இந்த வலையில் தேடவும்

Tuesday, July 30, 2013

கலைடாஸ்கோப்-97

கலைடாஸ்கோப்-97 உங்களை வரவேற்கிறது.

உங்கள் அப்பா எல்லாரிடமும் கை நீட்டுபவர். யாரைப் பார்த்தாலும் அஞ்சு இருக்கா பத்து இருக்கா? கைமாத்தா கொடுங்களேன் என்று வாய்கூசாமல் கேட்பவர். அம்மாவோ ஊட்டி கொடைக்கானல் என்று மலை மலையாகப் பார்த்து அவ்வப்போது டூர் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்கிறவள்; அம்மாவுடன் பிறந்த தாய்மாமன் ஒரு திருடன். வெட்கமே இல்லாமல் பெண்களிடமெல்லாம் திருடுபவன்.சரி.கூடப் பிறந்த அண்ணன் எப்படி என்றால் அவனுக்கு கால்சப்பை. இங்கேயும் அங்கேயும் நகராமல் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து நன்றாகத் தின்று தொப்பையை வளர்த்து வைத்திருக்கிறான்.


வெயிட்.....இதை முதலிலேயே கலைடாஸ்கோப் -58 இல் எழுதி விட்டோம் இல்லையா...

ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும் போது இதே மாதிரி முதலிலேயே நடந்திருக்கிறது பாஸ் என்று மனம் சொல்வதை 'திஜாவு' என்கிறார்கள். நாம் இதை வாழ்க்கையில் ஒரு முறையேனும் அனுபவித்திருப்போம். எல்லாமே டிட்டோ டிட்டோவாக முதலில் எப்போதோ நடந்ததாக தோன்றுவது.well, செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கும் இந்த நகர வாழ்க்கையில் திஜாவு அதிசயம் இல்லைதான் என்றாலும் இன்ச் இஞ்சாக அப்படியே முதலில் என்றாவது நடந்திருக்க வாய்ப்பு இல்லை. திஜாவு ஒரு மனோதத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமா என்பது சரியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. நம் புலன்களுக்கு என்று தனியாக memory யை இயற்கை அளிக்கவில்லை. எல்லா processing-கும் மூளையில்தான் நடக்கிறது. மூக்குக்கோ கண்ணுக்கோ நாவுக்கோ தனியாக அனுபவங்களை store செய்யும் ஒரு flash memory கிடையாது. 

நெட்வொர்க்-களில் இந்த முறை பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதாவது network களின் edge device (நுனி எந்திரங்கள்!) களை , routerகள் switchகள் போன்றவற்றை டம்மியாக விட்டுவிட்டு எல்லா intelligence ஐயும் ஒரு மையமான சக்திவாய்ந்த கேந்திர கம்ப்யூட்டரிடம் விட்டு விடுவது!இப்படி
செய்வதால் processing time குறையும் என்கிறார்கள். 

நம் புலன்கள் ஒரு விதத்தில் instant என சொல்லலாம். 

" இக்கணத்தில் வாழ்ந்திருந்து இன்புறுவ தெக்காலம்?" என்று புலம்பும் சித்தர் பாடல்கள் புலன்களுக்கு கச்சிதமாக  பொருந்தும். அவை கணத்துக்கு கணம் நடப்பதை அப்படியே பிரதிபளிக்கின்றன.காட்சிகளை, சத்தத்தை, பதிந்து வைத்து பின்னர் 'அவளைப் பார்த்த அந்த நிமிஷம் ஒறஞ்சு போச்சு நகரவே இல்லை' என்று தனுஷை பாட வைப்பதெல்லாம் திருவாளர் மூளையின் வேளை.

ஆனாலும் சில நேரங்களில், மிக  அபூர்வமாக மூளை என்ன நடக்கிறது என்பதன் ஒரு முழு frameworkஐ அமைப்பதன் முன்பே புலன்களால் (அல்லது மூளையின் ஒரு தற்காலிக short-term memory யால்)ஒரு பிம்பம் வடிவமைக்கப்படுவதை திஜாவு என்கிறார்கள். தர்க்கரீதியாக கணக்கு போட , அதாவது இன்று வேறு நாள் வேறு வருஷம் வேறு இடம் , வேறு அனுபவம் , வேறு சூழ்நிலை என்று கணக்கு போட மூளை இன்னும் உள்ளே வராததால் புலன்கள் அதானே இது முன்னமே நடந்திருக்கிறது என்று நாவலின் ஏதோ இரண்டு random பக்கங்களைப் படித்து விட்டு என்ன எழுதியதையே மீண்டும் எழுதியிருக்கிறது என்று தப்புக் கணக்கு போடுவது.

இதற்கு எதிர் விளைவை ஜாமிஸ்வு என்கிறார்கள். ஒரு விஷயத்தை, நபரை , வார்த்தையை, காட்சியை, ஒலியை ஏற்கனவே சிலபல முறை கேட்டுப் பழகி இருந்தாலும்  அது என்ன என்று உடனே முடிவு செய்ய முடியாமல் மூளை குழம்புவது. கிட்டத்தட்ட தமிழ்த் திரைப்பட கதா நாயகர்களுக்கு வரும் short-term memory loss!

நுனி நாக்கில் ஒருவருடைய பெயர் இருக்கும். ஆனால் வெளியே வராது. எவ்வளவு பரிச்சயமான ராகம் என்றாலும் சில சமயம் அதை கண்டு பிடிக்க முடியாது. ச்சே, இது கானடாவாச்சே இது எப்படி நமக்கு மறந்து போச்சு என்று நமக்கே ஆச்சிரியமாக இருக்கும்.

தனியாகப் படித்தால் பயம் தரக் கூடிய சில விஷயங்கள்:

சில பேர் , இதுவரை போயிருக்காத சில நகரங்களுக்கு முதன் முறையாக செல்லும்போது அதன் தெருக்கள் தங்களுக்கு மிக மிக பரிச்சயமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இங்கே திருப்பம், இங்கே முட்டுச் சந்து, இங்கே சிக்னல் என்று அச்சு அசலாக. சில பேர் , இது எல்லாம் அப்படியே அச்சு அசலாக முன்பே நடந்திருக்கிறது என்று சொல்லி விட்டு அடுத்தது என்ன நடக்கும் என்றும் தங்களுக்கு தெரிவதாக சொல்லி யிருக்கிறார்கள். 'அடுத்து நடப்பது உனக்கு எப்படிப்பா தெரியும்? என்றால் அதான் இதெல்லாம் முன்பே ஒன்று விடாமல் நடந்திருக்கிறதே' என்பார்கள். திஜாவு, மன வியாதியா முன் ஜென்ம ஞாபகங்களா டெலிபதியா தெரியவில்லை. 

திரைப்படம் ஒன்றில் வேன் ஒன்று தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு விபத்துக்கு உள்ளாவதாக ஹீரோவுக்கு தெரிய வரும். உடனே தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளின் படி ஹீரோ எப்படியோ ட்ராபிக்-கை சமாளித்து காடுமலை மேடு தாண்டி வந்து வேனில் இருப்பவர்களை காப்பாற்றி விடுவார்.

