இந்த வலையில் தேடவும்

Monday, December 23, 2013

கலைடாஸ்கோப் -103

கலைடாஸ்கோப் -103  உங்களை வரவேற்கிறது.

I'd rather be a little weird than all boring.
― Rebecca McKinsey

நீண்ட நாட்களாக எழுதாததற்கு வருதுகிறேன். நான் எழுதாதலால் பெரிதாக ஒன்றும் ஆகி விடவில்லை என்று தெரிகிறது.

இப்போதெல்லாம் இலக்கியவாதி/எழுத்தாளர்/கவிஞர் ஆவதற்கு ஒரு இன்டர்நெட் connection  இருந்தால் போதும் என்று தோன்றுகிறது :):)

கலை என்பதில் இரண்டு வெளிப்பாடுகள் உள்ளன என்று நினைக்கிறேன் . எழுத்து, இசை,ஓவியம், கவிதை,நடனம், சிற்பம்,சினிமா எல்லாவற்றுக்கும்! ஒன்று, ஆத்மார்த்தமாக அப்படியே தனக்குத் தோன்றுவதை தன் திருப்திக்காக மட்டும் வெளிப்படுத்துவது. மற்றொன்று வாசகர்களை/ audience ஐ மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் மன நிறைவுக்காக compromise செய்து கொண்டு restricted ஆக  வெளிப்படுத்துவது . சில பல சமயங்களில் இரண்டும் ஒன்றோடொன்று ஒன்றி விடுகின்றன.அப்படி நடந்தால் அது அதிர்ஷ்டம் தான். ஆனால் பெரும்பாலும் இவை ஒத்துப் போவதில்லை. கவிஞன் , பாடகன், ஓவியன், எழுத்தாளன்,நடிகன்  தன்னை பல நேரங்களில் compromise செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. commercialize செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. வான் கா அல்லது பிக்கோஸோ வின் ஓவியங்களுக்கும் ரவிவர்மா அல்லது முருககானியின் ஓவியங்களுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும்.


பிக்காஸோ ஓவியம் 


தன் மன நிறைவுக்காக மட்டும் வெளிப்படுத்தும் கலையில் ஒரு madness இருக்கவே செய்யும். ஒரு வித வடிகால் போன்றது அது.சில பேர் இதை மட்டுமே கலை என்கிறார்கள். எதனுடனும் சமரசம் செய்து கொள்ளப்படாத இயற்கையான ஒரு வெளிப்பாடு. சில பேர் வணிக மயமாக்கப்படுவதை மட்டுமே கலை என்று அங்கீகரிக்கிறார்கள்.Art is for audience! of audience என்னைப் பொறுத்தவரை , கலை என்பது இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு தளத்தில் இருக்கிறது என்று தோன்றுகிறது.

நம் மன நிறைவுக்கு, நமக்குப் பிடித்ததை எழுதலாம் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.தினம் ஒரு பதிவு கூடப் போடலாம்.  இப்போதெல்லாம் எல்லாரும் Facebook இலேயே எழுதி விடுகிறார்கள். blog என்பது கொஞ்சம் outdated ஆகிக் கொண்டிருக்கிறது. FB யில் நமக்குத் தோன்றியதை எழுதலாம். காசா பணமா

இப்படியெல்லாம்:

கவிதை எழுதலாம் என்று
மொட்டை மாடிக்கு சென்றேன்
ஹைக்கூ கிடைத்தது.
அடுத்த நாள்
ஹைக்கூ எழுதலாம் என்று போனேன்
பக்கத்து மாடியில் ஒரு
குக்கூ கிடைத்தது!

****


“Writing is a socially acceptable form of schizophrenia.” 
― E.L. Doctorow

Clay Shirky என்பவர் இதை mass amateurization என்று அழைக்கிறார். இண்டர்நெட் வந்த பிறகு இந்த கத்துக்குட்டித் தனம் எழுத்து, இசை, போட்டோகிராபி இவைகளில் பயங்கரமாக அதிகரித்துள்ளது என்கிறார்  . நான் ஏதோ ஒன்றைக் கிறுக்கி ட்விட்டரில் போடலாம். நான் பின் நவீனத்துவ எழுத்தாளர் ஆகி விட்டேன் என்று அர்த்தமா?:) தேங்கிய மழைநீரில் படுத்திருக்கும் நாயை படம் எடுத்து best photography என்ற பெயரில் போடலாம்.ஏதோ ஒரு பாட்டை fusion என்ற பெயரில் அபஸ்வரமாகப் பாடி We are Young ஐயும் விரிபோனி யையும் கலந்து கட்டி அடிக்கலாம். no limits !

