இந்த வலையில் தேடவும்

Tuesday, September 25, 2012

கலைடாஸ்கோப்-73

லைடாஸ்கோப்-73  உங்களை வரவேற்கிறது

*


பெங்களூருவில் வெயில் வாட்டுகிறது. Typical Summer போல!மழை மேகங்கள் கருணை காட்ட மறந்து விட்டன போலும்.பாவிகள் அதிகமாகி விட்டால் எப்படி மழைபொழியும்? என்கிறார் ஒருவர்.பூமியின் அழிவுகாலம் நெருங்கி விட்டது என்கிறார் இன்னொருவர்.மழைமேகங்கள் பூமியில் உள்ள பாவிகளை கணக்குப் பார்த்துக்கொண்டு இருக்குமா என்று தெரியவில்லை. எப்படியோ நாம் இயற்கையை பலவிதங்களிலும் துன்புறுத்துவதால் அதன் சமநிலை பாதிக்கப்பட்டு இப்படியெல்லாம் நடக்கிறது போலும். அடுத்த மாதம் வானத்தைப் பொத்துக் கொண்டு பொழிந்து ஊரெல்லாம் முழுகுமோ என்னவோ?


-முதலிலேயே தண்ணீர் கொடுக்க மூக்கால் அழும் கர்நாடகா இப்போது எங்களுக்கே தண்ணீர் இல்லை; எனவே காவேரி நீரை மறந்து விடவும் என்று கூறி விட்டது. இதை ஆபீசில் சொன்னால் கன்னடக்காரர்கள் சிலர் வேண்டுமென்றால் நாங்கள் 'கழுவிய' நீரை உங்களுக்கு விடுகிறோம்; தாராளமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்று வம்பு பேசுகிறார்கள் :-(

Rain oh Rain
When will thy come to wash my pain?
Rain oh Rain
I have been in tears all day
Rain oh Rain
Please do not go far away
Rain oh Rain
Release thy fresh water upon me
Rain oh Rain
Melt the ice and make me chill
Rain oh Rain
Wet the earth and make it plant bloom
Rain oh Rain
Let thy freshness embrace the earth
Rain oh Rain
Make me happy and filled with joy
Rain oh Rain
For thy presence i wait.


மழையே மழையே மழையே-நீ
வந்தால் மறைந்திடும் வலியே!
நாளெலாம் எனக்குத் துயரே-எனை
நாடாமல் போவதோ உயரே!

புதியநீரைப் பெருக்குவாய்-நீ
பனியை எல்லாம் உருக்குவாய்
பூமியை நீதான் அரவணைப்பாய்-புல்
பூண்டை எல்லாம் உயிர்ப்பிப்பாய்

நீ வந்தால் நானும் மகிழ்ந்திடுவேன்-நீ
வரும் வரை நானும் காத்திருப்பேன்

Rain rain go away-க்கு இது better தானே?




கன்னடத்தில் 'முங்காரு மளே ' என்றொரு திரைப்படம் வந்தது.முழுவதும்
மழைச்சாரலில் குடகில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. மழை தான் சூழ்நிலையை எத்தனை  'ரொமாண்டிக்' ஆக மாற்றி விடுகிறது?முங்காரு மளே வில் ஒரு ரொமாண்டிக் ஆன பாடல்.



ಮುಂಗಾರು ಮಳೆಯೇ ಏನು ನಿನ್ನ ಹನಿಗಳ ಲೀಲೆ
முங்காரு மளெயே  -ஏனு நின்ன ஹனிகள  லீலே
-என் பருவ மழையே! என்ன உந்தன் துளிகளின் லீலை

ನಿನ್ನ ಮುಗಿಲ ಸಾಲೆ- ಧರೆಯ ಕೊರಳ ಪ್ರೇಮದ ಮಾಲೆ
நின்ன முகில சாலே -தரெய கொரள  பிரேமத மாலே 
-உந்தன் முகிலின் சாலை- புவியின் தோளில் காதலின் மாலை 

ಸುರಿವ ಒಲುಮೆಯಾ ಜಡಿ ಮಳೆಗೆ ಪ್ರೀತಿ ಮೂಡಿದೆ
சுரிவ ஒளுமெயா ஜடிமளேகே ப்ரீதி மூடிதே
-பெருகும் உணர்வின் பெருமழை தன்னில் காதல் மலர்ந்ததோ 