சில பேர் இதற்கு இயற்பியல் ரீதியான ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். குவாண்டம் அறிவியலின் அறிமுகத்துக்குப் பிறகு நவீன இயற்பியல் parallel universe எனப்படும் இணை உலகங்களை நம்புகிறது. ஏற்கனவே பல முறை நாம் சொல்லியிருப்பது போல பொருட்களின் உள்ளே செல்லச் செல்ல சத்தியம் என்பது குறைந்து  சாத்தியம் என்பது அதிகமாகிறது. this or that! இதுவும் இருக்கலாம்; அதுவும் இருக்கலாம். இப்படி! நமக்கு ஒரு துகள் இப்படி நகர்ந்தது, அல்லது இப்படி வினை புரிந்தது என்று ஒரு history நமக்குக் கிடைத்தால் அது எண்ணிலடங்காத possibilities-சாத்தியக் கூறுகளில் ஒன்று தான். மற்ற சாத்தியக் கூறுகள் இணை உலகங்களில் நடந்து கொண்டு இருக்கலாம்.எலக்ட்ரான் ஒன்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஏ.ஸி வோல்வோ பஸ்ஸில் வந்ததாக தோன்றினால் அது ஒரு சாத்தியம் மட்டுமே. வேறொரு உலகில் அதே எலக்ட்ரான் சென்னையில் இருந்து ஹைதராபாத் போய்விட்டு அங்கே பிரியாணி சாப்பிட்டு விட்டு பெங்களூர் வந்திருக்கலாம். அதே மாதிரி, வேறொரு இணை பிரபஞ்சம் ஒன்றில் அந்த ரயில் விபத்து ஏற்கனவே நிகழ்ந்து எல்லாரும் செத்துப் போயிருக்கலாம். அது எப்படியோ ஒரு cross-talk ஏற்பட்டு ஹீரோவுக்கு  பிளாஷ் ஆகி இருக்கலாம். [அலைபாயுதே கண்ணா என் மனம் என்கிறார்கள். மனம் தான் அலைபாயும். உடல் இருந்த இடத்தில் இருக்கும் என்று நினைத்தால் தப்பு. உடலும் அலைபாயும் , திடப்பொருள்கள் எல்லாம் அலைபாயும்.டி -ப்ராக்லி என்னும் விஞ்ஞானி நாமெல்லாம் அலைகள் என்கிறார்.


 ஆன்மீகத்தில் இதை vision (காட்சி) என்கிறார்கள். இது dream அல்ல. கனவு தூக்கத்தில் மட்டுமே நிகழ்வது.  காட்சி நாம் விழித்திருக்கும் போதும் நிகழ்வது! 


இன்னொரு விளைவு Cagras delusion! அதாவது நம் அம்மாவோ, தம்பியோ, மகனோ, நெருங்கிய நண்பரோ அவரைப் போன்றே தோற்றமளிக்கும் வேறு யாரோ ஒருவரால் மாற்றப்படிருக்கிறார்கள் என்று நினைக்கும் மன நோய். மன நோய் என்பதை விட மன விளைவு. இதை வைத்து திரைப்படம் ஏதேனும் வந்திருக்கிறதா அறியேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லலாம். well, நமக்கு ரொம்ப நெருக்கமான சிலர் சில சமயம் நடந்து கொள்வதைப் பார்த்தால் இப்படித்தான் தோன்றுகிறது. 

'சொன்னது நீ தானா?
சொல் சொல் சொல் என்னுயிரே' 



வேற்றுக்கிரக மனிதர்கள் சிலர் நம் உறவினர்களை அப்படியே கடத்திக் கொண்டு போய், அவர்கள் உடலில் நம்மிடையே உலவுகிறார்கள் என்றும் இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. எதற்கும் தினம் படுக்கப் போகும் முன்னர் மனைவியை 'நீ சாந்தி தானே?' என்று கேட்டு விடவும்.


எனக்கு இந்த வினோத அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அம்மா பெங்களூருக்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்தார்கள். அப்போது, ஊரில், இன்னும் இதே அம்மா இருப்பதாக மிகத் தீவிரமாகத் தோன்றியது. அதாவது இங்கே வந்திருப்பது நிஜ அம்மா அல்ல என்று. 


மனம் என்பது ஒரு புதிரான சமுத்திரம். அதில் நுழைய நுழைய அபத்தங்கள், ஆச்சரியங்கள் , அச்சங்கள், அதிசயங்கள், அருவறுப்புகள், அதிர்ச்சிகள் நிறைந்திருக்கின்றன. சினிமாக்கள் இப்படிப் பட்ட விஷயங்கள் பெரும்பாலானவற்றை சொல்லி விட்டன. ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.சமீபத்தில் கே. டி.வியில் கலாபக் காதலன் என்ற படம் வந்தது.காதலில் நல்ல காதல் , கள்ளக் காதல் என்பது ஏது? என்ற caption உடன். அக்கா புருஷனான ஆர்யாவை மச்சினி மருகி மருகி காதல் செய்கிறார். கடைசியில் அவர் கிடைக்கமாட்டார் என்று தெரிந்ததும் 
தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்.



well, உயிரியல் ரீதியாக இந்த கற்பு, ஒழுக்கம், ஒருவனுக்கு ஒருத்தி, பிறன் மனை நோக்காமை, பிறனில் விழையாமை எக்ஸ்செட்ரா ஆமைகள் அர்த்தம் அற்றவை. கற்பு என்பது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி  குடும்பம்,  நாகரிகம் இவையெல்லாம் வந்த பின் வந்த ஒரு பின் விளைவு கற்பு is not so ancient! மனிதன், அன்றில் பறவைகள் கழுகுகள் , போல மோனோகேமஸ் அல்ல. he is a polygamous animal! உயிரியலாளர்களின் ஆராய்ச்சிப்படி பொதுவாக பாலூட்டிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதில்லை. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகள் மட்டுமே 

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் 
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

என்று கட்டுக்கோப்பாக வாழ்கின்றன. 

மனிதனை ஒரு விலங்காக மட்டும் பாவித்தால் , பெண்ணை விட ஆணுக்கு இருக்கும் உடல் வலிமை, ஆணின் விரைகளின் அளவு  (yes, it is extra large) இவைகளை வைத்து உயிரியல் ரீதியாக மனிதன் பல பெண்களை  (பல ஆண்களை) நாடும் இனம் என்று சொல்கிறார்கள். ராமன் உயிரியல் விளைவு அல்ல. மனவியல் விளைவு! குழந்தையை வயிற்றில் சுமப்பது இயற்கைக்கு  கொஞ்சம் சவாலான, கஷ்டமான சாமாச்சாரம். முட்டை போட்டால் அதில் உள்ள complication குறைவு. ஒரு ஆண், ஒரு பெண்  கற்பு கத்திரிக்காய் என்று சொல்வது பற்றி இயற்கைக்கு கவலை இல்லை. குழந்தை ஆரோக்கியமாக பிறக்க, அல்லது வெறுமனே 'பிறக்க' பாலூட்டிகளில் ஒரு ஆண் பல பெண்களை , ஒரு பெண் பல ஆண்களை நாட வேண்டும் என்றே இயற்கை விரும்பி வந்திருக்கிறது.இப்படி சொல்வதால்  என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். நான் உயிரியல் பார்வையில் மட்டுமே சொல்கிறேன். மனிதன் உயிரியல் மட்டுமே அல்ல. அதற்கு மேலும் மனம், இதயம், சிந்தனை, பகுத்தறிவு, மதம் என்றெல்லாம் வரும்போது 'அவனுக்கென்று இருக்கும் முலைகளை வேறொருவன் தொட்டால் செத்து விடுவேன்' என்ற ஆண்டாள் -டைப்புகள் உருவாகிறார்கள்.


