இந்த வலையில் தேடவும்

Wednesday, March 28, 2012

கலைடாஸ்கோப் -60

லைடாஸ்கோப் -60 உங்களை வரவேற்கிறது.

.
Problem with life is: There is no background Music

இது உண்மை தான். ஒரு திரைப்படத்தையோ சீரியலையோ background Music இல்லாமல் கற்பனை கூட செய்ய முடியவில்லை.ஹீரோ அறிமுகம் ஆகும் நிமிடத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை இந்த பின்னணி இசை ஒரு திரைப்படத்தை தொடர்ந்து நகர்த்திக் கொண்டு செல்கிறது.ஹீரோ அறிமுகத்துக்கு ஒரு இசை,(அவர் உடம்பின் ஒவ்வோர் அங்கத்திற்கும் தனித்தனி இசை, For example ,கையை அசைக்கும் போது ஒரு சவுண்டு, நடக்கும் போது ஒரு சவுண்டு), ஹீரோயின் வரும்போது ஒரு இசை, வில்லன் அறிமுகத்தில் ஒரு டெரர் மியூசிக்,I LOVE U சொல்லும் போது பின்னால் ஒரு சந்தோஷ சங்கீதம், I HATE U என்று க்ளோஸ்-அப்பில் ஹீரோயின் சொல்லி விட்டு நகரும் போது ஒரு சோக சங்கீதம், இருவரும் மீண்டும் ஒன்று சேரும் போது மீண்டும் சங்கீதம்...இப்படியெல்லாம் விதவிதமான பின்னணி இசை நம் வாழ்வில் வருவதில்லை. மகிழ்ச்சியான தருணங்களும் ,வேதனையான தருணங்களும் மௌனத்தையே பின்னணியாகக் கொண்டு நகருகின்றன.சீரியல்களில் வருவது போல யாராவது 'உன் புருஷன் உனக்கு துரோகம் பண்ணிட்டான் துளசி' என்று சொல்லும் போது பின்னணியில் ஆ-ஆ-ஆஆஅ என்று யாரும் பாடுவதில்லை.அப்படிப் பாடினால் ஒரு சப்போர்ட் ஆக இருக்கும் தான்.YES, SILENCE KILLS , Sometimes!

நம்மைப் போல சாதாரணர்கள் அதிக பட்சம் வடிவேலுவுக்கு வருவது போல ஒரு ரெண்டு பேரை பின்னால் வயலின் வாசிக்க வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். ஆபீசுக்கும் கூடவே அழைத்துப் போகலாம். மேனேஜர் திட்டி விட்டால் பின்னணியில் சோக மியூசிக் வாசிக்க சொல்லலாம்(சும்மானாச்சும் தான், மேனேஜர் திட்டியதற்கெல்லாம் வருத்தப்பட்டால் முடியுமா ?). GIRL FRIEND அதிசயமாக missed call விடாமல் அவளே கால் செய்து இன்று டின்னருக்கு வா என்று அழைத்தால் பின்னணியில் ஒரு ரொமாண்டிக் இசையை வாசிக்கும்படி பணிக்கலாம்.பின்னர் அவள் மீண்டும் கால் செய்து டின்னர் கேன்சல் என்று சொன்னால் கப்பல் கவிழும் டைட்டானிக் மியூசிக் (அவர்களே வாசிப்பார்கள்)!நான் கூட அப்படி ரெண்டு பேரை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். வயலின் நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள் அணுகவும். சம்பளம் பார்த்துப் போட்டுக் கொடுக்கிறேன்.

..

*சுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
**பூமி சுற்றுவது நின்று விட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை.
*மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா


சும்மா ஒரு கற்பனைக்காக நம் பூமி சுழலாமல் நின்று விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.அப்போது என்ன ஆகும் என்று பார்க்கலாம். பூமி வழக்கம் போல சூரியனை சுற்றி வருவதால் பருவகாலங்கள் மாற்றமின்றி வந்து கொண்டிருக்கும். ஆனால் பூமியில் இரவு பகல் சுழற்சி நின்று விடும். பாதி பூமி பகல்; பாதி இரவு.

பிரபஞ்சத்தில் தன் அச்சில் சுழலாத கிரகங்களைப் பார்ப்பது மிக மிக அரிது.சில கிரகங்கள் மிக மிக மெதுவாக சுழல்கின்றன (உதா: வெள்ளி). ஆனாலும் சுழலாமல் நிற்கும் கிரகங்கள் அரிது. எந்த ஒரு பொருளை வீசி எறிந்தாலும் அது முதலில் ஓரளவு ஸ்பின் ஆகிறது. அது போல நட்சத்திரத்தில் இருந்து வீசி எறியப்பட்ட கிரகத் துண்டுகள் சுழல ஆரம்பித்து அந்த சுழற்சியைத் தடுத்து நிறுத்த எதுவும் (எந்த விசையும்)இல்லாததால் இன்று வரை சமர்த்தாக சுழன்று கொண்டிருக்கின்றன.என், பிரபஞ்சமே சுழல்கிறது என்று சொல்லும் ஒரு கொள்கை இருக்கிறது.(Kurt Goedel theory ) பிரபஞ்சம் எதில் சுழல்கிறது,எதைப் பொறுத்து சுழல்கிறது என்று சொல்லாததாலும் சுழலும் பொருளுக்கு மையம் அவசியம் (ஐன்ஸ்டீன் கொள்கைப்படி பிரபஞ்சம் மையம் அற்றது.) என்பதாலும் இந்தக் கொள்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

பூமி சுழலவில்லை என்றால் அதன் பகல் பகுதி தொடர்ந்து சூடேறி எப்போதோ கடல்கள் ஆவியாகி இருக்கும். அந்தப் பகுதி முழுவதும் ஒரு வறண்ட பாலைவனம் ஆகி விட்டிருக்கும். கிரீன் ஹவுஸ் விளைவால் வெப்பம் 110 டிகிரி செல்சியஸ் வரை எகிறும் என்று கணக்கீடுகள் சொல்கின்றன.அதே சமயம் பூமியின் இருண்ட பகுதி பயங்கர குளிரில் தத்தளிக்கும். வளிமண்டல வாயுக்கள் கூட உறைந்து போகும் அளவு குளிர் நிலவும்.(-240 டிகிரி செல்சியஸ்).ஆனால் பூமியின் சாய்ந்த அச்சு காரணமாக அதிர்ஷ்ட வசமாக பூமியின் சில இடங்கள் TWILIGHT ZONE எனப்படும் அந்தி நேர மண்டலத்தில் வரும் என்கிறார்கள்.அங்கே இரவும் அற்ற பகலும் அற்ற ஒரு அதிகாலை அல்லது அந்திமாலை நேர சூழல் எப்போதும் இருக்கும். அந்த இடத்தின் வெப்பநிலை -20 டிகிரி வரை இருக்கும் என்பதால் அங்கே ஓரளவு உயிர்கள் வாழ சாதகமான சூழல் இருக்கலாம்.

நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?

-இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்று கேட்காதீர்கள் . ஏதோ ஞாபகம் வந்தது சொல்லி விட்டேன்.

...

OUR DAY IS MADE MOSTLY BY SWEET LITTLE THINGS ..

ஒரு நாளில் சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறையவே வருகின்றன. நாம் தான் பெரும்பாலான நேரங்களில் அவைகளை கவனிப்பதில்லை.அதுவும் வானை வளைப்பேன் மலையை முறிப்பேன் என்ற சங்கல்பத்துடன் கிளம்பியிருக்கும் இந்த பிசினஸ் ஆசாமிகள் , இந்த சின்ன சின்ன விஷயங்கள் நேர விரயமே தவிர அவற்றால் உபயோகம் இல்லை என்பார்கள்.சின்ன விஷயம் தான் என்றாலும் அவை பின்னாளில் கிடைக்கும் என்று சொல்லி விட முடியாது.

வீட்டில் வயதானவர்கள் , (தாத்தா பாட்டி அப்பா அம்மா)Or நோயாளிகள் இருந்தால் காலை ஆபீஸ் கிளம்பும் அவசரத்திலும் ஒரு முறையேனும் என்ன காபி/ஹார்லிக்ஸ் சாப்பிட்டீங்களா?நேத்து தூக்கம் வந்துச்சா? என்று ரெண்டு வார்த்தை கேளுங்கள் போதும். உங்கள் பாலன்ஸ் சீட்டை அது எந்த விதத்திலும் பாதித்து விடாது.அதே போல காலையில் சீக்கிரம் எழுந்து காபி போட்டு டிபன் செய்து லஞ்ச் பாக்ஸில் சாப்பாடு நிரப்பி வழியனுப்பி வைக்கும் மனைவியை ஏதோ ரோபோட்டைப் பார்ப்பது போல பார்க்காமல், 'என்ன நேத்து தலைவலின்னு சொன்னியே,எப்படி இருக்கு?' 'இன்னிக்கு கோயிலுக்குப் போகனுமா' என்று ஏதாவது ரெண்டு ஹிதவார்த்தை பேசிவிட்டு ஆபீஸ் கிளம்பலாம். கார் டிரைவர் இருந்தால் 'வண்டி எடு' என்று கடுகடு மூஞ்சியுடன் சொல்லாமல் ஒரு புன்னைகையுடன் 'வண்டி எடுப்பா, உன் குழந்தை எப்படி இருக்கு?' என்று கேட்கலாம். (டிரைவருக்கு குழந்தை இருக்கிறதா என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்)காரில் செல்லும் போது சிக்னலில் ஸ்கூல் பஸ் எதிர்பட்டால் குழந்தைகளுக்கு டாட்டா காட்டலாம்.( +2 படிக்கும் குழந்தைக்கெல்லாம் டாட்டா காட்ட வேண்டியதில்லை).பஸ்ஸில் போகும் போது வயதான ஒருவர் நின்று கொண்டு வந்தால் கல்லூளிமங்கன் போல உட்கார்ந்திருக்காமல் சீட்டில் இருந்து எழுந்து 'நீங்க உட்காருங்க' என்று சொல்லலாம்.(தனக்கு வயதாகி விட்டதே என்று அவர் நினைக்கக் கூடாது என்று தான் எழுந்திருக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் வேண்டாம்)

ரோட்டில் யாராவது கைகாட்டி லிப்ட் கேட்டால் நிறுத்தி ஏற்றிக் கொள்ளலாம்.ஃபிகராக இருந்தால்தான் ஏற்ற வேண்டும் என்ற வறட்டுப் பிடிவாதம் எல்லாம் வேண்டாம்.ஆபீசில் உராங்-உடாங் குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யாமல் பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து சிரித்து HOW IS WORK TODAY என்று கேட்கலாம்.பானி பூரி சாப்பிட்டு விட்டு கடைக்காரரை பார்த்து THANKS என்று சொல்லலாம்.ATM இல் நமக்குப் பின்னே இருப்பவர் உலக மகா அவசரத்தில் இருப்பது போல நெளிந்து கொண்டிருந்தால் 'சார், நீங்க போங்க' என்று கொஞ்சம் ஒதுங்கலாம்.(நீங்கள் போகும் போது பணம் காலி ஆகி விட்டால் அவரை அப்புறம் திட்டிக்கொள்ளலாம்)வீட்டுக்கு திரும்பி வந்ததும் லாப்-டாப்பை தூக்கி மடியில் வைத்துக் கொள்ளாமல் குழந்தைகளை அழைத்து ஒரு ஊர்ல ஒரு சிங்கம் இருந்துச்சாம் என்று சிறிது நேரம் கதை சொல்லலாம்.ஹோம் வொர்க் செய்து தரலாம். படுக்கப் போதும் முன் நீண்டநாள் பேசாத ஒரு நண்பருக்கு கால் செய்து HOW IS THINGS என்று கேட்டு பழைய நினைவுகளை அசைபோடலாம்.

இப்படி எவ்வளவோ இருக்கின்றன .
OUR DAY IS MADE MOSTLY BY SWEET LITTLE THINGS ..

....

ஓஷோவின் ஒரு தியானம், பின் விளைவுகளுக்கு இந்த ப்ளாக் பொறுப்பல்ல.

ஒரு மாதிரியான தியானம் இது.

ஒன்று: முதலில் ஒரு சுடுகாடுக்கு செல்லவும் (ஒருமாதிரி என்று முன்பே சொன்னேன் இல்லையா?) நண்பன் வீட்டுக்கு போகிறேன் என்று வீட்டில் பொய் சொல்லி விடவும் [இந்தக் காலத்தில் எல்லாம் மின்மயானம் வந்து விட்டதால் சு.கா.வை கண்டுபிடிப்பது கடினம் தான். ஆனால் கிராமப் புறங்களில் அவை இன்னும் இருக்கின்றன] அங்கே போய் ஒரு மறைவான இடத்தில் உட்கார்ந்து கொள்ளவும்.[வெட்டியானை கரெட் செய்து ஒரு பத்தோ இருபதோ கொடுத்து விடவும்]அங்கே பிணம் ஒன்று எரிவதை கவனமாக கண் கொட்டாமல் பார்க்கவும் (ஹலோ யார் அது ஓடுவது? முழுவதும் படிங்க சார்,,) சரி இப்போது கொஞ்சம் சீரியசாக பேசலாம்.மனிதன் தன் உடலுடன் தன்னை மிகவும் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டான். இந்த அடையாளத்தைத் தகர்த்து எறிய இந்த தியானம் மிகவும் உதவி செய்யும் என்கிறார் ஓஷோ.உடல் ஒன்று மெல்ல மெல்ல எரிவதை பார்க்கும் போது நம் உடலுடனான நம் அடையாளம் மெல்ல மெல்ல விலகுவதை நாம் உணர முடியும்.[உனக்கும் இதே கதி தான் மச்சி!]

சரி. சுடுகாடு கஷ்டம் , கொஞ்சம் தர்ம சங்கடம் என்றால் இதன் எளிமைப்படுத்தப்பட்ட VERSION -ஐ வீட்டிலேயே செய்யலாம்.

நன்றாக மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். உடலின் எந்தப் பாகத்தையும் அசைக்காதீர்கள். சவம் போல படுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இறந்து விட்டதாக கற்பனை செய்யுங்கள். [உங்களை சுற்றி உங்கள் உறவினர்கள் அழுவது போல, உங்கள் எல்.ஐ.சி. பாலிசியை உங்கள் மனைவி தேடுவது போல அவரவர்கள் கற்பனாசக்தி
க்கேற்ப காட்சிகளை அமைத்துக் கொள்ளலாம்]. உங்கள் சுண்டு விரலை அசைத்தாலும் இந்த தியானம் துண்டிக்கப்பட்டு விடும். எனவே PERFECT DEAD BODY மாதிரி கிடக்கவும்.எறும்பு கடிக்கிறது என்றோ கொசு கடிக்கிறதோ அந்த இடத்தில் சொரிய வேண்டும் என்றோ உடலை அசைத்து விடாதீர்கள். நிஜ எறும்பு எப்போதாவது தான் கடிக்கும். மனம் என்னும் எறும்பு தான் உங்களை தியானம் செய்ய விடாமல் கடித்துக் கொண்டே இருக்கிறது என்று உணருங்கள்..இந்த தியானம் செய்யும் போது, உடல் அசையாதிருக்கும் போது உடலுடன் இணைந்த மனமும் தன் அசைவை நிறுத்திக் கொள்கிறது என்று சொல்கிறார் ஓஷோ.

