இந்த வலையில் தேடவும்

Monday, August 27, 2012

கலைடாஸ்கோப்-70

லைடாஸ்கோப்-70 உங்களை வரவேற்கிறது.

7
==


The best doctors in the world are Doctor Diet, Doctor Quiet, and Doctor Merryman.

Jonathan Swift

- பேஷண்டுக்காக டாக்டர் காத்திருந்தது அந்தக் காலம். இப்போது பேஷண்டுகள்
தான் டாக்டருக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அதுவும் சில ஸ்பெஷலிஸ்டுகளுக்கு காலை ஐந்து மணியில் இருந்தே டோக்கன் க்யூ ஆரம்பித்து விடுகிறது. திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பயபக்தியுடன் வெளியே காத்திருக்க வேண்டும்.சில கோயில்களில் உற்சவரை முதலில் தரிசிப்பது போல அச்சிஸ்டன்ட் டாக்டரைப் பார்த்து முதலில் நோயின் ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் சொல்லி விட வேண்டும்.அவர் நமது வெயிட் பி.பி. இத்யாதிகளைப் பார்த்து விட்டு மீண்டும் மூலவரின் தரிசனத்துக்குக் காத்திருக்குமாறு பணிப்பார்...

இப்போது பெரும்பாலான டாக்டர்கள் சிடுமூஞ்சிகளாக இருக்கிறார்கள். கஸ்டமர் தான் கடவுள் என்ற மந்திரம் செல்லுபடியாகாத ஒரே துறை மருத்துவம். அங்கே எப்போதும் டாக்டர் தான் கடவுள். டாக்டர் பெரும்பாலும் புன்னகைப்பது கூட இல்லை. புன்னகைத்தால் நோயாளியின் வியாதி ஒட்டிக் கொண்டு விடுமோ என்னவோ? நோயாளியுடன் அதிகபட்சம்
உள்ளே ஒருவரைத் தான் அனுமதிக்கிறார்கள்.ஆஸ்பத்திரியிலேயே ரூம் எடுத்துத் தங்கி இருந்தாலும் ரூமில் நோயாளியுடன் ஒருவர் தான் இருக்க வேண்டும். டாக்டர் வந்து chart -களைப் பார்க்கும் வரை கைகட்டி வாய்பொத்தி அந்தணர் முன் நிற்கும் நந்தன் போல நிற்க வேண்டும்.பின்னர் அவர் சொல்லும் வேதவாக்குகளை அப்படியே செவிமேற்கொள்ள வேண்டும். என்ன சாப்பிட்டார்
எப்போது யூரின் போனார் போன்ற கேள்விகளுக்கு 'அதுங்களா, விடி காலைல பசின்னாருங்க, ஒரு பாதி டம்பளர் ஹார்லிக்ஸ் குடிச்சார். அப்புறம் பையன் வர்றப்ப ஆப்பிளு வாங்கிட்டு வந்தான்..அதுல ரெண்டு துண்டு தின்னாருங்க..அப்புறம் பத்து மணிக்கு அன்ன பூர்னாவுல வாங்கியாந்த இட்லில ஒன்னரை சாப்பிடாருங்க ...கால் டம்பளர் டீ என்று மெகா சீரியல் லெவலுக்கு கதை சொல்லாமல் அனுமார் போல வார்த்தைகளை கச்சிதமாக அளந்து பேச வேண்டும்....கேட்டதை மட்டும் சொல்லுங்க என்று சில டாக்டர்கள் சலிப்புடன் சொல்லி விடுவார்கள்.

கொஞ்சம் அதிகம் பேசி விட்டால் இங்கே நான் டாக்டரா நீ டாக்டரா என்று கூட சிலர் எரிந்து விழுவார்கள்.


டாக்டர்களுக்கு இருக்கும் பிஸி ஷெட்யூலில் , ஒவ்வொரு நோயாளியையும் 'என்ன ராமசாமி , வீட்ல எல்லாரும் சௌக்யமா' என்று விசாரிப்பார் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர் என்றாலும் டாக்டர்கள் குறைந்த பட்சம் தேவையில்லாத வெட்டி பந்தா இல்லாமல் இருக்கலாம். நோயாளிகளின் கணவனோ மனைவியோ டாக்டருக்குப் படிக்கவில்லை.எனவே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அது எத்தனை அபத்தமாக இருந்தாலும் பதில் சொல்வது டாக்டர்களின் கடமை.பக்தனுடன் அமர்ந்து சிரித்த முகத்துடன் பேசி அளவளாவும் கடவுளுக்கு தான் மதிப்பு அதிகம். கடவுளை தன்னுடன் பேச வருமாறு விளையாட வருமாறு அழைக்காத பக்தர்கள் குறைவு. தியாகராஜ சுவாமிகளின் 'ஆட மோடி கலதே' கேட்டிருக்கிறீர்களா?

