இந்த வலையில் தேடவும்

Sunday, January 30, 2011

இன்பத்துப்பால் இலவசம்!

உள்ளே எங்கிருக்கிறது
என்று
அறிந்து கொள்ளமுடியாத
உயிர் போல-
ஆழத்தில்
உறங்கிக் கிடக்கிறது காதல்!
கொஞ்சம் கீறினால்
குபுக்கென வெளிவரும்
குருதி போல
தயாராக இருக்கிறது காமம்!

கணக்கில்லாத வருடங்கள்
கால் கட்டை விரலில் நின்று
கடும் தவம் செய்தால் மட்டும்
காட்சி தரும்
பிரம்மனைப் போல இருக்கிறது அன்பு!
ரொட்டித் துண்டைக்
காட்டியதும்
வாலாட்டிக் கொண்டு வரும்
நாயைப் போல இருக்கிறது காமம்!


காலை மாலை சாதகம் செய்து
கழுத்தளவு நீரில் நின்று
உயிரை உருக்கிக்
குரலை முறுக்கி
காலம் மறந்து
உழைத்த பின் வெளிவரும்
சங்கீதம் போன்றது பக்தி...
சென்ற வினாடி வரை
எந்த
அறிகுறியையும் காட்டாமல்
திடீரெனப் புறப்படும்
தும்மல் போன்றது காமம்...

மேலிருந்து
நேரடியாக விழும்
மழைத் தண்ணீரையே உணவாகக் கொள்ளும்
சக்கரவாகப் பறவை போல்
வைராக்கியம் மிக்கது ஞானம்
எச்சில் இனிப்பு
தரையில் விழுந்தால்
எங்கிருந்தோ வந்து மொய்க்கும்
எறும்புகள் போன்றது காமம்..


மலையை மத்தாக்கி
பாம்பைக் கயிறாக்கி
விஷத்தை எதிர் கொண்டு
ஆயிரம் வருடங்கள்
கடல்கடைந்த பின் வெளிப்படும்
அமுதம் போல
அரிதாய் இருக்கிறது ஆன்மா!
கடல் நீர் ஆவியானவுடன்
கண்காட்டும்
உப்பு போல
உடனடியானது காமம்!

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை
பூக்கும் குறிஞ்சிப்பூ போன்றது
பேரானந்தம்!
நீர் இல்லா நிலத்திலும்
நொடியில்
தலைகாட்டும்
புல் போல இருக்கிறது காமம்


கடன் கொடுக்கும்
வங்கி போல
நடையாய் நடக்க வைத்து
உயிரை விலைகேட்கிறது கருணை
பணத்தை
வீதியில் வீசி எறிந்தால்
பறந்து வந்து
சண்டையிட்டு அள்ளிக் கொள்ளும்
மனிதர்களைப் போல
இருக்கிறது காமம்..

ஒரு சீட்டுக்கட்டால்
மெது மெதுவாய் உருவாகும்
கோபுரம் போல மென்மையானது அன்பு
அந்த கோபுரத்தை
ரசனையின்றி
ஒருநொடியில் சாய்த்து விடும்
மின் விசிறிக்காற்று போல
அவசரத் தனமானது காமம்!


விளக்கு,
திரி,
எண்ணெய்,
நெருப்பு
இவையெல்லாம் கூடினால் மட்டுமே
வெளியாகும் சுடர் போன்றது காதல்!
விளக்கணைக்கக் காத்திருக்கும்
இருட்டு போல
வாசலில் காத்திருக்கிறது காமம்

ராவணன்
கையிலாயத்தைப் பெயர்த்துத்
தூக்கியது போன்ற
பிரயத்தனம் அன்பு
நம் அறிவு கூட இன்றி
நம்மிடம் ஒட்டிக் கொண்டு விடும்
தூசி போன்றது காமம்

ஆம்...
பக்தியைத் தூண்டத்தான்
எவ்வளவு முயற்சிகள்?
நாட்கணக்கில் விரதங்கள்,
நாமாவளிகள்,
மந்திர கோஷங்கள்,
பஜனைகள்,
சத்சங்கங்கள்,
மலையேற்றம்,
காவி உடைகள்,
உபவாசம்,
தீபாராதனை
திருமஞ்சனம் என்று..
ஆனால்
காமத்தை அழைக்க
காற்றின் ஒரு
'கணநேர '
உடை விலக்கல்
போதுமானதாய் இருக்கிறது!


முத்ரா





Thursday, January 27, 2011

வார்த்தை பொம்மைகள்!


குழந்தை ஒன்று
பொம்மைகளுடன் விளையாடுவது போல
நான்
வார்த்தைகளுடன் விளையாடுகிறேன்..

தூங்கும் போதும் அது
பொம்மைகளைக் கட்டிக் கொண்டு தூங்குவது போல
நானும்
வார்த்தைகளைக்
கட்டிக் கொண்டு தூங்குகிறேன்..

இரண்டு குழந்தைகள்-
பொம்மைகளை முன்னிறுத்திப் பேசிக் கொள்வதைப்
போல
இறந்து போன
வார்த்தைகளால் உங்களிடம் பேசுகிறேன்..

குழந்தை
பொம்மைகளைக் குளிப்பாட்டி
பொட்டிட்டு
அலங்கரிப்பது போல
நானும் வார்த்தைகளை அலங்கரித்து
ஜாலங்கள் செய்கிறேன்..

பொம்மை தொலைந்தால்
அழுது தவிக்கும் குழந்தை போல
என்
வார்த்தைகள் தொலைந்தால்
வருத்தம் கொள்கிறேன்..

இன்னொரு குழந்தையின் கையில்
இருக்கும்
பொம்மையைப் பார்த்துப்
பொறாமைப்படுவதைப் போல
இன்னொருவரின் வார்த்தைகளில்
பொறாமைப்படுகிறேன்..

முன்னைக் காட்டிலும்
அழகிய பொம்மை கிடைத்தால்
பழையதை மறந்து விடும் குழந்தை போல
பொருத்தமான வார்த்தை கிடைத்ததும்
பழைய வார்த்தையை அழித்து விடுகிறேன்..


போதும்
வார்த்தைகள் என்ற
உயிரற்ற பொம்மைகளுடன் விளையாடியது..

வயது
வந்ததும்
எல்லா பொம்மைகளையும்
தூக்கி எறிந்து விடும் குழந்தை போல
வார்த்தைகளை எறிந்து விட
வாய்ப்பிற்காய்க்
காத்திருக்கிறேன்...


முத்ரா





கலைடாஸ்கோப்-5


லைடாஸ்கோப்-5 உங்களை வரவேற்கிறது.

* ஜெர்மனியில் இருந்து கொண்டு கால்பந்து ஆட்டத்தின் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லிக் கொண்டிருந்த
'ஆக்டோபஸ்' இறந்து விட்டதாம். அதற்கு அங்கே ஞாபகார்த்தமாக சிலை எல்லாம் வைத்திருக்கிறார்கள். நம் நாட்டிலும் கிளிகள் காலம் காலமாக ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதற்கு சிலை எல்லாம் வைக்கா விட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அதை ஒரு மனித, சாரி கிளி ஜென்மமாகவாவது நடத்துகிறார்களா என்பதே சந்தேகம் தான்...

* 127 hours பார்த்தேன். மலை ஏறும் ஆசாமி ஒருவரின் கை மேலிருந்து விழுந்த பாறையின் இடுக்கில் நன்றாக மாட்டிக் கொள்கிறது. வெறும் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டே மனிதர் 127 மணி நேரங்கள் சமாளிக்கிறார். கடைசியில் கையை அறுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறார்...அருமையான படம்..பாறையில் சிக்கித் தவிக்கும் நரகத் தருணங்களில் தன் பெற்றோரை நினைத்துக் கொள்கிறார்..காதலியை எண்ணி கனவு காண்கிறார். மட்டமான சீனா கத்தியை வாங்காதீர்கள் என்று ஜோக் வேறு அடிக்கிறார்.எல்லாம் சரி,,ஒரு விஷயம் மட்டும் நெருடுகிறது. ஒரு முறை கூட வானத்தைப் பார்த்து "கடவுளே என்னைக் காப்பாற்று" என்று சொல்வதில்லை..அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தந்தை பெரியாராக இருந்தாலும் ஒருமுறை கடவுளை நினைத்துக் கொள்வார்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

* இந்தியா குடியரசு ஆனதற்கும் போக்கிரி படத்தில் விஜய் எதிரிகளை அடித்து ரயில் கம்பிகள் வளைவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..அதே மாதிரி எப்படி எல்லா தமிழ்ப்படங்களிலும் சொல்லி வைத்தமாதிரி 'டீசன்ட்' ஆன ஹீரோயின்கள் எப்படி ரவுடிகள், வேலை இல்லாத பொறுக்கிகள் (கதா பாத்திரத்தை தான் சொன்னேன்) பின்னே லோ லோ என்று அலைகிறார்கள் என்று தெரியவில்லை..

