இந்த வலையில் தேடவும்

Monday, July 4, 2011

கலைடாஸ்கோப்-27

லைடாஸ்கோப்-27 உங்களை வரவேற்கிறது

1
==

இந்த கலைடாஸ்கோப் (இந்த ப்ளாக்கின்) 200 -ஆவது போஸ்டாக வெளிவருகிறது. 'வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு' என்றெல்லாம் பெயர் வைத்து விட்டு சின்னப்பிள்ளைத் தனமாக பதிவுகளையும் ,FOLLOWERS ஐயும் எண்ணிக் கொண்டிருக்கலாமா என்று சிலர் கேட்கிறார்கள். உண்மை தான்..

ஒரு வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தாராம். அந்த வீட்டு பெண்மணி அவருக்கு பசியாற தோசை சுட்டுப் போட்டாளாம். அவரும் பசிதீர தோசையை ஒன்று மாற்றி ஒன்று விழுங்கிக் கொண்டே வந்தாராம். சில தோசைகளுக்குப் பிறகு "போதுங்க, இப்பவே ஒன்பது தோசை ஆச்சு' என்றாராம். அதற்கு அந்த வீட்டுக்கார அம்மா , 'ஒன்பதா, இதோட பதினொன்னு முடிஞ்சுது, என்ன இது? மூணாம் மனுஷர் மாதிரி கணக்கு எல்லாம் பண்ணிக்கிட்டு? சும்மா சங்கோஜப்படாம சாப்பிடுங்க' என்றாளாம். அது போல தோசை சாப்பிடுபவர் கணக்குப்பண்ண வேண்டியதில்லை;தோசை சுடுபவர் கணக்கு பண்ணியே ஆகவேண்டும். தோசை சாப்பிடுவது எளிது. ஆனால் சூடான அடுப்பின் முன் நின்றி மாவை பதமாகக் கரைத்து தோசை தீய்ந்து போய் விடாமல் எடுத்து, சைடு டிஷ்ஷாக விதம் விதமான சட்னிகளை வைத்துப் பரிமாறுவது (கொஞ்சம்)கஷ்டம்.அதே மாதிரி தான் ஒரு
பல்சுவைப் பதிவை எழுதுவது. நான் எழுதியதை spell check -க்காக ஒருமுறை படிப்பதோடு சரி..அதன் பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. எத்தனை சுவாரஸ்யமாக எழுதினாலும் அதை எழுதியவருக்கு அது ருசிப்பதில்லை! அது பயங்கர திரில்லர் கதையாக
வே இருந்தாலும்!நாம் எழுதியதை நாமே படித்துப் பார்த்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்ற உணர்வு வேண்டுமானாலும் தோன்றும்.

2
==

'வீடு' என்ற சொல்லுக்கு 'மோட்சம்' என்ற பொருள் வைத்திருப்பது தமிழில் மட்டும் தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. வீட்டை விட்டால்தான் மோட்சம் பெறமுடியும் என்று வடக்கு நினைக்கிறது. ஆனால் தமிழோ வீடு கூட மோட்சத்தை அளிக்கவல்லது என்று நம்புகிறது. தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் ! அறம் பொருள் இன்பம் வீடு முதல் மூன்றை எழுதுபவர்கள் கடைசியான மோட்சத்தைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. அது implicit ! முதல் மூன்றையும் உருப்படியாக செய்தால் மோட்சம் தானாகவே வாய்க்கும் என்கிறார்கள்.