சரி. We are Young என்றதும் ஞாபகம் வருகிறது.

Tonight,
We are young
So let's set the world on fire
We can burn brighter
Than the sun





-என்று இளைஞர்கள் பாடுகிறார்கள். 

நமக்கு 
இளமை இருக்கிறது 
இன்றிரவு உலகையே உலுக்குவோம் 
சூரியனை விட 
பிரகாசமாய் ஜொலிப்போம் 

-கேட்பதற்கு என்னவோ நன்றாகத்தான்  உள்ளது.இளமை, உடல் பலம், பணம், weekend + girl friend எல்லாம்.

pessimist என்று நினைக்காதீர்கள். பலியிடுவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கும் ஆடு அதன் கழுத்தில் மாட்டியிருக்கும் மாலையை ருசித்துத் தின்பது போல் மனிதன் வாழ்வில் இன்பங்களை அனுபவிக்கிறான் என்கிறது மணிமேகலை.

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற்றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து  

வேலைக் கண்ணாகக் கொண்டவள் என்று இளைஞர்கள் இவளைப் புகழ்ந்த காலம் போய் இப்போது கோலைக் கண்ணாகக் கொண்டு நடக்கிறாள் என்கிறது நாலடியார்.

திருவள்ளுவர் வேறு இந்த உடலுக்கும் நமக்கும் உள்ள உறவு என்பது பறவைக் குஞ்சுக்கும்  அதன் முட்டைக்கும் உள்ள உறவு போன்றது என்று பயமுறுத்துகிறார். 

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே 
உடம்பொடு உயிரிடை நட்பு

ஒரு வாதம் இளமை நிலைக்காது அதனால் இப்போதே நல்லது (?) செய்துவிடு என்கிறது. இன்னொரு வாதம் anyway இளமை நிலைக்கப் போவதில்லை.காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்  இப்போதே enjoy செய்து கொள்வதில் என்ன தப்பு என்று சொல்கிறது.  இரண்டுமே சரியாகத் தான் படுகிறது. enjoy செய்வதில் தப்பு இல்லை. என்னமோ தான் முதுமையே அடைய மாட்டேன் என்று மற்றவர்களை ஏன் பரிகாசம் செய்ய வேண்டும்? இன்றைய திரைப்படங்கள் அப்படித் தானே செய்கின்றன? சொட்டைத் தலையா, பல்லு போன கிழவா என்றெல்லாம். 

மேலும் ரொம்ப நாளாகவே இந்த விஷயம் என்னை உறுத்தி வருகிறது..நம் திரைப்படங்கள் ஏன் male centered ஆக இருக்கின்றன? ஹீரோவை ஆ ஊ  என்று புகழ்ந்து hero worship செய்து ஹீரோயினை அவனுக்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல நியமிக்கின்றன? 

மச்சான் பிகர மடக்கிட்டயா , பிகரை கரெட் பண்ணிட்டயா , உஷார் பண்ணிட்டயா , என்றெல்லாம் பெண் என்பவள் ஏதோ ஒரு வஸ்து போல treat செய்கின்றன.ஹீரோ தான் முக்கியம். அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். வேலை வெட்டி இல்லாத பொறுக்கியாக இருக்கட்டும். தாதாவின் கையாளாக, ரவுடியாக இருக்கட்டும், ஹீரோயின் அவனுக்கு வசப்பட்டு விட வேண்டும். அவ்வளவு தான்! என்ன மாதிரியான logic இது?மேலும் இன்று ஒரு படத்தில் ஒரு பாட்டிலேனும், பெண்ணை நம்பாதே அவள் மோசம் உன்னைக் கழட்டி விட்டு விடுவாள் , வேறு ஒருத்தன் வந்தால் அவன் பின்னே போய் விடுவாள் என்ற அர்த்தத்தில் வரிகள் வருகின்றன. அப்படியெல்லாம் சொல்லி விட்டு கடைசியில் அதே பெண்ணை விழுந்து விழுந்து லவ் செய்வார் ஹீரோ. யாரை ஏமாற்றுகிறார்கள்? காதல் , மூடி திறக்கும் போதே கவுத்துவிடும் குவாட்டராம்.


