இந்த வலையில் தேடவும்

Monday, January 16, 2012

கரப்பான்பூச்சி(சிறுகதை)

ஹலோ, ஒரு நிமிடம்..நான் தான் கரப்பான்பூச்சி பேசுகிறேன்.கரப்பான்பூச்சி எங்காவது பேசுமா என்று கேட்காதீர்கள். இந்த கரப்பான்பூச்சி பேசும்.ஏனென்றால் நானும் உங்களைப் போல ஒரு மனிதன் தான். நான் செய்த ஒரு சிறு தவறுக்கு தண்டைனையாக என் பாஸ் என்னை கரப்பான்பூச்சி ஆக்கி விட்டார்.மனிதனை எப்படி க.பூச்சியாக மாற்ற முடியும் என்று கேட்காதீர்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் ஏதோ உயிரியல் ஆராய்ச்சி செய்பவர். அவரால் முடியும்.என் வேலையெல்லாம் அவரது வேதியியல் துறை ஆய்வகத்தில் அவருக்கு அசிஸ்டன்ட்-அதாவது எடுபிடி. அவர் கேட்கும் திரவங்களை வாங்கி வருவது,அமிலங்களை டைல்யூட் செய்வது, டெஸ்ட்-டியூப்களை ரின்ஸ் செய்வது, ரீடிங்க்ஸ் எடுப்பது போன்ற சின்னச் சின்ன வேலை. அவர் என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்று சத்தியமாகத் தெரியாது. தெரிந்திருந்தால் சொல்வதற்கு என்ன? அப்புறம் ஒரு விஷயம். நிரந்தரமாக என்னை கரப்பான்பூச்சியாக மாற்றிவிடவில்லை. ஏதோ ஒரு ஆத்திரத்தில் நைட்ரிக் அமிலத்துக்கு பதில் சல்ப்யூரிக் அமிலம் போட்டு விட்டேன் என்று லேபில் ஓடிய க.பூச்சியை பார்த்து விட்டு ஒரு மாதம் நாம் அதாக மாறக்கடவது என்று வேதியியல் ரீதியாக சபித்து விட்டார்.I have been chemically cursed ! ஒரு மாதம் ஆனதும் மீண்டும் என்னை எடுபிடி வேலைக்கு மனிதனாக மாற்றம் செய்து விடுவார் போலும்!

சரி.

கரப்பான் பூச்சியாக மாறியதும் முதலில் எனக்கு உலகமே தலைகீழாக மாறி விட்டது போலத் தோன்றியது. மனிதர்கள் கிங் காங் குரங்கு சைசுக்கு அநியாமாக பெரிய சைசில் தெரிந்தார்கள். மேஜை நாற்காலிகள் எல்லாம் மலைகள் போல நின்றிருந்தன.நாம் அடிக்கடி கேவலமாகப் பேசும் தலைமயிர் ஒன்று பெரிய கயிறு போல இருந்தது.உலகமே ஒரு இருபது எக்ஸ்
லெவலுக்கு பெரிதுபடுத்தப்பட்டது போல இருந்தது. கரப்பான்பூச்சிகளுக்கு இது பெரிய விஷயம் இல்லை. நான் மனிதனாக இருந்து Step -down செய்யப்பட்டதால் எனக்கு இந்த வினோதமான அளவீடுகள் குழப்பமாக இருக்கின்றன.மேலும் மனிதனாக இருக்கும் போது பளபளப்பாக இருந்த தரை இப்போது மிகவும் கரடுமுரடாகத் தெரிகிறது. நாம் படுசுத்தம் என்று நினைத்த
உணவில் கூட ஆயிரக்கணக்கில் சின்னச் சின்ன கிருமிகள் இருப்பது இப்போது தான் தெரிந்தது. எறும்பு ஒன்று முயல் சைசுக்குத் தெரிகிறது.என்னை சுற்றிலும் கணக்கிலடங்காத விதம்விதமான வாசனைகள் சூழ்ந்துள்ளன.