ಯಾವ ಚಿಪ್ಪಿನಲ್ಲಿ ಯಾವ ಹನಿಯು ಮುತ್ತಾಗುವುದೋ
ಒಲವು ಎಲ್ಲಿ ಕುದಿಯೋದಿಯುವುದೋ ತಿಳಿಯಲಾಗಿದೆ
யாவ சிப்பினல்லி யாவ ஹனியு முத்தாகுவுதோ
ஒலவு எல்லி குடியொடியுவுதோ திளியலாகிதே
-எந்த சிப்பியுள்ளே எந்த துளியும் முத்தாகிடுமோ
காதல் எங்கு துளிர்விடுகிறதோ தெரிவதில்லையே

ಭುವಿ ಕೆನ್ನೆ ತುಂಬಾ ಮುಗಿಲು ಸುರಿದ ಮುದ್ದಿನ ಗುರುತು
ನನ್ನ ಎದೆಯ ತುಂಬಾ ಅವಳು ಬಂದ ಹೆಜ್ಜೆಯ ಕುರುತು
ಹೆಜ್ಜೆ ಗೆಜ್ಜೆಯಾ ಸವಿಸದ್ದು -ಪ್ರೇಮ ನಾದವೋ
புவி கென்னே தும்பா முகிலு சுரித முத்தின குருது
நன்ன எதய தும்பா அவளு பந்த ஹெஜ்ஜெய குருது
ஹெஜ்ஜே கெஜ்ஜெயா சவிசத்து பிரேம நாதவோ

-புவியின் கன்னமெங்கும் மேகம் சிந்தும் துளிகளின் முத்தம்
எந்தன் இதயமெங்கும் அவள் தந்த நினைவுகள் சுற்றும்
பாத கொலுசு காதலின் சத்தம் இனிய கீதமோ
ಎದೆ ಮುಗಿಲಿನಲ್ಲಿ ರಂಗು ಚೆಲ್ಲಿ ನಿಂತಳು ಅವಳು
ಬರೆದು ಹೆಸರ ಕಾಮನಬಿಲ್ಲು -ಏನು ಮೋಡಿಯೋ !

எதே முகிலினல்லி ரங்கு செல்லி நிந்தளு அவளு 
பரெது ஹெசர காமனபில்லு ஏனு மோடியோ

-இதய மேகமெங்கும் இறைத்து நின்ற இனியவள் வண்ணம்
எழுதுகின்ற வானவில் போலும் என்ன மாயமோ?!

-சரி , மழை வந்துவிட்டால் சனியன் மழை நேரம்கெட்ட நேரத்தில் வந்து விட்டது என்று அலுத்துக் கொள்கிறோம்.பிறகு அது எப்படி வரும்? வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவரைப் பார்த்து ஏன் தான் வந்தாரோ என்று அலுத்துக்
கொண்டால் அவர் மீண்டும் வருவாரா? - அடுத்த தடவையாவது மழையைத் திட்டாமல் இருப்போம்! -கறுப்புக் கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்!

மழைத் துளியல்ல, சோர்வின் வடுக்களைச்
அழுத்தித் துடைக்க
மேகப் பருத்தி நெய்து
இறக்கும்
மழைத் துணி -என்கிறார் ஒரு கவிஞர்.(இங்கே)

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

-என்று வள்ளுவர் சொன்னபடி எங்கே பஞ்சம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. மழை பொய்த்துவிட்டது என்ற சாக்கு நம் அரசியல்வாதிகளுக்கு கிடைத்து விடும். அரிசி விலை வேறு வானத்துக்கு ஏறிக் கொண்டிருக்கிறது

வாரி மணலை அள்ளிடுவோம்
வனப்புடை மரங்களை வெட்டிடுவோம்
கார்பனை வானில் நிறைத்திடுவோம்
கடலினில் அழுக்குகள் சேர்த்திடுவோம்
மாரியை பின்னர் வைதிடுவோம்
மழையின் கடவுளை சபித்திடுவோம்
சீரிய வேள்விகள் செய்திடுவோம்
சிந்திப்பதையும் மறந்து விட்டோம்!


வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்?