மாடர்ன் உலகில் இந்த அக்காள் புருஷனை விரும்புதல் மச்சினியை நோட்டம் விடுதல் ஆண்டியை கரெட் செய்தல் போன்றவைகளுக்கு பயாலாஜிகலாக அர்த்தம் இழந்து விட்டாலும் (மருத்துவம் வளர்ந்து விட்டதால் குழந்தை பிறக்கும் சாத்தியங்கள் அதிகமாகி விட்டன.)மனவியல் ரீதியாக அதில் ஒரு திரில் கிடைக்கிறது. சீக்கிரமே சலிப்படைந்து விடும் பொருள்களில் மனித மனமும் ஒன்று. எனவே நேராக, traditionalஆக சீக்கிரமே கேட்டதும் கிடைத்து விடும் விஷயங்களில் அதற்கு ஆர்வம் இருப்பதில்லை. அக்கா புருஷனை அடைவதில் திர்ல்லர், ஹாரர், சஸ்பென்ஸ், எல்லாமே வந்து விடுகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஒரு சைக்காலஜிகல் திரில்லர் போல நகர்கிறது. இப்படிப்பட்ட பொருந்தாக் காதல் மூலம் தன்னுடைய identity மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் படுகிறது. ஈகோ பூர்த்தியாகிறது.

சங்க இலக்கியங்களில் காதல், காமம் பெரும்பாலும் straight- ஆகவே இருக்கிறது. பொருந்தாக் காதல்/ காமத்தை தொடவே இல்லை. அதிக பட்சம் ஒரு தலைக் காமமாக கைக்கிளைத் திணை மேலும் கொஞ்சம் பெருந்திணை மட்டுமே வருகிறது. தலைவன் பரத்தையரை நாடிச் சென்றான் என்று 

'நுதலும், தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும் வாட

வருந்துவள், இவள்'  -

தலைவி வருந்துவது வருகிறது....தலைவன் , தம்பி பெண்டாட்டியை துரத்தி நிலவைக் கொண்டுவா மெத்தை கட்டி வை என்றெல்லாம் வருவதில்லை.

அந்தக் காலத்தில் மச்சினி இல்லையா தெரியவில்லை. மேலும், பொருந்தாக்  காதல் என்பதைக் கூட  தலைவனைப் பற்றிக் கோள் சொல்லுதல், (பிறகு அவன் வந்ததும் அவனைக் காதலித்தல்) பெண், வெட்கம் விட்டு இரவில் தலைவனை நாடிச் செல்லல், மடலேறுதல்  இப்படித் தான் உள்ளன. பெண் பெண்ணை விரும்புதல் , ஆண் ஆணை விரும்புதல் போன்றவற்றின் சுவடே இல்லை. அந்தக் காலத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் சலிப்படைந்து விடவில்லை போலும்!


மனதின் இன்னொரு விவகாரம் : Fregoli delusion  எனப்படும் ஒன்று. இது என்ன என்றால் நம்மை சுற்றியுள்ள எல்லாரும் வெவ்வேறு முகமூடி அணிந்த ஒரே நபர் தான் என்று திடமாக நம்புவது! மேனேஜர், மனைவி, நண்பன், காதலி இந்த முகமூடிகளின் பின்னே ஒரே நபர் தான் ஒளிந்திருக்கிறார் என்று நம்புவது. மீண்டும், இதை நாம் மன நோய் என்றோ மனப் பிறழ்வு என்றோ சொல்ல முடியாது.இன்றைய மாடர்ன் உலகில் மனிதர்களின் uniqueness குறைந்துகொண்டே வருகிறது என்பதை 
கவனித்திருக்கிறீர்களா? மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் ஒவ்வொருவரும் எத்தனை தனித்தன்மையோடு இருந்தார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? மனிதர்கள் இப்போது ஒரு ஆட்டுமந்தை போலத்தான் வாழ்கிறார்கள். குழந்தைகளிடம் நிறையவே தனித்தன்மை இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமாய் இருக்கிறது. ஆனால் வளர வளர , சிறிது சிறிதுதாக அது மந்தையில் தானும் ஒரு ஆடாய் சேர்ந்து கொள்கிறது. நகரத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள் குறிப்பாக இளைஞர்கள் 90% க்கும் மேல் ஒரே மாதிரி இருக்கிறார்கள். ஒருவர் இன்னொருவரின் டிட்டோ போல. facebook , வாட்ஸ் -அப் ,பார்ட்டி , டேட்  என்று பேசிக் கொண்டு , வேலைக்கு சேர்ந்ததும் இ .எம் .ஐ, ஜாவா, 3 bhk , 2 bhk , கார் என்று பேசிக் கொண்டு. தனித்தன்மையை கண்டுபிடிப்பது மிக மிக அரிது! பெரும்பாலான மன பிறழ்வுகள் மாடர்ன் நாகரீகம் தந்த பரிசுதான் என்றால் மிகையில்லை.





சரி, இத்தனை சிக்கலான, விகாரம் நிறைந்த இந்த மனதை என்னதான் செய்வது என்றால் நமக்கு இரண்டு விஷயங்கள் உதவ முடியும்.


1. ஞானிகள் , மனம் ஒரு சாக்கடை எனவே அதனுள் ஆழ்ந்து போகாதே; மனதை கடந்து போ ( beyond   mind ) மனதைப் பற்றி  அவ்வளவாக
 அலட்டிக் கொள்ளாதே, அதைக் கடந்து விடு என்கிறார்கள்.

2. Behaviorism :  சைக்காலஜியின் ஒரு பிரிவுதான் என்ற போதும் இது , வீட்டின் வரவேற்பறையை மட்டும்  கவனத்தோடு அலங்கரித்தால் மட்டும்
  போதும் என்று சொல்கிறது. அதாவது மனதின் இருண்ட மூலைகள்  பற்றி அலட்டிக் கொள்ள  வேண்டாம். sub conscious ,  super conscious   என்றெல்லாம் பிலிம் காட்டவேண்டாம் என்கிறது. மனிதனுடைய நடத்தை பற்றி மட்டுமே கவனம் வைக்கிறது. மிக சுருக்கமாக சொல்வது என்றால் அவன் மனதளவில் சைக்கோவாக இருந்தால் என்ன அவன் சோஷியலாக
  நார்மலாக இருக்கிறானா; அவனால் யாருக்கும் தொந்தரவு இல்லையா. அதுவரை சரிதான், அவன் கனவுகளை கிளற வேண்டாம் நடத்தைகளை மட்டுமே அறிவியல் ரீதியாக ஆராய்வோம் என்கிறது. மேலும், சைக்காலஜியை அறிவியலின் /உடலியலின் ஒரு பிரிவாக மாற்றிவிட வேண்டும் என்கிறது. சில பிஹேவியரிஸ்ட்-கள்  தம்பதிகள் டைவர்ஸ் செய்வதற்கு RS 3-334 என்ற டி.என்.ஏ  காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். புதியவர்களிடம் நமக்கு இருக்கும் பயத்துக்கும் நெருக்கத்துக்கும் ஆக்சிடாக்சின் என்ற ஹார்மோன் சுரப்பது காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

சுருக்கமாக, ஆன்மீகமும் சரி அறிவியலும் சரி 'மனம்' என்பதை தேவையில்லாத ஒன்றாகவே பார்க்கின்றன.
@#$%$%$

சரி... கொஞ்சம் heavy யாகப் பேசி விட்டோம். இப்போது கொஞ்சம் வார்த்தை விளையாட்டு விளையாடலாம்.