வீடு என்பது தான் எத்தனை வசீகரமான ஒரு வார்த்தை? வாரம் ஒரு நாள் வீட்டுக்குப் போகும் கனவில் ஆறு நாட்களை ஹாஸ்டலில் கழிப்பவர்கள் எத்தனை பேர்? அவசர நகரத்தின் பொருளற்ற அலைச்சல்களில் இருந்து விடுபட்டு சொந்த ஊருக்கு இரண்டு நாள் லீவில் செல்லும் சுகத்தை விரும்பாதவர்கள் தான் யார்? வீட்டை விட்டு விலகும் ஒவ்வொரு பயணமும் நமக்குள் ஒரு பதற்றத்தை விளைவிக்கிறது .வீடு நோக்கி வரும் ஒவ்வொரு பயணமும் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது.இதை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். ஒரே வழியில் தான் காலையில் ஆபீஸ் போவீர்கள்.அதே வழியில் தான் சாயங்காலம் வீடு திரும்புவீர்கள் .ஆனால் மாலையில் வீடுதிரும்பும் போது வழியில் உள்ள எல்லாம் ஒரு தனி அழகுடன் காட்சி தரும்.
பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும் அது ஒரு சுகமான சுமையாகவே இருக்கும். 'எல்லாப் பயணிகளும் வீடு திரும்பியே ஆக வேண்டும்' என்கிறது ஒரு பழமொழி.'வீடு என்ற ஒன்று இருப்பதால் தான் பயணங்கள் இனிக்கின்றன' என்கிறது இன்னொன்று.

ஆங்கிலத்தின் HOUSE மற்றும் HOME என்ற பாகுபாடு அழகானது!தமிழ் உட்பட மற்ற மொழிகளில் எல்லாமே 'வீடு'தான். இல்லத்தரசிகளை HOME MAKER என்று தான் இப்போது அழைக்கிறார்கள். அதாவது நீங்கள் பிரம்மச்சாரியாக இருக்கும் போது HOUSE ஆக இருப்பது கல்யாணம் ஆனதும் HOME ஆகிறது! வீடு திரும்பி வரும் மகன் ஒருவனின் கதையை நீங்கள் பைபிளில் படித்திருக்கலாம். வீடுதிரும்புதல் என்பதே ஒரு திருவிழா தானே?

வீட்டை நெருங்கும் போது வேகத்தைக் குறைக்க வேண்டும் என்கிறது இயற்பியல். அது உயிரற்றது ! அப்படி தான் சொல்லும்.
ஆனால் மனோவியல் வீட்டை நெருங்கும் போது நம் மனவேகம் அதிகரிக்கிறது என்கிறது. பள்ளி முடிந்து வரும் குழந்தைகள்
வீடு நெருங்கியதும் கண்டிப்பாக ஓடுவார்கள்.

A man travels the world over in search of what he needs and returns home to find it - George Moore

சரி இப்போது ஒரு கவிதை:

பாட்டி பாத்ரூமில் கீழே விழுந்து விட்டாளாம்..
அப்பா போட்டிருந்த லோன் இன்னும் தாமதம் ஆகுமாம்...
தம்பி இந்த முறையும் அரியர் வைத்திருந்தான்...
தங்கைக்கு அவசரமாக இருபதாயிரம் வேண்டுமாம்...
வீட்டின் பின் சுவர் மழையில் இடிந்து விழுந்து விட்டதாம் ...
இவ்வளவு இருந்தும்
ஏதோ ஒரு இனம் புரியாத சுகம்
சொந்த ஊருக்குச் செல்லும் போது....

