இந்த வலையில் தேடவும்

Monday, August 22, 2011

கலைடாஸ்கோப் -34

கலைடாஸ்கோப் -34 உங்களை வரவேற்கிறது.




இந்த கலைடாஸ்கோப்பிலும் ஒரே வண்ணம் தான் தெரியப்போகிறது.ஆம் அது கறுப்பு வண்ணம்!

மரணத்தின் நிறம் என்ன? சந்தேகமே இல்லாமல் நம்மில் பெரும்பாலானோர் கறுப்பு என்று தான் சொல்வோம். தனக்கு பரிச்சயம் இல்லாத, அறியாத ஒன்றுக்கு கறுப்பு வண்ணம் கொடுப்பது தானே மனித இயல்பு?மரணத்தோடு சம்பந்தப்பட்ட எள், காக்கை எல்லாமே கறுப்பு தானே? இன்றும் கூட வீடுகளில் சுப நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு கலரில் துணி எடுக்க மாட்டார்கள்.மேலும் ப்ரம்மாவில் இருந்து ஆரம்பித்து அய்யனார் வரை எல்லாருக்கும் நம்மிடம் கோயில்கள் இருக்கின்றன. எமனுக்கு மட்டும் ஏனோ உலகில் கோயில்களே இல்லை.வாழ்க்கையைக் கொண்டாடும் நாம் மரணத்தை வெறுமனே 'அனுசரிக்கிறோம்' 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்று ஞானிகள் சொல்வது போல எமனுக்கு பயப்படாமல் இருப்பது கூட சரிதான்.ஆனால் நாம் எமனை பெரும்பாலும் அலட்சியம் அல்லவா செய்கிறோம் ? எமன் முடிந்த வரை தாமதமாக வந்து சேரட்டும் என்று அவனுக்கு எருமையை வாகனமாக அளித்த பெருமையும் நம்மையே சேரும். நம்மை வாழ்வின் பல்வேறு வலிகளில் இருந்து விடுவிக்கும் அவனுக்கு நாம் தக்க மரியாதையை அளிக்கத் தவறி விடுகிறோம்!ஆம் மரணம் என்பது மருத்துவத்தின் தோல்வி அல்ல. 'மரணம் மருந்துகளிலேயே சிறந்த மருந்து' Ultimate Medicine!

இதுவரை நிறைய அகால மரணங்களைப் பார்த்திருக்கிறேன்.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் மணம் செய்து கொடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராமல் இறந்து போன மணப்பெண், வேலைக்கு சென்று சம்பாதித்து காப்பாற்றுவான் என்று நினைத்திருந்த பெற்றோர்களை ஏமாற்றி விட்டு, படிக்கும் போதே விபத்தில் சிக்கி உயிர்விட்ட இளைன்,பிறந்த ஒரு வருடத்திலோ இரண்டு வருடத்திலோ தாயின் முலைப்பாலை விஷமாக்கி விட்டு இறந்து போன குழந்தை என்று எத்தனையோ.மனிதனைப் பொறுத்தவரை அவனுக்கு ஒவ்வொரு மரணமும் அகாலம் தான். (EVERY DEATH IS UNTIMELY )ஆனால் மேலே இருக்கும் எமனுக்கு ஒவ்வொரு மரணமும் காலத்திய மரணம் தான் (EVERY DEATH IS TIMELY ) ...ஆம். அவன் கணக்கு வேறு.நாம் போடுவது தப்புக்கணக்கு.

பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வச்சாரு-
இவரு
போன வருஷம் மழையை நம்பி விதை விதைச்சாரு....
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு ...
ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு -!!!!

மனிதன் எத்தனையோ சிக்கலான கணக்குகளை எல்லாம் கண்டுபிடித்து வைத்திருக்கிறான். 'டேலி' என்கிறான்.'பாலன்ஸ் சீட்' என்கிறான். ஆனால் இறைவன் போடும் கணக்கை இது வரை மனிதனால் அறிய முடியவில்லை. ஒரு சிறிய கம்பெனிக்கு கணக்குகளை
'டேலி' செய்வதற்குள்ளேயே உயிர் போய் விடுகிறது. அந்த சித்திர குப்தனை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அவன் வைத்திருக்கும் புத்தகம் எத்தனை தடிமனாக இருக்க வேண்டும். 'இன்டெக்ஸ்' மாத்திரம் ஒரு கோடி பக்கங்கள் வருமே? OK JOKES APART !

Birth and death; we all move between these two unknowns.-Bryant H. McGill . இன்னொரு ஆள் என்னைப் போல இன்டர்வியூக்களினால் கடுப்பாகி Death will be a great relief. No more interviews
என்கிறார். அவர் இன்டர்வியூ அட்டென்ட் செய்பவரா இல்லை பிறரை இன்டர்வியூ செய்பவரா என்று தெரியவில்லை. :-) மறுபடியும் JOKES APART !

