இந்த வலையில் தேடவும்

Wednesday, February 22, 2012

கலைடாஸ்கோப்-55

லைடாஸ்கோப்-55 உங்களை வரவேற்கிறது


==

சிறுகதை என்பதில் வரும் 'சிறு' என்பதன் இலக்கணம் என்ன ? முப்பது பக்கத்துக்கு எழுதி விட்டு அதை சிறுகதை என்று அழைக்கும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.எத்தனை பக்கத்துக்கு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் 'தொடரும்' என்று போடாமல் இருந்தால் சரி என்கிறீர்களா? :) சரி. இப்போது நான் முயற்சி செய்த ஒரு 'சிறு' கதை. பயப்படாதீர்கள். இது சீக்கிரமே முடிந்து விடும்.

அய்யனாரு பீடியைப் பற்ற வைத்தான்.காசு கொடுத்து விட்டுத் திரும்பியபோது யாரோ நான்கு பேர் வந்து "ஏய், ஊர்வலத்துக்கு வாரியா? இருபது ரூபாய் தாரோம்.நால்ரோடு வரை வந்தால் போதும்" என்றார்கள்.

சற்று யோசித்து விட்டு "இருபது கட்டுபடியாகாது சார். முப்பது கொடுத்தா வரேன்" என்றான். டீல் ஓகே ஆனது.அவர்கள் கொடுத்த கருப்பு சட்டையை தன் சட்டைமேல் அவசரமாக மாட்டிக் கொண்டான். கொஞ்சம் புழுக்கமாக உணர்ந்தான். வெய்யில் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது.அந்த ஊர்வலம் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆட்கள் அதிகமாக இல்லை. கறுப்புச் சட்டை அணிந்த அதிகபட்சம் ஒரு 25 பேர் இருக்கலாம்.

அய்யனாரு ஊர்வலத்தில் கலந்தான்.அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லும் நாலு வரியை அப்படியே ரிபீட் செய்யவேண்டும்.ஆஜானுபாகுவாக ஒரு ஆள் கையை உயர்த்தி உயர்த்தி கத்திக் கொண்டிருந்தான்.அய்யனாரு அதையே திரும்ப சொன்னான்.முப்பது ரூபாய்க்கு அதிகமாகவே குரல்கொடுத்தான் :

தூணுக்குள்ளே பார்த்தோம் தோழா
தூசி உண்டு; கடவுள் இல்லை

துரும்புக்குள்ளும் பார்த்தோம் தோழா
துகள்கள் உண்டு கடவுள் இல்லை

துகளுக்குள்ளும் பார்த்தோம் தோழா
அணுக்கள் உண்டு கடவுள் இல்லை

அணுவுக்குள்ளும் பார்த்தோம் தோழா
எலக்ட்ரான் உண்டு கடவுள் இல்லை. !!!

கடவுள் என்பது மாயை தோழா
கடமை செய்வோம் கடவுள் இல்லை!

ஊர்வலம் நால்ரோடை அடைந்ததும் அய்யனாரு விலகிக் கொண்டான். முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டு கருப்பு சட்டையை
திரும்பக் கொடுத்தான்,. 'பவானி மெஸ்ஸில் ' இன்று சிக்கன் பிரியாணி வெட்டி விட வேண்டும் என்ற உற்சாகத்துடன் மேலே நடந்தான்.வழியில் பாடிகார்ட் முனீஸ்வரன் கோயில் எதிர்ப்பட்டது. பரபரவென்று செருப்பை கழற்றி விட்டு உள்ளே நுழைந்து கைநிறைய விபூதியை எடுத்து நெற்றியில் அப்பிக் கொண்டான்;காணிக்கை ஐந்து ரூபாய் போட்டான். 'முனீஸ்வரா, கொமாரு மூணுநாளா உடம்பு சொகமில்லாம கிடக்கான். கொழந்தைக்கு சீக்கிரம் குணம் பண்ணு சாமி.தென்னம்பாளையம் வந்து குடும்பத்தோட கெடாவெட்டி பொங்க வெக்கறேன்" என்று கண்களை மூடி மனதார வேண்டிக் கொண்டான்.


=

* ஒரு கவிதை :- (கவிதை என்றதுமே சிலபேர் விழுந்தடித்து ஓடி விடுவார்களே!)