* பெங்களூருவில் போன வாரம் பந்த் நடந்தது...இந்தியத் திருநாட்டில் பந்த் என்றால் சில எழுதப்படாத விதிகள் இருக்கின்றன ...
குறைந்தது இரண்டு பஸ்ஸாவது கொளுத்தப்பட வேண்டும், குறைந்தது பத்து பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட வேண்டும் என்றெல்லாம்...வருமானத்தை இழக்க விரும்பாத சில கடைகள் சிவபெருமான் கண் மாதிரி பாதி திறந்தும் பாதி மூடியும் செயல்பட வேண்டும் என்பதும் இதில் அடக்கம்..(இனி மேல் முழு அடைப்பு என்று சொல்லாமல் பாதி அடைப்பு என்று சொன்னால் நன்றாக இருக்கும்) நம் எல்லாரின் உள்ளேயும் வன்முறை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த 'பந்து' கள் அதை வெளிப்படுத்த ஒரு சாக்காக அமைந்து விடுகின்றன..மேலும் வன்முறை என்பது ஒரு தொற்று வியாதி..நீங்கள் தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது எல்லாரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் போட்டுச் சாத்திக் கொண்டும் இருந்தால் நீங்கள் என்னைப் போல யாராவது அப்பிராணி ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தால் குறைந்த பட்சம் அவன் கன்னத்தில் ஒரு அறை விடுவீர்கள் என்று நான் சொல்ல வில்லை...சைக்காலஜி சொல்கிறது

* டி. வி யில் ஜட்ஜுகளும் , 'மாஸ்டர்களும்' கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வதைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது. அவர்களை அங்கேயே நிறுத்தி வைத்து காதலனும் காதலியும் நூறு பேர் பார்க்க ஒன்றாக டான்ஸ் ஆடும் போது என்னென்ன வேதியியல் வினைகள்(?) உள்ளே நிகழும் , எந்த அமிலம் எந்த அமிலமாக மாறும் என்பதை சமன்பாடாக எழுதி ரெண்டு பக்கத்தையும் பாலன்ஸ் செய்து காட்டு என்று கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது

கொஞ்சம் மானேஜ்மென்ட்:
=======================

மானேஜ்மென்ட்டில் 'சிக்ஸ் சிக்மா' என்ற ஒரு தத்துவம் இருக்கிறது. ஒரு கம்பெனியில் 'குவாலிடியை' (QUALITY ) அதிகப்படுத்த அது மெனக்கெடுகிறது.DMAIC (define , Measure , Analise , Improve , Control ) ப்ளாக் பெல்ட், கிரீன் பெல்ட் என்றெல்லாம் என்னென்னவோ சொல்கிறது. ஒரு கம்பெனியில் உள்ள ஒவ்வொருவரும் என்னைப் போல மானேஜருக்குத் தெரியாமல் ப்ளாக் எல்லாம் எழுதாமல் சின்சியராக வேலை செய்தாலே QUALITY தொண்ணூறு சதவிதிதம் உயர்ந்து விடும் என்று தோன்றுகிறது

ஒரு ஓஷோ ஜோக்
================

மிகவும் சீரியஸ் ஆகி விட்டீர்கள்...சரி இப்போது ஒரு ஓஷோ ஜோக்

சுவாமி தேவ கோகனட் ஒருநாள் எம்.ஜி. ரோட்டில் நடந்து கொண்டிருந்த போது ஒரு மாட்டு வண்டி தாக்கி இறந்து விட்டார்..அவர் சொர்கத்துக்குப் போகிறார். ஓர் இடத்தில் நிறைய கடிகாரங்கள் வைக்கப்பட்டிருக்கவே , சொர்கத்தை சுற்றிக் காட்டுபவரிடம் "அவை எல்லாம் என்ன"? என்று கேட்டார்..அதற்கு அவர் " இவை எல்லாம் பாவ கடிகாரங்கள்..உலகில் உள்ள ஒவ்வொருவரும் எந்த ரேட்டில் பாவங்களைச் செய்கிறார்கள் என்பதை இந்த கடிகாரங்களின் முட்கள் நகர்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்..உதாரணமாக போப்பின் கடிகாரம் எழுபது வருடங்களில் இரண்டு நிமிடங்கள் மட்டும் நகர்ந்திருக்கிறது...அன்னை தெரசாவின் கடிகாரம் ஒரு நிமிடம் மட்டும்.." என்றார்..

சுவாமி தேவ கோகனட் ஆர்வமாக "அப்படியானால் ஓஷோவின் கடிகாரம்?" என்றார்..

அதற்கு அவர் "ஓ அது இங்கே இல்லை..அதை ஆபீஸ் ரூமில் டேபிள் ஃபேனாக உபயோகிக்கிறார்கள்"


இனி சமுத்ராவின் ஒரு க(வி)தை (ஹி..ஹி..)
====================================

அவன் சுடுதண்ணீர் காய்ச்சி
பாட்டிலில் நிரப்பிக் கொண்டான்..
டூத் பேஸ்ட், பிரஷ், சோப்பு
எடுத்து வைத்துக் கொண்டான்..
ரப்பர் தலையணை, போர்வை,துண்டு
பேக் செய்தான்..
பயணத்தின் போது படிக்க
புத்தகங்கள், குமுதம், விகடன் மறக்காமல்
சைடு ஜிப்பில் வைத்தான்..
ஐ-பாட் சார்ஜ் செய்து உள்ளே வைத்தான்..
எல்லா விளக்குகளையும்
மறக்காமல் அணைத்தான்..
ஹீட்டரை ஆஃப் செய்தான்...
டி.வியின் கேபிளைத் துண்டித்தான்..
வீட்டைப் பூட்டி சாவியை
பத்திரமாக பர்சின் உள்ளறையில் போட்டான்..
ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தி
ஏறிக் கொண்டான்..
..
..
டிராயரின் மேல் அறையில்
வைத்திருந்த
டிரெயின் டிக்கெட்
அப்படியே இருந்தது...

~முத்ரா

Tuesday, January 25, 2011

எதிர்பாராது வரும் விடுமுறைகள்!

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?

வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...

தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..

தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..

காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..

மனைவியின் சமையலை
நேரலையா
ய் கண்டு ரசிக்கலாம்..

நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...

நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...

ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...

என்ன தான் சொன்னாலும்
வழக்கமான விடுமுறைகளை விட
எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எப்போதும் அழகாய் இருக்கின்றன,,


~முத்ரா

Monday, January 24, 2011

அணு அண்டம் அறிவியல்-13

அணு அண்டம் அறிவியலில் ஒரு மாறுதலுக்காக இன்று perpetual motion machines (PMM ) எனப்படும் தொடர் இயக்க இயந்திரங்கள் பற்றி பார்க்கலாம்..