6
===

ஆ.மாதவனின் நாயனம் என்ற சிறுகதை.

குக்கிராமம் ஒன்றில் இழவு ஒன்று நேர்ந்து விடுகிறது. கல்யாண சாவு தான் என்றாலும் பெண்களின் ஒப்பாரி பலமாக ஒலிக்கிறது. "இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்" என்று ஊர்ப் பெரிசுகள் பேசிக் கொள்கின்றன. இறந்த பெரியவருக்கு நாயனம் என்றால் மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. எனவே அவரின் இறுதி யாத்திரை ஒரு நாயனக் கச்சேரியுடன் தான் நடக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த மழைக்கால மாலையி
ல் நாயனக்காரர்களை தேடுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. தேடிப் போன ஒருவன் ஓடி வந்து 'சின்னண்ணனும், வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க" என்கிறான்.காத்திருப்பவர்கள் "இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும், பல்லக்கும் வச்சிக்கிறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு?" என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

இன்னொரு கூட்டம் "செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போகட்டுமே" என்று நாயனக்காரனுக்காக காத்திருக்கிறது.இப்போது இருட்டத் தொடங்கி மழை வேறு வந்து விடுகிறது.எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. மணி வேறு இரவு ஒன்பது ஆகி விடுகிறது. பிணம் வாய்க்கரிசி போடப்பட்டு பாடையில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலத்துக்கு தயாராக இருக்கிறது.நாயனக் காரன் வந்த பாடில்லை.

சின்னண்ணனும் வடிவேலுவும் வந்து சேர்கிறார்கள். கொஞ்சம் பிரபலமான நாயனக்காரர்களை அழைத்துவர முடியவில்லை என்றும் சமயத்துக்கு அகப்பட்ட யாரோ ஒரு நாயனக் காரனை அவசரத்துக்கு அழைத்து வந்தோம் என்றும்
சொல்கிறார்கள் . காய்ந்து போன மூங்கில் குழாய் போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக்கொண்டு , மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக, ஒரு குட்டை ஆசாமி அவன். சரி ஆள் எப்படி இருந்தால் என்ன? காரியத்தை முடிப்போம் என்று இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.

நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து, “பீ ப்பீ.. ‘ என்று சுத்தம் பார்க்கிறான். நாயனக்காரன் வாசிக்க ஆரம்பி
க்கிறான் . ‘பீ..பீ’ என்ற அவலம் பரிதாபகரமாக இருக்கிறது . தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல-வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்துகிறான். போகப் போக நாயனம் அபஸ்வரமாக ஒலித்து எல்லாரையும் தர்ம சங்கடப்படுத்துகிறது.ஊர்வலம், ‘சனியனே’ என்ற பாவனையில் அவனையே பார்த்துக் கொண்டு வழி நடக்கிறது.சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றுகிறது. இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’கிராமத் தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்க்கிறார்.

”படவா ராஸ்கல். நாயனமா வாசிக்கிறே?” என்று எரிச்சலுடன் நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாலும், ‘சடக்’ இரண்டு துண்டாக முறித்து வீசி விடுகிறார்.
ஊர்வலம் தயங்கக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், ’முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்’ என்ற திருப்தி பளிச்சிடுகிறது.

5
==

சில ஹைக்கூக்கள்

- ஹோட்டலில் இருந்து
வெளியேறிய பெண்
எனக்குள்
சுதந்திரத்தைப் பிறப்பித்தாள்.

- என் மீது
சகதியை வாரித் தெறித்தது ஒரு வண்டி.
என்
கவலைகள் எல்லாம்
ஒரு கணம்
ஸ்தம்பித்து நின்றன!

-நடந்து
வருகையில்
புல்லின் வாசம்!

-நான் பார்த்த
ஒரு கணத்தில்
அசையாமல் நின்றது
கடிகாரம்!

