இந்த வலையில் தேடவும்

Wednesday, January 4, 2012

அணு அண்டம் அறிவியல் -57

அணு அண்டம் அறிவியல் -57 உங்களை வரவேற்கிறது

என் இனிய இயந்திரா!


மனிதன் ரோபோட்டுகளை இதுவரை தொழிற்சாலைகளில் தான் பயன்படுத்தி வந்திருக்கிறான். பொருட்களை எடுத்து நகரும் பெல்ட்டில் வைக்க, பெல்டில் இருந்து எடுத்து அவற்றை சீராக Pack செய்ய, உலோகங்களை கனகச்சிதமாக வெட்ட, ஹோட்டல்களில் மெஷின் வாய்சில் ஹலோ சொல்லி இட்லிவடை பரிமாற என்று.ஒரே வேலையை சலிப்பில்லாமல் திரும்ப திரும்ப செய்ய, அதே சமயம் தவறுகள் நேராமல் துல்லியமாக செய்ய மனிதன் Manufacturing process களில்
ரோபோட்டுகளை உபயோகிக்கிறான். ரோபோ அறுவை சிகிச்சை கூட செய்கிறதாம்!

ஆனால் இந்த 'சிந்திக்கும் ரோபோ'வை மனிதன் ஏன் செய்ய நினைக்க வேண்டும்? இருக்கும் கவிர்கள் போதாதா? ரோபோவின் கவிதையை வேறு சினிமாக்களில் கேட்க வேண்டுமா? என்று கேட்டால் மனிதன் சிந்திக்கும் ரோபோவை செய்ய நினைப்பது அவன் உள்மனதின் சாசுவதமாய் வாழும் ஆசையின் வெளிப்பாடு எனலாம். ஒரு மனிதன் தன் பிள்ளைகள், தன் சந்ததிகள் மூலமாக அழிவில்லாமல் வாழ நினைப்பது போல தன் படைப்பான ரோபோவின் மூலம் தன் பெயர் பிரபஞ்சம்
உள்ளவரை நிலைத்து நிற்காதா என்று ஏங்குகிறான். பிரபஞ்சத்தின் கால அளவோடு ஒப்பிடும் போது மனிதனின் , மனித இனத்தின் கால அளவு அற்பமானது.

நளினி தல கத ஜலம் அதி தரலம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்.

-தாமரை இலை மேல் விழுந்த நீர்த்துளி போல வாழ்க்கை அநித்தியமானது - பஜகோவிந்தம்.

பிரபஞ்சம் ஒரு கடல் என்றால் அதன் சூரியன்கள் குளங்கள். குளத்தில் இருக்கும் தாமரை தான் சூரியனின் கோள்கள். தாமரை இதழ் நீர் போல இன்னும் அற்பமானது அதில் மனித வாழ்வு.

பூமியின் வெப்பநிலை கொஞ்சம் மாறினாலோ , காந்தத் துருவங்கள் கொஞ்சம் இடம் மாறினாலோ, ஓசோன் படலம் கொஞ்சம் கிழிந்து போனாலோ ஒரு பிரம்மாண்ட எரிகல் தாக்கினாலோ (இது எல்லாம் இந்த 2012 ஆம் வருடம் நடக்கும் என்கிறார்கள்!) மனிதன் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விடுவான். மனிதனின் உடல் மிகவும் Sensitive ! பருவநிலை கொஞ்சம்
மாறினாலே 'லொக் லொக்' என்று இரும ஆரம்பித்து விடுகிறான். இப்போது தான் தட்டுத் தடுமாறி நிலாவுக்கு சென்று வந்துள்ளான். ஆகவே, அதீதமான தட்பவெப்பத்தையும் தாக்குப்பிடிக்கக்கூடிய, உணவு நீர் காற்று போன்ற உயிரியல் தேவைகளை நம்பியிராத ஒரு சிந்திக்கும் இயந்திரம் ஒன்றை செய்ய முடியாதா என்று மனிதன் மெனக்கெடுகிறான். அப்படிப்பட்ட மெஷின் ஒன்று செய்யப்பட்டால் அது ஆத்மா போல நெருப்பில் வேகாமல் நீரில் நனையாமல் மனிதனின் காலம் முடிந்த பின்னும் பூமியில் வாழும். காற்றே இல்லாத கிரகங்களில் அனாயாசமாகப் பயணித்து ஆராய்சிகள் செய்யும். (ஏன் மனிதனின் விதையை எடுத்துக் கொண்டு போய் வாழ்க்கை சாத்தியமாகும் சில பல கிரகங்களில் விதைக்கும்!)