இங்கிலீஷில் Mesostic என்று ஒன்று இருக்கிறது. இது என்ன என்றால் :

CAT  என்பதைப் பற்றி கவிதை எழுது என்றால்,

Cute 
bAby 
CAT  என்று எழுதுவது..

love  என்பதற்கு முயற்சித்து பார்க்கலாம்.

Lucky 
fO
haVing you -
AngEl !

சரி.. தமிழில் முயற்சி செய்து பார்க்கலாம்.

காதல் 

காதல் 
கால் 
காதல் 

என்று எழுதினால் அடி விழும்!

காதல் 
சீம் தரும் 
அனல்! 

காதல் என்ற வார்த்தை வராமல் இருந்தால் இன்னும் perfect ஆக இருக்கும்.

அம்மா-

ன்பில் 
ம்மா போல் 
வருமா?

முருகன்-

முகுந்தனின் 
ருகன் -
அழன் 
குமரன் 


கொஞ்சம் பெரிதாக 

பட்டினத்தார் 

ணம் பொருள் துறந்து 
காட்டிலே கிடந்து 
மகடினை மறந்து 
இருமம் விடுத்து 
இறையை ஏத்திய 
ஞானக்கனிதான் 
பட்டினத்தார் 



கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு மெசோஸ்டிக் கவிதைகளை எழுதவும் :-

அம்மா, காதல்,  திருமால் , வானவில், கவிதை, ஓவியம், சங்கீதம், ஊர்வசி 

கொஞ்சம் கடினமானவை:

பாரதமாதா, பெரியாழ்வார், வந்தேமாதரம், திருக்குறள் 


*

சன் .டி .வியில் சென்னையில் உள்ள உப்பிலியப்பர் திருக்கோயிலைக் காட்டினார்கள்.

அதில் பக்தர்கள் சிலர் பேசினார்கள்.


பக்தர் 1:  இந்தக் கோயிலுக்கு வந்தப்புறம் தான் என் பையனுக்கு நல்ல வேலை கிடைச்சுது. இப்ப வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டான். இனிமேல் வாராவாரம் இங்க வருவேன்.

பக்தர் 2:  என் ஆத்துக்காரர் ரொம்ப நாளா முதுகுவலில அவதிப் பட்டுண்டிருந்தார். இங்க வந்து பெருமாள தரிசிச்சதும் சரியாப் போயிட்டது.

பக்தர் 3: இந்தக் கோயிலுக்கு வந்தப்புறம் தான் என் பெண்ணுக்கு நல்ல வரன் அமைஞ்சது.

பக்தர் 4: இந்தக் கோயிலுக்கு வந்தப்புறம் தான் எனக்கு பிசினஸ் பிக்கப் ஆச்சு. பெருமாளுக்கு எப்படி நன்றி சொல்லறது-ன்னே தெரியலை.


ஒரு பக்தராவது ' எதையும் எதிர்பார்த்து இங்கே வரலை. பெருமாள் ஒருத்தனுக்காக தான் வரேன்.அவன் பக்தியே போதும் எனக்கு; அதை விட வேறென்ன பாக்கியம் கிடச்சுற முடியும்?" என்று சொல்லவில்லை.

உள்ளமோ ஒன்றில் நில்லாது
 ஓசையி னெரிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போலக்
 குழையுமா லென்ற னுள்ளம்,
தெள்ளியீர். தேவர்க் கெல்லாம்
 தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை யல்லால்
 எழுமையும் துணையி லோமே

இப்படிச் சொல்வது திருமங்கையாழ்வார்.



My  tastes are simple ...I'm easily  satisfied with the best என்று வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொல்வது போல , பகவானே இருக்கும் போது கல்யாணம், பாரின் ஜாப் இவற்றை ஏன் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார் தி.ம. ஆழ்வார் . அதனால்தான் அவர்கள் ஆழ்வார்கள்!

ஓஷோ ஜோக் 

ஒருநாள் முல்லா நசுருதீனின் மகள் அழுது கொண்டே வீட்டுக் கதவைத் தட்டினாள் .

கதவைத் திறந்து பார்த்த முல்லா, " என்ன சமாச்சாரம் ?" என்றார்.

"என் வீட்டுக்காரர் என்னை போட்டு அடித்து விட்டார்" என்றாள் அழுதுகொண்டே.

முல்லா மகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

உடனே , மருமகனுக்கு போன் செய்து, கோபமாக, "பார், நான் உன்னைப் பழிக்குப் பழி வாங்கி விட்டேன்; நீ என் மகளை அடித்தாய், பதிலுக்கு நானும் உன் மனைவியை அடித்து விட்டேன்' என்றார்.



சமுத்ரா 

Friday, July 19, 2013

வாலி - வைணவம் தந்த வைரம்


இதோ-
இன்னொரு கவிதைப் புத்தகத்தை 
கிழித்துப் 
போட்டுவிட்டான் 
எமன்!


-தமிழ் அன்னைக்கு இப்போது ஒரு
தலையாய பிரச்சினை
வாடகைக்கு வேறு வீடு தேடுவது!
வாலியின் நாக்கு தான் வீழ்ந்து விட்டதே!


தமிழ்க் கவிதையில்
தலை வலியாய் இருந்து வந்த

யாப்பை விலக்கிய கவிஞன்
உடல் பழுத்த போதும்
உள்ளத்தின்
மூப்பை விலக்கிய இளைஞன்


-எதுகை மோனை
இவனுக்கு இடதுகை தூரம்
சந்தம் இவனுக்கு பக்கத்து சொந்தம்.
அணி -
கையில் இருக்கும் கனி


மொத்தத்தில்
தமிழ் என்னும் பாவை மொழி
நிதமும்
இவனுடன் விளையாடிற்று பல்லாங்குழி!

இனி தமிழன்னை
'கம்பெனி' இல்லாமல்
கையொடிந்தது போல் ஆவாள்!
மைந்தனை இழந்த
மாதா போல் நோவாள் !


கம்பன்
யாப்புச் சாக்கில்
கட்டி வைத்திருந்த ராமாயணக் கற்கண்டை
புதுக் கவிதைப் பொட்டலங்களில்
சின்னச் சின்னதாய்க் கட்டி
ஊரெங்கும் வினியோகித்தவன்!

அழகர்மலைக் கள்ளனில் இருந்து
தில்லுமுல்லு வரைக்கும்
தமிழ்த் தேரை
தள்ளுமுள்ளு இன்றி
தள்ளிக் கொண்டு வந்த சாரதி!
இவன்
முக்காபுல்லா எழுதத் தெரிந்த
முண்டாசில்லா பாரதி!
வெள்ளை உடுத்தி
ஆண் வேடத்தில் வந்த சரசுவதி!

எம்.எஸ் .வி யின்
கூட்டுக்காரன்
பாஸ்போர்ட்
வைத்துக் கொள்ளாத
பாட்டுக்காரன்.


இவன்
ராக்குமுத்து ராக்குவும் எழுதுவான்
ராமானுஜ காவியமும்
எழுதுவான்!