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் 
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

வள்ளுவர் சொல்லாததை இவர் என்ன சொல்லி விட்டார்?

சரி.

Shirky யின் தத்துவம் ஒன்று உள்ளது.  "Institutions will try to preserve the problem to which they are the solution," இதை கொஞ்சம் சந்தித்துப் பாருங்கள். 

டாக்டர்கள் , கேன்சருக்கோ ஹெச் .ஐ .வி க்கோ மருந்து கண்டுபிடிப்பதை ஆதரிப்பார்கள்.ஆனால் அதை வராமலேயே தடுக்கும் bio molecular research க்கு ஆதரிப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள்!



The biggest disease today is not leprosy or tuberculosis, but rather the feeling of being unwanted -Mother Teresa

நோய் ஏன் வருகிறது என்பது இன்னும் ஒரு பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. Disease is an abnormal condition என்பதோடு பீடியா நிறுத்திக் கொள்கிறது.நன்றாக (சத்தான உணவுகளை) நேரத்துக்கு சாப்பிட்டு, நன்றாகத் தூங்கி, உடற்பயிற்சி செய்து கொண்டு + கவலைப்படாமல் இருந்தால் நோயே வராது என்பது எல்லாரும் ஓரளவு ஒத்துக் கொள்ளும் ஒரு தியரி. ஆனால் இப்படியெல்லாம் இருந்தாலும் எப்படியோ நோய் சைக்கிள் கேப்பில் உள்ளே புகுந்து விடுகிறது.ஆஸ்பிடல் முதலாளிகளையும் டாக்டர்களையும் ஏகபோகமாக வாழ வைக்கிறது.

Free radical என்ற concept பற்றி முன்பே பார்த்திருக்கிறோம். 

ஓரிடத்தில் நெருப்பு விடாமல் எரிவதாக வைத்துக் கொள்வோம். அதில் இருந்து அவ்வப்போது சிறிய தீப்பொறிகள் பறக்கும் . அந்த தீப்பொறிகள் லேசான துணியில் தெறித்து ஓட்டை விழுந்து விடும் .அப்படித்தான் நம் உடம்பில் ஆக்ஸிஜன் உதவியுடன் சக்தி எரிக்கப்படும் போது அது தேவையில்லாமல் பக்கத்தில் இருக்கும் செல்களையும் அரித்து விடுகிறது. இது தான் நம் பிணி, மூப்பு, மரணம் என்ற மூவகைத் துன்பத்துக்கும் காரணம். 

இன்னொரு காரணம் இந்த நுண்ணுயிரிகள்!

மனுஷ்ய புத்திரனின் ஒரு கவிதையைப் பார்த்து விட்டுத் தொடருவோம்.

ஒரு பெரிய கனவு 
உடையும் போது 
நான் காண்கிறேன் 
நூறு நூறு 
சிறிய கனவுகள் 

ஒரு பெரிய நம்பிக்கை 
முறியும்போது 
என்னைத் தாங்குகின்றன 
நூறு நூறு 
சிறிய நம்பிக்கைகள் 

ஒரு பெரிய காதல் 
சிதையும்போது 
என்னைத் தனித்துப்போக விடுவதில்லை 
நூறுநூறு சிறிய காதல்கள் 
எண்ணற்ற சிறிய நம்பிக்கைகளில் 
உடைகிற எதுவும் 
நம் கவனத்தில் கூட வருவதில்லை 
பெரியதெதையும் போல 
கருணையற்றதில்லை 
சிறியவை எவையும்.

-இந்த பூமி சிறியவைகளுக்கானது . காலம் காலமாக அவை தான் பூமியை ஆட்சி செய்து வருகின்றன. மனிதன் இந்த பூமியின் வரலாற்றில் எவ்வளவு recent ஆக வந்தவன் என்பதற்கு Bill Bryson அழகானதொரு analogy சொல்கிறார்:

பூமியின் 4500 மில்லியன் ஆண்டுகள் வரலாறு முழுவதையும் ஒரு நாள் என்று கற்பனை செய்வோம். ஒரே ஒரு நாளில் 4500 மில்லியன் வருடங்களை அமுக்கி விடுவோம். இரவு 12 மணியில் இருந்து மறுநாள் இரவு 12 மணி வரை. ...

