இந்த வலையில் தேடவும்

Monday, January 30, 2012

கலைடாஸ்கோப்-52

லைடாஸ்கோப்-52 உங்களை வரவேற்கிறது

^


'ஆசை அறுபது நாள் ; மோகம் முப்பது நாள்' என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்த 'காலண்டர்' களுக்குப் பொருந்தும்.எல்லா வீடுகளிடும் இந்த காலண்டர்கள் வருடப் பிறப்பின் போது புதுப் பெண்டாட்டி போல கவனிக்கப்படும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கவனிப்பை இழந்து, yes , 31 -12 -xxxx வரை தேதி கிழிக்கும் சின்சியர்களை பெரும்பாலும் நான் பார்த்ததில்லை.காலண்டர்களில் தவறாமல் பெரும்பாலும் விநாயகரோ, வெங்கடாஜலபதியோ முருகனோ தான் இருக்கும். ஏ. பி.டி.பார்சல் சர்வீஸ் தான் புதுமையாக ஏரிகாத்த ராமர் என்றெல்லாம் காலண்டர் போடும்.(அதானே, கிங் பிஷர் கேலண்டரை எல்லாம் வீட்டில் மாட்டி வைக்க முடியுமா என்ன?)தாத்தா ஒரு காலண்டர் பைத்தியம். ஒரே பேங்க்கில் இருநூறு ரூபாய் போடாமல் இரண்டு பேங்குகளில் நூறு நூறு ரூபாய் போடுவார். கேட்டால் அப்போ தானே ரெண்டு காலண்டர் கிடைக்கும் என்பார்.தாத்தா கேலண்டரை சுருட்டிக் கொண்டு வரும்போதே உற்சாகம் கிளம்பி விடும்.உள்ளே என்ன இருக்கும் என்று! காலண்டரின் புதுவாசமும் நன்றாக இருக்கும்.சரி அது ஒரு (கனாக்) காலம் :-(

டைலி காலண்டர், மாத காலண்டர் என்று இரண்டு இருக்கிறது அல்லவா? ( மாத காலண்டர் ஊசி குத்தி வைப்பதற்கும் பால் கணக்கு எழுதுவதற்கும் Function overload ஆகும்!) நண்பர் ஒருவர் டைலி காலண்டரை பெண் என்றும் மாத காலண்டரை ஆண் என்றும் சொல்வார். ஏன் என்று கேட்டால் டைலி காலண்டரில் நிறைய விஷயம் பொதிந்திருக்கும். பக்கத்தில் போய்ப்பார்த்தால் தான் தெளிவாகத் தெரியும். தினமும் மாறிக் கொண்டே இருக்கும் என்று இரட்டுற மொழிதல் செய்வார். சரி, ஆனால் டைலி காலண்டர் கல்யாணத்துக்கு அப்புறம் (அதாவது ஜனவரி ஒன்று) ஒல்லியாகிக் கொண்டே வருகிறது? ஆனால்..

இன்று செல்போன் கம்ப்யூட்டர் கடிகாரம் இவையெல்லாம் தேதியைக் காட்டுவதால் காலண்டர்கள் சுவாரஸ்யம் குறைந்த ொருட்களாக மாறி விட்டன.ஆனாலும் டைலி காலண்டரில் தேதி கிழிக்கும் மகிழ்ச்சியே தனி. [நமக்கெல்லாம் கிழிப்பது உடைப்பது என்றால் அலாதி சந்தோஷம். ஆனாலும் ஒரு புத்தகத்தை தாறுமாறாகக் கிழித்துப் போட முடியாது. புது சுவர் கடிகாரத்தை அப்படியே கீழே போட்டு உடைக்க முடியாது. எனவே தான் தேதி கிழித்தும் பேக்கிங் கவரில் வரும் குமிழ்களை உடைத்தும் நாம் நம் வன்முறை உணர்ச்சிக்கு சில சமயங்களில் தீனி போடுகிறோம்!]ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இன்று கும்பத்துக்கு என்ன போட்டிருக்கான் என்று பார்க்கும் ஒரு Curiosity ! கும்பம் -அலைச்சல் மகரம் -வரவு மீனம்-பெருமை என்று ஒருவரிக்குள் வாழ்க்கையை அடக்கி விட முடியாது தான். ஸ்டில்!மேலும் டைலி காலண்டர்கள் சொல்லும் பொன்மொழிகளும் நன்றாக இருக்கும்."நோயின் தந்தை யார் என்று தெரியாது; ஆனால் தவறான உணவு தான் அதன் தாய்' 'கடவுள் காட்டிக் கொடுப்பாரே தவிர ஊட்டிக் கொடுக்க மாட்டார்' -இது மாதிரியெல்லாம்.

