இந்த வலையில் தேடவும்

Friday, December 23, 2011

தேநீர்ப்பேச்சு- 3 (மார்கழி ஸ்பெஷல்)

ருக்மிணி மாமி : வாங்க மாமி, என்ன சௌக்யமா? என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.

பட்டு மாமி: நீங்க தான் சிக்கவே மாட்டீங்கறீங்க..நேத்து சாயந்திரம் கூட வந்திருந்தேன்.. நீங்க எங்கேயோ போயிருக்கறதா உங்க பேரன் சொன்னான்.நாளைக்கு விசாகா ஹரி காலட்சேபம் இருக்கு. அதுக்கு வரேளான்னு கேட்கத்தான் வந்திருந்தேன்.

ருக்மிணி மாமி: அப்படியா? சரி போலாம்.நேத்து அமெரிக்காவுல இருந்து இவரோட அக்கா வந்திருந்தா இல்ல.காமாட்சி ஹால்ல கேசவப்ரேமி சுவாமிகளோட திருப்பாவை சொற்பொழிவு இருந்துது. அதான் கூட்டிப் போயிருந்தேன்.

.மாமி: அவர் நல்லாப் பேசுவாராச்சே..அவர் இஞ்சினியரா இருந்து சன்யாசம் வாங்கிண்டவர் தானே ?...சொற்பொழிவு எப்படி இருந்தது?

ரு.மாமி: வித்தியாசமா சுவாரஸ்யமா இருந்தது. இதோ அவர் இந்த ரெகார்டர்ல கூட போட்டுட்டு வந்திருக்கார். போடறேன் ..கேட்கறேளா?

.மாமி: தாராளமா. நேர்ல தான் கேட்க முடியலை..இங்கேயாவது கேட்போம்..

[ரெக்கார்டர் ஆன் செய்யப்படுகிறது]

ஹரி ஓம்..

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


தமிழ் இலக்கியத்துல பெண்களோட பங்கு ஏனோ மிகவும் குறைவாகவே இருக்கு. பெண் அப்படீன்னா காலாகாலத்துல கல்யாணம் கட்டிக் கொடுத்து குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு, கணவனுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டு,கைங்கர்யம் பண்ணிக்கொண்டு ஒரு மிஷின் மாதிரி இருக்கணும் அப்படீன்னு அந்தக் காலத்துல ,ஏன் இந்தக் காலத்துலயும், நிறைய பேர் நினைச்சதால 'கழுதை இவளுக்கு என்ன இலக்கியம், கருமாந்திரம்' எல்லாம் வேண்டிக்கிடக்கு அப்படீன்னு பெண்கள் கவிபாடுவதை வன்மையா எதிர்த்தாங்க; ஒரு பெண் கவிதை பாடினால் அவளை ஏதோ புரட்சிக்காரி மாதிரி பார்த்தாங்க; பார்க்கறாங்க.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்துலையும் சமுதாயம் பெண்ணுக்கு எழுதிய அத்தனை அடிமைத்தனமான வரையறைகளையும் மீறி 'பெண் என்றால் பெற்றோர் கைகாட்டும் நரனுக்கு கழுத்தை நீட்டி, தன் வாழ்க்கையை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துக்கொள்ளும் உணர்சிகளற்ற பிராணி அல்ல ' என்று பறைசாற்றி புரட்சி செய்தவள் ஆண்டாள். பக்திக்கு மட்டும் ஆண்டாள் இலக்கணம் இல்லை. புரட்சிக்கும் அவள் ஒரு எடுத்துக்காட்டு. அவள் அருளிச் செய்த திருப்பாவையை ஏதோ அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய விதத்துல அலசலாம். சபா எனக்கு கொடுத்திருக்கிற நேரத்துல முப்பது பாடலையும் ஒவ்வொன்னா பாக்கறது அசாத்தியம். எனவே திருப்பாவை-ங்கற முத்து மாலையில் ஆங்காங்கே ஒளிரும் வைரங்களை மட்டும் பார்க்கலாம்.


சரி. நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டா
த்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான்.இதுல 'செகண்ட் தாட்' டே கிடையாது. ஆனா என்ன, ஒரு ஜீவாத்மா எப்படி, எந்த சூழ்நிலைல, என்ன வழிமுறை ல பரமாத்மாவை அடையும்-கறதுல ஒவ்வொரு மார்க்கமும் வேறுபடறது.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன்.மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர்..எந்த Ambiguity -யும் கிடையாது.