4
==

'Thoughts ' என்ற புத்தகத்தில் இருந்து சில பொன்மொழிகளின் தமிழாக்கம்.


-தான் எங்கே போகிறோம் என்று அறிந்திருக்கும் மனிதனுக்கு உலகமே வழிவிடுகிறது - டேவிட் எஸ் ஜார்டன்

- நீங்கள் நேர்மையானவராய் இருங்கள். அப்போது உலகில் ஒரு ராஸ்கல் குறைந்து விட்டான் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். - தாமஸ் கார்லைல்

- கூட்டத்தின் பின்னே
போகும் மனிதனை எந்தக் கூட்டமும் பின் தொடராது - ரிசார்ட் டோனெல்

-விமர்சகர்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இது வரை உலகில் விமர்சகருக்கு என்று ஒரு சிலையும் இல்லை.-ஜீன் சிபெல்யாஸ்

-ஏழையோ பணக்காரனோ பணத்தை வைத்திருப்பது நல்லது - சிட் லான்ஸ்

-யார் பணக்காரன்? யார் திருப்தி உடையவனோ அவன்.. யார் அது? யாரும் இல்லை - பெஞ்சமின் பிராங்க்ளின்

-உங்கள் சட்டைப் பையில் பணம் இருந்தால் நீங்கள் அழகானவர்... நீங்கள் நன்றாகப் பாடுபவரும் கூட - யாரோ

-என்னால் என்ன செய்யமுடியும் என்பதை வைத்து நான் என்னை மதிப்பிடுகிறேன். நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை வைத்து மற்றவர்கள் என்னை மதிப்பிடுகிறார்கள் - ஹென்றி லாங் ஃபெலோ

3
==

வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை மனிதனை விட எல்லா மிருகங்களும் தெரிந்து வைத்திருக்கின்றன.

இந்த பொன்மொழியை ஞாபகப்படுத்தியது ஐஸ் ஏஜ் -4 திரைப்படம். ஒரு காலத்தில் பூமியின் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்திருந்தன என்று படித்திருக்கிறோம்.பிறகு பூமியின் அடுக்குகள் நகர்ந்ததால் தனித்தனியே பிரிந்து போயின. அப்படி நடந்த போது மனிதன் இன்னும் வந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. அப்போது மிருகங்கள் அடிக்கும் லூட்டியை படம் விவரிக்கிறது. ஆண் கம்பள யானை ஒன்று கண்டங்களின் நகர்ச்சியால் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போகிறது. பின்னர் திரும்பி வந்து தன் குடும்பத்துடன் சேரும் வரை ஒரே லூட்டி தான். மேன்னி என்ற அந்த யானையின் கம்பீரம் அபாரம். சிட் (Sid)என்ற ஒரு ஸ்லோத் படம் முழுவதும் காமெடியனாக வருகிறது. சிட் ஒரு சோம்பேறி தீனிப் பண்டாரம்.ஆனால் வாய் மட்டும் முழம் நீளம்.படம் தமிழில் வரும் போது சிட் வடிவேலு வசனங்களை பேசி நம்மை இன்னும் சிரிக்க வைக்கிறது. (ஆங்கிலத்தில் சில இடங்களில் விலங்குகள் பேசுவதைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கிறது) மிருகங்களுக்கு குரல் கொடுப்பது கஷ்டமான வேலை என்று தோன்றுகிறது.குறிப்பாக சிட் என்ற அந்த ஓட்டை வாய் மிருகத்துக்கு குரல் கொடுத்தவரை பாராட்டியே ஆக வேண்டும்.

பூமியி
ல் மனிதன் வருவதற்கு முன்னர் விலங்குகள் நன்றாக என்ஜாய் செய்திருக்கின்றன என்று தோன்றுகிறது. குரங்குக்குள் இருந்து மனிதன் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்த நிமிடத்தில் இருந்து அவைகளின் எமகண்டம் ஆரம்பம் ஆகியிருக்க வேண்டும்.கம்பள யானைகளை மனிதன் வேட்டையாடியே கொன்று விட்டான் என்கிறார்கள். ஒரு கம்பள யானையை கொன்றால் ஒருமாதம் முழுவதும் ஊர் முழுக்க சாப்பிடலாமாம். பனி யுகம் என்பதால் உணவு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

தமிழ்நாட்டின் வெய்யிலைப் பார்த்தால் மீண்டும் அந்த பனியுகம் பூமியில் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.