3
==

இப்போதெல்லாம் ஆங்கிலப் படங்களே தமிழை நன்றாகப் பேசுகின்றன. ஆமாம்! நேற்று தமிழில் 'டப்' செய்யப்பட 'அனகோண்டா' பார்த்தேன்.ஒரிஜினல் தமிழ்(?) படங்களில் பாதி ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். ஆனால் டப் செய்யப்பட படங்களில் 'நீ ரொம்ப களைப்பா இருக்க,போய் ஒய்வு எடுத்துக்கோ' 'ஜார்ஜ் அந்த குதிரை மேலே பயணம் போகணுமாம் ' என்றெல்லாம் ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறார்கள். கூடவே 'மாப்பு, வைச்சுட்டான் ஆப்பு' போன்ற வடிவேலு ட்ரேட் மார்க் வசனங்களையும் டப்பிங்கில் நுழைக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு டப் செய்யும் போது 'synchronization ' எனப்படும் ஒருங்கிணைவு ஒரு சவாலாக இருக்கிறது.
ஏனென்றால் அங்கே எல்லாவற்றையும் வேகவேகமாகப் பேசி முடித்து விடுகிறார்கள். எனக்கு இன்னும் அமெரிக்கன் இங்கிலீஷ்-ஐ follow செய்வது கஷ்டமாக உள்ளது. ஏதோ ஒரு படத்தில் 'மின்னலு' வந்து போவது போல சரக் என்று பேசி முடித்து விடுகிறார்கள்.நாம் பாவமாக SORRY என்றோ PARDON என்றோ could you repeat என்றோ you said something ??? என்றோ அபத்தமாகக் கேட்க வேண்டி இருக்கிறது.அந்த வேகத்தில் இவர்கள் தமிழையும் பேசும் போது கொஞ்சம்
அந்நியமாகத் தோன்றுகிறது. ஆங்கிலம் காதலுக்கான மொழி அல்ல. ராணுவத்துக்கான மொழி. இந்த வேகத்தில் தமிழில்
வசனங்கள் பேசி படம் எடுத்தால் அது சரிவராது. உதாரணமாக ஹீரோ ஹீரோயினிடம் PROPOSE செய்ய போகும் போது! முதலில் எச்சிலை விழுங்க வேண்டும்.அசடு வழிய வேண்டும். அது..அது வந்து..அது என்னன்னா..எப்படி சொல்றதுன்னு தெரியலை' என்றெல்லாம் முன்னுரை முகவுரை எல்லாம் சேர்க்க வேண்டும்,,'நான் வந்து ..அதாவது நான் உன்னை..உன்னை..'என்றெல்லாம்
ஒரு எபிசோடை முடிக்கும் அளவு ஜொள்ளு விட வேண்டும். காலை நேர டிபனை வாயில் அடைத்துக் கொண்டோ, ஷூ லேஸ்
மாட்டிக் கொண்டோ 'hey I think I'm in love with u..' என்று கிசுகிசுக்கும் அவசர கதி காதல் இங்கே ஒத்து வராது..'

4
==

தாத்தா காலத்து மளிகைக் கடை பாஸ் புக் ஒன்று கண்ணில் பட்டது .அதில் இப்படி எல்லாம் எழுதியிருந்தது.

"இந்த பாஸ் புத்தகத்தை தவறாமல் ஒவ்வொரு முறை சாமான் வாங்கும் போதும் சொஸைட்டி குமாஸ்தாவிடம் ஆஜர் படுத்த வேண்டியது. அகஸ்மாத்தாக பாஸ் புத்தகம் தவறி விட்டால் நாலணா கொடுத்து புதியது வாங்கிக் கொள்ளவேண்டியது. சொஸைட்டி குமாஸ்தாவோ அல்லது காரியதரிசியோ தவிர பாஸ் புத்தகத்தில் எண்ட்ரி செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.தவற விடப்படும் வஸ்துகளுக்கு சொசைடியார் ஜவாப்தாரி ஏற்றுக் கொள்ள இயலாது. மொத்தம் எவ்வளவு ரூபாய் எவ்வளவு பைசா என்று சாமான் வாங்குபவர் ஸ்பஷ்டமாக கூட்டி கணக்கு பார்த்து கொள்ள வேண்டியது.

இடைக் காலத்தில் தமிழ் இப்படிதான் பேசப்பட்டு வந்தது போலிருக்கிறது. தமிழை சமஸ்கிருத்திடம் இருந்து மீட்டெடுத்த
அந்த ஒரு காரியத்திற்காகவேணும் நாம் திராவிட கட்சிகளை நமஸ்காரம் பண்ணுவோம்!