ஆனால்
த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.விட்டத்தை பை (pi)மடங்கு பண்ணாதான் அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று.அதாவது அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு பை ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான். ஆனால் பை என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை இது சரியாக அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண்.விட்டம் தான் ஜீவாத்மா சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக் கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒரு முடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம்.ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக் கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத,கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது.த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிரும்.கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான். எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆக இருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இது இதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பேதப்பட்டது. என்கிறார்.சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் (C= 4a)அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.

எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பை டி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் மற்றும் காஸ் மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார்.அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.

சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன அப்படீன்னா பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம் என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean)அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான்.எனவே நீ அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி.அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.

சரி இதெல்லாம் வேதாந்தம்.கடவுளை அடைய இது ஒரு மார்க்கம். வே ஆப் தி ஹெட்! ஆனால் இன்னொரு மார்க்கம் இருக்கிறது .உணர்வுப்பூர்வமாக அணுகுவது. வே ஆப் தி ஹார்ட்! ஆண்டாள்
த்வைதமா, அத்வைதமா , இரண்டுக்கும் நடுவிலா என்ற பேச்சே வேண்டாம். என் இலக்கு என்ன என்பது எனக்கு முக்கியம் அல்ல. நான் பரமாத்வாவின் பக்தை. நான் பரமாத்வானின் பக்தன். அவனை எண்ணும் போது எனக்கு புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் வருகிறது. ஜென்ம ஜென்மத்துக்கும் இதுவே போதும்.அவன் நாமத்தின் சுவையே போதும். அவன் பக்தியின் ஆனந்தமே போதும் என்கிறது பக்தி மார்க்கம்.

இதனால் தான் ஒரு ஆழ்வார் 'அச்சுவை தரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே' என்று பாடுகிறார். அதாவது ஆழ்வார்கள் தாங்கள் முக்தி அடைந்து பரமாத்மாவாக அல்லது நித்தியசூரிகளாக மாறிவிட விரும்பவில்லை என்ற
விசிஷ்டாத்வைத 'சப்போர்ட்டை' ஆங்காங்கே வெளிப்படுத்துகிறார்கள்.ஆண்டாளும் எற்றைக்கும் ஏழு ழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் என்கிறாள்.ஏழேழ் பிறவி என்றால் ஏழு பிறவி அதற்குப் பின் முக்தி என்று அர்த்தம் அல்ல. இனிமேல் எழுகின்ற பிறவிகள் எல்லாம் நாம் ஜீவாத்மாக்களாகவே இருந்து உன்னைப் பாடுவோம் என்ற மனப்பான்மை.இன்று ஒரு நாள் எங்களுக்கு மகிழ்வளித்து எமக்கு மோக்ஷமளித்தாலும் , அது தேவையில்லை கோவிந்தா என்று இற்றைப்பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா என்கிறாள் ஆண்டாள்.

கடைசிக்கு முந்திய இருபத்தி ஒன்பதாவது பாசுரத்தில் இதைதான் சொல்கிறாள் ஆண்டாள். நாம் காரணம் இல்லாமல் ,காலையில் ரொம்ப சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டோம்.ஏதோ ஒரு கல்யாணம் காட்சி என்றாலோ, இன்டர்வியூ இருந்தாலோ, பிரயாணம் செய்ய வேண்டி இருந்தாலோ தான் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வோம். அதுவும் இது மார்கழி மாசம் வேறு. குளிர் காலம்பற அஞ்சு மணிக்கு உடலைத் துளைக்கும்.பல்லெல்லாம் டைப் ரைட்டிங்குல ஹையர் கிரேடு பாஸ் பண்ண லெவலுக்கு நடுங்கும்.இன்னும் கொஞ்சம் இழுத்துப் போத்திக்கிட்டு படுத்துக்குவோம்;என்ன குடியா முழுகிப்போயிடப் போறது ? என்று நினைப்போம்.வி
ஞ்ஞானிகள் சில பேர் பூமி வெப்பத்துல அழிஞ்சு போகும்கறா.எனக்கு என்னவோ நாம் எல்லாரும் குளிர்ல தான் கைலாசம் போவோம்னு தோணறது.

