இந்த வலையில் தேடவும்

Sunday, November 23, 2014

லைட் ரீடிங் திருவாசகம்

லைட் ரீடிங் 
திருவாசகம் 

The lesser the baggage, the merrier the journey என்பதில் நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? நீங்கள் என் கட்சி :) இரண்டு பைகளுக்கு மேல் கொண்டு போனால் கண்டிப்பாக நான் ஒன்றை மறந்து வைத்து விடுவேன். மேலும், லக்கேஜ் ஜாஸ்தி என்றால் எனக்கு இறங்கும் ஸ்டாப்/ ஸ்டேஷனுக்கு அரை மணிக்கு முன்பே தேவையில்லாத டென்ஷன் வந்து விடும். இப்போதெல்லாம் யாரும் நம் பையை லபக்கிக் கொண்டு போவதில்லை தான். ஏனென்றால் அவர்களுக்கே 27 பைகள் இருக்கும் போது நம் பையை வேறு யார் விரும்புவார்?:) மேலும் வெடிகுண்டு, போதைப் பொருள் இத்யாதிகள் மலிந்து விட்டதால் நாம் மறந்து விட்டாலும் நம் பேக்கேஜ் பொட்டாட்டம் அங்கேயே அமர்ந்திருக்கும்.

மேலும் லக்கேஜ் களை எங்கே வைப்பது என்பது எனக்கு ஒரு நைட் மேர் .
flight ஆக  இருந்தால் முட்டாய் கொடுக்கும் அம்மணிகளிடம் ஹெல்ப் கேட்கலாம். பஸ்ஸில், 2S ட்ரெயினில் மேலே வைத்துவிட்டு எடுப்பது கூட எனக்கு சிரமம் தான்.ஒருமுறை பஸ்ஸில் மேலே வைத்த பையை எடுக்க முடியவில்லை. ஸ்டாப் வேறு வந்துவிட்டது. யுவதியாக இருந்தால் எல்லாரும் முன்வந்து எடுத்துத் தந்திருப்பார்கள். பசங்களை யார் கண்டுகொள்கிறார்கள். என்னடா இது நம் ஆண்மைக்கு வந்த சோதனை என்று எப்படியோ திக்கித் திணறி எடுத்துக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வீடுபேறு அடைந்தேன்.

பஸ்ஸில் நடைபாதையில் பையை வைக்க முடியாது. கண்டக்டர் மிரட்டுவார்.காலடியில் வைத்தால் உட்காரவே முடியாது. கைக்குழந்தை போல கையில் வைத்துக் கொண்டு வரவேண்டும். மேலும், உட்கார்ந்திருப்பவர்களை மீறி இந்த லக்கேஜை எடுப்பது. அதற்கு ஒரு உத்தித்த பர்ஸ்வ கோனாசனம் செய்ய வேண்டும். நமது பஸ், ட்ரெயினில் இருக்கும் த்ரீ சீட்டர்கள் உண்மையில் இரண்டு பேர்களுக்கானவை . இந்தியாவில் ஒல்லியாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அந்த த்ரீ சீட்டரில் மூன்று பேரை உட்கார வைப்பது டார்ச்சர்.

சரி, என்னதான் இருந்தாலும் நம்மால் ஒரு சின்ன தோள்ப்பை கூட இல்லாமல் பயணிக்க முடிவதில்லை.ஏதோ ஒன்றை நாம் எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறோம். காயமென்னும் சுமையிறக்கக் கண்டிலனே என்று உடலைக் கூட சுமை என்று எண்ணிய சித்தர்கள் கூட ஏதோ ஒன்றை சுமந்து கொண்டே திரிந்தார்கள். பட்டினத்தார் கையில் கரும்பை சுமந்து கொண்டே திரிந்தாராம். ஏதோ ஒன்றை சிம்பாலிக்காக சொல்ல வருகிறார் போலும் . அவ்வை கையில் ஒரு மூட்டையை எப்போதும் சுமந்தாள் .ஒருநாள் அவளை வழியில் சந்தித்த பாரி, அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான். இல்லையைப்பா நான் போக வேண்டும் என்று அவ்வை மறுத்து விட்டு நடக்கிறாள்.சற்று  நேரத்தில் கள்வன் ஒருவன் வந்து அவளது கைப்பையை வழிப்பறி செய்து விட்டு ஓடி விடுகிறான்.'பாரியின் நாட்டில் வழிப்பறியா ' என்று புலம்பி, முறையிட அரண்மனை வருகிறாள் அவ்வை. அப்போது பாரி 'மன்னித்து விடுங்கள்; உங்களை அரண்மனைக்கு வரவழைக்க வேறு வழி தெரியவில்லை. கள்வன் உருவில் வந்தவன் நான்தான் 'என்கிறான்.