-செய்வதையை எல்லாம் செய்து விட்டு பின்னர் யாகம் செய்தால் மழை வருமா? இல்லை அமிர்தவர்ஷிணி பாடினால்தான் மழை வருமா?




வழக்கமாக மன்னர்களைப் புகழும் போது மாரிபோல் வாரி வழங்குவான் என்பார்கள்.. அனால் இங்கே ஒருவர் தம் மன்னனைப் போல (சோழன்) மழை கருணையுடன் வாரி வழங்குகிறது என்கிறார்.(சிலப்பதிகாரம்)

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேனின்று தான் சுரத்தலான்!

இந்த உல்டா உவமையை ஆண்டாளும் பிரயோகிக்கிறாள்:

பொதுவாக வில்லில் இருந்து அம்புகள் மழைபோல கிளம்பின என்பார்கள். அம்பு மழை! ஆண்டாள் கண்ணன் கையில் இருக்கும் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகள் போல பொழி என்று சொல்கிறாள் மழையை!

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் !

மாணிக்கவாசகர் கூட:
முன்னி, அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!- என்கிறார்.




காதலில் இரண்டு இதயங்கள் கலப்பதற்கு மழையும் மண்ணும் கலப்பதை புலவர்கள் உதாரணம் சொல்வார்கள்:

ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்
பொருள்மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே!

-ஈர மண்ணில் அப்போது தான் செய்துவைத்த மண்பாண்டத்தின் மீது மழைபெய்தால் அவை எப்படிக் கரைந்து ஒன்றுடன் ஒன்று கலக்குமோ அப்படி என் நெஞ்சம் காதலியுடன் கலந்தது என்கிறார் ஒருவர்.

அப்போதெல்லாம் பொருள் சம்பாதிக்க வெளியே செல்லும் தலைவன் ,மழைக் காலம் தொடங்கியதும் தவறாமல் வந்து விடுவேன் என்று தலைவியிடம் சொல்வான். மழையும் தவறாமல் அந்தந்த பருவத்தில் பெய்யும். ...இப்போதெல்லாம் எப்போது மழை பெய்யும் என்று கணிப்பது பெரும்பாடாக உள்ளது. குளிர்காலத்தில் மழை வருகிறது ..பருவமழை பொய்த்து விடுகிறது...அப்படி ஒரு தலைவன் சொல்லி சென்று விடுகிறான். மழையும் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள்; தோழி "அடியே , இது சும்மானாச்சும் டம்மி மழை.பருவமழை அல்ல..முட்டாள்மேகங்கள் தவறாக கடல்நீரை குடித்து விட்டு வேளைகெட்ட வேளையில் பெய்கின்றன.எனவே மழைக்காலம் இன்னும் வரவில்லை. நீ வருந்தாதே என்று தேற்றுகிறாள்.

மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல....

-மறந்தாவது மழை பொழியாதா என்று ஏங்க  வேண்டியிருக்கிறது இப்போது!முட்டாள் மேகங்கள் இப்போது மிகவும் புத்திசாலி ஆகி விட்டன என்று தோன்றுகிறது.



நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பார் ஔவையார். நல்லவர் யாராவது வாய்க்கு வந்த படி உளறினால் மழை பொழியும் என்று தப்பர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. நல்லவர் ஒருவர் 'இருந்தாலே' போதும். அப்படியென்றால் நாமெல்லாம் நல்லவர்கள் இல்லையா? கணவனைத் தவிர வேறு தெய்வத்தைத் தொழாத பெண்கள் இருந்தால் தான் மழை பெய்யெனப் பெய்யுமா?'பேக்கு மாதிரி டி.வி யைப் பாத்துக்கிட்டு உட்காந்திருக்காதீங்க .துணியெல்லாம் மடிச்சு வைங்க..நான் கோயிலுக்குப் போயிட்டு வரேன் என்று கணவனைப் பணிக்கும் நாரீமணிகள் சொன்னால் மழைவராதா?



இனி மழையை அழைக்க சில கவிதைகள்:

கவிதை நோட்டு,
பேனா, ஜன்னலோர நாற்காலி
ஒருகோப்பைத் தேநீர் எல்லாம் ரெடி
இனி
மழை பெய்வதுதான் பாக்கி!


மழையே
இன்னும் கொஞ்சம் நின்று பெய்
குடைக்குள் என் காதலி!