பகவான் 'மாதங்களில் நான் மார்கழி' அப்படீன்னு ஏன் சொன்னார்னா 'இந்த ஆள் மே மாசம் புழுக்கம் தாங்காம காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துக்கறதுல எந்த விஷயமும் இல்லை. மார்கழி மாசம் நடுங்கும் குளிர்ல எழுந்துண்டு குளிச்சிட்டு கோயிலுக்கு வர்ற உண்மையான பக்தன் யாரு'அப்படீன்னு கண்டுபிடிக்க தான் அப்படி பொடிவச்சு சொல்லியிருக்கான். ஆனாலும் சிலர் பேர் கோயிலில் கிடைக்கும் வெண்பொங்கல் புளியோதரைக்காகவே காலம்பற சீக்கிரம் எழுந்திருக்கரா. சரி அவா எல்லாம் பலகாரத்துலையே பகவானைப் பார்க்க பழகிண்டுட்டா போலும்.

எனவே ஆண்டாள் சொல்கிறாள், "கிருஷ்ணா, நாங்க இத்தனை காலையில் குளிரில் எழுந்து வந்து உன்னை சேவிக்கிறோம் என்றால் சும்மா இல்லை; எங்கள் கோரிக்கையைக் கேள் என்கிறாள். கோரிக்கை என்ன? ஆண்டாள் 'எனக்கு மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கிற , கார் , 2BHK வீடு வைத்திருக்கிற, பார்க்க ஹேன்ட்சம் -ஆன, கொளுத்த பேங்க் பேலன்ஸ் இருக்கிற,H1B இருக்கிற மாப்பிள்ளை வேண்டும்' என்றா கேட்கிறாள்?இல்லையே

"எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் "

-கிருஷ்ணா ! "நாங்கள் இனிவரும் பிறவிகளில் உனக்கே அடிமை செய்து கொண்டிருக்கும் வரம் கொடு என்று தான் கேட்கிறாள். மேலும் உன்னைத் தவிர எம் மனத்தில் எழும் ஆசைகளையெல்லாம் மாற்றி உன்னையே மனம் விரும்பும்படி செய்" என்கிறாள். என்ன ஒரு பக்குவப்பட்ட பெண் பாருங்கள் ஆண்டாள்!

[ஸ்வாமிகள் பாடுகிறார். ராகம்: மத்யமாவதி]

"சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்
....
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்"

என்னடா இது முதல்பாட்டே மத்யமாவதியில் பாடுகிறார் என்று நினைக்கவேண்டாம். மத்யமாவதி என்றால் மத்யத்தில் அதாவது கச்சேரிக்கு இடையில் பாடும் ராகம் என்றுதான் அர்த்தம். அதாவது கச்சேரி கொஞ்சம் போர் அடித்தால் இதுமாதிரி கொஞ்சம் ஸ்பீடான ராகங்களைப் பாடி தூங்குபவர்களை எழுப்பலாம் என்றுதான்.கச்சேரிக்கு கடைசியில் எழுப்பி என்ன பிரயோஜனம்? எப்படியிருந்தாலும் கச்சேரி முடிந்ததும் எல்லாரும் கீரைவடை சாப்பிடும் ஆசையில் அவர்களே எழுந்து கொள்வார்கள்.

ஆண்டாள் பக்குவப்பட்ட பெண் மட்டும் அல்ல. புத்திசாலியும் கூட தான். அந்தக் காலத்துப் பெண்களை 'மழை எப்படிப் பெய்கிறது' ?என்று கேட்டால் பூமியில் உள்ள பதிவிரதைகளின் பதிபக்திக்கு மெச்சி வருணன் மழை தருகிறான் என்று தான் சொல்வார்கள்.ஆண்டாள் எத்தனை அழகாக , அறிவியல் ரீதியாக, மழை பெய்வதை வர்ணிக்கிறாள் என்று பாருங்கள்: -



[ஸ்வாமிகள் பாடுகிறார். ராகம்: வராளி]

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து(ப்)
பாழிய் அம் தோளுடை பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலார் எம்பாவாய்

அடியவர்களுக்கு எல்லாமே கண்ணன்தான். உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை கூட கண்ணன்தான். பாரதியார் கூட 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரியநிறம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடுகிறார்.ஆண்டாளுக்கு மழை பெய்வதைப் பார்த்தவுடன் கண்ணன் ஞாபகம் வந்து விட்டது.