தன் சொந்த மக்களிடையே அங்கீகரிக்கப்படாத அன்னியனைப் போல வாழும்
ஒரு கவினை ஒத்தது மரணம் என்கிறார் கலீல் கிப்ரான்.ஆம் நம்மை சுற்றி மரணம் சூழ்ந்திருந்தாலும் கூட அதை நமக்கு அந்நியமாகத்தான் பார்க்கிறோம். மரணம் என்பதை நாம் கேட்கத்கூடாத சொற்களின் பட்டியலில் இணைத்து விட்டோம். வீதியில் ஒரு பிணம் போனால் அது உன்னுடைய பிணம் தான் என்று புத்தர் சொல்வதை எல்லாம் நாம் காதில் வாங்குவதே இல்லை.'அய்யய்யோ செத்துப் போயிட்டானா? நல்ல மனுஷன் பாவம்' என்று நாம் என்னவோ அமிர்தத்தை ஐந்து லிட்டர் குடித்து விட்டு பூமிக்கு வந்தது போல பேசுகிறோம்! மரணம் என்பது நம் இடது கைக்கு மிக அருகில் இருக்கிறது என்கிறார் இன்னொரு ஞானி. ஆனால் நாம் எல்லாரும் மரணம் என்பதை ஒரு தூரத்து உறவாகவே பார்க்கிறோம்.(வேண்டா விருந்தாளி!)

நம் குழந்தைகளுக்கு நாம் மரணத்தைப் பற்றி தெளிவு படுத்த தயங்குகிறோம். காமத்தைப் போலவே அவர்கள் மரணத்தையும் சுய புரிதல் செய்து கொள்கிறார்கள்.வீதியில் ஏதாவது இறுதி ஊர்வலம் போனால் பதறியடித்துக் கொண்டு அவர்களை உள்ளே போகச் சொல்கிறோம்.இழவு வீட்டுக்கு போய் விட்டு வந்து வீட்டு வாசலில் குளிக்கும் போது குழந்தைகள் ஏன் என்று கேட்டால் காக்காய் தலைமேல் எச்சம் போய்விட்டது என்று கூறி நழுவி விடுகிறோம்.ஒவ்வொரு தந்தையும் ஒரு விதத்தில் புத்தரின் தந்தை போல தான்.தன் மகன் மரணம் பற்றிய அறிவே இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் மனோ நிலை.ஆனால் உலகம் பெரியது. உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக நூற்று எட்டு பேர் இறக்கிறார்கள்.வாழ்க்கை அவர்களுக்கு மிக சீக்கிரமாகவே சவங்களின் தரிசனத்தை அழித்து விடுகிறது. ஆனால் முதல் சவ தரிசனம் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு குழந்தையும் புத்தன் ஆவதில்லை. சரி நாமெல்லாம் தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்து முடித்து விட்டு தான் சாவோம் என்று ஒரு குழந்தை தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறது.

லிட்டில் ஜானி ஒரு நாள் டீச்சர் பாடம் நடத்தும் போது போர்டையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தானாம்.
இதை பார்த்து மகிழ்ந்த அவள் 'ஜானி ,என்ன இத்தனை ஆர்வமாக பாடத்தை கவனிக்கிறாய்? ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்" என்றாளாம். லிட்டில் ஜானி 'டீச்சர், நீங்க டஸ்டரால அழிச்சதும் போர்டில் இருந்த எழுத்துகள் எங்கே போகின்றன?'