'உயிர்' அந்த நாளின் அதிகாலையிலேயே வந்து விடுகிறது. அதாவது அதிகாலை 4 மணிக்கெல்லாம் ஒருசெல் உயிரினங்கள் தோன்றி விடுகின்றன. ஆனால் அடுத்த 16 மணி நேரங்களுக்கு சுவாரஸ்யமாக எதுவும் நடப்பதில்லை.அந்தப் பகல் பொழுது மிகவும் சலிப்பாக நகர்கிறது. இரவு சுமார் 8:30 மணிக்கு முதல் கடல் தாவரங்கள் பாசிகள் முகம் காட்டுகின்றன. அடுத்து 20 நிமிடம் கழித்து முதல் ஜெல்லி மீன் தோன்றுகிறது.9:04 மணிக்கு கடலில் முதல் கணுக்காலிகள் நீந்துகின்றன. அதே சமயம் களிப்பாறை (Burgess Shale ) உயிரினங்கள் தோன்றுகின்றன. பத்து மணி சுமாருக்கு தாவரங்கள் தலை காட்டுகின்றன. அதற்கு சற்று பிறகு விலங்குகள் வருகின்றன.

சுமார் 10:24 மணிக்கு நம் பூமி (தரை) முழுவதும் காடுகளால் மண்டிக் கிடக்கிறது.(இதனால் தான் இப்போது பெட்ரோல் எல்லாம் கிடைக்கிறது!)  பூச்சிகள் இப்போது தலையெடுக்கின்றன. 11 மணி அடிக்க சில நிமிடங்களே இருக்கும் போது டைனோசர்கள் கர்ஜிக்கத் தொடங்குகின்றன. அடுத்த நாற்பது நிமிடங்களுக்கு அவை பூமியை ஆட்சி செய்கின்றன .11:40 மணிக்கு நாள் கிட்டத்தட்ட முடிந்து விடும்போது பாலூட்டிகள் தோன்றுகின்றன. சரி , இந்த நாளில் மனிதப்பயல் எப்போது வருகிறான் தெரியுமா? 11:45? இல்லை. 11:50? இல்லை.11:55? அதுவும் இல்லை.நாள் முடிவதற்கு ஒரு நிமிடம் 17 வினாடிகள் இருக்கும் போது .அதாவது 11:58:49 மணிக்கு தான் மனிதன் வருகிறான். பூமியின் வரலாற்றில் நாம் எவ்வளவு சமீபத்தில் வந்தவர்கள் என்று இந்த  analogy சொல்கிறது. மனிதனின் ஒட்டுமொத்த வரலாறும் சில வினாடிகளில் அடங்கி விடுகிறது.மேலும் இந்த சுவாரஸ்யமான நாளில் அவ்வப்போது கண்டங்கள் நகர்ந்தும் கடல்கள் தோன்றியும், மலைகள் தோன்றி மறைந்தும் பனிப் படலங்கள் மூடியும், இருக்கின்றன. மேலும் ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை பூமியை ஒரு விண்கல் தாக்கி வந்துள்ளது .இதிலெல்லாம் தப்பிப் பிழைத்து நாமெல்லாம் வந்து ப்ளாக் எழுதுவது அதிசயம் தான்!

மனிதனின் recentness ஐ அறிந்து கொள்ள இன்னொரு உதாரணம். உங்கள் இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் பக்கவாட்டில் எவ்வளவு நீட்ட முடியுமோ நீட்டுங்கள். அந்த நீளம் தான் பூமியின் ஒட்டுமொத்த history என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு கையின் நுனியில் இருந்து இன்னொரு கையின் மணிக்கட்டு வரை precambrian யுகம் நீடிக்கிறது. அதில் மனிதனின் வரலாறு சிறிதே வளர்ந்த ஒரு விரல் நகம் அளவு தான்.

