கோவணத்தாண்டி சொல்வது:விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர் வாயிலிற் சென்று கண்ணீர் ததும்பிப்
படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.
மறுநாள் இரவில் ஒன்பது மணி சுமாருக்கு நான்,விக்ரம்,சிவா, தரங்கிணி, நிமிஷா எல்லாரும் கழுகு மலைக்கு கிளம்பினோம் ஒரு டயோட்டாவை வாடகைக்கு எடுத்திருந்தோம் ...ஒரு டிரைவரையும் ஏற்பாடு செய்திருந்தோம்...நான் வீட்டில் பிசினஸ் விஷயமாக வெளியே போவதாகவும் வருவதற்கு ரெண்டு நாள் ஆகும் என்றும் கூறி இருந்தேன்....கோவில்பட்டி சென்று அங்கிருந்து கழுகுமலைக்கு செல்வதாக பிளான் செய்திருந்தோம்....கிட்டத் தட்ட எட்டு மணி நேரப் பயணம்....கோவில்பட்டியில் ஏதாவது ஹோட்டலில் தங்கி விட்டு மறுநாள் மத்தியானம் கழுகுமலைக்கு செல்வதாகப் பிளான்...
நானும் நிமியும் இரண்டாவது சீட்டிலும் , விக்ரமும் தரங்கிணியும் கடைசி சீட்டிலும் உட்கார்ந்து கொண்டோம்....சிவா டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்....டிரைவர் தூங்கி விடாமல் இருக்க பேசிக் கொண்டிருப்பதற்காக என்று சொன்னார்....
கார் கிளம்பியதும் தரங்கிணி ஆரம்பித்தாள் ...."மஹிதர், உங்க குல தெய்வத்த நல்லா வேண்டிக்கங்க...." என்றாள்....
பிரயாணத்தில் சாப்பிடுவதற்காக ஒரு bag முழுவதும் லேஸ், சிப்ஸ் கோக் எல்லாம் கொண்டு வந்திருந்தாள்...
"தரங், நாம என்ன பிக்னிக்கா போறோம்?" என்று கேட்டார் விக்ரம்....
"பாஸ், உங்க கூட அச்சிஸ்டண்டா இவ்ளோ நாள் இருந்ததற்கு இப்ப தான் சென்னையை விட்டு வெளில கூட்டிப் போறீங்க, சோ இதுவும் பிக்னிக் மாதிரி தான்" என்ற அவள் "பாஸ், இந்த ரிஸ்க் கண்டிப்பா எடுக்கணுமா" என்றாள்
சிவா இப்போது பேசினார்..."ரிஸ்க் எடுக்காம வாழ்க்கையே இல்லை தரங்கிணி...யாரோ பொடிப்பசங்க நம்ம கிட்ட விளையாடறாங்க.....அவங்களுக்கு "we should show who we are !"
கார் சீரான வேகத்தில் சென்னையின் நகர அறிகுறிகளைக் கடந்து கொண்டிருந்தது.....
"சரி மிஸ்டர் சிவா... நல்ல வேளை ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்கு சாப்பிடற மாரின்னு சொல்லி மொக்கை போடல நீங்க...எனக்கு ஒரு டவுட்டு...அவங்க மஹிதருக்கு மட்டும் தானே ஓலை அனுப்புனாங்க....நம்ம என்னவோ பொண்ணு பார்க்கப் போற கோஷ்டி மாதிரி இத்தனை பேர் போய் இறங்குனா அந்த ஆசாமி இல்லை சாமி டென்சன் ஆயிடாதா? " என்றாள் தரங்கிணி....ஒரு லேஸ் பாக்கெட்டை பாதி காலி பண்ணியிருந்தாள்....
"யா..யு ஆர் கரெக்ட்....இவ்ளோ நேரம் நம்ம இத்தனை பேர் இதில் இன்வால்வ் ஆகியிருப்பது கூட அவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்..ஆனா நம்ம ஸ்பாட்டுக்கு போனதும் மஹிதர் கூட சேர்ந்துட்டு நம்ம இவ்ளோ பேர் மூவ் பண்ணக்கூடாது...அதே சமயம் அவரை தனியாகவும் விடக் கூடாது...the enemy can be dangerous " என்றார்
நான் கழுத்தில் மாலை போடப்பட்டு இழுத்துச் செல்லப்படும் பலிகடாவாக உணர்ந்தேன்....தரங்கிணியைப் பார்க்க கொஞ்சம் எரிச்சலாக வந்தது....நானும் கொஞ்சம் எதிர் ஜோக் அடிக்கலாம் என்று "சார், என்ன வெச்சு எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே" என்றேன்..