ஹீரோ இருந்தால் வில்லனும் இருப்பது போல இந்த 'சிந்திக்கும்' இயந்திரங்களால் ஆபத்து வராதா என்றால் ரோபோடிக்ஸ் நிபுணர்கள் " வரும், கண்டிப்பாக வரும், ஆனால் இருக்கவே இருக்கிறது ரோபோவின் PLUG ..அதைப் பிடுங்கி விட்டால் போகிறது " என்கிறார்கள். வேற்று கிரகங்களில் மனிதனைப் போன்ற அறிவாளி உயிர்களைத் தேடும் ஆர்வலர்கள்(SETI) ஒரு விஷயத்தால் மிகவும் DISCOURAGE ஆகிறார்கள். அதாவது அப்படி ஒரு இனம் இருந்தால் அது விரைவிலேயே சண்டை போட்டுக்கொண்டு (அணுகுண்டு வீசி) தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் அல்லது அந்த இனம் கண்டுபிடித்த 'சிந்திக்கும்' இயந்திரங்கள் அவர்களை அடியோடு அழித்து விடும் என்று எடக்குமடக்காக யோசிக்கும் ஒரு கொள்கை!

வரம் தந்தவன் தலையிலேயே கைவைக்கும் பகாசுரன் போல!




எது எப்படியோ மெஷின்களை சிந்திக்க வைப்பது எப்படி என்ற இயற்பியலை மட்டும் இங்கு (சுருக்கமாக)ஆராய்வோம். AI என்பது ஒரு பெரிய சமுத்திரம்,.கம்பெனி லைப்ரரியில் இருந்து AI என்ற பெயர் கொண்ட ஒரு குண்டு புக்கை ஆர்வக்கோளாறில் எடுத்து வந்தேன்.(இதை வைத்தே ௮-௮-௮ வில் இன்னும் நாலு அத்தியாயங்கள் தேற்றி விடலாம் என்று)முதல் வரி ஒன்று தான் (ஓரளவு) புரிந்தது. அப்படியே மூடி வைத்து விட்டு இந்த வார விகடனைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஓகே. ரோபோ செய்ய இரண்டு அணுகுமுறைகள் இருக்கின்றன என்று சொன்னோம்.

மேலிருந்து கீழ் அணுகுமுறை (TOP DOWN APPROACH )

ஒரு வீட்டை முதலில் மேலோட்டமாக முழுவதும் கட்டி முடித்து விடுவது. பின்னர் நிறுத்தி நிதானமாக வீட்டின் பகுதிகளை திருத்துவது. அலங்கரிப்பது!

ரோபோவிற்கான அத்தனை விஷயங்களையும் ஒரு சி.டி யில் ப்ரோக்ராம் செய்து விட்டு அதை அதன் உடலில் நுழைத்தால் அது உடனே 'உன் உதடுகள் படுத்திருக்கும் வரிக்குதிரை;கண்கள் காண்பவர்கள் காணாமல் போகும் பெர்முடா முக்கோணம் ;நெற்றி நறுக்கி வைத்த நிலாத்துண்டு என்று கவிதை பாடும் என்று நம்பும் Over confidence !ஒரு கணினியின் Operating System -தை ஒரு சி.டி யில் தருவது போல! முதலில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கணினி OS ஐ நுழைத்ததும் அட்டகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறதே அது போல்.


ரோபோட்டுகளில் ஒரு கஷ்டம் என்ன என்றால் அவற்றின் Pattern recognition ரொம்பவே மோசம். வீடு முழுவதும் சாமான் நிரம்பி இருந்தாலும் ஒரு பூனை, பூனையை விடுங்கள் ஒரு எலி,எலியை விடுங்கள் ஒரு கரப்பான்பூச்சி எவ்வளவு அழகாக அவற்றினூடே Navigate செய்து கொண்டு போகிறது!அதன் மூளை ஒரு மிளகு சைஸ் இருக்குமா? ஆனால் இந்த ரோபோட்டுகள் தங்கள் பாதையில் வைக்கப்படும் பொருட்களை உணர்ந்து கொள்ள கறுப்பு பூனையை இருட்டில் தேடும் குருடன் போல மிகவும் சிரமப்படுகின்றன. மனிதன் ஒரு (புதிய) அறை அல்லது வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் செய்யும் காரியம் கண்களால் அந்த அறை முழுவதையும் 3D ஸ்கேன் செய்வது.(லோக்கல் பாஷையில் 'நோட்டம் விடுவது')இது மேஜை ,இது நாற்காலி, இது சுவர், இது ஃபிகர் என்று. ஆனால் இந்த விஷயத்தில் ரோபோட்டுகள் மிகவும் மந்தம். அதிக நேரம் எடுத்துக் கொண்டு கடைசியில் ஒரு குத்துமதிப்பான 2D ஸ்கேன் மட்டுமே செய்கிறது.அதுவும் வட்டம் சதுரம் போன்ற ஒழுங்கான வடிவங்களை
மட்டுமே. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருட்களை அதனால் ஸ்கேன் செய்ய முடிவதில்லை. ஒரு பொருளின் 2D இமேஜை ரோபோட் புள்ளிகள் மட்டும் கோடுகளாக வரைந்து அறிந்து கொல்வதற்கு மிக அதிக அளவில் CPU power என்று சொல்லப்படும் கணினி ஆற்றல் செலவாகிறது. நாம் ஒரு அறைக்குள் நுழைந்ததும் அதன் கட்டமைப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் அறிந்து கொள்கிறோம். இதற்கு நம் மூளையில் கோடிக்கணக்கான நியூரான்கள் பின்னணியில் இயங்குகின்றன.இது ஏன் நமக்குத் தெரிவதில்லை என்றால் பரிணாமத்தை காரணம் காட்டுகிறார்கள். மனிதனின் ஆரம்ப நாட்களில் அவனுக்கு நிறைய ஆபத்துகள் இருந்தது.ஒரு காட்டில் கரடி துரத்தும் போது எதிரே தடை எந்த தூரத்தில் இருக்கிறது, எப்படி Navigate செய்வது ,சைன் தீட்டா காஸ் தீட்டா என்றெல்லாம் விழிப்புணர்வுடன் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க முடியாது.Unconscious ஆக அந்த கணக்கிடுதல் நடக்க வேண்டும்.

இன்னொரு சிக்கல் பொருட்களைக் கையாளுவது. எந்தப் பொருளுக்கு எத்தனை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது. இன்னும் எளிதாக சொன்னால் ரோபோட்களால் கடையில் தக்காளி பொறுக்கி வாங்க முடியாது.பெரும்பாலான தக்காளிகளை கையால் நசுக்கியே நாசம் செய்து விடும்!

ஒரு பக்கத்தில் மனிதனின் 'அனிச்சைச் செயல்' என்று சொல்லப்படும் , மனிதனின் unconscious தளத்தில் இயங்கும் அறிவு. சூடு பட்டால் உடனே கையை எடுத்துக் கொள்வது, எதிரே வருபவர் மீது மோதிக்கொள்ளாமல் நடப்பது போன்ற அறிவை ரோபோக்களுக்கு தர வேண்டி இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் பகுத்தறிவு என்று சொல்லப்படும் யோசித்து அறியும் விஷயங்களையும் தரவேண்டி இருக்கிறது.

அடுத்த தலைவலி Common sense ! தர்க்க ரீதியான அறிவு. இதை நம்மால் கணித சமன்பாடுகளாக மாற்றி ஒரு இயந்திரத்துக்கு அளிக்க முடியாது.இரண்டும் இரண்டும் நாலு என்பதை ஒரு ரோபோவுக்கு சுலபமாக சொல்லிக் கொடுத்து விடலாம். ஆனால் இன்றைக்கு அப்புறம் தான் நாளை வரும் என்று சொல்லிக் கொடுக்க முடியாது. குழந்தைகள் முதலில் நான் நாளைக்கு வந்தேன் என்று தாறுமாறாகப் பேசும். பின்னர் அனுபவத்தில் காலங்களை அறிந்து கொண்டு சரியாகப் பேசும். அதே போல ஒரு ரோபோ செய்யாது.தொட்டி நிரம்பி விட்டால் நீரை நிறுத்தி விட வேண்டும் என்று எந்த 'சென்சர்' களும் இல்லாமல் ரோபோக்களுக்குத் தெரியாது.

TOP DOWN அணுகுமுறை இந்தக் காரணங்களுக்காக இப்போது ai யில் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டது. ஏனென்றால் ஒரு ரோபோட்டுக்கு உள்ளிடுவதற்கு முடிவில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டி இருக்கிறது.தக்காளியைப் பொறுக்கி எடுக்க மட்டுமே அதற்கு கோடிக்கணக்கில் வரிகள் உடைய நிரல்களை (program ) எழுத வேண்டுமாம்.அடுத்த முறை மார்க்கெட்டில் தக்காளி பொறுக்கி எடுக்கும் போது சலித்துக் கொள்ளாமல் நம் மூளையை எண்ணி ஒரு நிமிடம் வியக்கவும்.


அடுத்து கீழிருந்து மேல் அணுகுமுறை (BOTTOM UP APPROACH )

ஒரு வீட்டை அஸ்திவாரம், சுவர் , கூரை என்று மெல்ல மெல்ல எழுப்புவது. பாடகர் ஒருவர் ராக ஆலாபனையின் போது உடனே முதலிலேயே அதன் ஸ்வரூபத்தைக் காட்டாமல் அதை மெல்ல மெல்ல வளர்ப்பது போல.சில பாடகர்கள் ஆர்.டி.பி பாடும்போது முதல் அரைமணி நேரத்துக்கு அது என்ன ராகம் என்றே கேட்பவர்களுக்கு விளங்காது!(சில பேர் பாடி முடித்ததும் கூட என்ன ராகம் என்று விளங்காது என்பது வேறு விஷயம்)

குழந்தைகள் இந்த உலகத்துக்கு வரும் போது எல்லாம் தெரிந்த எல்லப்ப செட்டிகளாக வருவதில்லை. ஒரு அஸ்திவாரத்தை மட்டுமே தங்களுடன் கொண்டு வருகிறார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களிடம் இருந்தும் சூழ்நிலைகளில் இருந்தும் கற்றுக் கொள்கிறார்கள்.அதே போல ரோபோட்டுகளுக்கும் செய்யலாம் என்கின்றனர் சிலர். எடுத்ததுமே பி.ஹெச்.டி. கொடுத்து விடாமல் நிதானமாக ப்ரி கே.ஜி.யில் இருந்து வரட்டும் ABCD சரியாக சொல்லத் தெரியாமல் டீச்சரிடம் உதை வாங்கட்டும் என்று விட்டுவிடுவது.

குழந்தைகள் நடக்கும் போது எதன் மேலாவது இடித்துக் கொள்ளும்.நூறு முறை கீழே விழும். பின்பு ஸ்டெடியாக நடப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளும். அதே போல ரோபோக்கள் போய் மோதிக்கொள்ளட்டும் என்கிறார்கள். பின்னர் தட்டுத் தடுமாறி எழுந்து ஏன் மோதிக்கொண்டோம் என்று அலசி தன் நிரல்களை தானே மாற்றிக் கொள்ளட்டும்.TRIAL AND ERROR முறைப்படி
முன்னேறி நடக்கட்டும் என்கிறார்கள். ஆனால் இப்படி கற்றுக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்ட COG என்ற ஒரு bottom up ரோபோ, ரொம்பவே படுத்தியது. திரும்பத் திரும்ப அதே தவறுகளையே மக்கு மாதிரி செய்தது.ஒரு இரண்டு வயதுக் குழந்தை பத்து நிமிடத்தில் கற்றுக் கொள்ளும் விஷயத்தை இது பத்து நாள் ஆன போதும் கற்றுக் கொள்ளாமல் தடுமாறியது. அதாவது ஒரு ரோபோட்டுக்கு மனிதனால் அதிகபட்சம் நூறு செயற்கை நியூரான்களை இந்த அணுகுமுறை மூலம் முதலில் வெற்றிகரமாக பொருத்த முடியும். மனித மூளையில் இருக்கும் நியூரான்கள் எத்தனை தெரியுமா?100 பில்லியன் நியூரான்கள்!

சரி. அதிக நேரம் எடுக்காமல் இந்த டாப்பிக்கை முடிவுக்கு கொண்டு வருவோம்.



செயற்கை அறிவு சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஒரு தேனீயின் அறிவு உள்ள ரோபோவை உருவாக்கவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும் என்கிறார்கள். இதற்கு ஓரளவு பக்கத்தில் வரமுடியும் அவ்வளவு தான் . இதற்கு நாம் அறிவு என்பதை Electronic ரீதியாக ஆக சிந்திக்காமல் biological ஆக சிந்திக்கப்பழக வேண்டும். கம்யூட்டர் ஒரு தகவலை சேமித்து வைப்பதற்கும் மூளை அதே தகவலை சேமித்து வைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நம் மூளையில் டையோடுகளோ, லாஜிக் கேட்டுகளோ, Capacitor களோ இல்லை. மேலும் இந்த A .I என்பதை வெறும் இயற்பியல் துறையாகப் பார்க்காமல் இதை ஆன்மிகம், மனோவியல், தத்துவம், மருத்துவம், இவற்றின் துணையோடு அணுக வேண்டும். இன்னும் ஏகப்பட்ட ஆராய்சிகள் இந்தத் துறையில் தேவையாய் இருக்கிறது.