முதலில் நான் புன்னகைப்பேன் என
அவளும்
முதலில் அவள் புன்னகைப்பாள் என
நானும் -
இறுதியில் புன்னகைக்கவே இல்லை.
இரண்டு புன்னகைகள்
பயன்படாமல் ஜீரணமாகி விட்டன!

-சமுத்ரா (சும்மா ஒரு விளம்பரம்! :) )

** கவிதைகளின் தளம் ஒன்றை அறிமுகம் செய்கிறேன். மிக அருமையான கவிதைகள். ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் தானே. கீழே ஒரு EXAMPLE :

என் இருப்பை,
என் ச‌ந்தோஷ‌த்தை,
என் ச‌ம்பாத‌னையை,
என் க‌வ‌லைக‌ளை,
என் க‌ன‌வுக‌ளை

கேள்விக்குறியாக்கினான்

நெடுஞ்சாலையின்
மீடிய‌னில்,
எதிர்ப்ப‌க்க‌த்தில்
நேரான‌ ம‌ன‌நிலையோடு
சிரித்த‌ப‌டி க‌ட‌ந்த‌

ஒரு பெருந்தாடிக்கார‌ன்.


=
எனக்கு சில SILLY சந்தேகங்கள்...யாராவது தீர்த்து வைத்தால் நலம் :

*அயோக்யன் என்றால் ௮-யோக்யன். ஒரு செயலை செய்ய யோக்கியம் , தகுதி அற்றவன் என்று அர்த்தம். அதை ஏன் தமிழில் கெட்டவன் , கிரிமினல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள்? அதே போல நிரபராதி(நிர்-அபராதி) என்ற வார்த்தையை (நல்லவன் என்பதைக் குறிக்க ) எடுத்துக் கொண்ட நாம் அபராதி (குற்றவாளி) என்ற வார்த்தையை ஏன் விட்டு விட்டோம்?

*திரைப்படங்களில் கதை-திரைக்கதை-வசனம் என்று போடுகிறார்களே? கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம்?

* ஆட்டோவில் கையால் இயக்கும் பாம் பாம் என்று அழுத்தும் பச்சைக்கலர் சைரன்கள் இன்னும் எங்காவது இருக்கின்றனவா?

*வலதுகால் ஷூ இடது கால் ஷூ இருப்பது போல வலதுகால் சாக்ஸ் இடதுகால் சாக்ஸ் ஏன் இல்லை? (ஹலோ, யார் அது ஷூவைக் கழற்றுவது? )

*JUST A SEC என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் ஏன் திரும்பி வர ஒருமணிநேரம் எடுத்துக் கொள்கிறார்கள்?

*ஃபேனை ஒன்று ஸ்பீடில் சுற்றினாலும் ஐந்து ஸ்பீடில் சுற்றினாலும் ஒரே அளவு கரண்ட் (கரண்ட் சார்ஜ்) தான் ஆகும் என்று ஒருவர் சொன்னார். இது உண்மையா?

*shut down செய்த பின்னும் கம்ப்யூட்டர் டைமை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?

[ஹலோ இப்படியெல்லாம் யோசித்தால்தான் வி
ஞ்ஞானி ஆக முடியும்]


=

உங்களுக்கு எந்த இசைக்கருவி பிடிக்கும்? எது பிடிக்காது?

சில பேர் வீணை இசை என்றால் மகுடிப்பாம்பாக மயங்கி விடுவார்கள்.நான் வீணை வந்தாலே டி.வியை ஆப் செய்து விடுவேன்.(சரஸ்வதி மேடம் மன்னிப்பாராக)டொய்ங்
டொய்ங் என்று தலைவலி ஏற்படுத்தும் சத்தம் அது.சில பேருக்கு புல்லாங்குழல் பிடிக்கும்.'காற்றினிலே வரும் கீதம் அல்லவா அது? (டேய் மத்த கீதம் எல்லாம் கடல்லையா வருது? என்று சந்தானம் வாய்சில் படிக்கவும்) ஆனால் புல்லாங்குழலை சரியாக வாசிக்கும் விதத்தில் வாசிக்க வேண்டும். பு.கு பார்க்க தான் சிம்பிளாக இருக்கிறதே தவிர எமகாதகன் அது. சரியாக வாசிக்கவில்லை என்றால் 'வெறும் காத்துதான் வருது' (இது விவேக் குரலில்) என்று பரிதாபமாக சொல்ல வேண்டி இருக்கும்.(எவனோ ஒருவன் இம்சிக்கிறான்!)அடுத்து எஸ் , நிறைய பேரின் ஃபேவரட் இந்த வயலின் அல்லது பழைய பாசையில் ஃபிடில் ..மனதில் இருக்கும் ஸ்வரங்களை அப்படியே (குரலுக்கு அடுத்து) வெளியில் கொண்டுவர வயலின் தான் சிறந்தது.சரி. எனக்கு வயலினும் அவ்வளவாகப் பிடிக்காது. (எது பிடிக்கும் என்று பின்னர் சொல்கிறேன்).அடுத்து இந்த நாதஸ்வரம். இதையும் வாசிக்கத் தெரிந்தவர்கள் தான் வாசிக்க வேண்டும். இல்லை என்றால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல ஒரு பீலிங் வரும்.என்னதான் பிரியாணி எல்லாம் வெட்டி விட்டு தெம்பாக தம்பிடித்து வாசித்தாலும் அபஸ்வரம் 'நான் இங்கே தான் காணும் இருக்கேன்' என்று இளித்துக் கொண்டு எட்டிப் பார்த்து விடும்.