சில சமயம் தெய்வங்கள் சுமந்து கொண்டிருக்கும் ஆயுதங்களைப் பார்க்க பகீர் என்றிருக்கும். அன்பே சிவம் என்று சொல்லும் நாம்தான் தெய்வங்கள் கையில் இப்படிப் பட்ட கொலை ஆயுதங்களைக் கொடுத்து வைத்திருக்கிறோம்.கத்தி, வாள் , கோடாலி, கேடயம், பாசம், அங்குசம், ஈட்டி, திரிசூலம், கதை, வில், அம்பு, சாட்டை, சக்கரம்....இன்னொரு funny யான விஷயம் சுதர்சனர்.அவரே ஒரு சக்கரம். அவர் கையில் எதற்கு இன்னொரு சக்கராயுதம்? இப்படி recursion இல் போய்க் கொண்டே இருக்குமா?சரி..தெய்வங்கள் சாதாரணமாக casual ஆக , home dress இல் இருக்கலாகாதா ? எப்போது பார்த்தாலும் equipped ஆக இந்த காயலான் கடை அயிட்டங்களை சுமந்து கொண்டேதான் வேண்டுமா?போர், அசுரன், கிசுரன் ஏதேனும் வந்தால் அந்த சமயத்தில் இதையெல்லாம் சுருட்டிக் கொண்டு புறப்பட்டால் போதுமே! முதன்முதலில் நாம் குழந்தைகளுக்கு இப்படி வன்முறையான தெய்வங்களை அறிமுகம் செய்ய வேண்டுமா? 'உம்மாச்சி' ஏம்மா கத்தி வச்சிருக்கு  என்றால் கெட்டவங்களை சதக் -குன்னு குத்திரும் என்று அமெச்சூர் தனமாக சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோமா? who is கெட்டவன் ??

நாம் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டே இருக்கிறோம். உடலளவில் இல்லை என்றாலும் மனதளவில். extra unwanted luggage . தேவையில்லாத எண்ணங்கள், பொறாமை, கவலை, பயம், சந்தேகம், குற்ற உணர்ச்சி, பழி எண்ணம்,அவன் அன்னிக்கு அப்படி சொல்லிட்டானே, ஆம்பிளையா ன்னு கேட்டானே என்றெல்லாம். இவற்றை விட சுமைகள் வேறில்லை.

மனசு உடுத்தின கவலைத் துணி 
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி!
இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு 
அழவா இங்கே வந்தோம் 
ஆடு பாடு ஆனந்தமா ஓய்  என்று நம் 'தல' பாடுகிறார்.

சரி. இப்போது பக்தி மோடுக்கு மாறுவோம். திருவாசகம். பக்தி, அர்ப்பணிப்பு ,lyrical beauty எல்லாம் இங்கே காணக்கிடைக்கிறது.. தமிழில் இத்தனை அழகுகள்  இருக்க நாம் சினிமாக்களில் "lets do doggy style கண்ணே" என்று பாடிக் கொண்டு மெய் மறந்திருக்கிறோம். cant help 


பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182 


எத்தனை சுமக்கிறார் பாருங்கள் அந்த மனுஷன் .

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்று ஒரு கீர்த்தனை.

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி 
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி 
கங்கையைத் திங்களை கருத்த சடையில் தூக்கி 
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத 

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே!


எத்தனை தான் தூக்குவார் ஈசன்.

சின்னவயதில் பாட்டி பாட்டு சொல்லித் தருவாள்.
எழுதிக்கோ யதுகுல காம்போதி ஆரோகணம்:ச ரி ம ப த ஸா 

பாட்டி இந்த பாட்ல ஒரு சந்தேகம். 

என்னது? 

இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத காலை 

ஒருவர் கண்டறியாத ன்னு தான் வரணும்.

ஏன்னா விஷ்ணு தான் காலைத் தேடித் போறார். பிரம்மா தலையைத் தேடித் போறார்.

பாடலின் பொருளைப் பார்ப்போம்.


பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் 
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் 


சிம்பிள் தமிழ் தான். பாடல் பண்ணை சுமக்க வேண்டும். பண் என்றால் ராகம். ராகத்தோடு பாடினால் நலம். அப்படிப் பாடினால் பரிசு தருவான்.