மனிதன் ஆதி காலத்தில் இருந்தே தன் வேலையை எளிதாக்க இயந்திரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறான்..(இங்கே இயந்திரம் என்றால் என்னவென்றால் அது ஏதாவது உருப்படியான வேலையை செய்ய வேண்டும்..)ஆனால் இயந்திரங்கள் இயங்குவதற்கு அவைகளுக்கு வெளியில் இருந்து ஏதாவது ஆற்றல் கொடுக்க வேண்டும்..உதாரணமாக டைப் ரைட்டர் ஒரு இயந்திரம்..அதைத் தொடர்ந்து இயக்கினால் தான் அது வேலை செய்யும்...எதுவுமே செய்யாமல் 'மாயா பஜார்' மாதிரி நீயே டைப் அடித்துக் கொள் என்று கட்டளை (?) இட்டால் அது கேட்காது..இன்னொரு விதத்தில் சொன்னால் இயற்கையில் எதுவுமே இலவசமாகக் கிடைப்பதில்லை..என்னிடம் ஒரு விதமான ஆற்றல் இருக்கிறது..அதை நீ ஏதாவது மெஷினைக் கண்டுபிடித்து இன்னொரு வகை ஆற்றலாக மாற்றிக் கொள்..சும்மா வெட்ட வெளியில் இருந்து ஆற்றல் வேண்டும் என்றெல்லாம் அடம்பிடிக்கக் கூடாது என்று இயற்கை மனிதனிடம் சொல்லாமல் சொல்கிறது...இப்படி இயற்கையிடம் மறைந்திருக்கும் ஆற்றலை நமக்குப் பயன்படும் விதத்தில் வேலையாக (WORK ) மாற்றிக் கொள்வதற்கு மனிதன் இயந்திரங்களைக் கண்டுபிடித்தான்..உதாரணமாக இயற்கையில் கிடைக்கும் பெட்ரோலியத்தில் நிறைய வேதியியல் ஆற்றல் மறைந்துள்ளது..அதை மனிதன் என்ஜின்களை வைத்துக் கொண்டு இயக்க ஆற்றலாக மாற்றுகிறான்..

இயற்கையின் இன்னொரு விதி என்னவென்றால் நாம் எவ்வளவு ஆற்றலை இயந்திரத்திற்கு கொடுக்கிறோமோ எப்போதும் அதை விடக் குறைந்த பலனைத் தான் அது நமக்குக் கொடுக்கும்..அதாவது OUTPUT IS LESS THAN INPUT ..ஐ.டி. பாஷையில் சொல்வதென்றால் எல்லாரும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தை விடக் குறைவாகவே வேலை செய்வார்கள்..
நீங்கள் டாலரையோ இல்லை யூரோவையோ இந்திய ரூபாயாக மாற்றும் போது எஜென்சிக்க்குக் கொஞ்சம் கமிஷன் கொடுக்கிறீர்கள் அல்லவா? அதே மாதிரி இயற்கையின் ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்றும் போது இயற்கைக்குக் கொஞ்சம் 'கமிஷன்' கொடுக்க வேண்டும்..MOTHER NATURE என்று நாம் சொல்வதெல்லாம் சும்மா தான்..உண்மையில் இயற்கை ரொம்ப கறாரானது.அந்த இயற்கைக்கு நாம் கொடுக்க வேண்டிய கமிஷன் என்ன தெரியுமா? ' வெப்பம் ' நம்முடைய கார் உதாரணத்தில் எஞ்சினில் உருவாகும் வெப்பம் தான் அது..

சரி நிற்காமல் இயங்கும் இயந்திரங்கள் இருக்கட்டும்..அவை கொஞ்சம் டூ மச்..குறைந்த பட்சம் தனக்குக் கொடுக்கப்படும் எல்லா ஆற்றலையும் கொஞ்சம் கூட வீணாக்காமல் (இயற்கையை ஏமாற்றி விட்டு) வேலை செய்யும் மெஷினைக் கண்டுபிடிப்பதே கஷ்டம் தான்..வெப்ப இயக்கவியலின் (THERMODYNAMICS ) விதிகளின் படி அது சாத்தியம் இல்லை..எப்போதும் "வேலை (W)= கொடுக்கப்பட்ட ஆற்றல்(Q ) - வெப்பம்(U ) ஆகவே இருக்கும்

இது விதிகளின் படி சாத்தியமே இல்லை என்றபோதும்
அறிவியலின் வரலாற்றில் நிறைய பேர் இதற்காக மெனக் கெட்டிருக்கிரார்கள்.

PMM இல் மூன்று வகைகள் உள்ளன..

ஒன்று: வெளியில் இருந்து எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்குபவை..

இரண்டு: தனக்குக் கொடுக்கப்படும் எல்லா ஆற்றலையும் வீணாக்காமல் மாற்றுபவை

மூன்று: உராய்வு (FRICTION ) இன்றி இயங்குபவை.

நூற்றுக் கணக்கான PMM மாடல்கள் உள்ளன..அவற்றையெல்லாம் புரிந்து கொள்வதற்கு நாம் மினிமம் ஒரு பி.ஹெச்.டி. செய்திருக்க வேண்டும்..சில எளிமையான மாடல்களை மட்டும் இங்கே கொடுக்கிறேன்...

முதலில் எளிமையான ஒரு மாடல்..

படத்தில் காட்டியிருப்பது போல ஒரு வலுவான காந்தம் ஒரு இரும்பு குண்டை சரிவின் வழியாக மேலே இழுக்கிறது. காந்தத்திற்குப் பக்கத்தில் ஒரு துளை இருப்பதால் குண்டு கீழே விழுந்து விடுகிறது. கீழே விழுந்த வேகத்தைப் பயன்படுத்தி கீழே உள்ள சரிவில் இறங்கி மீண்டும் முதல் துளை வழியே மேலே ஏறுகிறது..மீண்டும் காந்தம் அதை இழுக்கிறது,,,மீண்டும் துளை..இப்படியே குண்டு காலம் காலமாக இயங்கிக் கொண்டிருக்கும்..ஆகா நல்ல ஐடியா..வெயிட்..இது வேலை செய்யாது...ஏனென்றால் பந்து கீழே விழுந்து மீண்டும் மேலே ஏறுகிறதே? அப்போது அதற்கு ஒரு சிறிய அளவு வெளிப்புற ஆற்றல் தேவைப்பட்டால் தான் அது துளையின் வழியாக மேலே ஏறுமாம்..அதாவது சிறிய பேட்டரி மூலம் இயங்கும் ஒரு கையை (ARM ) வைத்து பந்தை கொஞ்சம் மேலே தள்ளிவிடுவது..இல்லையென்றால் பந்து சந்திக்கும் உராய்வு அதை மேலே ஏறுவதற்கு முன் தடுத்து நிறுத்தி "கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா" என்று நிறுத்தி விடும்..அல்லது பந்து காந்தத்தால் இழுக்கப்பட்டு துளையில் விழாமல் அப்படியே போய் ஒட்டிக் கொண்டு விடும்..



அடுத்ததாக 'unbalanced wheel ' எனப்படும் எப்போதும் சமநிலை பெறாத சக்கரம் ..கீழே காட்டியுள்ளது போல...சக்கரத்தின் வலது புறம் பாருங்கள், சக்கரத்தின் மையத்திற்கும் குண்டிற்கும் உள்ள தூரம் அதிகமாக உள்ளது. சக்கரத்தின் இடது புறம் இந்த தூரம் குறைவாக உள்ளது. இதனால் இந்த சக்கரம் பாலன்ஸ் செய்யப்படாமல் உள்ளது. எனவே ஒரு முறை சுற்றி விட்டு விட்டால் விஷ்ணு பகவானின் சுதர்ஷன சக்கரம் மாதிரி இது எப்போதும் சுழலும் ...ஆனால் சுழலவில்லை..ஏன் சுழலவில்லை என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.


அடுத்ததாக நீங்கள் DRINKING BIRD எனப்படும் 'குடிக்கும் பறவையைப் 'பார்த்திருக்கக் கூடும்..படம் கீழே...அது நிற்காமல் தண்ணீர் குடிக்கிறது..பின்னர் மேலே எழுகிறது.பின்னர் மீண்டும் குனிந்து குடிக்கிறது... இது ஒரு வகையில் பார்த்தால் நம்மால் சாத்தியமான ஒரு PMM என்று சொல்லலாம்..

