இந்த வலையில் தேடவும்

Tuesday, November 16, 2010

இருபத்து ஒன்று, பன்னிரண்டு -2


மதுரை சோமு பாடிய ஒரு பாடலை இ-ஸ்நிப்சில் கேட்க நேர்ந்தது...அது "நாளை என்றின்னொரு நாள் வருமா?" (சிந்து பைரவி). மூடனே , நாளை என்பது வராமலே போகலாம்...இன்றே முருகனை சரணம் செய்" என்ற அர்த்தத்தில். ...நாமெல்லாம் நாளை என்றொரு நாள் வரும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது..

நாளைக்கு ஆகும் என்று கருவேப்பிலையை ஃப்ரிஜ்ஜில் எடுத்து வைப்பதிலிருந்து,நாளைக்கு ஆபீசுக்கு போட்டுப் போவதற்கு சாக்ஸை துவைப்பதிலிருந்து நாளைக்கு உதவும் என்று கோடி கோடியாக இன்வெஸ்ட்மென்ட் செய்வது வரை...ஆனால் நம் எல்லாருக்கும் ஒட்டு மொத்தமாக ஒருநாள் நாளை என்றொரு நாள் வராமல் போகலாம்..என் சொல்கிறேன் என்றால் உலகம் அழியப் போகிறது என்று நம்புவது எவ்வாறு மூட நம்பிக்கையோ அதே மாதிரி உலகம் அழியாது என்று நம்புவதும் கூட மூட நம்பிக்கை தான்...It is only a matter of time ...பிரபஞ்சம் எப்போதும் மாறாமல் இருக்கிறது என்ற static theory அறிவியலில் எப்போதோ அடிபட்டு விட்டது...பிரபஞ்சம் மாறிக் கொண்டிருக்கிறது...ஒரு நிதானமான பேரழிவை நோக்கி...பிரபஞ்சமே அழியும் என்றால் நம் அல்ப பூமியின் ஆயுளை என்ன சொல்வது?

மனிதன் தான் மட்டுமே பெரியவன் என்று நிமிர்ந்து நடக்கிறான்...ஒரு நெம்புகோல் கொடு, பூமியையே தூக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறான்...பக்கத்து நட்சத்திர மண்டலத்திற்கு பயணம் செய்ய நாள் குறிக்கிறான்...சரிதான்...இவற்றைப் பார்த்து பூமி சிரிக்கக் கூடும்...பாவம் சின்னப் பயல்..ஆடும் வரை அவன் ஆடட்டும் என்று நினைக்கும் ..பூமியின் சாய்வுகோணம் ஒரு கால் டிகிரி மாறினாலும் மனிதன் வெப்பத்தில் வெந்தோ, குளிரில் நடுங்கியோ இருந்த இடம் தெரியாமல் போய் விடுவான்..சாய்வு இருக்கட்டும்..அது பெரிய விஷயம்...கடல் கொஞ்சம் பொங்கினாலும் லட்சக் கணக்கான பேர் மாயா பஜார் கடோத்கஜன் வாயில் போகும் லட்டு மாதிரி உள்ளே போய் விடுவார்கள்...சரி உலகம் அழிந்து விடும் என்று சில பேர் தீர்க்கமாக நம்புவதற்குக் ஒரு முக்கிய காரணம் மாயன் (மயன்) காலண்டர்...பூமி காலண்டரெல்லாம் பார்க்குமா என்று கேட்க வேண்டாம்... ஆனாலும் இயற்கைக்கும் எண்களுக்கும் ஏதோ ஒரு கண்காணாத தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது... உதாரணமாக பதிமூன்றாம் தேதியும் வெள்ளிக் கிழமையும் ஒன்றாக வந்தால் (Friday the 13th ) அது ஒரு கருப்பு நாள்...(நீங்கள் Friday the 13th என்ற திகில் படத்தை பார்த்திருக்கிறீர்களா ?) அன்று வழக்கத்துக்கு மாறாக நிறைய சாலை விபத்துகள் நடக்கின்றனவாம்...கிட்டத்தட்ட உலகின் எல்லா நாகரீகங்களிலும் 13 என்பது ஒரு ராசியில்லாத சாத்தானின் நம்பராகவே கருதப்பட்டு வந்துள்ளது..வீடுகளுக்கு,குதிரைகளுக்கு 13 என்ற நம்பரைக் கொடுக்காமல் 12A என்று கொடுக்கிறார்கள்...பெரும்பாலான கட்டிடங்கள் பதிமூன்று தளங்களுடன் கட்டப்படுவது இல்லை..(இந்தியாவில் கூட) ஹோட்டல்களில் பதிமூன்றாம் நம்பர் ரூம்கள் இருப்பதில்லை...விமான நிலையங்களில் 13 ஆம் நம்பர் கேட்டுகள் இருப்பதில்லை...