2
==

சமீபத்தில் ஆ.விகடன் புதுமை புதுமை என்று ஏதோ விளம்பரம் செய்தார்கள். ஒரு புதுமையும் இல்லை என்று தோன்றுகிறது. அதே பழைய கஞ்சி தான். அட்டையை மட்டும் மாற்றி இருக்கிறார்கள். என் விகடனையும் நிறுத்தி விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆ.வி. யில் மதனின் கேள்வி பதிலுக்குப் பதில் இப்போது வாசகர்களே கேள்வி கேட்டு பதில் சொல்ல
ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறது . எனக்கு என்னவோ விகடனை விட குங்குமம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் அதில் வருகின்றன.'குமுதம்' வாங்குவது டோட்டல் வேஸ்ட். பத்து ரூபாயை டஸ்ட் பின்னில் போட்டதற்கு சமம்
அது . எந்தப் பத்திரிக்கையாக இருந்தாலும் இந்தத் 'தலைவர்' கடி ஜோக்குகளை விடுவதாக இல்லை. உதாரணங்கள்:

தலைவரே
உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் !
என்னவாம் ?
நிலம் நிலமறிய ஆவல்னு !


தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?

தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் !

1
===

ஓஷோ ஜோக்.

விவசாயி மிடோ மப்பின் -இன் பண்ணை முழுவதும் தீயில் எரிந்து சாம்பல் ஆகி விட்டது.

மறுநாள் அங்கு வந்த இன்சூரன்ஸ் அதிகாரிகள் " ஐயா, நாங்கள் இந்த நஷ்டத்துக்குப் பணம் தர முடியாது. அதற்குப் பதில் உங்கள் பண்ணை முதலில் எப்படி இருந்ததோ அதே போல அதே அளவு அதே உயரம் அதே பரிமாணங்கள் அதே மூலப் பொருட்களுடன் அதே மாதிரி கட்டித் தருவோம்" என்றார்கள்.

மிடோ மனதில் 'அப்படியானால் முதலில் நாளை காலை என் மனைவி மீதான லைப் இன்சூரன்ஸ் ஐ கான்சல் செய்ய வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான்.

****

ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர்.

மரியா 'என் பாய் பிரண்ட் ஜான் ரொம்ப மோசம்...அவன் ஒரு மோசமான பொம்பளை கூட உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே டின்னர் சாப்பிடற மாதிரி கனவு கண்டேன்' என்றாள்.

இன்னொரு பெண் ' கம் ஆன்...இது வெறும் கனவு தான். இதற்கு ஏன் உன் காதலனை திட்டுகிறாய்'? என்றாள்.

'உனக்குத் தெரியாது மரியா, என் கனவிலேயே அவன் இப்படி செய்யும் போது அவன் கனவில் என்னென்னவெல்லாம் செய்வானோ' என்றாள் அவள்.

சமுத்ரா

Friday, August 17, 2012

கலைடாஸ்கோப்-69

லைடாஸ்கோப்-69 உங்களை வரவேற்கிறது.

?

சமீபத்தில் the so called சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது . (எங்கெல்லாம் குண்டு வெடிக்குமோ என்ற பயத்துடன்). சின்ன வயதில் சுதந்திர தினம் என்றால் ஸ்கூலில் கொடியேற்றி மிட்டாய் தருவார்கள் என்று மட்டும் தெரியும். ஜன கன மன அவசரமாகப் பாடி விட்டு வீட்டுக்கு ஓட்டம் எடுக்கலாம்.!பொதிகையில் ரோஜா படம் போடுவார்கள்.(இப்போதும் போடுகிறார்கள் என்று நினைக்கிறேன்) இப்போது பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. சுதந்திரம் தினத்துக்கு முந்தாநாள் ஆபீசில் நாலைந்து பேர் I LOVE INDIA என்ற தலைப்பிட்ட FORWARD இ-மெயில்கள் அனுப்புகிறார்கள்.சட்டையில் கொடி குத்திக் கொள்கிறார்கள். டி.வி.யில் திரைக்கு வந்து சில வருடங்களே சாரி சில மாதங்களே ஆன திரைப்படங்களும் தேசத்துக்கு மகத்தான ஒப்பரிய சேவை ஆற்றிய ஹீரோயின்களின் பேட்டியும் போடுகிறார்கள் .சுதந்திர தினம் ஓவர்.