இந்த மழை ரொம்ப மோசம்
இறங்கி நடக்கும் போது பலமாகவும்
ஒதுங்கி நிற்கும் போது
சன்னமாகவும் பெய்கிறது!



நீ
எனக்கு மட்டுமே
பெய்யும் மழை!



மழையும் காதலியும் ஒன்று
போன பின்னும் வாசம் மிச்சம் இருக்கிறது!
மழையும் காதலியும் ஒன்று
என் வீட்டு மலர்களை மலரச் செய்வதில்
மழையும் காதலியும்
ஒன்று-என்
மனநிலையை ரம்மியமாக்குவதில்..

மழையும் காதலியும் ஒன்று
எதிர்பார்க்கையில் வருவதே இல்லை


ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து மழைபெய்யக் காத்திருப்போம்!

ஓஷோ ஜோக் இல்லாமல் எப்படி முடிப்பது?ஒரு
ஓஷோ ஜோக்.

இந்தியன் ஒருவன் முன் கடவுள் தோன்றி ஒருநாள் 'உனக்கு என்ன வேண்டும் மகனே?' என்றார்.


அவன் 'எனக்கு நிறைய பால் வேண்டும்; அதை வைத்து நான் வியாபாரம் செய்து முன்னேற வேண்டும்' என்றான்.


'அப்படியே ஆகுக'


சிலநாட்கள் கழித்து மீண்டும் கடவுள் அவன் முன் தோன்றி 'நான் கொடுத்த பாலெல்லாம் எப்படி இருக்கிறது?'


"சூப்பர் கடவுளே , கொஞ்சம்
டேஸ்ட் செய்து பாருங்கள்."

பாலைக் குடித்த கடவுள் 'நன்று மகனே, வேறெதுவும் வேண்டுமா' ?என்றார்



'எட்டு ரூபாய் ஐம்பது காசு'..'நீங்கள் குடித்த பாலுக்கு'...




ஓஷோ: கடவுளே வந்தாலும் மனிதன் அவருடன் பிசினஸ் செய்வான்.


SaMuDrA


9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவுலாவது மழையை ரசிப்போம்... நன்றி...

முடிவில் நல்ல ஜோக்ஸ்...

VENTURER said...

மிகவும் அருமையாக சொன்னீர்கள்.. மக்களுக்கு பணத்தின் வலிமை தான் புரிகிறது. ஆனால் இயற்கையின் அவசியம் என்று தான் புரியுமோ தெரியாது...

MARI The Great said...

மழையை வைத்தே இவ்ளோ பெரிய பெரிய பதிவா? :) :)

முடிஞ்ச அளவுக்கு இயற்கையை சேதாரம் பண்ணுனோம்...(செய்)கூலி வேண்டாம்ன்னு சொன்னா விட்டுருமா இயற்கை...அதான் வான் மழை பொய்ப்பு!

குடைக்குள் காதலி கவிதை..செம தல!

ஓஷோ ஜோக் எண்டு ஜீப்பரு! :)

G.M Balasubramaniam said...


அருமையான பதிவு. ரசித்தேன்.

Nagasubramanian said...

மழையைப் பற்றி எத்தனை கவிதைகள் எழுதிக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும் தீரவில்லை காதலைப் போல.
எனக்கு மிகப்பிடித்த மழை கவிதை :
நனைந்துகொள்ள
நினைத்துக்கொள்ள
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு மழை!

தமிழ் காமெடி உலகம் said...

இப்போ மழையை இப்படி பட்ட கவிதைகளில் மட்டும் தான் ரசிக்க முடிகிறது...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Anonymous said...

ஜோக்- அருமை அருமை

SaMuDrA - எஸ் ஏ.எம் யூ. வரை இனிஷியல் பின் டாக்டர். அ(”அ’வில ஆரம்பிக்கிற பேர் தானே அருள்/அப்பாதுரை/அங்கமுத்து/ஆசைத்தம்பி/ஆரோக்கியம்/அனந்து/ஆனந்தராஜ்/அண்ணாத்துரை)

Anonymous said...

Remarkable! Its genuinely awesome piece of writing, I have got much
clear idea on the topic of from this post.
Feel free to surf my weblog ... Earn Money Online

குட்டிபிசாசு said...

rasiththen