ரெண்டாவது தியானம் ஈசி தானே ? இன்றே முயற்சி செய்யுங்கள். ஆனால் ஒன்று. தியானம் செய்யும் சாக்கில் அப்படியே தூங்கி விடாதீர்கள்.ஏனென்றால் இந்த தியானம் படுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.அப்படியே ரிலாக்ஸ் செய்து கொஞ்சம் திரும்பிப் படுத்துக் கொண்டே தியானம் செய்யலாம், போர்வை போர்த்திக் கொண்டு செய்யலாம், குறட்டை விட்டுக் கொண்டே செய்யலாம் என்றெல்லாம் நினைத்தால் அடி விழும்.கொஞ்சம் சின்சியராக இருங்கள்.



.....

பார்த்ததில் பிடித்தது




......

ஜோக்.

வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்ட மூன்று பணக்கார மகன்கள் தங்கள் அம்மாவின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு அனுப்பினர்.

முதல் மகன் " நான் ஒரு பெரிய பங்களாவை அம்மாவுக்கு கட்டித் தந்திருக்கிறேன்" என்றான்.

இரண்டாம் மகன் " நான் அம்மாவுக்கு உலகிலேயே விலை உயர்ந்த காரை வாங்கி அனுப்பி இருக்கிறேன்" என்றான்.

மூன்றாம் மகன் " அதெல்லாம் சாதாரணம்.. நான் ஓர் உலகிலேயே அபூர்வமான கிளியை வாங்கி அனுப்பி இருக்கிறேன். அந்தக் கிளி வாடிகன் சர்ச்சில் இருபது வருடங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றது.பைபிளில் அத்தியாயத்தை மட்டும் சொன்னால் போதும்; அதன் வசனங்களை அப்படியே ஒப்புவிக்கும். பைபிளை தலைகீழாக கூட ஒப்புவிக்கும்,மேலும் சர்ச்சின் பிரேயர் எல்லாம் அதற்கு அத்துப்படி; சிறப்புத் திறமை பெற்ற கிளி' அது என்றான்.

ஒருவாரம் கழித்து அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.

அன்பு மகன்களுக்கு,

'பெரியவன் கட்டித்தந்த வீடு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் மகனே , எனக்கு இந்த வயதான காலத்தில் அத்தனை பெரிய வீடு எதற்கு?' வேலைக்காரர்களை வைத்துக் கொள்ளவும் பயமாக இருக்கிறது.

அடுத்தவன் அனுப்பிய காராலும் எனக்கு பெரிய உபயோகம் இல்லை.நான் இந்த தள்ளாத வயதில் எங்கே வெளியே அலையப் போகிறேன்? ஆனால் அனுப்பியதற்கு
நன்றி .

கடைசி மகனே, நீ அனுப்பிய கிளி மிகவும் அருமை. ரொம்ப நன்றி. என் வாழ்நாளிலேயே இத்தனை ருசியான கிளிக்கறி சாப்பிட்டதில்லை. என்ன ஒரு ருசி"?

சமுத்ரா

Thursday, March 22, 2012

கலைடாஸ்கோப்-59

லைடாஸ்கோப்-59 உங்களை வரவேற்கிறது.


~
எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கன்னட, தெலுங்கு, மராட்டி, சிந்தி, கொங்கனி, மணிபுரி, பஞ்சாபி மக்களுக்கு நாளை
புத்தாண்டு பிறக்கிறது. [தமிழர்களுக்கு மட்டும் ஏனோ மற்ற எல்லாவற்றையும் போல NEW YEAR -உம் different ]அதுவும் தை முதல் நாளா சித்திரை முதல்நாளா என்று குழம்பிக் கொண்டு இருக்கிறோம்.பொதுவாக சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்களில் நாளை புத்தாண்டு பிறக்கிறது.(சைத்ர சுத்த பாட்யமி).தமிழர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரை FOLLOW செய்வதால் அவர்களுக்கு வேறொரு நாளில் புத்தாண்டு.தமிழனை தனித்து விடாமல் கேரளா அந்த நாளில் தானும் புத்தாண்டு கொண்டாடி (விஷு) அவர்களுக்குக் கைகொடுக்கிறது.என்னைப் பொறுத்த அளவில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலண்டர் better என்று தோன்றுகிறது. சந்திரன் நமக்கு அருகில் இருப்பதால் அது சூரியனை விட பூமியை அதிகம் பாதிக்கும் என்று தோன்றுகிறது.

மார்ச் 20 ஆம் தேதி Equinox என்ற சம இரவு நாள் நிகழ்வு நடக்கிறது.
சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். பூமியின் சாய்வு அச்சு சூரியனை பொறுத்து விலகியும் இல்லாமல் நெருங்கியும் இல்லாமல் சூரியனின் மையம் நிலநடுக்கோட்டோடு ஒன்றி வருவது. இந்த சம இரவு நாள் (இதற்கப்புறம் ஆறுமாதங்கள் பகல்பொழுது அதிகமாக இருக்கும்) நிகழ்வு நடந்த பின் அடுத்த புது நிலவு உதிக்கும் ஒரு நன்னாளில் யுகாதி
கொண்டாடப்படுகிறது.

நாம் தான் அவசரப்பட்டு குளிர் சரியாக விலகாத ஜனவரி -ஒன்று அன்றே முட்டாள்தனமாக இந்தியத் திருநாட்டில் புதுவருடம் கொண்டாடி விடுகிறோம்.சரி.நம்மில் எத்தனை பேருக்கு இன்றைய தேதியின் (மார்ச் 22 ) தமிழ் மாதம் , தேதி தெரியும் என்று தெரியவில்லை. well , எனக்கும் தெரியாது.!

யுகாதியின் போது கன்னட மக்கள் கடைபிடிக்கும் ஒரு பழக்கம் அர்த்தம் நிறைந்தது. வசந்த காலம் என்பதால் வேப்ப மரங்கள் பழைய இலைகளை உதிர்த்து புதிய இளம் தளிர்களை விட்டிருக்கும். (வேப்பம் பிஞ்சு) அந்த கசப்பான தளிர்களையும் வெல்லத்தையும் சேர்த்து சட்னி போல செய்து 'பேவு சிஹி, பெல்ல கஹி'
.(வேம்பு இனிப்பு வெல்லம் கசப்பு)என்று சொல்லி விட்டு சாப்பிடுகிறார்கள். யுகாதி மெனுவில் இந்த சட்னி கண்டிப்பாக இருக்கும். நம் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாகவே பாவிப்போம் என்று இந்த புத்தாண்டில் உறுதி எடுத்துக் கொள்கிறார்கள்.இது தான் எதார்த்தம். இனி உன் வாழ்வில் வசந்தங்கள் மட்டுமே இருக்கட்டும். May your way be filled with only success என்றெல்லாம் புத்தாண்டு வாழ்த்து சொல்வது சுத்த அபத்தம்.NOT PRACTICAL ..

எனவே நாம் தமிழ் வருடப்பிறப்புக்கு காத்திருக்காமல் நாளை யுகாதியையும் கொண்டாடுவோம்.[அதை ஏதோ அன்னியப் பண்டிகை போலப் பார்க்காமல்]சந்தோஷமாக இருப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் ஏன் விடவேண்டும்? சொல்லப்போனால் வருடத்தின் ஒவ்வொரு நாளும் புத்தாண்டுதான்.

~~


* நேற்று வந்திருந்த ஒரு இ-மெயிலின் தமிழாக்கம்:

ஒருநாள் ஒரு ஆளை மரணம் நெருங்கி 'இன்று உன் நாள்' என்றது.

அவன் மிகவும் பயந்து போய் 'நான் இன்னும் இளைன் தானே, எனக்கு வயதே ஆகவில்லையே' என்றான்.

மரணம் 'அதெல்லாம் எனக்குத் தெரியாது; இன்று உன் நாள். என் பட்டியலில் உன் பெயர் தான் next ' என்றது.

அவன் மரணத்திடம் 'சரி. நான் உன்னுடன் வருகிறேன். நீ கடமை செய்து செய்து மிகவும் களைத்திருக்கிறாய்.கொஞ்சம் ஏதாவது குடித்து விட்டு ஓய்வெடு ' என்றான். மரணம் ஒப்புக் கொண்டது.

அவன் மரணத்திற்கு பழரசம் வாங்கி வந்தான். ஆனால் அதற்குத் தெரியாமல் அதில் தூக்க மாத்திரை கலந்து விட்டான். மரணம் சில மணி நேரம் தூங்கி விட்டது. அதற்குள் அந்த ஆள் அதன் பட்டியலை எடுத்து அதில் இருந்த தன் பெயரை அழித்து விட்டு அதை லிஸ்டின் கடைசியில் எழுதி விட்டான். கடைசி பெயர் வர ரொம்ப வருடம் ஆகும் என்று நினைத்துக் கொண்டு.

மரணம் விழித்துக் கொண்டு 'ரொம்ப நன்றி. புத்துணர்வாக உணர்கிறேன். என்னை யாருமே இப்படி உபசரித்ததில்லை. எல்லாரும் திட்டவே செய்தார்கள். எனவே உனக்கு ஒரு உதவி செய்ய நினைக்கிறேன்' என்று சொல்லி விட்டு 'என் வேட்டையை பட்டியலின் கடைசி பெயருடன் ஆரம்பிக்கிறேன்' என்றது.


~~~


உங்கள் உயரம் என்ன? எல்லாம் நார்மல் ஹைட் தான் என்கிறீர்களா? சரி.'நார்மல்' ஹைட் என்றால் என்ன? மற்றவருடன் பேசும் போது இயல்பாக கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் உயரம். திரிவிக்ரமப் பெருமாளை பார்ப்பது போல தலையை உயர்த்தியோ வாமனரைப் பார்ப்பது போல தலையை தாழ்த்தியோ பேசினால் இருவரில் யாரோ ஒருவருக்கு உயரம் நார்மல் இல்லை என்று சொல்லலாம். 'உயரம்' என்பது ஒரு பெரிய மேட்டர் இல்லை தான். ஆனால் இது நிறைய பேரை
மனதளவில் பாதித்து அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து விடுகிறது. குறைந்த உயரமும் பிரச்சனை தான். அதிக உயரமும் பிரச்சனை தான்.அபூர்வ சகோதரர்கள் கமல் போல ஒருவருக்கு எல்லாரும் தனக்கு ஒருவிதத்தில் மேலே இருப்பதாகத் தோன்றுகிறது. இன்னொருவருக்கு தசாவதாரம் கமல் போல எல்லாரும் தனக்குக் கீழே இருப்பது போலத் தோன்றி தர்மசங்கடம் அளிக்கிறது.குள்ளமான ஹீரோக்கள் ஹீரோயினுடன் டான்ஸ் ஆடும் போது ஹை ஹீல்ஸ் போட வேண்டி வருகிறது.அதுவும் பெண்கள் இயல்புக்கு மீறிய உயரத்தில் இருந்து விட்டால் பெரிய பிரச்சனை தான்.அவளை ஒரு ஆண் மாதிரி தான் இந்த சமூகம் treat செய்கிறது.அவளுக்கு கல்யாணம் ஆவதிலும் சிக்கல் இருக்கிறது.

ஓஷோ ஒரு கேள்வி கேட்கிறார்; ஒரே ராத்திரியில் நம்மை சுற்றியுள்ள எல்லாம்(நாம் உட்பட) இரண்டு மடங்கு பெரியதாகி விட்டால் அது நமக்குத் தெரியுமா?உதாரணமாக உங்கள் வீடு, வீட்டு நாய்க்குட்டி, மேஜை, சேர், செல்போன் டவர்,கோபுரம், சூரியன் எல்லாமே இரண்டு மடங்கு பெரியதாகி விட வேண்டும்.அப்போது அது நமக்குத் தெரியாது.எல்லாம் பெரிதாகி நாம் மட்டும் அப்படியே நின்று விட்டால் தான் ஏதோ நடந்திருக்கிறது என்று நமக்குத் தெரிய வரும்.எனவே உயரம் என்பது ஒரு RELATIVE term .உலகில் எல்லாருமே அழிந்து போய் நாம் மட்டும் தனித்து நின்று விட்டால் நம் உயரம் என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை.

ஒருவருக்கு VIRTUAL HEIGHT என்று ஒன்று உள்ளது என்று தோன்றுகிறது.யானை அதன் மீது பாகன் ஒருவன் உட்கார்ந்து விட்டால் அவனுடைய உயரத்தையும் சேர்த்தே தன் உயரத்தைக் கணக்கிடும் என்று கேட்டிருக்கிறேன். அது போல நமக்கு virtual உயரம் ஒன்று இருக்கிறது.ஒருவரைப் பற்றி நாம் நிறைய கற்பனை செய்து வைத்திருப்போம். அவரின் பேச்சை எழுத்தை எல்லாம் பார்த்து விட்டு. ஆனால் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தால் ஆள் சராசரி உயரத்துக்கும் குறைவாக இருந்தால் அவரைப் பற்றிய நம் கற்பனைகள் மறைந்து 'இவரா' என்று DISILLUSION ஆகி விடுவோம்.ஆனால் அவருடைய VIRTUAL உயரத்தை நாம் அளக்க மறந்து விடுகிறோம். உருவத்தில் சிறுத்தாலும் அவரது கண்ணுக்குத் தெரியாத உயரம் அபாரமானது. அதைப் பார்க்க நமக்கு ஒருவித ஆழமான கண்கள் வேண்டும்.அதே போல உயரமான ஒரு பெண் தன் Virtual height ஐ குறைத்தே வைத்திருக்கிறாள்.உயரமான பெண் நடந்து வரும் போது கவனித்தால் நமக்குத் தெரியும்.

உயரமாக இருப்பது ஒரு Added advantage அவ்வளவு தான். உயரமாக இருந்தால் ராணுவத்தில் சுலபமாக சேரலாம்; மாடலிங் செய்யலாம். சினிமாவில் சிக்ஸ் பேக் + சிக்ஸ் ஃபீட் காட்டலாம். ஸ்டூல் போடாமல் அம்மாவுக்கு அரிசிமாவு டப்பா எடுத்துத் தரலாம் . அவ்வளவு தான். ஆனால் அகத்தியரால் மலையை உருக்க முடியும்.நெப்போலியனால் தேசங்களை வெல்ல முடியும். வாஷிங்டன்-ஆல் நாட்டை ஆள முடியும்.இந்த வெப்சைட்டில் பாருங்கள்.இங்கே உள்ள சாதனையாளர்கள் அனைவரின் உயரமும் 5 .7 அடிக்குக் குறைவு தான்.

~~~~
* என்ன செய்வது? சில சமயம் கற்பனை வறண்டு விட்டால் எழுதிய கவிதையையே மீண்டும் போட வேண்டி உள்ளது.

கண்கள் எப்போதும்
தின்று கொண்டே இருக்கின்றன...
அலுவலகங்களில்,
கல்லூரிகளில்,
மார்கெட்டுகளில்,
கோவில்களில்,
எல்லா இடங்களிலும்...
வயிற்றை விடவும்
நாக்கை விடவும்
நுரையீரலை விடவும்
அதிகமான பேராசையுடன்
அகோரப்பசியுடன்..
கண்கள் எப்போதும்
தின்று கொண்டே இருக்கின்றன...


** கற்றுக் கொள்ளும் போது எனக்கு எதுவுமே தெரியாது என்று கற்றுக் கொள்.
மேடையில் perform செய்யும் போது எனக்கு தான் எல்லாமே தெரியும் என்று perform செய்.

-Carnatic music Idol நிகழ்ச்சியில் அருணா சாய்ராம்.

~~~~~
ஒரு ஜென் கதை. அர்த்தம் தேவையில்லை.

ஹக்குயின் ஜென் மாஸ்டரிடம் ஒரு ராணுவ வீரன் வருகிறான்.
'எனக்கு சொர்க்கம் என்றால் என்ன நரகம் என்றால் என்ன?' என்று சொல்லும்படி கேட்கிறான்.
'நீ யார்' என்று கேட்கிறார் ஹக்குயின்.
'நான் ஒரு பெரிய ராணுவ வீரன்' என்கிறான் அவன்.
'அப்படியா ,ஆனால் பார்
ப்பதற்கு பிச்சைக் காரன் போல இருக்கிறாய்' என்கிறார் மாஸ்டர்.
வீரன் கோபத்துடன் 'யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிறீர்கள்' என்று தன் வாளை உருவுகிறான்.
'ஓ உன்னிடம் வாள் வேறு இருகிறதா, மொன்னையான இந்த வாளை வைத்துக் கொண்டு என்னை வெட்டி விட முடியுமா' என்கிறார்
இப்போது வீரன் தன் நிலை இழந்து வாளை அவர் மீது வீசுகிறான்.
'இங்கே நரகத்தின் கதவுகள் திறக்கின்றன' என்கிறார் ஹக்குயின்.
எதையோ உணர்ந்தவனாக வீரன் வாளை உறையில் போட்டு விட்டு குருவின் காலில் விழுந்து வணங்கி 'என்னை மன்னியுங்கள்' என்கிறான்.
'இங்கே சொர்கத்தின் கதவுகள் திறக்கின்றன' என்கிறார் ஹக்குயின்.

~~~~~~~

ஓஷோ ஜோக்.

ஒரு பெண் தன் குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள்.

அதைப் பார்த்த பஸ் டிரைவர் யாரிடமோ 'இதுவரை நான் பார்த்ததிலேயே அசிங்கமான குழந்தை இதுதான்' என்றான்.

இதை அந்தப்பெண் கேட்டு விட்டாள்.

தன் சீட்டில் போய் உட்கார்ந்ததும் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் 'அந்த டிரைவர் என்னை ரொம்பவும் இன்சல்ட் செய்து விட்டான்.என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' என்று பொரிந்தாள்.

இன்னொரு பெண் 'அப்படியா, இதை அப்படியே விடாதீங்க..போய் நியாயம் கேளுங்க..நீங்க வர்ற வரைக்கும்
நான் வேணா உங்க குரங்கை வைத்துக் கொள்கிறேன்' என்றாள்.

முத்ரா

Monday, March 19, 2012

கலைடாஸ்கோப்-58

லைடாஸ்கோப்-58 உங்களை வரவேற்கிறது.

[]

வாழ்க்கை மிகவும் போரடிக்கிறது. செய்ததையே செய்து கொண்டு, பார்த்ததையே பார்த்துக் கொண்டு! நம் திரைப்படங்களில் காணும் EXTRA -ORDINARY விஷயங்கள் ஒருவிதத்தில் இந்த 'சலிப்பின்' வெளிப்பாடுகள் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்கள்! GODZILLA ,UNSTOPPABLE , ZOMBIELAND என்று ! பஸ்ஸில் ஏறி உலகமகா சலிப்போடு தூங்கி வழிந்து கொண்டு ஆபீசுக்கு வந்துகொண்டிருக்கும் போது எதிரே ஒரு வானளாவிய மிருகம் ஒன்று ஹாயாக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தால் வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? அல்லது நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் ஒருவித வைரஸ் தாக்கி ரத்தவெறி பிடித்து நம்மை கடிப்பதற்குத் துரத்தினால் எப்படி இருக்கும்? (ஏன் இந்த கொலைவெறி?!) சலிப்பின் உச்சமான ஒரு ஞாயிறு மாலை வேளையில் வீட்டின் பின்புறத்தில் ஒரு வட்டவடிவ வாகனத்தில் நீலநிற குள்ள உருவம் வந்து இறங்கி நம்மைப் பார்த்து கையசைத்தால் எப்படி இருக்கும்?இப்படியெல்லாம் எதுவும் நடக்காமல் வாழ்க்கை ரொம்பவே சலிப்பாக நகருகிறது போங்கள். ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.

திருமதி. கோல்ட்பெர்க் ஒருநாள் மாலை தன் வீட்டு பின்புறக் கதவைத் திறந்து தோட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்
அப்போது ஒரு வினோத உருவம் அவரை அவசரமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது.

திருமதி. கோல்ட்பெர்க் ஆச்சரியம் தாங்காமல் ' நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்து வருகிறீர்களா?' என்று கேட்டார்.
அந்த உருவம் சங்கடமாக மிகுந்த பிரயத்தனப்பட்டு தலையை அசைத்தது.
'ஆஹா, என்ன அதிசயம், நீங்கள் மார்சியன் தானே?' என்று மேலும் கேட்டாள்.
அந்த உருவம் முகத்தை அஷ்ட கோணலாக்கி சிரமத்துடன் மீண்டும் தலையசைத்தது.
'ஐயோ, உடனடியாக நான் பிரஸ்ஸை கூப்பிட வேண்டுமே என்ற அவள், 'ஆமாம், மார்ஸ் மிகவும் தூரம் ஆயிற்றே, இங்கே வருவதற்கு உங்களுக்கு ஆறுமாதங்கள் ஆகி இருக்குமே? 'என்று மேலும் கேட்டாள்
அந்த உருவம் ஹீனஸ்தாயியில் மீண்டும் தலையை அசைத்தது.
'உங்களிடம் நவீன தொழில்நுட்ப கருவிகள் உண்டா'?
அந்த உருவம் இப்போது அழுதுவிடும் போல இருந்தது. முக்கி முனகி தலையை ஆட்டியது.
'நீங்கள் ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் என்று தோன்றுகிறது, தயவு செய்து சொல்லுங்கள்' என்றாள் அவள்
அந்த உருவம் ' அம்மையாரே, தயவு செய்து நான் உங்கள் டாய்லெட்டை உபயோகிக்கலாமா' என்றது.


[[]]

இரண்டு விளம்பரங்கள் பற்றிப் பேசலாம். ஒன்று +ve ஆக இன்னொன்று -ve ஆக.

முதலில் நெகடிவ். (அதுதான் நமக்கு கைவந்த கலை ஆயிற்றே)

இந்த விளம்பரத்தில் அம்மா,வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துவிட்டாரே என்று சலித்துக் கொள்கிறாள். வீட்டில் இருக்கும் சின்னப்பையன் ஒருவன் ஏதோ ஒரு பிஸ்கட்டுக்கு ஃப்ரீ-யாகக் கொடுக்கப்படும் மாஜிக் -பொருளை வைத்துக் கொண்டு அவரை பயமுறுத்தி ஓட ஓட விரட்டி அடிக்கிறான். விருந்தினர்களை மதிக்கும் பழக்கத்தை நாம் தான் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.இப்போது நிறைய பேர் அப்படி குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறார்களா என்று தெரியவில்லை.ஆனால் விருந்தினர்களை ஓட ஓட விரட்டுவது தான் குழந்தைகளின் ஹீரோயிசம் என்ற தவறான முன்னுதாரணங்களையாவது காட்ட வேண்டாமே தயவு செய்து!

இன்னொரு விளம்பரத்தில் ஒரு ஜீனி குப்பியில் இருந்து வெளிப்பட்டு குழந்தைகளை உங்களுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்கிறது. அவர்கள் தங்கள் அம்மா செய்யும் நூடுல்சிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது. எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று திருப்தியுடன் சொல்கிறார்கள். நம் முன்னே ஒரு ஜீனி தோன்றி என்ன வேண்டும் எஜமானே என்று கேட்டால் நாம் எதுவும்
வேண்டாம் இருப்பதே போதும் என்று சொல்வோம் என்பது சந்தேகம்தான்.better job, better house, better car (better wife) என்று எதையாவது கேட்கவே செய்வோம். ஒரு குட்டிக்கதை நினைவில் வருகிறது.

ஒருத்தனுக்கு மிகவும் பெரிய அசிங்கமான மூக்கு இருந்ததாம். அதை நினைத்து தினமும் வருத்தப்பட்டானாம்.
ஒருநாள் அவன் பழைய சாமான்களைத் துடைத்துக் கொண்டிருந்த போது ஒரு ஜாடியில் இருந்து பலகாலங்களாக அடைபட்டுக் கிடந்த பூதம் ஒன்று வெளிப்பட்டு 'எஜமானே, உங்கள் மூன்று விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன், கேளுங்கள்' என்றதாம்.
அவன் பதட்டத்தில் 'எனக்கு அழகான மூக்கு வேண்டும்,
எனக்கு அழகான மூக்கு வேண்டும்' என்று நூறுமுறை கேட்டு விட்டானாம்.
உடனே அவன் உடலெல்லாம் ஏராளமான மூக்குகள் தோன்றி விட்டன.
இதைக் கண்டு அதிர்ந்த அவன் உடனே' ஐயோ இந்த மூக்கை எல்லாம் உடனே போகச் செய்' என்று கேட்டுக் கொண்டானாம்.
இப்போது எல்லா மூக்குகளும் மறைந்து மூக்கே இல்லாமல் அசிங்கமாக மாறி விட்டானாம்.
இப்போது அவன் மூன்றாவது விருப்பமாக 'எதுக்கு வம்பு,பழைய மூக்கையே கொடுத்துருப்பா' என்றானாம்.

[[[]]]

* நண்பர் ஒருவர் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இரவு நடுஜாமத்தில் கேமராவுடன் வெளியே கிளம்பி விடுவார். வீட்டை ஒருநாள் இரவு முழுவதும் பூட்டி வைத்து விட்டு உள்ளே கேமராவில் ரெகார்டிங்கை இரவு முழுவதும் ஒட விட்டு காலையில் பேய் எதாவது நடமாடி இருக்கிறதா, சத்தம் போட்டிருக்கிறதா என்று போட்டுப் பார்ப்பார்.இதுவரை எந்தப் பேயும் பிடிபடவில்லை என்று அலுத்துக் கொண்டார். எனவே உங்கள் வீட்டில் ஏதாவது பேய் நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்பட்டால் நண்பரின் போன் நம்பர் தருகிறேன்.:) பேசிப் பாருங்கள்.

பேயைப் பார்த்திருக்கிறீர்களா? என்ன பார்த்திருக்கிறேனா ? அதோடுதான் பத்து வருசமா குடும்பம் நடத்துகிறேன் என்று ஒரு ஆள் சொல்வது மிக மிக மிக சிக் ஜோக். இந்த மாதிரி ஜோக்குகளை தடை செய்ய வேண்டும்.

** தமிழ்மணம் திரட்டி இந்த வார நட்சத்திரமாக என்னை அறிவித்து உள்ளது. தமிழ் மணத்திற்கு நன்றிகள்.

[[[[]]]]

உங்கள் அப்பா எல்லாரிடமும் கை நீட்டுபவர். யாரைப் பார்த்தாலும் அஞ்சு இருக்கா பத்து இருக்கா? கைமாத்தா கொடுங்களேன் என்று வாய்கூசாமல் கேட்பவர். அம்மாவோ ஊட்டி கொடைக்கானல் என்று மலை மலையாகப் பார்த்து அவ்வப்போது டூர் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்கிறவள்; அம்மாவுடன் பிறந்த தாய்மாமன் ஒரு திருடன். வெட்கமே இல்லாமல் பெண்களிடமெல்லாம் திருடுபவன்.சரி.கூடப் பிறந்த அண்ணன் எப்படி என்றால் அவனுக்கு கால்சப்பை. இங்கேயும் அங்கேயும் நகராமல் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து நன்றாகத் தின்று தொப்பையை வளர்த்து வைத்திருக்கிறான்.இப்படி எல்லாம் சொந்தம் வந்து வாய்த்தால் உங்களால் எப்படி அய்யா சந்தோஷமாக இருக்க முடியும்? ஆனாலும் இவர் சந்தோஷமாக இருக்கிறார் பாருங்கள். முருகப்பெருமான் படங்களில் என்னமாக புன்னகை புரிகிறார்? முருகனுக்கு வாய்த்த ஒன்றாவது உருப்படியா பாருங்கள்:

அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி; சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ;ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை.

-காளமேகப் புலவர்.

[[[[[]]]]]

ஒருவரிடம் பேசும்போது எத்தனை டெசிபல் சத்தத்தில் பேசவேண்டும் என்று ஏதாவது வரைமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை. சில பேர் இருக்கிறார்கள். பிறந்த போதே மைக்கை எடுத்து முளுங்கியவர்கள். பேசினால் பக்கத்து ஊருக்கே கேட்கும். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளே காதலியுடன் செல்போனில்
ஹஸ்கி வாய்சில் பேசும் லெவலிலேயே எல்லாரிடமும் பேசுவார்கள். சரி.சமீபத்தில் வந்திருந்த ஒரு இ-மெயில் இப்படி சொல்கிறது:

நாம் யாருடனாவது சண்டை போடும் போது சத்தமாக பேசுகிறோம் அல்லவா? அப்படியென்றால் நம் இருவருக்குமிடையே இடைவெளி அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.நம்மை விட்டு தொலைவில் நின்று கொண்டிருக்கும் ஒருவருடன் பேசவேண்டும் என்றால் சத்தமாக இரைகிறோம் அல்லவா? நம்மிடையே உள்ள இடைவெளி குறையக் குறைய
சத்தமாக பேசுவதை விட்டு விட்டு மெதுவாகப் பேசுகிறோம். காதலர்கள் 'குசுகுசு' என்று பேசுவதைப் பார்த்தால் அவர்கள் இருவரும் மிகவும் (மனதளவில்) நெருங்கி வந்து விட்டதை உணரலாம். இருவருக்கும் இடையே இடைவெளியே இல்லை என்றால் மௌனம் மட்டுமே நம் மொழியாக இருக்கும்.

[[[[[[]]]]]]

மௌனம்

திரியின் நுனியிலிருக்கும் சுடருக்கும்
வெடிமருந்துக்கும் நடுவே
இருக்கிறது
ஒரு மௌனம்
ஏதோ கடக்கவே முடியாத
ஒன்றைப்போல
அது
எவ்வளவு நீண்டதாக இருக்கிறது
என்னமாய் கனத்துப் போகிறது

-மனுஷ்ய புத்திரன்



[[[[[[[]]]]]]]

ஓஷோ ஜோக்.