ஒரு மணிநேரம் இப்படியே குழப்பத்தில் கழிந்தது. எனக்கு ஆறுகாலில் நடக்கத்தெரியாததால் அப்படியே நின்றிருந்தேன்.எனக்கு லேசாகப் பசித்தது. கரப்பான்பூச்சி என்ன சாப்பிடும் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. அதையெல்லாம் யோசிப்பதற்கு என்
கெமிஸ்ட்ரி படிப்பும் , மிடில் கிளாஸ் நகர வாழ்க்கையும் எப்போதும் இடம்கொடுக்கவே இல்லை. சரி நாயின் அவஸ்தை நாயாக மாறினால் தானே தெரியும்? இப்போது நான் சாப்பிட வேண்டும். எதை சாப்பிடுவது? முதலில் இந்த பாழாய்ப்போன கரப்பான் சைவமா அசைவமா? ஏதாவது எறும்பை அட்டாக் பண்ணி சாப்பிடலாமா?எறும்பு எப்போதும் படைபடையாக தான் வரும் என்று கேட்டிருக்கிறேன்.நான் பாட்டுக்கு ஒரு எறும்பை நசுக்கி சாப்பிட்டுவிட்டு பின்னர் ஓராயிரம் எறும்புகள் அணிவகுத்து வந்து விட்டால்?எதற்கு வம்பு? எறும்பு ப்ளான் கேன்சல்..மனுஷப்பயல் எதையாவது கொறித்துவிட்டு கீழே சிந்தி இருப்பானே? அதைப் போய் ஒரு வெட்டு வெட்டலாமா? ஆனால் பாருங்கள் மனுஷன் கண்ட விஷயங்களை எல்லாம் அறிவில்லாமல் சாப்பிடுகிறான்.பிளாஸ்டிக், பூச்சிக் கொல்லி, ரப்பர்,அஜினமோட்டோ எல்லாவற்றையும்! அந்த சமாச்சாரங்கள் க.பூச்சியை ஒன்றும் பண்ணாதா? யாருக்குத் தெரியும்?

ஆ. என்ன அங்கே? ஓ இன்னொரு கரப்பான்பூச்சி வருகிறது.முதன்முதலில் ஒரு பூச்சியாக இருந்துகொண்டு இன்னொரு பூச்சியைப் பார்க்கிறேன். மிகுந்த கவனமாக எங்கே மனுஷப்பயன் வந்துவிடுவானோ என்று பயந்து பம்மியபடியே அது வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஹலோ என்றேன். ஆனால் வார்த்தை ஹலோ என்று வரவில்லை. இதுவரை நான் கேட்டிராத வினோதமான ஓசை என் தொண்டையில் இருந்து எழுந்தது. என்னைப் பார்த்து ஏனோ அந்த கரப்பான் பயந்து வந்த வழியே ஓடிவிட்டது. வந்தது ஆணா பெண்ணா என்று எனக்குத் தெரியவில்லை.மனிதர்களில் முடியை வைத்தோ,அணிந்துள்ள உடைகளை வைத்தோ ,மீசையை வைத்தோ சொல்லிவிடலாம்.இங்கே எல்லாமே அம்மணமாகத் தான் இருக்கின்றன. பெண்களுக்கும் மீசை இருக்கும் போலத்தோன்றுகிறது.உம்ம்ம்ம்..முதன்முதலில் ஆடை இல்லாமல் அலைவது கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு ஆடை அணியாமல் பொது இடங்களில் நடக்கும் ஒரு மறைமுக ஆசை இருக்கிறது என்று உளவியல் சொல்கிறது.இதுமாதிரி நமக்கு கனவுகள் கூட வருமே? பொது இடங்களில் ஆடை இன்றி நிற்பது போல! பாழாய்ப் போன இந்த உடைகளால் தான் இன்று இன்டர்நெட்டில் ஃ போர்னோகிராபி சக்கைபோடு போடுகிறது.பூச்சிகள் பறவைகள் மிருகங்கள் ஆடை அணியாமல் தான் திரிகின்றன. ஆனால் 24 x 7 அதே நினைவில் அலைவதில்லை. ஆடை அணிந்த மனிதன் தான் அப்படி. உடை அவனை ஒரு செக்ஸ் maniac ஆக மாற்றி விட்டது.