சிக்குபுக்கு ரயிலு என்பான்
ஸ்ரீரங்க நாதனை
சிலாகிப்பான்!

பெரியாரையும் புகல்வான்
பெரியாழ்வாரையும்
புகழ்வான் !

இந்த முறை
காலம் என்ற கதாநாயகன்
வாலியை
மறைந்திருந்தல்ல
நம்-
கண் முன்னாலேயே
கொன்று விட்டான்!

முன்னே வருபவரின்
பலத்தில்
பாதி
எடுத்தவன் ராமாயண வாலி!
தன் கவிதையால்
தன் பலத்தில் பாதி கொடுத்தவன்
இந்த
ரங்கராஜ வாலி!


இனி
யாருண்டு
தமிழுக்கு அணி செய்ய?
பகலும் இரவும்
பக்குவமாய் பணி செய்ய?

வாலி என்னும்
வைர மூக்குத்தி விழுந்து விட்டதால்
மூளியானது
தமிழன்னை மூக்கு!
எந்த ஜி .அர் .டி யிலும்
கல்யாண் ஜுவல்லர்சிலும்
இனிமேல் கிடைக்காது!



முருகா முருகா என்று
முப்போதும் உச்சரித்தவன்
கம்யூட்டர் காலத்துக்கு
மாடர்ன் ஆக மாறு என்று
தமிழ்த்தாயை
அன்புடன் நச்சரித்தவன்!


பலாப் பழத்துக்கு
பறந்து வரும் ஈக்கள் போல
இவன் உதடு திறந்தால்
எங்கிருந்தோ
ஓடிவரும்
எதுகை மோனை!
ஐம்பது ஆண்டுகளாய்
தமிழை தன் முதுகில் சுமந்தது
இந்த வெள்ளை யானை!


அய்யா
பாரதத்தை விட
பெருமை மிக்கது உன்
பாண்டவர் பூமி!
உன் பிரிவால்
பசுமை இழந்தது போ
பாவலர் பூமி!


சீரங்கம் கொடுத்த ஒரு
செண்பகப் பூவை
கால யானை
நசுக்கி விட்டது!

எண்ணத்துப் பூவில்
இதழை வைக்கும்
வண்ணத்துப் பூச்சியை
கால நெருப்பு
பொசுக்கி விட்டது!

ஆயிரம் பாடல்கள்
இசைத்த  -ஒரு
புல்லாங்குழல் -இன்று
தன்
காற்றை விட்டு விட்டது!
தமிழ்
தான் எழுதி வந்த
ஒரு சுந்தரக் காவியத்துக்கு இன்று
முற்றுப்புள்ளி இட்டது!


இவன்

-குங்குமம் வைத்த
ஜி.யூ. போப்பு
இவன் தீண்டியதால் தான்
தமிழ் மேவிற்று பூப்பு!

இவன்

கண்ணாடி போட்ட கம்பன்!
கொம்பினால் காசினி தூக்கிய
கொம்பனுக்கு அன்பன்
உதய சூரியனுக்கும்
இரட்டை இலைக்கும்
ஒரு சேர நண்பன்!



எம்.ஜி.ஆர் என்ற
எல். ஐ. ஸி கட்டிடம்
வாலி என்ற
அஸ்திவாரத்தின் மேல் தான் நின்றது!
தமிழ் சினிமாவின்
தங்கத் தேரை
வாலிதான் தன்
தன்
வெற்றிலை நாக்கால்
வடம் பிடித்து
தடம் வடித்து
நடத்திச் சென்றது!

இந்த வாலி
தமிழ்க் கிணற்றில் மூழ்கி
கணக்கே இல்லாமல்
கவியமுதம் இறைத்த
வாளி
வாலி நீ வாழி !



மெய்யென்று மேனியை யார் சொன்னது ?

வாலி
உன் கார்பன் மேனி சிதைந்தாலும்
உன் கவிதை மேனி சிதையாது!
பைசா கோபுரம் புதைந்து போனாலும்
உன்
புகழ் புதையாது!

நீ
வழுத்திய
நீலவண்ணன் உலகில்
நீ
நித்திய சூரியாய்  இனி உலவு !
நின்
நினைவில் உலா வரட்டும்
தமிழென்னும் நிலவு!




-சமுத்ரா !






கலைடாஸ்கோப் -96

லைடாஸ்கோப் -96 உங்களை வரவேற்கிறது 


என்னடா வாழைப்பழம் குளித்துக் கொண்டு இருக்கிறதே 
என்று பார்க்கிறீர்களா? மேட்டர் உள்ளே.....

* நீங்கள் இப்போது அணிந்திருக்கும் உடை எங்கே, எப்போது வாங்கியது என்பது நினைவிருக்கிறதா?


* உங்களுடன் பள்ளி அல்லது கல்லூரியில் படித்த எல்லாருடைய பெயரையும் உங்களால் நினைவுகூற முடியுமா?


* யாரேனும் ஐந்து பேருடைய மொபைல் நம்பர்களை போனைப் பார்க்காமல் சொல்ல முடியுமா? 


-நினைவாற்றல் பற்றி கொஞ்சம் பேசலாம்.


நினைவாற்றல்  (memory process  ) என்பது நான்கு நிலைகளை உடையது என்கிறார்கள்.


முதலில் Attention (selection )


- ஒரு விஷயம் மூளையில் பதிய வேண்டும் என்றால் அதற்கு நம் attention மிகவும் அவசியம். நம்மைச் சுற்றி எத்தனையோ விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. நம் புலன்கள் தொடர்ந்து மூளைக்கு இடை விடாமல் அனுப்பும் செய்திகளில் பெரும்பாலானவற்றை மூளை 

தாட்சிண்யம் இன்றி நிராகரித்து விடுகிறது. ஒரு சில விஷயங்களை மட்டுமே , ஒரு 5% விஷயங்களை மட்டுமே பரிசீலிக்கிறது. எனவே ஒரு விஷயம் நினைவில் பதிய அதற்கு மூளையின் ஈடுபாடு மிகவும் அவசியம். ஹ்ம்ம்...ஆர்வமும் அவசியம். ஆர்வம் இல்லை என்றால் என்னதான் நெட்டுருப் போட்டாலும் மூளையில் தங்காது.

-Encoding 


ஒரு விஷயத்தை மூளை எப்படி பதிவு செய்து கொள்கிறது என்று தெளிவாக இதுவரை தெரியவில்லை. பதிவு செய்து கொள்ளப்பட வேண்டிய செய்தி ஒருவித pattern போல மூளையில் பதிவு ஆகிறது என்பது தெரிகிறது. ஆனால் இந்தப் pattern -கள் கம்ப்யூட்டர் மெமரி போல் அல்ல. அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் refresh செய்ய வேண்டி உள்ளது. கம்ப்யூட்டரில் ஒரு தடவை store செய்து விட்டு பின்னர்  பல வருடங்கள் கழித்து அதை அப்படியே எடுக்கலாம். மூளைக்கு (குறைந்த பட்சம் பத்து நாள் இடைவெளியில்) refresh தேவைப்படுகிறது. மூளை பதிந்து வைத்த pattern களில் அடிக்கடி ரத்தம் பாயாவிட்டால் அவை தேய்ந்து போய் அழிந்து விடுகின்றன. மூளை என்பது ரத்தம் அதிகம் தேவைப்படும் ஒரு உறுப்பு.(blood -hungry ) உடலின் எடையில் வெறும் 2 சதவிகிதமே இருந்தாலும் மூளைக்கு 20% ரத்த சப்ளை தேவைப்படுகிறது. அதிகமாக சிந்தனை செய்தால் நம் உடல் சோர்வடைந்து விடுவது இதனால் தான்.