ஹெர்னி மிக விரைவாக காரை ஓட்டிக் கொண்டுசென்றான். பின்னால் தொடர்ந்த ட்ராபிக் போலீஸ் ஒருவர் அவனை மறித்து 'சார், இப்படியா வேகமா ஓட்டுவீங்க உங்க மனைவி இரண்டு மைல்களுக்கு முன்னால காரில் இருந்து விழுந்துட்டாங்க' என்றார்.

ஹெர்னி 'ஒ அப்படியா, நான் கூட எங்கே என் காதுதான் செவிடாயிருச்சோன்னு பயந்து போயிட்டேன்' என்றான்.

சமுத்ரா

Monday, March 12, 2012

அணு அண்டம் அறிவியல் -63

அணு அண்டம் அறிவியல் -63 உங்களை வரவேற்கிறது.

God used beautiful mathematics in creating the world.

Pick a flower on Earth and you move the farthest star.

-
Paul Dirac

Everything we call real is made of things that cannot be regarded as real.

If quantum mechanics hasn't profoundly shocked you, you haven't understood it yet.

-Niels Bohr

- எதிர் பிரபஞ்சம் (ANTI universe ) என்பது வேறு. இணை பிரபஞ்சம் (PARALLEL universe ) என்பது வேறு. இரண்டும் ஒன்றாகவே இருந்தாலும் எங்களுக்கு என்ன என்கிறீர்களா? வாஸ்தவம் தான். GIRL FRIEND -க்கு மெசேஜ் அனுப்பி அரை மணி நேரம் ஆகிறதே, இன்னும் பதில் வரவில்லையே ; ATM இல் பணமே வரவில்லை, ஆனாலும் அக்கவுன்ட்-இல் இருந்து பணம் போய் விட்டதே, டெலிபோன் பில் கட்டவேண்டுமே, நாளைக்கு ஆடிட் இருக்கிறதே, இன்றைக்கு ராத்திரி தக்காளி ரசமே வைத்து விடலாமா என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன் பிரபஞ்சத்தைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்ப்பது அனாவசியம் தான்.IT 'S NOT NEEDED ..சூரியன் ஒரு நட்சத்திரம் என்று கூட உங்களுக்குத்தெரியாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள் ஒரு பெரிய கம்பெனியின் எம்.டி யாக இருக்க முடியும்.பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஒரு கட்டுக்குள் தங்கள் அறிவை அடக்க விரும்பாமல் பிரபஞ்சத்தை (யே) விலைபேசும் சுதந்திர எண்ணம் உள்ளவர்கள் அவர்கள்.(சைக்கிள் கேப்பில் என்னையே புகழ்ந்து கொள்வது போல இருக்கிறதா? PLS ADJUST !)

ஆபீசில் ஒருவரிடம் பூமி பெரியதா சூரியன் பெரியதா என்று கேட்டேன்.

'ரெண்டும் ஒரே சைஸு தான்னு நினைக்கிறேன்' என்றார்.CAN 'T HELP .. பூமியின் சைசுக்கு ஒரு நட்சத்திரம் சுருங்க முடியும் என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். NEUTRON STAR ..விண்மீன் தன் நிறையால் தானே சுருங்கும் போது எலக்ட்ரான்கள் அமுக்கத்தை எதிர்த்து ஓடிவிட விண்மீன் முழுவதும் நியூட்ரான்களை மட்டுமே கொண்ட ஒரு பந்துபோல மாறும்.இதை மனதில் வைத்துக் கொண்டு தான் நண்பர் அப்படி சொல்லியிருப்பார் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

Listen: There's a hell of good universes next door; let's go - E.E.CUMMINGS

இந்த இணை பிரபஞ்சங்கள் கான்செப்ட் பாகவத புராணத்தில் வருவதாக சொல்கிறார்கள்:-

"எண்ணிறைந்த பிரபஞ்சங்கள் அவற்றின் அடுக்குகளில் உலவுகின்றன.காலம் என்ற சக்கரம் அவைகளை இயக்குகிறது. அவை உங்களுக்குள்ளும் நகர்கின்றன."-Bhagavata Purana 10.87.41

மேலும்,


[Quran 20.6] To Him belongs what is in the Heavens and what is on Earth and what is between them and what is under the soil.

சுவனத்தில் இருப்பதும் பூமியில் இருப்பதும் இடையே இருப்பதும் கீழே இருப்பதும் அவனுடையதே! -குர் ஆன்

மூன்று விதமான இணை பிரபஞ்சங்கள் சாத்தியம் என்கிறது இயற்பியல்

* HYPER SPACE - உயர் பரிமாண வெளி
* MULTIVERSE - பல பிரபஞ்சங்கள்
* QUANTUM PARALLEL universe - குவாண்டம் இணை பிரபஞ்சங்கள்


ஒவ்வொன்றாக சுருக்கமாகப் பார்ப்போம்.

ஹைப்பர் ஸ்பேஸ் என்பது நம் மூன்று பரிமாணங்களுக்கும் மேல் நான்காவது ஐந்தாவது பரிமாணங்களில் வெவ்வேறு வெளிகள், வெவ்வேறு உலகங்கள் இருக்கலாம் என்பது.

இதை முதன்முதலில் சொன்னவர் பெயரை ஏற்கனவே ௮-௮-௮ வில் சொல்லி இருக்கிறோம். ஞாபகப்படுத்த முயற்சி செய்யுங்கள்.என்னது ஞாபகம் வரவில்லையா? பரவாயில்லை.விக்ரம் நடித்த கடைசி படம் என்ன? வாழ்த்துக்கள். உடனே சொல்லி விட்டேர்களே? இப்படி தான் இருக்கணும்.

சாதாரணமாக நம்மால் மூன்று பரிமாணங்களை மட்டுமே கற்பனை செய்ய முடிகிறது. மேற்பட்ட பரிமா
ங்களுக்கான தேடல்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஈர்ப்பு விசை இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள தூரத்தின் இருமடிக்கு தகுந்தவாறு மாறும் என்று நமக்குத் தெரியும். இது வெளி முப்பரிமாணமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். இருபரிமாணத் தளத்தில் வரையப்பட்ட வட்டம் ஒன்றைக் கருதுவோம்.அதன் மையத்தில் தோன்றும் ஈர்ப்பு விசை அதன் சுற்றளவை ஆதிக்கம் செய்வதாகக் கொண்டால் ஈர்ப்பு விசை ~2 *pi * R ஆக இருக்கும். அதே வட்டத்தை முப்பரிமாண வெளியில் வரைந்தால் நமக்கு ஒரு கோளம்(SPHERE ) கிடைக்கும் . அதன் மையத்தில் பிறக்கும் ஈர்ப்பு விசை அதன் சுற்றளவு விரிய விரிய குறையும். எந்த அளவு குறையும் என்றால் கோளத்தின் சுற்றளவு 4 *pi *R *R . \!A = 4\pi r^2.எனவே ஈர்ப்பு விசை தூரத்தின் இருமடிக்கேற்ப குறைகிறது. எனவே 2 +1 =3 பரிமாணங்கள் மட்டுமே இருக்கின்றன என்று நம்பலாம்.நான்கு (வெளி) பரிமாணங்கள் இருக்குமானால் ஈர்ப்பு விசை தூரத்தின் மும்மடிக்கு (R ^ 3 )ஏற்ப குறையும். அப்படி அபாரமான வேகத்தில் ஈர்ப்பு குறைந்தால் நிலவு பூமியிடம் நிற்காது. பூமி சூரியனிடம் பந்தப்பட்டிருக்காது. வாழ்க மூன்று!

ஆனால் மற்ற பரிமாணங்கள் மிக மிகச் சிறிய முடிச்சுகளாக சுருட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 'ஸ்ட்ரா' ஒன்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு கோடு போல மட்டுமே தெரிகிறது.(ONE DIMENSIONAL ).ஆனால் பக்கத்தில் பார்த்தால் அதன் இரண்டாம் பரிமாணம் (சிறிய வளைவு) தெரிகிறது அல்லவா? அது மாதிரி.

4D இயேசு
நான்காம் வெளி அல்லது HYPER space என்பது கலை ஆர்வலர்களை மிகவும் கவர்ந்த ஒரு விஷயமாக இருந்து வந்துள்ளது. உதாரணமாக Salvador Dali என்பவரின் Christus Hypercubus என்ற ஓவியம்.இந்த ஓவியத்தில் அதை வரைந்தவர் நான்காம் பரிமாணத்தை கொண்டு வர முயன்றுள்ளார். இயேசு இதில் நான்கு பரிமாண சிலுவையில் அறையப்பட்டுள்ளார். இவரின் இன்னொரு பிரசித்தமான ஓவியம் Persistence of Memory கீழே உள்ளது.

La persistencia de la memoria


சார், இந்த ஓவியத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்கிறீர்களா? ஓகே.சொல்கிறேன்.ஒரு கடிகாரத்தை ஓவியமாக வரையும் போது அது ஓடுவது போல வரைய முடியாது (கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்வது வேறு விஷயம்) எனவே வரையப்படும் எல்லா கடிகாரங்களும் காலம் உறைந்து விட்ட நிலையைக் குறிக்கும். புகைப்படங்களில் உள்ள கடிகாரங்கள் கூட. ஒரு போட்டோவில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்து அது ஓடிக் கொண்டிருந்ததா அல்லது நின்று விட்ட கடிகாரமா என்று சொல்வது அசாத்தியம். அது போல இந்த ஓவியத்தில் வரும் உருகும் கைக்கடிகாரங்கள் ஒருவித காலமற்ற கனவு நிலையைக் குறிக்கின்றன. (சில பேர் இது ஐன்ஸ்டீனின் சார்பியலைக் குறிக்கலாம் என்கிறார்கள்) INCEPTION திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கனவு நிலை ஒன்றில் காலம் என்பது இயல்பை விட்டு விலகி கண்டபடி நகர்கிறது அல்லது உறைந்து விடுகிறது. ஒரு நிமிடமே நீடிக்கும் கனவு மனோ நிலையில் ஒரு வருடமாகத் தோன்றலாம். அந்தக் கனவில் இன்னொரு கனவு வருவதாக வைத்துக் கொள்வோம்.அப்போது அதன் கால அளவு இன்னும் நீட்டிக்கப்படும். எனவே நாம் ஒரு நொடி என்று நினைக்கும் ஒன்று (பிற கீழ்ப்பரிமாணங்களில்) தனக்குள் ஒரு யுகத்தையே அடக்கிக் கொண்டிருக்கலாம். நமக்கு ஒரு யுகமாகத் தோன்றும் கால அளவு சில உயர் பரிமாண ஜீவிகளுக்கு ஒரு நொடியாக இருக்கலாம்.HOW LONG IS A SECOND , ACTUALLY?


கிருஷ்ண பரமாத்மாவும் நாரதரும் ஒரு நீண்ட பாலைவனம் வழியாகப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.. அப்போது கிருஷ்ணர் களைத்துப் போய் அப்படியே உட்கார்ந்து விடுகிறார்... 'நாரதா நாரதா, ரொம்ப தாகமாக உள்ளது.. நீ போய் பெப்சியோ, கோக்கோ கிடைக்கிறதா என்று பார்த்து வா' என்று நாரதரை அனுப்புகிறார்... நாரதரும் தண்ணீர் தேடி அலைகிறார்... அப்படியே பாலைவனம் தாண்டி ஊருக்குள் வந்து விடுகிறார்...அங்குள்ள கிணறு ஒன்றில் அழகான பெண் ஒருத்தி நீர் எடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.. "முதன் முதலில் பார்த்தேன் , காதல் வந்தது" கேஸ் ஆகி இருவரும் காதலில் விழுகிறார்கள். (கிருஷ்ணர் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும் , தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் அறவே மறந்து விடுகிறார் நாரதர்.. ) இருவரும் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தை குட்டிகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்....ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்த ஊருக்குள் வெள்ளம் வந்து விடுகிறது... எல்லாரும் அடித்துச் செல்லப் படுகிறார்கள்..நாரதர் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களும் வெள்ளத்தில் சென்று விடுகிறார்கள்..நாரதர் அந்த அதிர்ச்சியில் மயங்கி விடுகிறார்... கண் விழித்துப் பார்
க்கையில் தான் அவருக்குத் தான் கிருஷ்ணருக்காகத் தண்ணீர் தேடி வந்தது நினைவில் வருகிறது...உடனே நீர் எடுத்துக் கொண்டு அந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று பார்க்கிறார்... கிருஷ்ணர் இன்னமும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்..."நாரதா ஏன் இவ்வளவு நேரம்? அரை மணி நேரமாகக் காத்திருக்கிறேன், என்கிறார் கிருஷ்ணர்..நாரதரின் குழப்பத்தை உணர்ந்த அவர், மகனே,உன் காலமும் என் காலமும் வேறு...உன்னுடையது மாயை என்னுடையது உண்மை என்கிறார்

Marcel Duchamp என்பவரின் NUDE DESCENDING A STAIRCASE என்ற ஓவியத்தையும் பாருங்கள். இது ஓவியம் தானா என்று நீங்கள் அப்பாவியாகக் கேட்டால் உங்களுக்கு CUBISM என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஷேம் ஷேம் பப்பி ஷேம்.

Nude என்றதும் குஜாலான ஓவியத்தை எதிர்பார்த்தீர்களாக்கும்!


தமிழ் விக்கிபீடியாவில் இருந்து கியூபிசத்தின் விளக்கம்:

இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின்னர் உருவான கலை இயக்கங்களுள் மிக முக்கியமானதும், செல்வாக்கு மிக்கதுமான கலை இயக்கம் கியூபிசம் (Cubism) என்று சொல்லலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில், ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது கியூபிசமேயாகும்.
கியூபிசக் கலை ஆக்கங்களில், பொருட்கள் துண்டுதுண்டாகப் பகுத்தாராயப்பட்டு abstract வடிவில் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. பொருட்களை ஒரு கோணத்தில் பார்த்துக் கலைப் படைப்புக்களில் அவற்றின் ஒரு பகுதியை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே சமயத்தில் பொருட்களின் பல கோணப் பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படை எனலாம். பொதுவாக கியூபிசப் படைப்புக்களில் தளப்பரப்புகள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும். பொருட்களினதும், அவற்றின் பின்னணிகளினதும் தளங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி அதிக ஆழம் காட்டாத பொருள்மயங்கு நிலையை உருவாக்குவதே கியூபிசத்தின் சிறப்பியல்பு ஆகும்.

மூஞ்சூறு மேல் பிள்ளையார் அபய ஹஸ்தத்துடன் உட்கார்ந்திருப்பது, தமயந்தி அன்னத்தைத் தடவிக் கொடுப்பது,தாமரையில் உட்கார்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது, மோனாலிசா சிரிப்பது இந்த மாதிரி CONVENTIONAL TWO DIMENSIONAL ஓவியங்கள் கியூபிஸ்டுகளுக்கு அறவே பிடிப்பதில்லை .