மரணத்துக்குப் பிறகு என்ன ஆகிறது என்பது மனிதனுக்கு புதிராகவே உள்ளது. மரணம் என்பது தூங்குவது போல என்றும் உடைமாற்றுவது போல என்றும் ஞானிகள் சொன்னாலும் (மரணத்துக்கு சமஸ்கிருதத்தில் 'மஹா நித்ரா' என்று ஒரு பெயர் இருக்கிறது) தூங்குவதற்கும் உடைமாற்றுவதற்கும் கவலைப்படாத மனிதன் மரணத்தைப்பார்த்து மட்டும் அஞ்சுகிறான்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய 'கதாவிலாசத்தில்' பாரதியாரைப்பற்றிய ஒரு கதை சொல்கிறார். ஒருநாள் பாரதியார் மரணத்தை வெல்வது எப்படி என்று தான் சொல்லப்போவதாக ஊர்முழுவதும் தண்டோரா போடச் சொல்கிறார். மறுநாள் ஒரு பெரிய கூட்டம் கூடிவிடுகிறது. பாரதியார் ஒரு உயரமான இடத்தில் நின்று கொண்டு 'நீங்கள் சாகாமல் இருக்க வேண்டுமா, அப்படியானால் முதலில் நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும். பிறருக்கு உதவிகள் செய்யாமல் , வெட்டிப் பேச்சுகள் பேசிக்கொண்டு காலம் தள்ளும் நீங்கள் ஏற்கனவே சவங்கள் தான்' என்கிறார். எல்லாரும் பாரதியாரைத் திட்டியபடியே கலைந்து செல்கிறார்கள். மரணத்தின் பயம் என்பது வாழ்வின் பயம் என்கிறார் ஓஷோ. அதாவது இன்னும் வாழவே இல்லையே ,வாழ்வதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் வீணான செயல்களில் வீணடித்து விட்டோமே என்ற பயம்!!மரணத்தை வெல்ல முடியாது ; மரணத்தின் பயத்தை வெல்ல முடியும் என்கிறார் ஓஷோ. அதற்கு ஒரு எளிய உபாயம் நிகழ்காலத்தில் வாழ்வது. மரணம் நாளை வந்தால் என்ன நாற்பது வருடங்கள் கழித்து வந்தால் என்ன? என்று கணத்துக்கு கணம் வாழ்வது. ஒரு ஜென் ஞானியை ஒரு அரசன் கைது செய்து 'முட்டாளே உனக்கு இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்தில் தூக்கு' ஏதாவது கடைசியாக சொல்ல விரும்பினால் சொல்' என்கிறான். அதற்கு அவர் பயங்கரமாக சிரித்து 'இருபத்து நான்கு மணிநேரமா , எனக்கு இருபத்து நான்கு நிமிடங்களே அதிகம் ;நான் நொடிக்கு நொடி வாழ்கிறேன்..மரணம் அடுத்த நொடி வந்தால் என்ன, ஐம்பது வருடங்கள் கழித்து வந்தால் என்ன எனக்கு எல்லாமே ஒன்று தான்' என்கிறார்! எனவே மரணம் என்பது உச்சகட்டமான வாழ்வு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.



மரணம் எல்லாருக்கும் சமமாகவே இருக்கிறது. இந்த ஒரு வார்த்தை 'மரணம்' என்பது சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஒரு கற்கண்டாக இருந்திருக்க வேண்டும். மரணத்தை முன்னிறுத்தி தான் எத்தனை பாடல்கள்? கவிதைகள்? பட்டினத்தார் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்கிறார்.காது அறுந்து போன ஊசியைக் கூட நாம் சாகும் போது எடுத்துப் போக முடியாதாம். நாம் இன்று கருப்புப்பணம் வெள்ளைப் பணம் என்று நம் வீட்டு கடுகு டப்பாவில் இருந்து சுவிஸ் பாங்
க் வரை பணத்தை சேமித்து வைக்கிறோம்.ஒரு நாள் குளிர்கால இரவு. வெளியே பனி வீசுகிறது.முகம்மது நபி தன் மனைவி ஏதோ அசௌகர்யமாக இருப்பதை உணர்ந்து அவள் அடுத்த வேளைக்கு என்று கொஞ்சம் உணவும் மருந்தும் சேமித்து வைத்திருப்பதை அறிகிறார். கோபத்துடன் 'போ, வெளியில் சென்று இதை தானம் செய்து விட்டு வா! அடுத்த வேளைக்கு நமக்கு இறைவன் தருவான் என்கிறார். அவள் 'இந்த கொடும் குளிரில் நம்மிடம் தானம் பெற யார் வருவார் என்று சலித்துக் கொண்டே வெளியே செல்கிறாள்.ஒரு பிச்சைக்காரன் சொல்லிவைத்தது போல அங்கே வருகிறான். நபிகள் 'பார்த்தாயா நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு யாராவது இருந்தால் நமக்கு கொடுப்பதற்கும் கண்டிப்பாக யாராவது இருப்பார்கள், அடுத்த வேளையைப் பற்றிய கவலை இல்லாமல் உள்ளே வந்து உறங்கு' என்கிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அடுத்தவன் வயிற்றில் அடித்து ஏழேழு தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவு சொத்தை பதுக்கி வைக்கிறோம்!

அதிக பட்சம் சுடுகாடு வரை உன்னை வழியனுப்ப உன்னை சேர்ந்தவர்கள் வரக்கூடும்.அதைத்தாண்டி யார் வருவார் என்று பட்டினத்தார் கேட்கிறார்.

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே.

ஒருமடமாதும் ஒருவனும் ஆகி இன்பசுகத்தில் உதித்த இந்த உடல் பின்பு மனைவி விழுந்து மடியில் புலம்ப இப்படி ஆகிறதாம்:

விறகுஇடை மூடிஅழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்துநிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
......