உளவியல் பேசும் முதல் கரப்பான்பூச்சி நானாகத்தான் இருப்பேன். சரி முதலில் எனக்கு சாப்பிட
ஏதாவது வேண்டும். அல்ல.ஏதாவது சாப்பிட வேண்டும். அதற்கு முதலில் ஒரு கரப்பான்பூச்சியை பார்த்து அவை என்ன என்ன சாப்பிடும் என்று கேட்க வேண்டும். எனவே இப்போது தென்பட்ட அந்த பூச்சியை பின் தொடர்ந்து ஓடினேன். எனக்கு இந்த தட்டையான உடம்பையும் ஆறு சன்னமான மயிர் நிறைந்த கால்களையும் முன்னே நீட்டிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டெனாவையும் வைத்துக் கொண்டு ஓடுவது கஷ்டமாக இருக்கிறது.இருந்தும் ஓடினேன். பசி யாரை விட்டது? எப்படியோ அதை நான் பிடித்து விட்டேன். முதலில் பயந்த அது பின்னர் என்னிடம் நன்றாகப் பேச (?) ஆரம்பித்து விட்டது. வள வள என்று இடைவெளி விடாமல் பேசியதால் அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். நான் என்ன பாஷை பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் பேசினேன். அது பேசுவதும் புரிந்தது.

நீ ஆணா ? பெண்ணா?

பெண் (என்னை விட பெரியதாக இருந்தது!)

சரி.எனக்கு சாப்பாடு வேண்டும்.

ஏன் இப்படி அலைகிறாய்?கரப்பான்களால் ஒருமாதம் வரை உணவு இல்லாமல் இருக்க முடியும்.சரி நீ ஏன் வேறுமாதிரி இருக்கிறாய்? உன்னைப்பார்க்கும் போது எங்கள் இனம் என்று தோன்றவில்லை.

(நான் அனுபவித்த பசி உடலின் பசி அல்ல. மனம் உருவாக்கிய பசி என்று அப்போது தான் புரிந்தது. மனிதன் சும்மா தின்று கொண்டே இருப்பதால் அவன் மனமே ஒரு பொய்யான பசியை உண்டுபண்ணி விடுகிறது)

சரி,நாம் என்ன சாப்பிடுவோம்?
அது என்னை ஒரு மாதிரி பார்த்தது.

எல்லாமே தான். மனிதர்கள் ஸ்டாம்ப்பின் பின்னால் ஓட்டும் பசையைக் கூட.

நீ சாப்பிட்டாயா?

ஆயிற்று. கர்ப்பமாக இருப்பதால் இப்போது வேளாவேளைக்கு ஏதாவது சாப்பிட்டு விடுகிறேன்.

ஓ அப்படியா?உங்கள் தாம்பத்திய வாழ்வைப் பற்றி சொல்லேன். சாரி. எனக்கு ஒரு விபத்தில் நினைவெல்லாம் இழந்து விட்டது.
அது மீண்டும் என்னை ஒரு மாதிரி பார்த்தது.

என்ன பெருசா? மூடு வந்தா வாசனையை எடுத்து உடுவோம். அந்த ஆளு ஜொள்ளு விட்டுக்கிட்டே வருவான். மேட்டர் முடிந்ததும் அவ்ளோ தான். பிறகு வாழ்நாள் முழுவதும் நோ செக்ஸ்.அப்பாவோட விந்தை பத்திரமா எங்களுக்குள்ளேயே கெடாம சேமிச்சு வச்சுக்குவோம். அவரு குடுக்கறப்பவே ப்ரோடீன் உறை எல்லாம் போட்டு கிப்ட் பேக் பண்ணி தான் தருவார்.தேவையான போது ஒவ்வொண்ணா எடுத்து நாங்களே டெலிவரி பண்ணுவோம். இது எனக்கு இந்த வருசத்தில் நூத்தி முப்பதாவது டெலிவரி.

'பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா' என்ற சிவாஜி கணேசன் பாடல் நினைவுக்கு வந்தது.

'ஆபரேஷன் எதுவும் பண்ணிக்க மாட்டியா?'

'அப்படீன்னா'?

சரிதான் போ என்று நினைத்துக் கொண்டேன்.

கரப்பான் மூச்சை நிறுத்தி தம் கட்டுவதில் வல்லது என்றும் , எந்த விதமான Extreme வெப்பநிலையிலும் வாழும் என்றும் திருப்பிப்போட்டால் தானே திரும்ப முடியாமல் அப்படியே செத்துப்போகும் என்றும் அதனிடமிருந்து மேலும் அறிந்து கொண்டேன். நாம் உபயோகிக்கும் ட்யூப் லைட் அதற்கு அலர்ஜியாம். இருட்டு தான் பெரும்பாலும் பிடிக்கிறது. பகலில் பெரும்பாலும் எல்லாம் தூங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கரப்பான்பூச்சிகளின் எலும்புக்கூடு உடலுக்கு வெளியே தான் இருக்கிறதாம். இறைவன் இவைகளுக்கு சாரி எங்களுக்கு நரம்பு மண்டலத்தின் ஹெட் கோர்டர்ஸ் ஆக மூளையை வைக்காமல் கட்டுப்பாட்டு கேந்திரியங்களை உடல் முழுதும் ஆங்காங்கே பிரித்து வைத்திருக்கிறான்.எனவே தலை துண்டுபட்டாலும் ராகுகேது போல சிலநாள் உயிர்வாழ்கின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு முன்பு தெரிந்திருக்கவில்லை.உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நான் படித்ததெல்லாம் கரப்பான்களின் ரத்தம் வெள்ளைக்கலர் என்றும்
அவை டைனோசர் காலத்தில் இருந்தே பூமியில் இருக்கின்றன என்றும் மனிதன் அழிந்து போனாலும் பல்லாயிரம் ஆண்டுகள் பூமியை ஆளும் என்றும் இதுமாதிரி விஷயங்கள் தான். பூமியில் மனுஷப்பயல் அணுகுண்டு வீசினால் கரப்பான்களையும் தேள்களையும் தவிர வேறு எல்லா உயிரினங்களும் பூண்டோடு அழிந்து விடுமாம்.

காலில் எதற்கு உறுத்தலாக இத்தனை முடிகள் என்று அதனிடம் கேட்டேன்.

அப்போது அது கூலாக அங்கே உன்னை யாரோ துரத்துகிறார்கள் பார். தப்பித்து ஓடு என்றது. ஏதோ ஒரு ஜந்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. எலி போல தோன்றியது. எலி கரப்பான் பூச்சியைத் துரத்துமா? என்ன கருமமோ யார் கண்டது? இப்போது துரத்துகிறது நான் தப்பிக்க வேண்டும். நான் ஓடத் தொடங்கினேன். எப்படி அவ்வளவு அழகாக ஓடுகிறேன் என்பது புரியவில்லை. வழியில் உள்ள தடைகளை மிக வேகமாக அறிந்து கொண்டு தமிழ் சினிமா கிளைமாக்ஸ் போல சந்து பொந்துகளில் அனாயாசமாகப் புகுந்து ஓடினேன். எப்படியோ ஒருவழியாக தப்பித்து ஒரு மறைவிடத்தில் போய் ஒளிந்து கொண்டேன்.அப்போது அந்த கரப்பான்பூச்சி மீண்டும் வந்து எனக்கு ஹாய் சொன்னது. அப்போதுதான் என் காலில் உள்ள குட்டிக்குட்டி முடிகள் ஆபத்து காலத்தில் சூழ்நிலையை உணர உதவும் சென்சார்கள் என்று அறிந்து கொண்டேன்.