சரி. எனக்குப் பிடித்த இசைக்கருவி இந்த 'ஜலதரங்கம்' (யாரது ஒருமாதிரி பார்ப்பது) ஜ.தவில் கமகங்கள் கிட்டத்தட்ட ஜீரோ. ஆனாலும் அதைக் கேட்கும் போது ஒருவித இனம்புரியாத சுகத்தை உள்ளே உணரமுடியும். உங்கள் காதலி சலங்கை கட்டிக் கொண்டு ஆடுவதைப் போலவே கேட்கும்.


=

அணிகள் வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது 'தற்குறிப்பேற்ற அணி'.......

இயல்பாக அதுபாட்டுக்கு நடக்கும் ஒரு விஷயத்தின் மீது நம் கற்பனையை ஏற்றிக் கூறுவது. இது நம் எல்லாருக்கும் கைவந்த கலை. கிரகணம் ஒரு இயல்பான நிகழ்வு.ஆனால் அதை பாம்பு விழுங்குகிறது என்று அதன் பின்னே ஒரு பெரிய கதையை ஏற்றி விட்டதும்
தற்குறிப்பேற்ற அணிதான்.

சில சமயங்களில் நம் வீட்டில் ஏற்றி வைத்த சாமி விளக்கு இயல்பாக காற்று அடித்து அணைந்து விடும். அதை நாம் சும்மா விடுவோமா? இல்லையே ? ஐயோ ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது போலிருக்கிறதே?பையன் வேறு பைக்கில் போயிருக்கிறானே? மகளுக்கு அடுத்த மாசம் பிரசவம் நன்றாக நடக்குமோ இல்லையோ என்று வடிவுக்கரசி ரேஞ்சில் சிந்திக்க ஆரம்பிப்பதும் த.கு.அணி தான். இவள் அழகைக் கண்டு நாணி நிலா மேகப் போர்வையைப் போர்த்திக் கொண்டது என்று கவிர்கள் பாடுகிறார்களே? அதுவும் இதுதான். நிலா மேகத்தால் மறைக்கப்படுவது இயற்கை. நிலாவில் இருந்து பூமியைப் பார்த்தால் அட்லாண்டிக் கடல் கூட தெரியாது .இதில் ஐஸ்வர்யாராயின் மூஞ்சி தெரிகிறது என்று பாடுவது உயர்வு நவிற்சி அணி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை

வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்

கூவினவே கோழிக் குலம்.


-அதிகாலையில் கோழி கூவுவது இயற்கைதான்.அதைப் போய் 'ஐயோ இந்த தமயந்தி படும் துயரை பொறுக்க முடியவில்லையே' (நளன் அவளை விட்டு விட்டு கிரேட் எஸ்கேப்) சூரியனே நீ சீக்கிரம் வந்து தொலையேன் என்று சொல்வது போல கூவின என்கிறான் புகழேந்தி.

[என்னதான் இரவில் கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் காலையின் முதல் கிரணத்தைப் பார்க்கும் போது மனதில் ஒரு தெம்பு வருமே? ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! அதனால்..நானெல்லாம் முதல் கிரணத்தைப் பார்த்தால் இன்னிக்கும் ஆபீஸ் போகவேண்டுமே என்ற 'திகில்' தான் வருகிறது!]