இந்த 'சுதந்திரம்' என்பது ஒரு SUBJECTIVE TERM ..அதற்கு சரியான வரையறை இல்லை.மேலும்,அப்போது (1947 க்கு முன்பு) இருந்த தேச பக்தி இப்போது ஏன் இல்லை என்றால் அப்போது குறைந்த பட்சம் ஒரு பொது எதிரி நமக்கு இருந்தான்.நம் சொந்த நாட்டை இன்னொருவன் ஆளுவதா? சுதந்திரம் கிடைத்து விட்டால் நாடே சொர்க்கமாக மாறும் பணமழை பொழியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கையும் அப்போது இருந்தது.இப்போது நம்மிடம் அந்த பொது எதிரி இல்லை. .ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் நிறைய இருக்கின்றன.இவைகளிடம் இருந்து சுதந்திரம் பெறுவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்றே தோன்றுகிறது .வறுமை, ஊழல், பொருளாதார வீழ்ச்சி, அதிகார துஷ்ப்ரயோகம், மக்கள் தொகை பிரச்சினை,வேலை இன்மை போன்ற எதிரிகளிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும் நாள் மட்டுமே நமது உண்மையான சுதந்திர நாளாக இருக்க முடியும்.

??

சமீபத்தில் படித்த இரண்டு கதைகளைப் பற்றிப் பேசலாம். ஒன்று

ஒரு கப் காபி -இந்திரா பார்த்தசாரதி

-ராஜப்பா ஒரு ஏழை பிராமணன். கல்யாணம் ஆகி விட்டது. எந்த வேலையும் சரிப்பட்டு வராமல் சும்மா தம்பியின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிக்கிறான். அக்கம் பக்கத்தில் திவசம், கல்யாணம் வேறு விசேஷங்கள் நடந்தால் அதை சாக்காக வைத்து ஓசி சாப்பாட்டில் ஒரு நாள் நகராதா என்று யோசிப்பவன்.பிராமணணாய்ப் பிறந்துவிட்டு, மந்திரமும் தெரியாது. ஒருநாள் காலை ராஜப்பாவுக்குக் காப்பி குடித்தாக வேண்டும் என்றிருக்கிறது . அவன் மனைவி சொல்லிவிடுகிறாள் : ‘காப்பிப் பொடி கிடையாது. காசு கொண்டு வந்தா காப்பி. இல்லாட்டா தீர்த்தத்தைக் குடிச்சுட்டு சும்மா கிடங்கோ. நான் வீடு வீடா போய்க் கடன் வாங்கத் தயாரா இல்லே.என்று.ராஜப்பா ’காலத்தை அனுசரித்துக் கோயிலில் பெருமாளுக்குக் காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும் என்று அங்கலாய்க்கிறான் .

பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் காபிக்கு வழி கிடைக்கும் என்று ராஜப்பா பஸ் ஸ்டான்ட் போகிறான்.அங்கே ஒரு பழக்கடையில் கணவன் மனைவியுமாக இரண்டு பேர் நின்று கொண்டு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜப்பா சென்று அவர்களுக்காக பழத்தைப் பேரம் பேசி கம்மி விலையில் வாங்கிக் கொடுக்கிறான். அவர்களுடன் பேச்சுக் கொடுத்ததில் அது அவனது பால்ய சிநேகிதன் அனந்து என்று தெரிய வருகிறது.வயத்துப் பொழப்புக்கு டெல்லியில் ஒரு கம்பெனியிலே இருப்பதாகவும் நாலு காசு சம்பாதிக்க என்னென்ன அக்கிரமமெல்லாம் பண்ணணுமோ, அதெல்லாம் செய்வதாகவும் அனந்து சொல்கிறான். மேலும் 'உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்குடா ராஜப்பா. யாரையும் ஏமாத்த வேணாம். ஊரோட வாசம். பெரியவா எழுதி வச்ச மந்திரம், சோறு போடறது. நீ வாத்தியாராத்தானே இருக்கே? நீ சொல்லாட்டாலும் உன் வேஷம் சொல்றதே! மஞ்ச சூர்ணம், முகத்தில் தேஜஸ்..’
என்கிறான். அனந்து அவனை தான் தங்கி இருக்கும் உயர்ரக ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறான்.அவன் மனைவி ராஜப்பாவை காபி சாப்பிடுமாறு சொல்கிறாள். அனந்து கோபத்துடன் "அவன் இங்கெல்லாம் காபி சாப்பிடுவானா? என்ன ஒரு ஆசாரம் ? பால் கூட சாப்பிட மாட்டான்" என்று கடிந்து கொள்கிறான்.