அந்த பெண் கரப்பான்பூச்சி 'டொங்கு' வருகிறான். அவனுக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றது. கரப்பான் பூச்சிகளும் பெயர் வைத்துக்கொள்ளும் போலிருக்கிறது.இந்த அழகியின் பெயர் க்ளாராவாம்.

எப்படி பார்க்காமலேயே டொங்கு வருகிறான் என்று சொன்னாய் என்றேன். எல்லாம் வாசத்தை வைத்துதான் என்றது. மனிதன் தான் தன் இயல்பான உயிரியல் வாசத்தை பெர்ப்யூம்-களைப் போட்டு லூசுத்தனமாக மறைத்துக் கொள்கிறான்!

எனக்கு டொங்கு அறிமுகமானான். மீசையில் நிறைய பாக்டீரியா சேர்ந்து விட்டது என்றும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னான்.
டொங்குவைத் தொடர்ந்து லேபில் வசிக்கும் கரப்பான்பூச்சி படையே அறிமுகம் ஆகியது.எல்லாம் நல்ல பூச்சிகள். சமுதாய பிராணிகள்! அவைகளுக்கு தனியாக ஒரு உலகம் இருக்கிறது என்று அப்போதுதான் அறிந்து கொண்டேன். மனிதர்களைப் போல அவைகளும் பொதுக்கூட்டம் தேர்தல் எல்லாம் நடத்துகின்றன.சேமிப்புக் கிடங்குகளை வைத்துக் கொள்கின்றன.கேர்ள் பிரண்டை டேட்டிங் கூட்டிச் செல்கின்றன. சண்டை போடுகின்றன. டான்ஸ் ஆடுகின்றன.இரங்கல் கூட்டம் நடத்துகின்றன. பண்டிகை கொண்டாடுகின்றன என்றெல்லாம்.அங்குள்ள எல்லாப் பூச்சிகளுக்கும் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. க.பூ.தலைவன் தேர்தலில் என்னை வேட்பாளராக நிற்கும் படி சில க.பூ கேட்டுக் கொண்டன என்றால் பாருங்களேன். எனக்கு பாலோ என்று பெயர் வேறு வைத்து விட்டன. அதற்கு என்ன அர்த்தமோ? கடவுளுக்கே வெளிச்சம்.

இப்படியே ஒரு வாரம் கழிந்தது. எனக்கு க.பூ உலகின் ரகசியங்கள், நடைமுறைகள் மெல்ல மெல்ல பிடிபட ஆரம்பித்தன.நான் ஒரு கரப்பானாக இருப்பதை விரும்ப ஆரம்பித்தேன். பிறகு எனக்கு டான்சியின் அறிமுகம் கிடைத்தது.ஒருநாள் தயங்கித்தயங்கி வெட்கத்துடன் என்னிடம் வந்து 'நீங்க தான் புதுசா வந்தவரா'? என்று கேட்டாள். அப்போதே எனக்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. இந்த காதல் கன்றாவி எல்லாம் மனிதர்களுக்கு தான் என்று நினைத்திருந்தேன். பிராணிகளுக்கும் இருக்கிறது போலும். அடுத்தநாளே பொறுக்கமுடியாமல் ஐ லவ் யூ சொல்லிவிட்டேன். அவளும் ஒரு சிறிய தயக்கத்துக்குப் பிறகு ஒத்துக் கொண்டாள். இருவரும் ஊர் சுற்றினோம். சாரி வீடு சுற்றினோம். டேட்டிங் சென்றோம். நான் தினமும் எங்கிருந்தோ ரொட்டி, பிஸ்கட்,முறுக்கு துகள்களை சேகரித்துக் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தேன்.என்ன, முத்தம் தான் கொடுக்க முடியவில்லை. மீசை இடித்தது. உன் Ultimate gift ஐ எப்போது கொடுக்கப்போகிறாய்? என்று கேட்டாள் டான்சி. கள்ளி!