இது ஒரு வெப்ப இயந்திரம். ஒரு கண்ணாடிக் குழாய் (பறவையின் உடல்) இரண்டு ஒரே அளவான கண்ணாடிக் குமிழ்களை இணைக்கிறது. கண்ணாடிக் குமிழ்களில் இருந்து காற்று நீக்கப்பட்டுள்ளது. பறவை மெத்திலீன் குளோரைட் எனப்படும் எளிதில் ஆவியாகும் ஒரு திரவத்தால் நிரப்பப்படுகிறது. பறவையின் மூக்கு தண்ணீரை சுலபமாக உறிஞ்சும் ஒரு வகை சவ்வினால் செய்யப்பட்டுள்ளது. முதலில் பறவையின் மூக்கை நன்றாக ஈரம் செய்தோம் என்றால் அந்த ஈரம் மெதுவாகக் காற்றில் ஆவியாக ஆரம்பிக்கிறது. இதனால் பறவையின் தலைப்பாகம் குளிர்கிறது. (ஆவியாவதற்கு வெப்பம் செலவாகி விடுவதால்)இது உள்ளே இருக்கும்
மெத்திலீன் குளோரைட் ஆவியை படிமம் ஆக்குகிறது (condense ) சில சமயங்களில் நீராவி குளிர்ந்து உங்கள் பாத்ரூம் கண்ணாடி மீது அழுக்கு மாதிரி படியுமே அதுமாதிரி! வெப்பவியல் விதிகளின் படி வெப்பநிலை குறைந்தால் அங்கே அழுத்தமும் குறையும்..திரவ விதிகளின் படி திரவம் அழுத்தம் அதிகமான இடத்தில் இருந்து அழுத்தம் குறைவான இடத்திற்குப் பாயும்..அது மேலே இருந்தாலும்..எனவே பறவையின் அடிப்பாகத்தில் உள்ள திரவம் அழுத்தத்தை சமன் செய்ய தலைக்கு வருகிறது...இப்போது தலை கனமாகி விடுவதால் பறவை குனிகிறது..குனியும் பறவையின் மூக்கு கோப்பையில் உள்ள நீரை உறிஞ்சி மறுபடியும் ஈரமாகிறது.பறவையின் அடிப்பாகத்தில் இருந்த ஆவி தலைக்கு விரைகிறது தலையில் இருந்த திரவம் மீண்டும் மேலே ஏறி அடிப்பாகம் கனமாகிறது பறவை மேலே எழுகிறது ..cycle repeats ..

ஒரு குறிப்பு..அமெரிக்கா போனால் இந்த பொம்மையை வாங்கி வந்து உங்கள் குழந்தைகளுக்கு ஆசையாக விளையாடக் கொடுத்து விடாதீர்கள்..கண்ணாடி உடைந்தால் உள்ளே இருக்கும் திரவம் தோலைப் பதம் பார்த்து விடும் ஜாக்கிரதை..

அடுத்து FLOAT BELT எனப்படும் ஒரு மாடல்..

திரவங்களுக்கு இயற்கையாகவே உள்ள ஒரு பண்பு அதில் போடப்படும் பொருட்களை மேலே தூக்கி விடுவது(Buoyancy )..இதை சாதகமாக்கிக் கொண்டு உருவாக்கியது தான் இந்த மாடல்.




இதில் மிதக்கும் பந்துகள் ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்டுள்ளன..திரவம் அந்த பந்துகளில் ஒன்றை buoyancy தத்துவத்தின் படி மேலே தூக்கி விடும். இதனால் எல்லா பந்துகளும் கொஞ்சம் நகர்ந்து அடியில் உள்ள இன்னொரு பந்து திரவத்தினுள் நுழையும்.. அதையும் திரவம் தூக்கி விட இப்படியே போய்க் கொண்டிருக்கும்..வெயிட் , இதுவும் வேலை செய்யவில்லை..ஏனென்றால் பந்து திரவத்தில் நுழையும் போது அந்த 'கேப்' வழியாக திரவம் கசிவதை நிறுத்த முடியவில்லை..மேலும் பந்தை உள்ளே நுழைக்கத் தேவையான ஆற்றல் திரவம் பந்தை மேலே தூக்கும் ஆற்றலை விட அதிகமாக இருந்தது..


கடைசியாக இன்னொரு மாடலைப் பார்க்கலாம்.
Brownian ratchet என்று இது அழைக்கப்படுகிறது.ஒரு திரவத்திலோ வாயுவிலோ அதன் மூலக்கூறுகள் வெறுமனே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் என்று முதலிலேயே அணு அண்டம் அறிவியலில் பார்த்திருக்கிறோம். இதை பிரௌனியன் இயக்கம் என்பார்கள்.படத்தைப் பாருங்கள்..




இதில் ஒரு கியர் தெரிகிறது அல்லவா? அது ஒரு திசையில் மட்டும் நகரும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கியர் இன்னொரு paddle wheel என்று அழைக்கப்படும் ஒரு சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, அந்த பேடில் வீல் ஒரு திரவத்தினுள் முங்கி வைக்கப்பட்டுள்ளது. திரவத்தின் மூலக்கூறுகள் பேடில் வீலின் பக்கங்களை விடாது மோதுகின்றன. இதனால் அது சுழன்று (இந்த சக்கரங்கள் ரொம்பக் குட்டியாக இருப்பதால் சுழலுமாம்!) அதனுடன் இணைக்கப்பட்ட கியரும் சுழல்கிறது. கியர் ஒரு திசையில் மட்டும் சுழல்வதால் அதை வைத்துக் கொண்டு ஒரு சிறிய வெயிட்டைத் தூக்க முடியும்.

சரி இதுவும் சின்சியராக ஏனோ வேலை செய்யவில்லை. உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே என்று அப்படியே அசையாமல் நின்று விட்டது.

இந்த அமைப்பின் இரண்டு பகுதிகளும் வெவ்வேறு வெப்பநிலையில் இருந்தால் மட்டுமே இது வேலை செய்யுமாம்.

எவ்வளவு தான் தோல்வி அடைந்தாலும் இன்னும் நிறைய பேர் இதற்காக ராப்பகலாக உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.இன்னும் சில பேர் ரொம்ப சாதுர்யமாக கஷ்டமான டிசைன் எல்லாம் செய்து ஸ்க்ரூ, பைப்புகள், கியர் என்று இஷ்டத்திற்குப் போட்டு ஆய்வு செய்ய வருபவர்களை மயங்கி விழச் செய்யும் அளவு ஏதேதோ செய்கிறார்கள்.பார்க்க படம்..


என்ன தான் நாம் தலைகீழாக நின்றாலும் இந்த
perpetual motion machines எல்லாம் வெறுங்கையில் முழம் போடுவது, மந்திரத்தால் மாங்காய் விழவைப்பது போல psudo science தான்..
இதை வடிவமைப்பதற்கு நாம் இயற்கையின் நிறைய விதிகளை மீற வேண்டும்..ஆற்றலை நாமாக உருவாக்க முடியாது, வெப்பம் குளிர்ந்த இடத்தில் இருந்து சூடான இடத்துக்குப் போகாது போன்ற அடிப்படையான விதிகள்..நாம் போன அத்தியாயத்தில் பார்த்த மாதிரி நியூட்டன் விதியின் படி எந்த ஒரு பொருளும் ஒரு முறை இயக்கத்தில் செலுத்தப்பட்டு விட்டால் நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும்..இது ஒரு விதத்தில் perpetual motion தான்..ஏன் நம் பூமி சூரியனை சுற்றுவது கூட perpetual motion தான்..ஆனால் இதை வைத்து ஏதாவது உருப்படியான வேலை செய்யலாம் என்றால் உராய்வு, காற்றின் தடை, ஈர்ப்பு விசை போன்ற சமாச்சாரங்கள் குறுக்கே வந்து தடுத்து விடுகின்றன...


~சமுத்ரா



Sunday, January 23, 2011

இந்தக் கவிதைக்கு இரண்டு முடிவுகள்!

அறிவியலை எழுதினேன்
சுஜாதாவின் நடை போல் இருக்கிறது என்றார்கள்..

ஆன்மீகத்தை எழுதினேன்
பாலகுமாரன் சாயல் தெரிகிறது என்றார்கள்..