மேலும்,இன்று மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி, கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் திருவீதியுலா, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் அன்ன வாகனத்தில் உலா, ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தளுருளல் என்றெல்லாம் போட்டிருக்கும். 365 நாளும் மனிதன் எத்தனை விதமாக கடவுளை சேவை செய்து ஆராதிக்கிறான் பாருங்கள்!

^^
அணிகள் வரிசையில் இன்று ஏகதேச உருவக அணியைப் பார்க்கலாம்.

உருவகம் என்றால் ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிடுவது. மீன் போன்ற விழியாள் என்றால் அது உவமை.மீன் விழியாள் அல்லது விழிமீன் என்று சொன்னால் அது உருவகம் . சரி. கவி
ர் இப்படி ஒப்பீடு செய்யும் போது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருட்களில் ஒன்றை மட்டும் உருவகித்து இன்னொன்றை (சோம்பேறித்தனத்தால்) உருவகிக்காமல் விட்டுவிடுவது கவிதைக்கு ஒரு விதத்தில் அழகு.திருஷ்டிக்காக கட்டிடத்தை கொஞ்சம் முடிக்காமல் அப்படியே விட்டு விடுவது போல! அல்லது ஆண்கள் ஒரு காதில் மட்டும் கடுக்கண் அணிந்து கொள்கிறார்களே அதுமாதிரி.இது ஏ.தே.உ.அணி எனப்படும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

-இந்தத் திருக்குறளில் பிறவியைப் பெருங்கடல் என்று உருவகம் செய்த நூல் ஆசிரியர் , இறைவன் அடியை (அதைக் கடக்க உதவும்) படகாக உருவகிக்காமல் விட்டு விட்டதால் (அல்லது மடப்பசங்களா எல்லாம் நானே சொல்லணுமா நீங்களும் மூளையை உபயோகிங்க என்று சொல்லாமல் சொல்வதால்) இது
ஏ.தே.உ.அணி ஆயிற்று.

சரி இப்போது சினிமாப் பாடல்களில் சில உதாரணங்கள்.

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா - வானத்தை ஓடையாக உருவகித்து வெண்ணிலாவை படகாக சொல்லாமல் விட்டதால்

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகிறான் - கண்ணனை கன்றாக உவமை சொல்லி அவன் தாயை பசுவாக சொல்லாதது.

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் -காதலை தேர்வாக உவமை சொல்லி காதலியின் முடிவை தேர்வுமுடிவுக்கு உவமை சொல்லாதது.

மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே - மௌனம் சாவி என்றால் மனதை பூட்டு என்று வெளிப்படையாக சொல்லாமல் விட்டது.

^^^.^

ரசித்த கவிதை:

கூண்டுக் கிளியிடம் தன்
எதிர்காலம் கேட்கிறான்
சுதந்திர மனிதன்.

ரசித்த பொன்மொழி:

மனிதன்
இறக்கவே மாட்டோம்
என்பது போல வாழ்கிறான்.
வாழவே இல்லை என்பது போல இறந்து போகிறான்.