இப்படிப்பட்ட ஒரு மன்மத மயக்கத்தில் எனக்கு கரப்பான்பூச்சியாக இருக்க ஒருமாதம் தான் அனுமதி என்ற கெடு சுத்தமாக மறந்தே விட்டிருந்தது. ஒருநாள் பட்டப்பகல் வேளையில், கண்ணயர்ந்து தூங்கும் போது திடீரென ஞாபகம் வந்தது. உடனே டான்சியை போய்ப் பார்த்து அவளை எழுப்பி 'என்னை மறந்து விடு' நான் என் சொந்த உலகிற்குப் போகவேண்டும். என்றேன். அவள் அழுதாள். என்னையும் கூட்டிப் போ என்றாள். தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கத்தினாள்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சொல்வதை சொல்லி விட்டேன். அப்புறம் உன் இஷ்டம் என்று சொல்லி விட்டு வந்தேன். மறுநாள் டான்சி எதையோ விழுங்கி விட்டு தலைகீழாக விழுந்து கிடந்ததைப் பார்க்கும் போது என் குட்டிக் கண்களில் நீர் துளிர்த்தது. ப்ரிட்ஜில் இருந்த கோகோ-கோலாவைப் போய்க் குடித்திருக்கிறாள் பாவம்.

நான் வந்து சேர்ந்த ஒரு வருடத்தை (நமக்கு ஒரு மாதம்) கொண்டாடும் முயற்சியில் என் சக கரப்பான்கள் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தன.பெரிய டின்னருக்கு ஏற்பாடு செய்தன. எறும்புப் புற்றுக்கு படையெடுத்துப் போய் பண்டங்களைத் திருடலாம் என்றெல்லாம் பிளான் போட்டன. நான் கொஞ்சம் ஜாஸ்தி பேசுவேன் என்பதால் நான் தான் தலைவர் பதவிக்கு நிற்கவேண்டும் என்று முடிவே செய்து விட்டன.

இதோ அந்த நாள் நெருங்கி விட்டது. ஆனால் எனக்கு மீண்டும் மனிதனாக மாற விருப்பமே இல்லை சார். மனிதன் ஒரு கேவலமான மிருகம். இங்கே கரப்பான்பூச்சிகளின் உலகில் போட்டி இருக்கிறது.ஆனால் பொறாமை இல்லை.பகை இருக்கிறது ஆனால் துரோகம் இல்லை.கோபம் இருக்கிறது ஆனால் வன்மம் இல்லை. இங்கே ஒரு பூச்சி இன்னொன்றை அடிமை செய்வதில்லை. ஏமாற்றுவதில்லை. முதுகில் குத்துவதில்லை. உலகில் என் இனம் மட்டுமே வாழவேண்டும் என்று பேராசைப்படுவதில்லை. மனிதன் கல்நெஞ்சக்காரன் சார். சுயநலம் பிடித்தவன். இங்கே எந்த ஒரு பூச்சியும் உழைக்காமல் அடுத்தவன் சொத்தை தன் வீட்டில் குவித்து வைப்பதில்லை. ஸ்ப்ரே அடித்தால் சாவதற்கு முன் எல்லா கரப்பான்களுக்கும் ஆண்டெனா மூலம் ஆபத்து இங்கே வராதே என்று தகவல் சொல்லிவிட்டுதான் ஒரு கரப்பான் சாகிறது.மனுஷப்பயலோ தான் வாழ்வதற்கு ஆயிரம் பேரை வேண்டுமானாலும் கொலை செய்வான். இந்த பூச்சிகளின் வரலாற்றில் ஹிட்லர் ,முசோலினி,இடி அமீன் கள் இருந்ததில்லை பாருங்கள்.முதலில் நான் கரப்பான்பூச்சியாக மாறியதும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். மனிதபிறவியை இழந்து விட்டோமே என்று. ஆனால் இப்போது பணத்துக்காக பொய்வேஷம் போடும், பதவிக்காக பல்லை இளிக்கும் , புகழுக்காக பாசத்தை விற்கும் மனிதப்பிறவிக்கு கரப்பான் ஜென்மம் நூறுமடங்கு மேல் என்று தோன்றுகிறது. மேலும் ஆபத்துக்கு நடுவில் எங்கே எப்போது என்ன நடந்து விடுமோ என்ற நிலையில் நிச்சயமின்றி கணத்துக்கு கணம்உயிர்வாழ்வதில் ஒரு திரில் இருக்கிறது பாருங்கள்.அதை இந்த ஒருமாதம் முழுவதுமாக அனுபவித்தேன் சார்.