சினிமா உதாரணம் வேண்டும் என்று கேட்கிறீர்களா? எனக்கு இந்த சாயங்காலப் பசியில் அதிக உதாரணங்கள் தேடும் பொறுமை இல்லை. எனவே ஒன்னே ஒன்னு:

'உன் பேர் மெல்ல நான் சொல்கையில்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன' [டேய் ரோஜாப் பூக்குற நேரத்துல பல்லு வெளக்காம நாற வாயால என் பேரை ஏன்டா சொன்ன? என்று கலை உணர்ச்சி இல்லாத காதலி சண்டை போட்டாலும் போடலாம்...]


=

ஓஷோ ஜோக். ஒரு ஜோக் போதும். இப்போது அவசரமாக கேன்டீன் சென்று மசாலா தோசை சாப்பிட வேண்டும். ஜோக் இனிமேல் தான் தேடவேண்டும். எனவே ஜோக் மொக்கையாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான்.

அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள் என்றார்.

அதற்கு அவன் 'அங்கே பாருங்க 21 என்று ஹைவேயில் எழுதி இருக்கிறது' என்றான்


'அது ஸ்பீட் லிமிட் இல்லை சார்,அதுதான் ஹைவே நம்பர், எனவே அதைப் பார்த்து வண்டி ஓட்ட வேண்டாம்' என்ற இன்ஸ்பெக்டர் , பின் சீட்டில் இருந்த அவன் மனைவியை எதேச்சையாக கவனித்து,

'அது சரி சார், இந்த அம்மா ஏன் இப்படி உடம்பெல்லாம் நடுங்கி வியர்த்து வழிந்து கொண்டு இருக்காங்க' என்று கேட்டார்
'ஒ அதுவா, கொஞ்சம் முன்னாடி தான் ஹைவே நம்பர். 210 இல் இருந்து பிரிந்து வந்தோம் ' என்றான் அவன்.

;-)

போப் புதிய நகரம் ஒன்றுக்கு சுற்றுலா சென்றார்.

அவர் தங்கவிருக்கும் ஹோட்டல்காரர்கள் அவரை மரியாதையுடன் அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர்.

போப் திடீரென்று கத்தினார்.

'நான் யார் தெரியுமா? ஒரு பெரிய மதத்தின் தலைவர். என்னை இப்படியா கேவலமாக அவமானப்படுத்துவது? இந்த சிறிய காற்றோட்டமில்லாத , குட்டி அறையில் நான் எப்படித் தங்குவது? 'என்று வெடித்தார்.

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது" ஹோலினெ
ஸ் , இது லிஃப்ட் "

சமுத்ரா


20 comments:

ரிஷபன் said...

shut down செய்த பின்னும் கம்ப்யூட்டர் டைமை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?


உங்கள் பதிவுக்கு வந்தால் சர்வ நிச்சயமாய் சுவாரசியம் காத்திருக்கிறது..

senthil velayuthan said...

*வலதுகால் ஷூ இடது கால் ஷூ இருப்பது போல வலதுகால் சாக்ஸ் இடதுகால் சாக்ஸ் ஏன் இல்லை? (ஹலோ, யார் அது ஷூவைக் கழற்றுவது? )//

வலது கால் சாக்ஸ் இடது கால் சாக்ஸ் என்று உண்டு , நமக்கு கண்டுபிடிக்க சிரமம் ,அதனாலேயே நாம் அறிந்ததில்லை. சாக்ஸ் அடிபுறம் பார்த்தால் பிடிபடும். பெருவிரல் பகுதி தடினமாகவும் , சுண்டுவிரல் பகுதி சிறியதாகவும் இருக்கும்.

Jayadev Das said...

\\'முனீஸ்வரா, கொமாரு மூணுநாளா உடம்பு சொகமில்லாம கிடக்கான். கொழந்தைக்கு சீக்கிரம் குணம் பண்ணு சாமி.தென்னம்பாளையம் வந்து குடும்பத்தோட கெடாவெட்டி பொங்க வெக்கறேன்" என்று கண்களை மூடி மனதார வேண்டிக் கொண்டான்.\\ பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்தேன்னு சொல்லிட்டு சாராயக் கடைகளை கண்டமேனிக்கு திறந்துவிட்டு காசு பார்ப்பவர்களுக்கு இவன் எவ்வளவோ மேல்.

