு சேர்க்கிறது. வாசனை ஊதுபத்தி எரிகிறது. சமாதி மேல் இலைதழைகள் விழாமல் இருக்க வலைகளைக் கட்டி உள்ளார்கள். கூன் விழுந்த பாட்டிகள் தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். 75% வெளிநாட்டவர்கள் தான். பெரும்பாலான இடங்கள் No Access !
 ஆசிரமத்தில் ஒருவித பாசிடிவ் அதிர்வுகள் நம்மைத் தொற்றிக் கொள்வது உண்மை. மாலையில் கொஞ்சம் மூட் அவுட் ஆகி இருந்தேன். what am I doing with my life என்று. ஆசிரம விசிட்-டிற்குப் பிறகு அப்படி ஒரு உற்சாகம். 



அடுத்து ஆசிரமத்தை ஒட்டி உள்ள, புகழ் பெற்ற மணக்குள விநாயகர் திருக்கோயில். கோயிலின் முன்னே லக்ஷ்மி என்ற பெயர் தாங்கிய கம்பீர யானை ஒன்று நிற்கிறது. அதை மக்கள் போட்டோ எடுத்தும், ஆசீர்வாதம் வாங்கியும் இம்சித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு இந்தக் கோயில்களில் யானைகளை இம்சிப்பது பிடிக்கவே பிடிக்காது. உள்ளே விநாயகரை வணங்கி விட்டு வெளியே யானையை வேடிக்கைப் பொருளாக வைத்திருப்பது மிகப்பெரிய ஐவரி சாரி ஐரனி . வெளிநாட்டுப் பெண்கள் flash களுடன் போட்டோ எடுக்கிறார்கள். பாவம் யானை! அவர்களுக்கு யானை அபூர்வம் போல. ஒருவித மினி டைனோசர் !

கோயில் ஒரு மிகப்பெரிய திருமண மண்டபம் போல இருக்கிறது. சுவர்களில் விதம் விதமான விநாயகர் உருவங்கள். முருகனுடன் பில்லியனில் அமர்ந்து செல்லும் விநாயகர், தாய்லாந்து விநாயகர், இந்தோனேஷியா விநாயகர், அன்ன வாகனம் கொண்ட பிரம்ம விநாயகர், மயூர விநாயகர், லக்ஷ்மி விநாயகர், ஹேரம்ப விநாயகர், டுண்டி விநாயகர், வாதாபி விநாயகர், சிங்கமுகம் கொண்ட விநாயகர்(இது கொஞ்சம் ஓவர்) , இரண்டுமுக, மூன்றுமுக , ஆறுமுக விநாயகர் இப்படியெல்லாம். கடவுள்களிலேயே இப்படிப்பட்ட ஒரு பாலிமார்பிசம் விநாயகருக்கு மட்டுமே வாய்த்துள்ளது. மேற்கூரையில் திருமால் விநாயகரிடம் பாஞ்சஜன்யம் வாங்குதல் கஜமுகாசுர வாதம் ஞானக்கனி பெறுதல் போன்ற ஓவியங்கள். விநாயகர் கோலாகலமான கடவுள். கருவறையில் மணக்குள விநாயகர் சப்பணமிட்டு அருள் பாலிக்கிறார். சுற்றிலும் முருகன், மற்றும் உற்சவர் சந்நிதிகள். சிறிய கோயில் தான். சிறிய கோயில் என்றாலும் அங்கே சைடில் ஒரு சிறப்பு தரிசனக் க்யூ நகர்ந்து கொண்டிருக்கிறது. கான்ட் ஹெல்ப்.

