இந்த வலையில் தேடவும்

Monday, December 26, 2011

தேநீர்ப்பேச்சு- 4 (மார்கழி ஸ்பெஷல்)

தொடர்கிறது...

வாழ்க்கையில் தாழ்ந்த விஷயங்களுக்கு ஆசைப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது கிடைத்து விட்டாலும் மன நிம்மதி ஏற்படுவதில்லை.அதே சமயம் உயர்ந்த விஷயங்களுக்கு ஆசைப்படுபவர்கள் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த விஷயம் கிடைக்காவிட்டாலும் அதற்கு முயற்சியாவது செய்தோமே என்ற ஆழ்ந்த ஒரு ஆத்மத் திருப்தி கிடைத்து விடுகிறது . இதை தான் வள்ளுவர் சொல்றார்:

"கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"

-காட்டுக்கு வேட்டையாடப் போறோம். ஒரு சின்ன முயலை அம்பு எய்தி பிடிக்கறதில் என்ன பெருமை இருக்கிறது? யானையை குறிவைக்கணும் .யானை கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை;யானையை குறி வைக்கணும். நம்முடைய லட்சியம் உயர்ந்ததா இருக்கணும்.இந்தக் காலத்துல யானையோ முயலோ எதைக் குறிவைச்சாலும் புடிச்சு உள்ள போட்டுடுவா. அது வேற விஷயம்.

நாம எல்லாம் முயலின் பின்னாடியே ஓடிண்டு இருக்கோம்.பணம் என்கின்ற முயல், பதவி, பட்டம், பெருமை என்கின்ற முயல்
சமூக அந்தஸ்து, புகழ் என்கின்ற முயல்களின் பின்னே ஓடி நம் வாழ்க்கையை வீணடிக்கிறோம்.ஆனால் அந்த முயல் கிடைத்து விட்டாலும் பெரிதாக ஒண்ணும் நடந்து விடுவதில்லை. பணத்துக்காக கனவு காண்பவனுக்கு குறைந்த பட்சம் நாளை நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையாவது இருக்கிறது.ஆனால் பணம் புகழ் இது எல்லாம் கிடைத்து விட்டவனுக்கோ அதில் ஒண்ணுமே இல்லை,நாம மோசம் போயிட்டோம் என்ற விரக்தி தான் மிஞ்சுகிறது.




ஆண்டாள் போன்ற அடியார்களோ முயலின் பின்னே அலைவதை விட்டு விட்டு யானையை பற்றிக் கொண்டவர்கள். யானை என்றால் சாதாரண யானையா?இல்லை. கஜேந்திரன் என்ற யானையை ரட்சித்த யானை.குவாலய பீடம் என்ற யானையை வென்று அடக்கிய யானை. இருகை வேழத்து ராகவன் என்று இரண்டு கையுடைய யானை என்று கம்பரால் போற்றப்படும் யானை.சாமஜ வர கமனா என்று யானை போன்ற கம்பீரமான நடை கொண்டவன் என்று தியாகராஜரால் வர்ணிக்கப்படும் யானை.கம்பர் சொல்வது போல யானை தன் காலைப் பற்றியவர்களை தன் தலைக்கு மேலே தூக்கி வைக்கும்.வீரத்தில் யானையை நிகர்த்த ராமனும் தன் சரணங்களைப் பற்றியவர்களை உயர்வாகக் கொண்டாடுவான். ராமன் மட்டும் தான் யானையை நிகர்த்தவனா?கண்ணனும் யானையை ஒத்த
வீரமும் கம்பீரமும் கொண்டவன் தான். இதை ஆண்டாளே சொல்கிறாள் கேளுங்கள்

[சுவாமிகள் பாடுகிறார்: ராகம் சாவேரி]