கீழே இருப்பது கிட்டார் வாசிக்கும் ஒரு பெண்ணாம் (நம்பிட்டோம்)



The invisible என்ற திரைப்படத்தில் ஹீரோ யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்.அவரால் எல்லாரையும் பார்க்க முடியும். ஆனால் அவரை யாரும் பார்க்கவோ அவர் பேசுவதைக் கேட்கவோ முடியாது.[அதாவது பணக்கார உறவினர்கள் வீட்டு விஷேசத்துக்கு வாலண்டியராகப் போகும் ஏழை தூரத்து உறவினன் நிலை]


நியூட்டனின் INVERSE SQUARE LAW மிகச் சிறிய தூரங்களில் தோல்வியடைகிறதா என்ற சோதனை சமீபத்தில் (2003 ) செய்யப்பட்டது.அதாவது பிற பரிமாணங்கள் மிகச் சிறிய தூரங்களில் சுருங்கி இருந்தால் அங்கே ஈர்ப்பு தூரத்தின் N -1 (N -No .of dimensions )மடிக்கேற்ப மாறுபடும்.ஆனால் அப்படி மாறுவதாக சோதனையில் தெரியவரவில்லை. உயரிய பரிமாணங்கள் மிக மிகச் சிறிய தூரங்களில்(கிட்டத்தட்ட பிளான்க் நீளம்) சுருங்கி இருந்தால் இப்போது நம்மிடையே உள்ள கருவிகள் அவற்றை உணர இயலாது என்பதால் இந்த சோதனையை மீண்டும் அதிக துல்லியத்துடன் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.


படங்களில் EXTRA DIMENSION காட்டப்பட்டுள்ளது. விரிந்த இரண்டு பரிமாணங்களுக்கு மத்தியில்
மிகச் சிறிய சுருங்கிய , வளைந்த 3D காட்டப்பட்டுள்ளது.இரண்டாவது படத்தில் இரண்டு
பரிமாணங்கள் ஒருங்கே சுருங்கி உள்ளன.


நான்காம் பரிமாணம் சுருங்கி இருக்காமல் விரிவடைந்து இருந்தால் இன்று நாம் 'கிராபிக்ஸ்' என்று நினைக்கும் எல்லாமும் நடைமுறையில் சாத்தியமாகும்.


படத்தில் இருபரிமாண வெளியில் இரண்டு வண்டிகள் ஒன்றை நோக்கி ஒன்று வருகின்றன. அவை கண்டிப்பாக P என்ற புள்ளியில் மோதிக்கொள்ளும்.(இரண்டு வண்டிகளுக்கும் X மற்றும் Y அச்சுகள் சமமாக இருப்பதால்) ஆனால் இதே நிகழ்ச்சி முப்பரிமாண வெளியில் நிகழ்ந்தால் இரண்டு வண்டிகளும் மோதிக்கொள்ளாமல் தன் வழியில் செல்ல முடியும். X Y சமமாக இருந்தாலும் Z அச்சு வேறுபடுவதால். ஹாரி பாட்டர் படத்தில் இரண்டு வண்டிகள் ஒன்றை நோக்கி ஒன்று வந்தாலும் அவை மோதிக்கொள்ளாமல் ஒன்றை ஒன்று கடந்து செல்லும். நான்காம் பரிமாணம் ஒன்று இருந்தால் இது சாதாரணம். [IOW, நமக்கு சாதாரணம் என்று தோன்றும் விஷயங்கள் இருபரிமாண ஜீவிகளுக்கு பயங்கர அதிசயமாகத் தோன்றலாம்] இரண்டு பொருள்களுக்கு X Y மற்றும் Z அச்சுகள் சமமாக இருந்தாலும் அவை நான்காம் பரிமாணத்தில் ஒன்றை ஒன்று மோதாமல் கடந்து போக முடியும்.

அதே போல படத்தில் வண்டி A என்ற புள்ளியில் இருபரிமாணத்தை நீங்கி 3D யில் நுழைந்து கம்ப்யூட்டர் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து முப்பரிமாணத்தில் பயணித்து B என்ற புள்ளியில் மீண்டும் இருபரிமாண உலகில் நுழைகிறது.இது இருபரிமாண உலகில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு வண்டி A யில் இருந்து மாயமாக மறைந்து B யில் மகாவிஷ்ணு போல தோன்றுவது போலத் தெரியும்.(TELEPORTATION ) .ஒளி இப்படிதான் ஐந்தாம் பரிமாணத்தில் பயணிக்கிறது உண்மையில் நகர்வதில்லை என்று கூட சொல்கிறார்கள்.

மேலும் படத்தில் இருக்கும் மனிதர் வண்டியைப் பார்க்கும் போது அவருக்கு அது ஒரு கோடுபோல மட்டுமே தெரியும். வண்டியின் முழு உருவத்தை அவரால் பார்க்க இயலாது. அதே போல 3D யில் நாம் ஒரு பொருளை பார்க்கும் விதம் எல்லைகளுக்கு உட்பட்டுள்ளது,நான்காம் பரிமாணத்தில் இருந்து நம்மை (3D )ஒருவர் பார்த்தால் அவரால் நம் தலை முதுகு முகம் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.அப்படிப் பார்த்தால் நாம் அழகாகத் தெரியமாட்டோம்.(இப்ப மட்டும் அழகா தெரியற மாதிரி!) ஒரு மாடர்ன் கியூபிச பெயிண்டிங் போல அசிங்கமாக சொத சொத என்று இருப்போம்.

எனவே அடுத்த முறை ஒரு மாடர்ன் painting -ஐப் பார்த்தால் சே தூ இதெல்லாம் ஓவியமா என்று ஃபிலிம் கட்டாமல் அதற்குள்ளே பொதிந்திருக்கும் உண்மையை அறிந்து வியக்கவும்.


இப்போது பைபிளில் இருந்து:-


டேனியல் 2 :22

அவன் (நமக்கு) இருட்டான மறைக்கப்பட்ட இடங்களை அறிவான். அவனுக்குள் ஒளி உண்டு. அவன் பார்வையில் இருந்து மறைந்தது எதுவும் கிடையாது.

Hebrews 4:13 Nothing in all creation is hidden from God's sight. Everything is uncovered and laid bare before the eyes of him to whom we must give account.

முத்ரா

Thursday, March 8, 2012

கலைடாஸ்கோப்-57

லைடாஸ்கோப்-57 உங்களை வரவேற்கிறது.


ஏக
===

After thirty, a body has a mind of its own.
Bette Midler

Age is a very high price to pay for maturity.
Tom Stoppard

“That man never grows old who keeps a child in his heart”
-Richard steele

போன வாரம் பிறந்த நாள் வந்தது.மார்ச் இரண்டு. ஓர் அமாவாசையில் வெள்ளிக் கிழமையில் நள்ளிரவில் உதித்த (?) அரிய (?)குழந்தைகளில் அடியேனும் அடக்கம். இத்தனை வயதாகிறதே (எத்தனை வயது என்பது ராணுவ ரகசியம்) இன்னும் ஒண்ணுமே செய்யவில்லையே என்று வருத்தப்பட்டதற்கு
நண்பர் ஒருவர் 'என்ன நீங்க,இப்படி சொல்லறீங்க, LIFE STARTS AT THIRTY' என்றார். ஆனால் முப்பது வயதுக்கு மேல் ஆன ஆளை நம்பாதே என்று கூட ஒரு பொன்மொழி இருக்கிறது. எதை நம்புவது? மேலும்,ஆண் நாற்பது வயதிலும் பெண் முப்பது வயதிலும் தம் அழகின் உச்ச கட்டத்தில் இருக்கிறார்கள் என்று கூட சொல்கிறார்கள் (ஓ அதான் அஜீத்குமார் தனக்கு நாற்பது வயது என்று வெளிப்படையாக சொன்னாரா?) . சரி. இவையெல்லாம் வயதாகிறதே என்று கவலைப்படுபவர்களுக்கு ஆறுதல் தருவதற்காக ஏற்பட்டிருக்கலாம்.எல்லாரும் எல்லா வயதிலும் அழகு தான்.மலர் போன்று இருக்கும் குழந்தை அழகு என்றால் பழுத்த பழம் போல இருக்கும் தொண்ணூறு வயது தாத்தா ஒருவித அழகு.சும்மா, அழகையும் வயதையும் ஏன் கலப்படம் செய்ய வேண்டும்?

நம் மனதின் ஒரு பகுதி உனக்கு வயதாகிறது என்று எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. (வெய்யிலில் பேட் எடுத்துக் கொண்டு கிரிக்கெட் ஆடக் கிளம்பும் போதும், ஏதோ ஒரு உத்வேகத்தில் லிஃப்டை புறக்கணித்து மாடிப்படி ஏற எத்தனிக்கும் போதும், ஒரு வாரமாகியும் மாற்றாத எண்ணெயில் பொறித்த மிளகாய் பஜ்ஜியை சாப்பிட எத்தனிக்கும் போதும், ஆட்டோ எல்லாம் எதற்கு நடந்தே போகலாம் என்ற முரட்டு தைரியத்தில் உறவினர்களிடம் இயம்பும் போதும் இந்த மனம் அவசரமாக மேலே வந்து நம்மை எச்சரிக்கும். இன்னொரு பகுதி மனம் இருக்கிறது, 'நீ இன்னும் யூத்து தாண்டா கண்ணா , வாழ்க்கையை அனுபவி' என்று நம்மை அவ்வப்போது உற்சாகப்படுத்தும் இது.

என்னைப் பொறுத்த வரை 'வயது' என்பது ஒரு விதமான MENTAL PHENOMENON . உடலின் வயதை விட மனதின் வயது தான் முக்கியம். இருபது வயதே ஆன ஒரு இளைர் தாத்தா மாதிரி பேசுவதைப் பார்த்திருப்பீர்கள் (அல்லது கேட்டிருப்பீர்கள்). (அரட்டை அரங்கங்களில் குழந்தைகள் ஐம்பது வயதுக் கிழம் போல பேசுவது வேறு விஷயம். திருக்குறள் ஒப்புவிப்பதன் முன்னேறிய வடிவம் அது.அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.) அதே போல 50 + வயது ஆனாலும் டி-ஷர்ட் , ஜீன்ஸ் பேன்ட் எல்லாம் போட்டுக் கொண்டு தன்னை
இளைஞனாகக் காட்டிக்கொள்ள எத்தனிக்கும் பார்ட்டிகளையும் பார்த்திருக்கலாம். இது தவறு என்று சொல்லவில்லை. சில சமயம் மனது உடலை முந்திக் கொண்டு வளர்ந்து விடுகிறது. சில சமயம் உடல் வளர்ந்தாலும் மனம் மெதுவாக ஆமை வேகத்தில் வளர்கிறது. உடலும் மனமும் இந்தக் காலத்தில் ஒரே ரேட்டில் வளர்வது கொஞ்சம் அபூர்வம் தான். குழந்தைகள் சிலசமயம் பிஞ்சிலே பழுத்தது போல பேசுவதும், வயதானவர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வதும் இயல்பு தான். ஆனால் அதுவே நிரந்தரம் ஆகி விடக் கூடாது.ONCE IN A WHILE , ok ...

அவ்வையார் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டு இருபதில் இருந்து அறுபதுக்கு ஒரேயடியாக ஜம்ப் ஆகி விட்ட கதை ஒன்று உண்டு.இயற்பியல் விதிகள் படி இது சாத்தியம் இல்லை.தனக்கு அறுபது வயது MATURITY வர வேண்டும் என்று வேண்டுமானால் பிள்ளையாரிடம் கேட்டிருக்கலாம்.

வயதானவர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள் என்று சொல்வதுண்டு.இது பெரும்பாலும் உண்மைதான். குழந்தையாக இருக்கும் போது மனிதன் சின்னச் சின்ன விஷயங்களை விழைகிறான். சாக்லேட், கரடி பொம்மை , பஸ் பயணம், கோலிகுண்டு ..பிறகு பெரிய பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டு (உலகை அளப்பேன், வானை வளைப்பேன் etc ), அது அபத்தம் என்று புரிந்து கொண்டு வயதானதும்
மீண்டும் நெய் முறுக்குக்கும் நேந்திரம் பழத்துக்கும் ஆசைப்பட ஆரம்பித்து விடுகிறான்.இப்போது ஒரு ஜோக். (so called மீள் ஜோக்)

எழுபது வயதான முல்லா நசுருதீன் தன் தொண்ணூறு வயதான தந்தையை அழைத்துக் கொண்டு ஒரு மனநல டாக்டரிடம் வந்தார்....

"டாக்டர்....எங்க அப்பா தினமும் நிறைய நேரம் பாத் ரூமில் ஒரு வாத்து பொம்மையை வைத்துக் கொண்டு தண்ணீரில் விளையாடுகிறார்" என்றார்....

டாக்டர் " முல்லா..பாருங்கள் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை....வயதானவர்கள் குழந்தை போல ஆகி விடுகிறார்கள் ....அவர் பிறரை தொந்தரவு செய்யாத வரை இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை" என்றார்...

முல்லா "ஆனால் டாக்டர், அது என்னுடைய வாத்து பொம்மை" என்றார்....


த்வி
====

* இந்த தளத்தில் கவிதைகள் (சில) நன்றாக இருக்கின்றன. சேம்பிளுக்கு இரண்டு:

அப்போது,
டேய் புது ரேடியோ
நீ தொடாதே,
என்றார் என் அப்பா!
இப்போது,
அப்பா புது கம்ப்யூட்டர்
நீங்கள் தொடாதீர்கள்,
என்கிறான் என் மகன்!

காதலி: என்மீது உன் காதல் எவ்வளவு?
காதலன்: வானம் அளவு!
காதலி: இது எல்லாரும் சொல்றது!
காதலன்:கடலின் ஆழம்!
காதலி: இத யார்தான் சொல்லல?
காதலன்: பூமி அளவு
காதலி: ச்சச்ச
.
..
...
....

காதலன்:ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு!!
காதலி: அய்யோ ஐ லவ் யூ டா

** இன்று ஊர் உலகத்தில் இல்லாத அதிசயமாக காலையில் சீக்கிரமே (அதாவது ஏழு மணிக்கே) திருவிழி மலர்ந்து விட்டேன். வெளியே வந்து பார்த்த போது தான் அதிகாலையில் உலகம் (பெங்களூர்) எத்தனை அழகாக இருக்கிறது என்று தெரிந்தது. கண்ணை உறுத்தாத ஆரஞ்சு பந்து போல சூரியன், பறவைகள் கானம், மிக மிக லேசான பனி..(சரி சரி மேட்டர சொல்லு!)

அப்போது எதிரே இருந்த மரத்தில் வினோத பறவை ஒன்று வந்து அமர்ந்தது.பெயர் தெரியவில்லை.வெள்ளை நிறம். பறவை சின்னது தான். வால் மட்டும் மிக நீளம். சுமார் ஒரு அடி நீளத்துக்கு இரண்டாகப் பிளவு பட்ட வெள்ளை நிற வால்.அந்தப் பறவை பறப்பதைப் பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. வழக்கம் போல பறக்காமல் பாம்பு ஊர்வதைப் போல பறந்தது. வினோத வால் இருப்பதால் அப்படிப்பட்ட உந்துசக்தி கிடக்கிறது போலும்! கேமரா ரிப்பேர் ஆகி விட்டதால் படம் எடுக்க முடியவில்லை . பறவையின் பெயர் என்ன என்பதை இயற்கை ஆர்வலர்கள் யாராவது சொல்லவும். பெயர் தெரிந்து கொண்டால் மட்டும் என்ன பெரிதாக நிகழப் போகிறது? STILL அது இயற்கையின் அதிசயம் தான்.ஏன் காக்கா கூட அதிசயம் தான். என்ன அது அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும் தினமும் பார்ப்பதாலும் அதை நாம் கண்டுகொள்வதில்லை.போட்டோ எடுப்பதில்லை!