-பொதுவாக ஒரு விஷயத்தை ஒலிக் குறிப்புகளாகவோ ஒளிக் குறிப்புகளாகவோ அல்லது அர்த்தத்தை வைத்தோ மூளை encode செய்கிறது . 'அம்மா இங்கே வா வா' என்றவுடன் நாம் உடனே 'ஆசை முத்தம் தா தா' என்கிறோம்.



தன்ன  தன்ன தா நா 

தான  தன்ன தா நா 


 இந்த Association நாம் சாகும் வரை நமக்கு மறக்காது என்று நினைக்கிறேன். இது ஒலி குறிப்பில் செய்த association . ஒரு particular தாளக்கட்டு. கர்நாடக இசையில் பாடல்களை நினைவு வைத்துக் கொள்ள இந்த தாளக்கட்டு மிகவும் உதவுகிறது. கச்சேரியில் பாடகர் செய்த ஆலாபனை (தாளம் இல்லாததால்) நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால் பாடல் வரிகள் ஓரளவு நினைவில் இருக்கின்றன. அதே போல ஒரு செய்யுளை நம்மால் சுலபமாக நினைவு வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் உரைநடை கஷ்டம்.


பழங்காலத்தில் வேதங்களை இந்த முறையில் தான் மனப்பாடம் செய்தார்கள்.


அடுத்து ஒளிக் குறிப்புகள். photographic memory அல்லது short term memory . அம்மா இங்கே வா வா என்ற பாட்டை ஒலியாக நினைவு வைத்துக் கொள்வது சுலபம். அதையே அம்மா வருவது போல, (அடுத்து) வந்து குழந்தையை எடுத்து முத்தம் தருவது போல ஒரு mental image ஐ வைத்தும் நினைவில் கொள்ளலாம். ஒரு பாட்டை ஒரு நோட்டில் எழுதி மனப்பாடம் செய்து பாருங்கள்.
அந்தப் பாட்டை பாடும் போதெல்லாம் அந்த நோட்டில் பாட்டு எழுதப்பட்டிருந்த pattern ஞாபகம் வரும்.


அடுத்து அர்த்தம்..(லாஜிக்)


நம் மொழியில் உள்ள பாடலை மனப்பாடம் செய்வது எளிதா வேறு புரியாத ஒரு மொழியில் உள்ள பாடலை செய்வது எளிதா? 


வாரண ராஜுனி ப்ரோவனு வேகமே 

வச்சினதி வின்னானுரா ராமா 

ஆனையின் வேந்தனை காத்திட வேகமாய் 

வந்ததை அறிவேனய்யா ராமா 

இரண்டில் எதை மனப்பாடம் செய்வது நமக்கு (தமிழர்களுக்கு) சுலபம்?


அ வந்தால் அடுத்து ஆ வரும் அடுத்து இ வரும் என்று உணர்ந்து மனப்பாடம் செய்வதும் இந்த encoding ற்கு வரும்.


அம்மா இங்கே வா வா பாடலில் மூன்று encoding -கும் (ஒலி ஒளி மற்றும் அர்த்தம்) இருப்பதால் அது நமக்கு ஜென்மத்துக்கும் மறக்காது.



கடைசியில் storage அண்ட் retrieval ....என்ன தான் மூளை விஷயங்களை சேமித்து வைத்திருந்தாலும் தக்க சமயத்தில் அதை வேண்டும் போது அது எடுத்துத் தர வேண்டும். அதுதான் முக்கியம்.நாக்கு நுனியில் இருக்கிறது மூக்கு நுனியில் இருக்கிறது என்றெல்லாம் சொன்னால் பிரயோஜனம் இல்லை.  உண்மையில் memory என்பது எத்தனை store செய்யப் பட்டிருக்கிறது என்பதல்ல. தேவைப்படும் போது எத்தனை விஷயங்கள் வெளியே வருகின்றன என்பதைப் பொருத்தது.


டெக்னாலஜியின் உபயமும், ஒரே மாதிரியான வேலை செய்வதும் நம் ஞாபக சக்திக்கு அபாயமாகி விட்டன இப்போது. இப்போது ஞாபக சக்தி என்பது ஒரு தேவை என்பது போய் அது ஒரு திறமை என்று ஆகி விட்டது. எதற்கெடுத்தாலும் கம்யூட்டரையும் செல்-போனையும் கொஞ்சமாவது மூளையை உபயோகிப்போம்.

ஞாபக சக்தியை முன்னேற்ற சில டெக்னிக்-கள் சொல்கிறார்கள். அவற்றில் ஒன்றை மற்றும் அலசலாம்.



கீழ்க்கண்ட பத்து பொருட்களை நீங்கள் ஷாப் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி லிஸ்ட் இல்லாமல் நினைவில் வைத்துக் கொள்வது?


-வாழைப்பழம், குளிக்கும் சோப்பு, ஆல் அவுட் லிக்விட், எண்ணெய் , வெங்காயம், நூடுல்ஸ், பால், ஊதுபத்தி, டூத் ப்ரஷ்,  கோதுமை மாவு.


-டெக்னிக் என்ன என்றால் இந்த சம்பந்தம் இல்லாத பத்து பொருட்களுக்கிடையில் நம் கற்பனை சக்தியைப் பயன்படுத்தி ஒரு crazy ஆன தொடர்பை ஏற்படுத்துதல்.


முதலில் வாழைப்பழம். சரி. அடுத்தது குளிக்கும் சோப்பு. இரண்டையும் தொடர்பு படுத்துதல்.


ஒரு காமன் சென்ஸ் -இற்கு அப்பாற்பட்ட தொடர்பு.


ஒரு மெகா சைஸ் வாழைப்பழம் சோப்பு தேய்த்துக் குளித்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம்.


அடுத்து சோப்பு + மஸ்கிடோ லிக்விட்.


நீங்கள் சோப்பை முகர்ந்து பார்த்து விட்டு அய்யே இது என்ன ஆல் அவுட் வாசம் என்று அலறுகிறீர்கள்.


அடுத்த அயிட்டம் எண்ணெய் ,,,ஆல் அவுட் டப்பாவில் லிக்விடுக்கு பதில் எண்ணெய் இருக்கிறதாம்.


அடுத்து வெங்காயம்... வெங்காயம் ஒன்று எண்ணெய்யில் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறதாம்.


அடுத்து நூடுல்ஸ்.... வெங்காயம் குளித்து முடித்து வந்ததும் திரித் திரியாக நூடுல்ஸ் மாதிரி ஆகி விடுகிறதாம்.


அடுத்து பால். அந்த திரிகளை பிழியும் போது பால் வழிகிறதாம்.


அடுத்து ஊதுபத்தி. பாலை முகர்ந்து பார்க்கும் போது ஊதுபத்தி வாசம் அடிக்கிறதாம்.


அடுத்து டூத் ப்ரஷ். ஊதுபத்தியின் மேலே டூத் பேஸ்ட் போட்டு யாரோ பல் விளக்குகிறார்கள்.