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தேகாபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி(ப்)
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மதநீரை உடைய களிறு போன்ற கண்ணனைப் பிள்ளையாகப் படைத்த நந்தகோபன் என்கிறாள் ஆண்டாள். கண்ணன் தந்தை நந்தகோபன் ஓடாத தோள்வலியன் என்கிறாள்.போரில் புறமுதுகு காட்டி ஓடாதவன்.அப்படிப்பட்ட வீரனின் மகன் வீரனாகத்தான் இருப்பான் ; கண்ணன் மாவீரன் என்று சொல்லாமல் சொல்கிறாள்; கந்தம் கமழும் குழலி! வாசனை கொண்ட கூந்தல் ..இந்த இடத்திலே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பாவை நோன்பு நோற்ற போது பெண்கள் 'மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற சங்கல்பம் எடுத்துக் கொள்கிறார்கள்.அப்படியானால் உள்ளே இருக்கும் பெண் அந்த விதியை மீறி யாருக்கும் தெரியாமல் இரவு வாசனை மலர் சூட்டிக் கொண்டாளா என்று கேட்டால் அவள் கூந்தல் இயற்கையிலேயே மணக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்ற திருவிளையாடல் காலத்து வழக்கை ஆண்டாள் இங்கே நிரூபிக்கிறாள் போலும் .

ஆண்டாள் மட்டும் அல்ல, ஆயர்பாடியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தன்னை கண்ணனுக்கு மனைவியாகவும் நந்தகோபருக்கு மருமகளாகவும் பாவித்துக் கொள்கிறார்கள்.அவளைக் கூப்பிடும் போது ஆண்டாள் 'நந்தகோபர் மருமகளே' என்றே விளிக்கிறாள்.
மீராவைப் போல 'கண்ணன் எனக்கு மட்டும் தான்' 'மேரே தோ கிரிதர கோபாலா' என்று Possessive ஆக நினைக்காமல் ஆண்டாள், அவன் எல்லாருக்கும் நாயகன் என்ற பெருந்தன்மையில் பாடுகிறாள்.கோழி கூவியது என்றால் உள்ளே இருப்பவள் அது சாமக் கோழியாக இருக்கும் ;இன்னும் பொழுது விடியவில்லை என்று நினைத்துக் கொள்வாளோ என்று பார் மாதவிப் பந்தல் குயில்கள் எல்லாம் கூவின;விடிந்து நேரம் ஆகி விட்டது பார் என்கிறார்கள் தோழிகள்.உள்ளே இருப்பவள் சின்னப் பிள்ளை போல ஒரு பந்தை வைத்துக் கொண்டு தூங்குகிறாளாம். இந்தக் காலத்துப் பெண் பிள்ளைகள் teddy bear என்ற கரடி பொம்மையை வைத்துக்கொண்டு தூங்குவதைப் போல.இன்னும் விளையாட்டுப் பெண்ணாகவே இருக்கிறாயே! எழுந்திரு, விளையாட்டை விட்டுவிட்டு நாம் முக்தியடையும் வழியைப் பார்க்கலாம் என்று அர்த்தம்.

ஆகவே ஆண்டாள் போன்ற அடியார்கள் சிறிய சிறிய குறிக்கோள்களைப் பற்றிக் கொள்ளாமல் 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பது போல உயர்ந்த குறிக்கோளான பகவானையே பற்றுகிறார்கள்.ஒரு பெண், பெரிய இடத்துப் பையனை விரும்பி திருமணம் செய்து கொண்டால் அவளது தோழிகள் 'பரவாயில்லை, பிடிச்சது தான் பிடிச்சே, நல்ல புளியன்கொம்பாய் பிடிச்சிருக்கே' என்று கேலி செய்வார்கள்.ஆனால் ஆண்டாளோ இருப்பதிலேயே பெரிய இடத்துப் பையனைப் பிடித்திருக்கிறாள். சந்தனக் கொம்பைப் பிடித்திருக்கிறாள்; இந்தப் பிறவியில் ஒரு நரனைத் திருமணம் செய்து கொண்டு இந்தப் பிறவியின் பயனை நிறைவேற்றுவதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? நம் இறுதிக் குறிக்கோளான , எல்லாப் பிறவிகளின் பயனான பரமாத்மாவை காலம் தாழ்த்தாமல் இப்போதே பிடித்துக் கொண்டு விடலாம் என்று புத்திசாலித்தனமாக நினைக்கிறாள் ஆண்டாள்.ஒரு கட்டடத்துக்கு படிப்படியாக ஏறிப் போகாமல் லிப்டில் போகிறோமே அது மாதிரி!