^^^.^^

சமீபத்தில் வெளிநாடு ஒன்றில் No pant Day என்று ஒருநாளை கொண்டாடி (?) இருக்கிறார்கள். அதாவது ஆபீசுக்கு பேன்ட் அணியாமல் உள்ளாடையுடன் , சும்மா ஒரு சேஞ்சுக்காக செல்வது. ! நாமும் தான் இருக்கிறோம். இப்படி புதுமையாக(?) ஏதாவது செய்கிறோமா? அதே ஆபீஸ், அதே ஃபார்மல்ஸ்,அதே மானேஜர் ! ஆபீசில் சில பேர் வெள்ளிக்கிழமை தவறாமல் காஷுவல்ஸ் அணிந்து வந்து இப்பவும் நாங்கள் அடிமைகள் தான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்! ஹ்ம்ம்.. கூடியவிரைவில் No Dress Day என்று ஒன்று (அங்கே) வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

^^^^


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் -இதை சொன்னதும் புரந்தரதாசரின் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

நம்
உடலை படகாகவும்,மனதை படகு செலுத்துபவனாகவும் பிறவியை பெருங்கடலாகவும் முக்தியை கரையாகவும் உருவகித்து பிறவிக்கடலில் என்னை முழுகடித்து விடாமல் விடலனின் முக்தி என்னும் கரைக்கு என்னை பத்திரமாக கரைசேர் என்று சொல்லும் பாடல். தமிழாக்கம் கீழே:

மனமென்னும் படகோட்டி-உன்னை
முழுவதும் நம்பினேன்

ஒன்பது ஓட்டைகள் வழியே- படகில்
உள்ளே புகுது பார் தண்ணீர்
ஓட்டுவாய் படகை விரைவாய்
உள்ளமென்னும் படகோட்டி!

காமமென்னும் புயல்- வந்து
கவிழ்க்கப் பார்க்குதே படகை
கடிதினில் நீ கரைசேர்த்திடு
மனமென்னும் படகோட்டி!

கோபமென்னும் முதலை பார்
காத்திருக்குது கடலில்
கடித்துக் குதறும் முன்னே நீ
கரைசேர்த்திடு படகோட்டி!

ஆசை என்னும் சுழிகள் உண்டு
அகப்பட்டுக் கொள்ளாதே
அமைதியாய் செலுத்திடு நீ
அகமென்னும் படகோட்டி!

துடுப்புகள் ஐந்துண்டு
தவறாக செலுத்திடாதே
பிடிப்பினை விடாமல்
போவாய்நீ படகோட்டி

பக்திஎன்னும் பகலவனின்
பிரகாசம் இருக்கையிலே
முக்தன் புரந்தர விடலனின்
முக்திமண்டபம் சேர்த்திடு

^^^^^

சமீபத்தில் ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி.

கே: இப்போதெல்லாம் மக்கள் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று தெருவில் இறங்கி விடுகிறார்களே?
: மக்கள் கண்களுக்கு தங்கள் உரிமைகள் தெரியும் அளவு கடமைகள் தெரிவதில்லை.

இது உண்மைதான். உரிமையை நிலைநாட்ட ஆ ஊ என்றால் தெருவில் இறங்கும் நமக்கு ப்ளாஸ்டிக் குடங்களை ஏந்திக் கொண்டு, தக்காளியை சாலையில் கொட்டி,பஸ் ரயிலை மறித்து, கடையை அடைத்து போராட்டம் நடத்தும் நமக்கு உரிமைகள் பெரிதாகத் தெரிகின்றனவே தவிர கடமைகள்..உஹும்ம்:( கடமைகள் என்றால் எல்லையில் ராணுவத்தில் சேர்ந்து துப்பாக்கி தூக்க சொல்லவில்லை. எளிய இது போன்ற சிறிய ஜனநாயகக் கடமைகள்:-)

* காசு தருகிறார்கள் என்று பொறுக்கிகளுக்கு ஓட்டு போடாமல் இருப்பதிலேயே நல்லவர்களுக்கு (?) ஒட்டு போடுவது.

* ஒன்றுக்கு மேல், கண்டிப்பாக இரண்டுக்கு மேல் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது.

* சாலையில் செல்லும் போது பொளிச் பொளிச் என்று கண்டதைத் துப்பாமல் நடப்பது. குட்டிச் சுவர்களுக்கு அபிஷேகம் செய்யாமல் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவது.