த்ரி
====

சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள். அது எரிச்சலாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். I DO ACCEPT ..ஆனால் இது எப்படி இருக்கிறது என்றால் ஜி.என்.பி கல்யாணி பாடி விட்டார்; சந்தானம் மோகனம் பாடிவிட்டார். இனிமேல் யாரும் கல்யாணி மோகனம் பாடக்கூடாது என்பது போல இருக்கிறது. ஒருமுறை நீங்கள்
ஜி.என்.பியின் 'வாசுதேவயெனி ' யையோ சந்தானத்தின் 'நன்னு பாலிம்ப' வோ கேட்டு விட்டால் நீங்கள் பாடும் போது அந்த INFLUENCE வராமல் தவிர்க்க முடியாது. அவ்வளவு PERFECT ஆகப் பாடி இருப்பார்கள்.அது போல ஜனரஞ்சகமாக எழுதும் அல்லது எழுத முயற்சிக்கும் எல்லாருக்கும் சுஜாதா பாணி கொஞ்சம் இருந்தே தீரும். அது அச்சு அசல் அப்படியே இருந்து
படிப்பவர்களை எரிச்சலடையச் செய்யாமல் அங்கங்கே எட்டிப் பார்த்தால் அது 100 % OK என்றே தோன்றுகிறது.

சதுர்
=====
அவ்வப்போது தமிழ் இலக்கணம் பார்த்து வருகிறோம்.இன்று 'விகாரம்' என்றால் என்ன என்று பார்க்கலாம்.

செய்யுளில் எதுகை மோனை தளை இவையெல்லாம் சரியாக வர வேண்டும் என்று தவிர்க்க முடியாமல் (கவனிக்கவும் எப்போதும் அல்ல) சில சமயங்களில் வார்த்தைகளை வேண்டுமென்றே மாற்றுவது.வெட்டுவது, ஓட்டுவது, நீட்டுவது.நகை செய்யும் போது கற்களை எப்படி அடித்து திருத்தி பொருத்துகிறோமோ அப்படி செய்யுளில் அழகு வரவேண்டும் என்று எழுத்துகளை நம் இஷ்டம் போல மாற்றுவதற்கு தமிழ் இலக்கணம் அனுமதி அளிக்கிறது.உதாரணம்:

ஈசன் எந்தை இணையடி நீழலே ! - நிழல் என்பதை நீழல் என்று நீட்டலாம். குழந்தைகளைப் பார்த்து ச்சோஓ
ஓ ஸ்வீட் என்று பெண்கள் சொல்வது இதில் சேருமா என்று தெரியவில்லை.அது அளபெடை என்று நினைக்கிறேன். தமிழ் அறிந்தவர்கள் சொல்லவும்.

கம்பர் சில இடங்களில் குரங்கு என்று சொல்லாமல் குரக்கு என்று சொல்வார்.இதற்கு வலித்தல் விகாரம் என்று பெயர். டேய் குரக்கு, இன்னிக்கு அடிக்கலாமா சரக்கு என்று உங்கள் நண்பர்களிடம் நீங்கள் கவிதை பேசலாம். தமிழ் இலக்கணப்படி 100 % allowed !

தேவையென்றால் சில வார்த்தைகளின் தலையையே வெட்டி விடலாம். உதாரணம் தாமரை விழி என்பதை மரை விழி என்று சுருக்கலாம்.

நினைத்தேன் என்பதை நினைந்தேன் என்று சொல்வதும் விகாரம் தான்.

பஞ்ச
=====

கையை நட்புக்கு ஒப்பிடுவார் வள்ளுவர்.(உடுக்கை இழந்தவன் கைபோல) . நமக்கெல்லாம் முதலில் உற்ற நண்பன் நம் (வலது) கைதான். அதற்கப்புறம் தான் கணேஷ், சுரேஷ், கமலேஷ் எல்லாரும்.ஆனால் அந்தக் கையே நமக்கு எதிரியானால் ? தன் கையே தனக்கெதிரி. இதற்குப் பெயர்
Alien hand syndrome ...நம்முடைய கை மூளையின் கட்டுப்பாட்டை விட்டு விலகி அதுபாட்டுக்கு செயல்படுவது. (கொடுமை இல்லையா?) .மூளையின் இரண்டு அரைக் கோளங்களுக்கு இடையே ஏற்படும் Communication gap -ஆல் இது ஏற்படுகிறதாம். இந்தக் கை எனக்கு வேண்டாம். இது எதையாவது செய்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. (சில சமயத்தில் போய் நெருப்பை தொட்டு விடுமாம்!)இதை சர்ஜரி செய்து எடுத்து விடுங்கள் என்று இந்த சின்ட்ரோம்-பாதித்த நோயாளிகள் டாக்டர்களிடம் கெஞ்சி இருக்கிறார்களாம்.

நம்மில் பலருக்கு வன்முறைகளின் போது இந்த
Alien hand syndrome எங்கிருந்தோ வந்து விடுகிறது.புத்தியைக் கேட்காமல் நீ கொஞ்ச நேரம் கம்முன்னு கட என்று சொல்லி விட்டு கை, அதுபாட்டுக்கு கற்களை எடுத்து வாகனங்கள் மேல் எறிகிறது.அது பாட்டுக்கு தீக்குச்சியை உரசி தீ வைக்கிறது. அருவாளைத் தூக்குகிறது.Yes , we all have an alien hand at times!

ஷஷ்
=====

ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி மூவரும் மெக்சிகோவில் பயணம் செய்த போது ஒரு மெக்சிகனை ஏதோ ஒரு காரணத்துக்காக கொன்று விட்டனர்.அவர்கள் மூவருக்கும் மின்சார நாற்காலி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கன் ' நான் ஒரு டென்டிஸ்ட். நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் .என்னை விட்டுவிடுங்கள் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

இந்தியன் ' நான் ஒரு டாக்டர் . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .. சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

பாகிஸ்தானி '
நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'

முத்ரா


Tuesday, March 6, 2012

அணு அண்டம் அறிவியல் -62

அணு அண்டம் அறிவியல் -62 உங்களை வரவேற்கிறது.

கவுண்டமணி : டேய், நான் உன்னை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?
செந்தில்: ரெண்டு வாழப்பழம் அண்ணே
: கடைக்கு போனியா?
செ: போனேன்
: கடைக்காரன் எத்தனை பழம் கொடுத்தான்?
செ:ரெண்டு கொடுத்தான்
: ரெண்டு கொடுத்தானா?
செ: கொடுத்தான்
: சரி..அந்த ரெண்டுல ஒண்ணு இங்கே இருக்கு..இன்னொரு பழம் எங்கே?
செ: அதுதாண்ணே இது.

மேட்டர் என்றால் என்ன? (இன்றைய இளைர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டாம்) மேட்டர் என்பதை இயற்பியல்

* நிறை உள்ள ஒன்று
* வெளியை அடைத்துக் கொள்ளும் ஒன்று
* ஈர்ப்பால் இழுக்கப்படும் ஒன்று என்கிறது.

இந்த வரையறைகள் பொதுவாக ஆற்றலுக்கும் பொருந்தும். ஆற்றலுக்கும் (சிறிதே) நிறை உண்டு.சூடான காபி ஆறிய காபியை விட கொஞ்சம் அதிக நிறை இருக்கும்.ஆற்றல் ஈர்ப்பை உருவாக்கும். ஆற்றல் ஈர்ப்பால் பாதிக்கப்படும். பொதுவாக இயற்பியலில் ஆற்றல் நிறை இதற்கான DEMARCATION LINE மெலிந்து கொண்டே வருகிறது எனலாம்.சில சமயம் தூக்கம் வராவிட்டால் இந்த நிறை ஆற்றல் குழப்பம் என்னை மிகவும் பாதிக்கும். ஆற்றல் என்றால் என்ன?நகருவது தான் ஆற்றலா? சரி. ஓஷோவின் ஒரு மேற்கோள் :

"பிரபஞ்சம் ஆற்றல் மற்றும் நிறை என்ற இரண்டு தூண்களால் ஆக்கப்பட்டிருப்பதாக அறிவியல் சொல்கிறது; ஆனால் மூன்றாவதாக இருக்கும் ஒன்றை அது முற்றிலும் புறக்கணித்து விட்டது; அதுதான் பிரக்
ஞைத்தன்மை (Consciousness ) .ஆற்றல் நிறையாகவும் நிறை ஆற்றலாகவும் தோன்றக் கூடும் என்று அறிவியல் சொல்கிறது.ஆனால் பிரக்ஞைத்தன்மை இந்த இரண்டாகவும் தோன்றக்கூடும் என்ற சாத்தியத்தை அது மறந்து விட்டது.பிரபஞ்ச விழிப்புணர்வு தன்னை ஆற்றல் அல்லது பொருளாக வெளிப்படுத்த முடியும்; ஆற்றலும் பொருளும் மறைந்தாலும் அது நிலைத்திருக்கும்"

கடவுள் மற்றும் அவர் படைத்த பிரபஞ்சம்
என்று தனித்தனியாக DUALITY உடன் பார்ப்பதை ஓஷோ விரும்புவதில்லை. கடவுளே பிரபஞ்சம் என்கிறார். சரி.இன்னொரு முறை ஓஷோ என்று சொன்னால் என்னை அடிக்க வந்து விடுவீர்கள்.

மேட்டர் என்றால் என்ன என்று உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்.ஆன்டி-மேட்டர் (எதிர்ப்பொருள்)பற்றியும் சொல்லி இருக்கிறோம்.இயற்கை இவை இரண்டையும் ஜோடிகளாகவே படைக்கிறது என்றும் , போதுமான ஆற்றல் இருந்தால் அதில் இருந்து பொருளும் எதிர்ப்பொருளும் மாயாபஜார் லெவலுக்கு தாமாகவே தோன்ற முடியும் என்றும் பார்த்தோம்.மேலும் பொருளும் எதிர்ப்பொருளும் சந்தித்தால் ஒன்றை ஒன்று முற்றிலும் அழித்துக் கொண்டு ஆற்றலாக வெளிப்படும் என்றும் பார்த்தோம். சரி.

இயற்கை ஆண் பெண் இருவரையும் பெரும்பாலும் சம எண்ணிக்கையிலேயே படைப்பது போல பொருளையும் எதிர்ப்பொருளையும் சம எண்ணிக்கையிலேயே படைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.ஆனால் பிரபஞ்சத்தில் இந்த எதிர் பொருளைத் தேடுவது இப்போது தமிழ் சினிமாவில் கதையைத் தேடுவது போல. மிக மிக சொற்ப அளவே கிடைக்கிறது. ஒரு மில்லியன் ஆண்களுக்கு ஒரே ஒரு பெண் இருந்தால் எப்படியோ அப்படி இது.(ஆமாம்.. அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?! யாரது ?அந்தப் பெண் ரெண்டே நாளில் செத்துப் போய் விடுவாள் என்று சொல்வது?) துகள் முடுக்கிகளில் by -product ஆக எலக்ட்ரானின் எதிர் துகள் பாசிட்ரான் கிடைக்கிறது. இதை எப்படி சொல்கிறார்கள் என்றால் எலக்ட்ரான் ஒரு காந்தப் புலத்தின் ஆதிக்கத்தில் ஒரு குறிப்பிட்ட திசையில் திரும்பும். ஆனால் இந்த வினோதத் துகள் அதற்கு எதிர்திசையில் திரும்பியது! (அதாவது இவைகள் ட்வின்ஸ்..ஆனால் இரட்டையர்கள் உருவத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் குணத்தில் ஒருவர் மூடி டைப்பாக இன்னொருவர் வாயாடியாக ஒருவர் வள்ளலாக இன்னொருவர் கஞ்சனாக ஒருவர் புத்திசாலியாக மற்றவர் முட்டாளாக இருக்கலாம் அல்லவா? அதே போல இவை இரண்டுக்கும் மின்சுமை (சார்ஜ்) தான் வேறுபாடு. மற்றபடி ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ).மேலும் கனமான தனிமங்கள் சுமை தாங்காமல் எளிய தனிமங்களாக சிதையும் போது(RADIOACTIVITY*) இயற்கையாகவே இந்த எதிர்பொருள் சிறிதளவு வெளிப்படுகிறது.

ஒண்ணு இங்கே இருக்கு; இன்னொண்ணு எங்கே என்பது போல பொருள் இங்கே இருக்கிறது. எதிர்ப்பொருள் எங்கே?இதற்கு இரண்டு சாத்தியங்கள் சொல்கிறார்கள்:

1 . கவனக் குறைவாக இருந்தோம்; பேபி FORM ஆயிடுச்சு என்று சிலர் சொல்கிறார்கள் இல்லையா? அது மாதிரி நாமெல்லாம் தப்பிப் பிறந்த பேபிகள்.பரிணாமம் என்பது கூட செல்கள் படியெடுப்பதில் வந்த தவறு என்று சொல்கிறார்கள். எனவே அடுத்த முறை கணக்கு தப்பாக போட்டு விட்டான் என்று பிள்ளைகளை அடிக்காதீர்கள். இப்போதெல்லாம் பிள்ளைகளை யாருமே அடிப்பதில்லை என்பது வேறு விஷயம்.ஒரு சின்ன ஜோக்:

பையன் 1 : எதுக்குடா எல்லார் பேக்கையும் டீச்சர் செக் பண்றாங்க?
பையன் 2 : யார் பேக்கிலாவது கத்தி துப்பாக்கி இதெல்லாம் இருக்கான்னு செக் பண்றாங்களாம்.

பிரபஞ்சம் தோன்றிய கணத்தில் பொ. வும் எதிர் பொ.வும் சமமாகவே தோன்றின என்கிறார்கள். பிறகு இரண்டும் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு ஆற்றலாக மாறின.பின்னர் இந்த ஆற்றல் துகள்கள் (?) ஒன்றுடன் ஒன்று மோதி மீண்டும் பொ. எதிர் பொ. தோன்றின.புனரபி ஜனனம் புனரபி மரணம்! இந்த களேபரத்தில் அழிந்து போகாமல் தப்பித்த சில பொருட்களால் தான் நம் பிரபஞ்சம் உருவானது என்கிறார்கள்.சில சமயம் என்ன தான் PERFECT ஆக டேலி செய்தாலும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மிஞ்சுமே
(சில அரசியல்வாதிகளுக்கு ரெண்டு லட்சம்கோடி கூட மிஞ்சும்) அது மாதிரி நம் பிரபஞ்சம் என்பது கழுவிய மீனில் நழுவிய மீன்! UNIVERSE IS CREATED BY CHANCE. கடவுள் திட்டமிட்டுப் படைத்தார் ; டைம்டேபிள் போட்டுப் படைத்தார். ஜூஸ் குடித்துக் கொண்டே படைத்தார் என்பதெல்லாம் பொய் என்று தோன்றுகிறது.