Jayadev Das said...

\\*அயோக்யன் என்றால் ௮-யோக்யன். ஒரு செயலை செய்ய யோக்கியம் , தகுதி அற்றவன் என்று அர்த்தம். அதை ஏன் தமிழில் கெட்டவன் , கிரிமினல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள்? அதே போல நிரபராதி(நிர்-அபராதி) என்ற வார்த்தையை (நல்லவன் என்பதைக் குறிக்க ) எடுத்துக் கொண்ட நாம் அபராதி (குற்றவாளி) என்ற வார்த்தையை ஏன் விட்டு விட்டோம்?\\ வடமொழியில் கேவலம் என்றால் ONLY/JUST என்று அர்த்தமாம், அதை நாம் கேவலமான அர்த்தத்தை கொடுத்து பயன்படுத்துகிறோம், இதெல்லாம் ஏன் என்று புரியவில்லை.

Jayadev Das said...

\\*திரைப்படங்களில் கதை-திரைக்கதை-வசனம் என்று போடுகிறார்களே? கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம்?\\ இப்ப வரும் தமிழ் படங்களில் கதையே இல்லியே நைனா!!

Jayadev Das said...

\\*JUST A SEC என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் ஏன் திரும்பி வர ஒருமணிநேரம் எடுத்துக் கொள்கிறார்கள்? \\ தொல்லை தாங்க முடியவில்லைன்னு எஸ்கேப் ஆவதற்காக இருக்குமோ!!

Jayadev Das said...

\\*ஃபேனை ஒன்று ஸ்பீடில் சுற்றினாலும் ஐந்து ஸ்பீடில் சுற்றினாலும் ஒரே அளவு கரண்ட் (கரண்ட் சார்ஜ்) தான் ஆகும் என்று ஒருவர் சொன்னார். இது உண்மையா?\\ எனக்கும் அப்படித்தான் சொன்னார்கள். ஒன்னு பண்ணுங்க சமுத்ரா, லீவு நாளில் முதலில் ஒன்று ஸ்பீடில் ஒரு ஃபேனை ஒரு மணி நேரம் சுழல விட்டு ஆகும் மீட்டர் ரீடிங்கை நோட் பண்ணிக்கோங்க, அப்புறம் ஐந்து ஸ்பீடில் எவ்வளவு ஆகுதுன்னு பார்த்து கம்பேர் பண்ணுங்க!! [என்னது அவ்வளவு நேரம் தொடர்ந்து கரண்டு இருக்காதா, அடக் கடவுளே...!!]

Jayadev Das said...

\\*shut down செய்த பின்னும் கம்ப்யூட்டர் டைமை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?\\ கணினியில் IN -BUILT CMOS கடிகாரம் ஒன்று உள்ளது, இதற்க்கு தனியாக [வட்சுக்கேல்லாம் இருப்பது போல] ஒரு ருப்பாய் நாணயம் சைசில் ஒரு பேட்டரி இருக்கும். அதன் மூலம் இந்த வாட்ச் ஓடும். அந்த பேட்டரி இருக்கும் வரைதான் கணினி சரியான நேரத்தை காட்டும், அது தீர்ந்து போனால் மற்றச் சொல்லி அறிவிப்பு வரும், மாற்றாவிட்டால் அது இஷ்டத்துக்கும் ஏதாவது ஒரு நேரத்தைக் காண்பிக்கும்.

Aba said...

# சிறுகதை,

உண்மைதான். ஆனால் திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு வருபவர்களில் அட்லீஸ்ட் ஒரு ஐந்து பேருக்காவது நிஜமான லஞ்சமில்லாத பக்தி இருக்கிறதா என்பதும் ஒரு கேள்வி. (பலர் கடவுளுடன் பிசினஸ் பேசுவதற்கே கோயிலுக்கு வருகிறார்கள் என்பது நிதர்சனம்) அதேபோல் நான் நாத்திகர் எனச் சொல்லிக்கொள்ளும் பலருக்கு நாத்திகம் பற்றிய புரிதலில்லை. பலருக்கு நியாயமான, டீசென்டான, கடவுளரைத் திட்டாத, தர்க்க ரீதியான நாத்திகம் புரிவதில்லை. (எனக்கு ரெண்டுமே முழுக்கப் புரியவில்லை)

# சந்தேகம்ஸ்

[இவை rhetorical கேள்விகளாக இல்லாதபட்சத்தில் முடிந்தவரை பதிலளிக்க முயல்கின்றேன்.]