சமூகத்தைப் பற்றி சாடி எழுதினேன்
ஞானியின் வாடை வீசுகிறது என்றார்கள்..

மர்மக் கதை ஒன்று எழுதத் துணிந்தேன்..
இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியது என்றார்கள்..

துப்பறியும் கதை ஒன்றை தொடங்கத் துணிந்தேன்
ராஜேஷ் குமாரின் காப்பி என்றார்கள்..

சரித்திரக் கதை ஒன்று சொல்லலாம் என்றால்
சாண்டில்யனின் சாயல் என்றார்கள்..

(இந்தக் கவிதைக்கு இரண்டு முடிவுகள்..எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்)

1 .

பிறகு

யாருக்கும் புரியாதபடி ஏதேதோ கிறுக்க ஆரம்பித்தேன்
ஆகா
"என்ன தனித்துவமான நடை!" என்றார்கள்...

2.

ஒப்புக் கொள்கிறேன்,

எனக்கே உரியதாய்
நான் மட்டும் சொந்தம் கொண்டாடுவதாய்
என் தனித்துவத்தின் அடையாளமாய்
என்-
மௌனம் மட்டுமே இருக்கிறது..
அதை
எப்படி
எழுத்தில் வடிப்பது என்று
யாரேனும் கூறுங்கள்....


முத்ரா

Friday, January 21, 2011

செய்ததெல்லாம் மறந்தாயோ?(சிறுகதை)


காமு சமைத்து வைத்து விட்டு வெகு நேரம் காத்திருந்தாள்..மணி எட்டு ஆனது..ஒன்பது ஆனது...ரைஸ் மில்லின் ஒன்பதரை சங்கு கூட ஊதி விட்டது..இன்னும் அந்த மனுஷனைக் காணவில்லை...காமுவுக்கு ஆத்திரம், அழுகை, வேதனை எல்லாம் ஒன்று திரண்டு கண்ணீராக வெளிப்பட்டது...

சரியாக பத்து மணிக்கு சந்துரு உள்ளே வந்தான்..கால் கழுவிக் கொண்டு வந்து "காமு, பசிக்குது , சாப்பாடு எடுத்து வை" என்றான்.

"இங்கே ஒருத்தி சாப்பிடாம உங்களுக்காக காத்திருக்கேன்ற நெனைப்பே இல்லையா உங்களுக்கு..வீட்டுக்கு வர நேரமா இது? போஸ்ட் ஆபீஸ் ஆறு மணிக்கே மூடியிருக்குமே இது வரைக்கும் எங்க போனீங்க"? என்றாள்..அவள் முகம் எந்த சலனத்தையும் காட்டாமல் இருந்ததில் இருந்து ஏதோ ஒரு வழக்கமான பதிலை அவனிடமிருந்து எதிர்பார்ப்பது போலத் தோன்றியது..

"சாரி காமு, இன்னிக்கு டவுன் ஹால்ல ரஞ்சனி- காயத்ரி கச்சேரி ஆறு மணிக்கு...நான் போறதுக்கே ஏழு ஆயிருச்சு..உட்காரக் கூட இடம் கிடைக்கலை..அப்படியே நின்னுட்டே கேட்டேன்..அஹா அற்புதம்..நாட்டக் குறிஞ்சில 'வழி மறைத்திருக்குதே' ன்னு என்னமா உருகி உருகி பாடினா தெரியுமா? " என்றான் சந்துரு..ஒரு நொடியில் அவன் முகம் பரவசமாக மாறியிருந்தது.."அப்புறம் அந்த காம்போதியை"..

"போதும் ...வருஷம் முன்னூத்து அறுபத்தஞ்சு நாளும் கச்சேரி, கல்யாணி, காம்போதி இதே தானா? உங்க ப்ரோமோஷன் விஷயமா சுகுமாரைப் பார்க்கச் சொன்னேனே, அது என்னாச்சு?"என்றாள்

"அவன் லஞ்சம் கேட்கறாண்டி.. அன்னைக்கே சொன்னேன்ல.."

தட்டில் சாம்பார் ஊற்றிக் கொண்டே காமு தொடர்ந்தாள்..."லஞ்சம் கேட்கத்தான் செய்வான்..நாம தான் காரியம் ஆகணும்னா நாலு இடத்துல அர்ரெஞ் பண்ணிக் குடுக்கணும்.. ஏன் நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க?..நான் என்ன காரு பங்களாவா கேட்டேன்?..மத்த பெண்கள் சொல்றது மாதிரி நானும் என் புருஷன் நல்ல வேலைல இருக்கார்னு சொல்லிக்க ஆசைப்படறது தப்பா சொல்லுங்க "? என்றாள்.அவள் கண்கள் பனித்திருந்தன...

சந்துரு எதுவும் பேசவில்லை..

சந்துரு மற்றும் காமுவின் இடையே கடந்த பல வருடங்களாக இதுமாதிரி தான் சம்பாஷாணைகள் இருக்கின்றன...கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகப் போகிறது..குழந்தைகள் இல்லை..இன்னும் சந்துருவுக்கு போஸ்ட்-ஆபீசில் மெயில்-பேக் கலெக்ட் செய்யும் நிரந்தரமில்லாத வேலை தான்..ஆனால் சந்துருவிற்கு சங்கீதத்தில் அபார ஞானம்..
குடும்ப சூழ்நிலை காரணமாக முறையாகக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் கேள்வி ஞானத்தால் ஒரு கச்சேரியே செய்யக் கூடிய அளவு உயர்ந்திருந்தான்..சந்துருவின் உலகம் எல்லாம் காலை எட்டு மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டியது..மத்தியானம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பாட்டு..மீண்டும் மூன்று மணி ட்யூட்டி..ஆறரை மணிக்கு வந்தால் ரேடியோவை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போய் விட வேண்டியது..பதினொரு மணிக்கு ஹிந்துஸ்தானி எல்லாம் கேட்டு விட்டு கீழே வந்து தான் சாப்பாடு..அப்புறம் ஸ்ரீராம நவமி, நவராத்திரி, மார்கழி என்று வருடம் தவறாமல் நடக்கும் கச்சேரிகளுக்கு சென்று விட்டு மெய்மறந்து போவது..

காமு ஒரு சராசரிப் பெண்..சங்கீதத்தில் எல்லாம் அவ்வளவாக ஈடுபாடு இல்லை..இல்லறத்தின் கனவுகளோடு
ம் ஆசைகளோடும் வாழும் ஒரு சராசரிப் பெண்..தன் கணவன் மற்றவர்களைப் போல் இல்லையே என்ற குறை அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

சந்துரு அவள் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்கிறபடி தெரியவில்லை.. "புருஷங்க மாதிரி எங்கையாவது வெளில கூட்டிட்டுப் போறீங்களா? ஒரு ஸ்கூட்டர் உண்டா? சினிமா உண்டா? ரெண்டு மாசம் வாடகை பாக்கி ஞாபகம் இருக்கா? "என்று அவள் ஆராம்பித்தால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவது அவன் வழக்கம்..

அன்றைக்கு எப்படியோ அந்த கசப்பான சம்பவம் நடந்து விட்டது..

காமு தன் தூரத்து சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் நடந்த குழந்தையை தொட்டிலில் போடும் விழாவுக்கு போயிருந்தாள்..பாவம் அவளுக்கும் எத்தனை நேரம் தான் வீட்டிலேயே இருந்து கொண்டு பக்கத்து வீட்டில் இரவல் தரும் பழைய பத்திரிக்கைகளைப் படித்துக் கொண்டிருப்பது? தன்னிடம் இருந்த சேலைகளிலேயே சுமாரான ஒன்றையும் இருந்த சொற்பத் தங்கத்தையும் அணிந்து கொண்டு சென்றாள்..

யாரும் அவளைக் கண்டு கொள்ளக் கூட இல்லை.."வா காமு" என்று அழைத்ததோடு சரி..அதெல்லாம் அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை..அந்தப் பெண்களின் கணவர்கள் பேங்குகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் உயர்ந்த பதவிகளில் இருக்கக்கூடும்..இதெல்லாம் அவளுக்கு சகஜம் தான்..