2 . பிரபஞ்சம் தோன்றிய கணத்தில்
பொ. வும் எதிர் பொ.வும் சமமாகவே தோன்றின.சில ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு ஆற்றலாகின.(அதுதான் இன்றைய CMBR ) மிஞ்சிய பொருட்கள் நம் பிரபஞ்சத்தைப் படைத்தன. மிஞ்சிய எதிர்ப்பொருட்கள் வேறொரு இணை எதிர் பொருள் பிரபஞ்சம் (ANTI MATTER UNIVERSE ) படைத்தன (படைத்திருக்கலாம்) என்கிறார்கள்.இந்த எ.பொ. பிரபஞ்சம் இங்கே தான் கூப்பிடு தூரத்தில் எங்கோ இருக்கிறதாம். மாய உலகம்! அங்கே எல்லாம் எதிர்ப் பொருட்களால் செய்யப்பட்டிருக்கும். பாசிட்ரான்கள் எதிர் ப்ரோடான்களை (ANTI QUARKS )சுற்றி வரும்.அங்கேயும் போட்டான்கள் இருக்கும். போட்டான்கள் தங்களுக்குத் தாமே எதிர்த் துகள்கள் என்பதால் போட்டான்கள் (அல்லது ஒளி) இந்த இரண்டு பிரபஞ்சங்களுக்கிடையே எந்த சிரமமும் இன்றி JUST LIKE THAT பயணிக்க முடியும்.இந்த பிரபஞ்சமும் எதிர் பிரபஞ்சமும் ஒன்றை ஒன்று சந்தித்து அழியாமல் ஒரு மாயவலை (?) இரண்டுக்கும் இடையே இருக்கலாம் என்று கூட ஊகிக்கப் படுகிறது. இந்த வலையை போட்டான்கள் ஊடுருவ முடியும்(INTER UNIVERSAL PERMIT ) .ஆனால் எலக்ட்ரான்களால் முடியாது. எனவே நாம் ஆகாயத்தில் காணும் ஒளி நம் சகோதரப் பிரபஞ்சத்தில் இருந்து கூட வந்திருக்கலாம்.மேலும் எதிர்பொருள் ஈர்ப்பினால் மேலே போகாது. கீழே தான் வரும்.இது ஏன் என்றால் நியூட்டன் விதிப்படி இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு அவற்றின் நிறைகளின் பெருக்கல் பலனோடு தொடர்பு உடையது. M1 * M2 = (-M1 ) * (-M2 ) என்பதால் இரண்டு பிரபஞ்சத்திலும் ஈர்ப்பு (+) ஆகவே இருக்கும்.

நாம் பிரபஞ்சத்தில் இருக்கிறோமா அல்லது எதிர் பிரபஞ்சத்தில் இருக்கிறோமா என்று அதன் வாசிகள் அறிந்து கொள்ள இயலாதபடி CTP SYMMETRY தடை செய்கிறது.இது என்ன என்றால் பிரபஞ்சத்திலும் எதிர் பிரபஞ்சத்திலும் இயற்பியல் விதிகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்னும் விதி.கணித பாஷையில் சொல்வதென்றால்

2 * 2 = (-2) * (-2)
2 / 2 = (-2) / (-2)


இப்போது பார்த்தது C-reversed universe (CHARGE ) இன்னொரு சாத்தியக்கூறு P -Reversed universe (Parity ) இடவல மாற்றம். அந்தப் பிரபஞ்சம் நம் பிரபஞ்சத்தின் ஒரு MIRROR IMAGE ஆக இருக்கும்.அங்கே இருக்கும் மக்களுக்கு இதயம் வலப்பக்கம் இருக்கலாம். பெரும்பாலான மனிதர்கள் இடதுகை காரர்களாக இருக்கலாம்.ஆனால் நாம் ஒரு P -Reversed universe இல் வாழ்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது.[தூரம் என்பது ஒரு SCALAR . A யில் இருந்து B அல்லது B யில் இருந்து A .நியூட்டன் விதிகள் மாறாது. பெங்களூரில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து பெங்களூருக்கும் ஒரே தூரம் தானே (ஒரே ரூட்டில்).எனவே MIRROR இமேஜில் விதிகள் மாறாது.

ரிசார்ட் பெயின்மான் ஒரு கேள்வி கேட்கிறார். ஒருநாள் நாம்
பகுத்தறிவு கொண்ட வேற்றுக்ரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.அவர்களுக்கு ரேடியோ சிக்னல்கள் மூலம் நம் பூமியைப் பற்றி விளக்குவதாகக் கொள்வோம்.அவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்ல முடியும். (நம் கணிதம், இயற்பியல், வேதியியல் எல்லாம்)ஆனால் எது இடது எது வலது என்று எப்படி சொல்ல முடியும்?எது CLOCKWISE எது ANTI -CLOCKWISE என்று எப்படி விளக்க முடியும்? ஒரு இயந்திரம் CLOCKWISE இல் சுற்றுகிறதா ANTI CLOCK WISE இல் சுற்றுகிறதா என்று இயற்பியல் விதிகளை வைத்துக் கொண்டு நம்மால் கண்டுபிடிக்க இயலாது.

ஆனாலும் 1957 ஆம் ஆண்டின் நோபல் பரிசு C .N YANG மற்றும் T .D LEE என்ற இவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அணுக்கரு மெலிய வினைகளில் PARITY break ஆகிறது என்பது அவர்கள் கண்டுபிடிப்பு. எனவே P -Reversed பிரபஞ்சம் சாத்தியம் இல்லை என அவர்கள் முன் வைத்தனர். எலக்ட்ரான்கள் SPIN என்று அழைக்கப்படும் ஒரு பண்பைக் கொண்டுள்ளன.தங்கள் அச்சைப் பற்றி இடப்பக்கம் சுழல்கிறதா வலப்பக்கமா என்று சொல்வது.சரி. எலக்ட்ரான் இந்தப்பக்கம் சுற்றினால் எதிர் பிரபஞ்சத்தில் பாசிட்ரான் அதற்கு எதிர் திசையில் சுழலலாம். இது PARITY BREAK ஆகாது. ஆனால் கோபால்ட்-60 என்ற கதிரியக்கத் தனிமம் சிதைந்து வெளிவரும் எலக்ட்ரான்கள் தங்கள் இஷ்டப்படி SPIN ஆவதை யாங் மற்றும் லீ கவனித்தார்கள். கண்ணாடிக்கு முன் இருவர் நிற்கும் போது கண்ணாடி பிம்பத்தில் மூன்று பேரைக் காட்டுவது போல இது.இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு OVERTHROW OF PARITY என்று அழைக்கப்படுகிறது.

யாங் மற்றும் லீயின் ரஃப் பேப்பர். தலை சுற்றினால் நான் பொறுப்பல்ல.


1980 ஆம் ஆண்டு CP -symmetry கூட சாத்தியம் இல்லை (CP -Reversed பிரபஞ்சம் இருக்க முடியாது)என்பது James Cronin மற்றும் Val Fitch (நோபல் பரிசு) என்பவர்களால் நிரூபிக்கப்பட்டது.

CP symmetry என்றால் ஒரு துகளின் மின்சுமையையும் (charge ) இடவலத்தையும் (PARITY ) மாற்றி அமைத்தால் இயற்பியல் விதிகள் மாறாது என்பது. ஆனால் மாறும் என்று CP violation சொல்கிறது.CP symmetry உண்மை என்றால் பிக் பேங்கில் உருவான துகள்களும் எதிர்துகள்களும் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு பிரபஞ்சமே உருவாகி இருக்காது. எனவே நம் பிரபஞ்சம் தோன்றியதே ஒரு வித SYMMETRY VIOLATION தான்.சமச் சீர்மையின் சிதைவு நம் பிரபஞ்சம் !

இன்னொன்று இருக்கிறது. அதுதான் CPT symmetry . இதன் violation இன்னும் நிரூபிக்கப்படவில்லை. நீங்கள் நிரூபித்தால் நோபல் பரிசு நிச்சயம். அதாவது charge PARITY மற்றும் TIME மூன்றும் REVERSE செய்யப்பட ஒரு பிரபஞ்சம்.நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் முன்னோக்கிப் பாயும் காலத்துக்கும் பின்னோக்கிப் பாயும் காலத்துக்கும் மாறா என்பதால் CPT Reversed பிரபஞ்சத்தில் வாழ்க்கை சாத்தியம். ஆனால் CPT REVERSED பிரபஞ்சம் அபத்தமாக இருக்கும். அங்கே தாத்தாக்கள் பிறந்து குழந்தையாக மாறி செத்துப் போவார்கள். உடைந்த கண்ணாடித் துண்டுகள் மேஜை மீது ஏறி அழகிய கண்ணாடி ஜாராக மாறும். மக்கள் இறந்த காலத்தைப் பற்றித் தெரியாமல் எதிர்காலத்தை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்! முடி கருப்பாகிறதே,முகத்தில் சுருக்கம் மறைகிறதே என்று கவலைப்படுவார்கள்!

ஆனால் CPT REVERSED universe உடன் நாம் தொடர்பு கொள்ள முடியாது. [அவர்களுக்கு காலம் பின்னோக்கி நகர்வதால் நாம் சொன்ன எல்லாவற்றையும் உடனே மறந்து விடுவார்கள்]

*வரும் மார்ச் -8 பெண்கள் தினம். கதிரியக்கத்தைப் பற்றி ஆராய்ந்து நோபல் பரிசு வென்ற மேரி கியூரிக்கு ௮-௮-௮ சல்யூட் செய்கிறது. இரண்டு நோபல் பரிசு பெற்ற ஒரே ஆள் இவர்தான்.
சமுத்ரா

Monday, March 5, 2012

சமுத்ரா திமிர் பிடித்தவரா? -ஓர் அலசல்

இந்த ப்ளாக்கின் ஓனர் (அது நான் தான் என்று நினைக்கிறேன்) மேல் வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகள்:

அவர் :


* திமிர் பிடித்தவர்
* மற்ற யாருடைய ப்ளாக்கிற்கும் சென்று பின்னூட்டம் போடாதவர்
* தனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாதவர்
* காப்பி அடித்து எழுதுபவர்
* ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்த்து அப்படியே தமிழில் எழுதுபவர்

-இன்னும் ஏதாவது இருந்தால் இப்போதே சொல்லிவிடவும். ஏனென்றால் நான் பாட்டுக்கு நான் அபாரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; கூடிய சீக்கிரம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்து விடும் என்று கற்பனைக் குதிரையை கட்டுப்பாடின்றி தறிகெட்டுப் பறக்க விட்டுக் கொண்டிருந்தேன். என் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் இட்டு கட்டுப்படுத்தியதற்கு
உங்களுக்கெல்லாம் முதலில் நன்றிகள்!

மேலே கூறிய குற்றச்சாட்டுகள் ஓரளவு உண்மை தான். எனவே இவற்றைத் தவறு என்று நிரூபிக்கப் போவதில்லை. ஆனால் இதில் உள்ளே நிதர்சனங்கள் என்ன என்று சொல்லி விடுகிறேன்.

பெரிய எழுத்தாளர் ஆக வேண்டும் என்றோ , ஒரு நாள் தமிழ்த் திரைப்பட இயக்குனர் யாராவது என் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதித் தருவீர்களா என்று கேட்பார் என்ற ஆசையிலோ நான் எழுத ஆரம்பிக்கவில்லை.மனிதனுக்கு மொழி என்பது ஒரு camouflage என்று மதன் (ஹாய் மதன்) சொல்கிறார். அதாவது தான் மனதில் நினைப்பதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு தான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான். அது போல தான் எழுத்தும். நம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த தான் எழுதுகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எழுத்தும் ஒரு மறைப்பு தான். நாம் எதுவாக இல்லையோ அதைப்பற்றி தான் எழுதுகிறோம். உதாரணமாக நான் ஓஷோ பற்றி இவ்வளவு எழுதுகிறேன். அப்படியென்றால் நான் ஓஷோவை சரியாக இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். இயற்பியல் பற்றி எழுதுவது எனக்கு இன்னும் இயற்பியல் சரியாகத் தெரியாது என்பதையே காட்டுகிறது.எனவே ஒரு camouflage ஆகத்தான் நான் எழுதத் தொடங்கினேன்.என் எழுத்தின் மூலம் என்னை மறைத்துக் கொள்ள!!ஆனாலும் இந்த ப்ளாக்கின் ஆரம்ப கால பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் நான் ஒரு அமெச்சூர்-ஆக இருந்திருக்கிறேன் என்பது தெரியவரும் (இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன் என்பது வேறு விஷயம்) மறுமொழி எழுதுங்கள் என்று கிட்டத்தட்ட கெஞ்சியிருப்பேன். யாராவது கமென்ட் போடுகிறார்களா என்று தினமும் எதிர்பார்ப்பேன்.இது தவிர்க்க முடியாத ஒன்று. புது ப்ளாக் மோகம்.முப்பது நாளில் போய் விடும் . ஆனால் இப்போதெல்லாம் I'm used to reality.ப்ளாக் எழுதுவதால் பெரிதாக லாபம் எதுவும் கிடைக்காது ; தமிழில் எழுதுவதால் Ad -sense விளம்பரங்கள் மூலம் காசும் சம்பாதிக்க முடியாது என்பதெல்லாம் தெரிய வந்துள்ளது. எழுதி தான் காசு சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. பன்னாட்டு நிறுவனத்தில் இருப்பதால் ஓரளவு DECENT LIVING -கிற்கு வகை இருக்கிறது.'செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டி' என்று பட்டினத்தார் சொல்லும் நிலைமை இன்னும் வரவில்லை.

ஐ.டி. கம்பெனியில் வேலையில் இருந்து கொண்டு 'இல்பொருள் உவமை அணி' 'எலக்ட்ரான் -ஃபோட்டான் வினைகள்' என்று தமிழில் வேலை மெனக்கெட்டு ப்ளாக் எழுத வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. In fact இப்படி எழுதுவதால் நிறைய வாய்ப்புகள் கைநழுவிப் போயிருக்கின்றன.
ப்ளாக் எழுதும் நேரத்தில் ஒரு ஃபிகரை 'கரெக்ட்' செய்து சுற்றி இருக்கலாம். அவளையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம்.முன்பின் தெரியாத பெண் ஒருத்தி 'உன் BANK பேலன்ஸ் என்ன? சொந்த வீடு இருக்கிறதா? கார் இருக்கிறதா என்று தனியே அழைத்துக் கேட்கும் சங்கடங்களாவது இல்லாமல் இருந்திருக்கும்.ப்ளாக் எழுதும் நேரத்தில் மேனஜரை தாஜா செய்தோ கஸ்டமரை தாஜா செய்தோ இந்நேரத்தில் வெளிநாடு ஒன்றில் நான் உண்டு என் குடும்பம் உண்டு, இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது என்ற மனப்பான்மையுடன் செட்டில் ஆகி இருக்கலாம் தான் . இந்த ப்ளாக்கில் இருந்தே ஒரு கவிதை:

கம்பன் விற்பனைக்கு:

பெண் பார்க்கச் சென்ற போது
சம்பளம் எவ்வளவு என்று கேட்டார்கள்..
சொந்த வீடு இன்னும் வாங்கவில்லையா?
லோன் ஏதாவது இருக்கிறதா?
வெளிநாடு எதேனும் சென்றிருக்கிறாயா?
அப்பாவுக்கு பென்சன் வருகிறதா? என்றெல்லாம்...
ரிலேடிவிட்டி தியரியும்
கம்பன் இலக்கியமும்
பஞ்சரத்ன கீர்த்தனைகளும்
ப்ளாக் எழுதுவதற்கு மட்டும் பயன்படுகின்றன.....