அய்யோ, அங்கே யார் வருவது? என் பாஸ் போல இருக்கிறது. மீண்டும் மனிதப் பிறவியா? மீண்டும் சிட்டி பஸ்சின் கூட்டத்தில் நசுங்கி சாகும் பயணமா?மீண்டும் பட்ஜெட் இடிக்கும் மாதக் கடைசிகளா?மீண்டும் கந்தக அமிலமா? மீண்டும் அந்த ராஜாராமனிடம் பணத்துக்காக இளிக்க வேண்டுமா? அய்யோ வேண்டாம் பாஸ் வேண்டாம். நான் இப்படியே இருக்கிறேன். நீங்கள் எனக்கு கொடுத்தது தண்டனை அல்ல .பரிசு. சாபம் அல்ல. வரம். ப்ளீஸ்.நான் இப்படியே இருக்கிறேன். கரப்பான்பூச்சியாக இன்னும் கொஞ்ச காலம் இருந்து விட்டு செத்துப்போகிறேன். என்னை மனிதனாக மாற்றாதீர்கள். ப்ளீஸ்...பாஸ்..டான்சி...டான்சி...ப்ளீஸ்...என் உயிர் டான்சி...






............................................................................






பஸ்சின் கொடூரமான ஹாரன் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். என்ன நடந்தது? ஏதோ ஒரு கனவு கண்டேனே? தலைவலி என்று லேபில் அரைநாள் லீவு சொல்லி விட்டு கடையில் சாமான் வாங்கி கொண்டு வந்திருக்கிறேன். மதியான பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக் இல்லை.கண் அசந்து விட்டேன் போல இருக்கிறது. ஆனால் அது என்ன கனவு? கொஞ்சம் கூட ஞாபகம் இல்லையே?நல்ல கனவாகத்தான் இருக்க வேண்டும். மனம் லேசாக இருக்கிறதே. என்ன கொடுமை இது? கனவில் ஒரு துளி கூட ஞாபகம் இல்லை.ஏதோ மங்கலாக ஞாபகம் இருக்கிறது. பூச்சியா? சரி நிதானமாக யோசித்துப் பார்ப்போம்.

பஸ்ஸை விட்டு இறங்கி தெருவில் நடந்தேன். முதலிலேயே மனைவிக்கு போன் செய்து அரைநாள் லீவு என்று சொல்லிவிட்டேன். பையில் சாமான் எல்லாம் இருக்கிறதா என்று ஒருதரம் சரிபார்த்தேன். அந்த டப்பாவைப் பார்த்து என்னமோ செய்ய உடனே பக்கத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசி விட்டேன். ஏன் அப்படி செய்தேன்?நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேனே?

"இந்தாங்க காபி. சாமானை சரிபார்த்ததில் ஒண்ணு இடிக்குது. காக்ரோஜ் ஸ்ப்ரே பில்லுல இருக்கு. பையில இல்லையே? எம்பது ரூபாய் வெலையாச்சே!"

"பஸ்ஸில் தவறி விழுந்து விட்டது. இந்த மாதம் பட்ஜெட் ஓவர். அடுத்தமாசம் வாங்கிக்கலாம்" என்றேன்.மனைவி அர்ச்சனையை ஆரம்பிப்பதற்கு முன் பெட்ரூமுக்கு ஓடினேன்.