ரஜினி பாஷையில் சொல்வதென்றால் 'மீன் செத்தால் கருவாடு, நீ செத்தால் வெறும் கூடு'


எல்லாருக்கும் ,எப்படிப்பட்டவருக்கும் மரணம் வந்து தீரும்.பிரம்மாவுக்கும் சாவு உண்டு என்கிறது ஹிந்து மதம். வேடிக்கையாக சொல்வதென்றால் நாம் 'நித்யத்ரையம் ' என்று வரம் கேட்க நினைத்தால் சரஸ்வதி நம் நாவில் புகுந்து அதை 'நித்யத்சயம்' என்று மாற்றி விடுவாள்.அரக்கர்கள் என்னதான் மேலே சாகக் கூடாது கீழே சாகக்கூடாது என்றெல்லாம் வரம் கேட்டாலும் அவர்கள் வாரத்தில் உள்ளே சில LOOPHOLE கள் காரணாமாக கடவுள்களால் கொல்லப்படுவார்கள். மரணத்தில் இருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது. பரீட்சித்து எழு கோட்டைகளுக்கு உள்ளே கனமான பாதுகாப்புகளுடன் ஒளிந்து கொண்டாலும் எலுமிச்சம் பழத்தில் புகுந்து அவனைக்கொல்ல பாம்பு வந்து விடும்! இந்தக் கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்: ஒரு அரசன் முன் ஒரு நாள் ஒரு கரிய உருவம் தோன்றி 'நாளைக் காலையில் நீ செத்துப் போவாய், எவ்வளவு தூரம் ஓடித் தப்பிக்க முடியுமோ தப்பித்துக் கொள்' என்கிறது. அன்று மாலை அவன் தன்னிடம் உள்ள குதிரைகளிலேயே அதிவேகமாக ஓடும் ஒன்றை எடுத்துக் கொண்டு நிற்காமல் பயணிக்கிறான்.அடுத்த நாள் காலையில் வெகுதூரம் கடந்து வந்து தான் தப்பித்து விட்டதற்காக பெருமூச்சு விடுகிறான். அப்போது மீண்டும் அந்த உருவம் தோன்றி 'நான் தான் உன் மரணம், நீ இந்த குறிப்பிட்ட இடத்தில் சாகவேண்டும் என்று விதி இருந்தது, உன்னை இங்கே வரவழைக்க தான் அப்படி சொன்னேன்' என்றதாம்.ஆம் கடவுளால் கூட மரணத்தை வெல்லும் வரம் அளிக்க முடியாது.ஒரு ஜோக் இப்படி வேடிக்கையாக இருந்தாலும் எல்லாரும் இறந்து தான் ஆகவேண்டும் என்ற மாபெரும் தத்துவத்தை சொல்கிறது.

மொக்கை சாமி , மொக்கை சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். கடவுள் நேர்ல வந்து 'என்னடா வரம் வேணும்?னு கேட்டாராம். இவன் சொன்னானாம்: 'கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது' 'அப்படியே ஆகுக' ன்னு சொல்லிட்டு போயிட்டாராம் கடவுள். ரொம்ப நாள் காட்ல தவம் இருந்த இறுமாப்புல நடந்து வந்துட்டு இருக்கறப்ப ஒரு சாமியார் எதுர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாராம். இவன் சொன்னானாம் : "மொக்கை மாமி" பாவம் அவனுக்கு 'சா' வே வரலை' !


சில நேரங்களில் நாம் சிலரது மரணங்களை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். நம் தாத்தாக்கள் சீக்கிரமாகவே இறந்து விட வயதான பாட்டிகள் நீண்ட நாட்கள் படுக்கையில் இருக்கிறார்கள். எங்கள் சொந்தக்கார பாட்டி ஒருவர் செஞ்சுரி போட்ட பின்னும் இருந்தார். 'ஐயோ பகவான் என் சீட்டை தொலைச்சுட்டான் போல இருக்கே' என்று புலம்புவார். (ஆனால் பகவான் யாருடைய சீட்டையும் தொலைப்பதே இல்லை. லாக்கரில் அது பத்திரமாகத் தானிருக்கிறது)இப்படிப்பட்ட சாவுகளை 'கல்யாண சாவு' என்பார்கள். ஒரு கல்யாணம் போல விமரிசையாக,தடபுடலாக அந்த ஆத்மாவை வழி அனுப்பி வைப்பார்கள். ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவன் இறுதி ஊர்வலத்துக்கு வரும் கூட்டத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்பார்கள். ஆனால் இது எப்போதும் உண்மை அல்ல. பாரதியாரின் இறுதிச் சடங்குக்கு மூன்று பேர் தான் இருந்தார்களாம்.ஹிட்லர் ஒரு அனாதை போல தற்கொலை செய்து கொள்கிறான்!

விகடனில் எப்போதோ வந்த ஒரு கவிதை இப்படி சொல்கிறது:

வெட்டியானுக்கு அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது
உறவுகளுக்கு எல்லாம் ஃபோன் செய்து சொல்லியாகி விட்டது
தப்பட்டை பாடை சட்டி எல்லாம் ரெடி
பேங்கில் இருந்து பணம் எடுத்தாகி விட்டது
அய்யர் இருக்கிறாரா என்று ஊர்ஜிதம் செய்தாகி விட்டது
குழந்தைகளை அத்தை வீட்டில் விட்டாகி விட்டது
இனி தாத்தா சாவது தான் பாக்கி!


நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் மரணம் நம்மை பெரிதாக பாதிப்பதில்லை.சாலை விபத்துகளில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று அசுவாரஸ்யமாக செய்திகளைக் கேட்கிறோம்.செய்தித்தாள்களில் காலமானார், இறைவனடி சேர்ந்தார், இயற்கை எய்தினார்,விண்ணுக யாத்திரை சென்றார் (இது கொஞ்சம் ஓவர், என்னமோ அமெரிக்காவுக்கு பிளைட் ஏறின மாதிரி) என்று வரும் அறிவிப்புகளை வெறுக்கிறோம். டி.வியில் சாவை முன்னிறுத்தி ஏராளமான காமெடிகள் வருகின்றன. விவேக் பிணத்தின் மேல் போட்டிருக்கும் மாலையை 'அபேஸ்' செய்யும் போதோ , வடிவேலு தன் டீக்கடைக்கு முன் பிணத்தை வைக்கும் போது அவஸ்தைப்படும் போதோ நாம் வாய்விட்டு சிரிக்கிறோம். ஆனால் நமக்கு நெருங்கியவர்கள் யாராவது இறக்கும் போது தான் அதன் வலி நமக்குத் தெரிகிறது.

இப்போது ஒரு கவிதை:

ஈசன் கணக்கு:

கோவிந்தன்
வங்கி சென்று இரண்டு லட்சம் டெபாசிட் செய்தார்...
வரும் வழியில் இரண்டு பிளைட் டிக்கெட் புக் செய்தார்...
மகளுக்கு போன் செய்து
"நான் இருக்கிறேன் கவலைப்படாதே" என்றார்...
கார் ஷோ ரூமில் லேட்டஸ்ட் காரின் விலை விசாரித்தார்...
வீடு வந்து சாப்பிட்டு
நெஞ்சு வலி என்று சரிந்தார்...
டாக்டர் வந்து பார்த்து விட்டு
"ஆள் போய் பத்து நிமிடம் ஆச்சு " என்றார்...


சரி நல்ல நாள் அதுவுமாக (கிருஷ்ண ஜெயந்தி) என்ன அமங்கலமான பேச்சு? நாமெலாம் சாக மாட்டோம்.ஒரு ஓஷோ ஜோக் பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று கிருஷ்ணனுக்கு அவசர அவசரமாக பூஜை செய்து விட்டு பிரசாதம் ஆன பின்பு நகப்பழத்தையும் வெண்ணையையும் நாமே தின்னலாம்.

ஒரு நாள் முல்லா நசுருதீன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். தனக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்திருப்பவனைப் பார்த்து 'ஸ்டேஷன் வந்ததும் என்னை எழுப்பி விடு' என்று சொல்லி ஒரு இருபது ரூபாய் அவனுக்கு கொடுத்து விட்டு நன்றாக தூங்கி விட்டார். அந்த ஆள் ஒரு பார்பர். எனவே முல்லா கொடுத்த இருபது ரூபாய்க்கு அவர் தூங்கும் போது அவருக்கு
நன்றாக மழிக்க சவரம் செய்து விட்டு விட்டான்.
ஸ்டேஷன் வந்ததும் அவரை எழுப்பி விட்டான்.முல்லா, வீடு வந்து சேர்ந்து முகம் கழுவலாம் என்று பாத்ரூம் சென்று கண்ணாடியைப் பார்த்தார். தான் பார்ப்பதை நம்ப முடியாமல் 'அடப்பாவி, அந்த ஆள் வேறு யாரையோ எழுப்பி விட்டு விட்டானே' என்றார்.



சமுத்ரா






19 comments:

Katz said...

கலக்கல் கலைடாஸ்கோப்.

//ரஜினி பாஷையில் சொல்வதென்றால் 'மீன் செத்தால் கருவாடு, நீ செத்தால் வெறும் கூடு' //

ரஜினிதான் சொன்னாரா?

//"மொக்கை மாமி" பாவம் அவனுக்கு 'சா' வே வரலை' ! // மொக்கை ஜோக். ;-)

இராஜராஜேஸ்வரி said...

பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வச்சாரு-இவரு
போன வருஷம் மழையை நம்பி விதை விதைச்சாரு....
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு ... ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு -!!!!

ஈசனே போட்ட கணக்கல்லவா??

Chitra said...