இத்தனை recent ஆக வந்து விட்டு நாம் தான் பூமியைப் படைத்தவர்கள் போல ஆட்டம் போடுகிறோம். நம் வடிவத்தில் கடவுள்களைப் படைத்துக் கொண்டோம்! பூமியை பங்கு போடுகிறோம். பிளாட் போட்டு விற்று Sq .feet முன்னூறு ரூபாய் சென்னைக்கு மிக அருகில், என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.அதிகாலை ஐந்து மணியில் இருந்து பூமியில் வசித்து வருபவை பாக்டீரியா. அதை 11:59 க்கு வந்த நாம் ஒண்ட வந்த பிடாரி கதையாக இன்று துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம்.


நான் ரொம்ப ஹைஜீனிக் , clean habits என்றெல்லாம் பீற்றிக் கொள்பவர்களுக்கு: சுமாரான ஆரோக்கியம் கொண்ட ஒரு மனிதனின் தோலில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு ஒரு லட்சம் பாக்டீரியா  சுகவாசம் செய்து கொண்டுள்ளன.அவை ஏன் அங்கே உள்ளன என்றால் நம் உடம்பில் இருந்து உதிரும் கோடிக்கணக்கான தோல் செதில்களை (flakes ) சிப்ஸ் போல கொறிப்பதற்கும் நம் உடம்பில் தோல் துளைகள் மூலம்  சுரக்கும் எண்ணெய்களை , மினரல்களை கோக் போல ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் குடிப்பதற்கும். நாம் அவைகளுக்கு உண்மையிலேயே 'கல்யாண சமையல் சாதம்' .  அன்ன தானம் செய்யவில்லையே என்று வருத்தப் பட வேண்டாம். கோயில்களுக்குப் போனால் ஒரு வாரம் , ஒரு நாள் அன்னதானம் பண்ண பணம் குடுங்க சார் என்று விடாமல் நச்சரிக்கும் பூசாரிகள் பற்றியும் சாமிக் குத்தம் பற்றியும்  கவலை கொள்ள வேண்டாம். நாம் நம்மையே ultimate அன்னதானம் செய்து கொண்டு வருகிறோம். தினமும் கோடிக் கணக்கான ஜீவிகளுக்கு,,,நமக்கு direct சொர்க்கம் தான்! நம் உடம்பின் மிதமான வெப்பமும், நாம் செய்யும் movement களும் அவைகளுக்கு எக்ஸ்ட்ரா benefit வேறு !! பதிலாக , அவை நமக்கு என்ன தருகின்றன தெரியுமா? வாசனை! 

செக்ஸில் வாசனை ஒரு மிக முக்கிய factor என்பது நமக்கெல்லாம் தெரியும். டியூடரென்ட் கம்பெனிகள் இயற்கைக்கு மாறாக இதைப் போட்டுக் கொண்டால் தான் உங்கள் இணை உங்களிடம் கவரப்படும் என்று பொய் பிரசாரம் செய்கின்றன. ஆனால் அதற்கு opposite தான் உண்மை. எந்த body ஸ்ப்ரே யும் போடவில்லை என்றால்தான் இணை இயற்கையாக உடம்பின் வாசத்துக்கு கவரப்படும்.குளிப்பதற்குப் பிறகு செய்வதை விட குளிப்பதற்கு முன்னர் செய்யும் செக்ஸ்சில் தான் 'கிக்' அதிகம் என்கிறது ஒரு ஆராய்ச்சி. விலங்குகள் காலம் காலமாக உடம்பு வாசனையை வைத்து தான் இணையை அடையாளம் கண்டு கொள்கின்றன.நாம் தான் அடையாளத்துக்கு மூக்கை நம்பாமல் கண்களை நம்புகிறோம்.


முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

-திருவள்ளுவர் Nike deo எல்லாம் போடச் சொல்லவில்லை!

நுண்ணுயிரிகள் பற்றி மேலும் பேசுவோம்.

ஓஷோ ஜோக் 

தவளை ஒன்று ஒரு ஜோசியக்காரரிடம் சென்றது.

'என் எதிர்காலத்தைப் பற்றி சொல்லுங்க ' என்று கேட்டது.

ஜோசியம் சொல்பவன் ' கூடிய சீக்கிரம் நீ உன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையையும் ஒன்று விடாமல் அறிந்து கொள்ள விரும்பும் ஒரு அழகான இளம்பெண்ணை சந்திப்பாய் ' என்றான்.

'அப்படியா, எங்கே அந்த சந்திப்பு நிகழும்?' என்றது தவளை.

'அவளது ஜுவாலஜி லேபில்'!

சமுத்ரா