செல்லும் வழியில் ஒரு கரப்பான்பூச்சி குறுக்கே ஓடியது. ஏனோ இந்தமுறை 'இதுவேற சனியன்' என்று சொல்லவில்லை.

சமுத்ரா

14 comments:

adhvaithan said...

nalla karpanai madhu... super...

சாந்தி மாரியப்பன் said...

செம கற்பனை.. நல்லாருக்குது :-)

Hariharan said...

Super...ஸ்ப்ரே அடித்தால் சாவதற்கு முன் எல்லா கரப்பான்களுக்கும் ஆண்டெனா மூலம் ஆபத்து இங்கே வராதே என்று தகவல் சொல்லிவிட்டுதான் ஒரு கரப்பான் சாகிறது

Katz said...

ha ha good.

sury siva said...

//இங்கே கரப்பான்பூச்சிகளின் உலகில் போட்டி இருக்கிறது.ஆனால் பொறாமை இல்லை.பகை இருக்கிறது ஆனால் துரோகம் இல்லை.கோபம் இருக்கிறது ஆனால் வன்மம் இல்லை. இங்கே ஒரு பூச்சி இன்னொன்றை அடிமை செய்வதில்லை. ஏமாற்றுவதில்லை. முதுகில் குத்துவதில்லை. உலகில் என் இனம் மட்டுமே வாழவேண்டும் என்று பேராசைப்படுவதில்லை.//
enge nimmathi !! enge nimmathi!!
ange enakkor idam vendum

endra paadal ninaivukku varukirathu.

subbu rathinam.
http://vazhvuneri.blogspot.com

Unknown said...

nice

G.M Balasubramaniam said...

ஹை.! இந்த கற்பனையும் நல்லாத்தான் இருக்கு. கரப்பான் பூச்சிக்குக் கற்பனை இருக்குமா.?

ஆர்வா said...

ஹாய்.. என்ன ஒரு வித்தியாசமான கற்பனை? சமீபத்தில் இவ்வளவு சுவாரஸ்யமான சிறுகதையை படிக்கவில்லை. படிக்க படிக்க அத்தனை இண்ட்ரஸ்டிங்காய் இருந்தது.. அருமையான முயற்சி. கரப்பானின் உலகத்தில் புகுந்து வெளிவந்த மாதிரி அத்தனை நுணுக்கமான டீட்டெய்லிங்.. வாழ்த்துக்கள்..

Mohamed Faaique said...

கரப்பானின் வாழ்க்கை முறை, கட்டமைப்பு என எல்லாவற்றையும் ஒரு கற்பனையின் மூலம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி

நெல்லி. மூர்த்தி said...

புல்லரிக்க வைக்கும் கற்பனைக் கதை! நீங்க எழுத்துல ஒரு சகல கலாவல்லவர் என்பதை இந்த நடை கட்டியம் கூறுகின்றது. வலைபூவினை தாண்டியும் உங்கள் எழுத்து வலம் வரவேண்டும் என்பதே என் போன்றோரின் ஆவல்.

சந்தோஷமா இருக்குங்க. தொடர்ந்து கலக்குங்க..

ரிஷபன் said...

வாரப்பத்திரிகைக்கு அனுப்பி இருக்கலாம்.
என்ன ஒரு ப்ளோ.. கரப்பான்பூச்சியை இனி காதலுடன் பார்க்கலாம்..
வரிக்கு வரி நுணுக்கமாய் போர் அடிக்காமல் கதை ஓட்டத்துடன் தகவல்கள்.. கதையை வெகுவாய் ரசித்தேன்.. கூடவே உங்கள் ஹியூமர் பஞ்ச்சையும்.

Unknown said...

டான்சி எதையோ விழுங்கி விட்டு தலைகீழாக விழுந்து கிடந்ததைப் பார்க்கும் போது என் குட்டிக் கண்களில் நீர் துளிர்த்தது. ப்ரிட்ஜில் இருந்த கோகோ-கோலாவைப் போய்க் குடித்திருக்கிறாள் பாவம்...

guna said...

super

Pilgergtzp said...

nice