இரும்பிலே இருதயம் முளைப்பது இருக்கட்டும்.முதலில் மூளை முளைக்கட்டும்.

சமுத்ரா

11 comments:

Jayadev Das said...
This comment has been removed by the author.
சமுத்ரா said...

இங்கே பின்னூட்டங்களில் சண்டை போடுபவர்களுக்கு சுஜாதா சொன்னதையே சொல்கிறேன்.

"உங்கள் எதிர்ப்புகளை உங்கள் படைப்புகள் மூலம் காட்டுங்கள்.
நேரடியாக ,பகிரங்கமாக சொல்லாதீர்கள்.."

Jayadev Das said...

\\ஒரு தேனீயின் அறிவு உள்ள ரோபோவை உருவாக்கவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும் என்கிறார்கள். \\ நவீன விஞ்ஞானத்தை ஆதரிப்பவர்கள் எல்லோரும் உபயோகிக்கும் நல்ல எஸ்கேப் ரூட். முடியாது என்பதை நாசூக்காகச் சொல்ல அவர்கள் உபயோக்கிக்கும் வார்த்தைகள் இவை. ஏனெனில் நாம் யாரும் அப்போது இருக்கப் போவதில்லை. நான் கூட நூறு வருடம் கழிச்சு ஒரு தேதியைப் போட்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுப்பேன். என்ன நஷ்டம் ஆகிவிடப் போகிறது!!

Subash said...

AI பற்றி தனியான தொடரை துவங்கத் தேவையான எல்லா அறிகுறிகளும் இருக்கு... ஏன் பண்ணக்கூடாது???
( வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப மாட்டீங்களே!!! இன்னொரு தொடரா என்று? )

simpli superb. keep doing boss

Katz said...

தக்காளி மேட்டர் அருமை. மனிதன் ரோபோவை கண்டுபிடிப்பதற்கு பதில் மனிதனையே ரோபோவாக மாற்றவும் முயலலாம்.

Katz said...

உங்ககிட்டா யாருப்பா சண்டைக்கு வர்றாங்க. url (வழி) மாறி வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

கடைசி வரியைக் கருவாக வைத்து ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.. தேடிப்பிடித்து பதிவு செய்ய வேண்டும். ஞாபகப் படுத்தினீர்கள்.
முதல் அடி எடுத்து வைத்து நூறு ஆண்டுகள் ஆகவில்லையே இன்னும்... அதற்குள் எத்தனை முன்னேறியிருக்கிறோம் இந்தத் துறையில் என்று நினைக்கும் பொழுது இந்தச் சாத்தியங்களின் மேல் தீவிர நம்பிக்கை வைக்கத் தோன்றுகிறது.
அதை விடுங்கள்.. நெற்றி நறுக்கி வைத்த நிலாத்துண்டா... ஆகா, நல்லா இருக்கே?.

சமுத்ரா said...

நெற்றி நறுக்கி வைத்த நிலாத்துண்டா... ஆகா, நல்லா இருக்கே?. -வைரமுத்து எழுதியது.

Anonymous said...

/ நான் கூட நூறு வருடம் கழிச்சு ஒரு தேதியைப் போட்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுப்பேன்/
முல்லை பெரியார் அணை 999 வருடத்திற்கு ஒப்பந்தம் அதுவும் பணம் கொடுப்பதாகவே.ஜெயதேவ் தாஸ் மலையாளிகளுக்கு ஐடியா கொடுத்து இருப்பாரோ?

comedi king JD Das fan

சிவகுமாரன் said...

\\\பார்க்கலாம். மனிதன் கடவுளாக மாறுவானா என்று! //

முதலில் மனிதனாகட்டும்

அனைவருக்கும் அன்பு  said...

"உங்கள் எதிர்ப்புகளை உங்கள் படைப்புகள் மூலம் காட்டுங்கள்.
நேரடியாக ,பகிரங்கமாக சொல்லாதீர்கள்.."

அருமை சமுத்திர உங்களின் வார்த்தைகளில் உள்ள வசீகரம் படிபவரை ஈர்க்கிறது இந்த ஈர்ப்பை வைத்து பயனுள்ள நல்ல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்