ராஜப்பாவுக்கு எரிச்சலாக வருகிறது. இதற்கிடையில் அனந்து சாப்பாட்டுக்கு அவன் வீட்டுக்கு வருவதாக சொல்கிறான். கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதே என்று கடைசியில் ராஜப்பா ,"
தோ பாரு, அனந்து! நான் வேதவித்துமில்லே, ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. வேதவித்து வேணும்னா நீ வேத காலத்துக்குத் தான் போகணும். முதல்லே நான் கேக்கறதை முதல்லே கொடு, அப்புறம் எல்லாத்தையும் விவரமா சொல்றேன், ஒரு கப் காபி கொடு' என்கிறான்.

அடுத்த கதை 'நாயனம்'-ஆ.மாதவன்.. இதை அடுத்த லைடாஸ்கோப்பில் பார்க்கலாம்.

???

சில ஹைக்கூ-கள்

* ஒவ்வொரு முறை
புது சட்டை அணியும் போதும்-
தீபாவளியின் வாசம்

* தடுக்கியதும்
எல்லாரும் -கொஞ்சம்
வேகமாக நடக்கிறார்கள்

*கண்ணாடியில்
தெரியும் உலகை
மெல்லமெல்ல மூடுகிறது
சாரல் மழை!


????

Moon illusion என்ற ஒரு விளைவைப் பற்றிப் பேசலாம். சந்திரன் (சூரியன்) சில சமயங்களில் அடிவானத்தில் இயல்புக்கு மாறாக மெகா சைசில் தெரிவது.இது நீண்ட நாட்களாகவே தத்துவ ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி வந்துள்ளது. உண்மையில் தொடுவானத்தில் சூரியன் நம்மை விட்டு அதிக தூரம் இருக்கிறது. எனவே அது சிறியதாகத் தெரிய வேண்டும். நம் வளிமண்டலம் ஏதாவது மாயம் செய்கிறதா என்றால் இல்லை. இதற்கு இயற்பியல் ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள். எல்லாம் நம் மூளை செய்யும் வேலை.[தலை கீழாக நின்று பார்த்தால் சந்திரன் சாதாரண சைசில் இருப்பது தெரியுமாம்!] சந்திரன் அடிவானத்தில் இருக்கும்போது நம் மூளை அதை கட்டிடங்கள், மரங்கள் போன்ற சிறிய பொருட்களுடன் ஒப்பிடுகிறது. எனவே இவைகளை விட சந்திரன் பெரிதாக இருக்க வேண்டும் என்ற ஊகத்தில் மூளை தானாகவே அளவை கூட்டி விடுகிறது. சந்திரன் நடுவானில் வரும்போது அது அண்டவெளியின் பரந்து விரிந்த பிரம்மாண்டத்துடன் ஒப்பிடப்படுவதால் மூளை அதை சிறிதாக்கி விடுகிறது. கீழே படத்தில் உள்ள விளைவைப் போன்றது தான் இதுவும்.


?????