தரங்கிணி பெரிதாகச் சிரித்து " வாவ், மஹிதர் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜோக் அடித்து விட்டார்..கிளாப் கிளாப் " என்றாள்
இது வரை சும்மா இருந்த நிமிஷா கொஞ்சம் கவலை கலந்த குரலில் சொன்னாள் " ஹலோ தரங்கிணி,,,, என்ன எப்பவும் உங்களுக்கு விளையாட்டு தானா? இது எங்க வாழ்க்கைப் பிரச்சனை...எனக்கு என்னவோ நாம முரட்டு தைரியத்துல தப்பான முடிவு எடுக்கறமோன்னு தோணுது..... பெட்டெர் வி கோ டு போலீஸ் நவ்" என்றாள்...
"போலீஸ்ல கனவை எல்லாம் ஆதாரமாக காட்ட முடியாது நிமிஷா " என்றாள் தரங்கிணி....
"அந்த , என்ன அது, ஓலை,,,அதான் பாழாய்ப் போன ஓலை இருக்கே,,,அப்பறம் அந்த பேப்பர்..இரண்டையும் வச்சுட்டு மிரட்டல் கேசுல அவங்கள உள்ள தூக்கிப் போட்டிருக்கலாம்....சாரி மிஸ்டர் விக்ரம்...சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க....மஹிதரோட வாழ்கையை நீங்க உங்க ரிசர்ச்சுக்காக யூஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்" என்றாள் நிமிஷா அழுத்தமாக ...அந்த நிமிஷம் அவள் என் மீது இவ்வளவு அக்கறை வைத்திருக்கிறாளா என்று வியந்தேன்.....இவளுக்காகவாவது நான் இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது மீள வேண்டும்....
விக்ரம் நிதானமாக பதில் கூறினார்....
"நிமிஷா,,, உங்க கவலை புரியுது....ஆனா மஹிதர் தான் ஹெல்ப் கேட்டு எங்களை அப்ரோச் பண்ணினார்....முதல்ல அவர் கனவு முழுக்க முழுக்க சைகாலஜிகல் ப்ராப்ளம்னு நினைச்சோம்...அப்பறம் அதுல மூணாவது நபர் யாரோ இருக்காங்கன்னு தெரிஞ்சது.... அவங்க இன்டன்ஷன் என்னன்னு தெரிஞ்சுக்க தான் இப்போ போறோம்....அவங்களுக்கு நம்மை காண்டாக்ட் பண்ண பல வழிகள் இருக்கு....கோவில் குங்குமப் பொட்டலம் கூட அவங்களுக்கு ஒரு மீடியா....ஆனா நமக்கு? அவங்க வர சொன்ன இடத்துக்குப் போய் தானே ஆகணும் .....இப் வி ஃபீல் சம்திங் இஸ் கோயிங் ராங், கண்டிப்பா போலிசுக்கு போவோம்....இதற்கு மேலும் நீங்க எங்கள் தலையீட்டை விரும்பலைன்னா, இப்பவே நாங்க இறங்கிக்கறோம்" என்றார்...
அவர் அப்படி எங்காவது இறங்கி விடுவாரோ என்று பயமாக இருந்தது.... விக்ரம் மற்றும் சிவா இருவரும் படித்தவர்கள்....அனுபவம் உள்ளவர்கள்.... அவர்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் இவ்வளவு தூரம் இயல்பாக இருக்கிறேன்...இல்லை என்றால்...
"நிமி சும்மா இரு....நமக்காக தானே அவங்க வேலையை கூட விட்டுட்டு இவ்ளோ தூரம் வராங்க" என்றேன்
"இட் இஸ் ஓகே மஹிதர் " என்ற விக்ரம் "அவங்க ஏதும் தப்பா சொல்லலையே...she is more concerned about you ...இந்த விஷயத்தை கொஞ்சம் உணர்ச்சி பூர்வமாக அணுகறாங்க அவ்வளவு தான்" என்றார்....