அப்போலோ -13 விண்கலத்தின் ஆக்சிஜன் tank வெடித்து அதன் நோக்கம் நிறைவேறாமல் போனது நினைவிருக்கலாம்

இதற்கு மாறாக 12 என்ற எண் மிக மிக முக்கிய எண்ணாக எல்லா நாகரிகங்களிலும், மதங்களிலும் கருதப்பட்டு வந்துள்ளது...ஆதி மனிதன் எண்களை எண்ணுவதற்கு தன் கை விரல்கள் பத்தையும் பாதங்கள் இரண்டையும் பயன்படுத்திய போது 12 என்று எண்ணினானாம் ...சந்திரன் தேய்ந்து மீண்டும் வளர்ந்து முழு நிலவாக கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடிக்கிறது...அதை 12 ஆல் பெருக்கினால் அது பூமி சூரியனை சுற்றும் காலத்தை தருகிறது (ஒரு வருடம்) பூமி தன்னைத் தானே ஒரு சுற்று சுற்ற 24 மணி நேரம் ஆகிறது..பூமியின் நிலநடுக்கோட்டை எடுத்துக் கொண்டால் அங்கு 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவாக இருக்கிறது..இதை வைத்து கடிகாரங்கள் 12 எண்களுடன் வடிவமைக்கப் பட்டன...நிலைத்த 27 நட்சத்திரங்களின் பின்னணியில் 9 கிரகங்கள் ஓடும்போது 12 வெவ்வேறு உருவங்கள் தென்படுகின்றன...அவை 12 ராசிகள் என்று கருதப்படுகின்றன...

ஒரு பெரிய முக்கியமான பண்டிகை நாளின் அடுத்த நாள் மந்தமாகவும் , உற்சாகம் இன்றியும் இருப்பது போல பன்னிரண்டுக்கு பின்னால் வரும் ஒரே காரணத்திற்காக 13 விலக்கப்பட்டது... இயேசுவின் கடைசி விருந்தின் போது 13 பேர் இருந்ததால் மேல் நாடுகளில் விருந்து வைக்கும் போது 13 பேராக இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள் ,இந்துக்கள் மூன்று தலை வாழை இலைகளை (மட்டும்) வரிசையாக போடமாட்டார்களே அது போல (அப்படியிருந்தால் 13 பேரில் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் சங்கு தானாம்) இந்த 13 என்ற பேய் நம்பருடன் ஆதாமும் ஏவாளும் அறிவுக் கனியை சாப்பிட்டு தப்பு பண்ணியதும், இயேசுவை சிலுவையில் அறைந்ததும் ஆன நாளான வெள்ளிக் கிழமையும் சேர்ந்து விட்டால் அவ்வளவு தான்...கேட்கவே வேண்டாம்...இன்னும் அமெரிக்காவில் 13 ஆம் தேதி வெள்ளிக் கிழமையாக வந்தால் ஆபீசுக்கு லீவு சொல்லி விட்டு வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொண்டு ,பாப் கார்ன் கொறித்துக் கொண்டு 'மகள்' தொடங்கி 'இதயம்' வரை சன் டிவி சீரியல்களை ஒன்று விடாமல் பார்ப்பார்கள்...இந்த ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் பிசினஸ் ஆயிரம் மில்லியன் டாலர்கள் வரை நஷ்டத்தை சந்திக்கிறதாம்...

13 என்ற எண் ஒடுக்கப்பட்டதற்குஇன்னொரு காரணம் ஆணாதிக்க சமூகம் என்று சொல்கிறார்கள்..அதாவது ஒருவருடத்தில் ஒவ்வொரு பெண்ணும் கிட்டத்தட்ட 13 முறை வீட்டுக்குவிலக்காகிறாளாம் ...(13 x 28 =364 ) எனவே 13 என்பதை 'பொம்பளை' நம்பர்என்று கருதிய ஆண்கள் அதை ராசியில்லை என்று விலக்கி வைத்துவிட்டார்களாம்..

நோர்ஸ் புராணத்தின் படி, கடவுள்கள் 12 பேர் ஒரு நாள் ராத்திரி ,விருந்துவைத்து கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டு இருந்தார்களாம்...அப்போது பதிமூன்றாவதாக அழையா விருந்தாளியாக வந்த தீமைகளின் கடவுள் லோகி, தன்னை அழைக்காத கோபத்தில் அங்கிருந்த ஒளியின் கடவுள் பால்டரைஅம்பை எய்தி கொன்று விட்டானாம்...அன்று முதல் உலகமே ஒளியிழந்துபோய் விட்டதாம்..அன்றிலிருந்து 13 பாவம் ஒரு பழியை தன் மீது சுமந்துகொண்டு விட்டது

உலகில் அதிகம் பேர் அக்டோபர் மாதத்தில் பிறப்பதாகவும் , பிப்ரவரியில்மிகக் குறைந்த குழந்தைகளே பிறப்பதாகவும் ஒரு சுவாரஸ்யமான தகவல்சொல்கிறார்கள் (ஹி ஹி... டிசம்பர் மிகக் குளிராகவும் ஏப்ரல் உஷ்ணமாகவும்இருப்பதால் கூட இருக்கலாம்)

இதிலிருந்து காலண்டர்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடக்கூடாதுஎன்பது தெரிகிறது...இந்த மாயன் இனத்தவர்கள் இப்போதைய அமெரிக்காவில்ஐரோப்பியர்கள் சென்று குடியேறுவதற்கு முன் வாழ்ந்தவர்கள்...வானவியல், கட்டிடக்கலை, ஜோதிடம் போன்றவற்றில் விற்பன்னர்களாகஇருந்தவர்கள்...அவர்கள் உபயோகித்த காலண்டர் தான் "மெசோ அமெரிக்கன்லாங் கவுன்ட் காலண்டர்" இந்த காலண்டர் ஒரு பூஜ்ஜிய நாளைக்கொண்டுள்ளது (0 .0 .0 .0 .0 ) அந்த நாளில் இருந்து எவ்வளவு நாட்கள் கழிந்துவிட்டது என்ற கணக்கில் காலண்டரை அமைக்கிறார்கள்..சரி இதற்கும் 2012 இல் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்? மீண்டும் அந்த பேய் நம்பர் 13 தான்...இது பற்றி அடுத்த பதிவில்....

சமுத்ரா

1 comment: