இந்த வலையில் தேடவும்

Wednesday, January 12, 2011

கலைடாஸ்கோப்-1

லைடாஸ்கோப் என்ற தொடருக்கு உங்களை வரவேற்கிறேன்...

ஒரு சின்ன முன்னுரை
====================

'கலைடாஸ்கோப்' பலதரப்பட்ட விஷயங்களின் கலவையாக இருக்கும் ...நம் எழுத்தின் மூலம் பலதரப்பட்ட, வெவ்வேறு ரசனை கொண்ட வாசகர்களைக் கவர வேண்டும் என்பதில் எல்லாருக்கும் விருப்பம் தான்..ஏனென்றால் ஜோக்குகளை மட்டும் படித்து ரசிக்கும் கூட்டம் இங்கே இருக்கிறது. சிலர் கவிதைகளை மட்டும் தேடிப் பிடித்து படிக்கிறார்கள்.சிலர் அரசியல் இல்லை என்றால் பதிவுகளைப் படிப்பதே இல்லை..அறிவியலைப் பற்றி எழுதினால் 'நன்றாக இருக்கிறது' என்று சொல்லும் நிறைய பேர் அதே பதிவர் ஒரு கவிதை எழுதினால் எதோ அவர் செய்யக் கூடாத ஒன்றை செய்து விட்டது போல நினைக்கிறார்கள்..ஆம் அறிவியலும் கவிதையும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான விஷயங்கள் தான்.. ஜே.ஜே.தாம்சன் எலக்ட்ரானை கண்டுபிடித்து விட்டு லேபை விட்டு வெளியில் ஓடி வந்து "பொன் சுமக்காமல் மின் சுமந்த ஒரு மங்கையைக் கண்டேன்..அவள் அணுவினும் சிறியவள், அணுவை சதா சுற்றிக்கொண்டு திரிபவள்' என்றெல்லாம் கவிதை பாடினால் அது ஏற்புடையதாக இருக்காதுதான்.. என்னதான் சொன்னாலும் LIFE IS MIX OF CONTRADICTING THINGS இல்லையா?இனி முதல் பகுதி....


கொஞ்சம் இலக்கியம்
===================

நகைச்சுவை என்பது தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றிக் கலந்த ஒரு விஷயம். இது நாமெல்லாம் பெருமைப்படவேண்டிய விஷயமும் கூட..பெங்களூருவில் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் கன்னடத்துக்காரர் ஒருவர் "உங்கள் நகைச்சுவை உணர்வை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது" என்றார்..இப்படிப்பட்ட அருமையான ஓர் உணர்வை இன்றைய திரைப்படங்களில் ரொம்பவும் கொச்சைப்படுத்துகிறோமோ என்று தோன்றுகிறது. 'பன்னி வாயா' 'நாற வாயா' என்று விளிப்பதும்,இரட்டை அர்த்தங்களில் பேசுவதும் தான் நகைச்சுவை என்று நினைக்கும் சிலர் 'காளமேகப்' புலவரின் பாடல்களை ஒரு தமிழ் அகராதியின் துணையுடன் படிப்பது நல்லது.

விநாயகர் சதுர்த்தி முடிந்து வீதியில் வகை வகையாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் வரும் போது நாம் என்ன செய்வோம்? வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போம்.பக்கத்தில் வந்ததும் போய் காணிக்கை போட்டு விபூசி பூசிக் கொள்வோம்...ஆனால் காளமேகப் புலவர் விநாயகர் வீதியில் ஊர்வலம் வருவதைப் பார்த்து விட்டு எப்படி ஜோக் அடிக்கிறார் பாருங்கள்..இது வெறுமனே ஜோக் அல்ல..இதை 'நிந்தாஸ்துதி' என்பார்கள்...அதாவது இகழ்வது போல புகழ்வது..

மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ- மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகின்றது ,ஏன்?

ஓகே..புரியாதவர்கள் இந்த விளக்கத்தைப் படிக்கவும். புரிந்தவர்கள் அடுத்த பகுதிக்குப் போகலாம்..