காமு குழந்தையை வாரி அணைத்து மார்போடு வைத்துக் கொஞ்சி விட்டு ,கொண்டு வந்திருந்த பத்து ரூபாயை அதன் கைகளில் திணித்தாள்..வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு புறப்பட்டபோது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது: "அலமேலு, குழந்தைக்கும் அவன் அம்மாவுக்கும் நல்லா திருஷ்டி சுத்திப் போட்டுடு..மலடி கண்ணு முண்டக் கண்ணு எல்லாம் நல்லா கழியட்டும் " என்று...

அதைக் கேட்டு விட்ட காமுவுக்கு உலகமே பின்னால் இடிந்து விழுவது போல இருந்தது..அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் வீட்டுக்கு வந்தாள்..தனக்கு ஒரு குழந்தையைக் கூட தர முடியாமல் சங்கீதத்தைக் கட்டிக் கொண்டு அழும் கணவன் மேல் எரிச்சலாக வந்தது..சமைக்கக் கூடத் தோன்றாமல் அழுது கொண்டே இருந்தாள்..

வழக்கம் போல கணவன் கச்சேரி எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்த வீட்டில் சில அசாதாரண சம்பவங்கள் அரங்கேறின..பத்து வருடமாகப் போட்டு
ப் புழுங்கிக் கொண்டிருந்த எல்லாவற்றையும் அவன் முன் போட்டு உடைத்தாள் காமு ..கணவனின் ஆண்மையை சந்தேகித்தாள்..என்னென்னவோ பேசி விட்டாள்..

சந்துருவுக்கு அவளுக்கு ஏதோ பேய் பிடித்து விட்டது போலத் தோன்றியது..எதுவும் பேசாமல் நிதானமாக மாடிக்கு
ச் சென்று ரேடியோவை ஆன் செய்தான் ..ரேடியோவில் தோடி இனிமையாகக் கசிந்து வந்தது...ஆனால் காமு மாடிக்கும் வந்து விட்டாள்..அவனது அருமை ரேடியோ தரையில் ஆக்ரோஷமாக வீசப்பட்டு உடைக்கப்பட்டது ..அவன் அரும்பாடு பட்டு எழுதி வைத்திருந்த பாட்டு நோட்டுகள் கிழித்து வீசப்பட்டன..

அன்றைய இரவு அவர்கள் இருவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத கசப்பான இரவாக இருந்தது..

காலையில் ஏழு மணிக்கு தான் காமு எழுந்திரித்தாள்..நேற்று இரவு நடந்து கொண்டதை நினைத்து அவளுக்கு வெட்கமாக இருந்தது..ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டோம் ..முதலில் சென்று கணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..கல்லானாலும் கணவன் அல்லவா? என்று நினைத்துக் கொண்டு காபி போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்..
அவனுக்கு சன்ரைஸ் பிடிக்கும் என்பதால் அவசர அவசரமாகக் கடைக்குப் போய் சன்ரைஸ் வாங்கி வந்தாள்..

மாடியில் சந்துருவின் படுக்கையில் அவனுக்குப் பதில் ஒரு கடிதம் தூங்கிக் கொண்டிருந்தது..

"அன்புள்ள காமுவுக்கு...இது நாள் வரையிலும் நான் உனக்கு எவ்வளவு தொந்தரவாக இருந்திருக்கிறேன் என்பதை நேற்று இரவு தெரிந்து கொண்டேன்..ஏனோ நம் பாதைகள் ஒத்துப் போகவில்லை..எனவே நான் போகிறேன்..கவலைப்படவேண்டாம்..உனக்கு மலடி என்ற பட்டத்தை
த் தந்த நான் விதவை என்ற பட்டத்தையும் தரமாட்டேன்..உயிரோடு தான் இருப்பேன்..இனி என் சங்கீதம் தான் என் வாழ்வு..என்னைத் தேட முயற்சிக்க வேண்டாம்...நேற்று இரவே ரயில் ஏறி விட்டேன்..உன்னை விட்டு வெகு தூரம் போகிறேன்.."

காமு அந்த இனிய காலைப் பொழுதின் நிசப்தத்தைக் கலைக்கும் படி ' ' என்று அலறினாள்..

-
--
---
----
-----
------
-------
--------
---------
----------

என்ன இது ? ஆமாம் பத்து வருடங்கள் உருண்டு ஓடி விட்டன பாருங்கள்..


சரஸ்வதி கான சபாவின் வாசலில் அழுக்கு உடைகளுடனும் மழிக்கப்படாத தாடியுடனும் ஒரு பெரியவர் வந்து நின்று தயங்கி
த் தயங்கி உள்ளே போகிறார்...செக்யூரிட்டி அவரைத் தடுத்து டிக்கெட் கேட்கிறார்..அவர் டிக்கெட் இல்லை என்கிறார்.."ஏன்யா இப்படி சாவுகிராக்கிஎல்லாம் வந்து உயிரை வாங்கறீங்க...இங்கே சாப்பாடு எல்லாம் போடமாட்டாங்க போங்க" என்கிறார் செக்யூரிட்டி..அப்போது உள்ளே நுழையும் ஒருவர் அந்தப் பெரியவரையே உற்றுப் பார்க்கிறார்..ஏதோ கேட்டு விட்டு அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார்....செக்யூரிட்டியை கண்களால் கண்டிக்கிறார்..

உள்ளே கூட்டம் என்றால் அவ்வளவு கூட்டம்..மக்கள் காமாட்சி சந்திரசேகரனின் பாட்டைக் கேட்க ஆவலாய்க் காத்திருந்தார்கள்..

காமாட்சி சந்திரசேகரன் மேடையில் வந்து அமர்ந்ததும் கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது...எளிதான உடைகளுடன் ஒரு சன்யாசினி போலத் தோன்றினார் அவர்..

இறைவனைக் கண் மூடி வணங்கி விட்டு மெல்லிய குரலில் அவர் பேச ஆரம்பித்தார்..."நான் இன்று உங்கள் மனம் கவர்ந்த பாடகியாக உங்கள் முன் அமர்ந்திருப்பதற்குக் காரணம் என் கணவர் தான்..நான் பெரிய சங்கீத பரம்பரையில் பிறக்கவில்லை..சங்கீதத்தில் ஈடுபாடு காட்டவும் இல்லை..மாறாக சங்கீதத்தையும் அதை உயிராக நினைத்திருந்த என் கணவரையும் வெறுத்தேன்..சாதாரணப் பெண்கள் போல உலக ஆசைகளில் சிக்கிக் கொண்டு சங்கீதம் என்ற அருமையான கலையின் மீது துவேஷம் காட்டினேன்..இதனாலேயே நான் என் அருமைக் கணவரைப் பிரிய நேரிட்டது..அவர் பிரிந்ததும் நான் விரக்தியில் குளத்திலோ கிணற்றிலோ விழுந்து வாழ்வை முடித்துக் கொண்டிருக்க முடியும்.ஆனால் அன்று ஒரு உறுதி எடுத்துக் கொண்டேன்..அன்றிலிருந்து என் வாழ்க்கை நூற்று-எண்பது கோணத் திருப்பம் கண்டது..சங்கீதம் என் உயிரானது..என் வாழ்க்கையை சங்கீதத்திற்கு அர்பணித்தேன்..என் ஆசைகளைத் துறந்து சங்கீதத்தின் மீது பைத்தியமாகி அசுர சாதகம் செய்தேன்..எந்த சங்கீதத்தால் நான் என் கணவனை இழந்தேனோ அதே சங்கீதம் அவரை எனக்கு ஒருநாள் மீட்டுத் தரும் என்று திடமாக நம்புகிறேன்..அன்று எங்களுக்குக் குழந்தை இல்லை என்று அவரைக் குறை கூறினேன்..இன்று சொல்கிறேன் அவர் எங்கிருந்தாலும் இதை இறைவன் அவரது செவிகளில் கொண்டு சேர்க்கட்டும்...எங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல..நூற்றுக் கணக்கான குழந்தைகள்.. சாருகேசி ஒரு குழந்தை..பைரவி ஒரு குழந்தை,ரஞ்சனி ஒரு குழந்தை,கல்யாணி ஒரு குழந்தை..தோடி ஒரு குழந்தை..ம்ம்..அன்று என்னைப் பிரியும் போது அவர் கடைசியாகக் கேட்டது தோடி..சரியாக பத்து வருடங்கள் முன்பு இதே நாளில்..இன்று அதையே நான் இங்கே பாடுகிறேன்..இந்தத் தோடி அவர் பாதங்களுக்கு சமர்ப்பணம்"

இவ்வாறு நிதானமாகப் பேசி விட்டு
காமாட்சி சந்திரசேகரன் தோடியை ஆரம்பித்தார்..