5
==

ஹிந்தி சானல்கள் பயங்கரமாக சலிப்பூடுகின்றன. பெரும்பாலான சானல்களில் ஜட்ஜுகள் உட்கார்ந்து கொண்டு டான்ஸ் ஆடுபவர்களுக்கு ஹிதோபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். TALENT என்ற பெயரில் பங்கேற்பவர்கள் எல்லா குரங்கு சேஷ்டைகளையும் செய்து காட்டுகிறார்கள். இன்னும் சில சானல்களில் 'ரியாலிடி ஷோ' எனப்படும் அபத்தங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எலிகளுக்கு இடையே படுத்துக் கொண்டும் வோல்டேஜ் கொடுக்கப்பட்ட கம்பிகளுக்கு இடையே ஊர்ந்து கொண்டும், சாணிக் குவியலுக்குள் ஒரு சிறிய சாவியை வாயால் தேடிக் கொண்டும் you can do it! you can do it என்று உற்சாகப்படுத்திக் கொண்டும், சாதனைகளை (?) நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில சானல்களில் பதுமைகள் போல பெண்கள் , பளிச் என்ற பங்களாக்கள், வெளி உலகத்தையே கட்டாத சீன்கள், தாடி வைத்த அழகான வில்லன்கள் என்று ஹிந்தியில் சீரியல்கள்..! கதை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. ஹிந்திக் காரர்கள் வர வர
முட்டாள்களாக மாறிக் கொண்டிருக்கிறார்களா? தமிழிலும் சில சானல்கள் இந்த மாதிரி அபத்தங்களை ஆரம்பித்துள்ளன.
எனவே என்னுடைய வாட்ச் லிஸ்டில் இருக்கும் சானல்கள் பொதிகை , போகோ மற்றும் டிஸ்கவரி இந்த மூன்றும் தான்.

6
==
ஒரு ஓஷோ ஜோக்

மாய தேசம் ஒன்றுக்கு வேலைக்கு சென்ற ஒருவன் தன் பெற்றோர்களுக்கு ஒரு பார்சல் அனுப்பினான். அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது."அம்மா, அப்பா, இதனுடன் இளமையாக இருக்கவைக்கும் மாத்திரைகளை அனுப்பி இருக்கிறேன்..முயற்சி செய்து பார்க்கவும்.

சில மாதங்கள் கழித்து அவன் விடுமுறைக்கு தன் ஊருக்கு வந்தான். தன் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினான். அழகான ஓர் இளம்பெண் வந்து கதவைத் திறந்தாள். அவன் கையில் ஒரு கைக்குழந்தை பால் பாட்டிலை சப்பிக் கொண்டிருந்தது. "நீ யார், என் அம்மா எங்கே?" என்று கேட்டான் அவன்

"டேய், என்னைத் தெரியலையா ? நான் தான் உங்க அம்மா.. நீ அனுப்பிய மாத்திரை பிரமாதம்..நாம் இவ்வளவு இளமையா மாறுவேன்னு எதிர்பார்க்கவே இல்லை" என்றாள்

"ஆமாம்மா,,அதிசயம் தான் அந்த மாத்திரை..ஆனால் இளமையா மாறின உடனேயே ஒரு குழந்தையையும் பெத்துக்கிட்டாயே, இது தான் கொஞ்சம் டூ மச்.." என்றான்

அதற்கு அவள் " கண்டபடி உளறாதே, உங்க அப்பா தான் இது...ஆர்வக்கோளாறுல அவர் ரெண்டு மாத்திரையை முழுங்கி விட்டார் " என்றாள்

முத்ரா

18 comments:

சேலம் தேவா said...

//நாம் எழுதியதை நாமே படித்துப் பார்த்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்ற உணர்வு வேண்டுமானாலும் தோன்றும்.//

எனக்கு நாமெல்லாம் எதுக்குடா எழுதறோம்ன்னு தோணுமுங்க..ஹி.ஹி..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்னைக் கேட்டால் நல்ல தமிழ் தொலைந்ததே திராவிடக் கட்சிகளின் உபயம் என்று எண்ணுகிறேன். தமிழை யார் இப்போது படிக்கவோ எழுதவோ செய்கிறார்கள்? வேறே வழி இல்லாமல் பேசப்படும் தமிழும் தமிழில் சேர்த்தியில்லாமல் ஒரு கண்றாவி.எல்லாவற்றோடும் சேர்ந்து கௌரவமான இடத்தில் இருந்த தமிழ்ச் சிந்தனையும் காணமல் காலி டப்பாவாக இருக்கிறது தமிழ்.

Katz said...

;-)

M.G.ரவிக்குமார்™..., said...

200க்கு வாழ்த்துகள்!

HVL said...