சிவா டிரைவரிடம் திரும்பி "டிரைவர்....ஏதாவது நல்ல ஹோட்டலா பாத்து டின்னருக்கு நிறுத்துங்க " என்று கூறி விட்டு "ஆமாம் நீங்க உங்க சொந்த ஊர் திருநெல்வேலின்னு சொன்னீங்களே, அந்த கழுகு மலையைப் பத்தி ஏதாவது விஷயம் தெரியுமா" என்று கேட்டார்...
"தெரியும் சார், ரெண்டு மூணு தடவை போயிருக்கேன்.... மகாபலிபுரம் மாதிரி பாறையைக் குடைஞ்சு செஞ்ச கோயில்கள் தான் எல்லாமே...பெரும்பாலும் ஜெயின்ஸ் கோவில்கள் சார்...
ஜெயின் மதத்தோட சாமியார்களை தத்ரூபமா சிலை வடிச்சிருப்பாங்க....அப்பறம் ஒரு பிரபலமான முருகன் கோவில் கூட இருக்கு...ஆமா சார் அங்கே எதுக்காக போறீங்க , ஏதாவது ஆராச்சிக்கா" என்றார் டிரைவர்
"கிட்டத்தட்ட அப்படிதாம்பா" என்றார் சிவா...
வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தொடர்ந்தோம்.... நெடுஞ்சாலை ஹோட்டல் என்பதால் சாப்பாடு யானை விலை சொன்னார்கள்....
மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு சங்கரன் கோவில் சென்றோம்.....எப்போது திரும்புவது என்பது உறுதியாகத் தெரியாததால் வண்டியை போகச் சொல்லி விட்டார் சிவா..... ஒரு லாட்ஜை எடுத்து பதினொரு மணி வரை தங்கினோம்...பயணக் களைப்பில் நன்றாக தூங்கி விட்டிருந்தோம்....
கழுகுமலைக்கு பஸ்ஸில் வந்து சேர்ந்த போது வெய்யில் அதிகம் இல்லாமல் இதமாக இருந்தது.... வயல் வெளிகளும் ,நீர் நிலைகளும் பாறைகளுமாக ஊர் அற்புதமாக இருந்தது .....பெயருக்கு ஏற்ப சில கழுகுகள் மேலே வட்டமிட்ட வண்ணம் இருந்தன...
"மஹிதர்....உங்க மூலமா ஒரு அருமையான ஸ்பாட்டுக்கு வர்ற வாய்ப்பு கிடைச்சது....தேங்க்ஸ்! எப்படியோ உங்க சொந்தக்காரங்க கிட்ட வந்து சேர்ந்துட்டீங்க " என்றாள் தரங்கிணி...
அங்கிருந்த பெரியவரிடம் கேட்டபோது கழுகு மலையில் "முருகன் கோவில், வெட்டுவான் கோவில், மற்றும் சமண பள்ளி " ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள் என்றார்...முதலில் கோவிலுக்கு செல்வதாக தீர்மானித்தோம்...
எதிரே கழுகாசல மூர்த்தி கோவில் கம்பீரமாகத் தெரிந்தது.....ஒரு பெரிய தெப்பக் குளம் நிறையத் தண்ணீருடன் இருந்தது...பெரிய ஒரு பாறையைக் குடைந்து அதன் அடிவாரத்தில் கோவில் இருந்தது....
"சிவா, இங்க எங்கேன்னு போய் தேடறது?" என்றார் விக்ரம்....
"மொதல்ல கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணலாம்" என்ற சிவா, "நீங்கள்லாம் முன்னாடி போங்க....நானும் மஹிதரும் பின்னாடி வரோம்.."என்றார்...
நானும் சிவாவும் கோவிலை நோக்கி நடந்தோம்...."மஹிதர் ரிலாக்ஸ்டா வாங்க...நாங்க எல்லாரும் உங்க கூட இருக்கோம் " என்றார் சிவா
எனக்கு வயிற்றுக்குள் ஏதோ இனம் புரியாத பயம் தோன்றியது....அங்கே எனக்காக ஏதோ ஒன்று காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது....கோவிலை நோக்கி நடந்த போது அந்த பெரிய பாறை கழுகு போல் சிறகை விரித்து என்னை வா வா என்று அழைப்பது போல் இருந்தது....
~தொடரும்
முந்தைய அத்தியாயங்கள்
1 2 3 4 5 6 7 8