அவரது ஆலாபனையில் அந்த அரங்கமே கட்டுண்டு கிடந்தது..

தோடியில் "ஜேஸினதெல்லா மறசிதிவோ" (செய்ததெல்லாம் மறந்தாயோ?) என்ற த்யாகராஜர் கீர்த்தனையை ஆரம்பித்தார்...

ஹாலின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்தப் பெரியவரின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடிக்கொண்டிருந்தது..



~சமுத்ரா





Thursday, January 20, 2011

கலைடாஸ்கோப்-4

லைடாஸ்கோப்-4 உங்களை வரவேற்கிறது..

ஏற்பது இகழ்ச்சி
==============

கொடுமையானது என்னவென்றால் தனியாக இருப்பது. அதை விட கொடுமையானது ஒருவருக்கு மட்டும் சமைத்து சாப்பிடுவது..ம்ம்.என்ன செய்வது? சரி வீட்டு ஒனரின் தோட்டத்தில் நிறைய தக்காளி விளைகிறதே, கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டதற்கு 'இல்லை' என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்கள்..உண்மையிலேயே இல்லையா அல்லது வேண்டுமென்றே இல்லை என்று சொன்னார்களா என்பது இருக்கட்டும்..நான் சொல்ல வருவது என்னவென்றால் உயிர் போகிற அவசரம் என்று இருந்தால் மட்டும் அடுத்தவரிடம் எதையாவது இரவல் கேளுங்கள்.கடைக்கு போக சோம்பல்பட்டோ, இல்லை நிறைய ADVANTAGE எடுத்துக் கொண்டோ பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் 'காபிப்பொடி இருக்கா' 'கறிவேப்பிலை இருக்கா' என்று கேட்காதீர்கள். சில பேருக்கு இரவல் கேட்பது என்றால் என்னவோ 'வறுவல்' சாப்பிடுகிற மாதிரி..நியூஸ் பேப்பர், ஸ்க்ரூ டிரைவர், தயிர்,கடப்பாரை என்றெல்லாம்..சிலர் தங்கள் வீட்டு குழந்தைகளையும் இரவல் வாங்க அனுப்புவார்கள்..நாளை அவர்களுக்கும் அதே பழக்கம் தானே வரும்?

சில சமயங்களில் இந்த இரவல் உங்கள் 'இமேஜை' யே பாதித்து விடக்கூடும். அதே மாதிரி யாரிடமாவது பத்து நூறு கடன் வாங்கியிருந்தால் மறக்காமல் திருப்பிக் கொடுத்து விடுங்கள்..திருப்பிக் கொடுத்தால் வேண்டவே வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் 'என்ன ஒரு அலட்சியம்,பணத்தை வாங்கிய நினைப்பே இல்லை இவனுக்கு' என்று நினைக்கக் கூடும்..

நம் முன்னோர்கள் 'ஏற்பது இகழ்ச்சி' என்று இரண்டு வார்த்தைகளில் கூறியதன் ஆழத்தையும் அர்த்தத்தையும் நினைத்து வியக்கிறேன்..


எங்கே பொறுமை?
================

இப்போது நம்மிடம் இருந்து மறைந்து வரும் குணங்களில் 'பொறுமை'யும் ஒன்று..WHAT IS HAPPENING ? இன்றைய இளை
ர்களில் யாராவது ஒரே டி .வி. சேனலை ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்த்தால் அவருக்கு அவார்டே கொடுக்கலாம் போல இருக்கிறது..'அடுத்தது என்ன? அடுத்தது என்ன' என்று பறந்து கொண்டே இருக்கிறார்கள்..அந்தக் காலத்தில் எல்லாம் மூன்று மணி நேரங்களுக்குக் குறையாத கச்சேரிகளை மக்கள் நகராமல் கேட்டு ரசித்திருக்கிறார்கள்..அதுவும் ஒரே ராகம்..அதுவும் சங்கராபரணம் போன்ற இழுவை ராகங்களை..சில சமயங்களில் பாடகர் 'மந்தர' (கீழ்) ஸ்தாயியில் நீண்ட நேரம் பாடுவார்...என்னவோ பாடகர் தூங்கி விட்டு குறட்டை விடுவது போல இருக்கும். இப்போதெல்லாம் 'பாஸ்ட் பீட்' டில் வரும் சினிமா குத்துப் பாடல்களைக் கூட மூன்று முறைக்கு மேல் யாரும் கேட்பதில்லை..எல்லாம் 'இன்ஸ்டன்ட்' ஆக வேண்டும் இன்றைக்கு..'க்யூவில்' நிற்பது என்பது இன்றைய உலகில் ஒரு பாவகாரியம்.டிக்கெட் புக் செய்வது, பில் கட்டுவது எல்லாமும் ஆன்லைனிலேயே' வந்து விட்டது ஒரு விதத்தில் நல்லது தான். ஆனால் இந்த 'ஆன்லைன்' நம்மிடம் இருந்து பொறுமை என்ற அரிய குணத்தை எடுத்துக் கொண்டு விட்டது. கோயில்களில் கூட ஸ்பெஷல் தரிசன டிக்கெட் எடுத்துக் கொள்கிறோம்..நீண்ட நேரம் நின்று, கால் கடுத்து, கஷ்டப்பட்டு கடைசியில் இறைவனை தீப ஜோதியில் தரிசிக்கும் பேரானந்தத்தை நாம் 'இன்ஸ்டன்ட் தரிசனத்தில்' இழந்து விடுகிறோம்..

ஒரு ஜோக் நினைவில் வருகிறது...பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் அடுத்த பகுதிக்கு போகவும்..

ஒரு அமெரிக்கப் பெண்ணும் பிரெஞ்சுப் பெண்ணும் பேசிக்கொள்கிறார்கள்..

அமெரிக்கப் பெண் பிரெஞ்சுப் பெண்ணைப் பார்த்துக் கேட்கிறாள்: 'உன் கணவர் உன்னிடம் எப்படியெல்லாம் காதல் செய்வார்?'

பி.பெ: ம்ம்..முதலில் என் நெற்றியில் முத்தம் தருவார்..பின் மெதுவாக கண்களில், பிறகு கன்னத்தில், உதட்டில்,பின் கழுத்தில்..

.பெ: வெயிட் ...இதற்குள் நாங்கள் 'ஹனிமூனை' முடித்து விட்டுத் திரும்ப வந்திருப்போம்..

நாமெல்லாம் மெல்ல மெல்ல அமெரிக்கர்களாக மாறி வருகிறோம்
இளைர்களே!

கொஞ்சம் இசை
=============

அடுத்த வாரம் திருவையாறு தியாகராஜ ஆராதனை வருகிறது.பஞ்சரத்ன கீர்த்தனைகளை கேட்கும் போது கர்நாடக அரசு பவர் கட் செய்யாமலிருக்க கடவுளை வேண்டுகிறேன்.. ஆந்திராவில் எல்லாரும் 'தெலுங்கானா' 'அரசியல்' லொட்டு லொசுக்கு' என்று வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இங்கே நாம் பக்தி மயமாக 'எந்தரோ மகானு பாவுலு' என்று தெலுங்கில் பாடுவது நமக்கெலாம் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்..