ஆசிரமத்தை சுற்றியுள்ள வீதிகளில் பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். புத்தகம் மற்றும் துணிக் கடைகள். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். எல்லாமே வெளிநாட்டவர் வருகையால் கொள்ளை விலை. எத்தனை சொன்னாலும் அவர்கள் புன் முறுவலுடன் பேரம் பேசாமல் வாங்கி விடுகிறார்கள். அருகில் அடையாறு ஆனந்த பவன். அங்கே பிரபலமான கொழுக்கட்டை சாப்பிட்டேன். மீண்டும் கடற்கரை விசிட். இரவில் கடற்கரை அழகாக ஜொலிக்கிறது. வெண்ணிற நுரைகளுடன் இத்தனை பெரிய அலைகளை பாண்டியில் தான் பார்க்கிறேன். கடலைப் பார்க்கப் பார்க்க பரவசம். அது எல்லைகள் இல்லாமல் விரிந்து இருப்பதாலோ என்னவோ. நாம் எல்லைகளுடன் உள்ளவைகளையே பார்த்துப் பழகி விட்டோம். கடல் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. என்னதான் இருந்தாலும் அது நமது பிறந்த வீடு அல்லவா? 
கடற்கரை உணவகம் ஒன்றில் பிரைடு ரைஸ் சாப்பிட்டு பாண்டியில் ஒருநாள் இனிதே முடிந்தது. ஆட்டோக் காரர் சைக்கிள் கேப்பில் "சார், மசாஜ் சார், கேர்ள்ஸ் , சூப்பரா இருக்கும், போலாமா " என்றார். பெங்களூரில் இல்லாததா அய்யா என்று கேட்டவுடன் அமைதியாகி விட்டார். என் பர்ஸ் மட்டும் தலைவனை எண்ணி வாடும் தலைவியின் இடை போல சிறுத்துக் கொண்டே வந்தது. 

ஹோட்டலின் மெத்து மெத்தென்ற படுக்கையில் நன்றாகத் தூங்கிப் போனேன். மசாஜ் பார்லர் செல்வது போல கனவு வந்தது.

கடைசியாக ஆரோவில். மறுநாள். ஈ .ஸி .ஆர். இல் இருந்து ஆரோவில் செல்ல ரூ.550/- ஆட்டோ கட்டணம்.! :)



உலகம் முழுவதையும் ஒரே சமுதாயமாக அமைத்துப் பார்க்கும் ஒரு பரிசோதனை முயற்சி ஆரோவில். ஓஷோ கூட இதை கம்யூன் என்ற பெயரில் முயற்சித்து இருக்கிறார். அரசியல், குடும்பம், பணம், மூடப் பழக்கங்கள் இவைகள் இல்லாத ஒரு அட்வான்ஸ்ட் கான்செப்ட் இவை. இங்கே யாவரும் சமம். பிரிவினை பேதங்கள் இல்லை. வாசுதேவ குடும்பகம். ஆனால் இவையெல்லாம் நடைமுறைக்கு வர இன்னும் 500 வருடங்கள் ஆகலாம். பறந்து விரிந்த நிலப்பரப்பு ஆரோவில். நடப்பவர்கள் நடக்கலாம். சில பேர் சைக்கிள்களில் செல்கிறார்கள். சிலர் ஆசிரம வண்டிகளில். ஏரியா முழுவதும் சுத்தம் அமைதி, ஏகாந்தம், சௌந்தர்யம், பசுமை... இங்கேயும் பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். வழி நெடுகிலும் கிளை பரப்பிய ஆல மரங்கள். தோட்டங்கள். இதன் மெயின் மேட்டர் க்ளோப் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு ஜொலிக்கும் தியான மண்டபம். போகும் வழியெங்கும் சாதகனுக்கு இருக்க வேண்டிய 12 அவசிய குணங்களைக் தாங்கிய போர்டுகள். Sincerity , humility , courage இப்படியெல்லாம். பார்வையாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி. வரும் வழியில் கடைகள், உணவகங்கள், காபி ஷாப்கள்...as usual கொள்ளை விலை. 






 கோளத்தைப் பார்த்து மூன்று பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.


"உள்ளே என்னடி இருக்கு?"

"பெரிய புதையல் இருக்காம்"

"உள்ளே சாமி இருக்காம்"

மூன்றாம் பெண்:

"உள்ளே ஒண்ணுமே இல்லை!"

-ஒரு ஜென் கதைக்கான தகுதி இந்த சம்பவத்துக்கு இருக்கிறது.




இத்துடன் என் பாண்டிச்சேரி பயணம் இனிதே நிறைவேறியது. மீண்டும் பெங்களூருவுக்கு 
தாதர் எக்ஸ்பிரஸ். ரயில் முழுவதும் சிறுவர் சிறுமியர்களால் நிரம்பி இருந்தது. கையில் யோகா மேட் . கேட்டால் யோகா காம்பெடிஷன் என்றார்கள். யோகாவிலும் போட்டியை நுழைத்து விட்டார்கள் நம் ஆட்கள்.

மொத்தத்தில் தன்னை நாடி வருபவர்களை ஏமாற்றாத ஓர் அழகிய அமைதியான கடற்கரை நகரம் பாண்டிச்சேரி.


~சமுத்ரா