* கூடுமானவரை லஞ்சம் கொடுக்காமல் இருப்பது.

* குண்டு பல்புகளைத் தவிர்ப்பது. காசு இருக்கிறதே என்று நான்கைந்து டூ வீலர் 4 வீலர் வாங்கிக் குவித்து ஷோ காட்டாமல் இருப்பது (காற்றை மாசுபடுத்தாமல் இருப்பது). மின்சாரத்தை, தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது. பிரிஜ் வாங்கித்தாங்க என்று கணவனை நச்சரிக்காமல் இருப்பது.கூடுமானவரை பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் உபயோகிப்பது.

* காசு தான் இருக்கிறதே, எதையும் 'ப்ளாக்கில்' வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தைக் கை விடுவது.

* கடைக்கு செல்லும் போது துணிப்பை கொண்டு செல்வது. ப்ளாஸ்டிக் பைகளை கண்ட இடங்களில் வீசாமல் இருப்பது. வெளியே செல்லும் போது பழங்கால பாணியில் தண்ணீரை எவர்சில்வர் கூஜாவில் தூக்கி செல்வது.

* எப்படா படிப்பை முடிப்போம், எப்படா வெளிநாட்டுக்கு ஓடுவோம் என்ற கொலைவெறியை குறைத்துக் கொள்வது.

* தேசப்பற்று என்றாலே கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கும் போது கைதட்டுவது என்ற முடிவை மாற்றிக்கொள்வது.

*அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பது. (நியாயமான திட்டங்களுக்கு) ;தகவல்களை கூடுமானவரை சரியாக அளிப்பது. முடிந்தவரை ஒரிஜினல்களை உபயோகிப்பது.

* வீட்டுக்கு ஒரு மரத்தை கண்டிப்பாக வளர்ப்பது. பூச்சி வருகிறது பூதம் வருகிறது என்று ஏற்கனவே இருக்கும் மரங்களையும் வெட்டாமல் இருப்பது.

* 49 தலைமுறைக்கு சொத்தை சுவிஸ் பேங்கில் பதுக்கி வைக்காமல் இருப்பது. முடிந்தவரை பணத்தை சுழற்சியில் விடுவது.

* சாலையில் கல் கிடந்தால் லோக்கல் கவுன்சிலரில் இருந்து மன்மோகன் சிங் வரை திட்டாமல் தானே முன் வந்து அதை அகற்றுவது.

* குடியரசு தினத்துக்கு குடும்பத்தோடு உட்கார்ந்து காஞ்சனா பார்க்காமல் குழந்தைகளுக்கு முடிந்தமட்டும் நம் நாடு அதன் பெருமை, கலாச்சாரம் இவற்றை சொல்லித்தருவது. தேசிய கீதம் ஒலித்தால் எங்கிருந்தாலும் எழுந்து நிற்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துவது. பாரதியாரின் தேசபக்திப் பாடல்களை சொல்லித் தருவது. [ஏனென்றால் எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே; எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே போன்ற பாடல்களில் திளைத்த குழந்தைகள் பின்னாளில் ஒருபோதும் தேச விரோதியாக மாறமாட்டார்கள்]

* பையன் (பெண்) என்.சி.சி ராணுவம் இவற்றில் சேர விருப்பம் தெரிவித்தால் மறுக்காமல் ஒத்துக் கொள்வது.

LBNL,

* சே, இந்த இந்தியாவே படு மோசம், நானெல்லாம் லண்டன்ல பிறந்திருக்கணும், இதே அமெரிக்காவா இருந்தா என்ற பீலாக்களை குறைத்துக் கொள்வது.


சமீபத்தில் வந்த ஒரு இ-மெயில் இப்படி சொல்கிறது.

"சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.எனவே இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களையே கூடுமானவரை வாங்குங்கள். உதாரணமாக : கொக கோலா, பெப்சி என்று குடிக்காமல் அமுல் மோர் , இளநீர் இவற்றைக் குடிப்பது, லக்ஸ், டவ் இந்த சோப்புகளுக்கு பதில் மார்கோ, மைசூர் சாண்டல் உபயோகிப்பது. கோல்கேட், க்ளோசப் இவற்றுக்கு பதில் பபூல்,
மெஸ்வாக் போன்றவற்றை உபயோகிப்பது,ஆல் கிளியர், ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் இவற்றுக்கு பதில் லக்மே, மீரா உபயோகிப்பது, vodafone உபயோகிக்காமல் BSNL பயன்படுத்துவது. இப்படி நம்மால் முடிந்தவரை இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்துவது."

ஆம். இருட்டை குறை சொல்லிக் கொண்டு அமர்ந்திருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதே சிறந்தது.

^^^^^^



ஓஷோ ஜோக்.

18 + மட்டும் (In Other Words , யார் வேண்டுமானாலும் படிக்கலாம்)

ஒரு பெரிய பணக்காரன் அவன் மனைவி இருவரும் ஒரு கண்காட்சிக்கு சென்றனர். உள்ளே சென்றதும் தனித்தனியாகப் பிரிந்து சென்றனர்.

மனைவி சென்ற ஒரு ஷாப்பில் ஒருவன் ஒரு வாட்டசாட்டமான காளையை காட்சிக்கு வைத்திருந்தான்.

'இதில் என்ன விசேஷம்' என்று கேட்டாள் மனைவி.

'இது வருடத்தில் 360 முறை பெண் பசுவுடன் சேரும், ரொம்ப பவர்புல் ' என்றான் அவன்.

'அப்படியா, இதை அப்படியே போய் அங்கே நிற்கிறார் பார் என் புருஷன், அவருக்கு உறைக்கும்படி சொல்லிவிட்டு வா' என்றாள் மனைவி. அவனும் அப்படியே செய்தான்.

இதைக்கேட்ட கணவன், 'சரி, 360 முறை சேரும். ஒவ்வொரு தடவையும் ஒரே பசுவோடு சேருமா?' என்று கேட்டான்.

'இல்லைங்க , ஒவ்வொரு தடவையும் வேற வேற'

'இதை அப்படியே போய் அந்த அம்மாவிடம் சொல்லு' என்றான் கணவன்.

சமுத்ரா






16 comments:

சதுரங்க விளையாட்டும் மூலமும் said...

காலண்டர் லேட்டாக (ஒருமாதம் முன்பே வந்திருக்க வேண்டும்.) வந்தாலும் லேட்டஸ்ட்டாக இருந்தது.

காளை ஜோக் பழிக்குப் பழி.அதே ரகத்தில் ....

கணவன் ஸ்டெப்னி வாங்கினானாம், மனைவி கேட்டாளாம் நம்மிடம்தான் கார் இல்லையே ஏன் அதை வாங்குகிறீர்கள் என்று. அதற்கு கணவன், ”நீ பிரா வாங்கும் போது நான் ஏதாவது சொன்னேனா?”

Uma said...

எங்க பக்கத்துவீட்டுக்காரர் தின காலேண்டர்'எ கிழிக்கவே மாட்டார்.. காலேண்டர்'ல ஒரு ரப்பர் பேண்ட் மாட்டி அதுல செருகி வச்சிடுவார்.. :-)

பதிவு ரொம்ப சுவாரஸ்யமா இருந்துது ....

Mohamed Faaique said...

கலைடாஸ்கோப் பல்சுவை....

Tamil CC said...
This comment has been removed by the author.
Radhakrishnan said...

மிகவும் சிறப்பாக, சிரிக்க வைக்கும் விதமாக அமைந்த நல்லதொரு கலவை.

ரிஷபன் said...

டைலி காலண்டர் கல்யாணத்துக்கு அப்புறம் (அதாவது ஜனவரி ஒன்று) ஒல்லியாகிக் கொண்டே வருகிறது? ஆனால்..

விரவிக் கிடந்த நையாண்டியை ரசித்தேன்

Jayadev Das said...

காலண்டர் நினைவு.... அருமை, என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்று விட்டது.

Jayadev Das said...