மனிதனைப் பொறுத்தவரை அவனுக்கு ஒவ்வொரு மரணமும் அகாலம் தான். (EVERY DEATH IS UNTIMELY )ஆனால் மேலே இருக்கும் எமனுக்கு ஒவ்வொரு மரணமும் காலத்திய மரணம் தான் (EVERY DEATH IS TIMELY ) ...ஆம். அவன் கணக்கு வேறு.நாம் போடுவது தப்புக்கணக்கு.


..... இந்த உண்மை தெரிந்து இருந்தும், மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது.

Aba said...

ரைட்டு.. நான் பதிவுலகில புகுந்ததும் எழுதனும்னு பிளான் போடுறத எல்லாம் எல்லாரும் எழுதி முடிக்கிறாங்க.. (அல்லது நீங்க எல்லாரும் எழுதற பாத்துதான் நான் பிளான் போடுறேன் போலிருக்கு..)

//சித்திர குப்தனை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அவன் வைத்திருக்கும் புத்தகம்//

இன்னும் பழைய காலத்துலேயே இருந்தா எப்படி? டெக்னாலஜி வளர்ந்துடிச்சு சார்.. அவரு எப்பவோ ஆப்பிள் ஐபேட்-டுக்கு மாறியிருப்பாரு..

//சில LOOPHOLE கள் காரணாமாக கடவுள்களால் கொல்லப்படுவார்கள்.//

ராகு, கேது, சூரபத்மன், எஸ்கேப்பா?

//இனி தாத்தா சாவது தான் பாக்கி! //

"ஹையா..தாத்தா செத்துட்டாரு..." -எம்மகன்

//விண்ணுக யாத்திரை சென்றார் (இது கொஞ்சம் ஓவர், என்னமோ அமெரிக்காவுக்கு பிளைட் ஏறின மாதிரி)//

LOL :) யூரி ககாரின்?

//நெருங்கியவர்கள் யாராவது இறக்கும் போது தான் அதன் வலி நமக்குத் தெரிகிறது. //

நாம் சாகும்போது வலிப்பதில்லை.. நிம்மதி.. ஆனால் தெரிந்தவர் சாகும்போதுதான்- நேற்றுவரை நம்மோடு ஓடி விளையாடி, சிரித்து பேசியவர், இந்த நொடிமுதல் இல்லை எனத் தெரியும்போது நெஞ்சில் சுருக்கென ஒரு வலி..- சாவின் மறுபக்கம் தெரிகிறது.. தனியாக, அனாதையாக சாவது கஷ்டமில்லை.. நாம் செத்தால் அழுவதற்கு சில ஜீவன்கள் இருக்கின்றதே எனும்போதுதான் சாவைக் கண்டு பயப்படுகின்றோம்...

முல்லா ஜோக் சூப்பர்...


நபிகள் நாயகம், புத்தர் :))

Aba said...

//மரணத்துக்குப் பிறகு என்ன ஆகிறது என்பது மனிதனுக்கு புதிராகவே உள்ளது. மரணம் என்பது தூங்குவது போல என்றும் உடைமாற்றுவது போல என்றும் ஞானிகள் சொன்னாலும்//

இதை நான் ஏற்பதில்லை.. என்னைக் கேட்டால் (கேட்கப்போகிறீர்களா என்ன?) உடம்பு ஒரு இயந்திரம் / தொழிற்சாலை, அதன் இயங்குதளம், மென்பொருள் மனம்.. உடல் ஒரு கட்டத்திற்கு பின் வேலைசெய்யாமல் போனதும், மென்பொருள் தன வேலையை நிறுத்திவிடுகின்றது.. அந்த மென்பொருளுக்கு பல மாய சக்திகள் இருக்கலாம் (telepathy-wifi, etc..), ஆனால் இயந்திரம் இன்றி, ரத்தமின்றி, ஆக்சிஜன் இன்றி அதனால் செயற்பட முடியாது.. எனவே மறுபிறவியை எல்லாம் நான் நம்புவதில்லை.. இந்த மறுபிறவிச் சித்தாந்தம், ஓவராக கேள்வி கேட்பவர்களை அடக்கவும், கர்மா எனும் கொள்கைக்கு எளிய உதாரணமாகவே பயன்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்.. ஒருவேளை மறுபிறவி இருந்தால், அது மனிதனுக்கு மட்டும்தானா? இல்லை மற்ற விலங்குகள், தாவரங்கள், பக்டீரியாக்கள் போன்றவற்றுக்கும் பொருந்துமா? அவையும் உயிர்தானே? Then What about alien life? எனவே என்னைப்பொறுத்தவரை, மரணத்துக்கு பின் nothing.., முடக்கப்பட்ட ஒரு கணினியைப்போல்தான்..

மரணத்தைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.. நாம் இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வந்தபின் நாம் இருக்கப்போவதில்லை.. -Unknown (to me)

Mohamed Faaique said...