கடைசியில் சீக்கிரம் ப்ரஷ் பண்ணிக் கொண்டு வா..கோதுமை தோசை சாப்பிடலாம் என்று யாரோ கூப்பிடுகிறார்களாம்.


இப்படி ஒரு crazy ஆன association ஏற்படுத்திக் கொண்டால் அம்பது அயிட்டம் ஷாப் செய்ய வேண்டும் என்றாலும் மறக்காது....அடுத்த முறை முயற்சிக்கவும்.


அல்லது நம் கற்பனைத் திறத்திற்கு ஏற்ப சின்ன கதையை கூட ஏற்படுத்தி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.


உதாரணம்.


வாழைப்பழம் ஒன்று சோப்பு வாங்க கடைக்கு சென்றதாம். கடையில் இருந்த டீ வியில் கிரிக்கெட் மாட்ச் நடக்கிறது. 250 ரன்னுக்கு ஆல் அவுட்டாம். இதில் துள்ளிக் குதித்த வெங்காயம் ஒன்று  கீழே எண்ணெய் இருப்பது தெரியாமல் வழுக்கி வந்து வாழைப் பழம் மேல் மோதி பழம் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டதாம். யாரோ ஒருவர் அதை கையில் எடுத்து காப்பாற்றினாராம்.குடிக்க பால் எல்லாம் கொடுத்தாராம். ஆனால் அவரோ  மறுநாள் ப்ரஷ் பண்ணி விட்டு சாமிக்கு ஊதுபத்தி காட்டி பழத்தை  நைவேத்தியம் செய்து அதை தானே தின்று விட்டாராம். வாழைப்பழம் வயிற்றின் உள்ளே சென்றதும் அங்கே ஜீரணம் ஆகாமல் ஏற்கனவே இருந்த ஒரு கோதுமை அதைப் பார்த்து வெல்கம் என்றதாம்.



உங்களுக்கு ஒரு exercise ...மேலே குறிப்பிட்ட இரண்டு முறைகளிலும் கீழ்க்கண்ட ஷாப்பிங் லிஸ்டை அமையுங்கள் பார்க்கலாம். 




1.டிஸ்யூ பேப்பர், 2. பிஸ்கட்,3. ஷாம்பூ,4. பல்பு, 5.காபிப் பொடி , 6.டூத் பேஸ்ட்,7. தக்காளி, 8.மெழுகுவர்த்தி, 9.கத்திரிக்கோல், 10. குடை 


இன்னொரு டெக்னிக் இருக்கிறது. Peg method அல்லது Mnemonic peg system; நீங்களே படித்துப் பார்த்து அது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.


விக்கிபீடியா லிங்க்:


http://en.wikipedia.org/wiki/Mnemonic_peg_system


%%%%%%%%%%%%%%%%%%%




ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படித்ததுண்டா? 


மிக ஆழமான, புரிதலுக்கு தீவிரமான தத்துவ வேதாந்த விஷயங்களை எளிய கதைகள் மூலமும் உதாரணங்கள் மூலமும் விளக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

உதாரணத்துக்கு சில:



* குரங்குக் குட்டி அங்குமிங்கும் அலையும். தன் தாயை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.பூனைக் குட்டியோ அப்படிச் செய்வதில்லை. இரக்கப்படும்படி கத்துகிறது. அதன் தாய் அதன் கழுத்தை கவ்வித் தூக்கிக் கொண்டு போகிறது. குரங்குக் குட்டி தனது பிடிப்பை விட்டுவிட்டால் கீழே விழுந்து காயமடையும். ஏனென்றால் அது தன் பலத்தை நம்பியிருக்கிறது. பூனைக் குட்டியோ அது போன்ற ஆபத்துக்கு உள்ளாவதில்லை. ஏனென்றால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு அதன் தாயே அதைத் தூக்கிக் கொண்டு போகிறது.தன் பலத்தையே நம்பி இருப்பதற்கும் ஈசுவரனை சரண் அடைவதற்கும் உள்ள வித்தியாசமும் இப்படிப்பட்டதுதான். 


*சிக்கி முக்கிக் கல் , பல கோடிக் காலம் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தாலும் , தன் உள் நெருப்பை ஒருபோதும் இழப்பதில்லை .எப்போது வேண்டுமானாலும் சரி, அதை உரசினால் நெருப்புப் பொறி பறக்கும். அது போலத்தான் திட சித்தமுள்ள பக்தனும். அவன் உலக பாசங்களிடையே 

கலந்திருந்தாலும், அவனுடைய பக்தியும், பிரேமையும் குறைவுபடாது. ஈசுவரனுடைய நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் தன்னை மறந்தவனாகி விடுகிறான்.

* தேனீயானது , பூவின் உள்ளே இருக்கும் தேனை அடையாமல் இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவையே சுற்றிச் சுற்றி வரும்.ஆனால் பூவுக்குள் நுழைந்து விட்டால், தேனை சத்தம் செய்யாமல் குடிக்கிறது. கொள்கைகளையும் 

சித்தாந்தங்களையும் பற்றி ஒருவன் சண்டையிடும் வரையில் அவன் உண்மை பக்தியாகிய அமிர்தத்தைச் சுவை பார்க்க மாட்டான்.

* அரசன் ஒருவன் தன்னுடைய அரண்மனையிலே வேலை செய்யும் வேலைக்காரனுடைய வீட்டுக்கு விருந்தாளியாகப் போவதற்கு முன்னால் அவ்வேலைக்காரன் தன்னை தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய பண்டக சாலையில் இருந்தே வேண்டிய ஆசனங்கள், ஆபரணங்கள் உள்பட பலவற்றை வேலைக்காரன் வீட்டுக்கு அனுப்புகிறான். அதேபோல ஈசுவரன் பக்தனிடம் செல்வதற்கு முன்பு, பிரேமை, பக்தி, சிரத்தை போன்றவற்றை அந்த பக்தனுடைய ஆர்வமற்ற இருதயத்தில் புகும்படி அனுப்பி அருள் புரிகிறான்.




படித்ததில் பிடித்தது 


Question: What did one pessimist say to other pessimist?


Answer: Let us hope for the worst!


$$$$$$$$$$$


இந்த தமிழ் சினிமா ஹீரோக்கள் ஏன் படம் முழுக்கப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கே. டி .வியில் ஏதோ ஒரு படம்...பூவே உனக்காக வோ என்னவோ டைட்டில். அதன் ஹீரோ படம் முழுக்க மாய்ந்து மாய்ந்து பேசித் தள்ளுகிறார். சமீபத்தில் சிங்கம் என்ற திரைப்படத்தின் ஹீரோ கூட பயங்கரமாக பேசித் தள்ளுகிறார் என்று கேள்விப்பட்டேன். நம் ஹீரோக்கள் ஏன் அமெச்சூர்-ஆகவே இருக்கிறார்கள்? நம் டைரக்டர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதே இல்லையா? அதில் ஹீரோக்கள் அத்தி பூத்தது போலப் பேசுகிறார்கள். உதடு அசைவது கூடத் தெரிவதில்லை. மிகவும் தேவை, பேசவில்லை என்றால் தலை போய் விடும் என்றால் மட்டுமே திருவாய் மலர்கிறார்கள் .


ஒருவேளை அப்படிப்பட்ட உம்மணா மூஞ்சி ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்கு ஸூட் ஆவார்களா தெரியவில்லை. மேலும் , ஹாலிவுட் ஹீரோக்கள் 'காதல்னா என்னன்னா' என்று ஆரம்பித்து ஒரு ஆறு ரீலுக்கு வசனம் பேசுவதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.