'கர்ணனுக்குப் பின் கொடை இல்லை கார்த்திகைக்குப் பின் மழை இல்லை' என்பதெல்லாம் பின்னால் வந்த வசனம்;அப்போதெல்லாம் மார்கழியில் கூட மழைபெய்யும் போலிருக்கிறது.அவள் சொல்கிறாள்: மேகமே, போ, போய் கடல் நீரை அள்ளு.அதிர்ந்து மேலே ஏறு!கண்ணனின் உருவம் போல கறுத்துப்போ! பின் அவன் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் போல் மின்னலடி.அவன் கரத்து பாஞ்சஜன்யம் போல முழங்கி இடியோசை செய். அவன் கையில் இருக்கும் கோதண்ட வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் போல சீறி மழைபொழி! என்கிறாள்.

பொதுவாக போர்களை வர்ணிக்கையில் அம்புகள் மழையாகப் பொழிந்தன என்பார்கள். இங்கே ஆண்டாள் உல்டாவாக கண்ணனின் வில்லம்புகள் போல மழை பொழியட்டும் என்கிறாள்.அதாவது விஷ்ணுவின் அம்புகள் எப்போதும் நன்மைக்காகத்தான் வில்லில் இருந்து புறப்படும்.மேலும் எப்போது தேவையோ அப்போதுதான் திருமால் தன் வில்லில் நாண் பூட்டுவார்.அடுத்து ஹரியின் அம்புகள் காரியம் ஆனதும் திரும்ப அவர் கைக்கே வந்துசேரும். இதே போல மேகமே உன் அம்பாகிய மழையையும் நீ உலகை அழிக்கப்பெய்யாமல் வாழ்விக்கப் பெய், வாழ உலகினில் பெய்திடாய்!எப்போது தேவையோ அப்போது பெய் என்கிறாள். அம்புகள் திரும்ப சென்று விடுவது போல மழையும் பூமியில் பெய்து ஆவியாகி பின் மேகத்துக்கே சென்று விடும் என்ற அறிவியல் உண்மையையும் சொல்லாமல் சொல்கிறாள்.





திருப்பாவை முப்பது பாட்டுக்கும் அரியக்குடி இசையமைத்து எம்.எல்.வி அவர்கள் பாடியிருப்பதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும்.பாட்டுக்குப் பொருத்தமான ராகங்கள். உதாரணமாக 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' வீரரசம் நிரம்பிய ஆரபியில் பாடப்படுகிறது. ஓங்கி ஒருகாலில் உலகை அளந்தது உண்மையில் வீர சாகசம் அல்லவா?

மாரிமலை மு
ழைஞ்சில் பாடலில் ஆண்டாள் "மழைக்குப் பயந்து குகையில் அடைபட்டுக் கிடக்கும் சிங்கம் மழைக்காலம் முடிந்ததும் எப்படி கண்களில் தீப்பறக்க ,பிடரி மயிரை சிலுப்பிக்கொண்டு , கர்ஜனை செய்தபடி கம்பீரமாக வெளிவருமோ அப்படி எங்களுக்கு காட்சிதா" என்று சொல்கிறாள். இந்தப் பாடலுக்கு அரியக்குடி பிலஹரி ராகம் தந்திருக்கிறார். சிங்கம் என்றால் இங்கே நரசிம்மரைக் கற்பனை செய்யலாம். நரசிம்மருக்கு மிகவும் உகந்த ராகம் பிலஹரி.

எத்தனை பொருத்தம் பாருங்கள். மேலும் குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் என்ற பாடலில்

[ஸ்வாமிகள் பாடுகிறார். ராகம் :சஹானா]

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி(க்)
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

இது கண்ணனும் அவன் நாயகியும் ஏகாந்தத்தில் இருக்கும் போது பாடுவது.இதை நாம்

[ஸ்வாமிகள் பாடுகிறார். ராகம்: அடானா ]