கலைடாஸ்கோப் வழமைபோல் சுவாரஸியமாக இருக்கும்`னு வந்தா மரணத்தை பற்றீ சொல்லி பயம் காட்டி விட்டீங்களே பாஸ்!!!!

HVL said...

ரொம்ப யோசிக்க வச்சுட்டீங்க!

Philosophy Prabhakaran said...

பாதி பதிவு தான் படித்தேன்... அதுக்குள்ளே வவுத்துல இருந்து கடமுட கடமுடன்னு சவுண்ட் வர ஆரம்பிச்சிடுச்சு... ஒருவேளை இதுக்கு பேர்தான் பின்னவீனத்துவமா...???

நெல்லி. மூர்த்தி said...

சமுத்ரா.. நீங்க எங்கயோ போய்கிட்டிருக்கீங்க.. கொஞ்சம் அமைதியாக யோசித்தால்... நாம் ஏன் பிறந்தோம்? வாழ்வின் இலக்கு என்ன? ஒவ்வொரு உயிரியின் படைப்பின் நோக்கம் தான் என்ன? இருப்பதாலோ இறப்பதாலோ யார் யாருக்கு என்னென்ன ஆதாயம்/இழப்பு?... இது போன்ற நிறையக் கேள்விகள் எழும். பதில் தெரியாதக் கேள்விகள் நிறையவே உண்டு. இம்மை என்பதே உண்மை! மறுமை என்பது கற்பனையே! இது கெளடில்ய புத்தராகட்டும்... நம் நண்பர் அபராஜிதனாகட்டும்... இவர்கள் கூறுவது தான் சரியெனத் தென்படும். அடுத்த பிறவி என்ற ஒரு கற்பனையை விதைப்பதின் மூலம், பயத்தின் காரணமாகவாவது ஒரு குறிப்பிடும்படியான் மக்கள் தொகை மனிதநேயத்துடன் மக்கள் நல நற்பணியில் இயங்குகின்றனர். மரணத்தின் வாயிலாக நிறையச் சிந்தனைகளைக் கிளறி விட்டீர்கள். மனதிற்கு நிறைவாக இருக்கின்றது.

G.M Balasubramaniam said...

மரணம் பற்றி நான் எழுதினால், நான் அப்படி எழுதுவது பிடிக்கவில்லை என்று பின்னூட்டம் வருகிறது. இருந்தாலும் மரணத்தைப் பற்றிநிறைய எழுதலாம். கற்பனை சிறகடிக்கலாம். வாழ்வின் விளிம்பில் என்ற என் சிறுகதை படித்துப் பாருங்கள் . சாவின் விளிம்பில் இருந்தவனின் கதைக்கு வாழ்வின் விளிம்பில் என்று வைத்தேன் . இருந்தால்தானே படிப்பார்கள்.

Aba said...

@நெல்லி. மூர்த்தி,

//ஒரு குறிப்பிடும்படியான் மக்கள் தொகை மனிதநேயத்துடன் மக்கள் நல நற்பணியில் இயங்குகின்றனர்.//

சார், ஏதோ ஒண்ணு ரெண்டு பேர குறிப்பிடத்தகுந்த மக்கள்தொகைன்னு சொல்றது அபத்தம்.. அப்படியே மறுபிறவிய நம்புறவங்க கூட அதுல சாக்கு கண்டுபுடிச்சு எஸ்கேப் ஆயிடுறாங்க..

ஒரு சின்னக் கதை..
ஒரு மாணவன் நாயொன்றை மரத்தில் கட்டி அடித்துக்கொண்டிருந்தானாம்.. அதைக்கண்ட அவனது ஆசிரியர் "இப்போ நீ இந்த நாய அடிச்சா, அடுத்த பிறவில நீ நாயாப் பிறந்து மனுஷனாப் பிறக்கற இந்த நாய்கிட்ட அடி வாங்குவே.." என்றாராம்.. அதற்கு மாணவன் அசால்ட்டாக "சரிதான் சார், ஆனா போன பிறவில நாயாப் பிறந்த என்ன, இந்த நாய் மனுஷனாப் பிறந்து அடிச்சுதே, அதுக்குத்தான் இப்போ தண்டன கொடுத்துட்டிருக்கேன்" என்றானே பார்க்கலாம்..

ஒழுக்கம் என்பது உள்ளார்ந்த கட்டுப்பாட்டில் வரவேண்டும், அதைப் பயத்தால் கொண்டுவர முனைந்தால், Evil will find it's way out...

சமுத்ரா said...

அபராஜிதன் , உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? :)

Jayadev Das said...