*********************************************

இங்கிலீஷில் Anti -proverb என்று இருக்கிறது. காலம் காலமாக புழங்கி வரும் பழமொழிகளை கொஞ்சம்  மாற்றி கிண்டல் செய்வது.


தமிழில் இது மாதிரி முயன்று பார்க்கலாம்.



* அரசன் அன்று கொல்வான் ; தெய்வம் கிளைமாக்ஸில் கொள்ளும்.


*  அடிமேல் அடி வைத்தால் அடிப் பிரதட்சிணம் செய்யலாம்.


* கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைப்பான் 


* காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்; கரண்ட் உள்ள போதே சார்ஜ் பண்ணிக் கொள்.


* சிறு துரும்பும் பல்லில் சிக்கிக் கொள்ளும் 


* தம்பி உடையான் உயிலுக்கு அஞ்சுவான் 


* பட்ட காலிலே படும். படாத காலிலும் படும்.


* பத்து மிளகு இருந்தால் பொங்கல் சமைக்கலாம்.


* ப
ம் நழுவி பாலில் விழுந்தது. பால் நழுவி தரையில் சிந்தியது.

* மரம் வைத்தவன் கை கழுவிக் கொள்வான்.


* விடிய விடிய ராமாயணம் கேட்டு காலையில் தூங்கிப் போனான்.



வாசகர்கள் கீழ்க்கண்ட பழமொழிகளுக்கு  Anti -proverb எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.



* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு 


வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.


* வீட்டுக்கு வீடு வாசற்படி


வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.


* முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?


* மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.


* பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.


* பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.



* அ -அ -அ ஏன் எழுதுவதில்லை என்று தினமும் நூற்றுக்கணக்கில் மெயில்கள் வருகின்றன 


(reality :  ஒரே ஒருத்தர் தான் கேட்டார்)


கலைடாஸ்கோப் -100 எழுதி முடித்து விட்டு தான் அ -அ -அ  என்று சொல்லிவிட்டேன்
மாம்.

சரி. வாசகர்களின் இயற்பியல் ஆர்வத்துக்கு தீனி போட கொஞ்சம்:-


பூமியில் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்துக்கு ஒரு ஆழமான சுரங்கம் அமைக்க முடியுமா? அமைத்தால் என்ன ஆகும்? அந்தப்பக்கம் தலை கீழாக எழுந்து வருவோமா?


- இரண்டு விஷயங்கள் அப்படிப்பட்ட சுரங்கத்தை அமைக்க இடைஞ்சலாக இருக்கும் என்கிறது இயற்பியல். ஒன்று பூமியின் அடியில் கொதித்துக் கொண்டிருக்கும் மேக்மா குழம்பு. நாம் தோண்டும் சுரங்கத்தை உடலில் ஏற்படும்  காயத்தை வேகமாக வந்து அடைக்கும் ப்ளாடெலெட் செல்கள் போல வேகமாக வந்து மூடி விடும். 


-இரண்டு காற்றின் அழுத்தம். நாம் ஆழமாகக் குழி தோண்டிக் கொண்டு போகப்போக நமக்கு மேலே இருக்கும் காற்றின் அளவு (உயரம்) அதிகரிக்கிறது. வளிமண்டலத்தில் இருந்து தொடங்கி நம்மை அதிக அளவு காற்று அழுத்தும். காற்றழுத்தம் எக்குத்தப்பாக அதிகரிக்கிறது. பாயில் விதிப்படி (Boyle law ) அழுத்தம் அதிகரித்தால் வெப்பநிலை உயரும். (அழுத்தத்தின் போது காற்று மூலக்கூறுகள் நெருக்கமாகவும் வேகமாகவும் அசைவதால்.)அந்த வெப்பத்தில் சுரங்கம் தோண்டுபவர் டீப் பிரை ஆகி விடுவார். [இதனால் தான் கடல்மட்டம் சூடாகவும் மலை பிரதேசங்கள் குளிர்ச்சியாகவும் உள்ளன. ம. பிரதேசத்தில் நமக்கு மேலே அழுத்தும் காற்று குறைவு.]


சரி... இது இரண்டையும் எப்படியோ சமாளித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு பிரச்சினை பூமியின் சுழற்சியால் வருகிறது. பூமியின் அகண்ட மேற்பரப்பில் நாம் இருப்பதால் அது சுழல்வது நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. கீழே செல்லச் செல்ல அது நமக்கு தொந்தரவாக இருக்கும்.



சரி. எப்படியோ இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் ஒரு சுரங்கம் தோண்டி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் குதித்தால் என்ன ஆகும்? 42 நிமிடங்களில் அந்தப் பக்கத்தை அடைந்து விடுவோம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே ரிவர்சில் வந்து மீண்டும் விழுந்து ஒரு முடிவில்லாத oscillation -இல் சிக்கிக் கொள்வோம் என்கிறார்கள். ஆனால் இதுவரை மனிதனால் தோண்ட முடிந்த தூரம் 12 km தான். (ரஷ்யா) பூமியின் விட்டம் 12,742 km. அதனுடன் ஒப்பிடும் போது இது ஒரு சின்னக் கீறல் கூட பெறாது!

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல என்று வள்ளுவர் சொன்னது சரியாகத் தான் இருக்கிறது.


சில quotes :


Life is the dash between the birth date and the passed away date. Anonymous

A meeting is an event at which the minutes are kept and the hours are lost

If there is a wrong way to do something, then someone will do it

The man who smiles when things go wrong has thought of someone to blame it on



ஒரு கவிதை   - விநாயக முருகன் 

மேடயேறிய தலைவர்
மூச்சுக்கு முன்னூறு முறை
முப்பத்துமூன்று முப்பத்துமூன்று
முழங்கிக் கொண்டிருந்தார்
இரவுக்குள் வாங்கி தருவதாக
சத்தியம் கூட செய்தார்
மேடையிலிருந்து கீழிறங்கி
மகளிரணித் தலைவியை பார்த்தவர்
உதவியாளரிடம் கேட்டார்
ஆ‌மா…அம்மணிக்கு என்ன வயசு?
.
..
முப்பத்துமூன்று இருக்கும்


ஓஷோ ஜோக்.

முல்லா நசுருதீன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு போன் செய்தார்.

"அய்யா, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு ஏழை பெண்ணுக்காக நான் பேசுகிறேன். அவள் விதவை கூட. மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு கூலி வேலை செய்து அனுதினம்  கஷ்டப்படுகிறாள் . வாடகை மூன்று மாதத்துக்கு 3000 ரூபாய் பாக்கி வேறு இருக்கிறது. அதைக் கொடுக்கவில்லை என்றால் அவள் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப் படுவாள். அவளுக்கு வாடகை தரவாவது பண உதவி ஏற்பாடு செய்ய உதவுங்கள்.....தயவு செய்து "என்றார்.

"கண்டிப்பாக அய்யா" என்ற மறுமுனை "சரி, நீங்கள் அந்தப் பெண்ணுக்கு என்ன வேண்டும்?" என்றது.

"நான் தான் அவள் வீட்டின் ஹவுஸ் ஓனர்" என்றார் முல்லா.


சமுத்ரா ..