"பரமசிவன் கையில் ஏந்தும் மழுவும், திருமால் கையில் இருக்கும் சுதர்சனமும், யமன் கையில் ஏந்தும் கதையும் எங்காவது காணாமல் போய் விட்டதா என்ன? இவ்வளவு பேர் இருந்தும் மிகுந்த வலிமை கொண்ட இந்த மதயானையை ஒரு பெருச்சாளி இழுத்துக்கொண்டு போகிறது பாருங்கள்..."- இதைப் படித்ததும் நாம் இன்று சொல்லிக் கொண்டிருக்கும் 'கடி' ஜோக்குகளையும் நினைத்துக் கொள்ளுங்கள்..

கொஞ்சம் இசை
==============

நீங்கள் கர்நாடகாவில் இருந்தால் நிச்சயம் 'பாவ கீதே' (bhaava geethe ) என்ற ஒன்றைக் கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால் 'இசையமைக்கப்பட்ட கவிதை..'தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்று, மிகக் கடினமான கர்நாடக இசை தமிழில் இருக்கிறது;அடுத்து இன்னொரு extreme ஆன சினிமா குத்துப் பாட்டுக்கு கீழிறங்கி வந்து விடுகிறோம் நாம். இவை இரண்டுக்கும் நடுவில் சாதாரண வாழ்க்கையின் அன்பு, கோபம், காதல், பிரிவு, நட்பு,பாசம் போன்ற உணர்சிகளைப் பிரதிபலிக்கும் மெல்லிசைப் பாடல்கள் இவை..இந்த 'பாவ கீதே' என்பது கர்நாடகத்திற்கு மட்டும் உரிய ஒரு பெருமை. புகழ் பெற்ற கன்னடக் கவி
ர் 'குவெம்பு' நிறைய பாவ கீதைகள் இயற்றியிருக்கிறார்.
உணர்ச்சிப் பூர்வமான கவிதைகள் இவை..உதாரணமாக சில

"தனுவு நின்னது"
"ராயரு பந்தரு மாவன மனேகே"
"ஒந்து முன்ஜாவினலி"

சின்னக் கண்ணன் வெண்ணை திருடி விட்டு தன் அம்மாவிடம் "அம்மா கடவுள்(?) சத்தியமாக நான் வெண்ணை திருடவில்லை " என்று பொய் சத்தியம் செய்து மன்றாடும் "அம்மா நானு தேவராணே " என்ற பாடல் மிக அருமை..எல்லாரும் வேண்டுமென்றே அவன் வாயில் வெண்ணையைத் திணித்து விட்டார்களாம். மேலும், அவ்வளவு உயரத்தில் இருக்கும் வெண்ணையை தன் பிஞ்சுக் கைகளால் எப்படி எடுப்பேன் என்று கேட்கிறான் கண்ணன்..இறுதியில் "கண்ணா, நீ பொய் சொல்வது கூட அழகு தான்" என்று அவனை அணைத்துக் கொள்கிறாள் யசோதா.

கொஞ்சம் கோபம்
===============

'ரியாலிடி ஷோ'
களின் ---தனத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. புகழ்பெற்ற(?) சேனல் ஒன்று நடத்தி வரும் ஒரு ரியாலிடி ஷோவில் நகரத்து இளைஞர்கள் காட்டுக்கு சென்று ஆதிவாசிகள் போல வாழ வேண்டுமாம்..இந்த சானல் இருப்பது முந்தைய பகுதியில் நம்மால் புகழப்பட்ட 'கர்நாடகா'வில் தான். அந்த ஷோவில் வரும் ஒரு காட்சி (போட்டி) சொல்வதற்கே அருவருப்பாக இருக்கிறது. .(வெஜிடேரியன்கள் அடுத்த பகுதிக்கு தாவவும்..)கொல்லப்பட்ட பன்றியின் உடல்கள் ஒரு நீண்ட குச்சியில் மாட்டி தலைகீழாக தொங்கவிடப்பட்டிருக்கும். அதை கை பின்னால் கட்டப்பட்ட வீரர்கள் (?) பற்களால் கடித்து வாயை மட்டும் உபயோகித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் இறைச்சியை ஒரு தட்டில் சேகரிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் அதிக இறைச்சியை சேகரிக்கிரார்களோ அவன் தான் 'ஹீரோ' ..