//அபராதி (குற்றவாளி)//

(என் பெயருக்கு இதுவும் ஒரு அர்த்தமோ?)

//கதை திரைக்கதை//

எனக்குத் தெரிஞ்சபடி கதைங்கிறது கதை. படத்தோட ஸ்டோரி. திரைக்கதைன்ன அந்த ஸ்டோரிய எப்படி விறுவிறுப்பா சொல்றாங்கங்கிறது.

உ+ம்: நண்பன் (அல்லது த்ரீ இடியட்ஸ்) :
இதுல ஒரு துறையில் நிஜமாவே விரும்பி, புரிஞ்சு, ஈடுபடுவதுதான் நிஜமாகப் பலன் தரும். இதுதான் கதைக்கரு.
அப்படிக் கல்வியில் ஈடுபடும் ஒரு மாணவன் தன் நண்பர்களையும் சரியான வழிக்குத் திருப்பி வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுகின்றான் அப்படிங்கறது கதை.
படத்துல முதல் சீன்ல நடக்கற ராகிங்-ல ஹீரோ அமைதியா Chemistry+Physics அறிவை யூஸ் பண்ணி தப்பிக்கறாரு அதுக்கப்புறம்... இது திரைக்கதை.

//இடதுகால் சாக்ஸ்//

என்கிட்ட ரெண்டு பருத்தி சாக்ஸ் அப்படி இருந்தது. கால் மாறி போட்ட ஒரு மாதிரி இருக்கும்.

//மின்விசிறி//

இல்லை என நினைக்கிறேன். மின்விசிறி வேகத்தை கட்டுப்படுத்தும் சக்கரம் ஒரு variable resister. மின்தடையைக் கூட்டும்போது (1) மின்சார ஓட்டம் குறைந்து மின்விசிறி மெதுவாகின்றது. மின்தடையைக் குறைத்தால் (5) மின்சாரம் அதிகமாக ஓடி மின்விசிறி வேகமாகின்றது. அதிக மின் ஓட்டம், அதிக பணம்.

ஒருவேளை கார் கியர் மாத்ரி பல்சக்கரங்களை மாற்றி வேகத்தை கண்ட்ரோல் செய்தால் ஒரே அளவு கரண்ட்தான் செலவாகும் என நினைக்கிறேன்.

(எனது பள்ளி அறிவியல் அறிவுக்கு எட்டியது இவ்வளவே.. வேறு விளக்கங்கள் இருக்கிறதா தெரியவில்லை.)

//கணினி டைம்//

இது ஈஸியான கேள்வி. கணினி மதர்போர்டில் சீமொஸ் பேட்டரி என ஒரு கைக்கடிகார பாட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அது பயாஸ் சிப்-பிலுள்ள ஒரு பகுதிக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதால் கணினி நேரம், தேதி போன்ற சிலவற்றை நினைவில் வைத்திருக்கின்றது.

// 'தற்குறிப்பேற்ற அணி'//

நல்ல உதாரணங்கள்.

HVL said...

சாதாரண ரெகுலேட்டரில் ஸ்பீட் ஐந்தில் வைத்தால் கரண்ட் முழுவதும் ஃபேன் ஓடுவதற்கு செலாவாகிறது.ஸ்பீடை குறைத்தால் அது ரெசிஸ்டரில் பவர் லாசாக தொலைந்து, மீதமிருக்கும் கொஞ்சம் பவரில் மெதுவாய் சுற்றுகிறது. கரண்ட்டை பவர் லாஸாக தொலைக்கிறோமே தவிர குறைப்பதில்லை.ஆனால் எலெக்ரானிக் ரெகுலேட்டரில் மின்சாரத்தை சேமிக்கலாம். இப்படி தான் படிக்கும் போதுசொல்லிக் கொடுத்தார்கள்!

Riyas said...

சிறுகதையில் தொடங்கி கவிதை அறிமுகமாகி தமிழ் இணக்கனம் கற்று சந்தேகம் கேட்டு நகைச்சுவையாக முடித்துள்ளீர்கள் மிக சுவாரஷ்யம்..

Jayadev Das said...

@HVL

நானும் இப்படித்தான் இருக்கும் என்று யூகம் செய்தேன், தகவலுக்கு நன்றி. எலக்ட்ரானிக் ரேகுலேடர்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றனவா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன், தங்களுக்கு தகவல் இருந்தால் சொல்லவும்.