\\பரீட்சித்து எழு கோட்டைகளுக்கு உள்ளே கனமான பாதுகாப்புகளுடன் ஒளிந்து கொண்டாலும் எலுமிச்சம் பழத்தில் புகுந்து அவனைக்கொல்ல பாம்பு வந்து விடும்!\\பரீஷித் மகாராஜா நிஜமான மாவீரன், தூய விஷ்ணு பக்தர். அது போன்றவர்கள் என்றென்றைக்கும் சாவைப் பார்த்து பயப்படமாட்டார்கள், ஓடி ஒழிய மாட்டார்கள். அவருக்கு ஏழு நாட்களில் மரணம் சம்பவிக்கட்டும் என்று ஒரு பிராமணச் சிறுவன் சாபம் கொடுத்து விட்டான், காரணம் அவனது தந்தையை பரீஷித் மகாராஜா அவமானப் படுத்திவிட்டதாக அவன் நினைத்தான். இதைக் கேள்விப்பட்ட பரீஷித் மகாராஜா மிகவும் மன நிறைவு பெற்றதாக பாகவதம் கூறுகிறது. அதன் பின்பு, இந்த ஏழு நாட்களில் என்ன செய்வது உசிதமாக இருக்கும் என்று கேட்ட போது, ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பது நல்லது என்று ரிஷிகள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்கின்றனர். அங்கே சுக முனி வந்து சேர்கிறார், ஏழு நாட்களும் ஸ்ரீமத் பாகவதத்தை போதிக்கிறார். ஏழாம் நாள் தன்னுடைய உடலுக்கு நெருப்பு பிடிக்குமாறு பரீஷீத்தே செய்து மறைகிறார். உண்மைக் கதை இப்படி இருக்க, அவர் மரணத்தை கண்டு ஓடி ஒழிந்ததாக யாரோ கயவர்கள் கதை கட்டியுள்ளனர். இப்படி ஆள்லாலுக்கு கயிறு திருப்பதுதான் நமது ஆட்களிடமுள்ள பெரிய குறை.

சமுத்ரா said...

J.D, good ..அந்த 'கயவர்கள்' லிஸ்டில் நானும் இருக்கேனா? நன்றி..:)

Jayadev Das said...

பகவத் கீதையின் படி, உண்மையில் யாருக்கும் மரணம் என்று ஒன்று இல்லவே இல்லை. நாம் அணிந்து கொள்ளும் ஆடைகள் பழையதாகே கிழிந்து உபயோகமற்று போகும் போது, அவற்றை விடுத்து புதிய ஆடைகளை உடுத்திக் கொள்வது போல, இந்த உடலில் சிறை பட்டிருக்கும் ஆன்மாவானது இந்த உடல் உபயோகமற்ற நிலைக்குச் செல்லும் போது, இதிலிருந்து வெளியேறி வேறு உடலை ஏற்றுக் கொள்கிறது, அழிவது உடல் மட்டுமே, உள்ளேயிருக்கும் ஆளுக்கு ஒருக்காலமும் அழிவில்லை. அவன் பிறக்கவுமில்லை, மாறுவதுமில்லை, மரணமடைவதுமில்லை.

Jayadev Das said...

dehino 'smin yatha dehe
kaumaram yauvanam jara
tatha dehantara-praptir
dhiras tatra na muhyati

[B.G 2.13]

TRANSLATION
As the embodied soul continuously passes, in this body, from boyhood to youth to old age, the soul similarly passes into another body at death. A self-realized soul is not bewildered by such a change.

Jayadev Das said...

na jayate mriyate va kadacin
nayam bhutva bhavita va na bhuyah
ajo nityah sasvato 'yam purano
na hanyate hanyamane sarire
[B.G 2.20]

For the soul there is never birth nor death. Nor, having once been, does he ever cease to be. He is unborn, eternal, ever-existing, undying and primeval. He is not slain when the body is slain.

Jayadev Das said...

vasamsi jirnani yatha vihaya
navani grhnati naro 'parani
tatha sarirani vihaya jirnany
anyani samyati navani dehi
[B.G 2.22]

As a person puts on new garments, giving up old ones, similarly, the soul accepts new material bodies, giving up the old and useless ones.

Aba said...

//அபராஜிதன் , உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? :)//

நாங்கெல்லாம் வருஷத்துக்கு ஒரு வெப்சைட்ட புடிச்சு இப்படி கமெண்ட் பண்ணுவோம். அதுல சிலது சீரியஸ் (eg: மேலிருப்பான் சாரோட சைட், சமுத்ரா) சிலது சிரியஸ் (ப்ளீஸ் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, வரசித்தன் பக்கங்கள்) முன்னாடியெல்லாம் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் comment feed எடுத்து கமெண்ட்-க்கு வெயிட் பண்ணுவேன்.. இப்போ chrome extension ஒண்ணோட புண்ணியத்துல ஈசியா கமென்ட் செக் பண்ண முடியுது..

இப்போ Sri Lankan O/L (Indian 10th std equivalent) க்கு படிக்கறதனால (2011 December) கடமை உணர்ச்சி கொஞ்சம் கட்..