//தமிழிலும் சில சானல்கள் இந்த மாதிரி அபத்தங்களை ஆரம்பித்துள்ளன//

அந்தக் கொடுமைய ஏன் கேட்கறீங்க. குழந்தைகளோட உட்கார்ந்து உருப்படியா எதையும் பார்க்க முடியவில்லை.

HVL said...

//
நாம் எழுதியதை நாமே படித்துப் பார்த்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்ற உணர்வு வேண்டுமானாலும் தோன்றும்//
என் (பரிசு வாங்கின) கதைய திருப்பி படிச்சதுல, இதுக்கு போயா பரிசு கொடுத்தாங்கன்னு தோணுச்சு!

HVL said...

200வது பதிவிற்கு வாழ்த்துகள்!

Mohamed Faaique said...

//////நாம் எழுதியதை நாமே படித்துப் பார்த்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்ற உணர்வு வேண்டுமானாலும் தோன்றும்.//

எனக்கு நாமெல்லாம் எதுக்குடா எழுதறோம்ன்னு தோணுமுங்க..ஹி.ஹி.. ///

same feeling..

kavitha soooper... appadiye unmayum kooda...

Anonymous said...

இந்த முறை கவிதையும், ஓஷோவின் துணுக்கும் அருமை

-இளா

bandhu said...

200-க்கு வாழ்த்துக்கள். இந்திய தொலை காட்சி தொல்லையிலிருந்து கொஞ்ச நாளாக தப்பித்து வருகிறேன். இங்கு அமெரிக்காவில் 1959–1964 -இல் வந்த Twilight Zone போன்ற புதிய சிந்தனைகளை தூண்டும் டி வி சீரியல்களை மறு ஒலிபரப்புகளில் பார்க்கும்போது இதை போலெல்லாம் தமிழில் ஏன் வருவதில்லை என்ற ஏக்கம் எப்போதும் உண்டு!

a.nagarasan said...

hallo
நம் கதையை நாமே படிப்பது சுய தரிசனம் செய்து கொள்வது மாதிரி. ups and downs தெரியும்
after one month படித்தால் அது master check up.
a-nagarasan
ps- பார்க்கவும்
anagarasan2000.blogspot.com

suvanappiriyan said...

200க்கு வாழ்த்துகள்!

நெல்லி. மூர்த்தி said...
This comment has been removed by the author.
நெல்லி. மூர்த்தி said...

"நாம் எழுதியதை நாமே படித்துப் பார்த்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்ற உணர்வு வேண்டுமானாலும் தோன்றும்."

-- எவரொருவர் முழு திருப்தி அடைகின்றாரோ அப்போதே அவர் தன் வளர்ச்சியினை “இவ்வளவிற்க்கு போதும்” என சுருக்கிக் கொள்கின்றனர் என்றே அர்த்தம்!


"ஒரிஜினல் தமிழ்(?) படங்களில் பாதி ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். ஆனால் டப் செய்யப்பட படங்களில் ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறார்கள். "

-- மேலோட்டமாக இன்றி தங்களின் கூரிய பார்வை ஒவ்வொரு தளங்களிலும் தெரிகின்றது.

-- வெற்றிகரமாக 200 பதிவுகளை பிரசவித்தமைக்கு வாழ்த்துக்கள்! பெரு ஊடகங்களிலும் உலாவர சிறப்பு நல்வாழ்த்துக்கள்!

ஹேமா said...

முதலில் வாழ்த்துகள் சமுத்ரா.

ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பைல்லாத பதிவு.அதோட புரியிறமாதிரியும்.எல்லாமே ரசித்தேன்.முதல் தோசையே அசத்தல்.பிறகு வீடு,கவிதை சூப்பர்.இப்படி இருந்த தமிழ்தான் இப்பிடி மாறிக்கிடக்கா.

கடைசி ஓஷோ ஜோக்....சிரிப்போடு பின்னூட்டமிடுகிறேன் !

Uma said...

variety விருந்து ...

ஷர்புதீன் said...

வாழ்த்துக்கள் பதிவுலகில் சில மைல்களை கடந்ததற்கு

பத்மநாபன் said...

இரு நூறுக்கு வாழ்த்துகள்...பல நூறு பல்லாயிரமாக தொடரட்டும்....