இந்த கருப்பு சட்டைகள் தொல்லை தாங்க..
====================================

சபரிமலை விபத்து நடந்ததை சாக்காக வைத்து இப்போது ஒரு கோஷ்டி 'ஐயப்பன் பொய்யப்பன்' 'எரி மேடு எமன் மேடு' என்றெல்லாம் கிளம்பியிருக்கிறது ..(யூனிபார்ம் 'மேட்ச்' ஆனாலும் உணர்வுகள் 'மேட்ச்' ஆகவில்லை..) என்னவோ கடவுள் பக்தி கொண்டவர்கள் சாகவே கூடாது என்பது போல..போதுமான வசதி செய்து தராத அரசாங்கத்தை கண்டிப்பதை விட்டு விட்டு 'சிவனே(?)' என்று அமர்ந்திருக்கும் ஐயப்பனை வசைபாடுகிறார்கள். of course , இப்படி கூட்டத்தில் நசுங்கிக் கொண்டு மகர ஜோதியை தரிசிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை..உள்ளே இருக்கும் ஒளியைக் கண்டு கொள்ளாதவர்கள் வெளியே ஆயிரம் மகரஜோதியை தரிசித்து என்ன பிரயோஜனம்? ஆன்மிகம் என்பது முற்றிலும் வேறு ஒரு பரிமாணம்...SO IS நாத்திகம்..சும்மா 'பார்பனர்களைத்' திட்டுவது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைக் 'காட்டு மிராண்டிகள்' என்று பேசுவது இது தான் நாத்திகம் என்று சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..'தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரனா' என்பது போல கருப்பு சட்டை போட்டவன், வெப் சைட்டில் பெரியார் படத்தைப் போட்டவன் எல்லாம் பகுத்தறிவாளன் இல்லை...(அப்பாடா பத்தி விட்டாச்சு!)

நாத்திகம் என்பது ஒரு REFINED ஆன சமாசாரம்..ராமாயணத்தில் கூட ஒரு நாஸ்திகர் வருகிறார்..ஆதி சங்கராச்சாரியார் ஒரு சூத்திரன் தன்னைத் தொட்டு விட்டதும் 'போச்சு மறுபடியும் குளிக்கணும்' என்கிறார்..அதற்கு அவன் 'தீட்டு உங்களுக்கா இல்லை உள்ளே இருக்கும் ஆத்மாவுக்கா' ? தீட்டு படும் என்றால் அது ஆன்மாவே இல்லை' என்கிறான்..இதைப் போன்ற ஒரு புத்திசாலித்தனமான வாதத்தை இதுவரை எந்த கருப்பு சட்டையிடமும் நான் கேட்டதில்லை..

மேலும் இந்த நாத்திகர்கள் தான் கடவுளைப் பற்றி அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..பாகவதத்தில் ஒரு கதை..விஷ்ணுவின் வாயில் காப்பாளர்களான ஜய விஜயர்கள் ஒரு தவறு செய்து விட அதற்கு தண்டனையாக அவர்கள் பூலோகத்தில் பிறக்கும் படி முனிவர்களால் சபிக்கப்படுகிறார்கள்..பின் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும் விஷ்ணு 'சாபம் சாபம் தான், ஆனால் ஒரு கண்ஷஷன்..எனக்கு பக்தர்களாக நூறு பிறவிகள் வேண்டுமா? இல்லை எதிரிகளாக மூன்று பிறவிகள் வேண்டுமா? என்கிறார்..அதற்கு
ஜய விஜயர்கள் மூன்று பிறவிகள் எதிரிகளாக இருப்பதை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்போது தான் இறைவனை நிறைய நினைக்க முடியுமாம்..:)

பாவம் திருக்குறள்
================

ஒரு விஷயத்தையோ ஒரு ஆளையோ சரமாரியாக கண்டபடி புகழ்வது அவரை அலட்சியப்படுத்தும் வழிகளில் ஒன்றாம்.. (அப்பா, இனி மேல் 'அவனுக்கு மட்டும் எப்படி நூறு கமெண்டு வருது' என்று பதிவுலகில் யாரும் பொறாமைப்பட தேவையில்லை) மேலும் ஒரு பொருள் நமக்கு அதிகமாகக் கிடைத்தால் அதன் பெருமை நமக்குத் தெரியாது என்பார்கள்..இது திருக்குறளின் விஷயத்தில் ரொம்பவே உண்மை போலிருக்கிறது..காலையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு சானலில் ஒரு தாத்தா திருக்குறளை சொல்லிக் கொண்டிருக்கிறார்..பள்ளிகளில் ஆ, ஊ என்றால் ஒரு திருக்குறளை பரிசு கொடுத்து விடுகிறார்கள்..எனக்கு பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது ஒரு ஐம்பது தி.கு. சேர்ந்து விட்டது..எல்லாவற்றையும் லைப்ரரிக்கு தானம் (?) செய்து விட்டேன்..நல்ல நோக்கத்துடன் தான் கொடுக்கிறார்கள்..ஆனால் எத்தனை பேர் அதை பொறுமையாகப் பிரித்து படித்து குறளின் பெருமையை வியக்கிறார்கள்??

இதில் திருக்குறள் போட்டிகள் வேறு...'எஸ்.பி.பி ரேஞ்சுக்கு எல்லா குறளையும் மூச்சு விடாமல் சொல்வது, தலைகீழாக சொல்வது, உதடு ஒட்டாத குறளை சொல்வது, யானை எத்தனை குறள்களில் வருகிறது என்று கணக்கு பார்ப்பது என்று சின்னப் பிள்ளைத் தனமாக ...திருவள்ளுவர் சிலை வைப்பது, வள்ளுவர் கோட்டம் கட்டுவது என்று பாவம் அவரை ரொம்ப வம்புக்கு இழுத்து அவர் கூறிய அபாரமான கருத்துகளை மறந்தே போய் விட்டோம்..'எல்லாம் எனக்குத் தெரியாததா அவர் சொல்லிட்டார் ?' என்ற அலட்சியமா?

யாரையாது கோபத்துடன் 'நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' என்று ஆரம்பித்து திட்டத் தொடங்கும் முன் 'யாகாவார் ஆயினும்' என்ற குறளை தமிழர்கள் நினைத்துக் கொண்டால் எத்தனை நன்மைகள் நடந்திருக்கும்?

ஒரு சந்தேகம்
============

சில blog - குகளில் என்னால் கமெண்டு போட முடியவில்லை..'Subscribe to post comment ' என்று வருகிறது..அது என்ன? (இது கூடத் தெரியவில்லையா என்று கேட்க வேண்டாம்..எனக்கு கம்ப்யூட்டர் என்றாலே அலர்ஜி..)

நிறைய சீரியஸ் ஆன விஷயங்களைப் பேசி விட்டோம்..இப்போது ஒரு ஜோக்:

ஓஷோ ஜோக்
============

ஒரு படகு முழுகும் நிலைமையில் இருந்தது..அதை ஓட்டிக் கொண்டிருந்தவர் 'இங்கே பிரார்த்தனை செய்யத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா' என்று கேட்டார்..ஒரு சாமியார் 'நான் இருக்கிறேன்' என்று உற்சாகமாக கை உயர்த்தினார் "அப்படின்னா நீங்க அப்படியே உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணுங்க...மீதி இருக்கறவங்க இந்த லைப் ஜாக்கெட்டைப் போட்டுக்கங்க...ஒண்ணு கம்மியா இருந்துச்சு" என்றார்..

கடைசியாக கே.பாலமுருகனின் ஒரு கவிதை
====================================


வீட்டு வாசலில்
உட்கார்ந்து கடந்த
எத்தனையோ மாலை பொழுதுகள்!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
பக்கத்து வீட்டு அம்மாயி அக்கா
தவறிப் போனாள்!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
வீட்டு நாய்க்குட்டி
எங்கேயோ ஓடிப் போனது!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
வீட்டின் எதிரிலிருந்த
மரம் சாய்ந்து போனது!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
அப்பா கயிற்று நாற்காலியில்
இறந்து கிடந்தார்!

எல்லாமும் ஒரு மாலை பொழுதில்
நிகழ்ந்து முடிந்து
விடுகிறதே!

அன்றென்னவோ. . .
மாலை பொழுதில்தான்
இரு பட்டாம்பூச்சிகள் வீட்டில்
பறந்து கொண்டிருந்தன!


முத்ரா