\\நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா - வானத்தை ஓடையாக உருவகித்து வெண்ணிலாவை படகாக சொல்லாமல் விட்டதால்.\\ நிலவே நீந்துகிராளாம் !!

Jayadev Das said...

\\மனிதன்
இறக்கவே மாட்டோம் என்பது போல வாழ்கிறான்.
வாழவே இல்லை என்பது போல இறந்து போகிறான்.\\ Everyone should read this at least once in a day to make the life more meaningful.

Jayadev Das said...

\\இப்போதெல்லாம் மக்கள் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று தெருவில் இறங்கி விடுகிறார்களே?\\ நம் நாட்டில் மக்கள் இன்னமும் இந்த நிலைக்கு வரவில்லை. முடிந்த வரைக்கும் கஷ்டப் பட்டு வாழ்கிறார்கள், முடியாத நிலையில் பூச்சி மருந்து குடித்துதான் சாகிறார்கள்.நாட்டை ஆள்பவன் எத்தனை ஆயிரம் கோடிகள் சுருட்டுகிறான், அவன் பெண்டாட்டி பிள்ளைகள் பேரில் மாநிலத்தின் பாதி சொத்துகள் இருக்கிறது என்று தெரிந்த பின்னரும் மக்கள் அமைதியாக இருப்பதே இதற்க்கு சாட்சி. [ஒரு வேலை ஏதாவது வெளிநாட்டில் இது நடக்கலாம்].

Jayadev Das said...

\\காசு தருகிறார்கள் என்று பொறுக்கிகளுக்கு ஓட்டு போடாமல் இருப்பதிலேயே நல்லவர்களுக்கு (?) ஒட்டு போடுவது.\\ நல்லவனுக்கு நாம எங்க போவது பாஸ்?

Jayadev Das said...

\\கொக கோலா, பெப்சி என்று குடிக்காமல்\\ தேசத்தை கிரிக்கெட் மட்டையால் பாகிஸ்தானிடம் இருந்து காப்பவர்கள் என்று நாம் நினைக்கும் பதினோரு நாய்களும், சமூகத்தின் வழிகாட்டிகள் என நினைக்கும் சினிமாக் கூத்தாடிகளும் இந்த promotional விளம்பரகளில் நடிக்கிறார்களே!!

பால கணேஷ் said...

* சமூகக் கடமைகளாக நீங்கள் சொல்லியிருப்பவற்றி்ல் ட்ராஃபிக்கில் பொறுமை காத்துச் செல்வது என்பதையும் சேர்க்க வேண்டும். (சாவடிக்கிறானுங்க பரதேசிங்க!)

*டெய்லி ஷீட் கிழிப்பதில் உள்ள மனோதத்துவத்தை நீங்கள் கூறியிருப்பது ரசிக்க வைத்தது. உண்மைதான்!

* ஏகதேச உருவக அணியைத் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!

* அங்கே மட்டுமில்லை... No Dress Day அங்கே அறிமுகமானால் அதி விரைவில் இங்கும் பரவி விடும்! இப்போதைய அல்சர், ச்சே, கல்ச்‌சர் அப்படி இருக்கிறது!

* புரந்தரதாசரின் பாடல் மனதைத் தொட்டது. ஓஷோ ஜோக் சிரிக்க வைக்கத் தவறவில்லை.

* மொத்தத்தில் இந்த முறையும் கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலங்கள் மனதை மகிழ்வித்தன!

Anonymous said...

நல்ல பதிவு .. ரசித்தேன் ..
அருமையான தொகுப்புகள்

அரபுத்தமிழன் said...

Today's Kleidascope, so much glittering. Very nice.

Anonymous said...

ஏகதேச உருவக அணிக்கு தாங்கள் கொடுத்த சினிமா பாடல்கள் எதுவும் செல்லாது சார்.

கண்ணணை கன்றாக சொல்லி தாயைப் பசு என்று சொல்றதுக்கு உவமையே சொல்லாதிருப்பதே மேல். அதனாலேயே இந்த பாடல்கள் ”ஏகதேச” விளையாட்டுக்கு பொருந்தாது.

சந்திரா