பெண் சுமந்த பாகத்தான்.
பார்வதியை இடது பக்கத்தில் சுமப்பவன்.

ஒரு குட்டிக் கதை. ராவணன் பெண்ணால் அழிந்தான். அதற்குக் காரணம் பார்வதி சாபம். ஒருநாள் ராவணன் சிவனை வணங்க வருகிறான். பத்து தலைகளுடன்! கீழே விழுந்து வணங்குகிறான். அப்போது தன் வலது பக்கத்து ஐந்து தலைகளை தரையில் படாமல் மேலே தூக்கிக் கொள்கிறான். இடது பக்கத் தலைகள் மட்டும் தரையில் படிகின்றன. ஈசனுக்கு இடது பக்கம் உமை இருப்பதால் ஒரு பெண்ணை நான் போய் வணங்குவதா என்று.
பார்வதி 'கர்வம் பிடித்தவனே, ஒரு ஒரு பெண்ணாலேயே நீ அழிவாய் ' என்று சபிக்கிறாள்.

விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் 
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை 


கண்ணை சுமக்கும் நெற்றியை உடையவன். சிவன் நெற்றிக்கு இது extra சுமை போலும். நெற்றியில் ஒரு கண். நெற்றிக் கண்ணை மூடினால் vertical view ..திறந்தால் horizontal view போலும்! பொதுவாக நெற்றிக் கண் கடவுள் என்று தான் சொல்வார்கள். இங்கே கவிதை அழகுக்காக கண் நெற்றிக் கடவுள் என்று சொல்கிறார் ஆசிரியர்.

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு 
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்


சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கதை தெரிந்திருக்கும். பிட்டை தின்னாலும் பிரியாணி தின்னாலும் உழைத்து சாப்பிடு என்று வலியுறுத்துகிறார். மொத்துண்டு -மொத்து என்பது தூய தமிழ்ச்சொல் என்று இப்போதுதான் எனக்கும் தெரிந்தது:)

சிவனுக்கு எத்தனை கஷ்டம் பாருங்கள்? ஒரு அப்பா அம்மா இருந்தால் இத்தனை கஷ்டம் வருமா என்று கேட்கிறார் இன்னொருவர்.

கல்லால் ஒருவன் அடிக்க -உடல் சிலிர்க்க 
காலின் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க 
வில்லால் ஒருவன் அடிக்க- காண்டீபம் எனும் 
வில்லால் ஒருவன் அடிக்க 
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட 
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட 
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க 


தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா!

தமிழில் இதை வஞ்சப்புகழ்ச்சி என்பார்கள். சிவனை ஓர் அனாதை என்று இகழ்வது போல சொல்லி அவன் ஆதி அந்தம் அற்ற பரம்பொருள் என்று புகழ்வது.


சமுத்ரா ..

7 comments:

ப.கந்தசாமி said...

கைப் பையில் ஆரம்பித்து ஆதியந்தம் அற்ற இறைவனில் முடித்திருக்கும் பாங்கு எமைக் காந்தமாய் கவர்ந்தது.

எங்க ஊரில்தான் (கோயமுத்தூர்) இந்த "பொட்டாட்டம்" என்ற வார்த்தை உண்டென்று நினைத்திருந்தேன். உங்களுக்கு எப்படி இந்த வார்த்தை பரிச்சயம்?

"recursion" இந்த ஆங்கில வார்த்தை எனக்கு புதிதாக இன்றுதான் அறிமுகம் ஆகியது. இந்த வார்த்தை 21ம் நூற்றாண்டில் வழக்குக்கு வந்ததோ? இல்லை என் ஆங்கிலப் புலமை அவ்வளவுதானோ, அறிகிலேன் பராபரமே.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
நன்றி

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
பாடலும் அதற்கான விளக்கமும் கண்டு மகிழ்ந்தேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தைகள் - தெய்வங்கள்.... சந்தேகமேயில்லை - நாம் தான் கெட்டவன்...!

சமுத்ரா said...

பழனி அய்யா , நானும் கோவை தான்:)
recursion என்பது computer programming இல் ஒரு சார்பு தன்னைத் தானே internal call செய்வது.

G.M Balasubramaniam said...


நன்கு சிந்திக்கிறீர்கள். பதிவு மிகவும் ஈர்த்தது. வாழ்த்துக்கள்.

நேமி said...

Epavum polave soooooooooooooooper