Muscle memory என்ற இன்னொரு விஷயம். திறமையான பாஸ்கட் பால் ப்ளேயர் ஒருவரைக் கண்ணைக் கட்டி விட்டு கூடையில் பந்து போடச் சொன்னார்கள். அது மிகச் சரியாகப் போய் விழுந்தது. இதற்கு காரணம் மூளை பல விஷயங்களில் முதலில் மட்டுமே சிறிது கவனம் செலுத்துகிறது. பிறகு தன் நினைவுத் திறனை உடலின் தசைகளுக்கு மாற்றி விட்டு விட்டு கார் ஓட்டும் போதும் , பூ கட்டும் போதும் , டைப் அடிக்கும் போதும் நாளை என்ன டிரஸ் போட்டுக் கொண்டு போகலாம் என்று independent ஆக யோசிக்கிறது. கீ போர்டில் பாஸ்வோர்ட் ஐ டைப் செய்யும் போது அந்த சொல்லை மூளை நினைக்கும் முன்னரே உங்கள் விரல்கள் அடித்து விடுவதை கவனித்திருக்கலாம்.கிட்டத்தட்ட எல்லாமே தசைகளின் நினைவாற்றல் தான். வயலின் , கீ போர்ட் வாசிப்பது, தையல் மெஷினில் தைப்பது, எம்ப்ராய்டரி போடுவது இப்படி. இதனால் தானோ என்னவோ விளையாட்டு வீரர்கள் , கார் ரேஸ் வீரர்கள், கின்னஸ் சாதனை செய்பவர்கள் இவர்களெல்லாம் கவிஞர்கள் , தத்துவ ஞானிகள் , விஞ்ஞானிகள் போன்றவர்களுக்கு ஒரு படி கீழே இருக்கிறார்கள். பத்து நாள் கார் ஒட்டி விட்டால் அப்புறம் மூளையின் தேவை இன்றி கைகள் தானாகவே கியர் மாற்றவும் கால்கள் கிளச்சை மிதிக்கவும் கற்றுக் கொண்டு விடும். ஆனால் கவிதை எழுத ஒவ்வொரு முறையும் மூளையை உபயோகிக்க வேண்டும். மூளையில் யோசிப்பது கூட ஒரு விதமான muscle memory என்று நீங்கள் விவாதித்தால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.

மூளையின் கற்பனைக்கு ஒரு உதாரணம்.. அகநானூறு

மழைக் காலம் தொடங்கி விட்டது ...இன்னும் தலைவன் வரவில்லையே.அவன் தேரின் குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணியோசை கேட்கவில்லையே என தலைவி வருந்துகிறாள்.அப்போது தோழி, அவளைத் தேற்றும் விதமாக 'அடி பைத்தியக்காரி,, அவன் வந்து கொண்டு தான் இருப்பான்.. வரும் வழியில் சோலைகளில் இன்ப முயக்கில் மயங்கிக் காதல் களிப்பில் கிடக்கும் வண்டுகளை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாமல் மெதுவாக தான் குதிரைகளின் கழுத்தில் உள்ள மணியைக் கழற்றி விட்டு சத்தம் போடாமல் வருவான்' என்கிறாள்.

பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்..


-அருமையானதொரு மழைக் காலத்தின் தொடக்கத்தை, முல்லை நிலத்தை, இதை விட எப்படி ரொமாண்டிக் ஆக வர்ணிக்க முடியும்?



?????

கீழே உள்ளவை சில விளம்பரங்கள். மனிதனின் கற்பனை சக்திக்கு எல்லையே இல்லை.





??????

ஓஷோ ஜோக்.

முல்லா நசுருதீன் ஒரு நாள் குடித்து விட்டு யாருடனோ பயங்கரமாக சண்டை போட்டு விட்டார். அவர் முகமெல்லாம் ரத்த காயம் ஆகி விட்டது. அன்று நள்ளிரவில் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தார். மனைவி இந்தக் கோலத்தில் தன் முகத்தைப் பார்த்தால் பூகம்பம் வந்து விடும் என்று பாத் ரூமுக்கு சென்று அவசர அவசரமாக ஏதோ ஒரு க்ரீமை எடுத்து முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கொண்டார்.பெட் ரூமுக்கு சென்று போர்த்திக் கொண்டு படுத்து விட்டார். காலை விடிந்ததும் முல்லாவின் மனைவி பாத் ரூமில் இருந்து கத்தினாள்:

"என்னங்க,,, யாரு இந்த பாத் ரூம் கண்ணாடி பூரா டூத் பேஸ்டை அப்பி வெச்சது?"

$$$$

முல்லா நசுருதீன் ஒரு பாரில் உட்கார்ந்து மொடாக்குடி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே அச்சு அசலாக ஒரே மாதிரி உடையணிந்த ஒரே மாதிரி தோற்றம் கொண்ட ஒரு ட்வின்ஸ் வந்தார்கள். முல்லா நசுருதீன் அவர்களையே குழப்பத்துடன் பாத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களில் ஒருவன் முல்லாவை நெருங்கி வந்து "பெரியவரே ரொம்ப கவலைப் படாதீங்க..நீங்க ஸ்டெடியா தான் இருக்கீங்க . நாங்க உண்மையில் ட்வின்ஸ்".. என்றான். அதற்கு முல்லா "அப்படியா? நீங்க நாலு பேருமேவா?" என்றார்.

சமுத்ரா