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்

என்று அடாணாவில் அடிக்கவருவது போல பாட முடியுமா? இருவரும் அலறி அடித்துக் கொண்டு என்னமோ ஏதோ என்று எழுந்து விடமாட்டார்களா?அந்த ஏகாந்த சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு சாந்தமான ஸ்ருங்கார ரசம் ததும்பும் ராகத்தில் தான் பாட வேண்டும். ஆண்டாள் இந்த பாடலை குத்து விளக்கெரிய என்று ஆரம்பிக்கிறாள். காதலுக்கு நிறைய வெளிச்சமும் ஆகாது. இருட்டும் ஆகாது. இந்தக் காலத்தில் கேண்டில் லைட் டின்னர் என்று ஏதோ சொல்கிறார்களே. அதுமாதிரி ஒரு மிஞ்சிய வெளிச்சம் சூழ்நிலையை ரொமாண்டிக் ஆக மாற்றிவிடும்.அதுமாதிரி குத்துவிளக்கின் சிற்றொளியில் இருவரும் ஏகாந்தமாக பஞ்சணை மேல் காதல் மேலிட படுத்திருந்தார்கள் என்று சஹானாவில் பாடும் போதே உங்களுக்கும் காதல் உணர்வு மேலிடும்.சன்யாசிக் கழுதைக்கு ஸ்ருங்கார ரசம் பற்றி என்ன பேச்சு என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.பட்டினத்தார் சொல்வது போல நானும் ஒரு காலத்தில் சம்சாரக் கழுதையாக இருந்ததால் தான் சொல்கிறேன்.

இத்தனை பொருத்தமாக பாடல்களுக்கு ராகம் போட்டவர் ஏன் ஆழி மழைக்கண்ணாவுக்கு மட்டும் அமிர்தவர்ஷினியில் போடாமல் வராளியில் போட்டார் என்று தெரியவில்லை. பொதுவாக வராளியை குரு சிஷ்யர்களுக்கு சொல்லித்தர மாட்டார். அதே மாதிரி ஆண்டாள் மழைபெய்யும் ரகசியத்தை தன் மக்குத்தோழிகளுக்கு சொல்லித்தர விரும்பவில்லையோ என்னவோ?

-தொடரும்...


சமுத்ரா

10 comments:

Sugumarje said...

அருமை... அந்த கடைசி பாடல் ஆண்டாள் பாடவில்லை என்று கருத்து கூறுகின்றனரே?

பூமி said...

வாவ்... அருமை... சங்கீதத்தில் எனக்கு அவ்வளவாக பரிட்சயம் இல்லை...இருந்தாலும் எம்எல்வி பாட்டை ரசித்திருக்கிறேன்... அதில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்று இப்போதான் தெரிந்து கொண்டேன்.... நன்றி...

அத்வைத/த்வைத/விஷிஷ்டாத்வைத கோட்பாட்டை கணித ரீதியில் விளக்கியதும் அருமை.. புது விளக்கங்களை தெரிந்து கொண்டேன்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

சேலம் தேவா said...

மார்கழி ஸ்பெஷல் பதிவா..?! அருமை.தொடருங்கள்...

Yaathoramani.blogspot.com said...

கண்டறியாதனக் கண்டேன் என்பது போல
ஆண்டாளின் பாடல்களில் உள்ள நயங்களை
சூட்சும வெளிப்பாடுகளை தங்கள் பதிவின் மூலம்
அறிந்து மகிழ்ந்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் த.ம 4

இராஜராஜேஸ்வரி said...

பக்திக்கு மட்டும் ஆண்டாள் இலக்கணம் இல்லை. புரட்சிக்கும் அவள் ஒரு எடுத்துக்காட்டு.

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

"எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் "

எத்தனை முறை படித்தாலும்
இனிக்கும் பகிர்வுக்கு வாழ்த்துகள்..

G.M Balasubramaniam said...

குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் கேசவ்ப்ரேமியின் பதிவான பேச்சா.? நான் சமுத்ராவின் எழுத்து என்று மகிழ்ந்திருந்தேனே.பாராட்டுக்கள். WHEN WILL YOU BECOME FREE.?

சமுத்ரா said...

GMB சார், தேநீர்ப் பேச்சில் எல்லாம் கற்பனைப் பாத்திரங்கள் தாம்.
பொங்கலுக்கு பெங்களூரில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
அப்படியென்றால் சந்திக்கலாம்.

G.M Balasubramaniam said...

கிருஷ்ணப் ப்ரேமி போல் ஒரு கேசவ்ப்ரேமியோ என்று எண்ணினேன். தேநீர் பேச்சு ஒருவழிப் பாதை போல் தோன்றுகிறதே.