நீங்கள் விளையாடுவதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா? அப்பாவி பன்றிகளைத் தவிர? ஏன் இதற்கு எதிராக யாருமே அங்கே குரல் எழுப்பவில்லை? இது தான் வீரமா? நம்
இளைஞர்கள் எப்படியெல்லாம் 'ரியாலிடி ஷோ' க்களின் மூலம் முட்டாளாக்கப்பட்டு வருகிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. கொடுமை என்னவென்றால் இளைஞர்கள் பன்றி 'சாதனை' நிகழ்த்தும் போது பின்னால் இருந்து யுவதிகள் சிலர் 'கம் ஆன்' 'கம் ஆன்' என்று கத்துவதும் ,குறைந்த அளவு பன்றியைக் கடித்த 'loser ' என்னவோ வாழ்க்கையையே இழந்தது போல 'போஸ்' கொடுப்பதும் தான். திருந்துங்கப்பா!

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு.
===============================

தேர்தல் ஆணையம் ஓட்டுப் போட்டவர்களுக்கு ரசீது கொடுக்கலாம் என்று யோசித்து வருகிறதாம்..(ஹையா ஜாலி!) நம் நாட்டுக்கு இது இப்போது ரொம்ப முக்கியம் தான்..இதை நிறைவேற்றுவதன் மூலம் நம் நாட்டை வல்லரசாக மாற்ற அரசியல்வாதிகள் பாடுபடுவதால் அவர்களை வாயார வாழ்த்துவோம்..

கொஞ்சம் இரங்கல்
===================


காமெடி நடிகை 'ஷோபனா' தற்கொலை செய்து கொண்டு விட்டாராம்.. சன் டிவி.யில் வரும் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' 'சூப்பர் டென்' போன்ற நகைச்சுவை நிகழ்சிகளில் இவரைப் பார்த்திருக்கலாம்..அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

ஒரு ஜோக்
===========
முல்லா நசுருதீன் நன்றாகக் குடித்திருந்தார். கண்ட்ரோலை முழுவதும் இழந்து விட்டிருந்தார். வீட்டுக்கு போவதாக நினைத்துக் கொண்டு ஒரு மிருகக் காட்சி சாலைக்கு சென்று விட்டார். ஒரு காண்டா மிருகத்தின் முன்னே போய் நின்றார்..மெல்ல தலையை உயர்த்தி அதைப் பார்த்து " கோபப்படாதே, கத்தாதே, நான் எல்லாத்தையும் சொல்லிர்றேன்" என்று அசடு வழிந்தார்...


ஒரு ஓஷோ 'Quote '
===================
விழிப்புணர்வு உங்களிடம் இல்லையென்றால் நீங்கள் அறுபது வருடம் வாழ்கிறீர்களா, எழுபது
வருடம் வாழ்கிறீர்களா, நூறு வயது வாழ்கிறீர்களா என்பது பொருட்டே இல்லை. ஆனால் விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால் ஒரே ஒரு கணம் மட்டுமே போதுமானது.

~சமுத்ரா

9 comments:

ரேவா said...

விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால் ஒரே ஒரு கணம் மட்டுமே போதுமானது.
===============================
அருமையானா வண்ண கலவைகள்... மிகவும் ரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி நண்பரே....

அன்புடன் நான் said...

உங்க கலவை பகிர்வு நல்லாயிருக்குங்க ....
அந்த பன்றி செய்தி கேக்கவே அருவருப்பா இருக்குங்க....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

bandhu said...