ஆனால் ஏன் இப்படி லூசு மாதிரி எழுதுகிறேன்? பிழை எதுவும் இல்லையே என்று மூன்று முறை படித்துப் பார்த்து பப்ளிஷ் செய்கிறேன்? DONNO. MAY BE நான் எழுதியதைப் படித்த ஒரு நூறு உதடுகளில் ஒரு இரண்டு உதடுகளிலாவது படித்து முடித்ததும் ஒரு சிறு புன்னகை அரும்பி இருக்குமானால் அது தான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி. திமிர், கர்வம் , தலைக்கனம் எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. சரக்கு இருந்தால் தானே திமிர் இருக்கும்? நான் செய்வதெல்லாம் அங்கங்கே கிடக்கும் மலர்களை கோர்த்து சரமாக முடிப்பது மட்டுமே.மேலும் தமிழில் எழுதுவதற்கு எனக்கெல்லாம் அருகதை இருக்கிறதா என்றே தெரியவில்லை.

'விண் பறக்கும் கழுகுகண்டு வேட்கை கொண்டு
வீட்டு ஈ யதன் சிறகை விரித்தல் போல
கண்பறிக்கும் கதிர்கண்ட கானகத்து மின்மினியும்
களிப்புற்று ஒளிச்சிறகைக் காட்டல் போல
கம்பன் வாய்த்தமிழை கவிக்கோமான் இளங்கோவின்
கவித்தமிழை வள்ளுவனின் வண்டமிழை
கொம்பன் யான் எழுதப் புகுந்தேன் காசினியில்
கற்றுணர்ந்த சான்றோர்காள்
பொறுத்தருள்வீரே !

என்று சொல்வது போல நானும் ஏதோ எழுதுகிறேன் அவ்வளவு தான்.


ஒரு விதத்தில் பார்த்தால் எழுத்து ஒருவகை இசை. மௌன சங்கீதம். வாத்தியம் வாசிப்பதை நிறுத்திய பின் வரும் சங்கீதத்தைக் கேள் என்று தான்சேனின் குரு சொல்வதுண்டாம் .சில வகையான சங்கீதங்களைக் கேட்டால் உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விடும். அது போல சிலபேரின் எழுத்துகளைப் படித்தாலும் தான்.இனிமையான சங்கீதம் போல எழுத்தும் உங்களுக்கு கவலையை மறக்க வைத்து புத்துணர்வு அளிக்கக்கூடும். மனசு சரியில்லை என்றால் நம்மில் பெரும்பாலானோர் இசையையே விரும்புவோம் .சில பேருக்கு 'க்ஷீர சாகர சயனா' சில பேருக்கு இளையராஜா சில பேருக்கு ரகுமான் சில பேருக்கு குத்துப்பாட்டு; ஆனால் அது எல்லாமும் இசை தான். அதே போல சிலரின் எழுத்துகளும் உங்களுக்கு RELAXATION கொடுக்க முடியும்.மனசு சரியில்லை என்றால் எஸ்.ரா வையோ ஜெயகாந்தனையோ சாரு நிவேதிதாவையோ நீங்கள் படிக்கக் கூடாது. அவை உங்களை மேலும் கவலை கொள்ள வைத்து விடும்.சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்கலாம். அவை ஒரு மாஜிக் போல செயல் பட்டு உங்கள் கவலையை இருந்த இடம் தெரியாமல் விரட்டி விடும்.சாரு (நிவேதிதா)நன்றாகவே எழுதுகிறார். ஆனால் அதைப் படிப்பதற்கு நாம் வேறு ஒரு தளத்தில் இயங்க வேண்டியுள்ளது. நவீன ஓவியம் போன்றது அது. சாதாரண ரசிகர்கள் பார்த்தால் பைத்தியம் பிடித்து விடும். ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் என் எழுத்தைப் படித்து யாராவது ஒருவர் , ஒரே ஒருவர் தன் கவலையை மறந்து RELAXED ஆக FEEL செய்தார் என்றால் அதுதான் எனக்கு நூறு பிரமோஷன் கிடைத்த நூறு கோடி சம்பாதித்த சந்தோஷம்.

அடுத்து இந்தப் பின்னூட்டம், கருத்துரை, மறுமொழி WHATEVER ..ஒரு பத்திரிகையில் ஒரு நல்ல கதை படிக்கிறீர்கள். அதை எழுதியவரை உடனுக்குடனே நீங்கள் பாராட்ட முடியாது.வாசகர் கடிதம் எழுதிப் போட்டு அடுத்த வாரம் வரை வெயிட் செய்ய வேண்டும். அந்தப் பாராட்டையும் அதை எழுதியவர் படிப்பாரா என்பது தெரியாது.ஆனால் வலைப்பூ ஒன்றில் உடனுக்குடன் பாராட்ட முடியும் அல்லது திட்ட முடியும். அதை எழுதியவரும் நன்றி என்று உடனடியாக சொல்ல முடியும்.எனக்கு இந்த கமென்ட் செய்வது கொஞ்சம் பேஜாரான விஷயம். I 'M LAZY ...நீ என்ன என் எழுத்தைப் பற்றி கமென்ட் செய்வது என்ற திமிரெல்லாம் கிடையாது.யாருடைய பதிவாவது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் நிச்சயம் என் சோம்பேறித் தனத்தையும் மீறி கமென்ட் போடுவேன். அதுவும் GOOD ONE , NICE POST என்றெல்லாம் தான்.அந்த எழுத்து உங்களை பாதித்தது. அதை எழுதியவருக்கு நீங்கள் என்னதான் செய்ய முடியும்? ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் உங்களால் உங்கள் நன்றியை வெளிப்படுத்த முடியாது. எனவே கமென்ட் போடுவது என்பது ஒரு ACKNOWLEDGMENT அவ்வளவே.

நான் மறுமொழி சொல்ல மாட்டேன் என்று தெரிந்திருந்தும் என் பதிவுகளுக்கு கமென்ட் செய்பவர்கள் தான் (என்) உண்மையான வாசகர்கள். மற்றவர்கள் எல்லாம் GIVE AND TAKE வியாபாரிகள். இந்த ப்ளாக்கிலும் அப்படிப்பட்ட வியாபாரிகள் வந்தார்கள் ; வருகிறார்கள்; நன்றாக இருக்கிறது என்று கமென்ட் போட்டு விட்டு எங்கள் கடைப்பக்கம் கொஞ்சம் வாருங்கள் என்று அழைப்பார்கள். எனக்கு இந்த வியாபாரம் பிடிக்கவில்லை.அவ்வளவு தான். இதைத் திமிர் என்று நீங்கள் நினைத்தால் I CANT HELP ..நான் அவர்கள் ப்ளாக்கில் கமென்ட் போடமாட்டேன் ; நன்றி சொல்ல மாட்டேன் திமிர் பிடித்த ஆசாமி என்று தெரிந்ததும் அவர்கள் மீண்டும் இங்கே வருவதை நிறுத்திக் கொண்டார்கள். சரி அது அவர்கள் விருப்பம். அதே சமயம் ஒருவரை நீங்கள் பாராட்டுகிறீர்கள் அதற்கு அவர் THANKS கூட சொல்லாமல் இடித்தபுளி போல இருந்தால் உங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.WHAT TO DO ? என் நிலைமையில் இருந்தும் கொஞ்சம் யோசியுங்கள்.ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஓர் அரிய இசைக்கலைன் ஒருவன் ஒரு நாட்டில் தன் இசைக்கச்சேரி நடத்த ஒப்புக் கொண்டானாம். ஒரு கண்டிஷனின் பேரில். அதாவது இசையைக் கேட்கும் மக்களில் ஒருவர் கூட மெய்மறந்து தலையை அசைக்கக் கூடாது; மீறி அசைத்தால் அப்போதே அவர்கள் தலை வெட்டப்படும் என்று. நிறைய காவலர்கள் வாளுடன் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்; யார் தலை ஆடுகிறது என்று.கச்சேரி தொடங்கியது. அவன் பாடியது அத்தனை இனிமையாக இருந்தது; ஆனாலும் பயத்தில் ஒருவரும் கண்ணைக் கூட இமைக்கவில்லை.ஆனால் அந்த இசையின் இனிமையை அதன் இன்பத்தை உள்ளே அடக்கி வைக்க முடியாமல் கடைசியில் ஒரு நாலைந்து பேர் கண்டிஷனை மறந்து தலை அசைத்து விடுகிறார்கள். அரசன் அவர்களைக் கொல்ல ஆணையிடுகிறான்.அப்போது
இசைக்கலைன் தடுத்து, இந்த நாலைந்து பேரைத் தவிர மற்ற எல்லாரையும் துரத்தி விட்டு விடுங்கள். இவர்கள் தான் என் உண்மையான ரசிகர்கள். உயிர் போய்விடும் என்று தெரிந்தும் என் இசையை ரசித்த மகாத்மாக்கள் " என்று சொல்கிறான். அது போல நான் எந்த வித மறுமொழியும் சொல்ல மாட்டேன்; அவர்கள் ப்ளாகிற்கு போக மாட்டேன் என்று தெரிந்தும் கூட என்னை ஆதரிக்கும் , உற்சாகப்படுத்தும் அந்த நாலைந்து பேர் தான் உண்மையான வாசகர்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இப்படிப்பட்ட கைம்மாறு கருதாத வாசக வட்டம் தான் உண்மையான சொத்து.

அடுத்து இந்த காப்பி அடித்தல் , இங்க்லீஷில் இருப்பதை அப்படியே தமிழில் எழுதுதல் etc ., உண்மை சொன்னால் எல்லாமே காப்பி தான். காப்பி அடிக்காமல் யாராலும் எழுத முடியாது. காபி அடிப்பது மொழிபெயர்ப்பது போன்றவை இன்று அங்கீகரிக்கப்பட்ட கலைகள் (ARTS ). காப்பி அடித்ததில் உங்கள் சொந்த வண்ணங்களை எப்படி லாவகமாக கண்ணை உறுத்தாமல் சேர்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.யாருமே காப்பி அடிக்கக் கூடாது என்றால் உலகில் இலக்கியங்களே இருக்காது. வெறும் டிக்சனரிகள் தான் இருக்கும். உதாரணம் :"செவ்வாயில் ஜீவராசி உள்ளதா என்று வி
ஞ்ஞானிகள் தேடல் " என்பது ஒரு செய்தி. இதை யார் வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம். ஆனால் காப்பி அடித்ததை ஒரு அழகிய கவிதையாக மாற்ற வைரமுத்துவால் மட்டுமே முடிந்தது.(பாடலை சொல்ல அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்) .ஆங்கில டிக்சினரியில் இல்லாத வார்த்தைகளையா சேக்ஸ்பியர் எழுதி விட்டார்? ஆனால் எல்லாராலும் ஏன் ஒரு சேக்ஸ்பியர் ஆக முடியவில்லை? ஜாய் ஆலுக்காஸில் 45 கிலோ தங்கநகை திருட்டு என்பது செய்தி. அதை காப்பி அடித்து ஜாய் ஆலுக்காஸில் 45 கிலோ தங்கநகை திருட்டு. #கல்யாண் ஜீவர்லர்ஸோட புரட்சிப் படையோட வேலையா இருக்குமோ என்ற சுவையான ட்விட்டாகத் தர ஒரு ட்விட்டரால் மட்டுமே முடிகிறது.

TRANSLATION : இதைப் பற்றி முன்பே சொல்லி இருக்கிறோம்.Spinning Technology என்பதற்கு பன்னல் நுட்பியல் என்று மொழிபெயர்த்து எழுதலாம் தப்பில்லை. ஆனால் யாருக்கும் புரியாது. Autumn equinox = கூதிர் ஒக்கம் என்று எழுதினால் சில பேர் அடிக்கக் கூட வரலாம். கீழே ஏதாவது புரிகிறதா பாருங்கள். இது ஃபிரிட்ஜாப் கேப்ராவின் TAO of PHYSICS இன் ஒரு பகுதியின் தமிழாக்கம்:

"நியூக்ளியான்கள் தம்முடைய வலிமையான உள்வினை ஆற்றல் காரணமாக இத்தகைய சுய உள்வினை செயல்முறை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன; உண்மையைச் சொல்வதென்றால் நியூக்ளியான்கள் கருத்தியலான துமிகளை சதா உமிழ்ந்து கொண்டும் உட்கிரகித்துக் கொண்டும் இருக்கின்றன.புலக் கொள்கைப்படி , கருத்தியலான துமி மேகங்கள் சூழ்ந்துள்ள இடையறாச் செயல்பாட்டு மையங்களாக அவை கருதப்படுகின்றன.கருத்தியலான மேசான்கள் தாம் தோற்றுவிக்கப்பட்ட , மீச்சிறு தருணத்திற்குள் மறைந்து விடுகின்றன.மேஸான் மேகம் எனப்படுவது மீச்சிறிய ஒன்று. அதன் புறப்பரப்புகளில் இலகுவான மேசான்கள் பெரும்பாலும் பையான்கள் நிரம்பி உள்ளன.மீச்சிறு காலத்துக்குப் பின்னர் உட்கிரகிக்கப் படக்கூடிய கனத்த மேசான்கள் மேகத்தின் உட்பகுதியில் உள்ளன"

-குறைந்த பட்சம் இது எதைப்பற்றி சொல்கிறது என்று நீங்கள் ஊகித்தாலே உங்களுக்கு VERSATILE BLOGGER அவார்டு கொடுக்கலாம்.


கடைசியாக VERSATILITY ... it 's a myth !யாராலும் VERSATILE ஆக ,அது சுஜாதாவாகவே இருந்தாலும் எழுத முடியாது.நீங்கள் எதைப்பற்றி எழுதினாலும் உங்கள் 'டச்' அதில் நிழல் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சுதாதாவின் ஒரு பத்து கதைகளை தொடர்ந்து வாசித்தால் ஒருவிதமான சலிப்பு தட்டுவதை நீங்கள் உணரமுடியும்.

என் பக்கம் உள்ள நியாயங்களை சொல்லி விட்டேன். இதையும் மீறி , யாருடைய மனதையாவது என் எழுத்தின் மூலம் புண்படுத்தி இருந்தால் அவர்களிடம் பகிரங்கமாக மனப்பூர்வமான மன்னிப்பு கோருகிறேன்.

சமுத்ரா