ஆண் பிள்ளைகள் திருப்பாவை பாடினால் 'என்ன இது பெண் பிள்ளைமாதிரி பாடிக் கொண்டு' என்று சொல்லாதீர்கள். இந்த திருப்பாவை வெறுமனே ஒரு பெண் ஓர் ஆணை நினைத்துப் பாடுவது அல்ல. ஒரு ஜீவன் பரமாத்மாவை நோக்கிப் பாடுவது. எல்லா ஜீவாத்மாக்களுக்கும்,ஆணுக்கும்,பெண்ணுக்கும் நாயகன் அவன் ஒருவன் தான்.எல்லா ஜீவன்களும் ஆத்மரீதியாகப் பெண்கள் தான். மீராவின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாமியார் தன் வாழ்வில் பெண்களையே பார்ப்பதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தாராம். அவரது கிராமத்துக்கு ஒருமுறை வருகை தந்த பக்த மீரா அவரது சீடர்கள் தடுத்தும் கூட நிற்காமல் அவர் வீட்டுக்குள் நுழைந்து விட்டாளாம் . தவறுதலாக மீராவைப் பார்த்து விட்ட அவர் 'அய்யோ, என் சத்தியம் தவறி விட்டதே, என் தவம் முறிந்து விட்டதே' என்று புலம்பி அவள்மேல் கோபப்பட்டாராம். அவரைப் பார்த்து மீரா ,"நீங்கள் கிருஷ்ணாவின் பக்தராக இருந்து கொண்டு இன்னும் உங்களை ஆண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா, நான் பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆண்மகன் கிருஷ்ணன் மட்டும் தான் என்றல்லவா நினைத்தேன்" என்கிறாள். இதைக் கேட்ட அவர் மனம் மாறி மீராவின் காலில் விழுகிறார். பரமாத்மாவுடன் பக்தி கொள்ளும் சாதுக்கள் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் நாயகி மனோபாவத்துக்கு மாறி விடுகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த நாயகி பாவத்துக்கு எந்த அளவு தன்னை அர்ப்பணித்தார் என்றால் அபரிமிதமான பக்தியில் தனக்கு மாதவிலக்கு வருவதை அவர் உணர்ந்தாராம்!

எனவே பரமாத்மாவை விழைவது தான் ஒரு ஜீவனுக்கு அழகு; ஒரு ஜீவனுக்கு உண்மையான ஆனந்தம்.அதுதான் பிரம்மானந்தம்.

[ஸ்வாமிகள் பாடுகிறார்]

"அரவிந்தமுன ஜுசி பிரம்மானந்த மனுபவிஞ்சுவா
ரெந்தரோ மஹானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு "

ஆனந்தம் என்றதும் எனக்கு ஆனந்த பைரவி நினைவுக்கு வருகிறது.

[ஸ்வாமிகள் பாடுகிறார்: ராகம் ஆனந்த பைரவி]

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!



ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். ஆண்டாள் ஒரு பாசுரத்தில் கூட மணி ஐந்து ஆகி விட்டது, அஞ்சே முக்கால் ஆகி விட்டது ஆறு ஆகி விட்டது என்று சொல்லி தோழிகளை எழுப்புவதில்லை.இயற்கையின் விடியல் அறிகுறிகளை சொல்லி தான் எழுப்புகிறாள். இது, அந்தக் காலத்தில் எல்லாரும் மெஷின்களை நம்பாமல் இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்று காட்டுகிறது . நாமோ இன்று கடிகாரத்தையும் காலண்டரையும் நம்பி வாழ்கிறோம். இயற்கை நமக்கு சொல்லும் அறிகுறிகளை நாம் கவனிபப்தே இல்லை. இயற்கையின் கடிகாரமும் நம் உடலின் கடிகாரமும் ஒன்றிணைந்தால்தான் நாம் நோயில்லாத வாழ்க்கை வாழமுடியும்.

'உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்' என்கிறாள் . எங்கள் புழக்கடை என்று சொல்லவில்லை. விடிந்து விட்டது. அதன் அறிகுறிகளை நீயே கண்கொண்டு பார். சந்திரனின் ஒளியில் மகிழ்ந்திருக்கும் ஆம்பல் சூரியன் வருகிறான் என்று தெரிந்ததும் கூம்பி விட்டது பார் என்கிறாள். வெண்ணிற பற்களைக் கொண்ட தவ யோகிகள் காலை நேர சங்கு ஊத கோயிலுக்குப் புறப்பட்டு விட்டனர் பார் என்கிறாள்.யாருக்கு பல் வெண்மையாக இருக்கும்? எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு தான். அதைத் தான் ஆண்டாள் குறிப்பால் சொல்கிறாள். இன்று நாம் என்ன தான் காலையில் COLGATE WHITENING எல்லாம் போட்டு பல் விளக்கினாலும் காபி, டீ , பான்பராக், வெற்றிலை பாக்கு என்று போட்டுக் கொண்டே இருந்தால் பல் எங்கே வெண்மையாக இருக்கும்?

சரி.

மனிதன் எப்போதும் இரட்டை நாக்கு உடையவன். நேற்று ஒன்று சொன்னால் அதற்கு நேர்மாறாக இன்று வேறொன்று சொல்பவன். அந்தப் பெண் முந்தாநாள் சொன்னாளாம் "நாளைக்கு பார் உங்களுக்கு எல்லாம் முன்னால் எழுந்து கொண்டு நான் வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டுகிறேன் பார்' என்று. ஆனால்,இன்றோ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குகிறாளாம்.நாமும் இப்படி தான். நாளையில் இருந்து சிகரெட் பிடிப்பதை அடியோடு விட்டுவிடுகிறேன் பார் என்கிறோம். ஆனால் நாளை மீண்டும் அதையே செய்கிறோம். சரி இன்று ஒன்றே ஒன்று புகைப்போம் என்று சமாதானம் வேறு சொல்லிக் கொள்கிறோம். நாளையில் இருந்து கோபப்பட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறோம்.ஆனால் மறுநாள் அதையே செய்கிறோம்.அதை தான் ஆண்டால் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ என்கிறாள்; மாற்றி மாற்றிப் பேசாதே என்கிறாள்..

பகவான் ஒருத்தன் தான் சொன்ன சொல் தவறாதவன். வாக்கு மாறாதவன், 'சம்பவாமி யுகே யுகே' என்று சொன்னால் அவன் அதில் இருந்து மாற மாட்டான். அதுதான் தியாகராஜர் சொல்கிறார் :-உன் பேச்சுகளையே, உன் வார்த்தைகளையே நான் சித்தாந்தமாக கொண்டிருக்கிறேன் ராமா.. நீ வார்த்தை தவறாதவன் ஆயிற்றே, அதனான் உன் வார்த்தைகளே என் உயிர் என்கிறார்.

[ஸ்வாமிகள் பாடுகிறார் .ராகம் :கமாஸ்]

வாதாத்மஜா துல செந்தனே
வர்ணிஞ்சின நீ பலுகுலெல்லா
சீதாபதே நா மனசுனா சித்தாந்தமனி உன்னானுனா
சீதாபதே ...


சரி. த்யாகராஜர் ராமனை இப்படி புகழ்ந்து விட்டு கிருஷ்ணன் சமயத்துக்கு தகுந்தபடி மாற்றி மாற்றி பேசுவான் என்கிறார்.

[ஸ்வாமிகள் பாடுகிறார் .ராகம் :ஆரபி ]

கோபிஜன மனோரத மொசங்கலேகனே
கேலியு ஜேசே வாடு

சமயானிகி தகு மாடலாடெனே

அது சும்மா விளையாட்டு. ஆனால் கிருஷ்ணனும் வார்த்தை தவறாதவன் தான்.



-தொடரும்




1 comment:

பூமி said...

வழக்கம் போல அருமை மது... எத்தனை முறை யார் சொல்லிக் கேட்டாலும் ஆண்டாளின் வார்த்தைகள் மட்டும் ஒவ்வொரு முறையும் புதுப்புது அர்த்தங்கள் கொடுக்கின்றது.. எப்படிப்பட்ட மகா கவிதாயினியாய் இருந்திருக்க வேண்டும்....