கலைடாஸ்கோப் நல்ல கலவை. அந்த அருவருப்பான ரியாலிட்டி ஷோ வழக்கம் போல் வெளிநாட்டு ப்ரோக்ராமின் காபி! Lost என்பது அந்த ப்ரோக்ராமின் பெயர். இங்கு பெரிய அளவு பேசப்பட்டது. நம்ம ஊர் டிவிக்களுக்கு பெரிய சக்செச்சும் வேண்டும். அந்த ஐடியாவிர்க்காக செலவும் பண்ண கூடாது. பிறகு எப்படி வரும். இப்படி தான்!

Chitra said...

இப்படிப்பட்ட அருமையான ஓர் உணர்வை இன்றைய திரைப்படங்களில் ரொம்பவும் கொச்சைப்படுத்துகிறோமோ என்று தோன்றுகிறது.


...... Maybe..... :-)

arasan said...

பலதரப்பட்ட பதிவுகள் அருமை

நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

Philosophy Prabhakaran said...

உங்க பல்சுவைப் பகுதி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பா...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

Unknown said...

அதே நிலமைதன் பிரான்ஸ் ரியல்டி சோக்களுக்கும் கடந்த சில வாரங்களில் வந்த நிகழ்சிகள்,
01.ஒருவகை பூச்சிகளை யார் அதிகமாக சப்பிடுகிறார் வின்னர் ஹம்
02.அட்டைகளுடன் ஒரு பெட்டியில் அதிக நேரம் இருப்பவர் வின்னர்
இப்படி பார்க்கவே சகிக்கலை,

Aba said...

//ஆம் அறிவியலும் கவிதையும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான விஷயங்கள் தான்.. //

மிகவும் உண்மை.. நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என இருந்து விடயத்தை நினைவுபடுத்தி விட்டீர்கள். உண்மையில் அறிவியல் மூளையினால் கவிதையைச் சிந்திப்பது மிகக் கடினம். எப்போதுமே ஏன்? எதற்கு? எப்படி? எவ்வளவு? எனக் கணக்குப் போட்டுக் கணக்குப் போட்டுப் பழகிய மூளை கவிதையையும் கணக்குப் போட்டே பார்க்கிறது. நானும் சில கவிதைகள் எழுதி பள்ளியில் பரிசு பெற்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு கவிதையையும் எழுதும்போது சிறிது யோசித்து வார்த்தைகளை செலக்ட் செய்து அசை பிரித்தே எழுதமுடிகிறது. இயல்பாக, உணர்ந்து பொழுதுபோக்காக கவிதை எழுதும் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லை.. (இருந்தும் கதைகள், நாவல்கள், கவிதைகள் வாசிக்கையில் கற்பனைக்குப் பஞ்சமில்லை)நீங்கள் இரண்டையும் சமமாக பாலன்ஸ் செய்து செல்வது வியப்பாக உள்ளது.

Aba said...

//கொஞ்சம் கோபம்//

உண்மைதான்.. நீங்கள் வெஜிடேரியனா?

டிஸ்கவரி சானலில் Man vs Wild பார்த்திருக்கிறீர்களா? இதுபோலத்தான். ஆனால் மிக நல்ல ஷோ.. வித்தியாசமான இடங்களுக்கு சுற்றுலா சென்று தொலைந்து இறபப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க வித்தியாசமான இடங்களில் உயிர்பிழைப்பது எப்படி என ஒருவர் செய்துகாட்டும் நிகழ்ச்சி.

"உயிர்வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியலாம்" என்பதை அடிப்படையாக கொண்டு பறப்பன, ஊர்வன, நடப்பன, மீன், நத்தை, புழு, பாம்பு, தேள் முதலிய அனைத்தையும் பச்சையாக உண்ணத் துணிவார். சிறுநீரைக் கூட குடித்து உயிர்வாழ்வார். எனது வீட்டில் என்னைத்தவிர யாருக்கும் பிடிக்காது. அனைவரும் அருவருப்பு என ஒதுங்கிவிடுவார்கள்.. ஆனால் வாழ்வின் நிதர்சனத்தை, இயற்கையின் சக்தியை புரியவைக்கும் நிகழ்ச்சி.