Unknown said...

உங்கள் கதை சூப்பர்! இந்த மாதிரிக் கதைகளை ஒரு நிமிடக்கதைன்னு சொல்றாங்க!

கதைங்கிறது ரெண்டு மூணு வரில இருக்கும்! திரைகதை அதை டெவலப் பண்ணி சீன பை சீனா எழுதுறது! வசனம் - ஒவ்வொரு சீனுக்கும் அது தனியா!
அப்பிடீன்னு...... நினைக்கிறேன்! எஸ்கேப்! :-)

சாக்ஸ்ல வலது, இடது இருக்குத்தானே பாஸ்?

கம்ப்யூட்டர்ல சின்ன பேட்டரி (cmos)அதுக்குத்தானே இருக்கு? இதெல்லாம் உங்க டவுட்டா? பாஸ் என்ன கலாய்க்கிறீங்களா? :-)

எனக்கும் புல்லாங்குழல் ரொம்பப் பிடிக்கும்!

மொத்தத்தில கலக்கல் பாஸ்!

சமுத்ரா said...

நன்றி தாஸ் ...and all :)
அபராஜிதன், உங்கள் பெயருக்கு விளக்கம் 'வெல்ல முடியாதவன்' என்று நினைக்கிறேன்.Aparajitha என்று எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். not 'b '!சாக்ஸில் வலது இடது இருக்கிறதா? :) இதுவரை பார்த்து அணிந்ததே இல்லை.மாற்றி அணிந்தாலும் பெரிய வித்தியாசம் இல்லை என்று நினைக்கிறேன்.

Aba said...

@சமுத்ரா சார்,

உண்மைதான் சார். சில சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். Numerology பார்த்து 'b' போட்டுவிட்டார்கள். பெயரைத் தமிழ்ப்படுத்துவதற்கு கடைசியில் 'n'. சில சாக்ஸ்களில் வித்தியாசம் தெரியும்.

G.M Balasubramaniam said...

படித்தேன், ரசித்தேன், சுவைத்தேன் எல்லாம் தேன்.எனக்கென்னவோ பதில் தெரிந்தே கேட்கப்பட்ட கேள்விகள் போல் தோன்றியது. சமுத்ராவுக்குத் தெரியாததா.?

adhvaithan said...

*ஃபேனை ஒன்று ஸ்பீடில் சுற்றினாலும் ஐந்து ஸ்பீடில் சுற்றினாலும் ஒரே அளவு கரண்ட் (கரண்ட் சார்ஜ்) தான் ஆகும் என்று ஒருவர் சொன்னார். இது உண்மையா?

Aamam. Orae current charge thaan aagum. ungalukku teriyaatha physicsaa naan sollaporen?

*shut down செய்த பின்னும் கம்ப்யூட்டர் டைமை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?

it has a cmos circuit to maintain the recenty configured time. Basically it has information in the form of 'time' and 'time cycles passed'. i am sure, you know these things better.

*திரைப்படங்களில் கதை-திரைக்கதை-வசனம் என்று போடுகிறார்களே? கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம்?

story and screenplay. Story is the readable form. Screenplay is the viewable form. simple ah solanumnaa kathai is iyal thamizh, thiraikathai naadaga thamizh. inni thetiyil, kathai, thiraikkathai rendulayumae thamizh illai. en kathai thiraikkathaiye illai :P :P

adhvaithan said...

டொய்ங் டொய்ங் என்று தலைவலி ஏற்படுத்தும் சத்தம் அது.///

samudhraa.. enga ipadi.. btw enakku pidichcha vaathyam manitha kural aprom veenai.. thaala vathiyathil pidiththathu ganjeera :)

suresh said...

If electronic regulator used then energy will save.Now a days this type of regulator commonly used.

Chandru said...

எனக்கு பிடிச்சது என்னமோ தபேலாதாங்க. இரண்டு கையில் இரண்டுவிதமாக வாசிக்கிறார்களே.

இப்பொழுதெல்லாம் ஃபேன் விற்பவர்கள் பழைய ரெஸிஸ்டர் ரெகுலேட்டர் கொடுத்தாலும் வீட்டில் வயரிங் செய்பவர்கள் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைத்தான் வைத்துள்ளார்கள்.