இந்த வலையில் தேடவும்

Friday, June 14, 2013

கலைடாஸ்கோப்-91

லைடாஸ்கோப்-91 உங்களை வரவேற்கிறது.


&^%^$%$@#%$#%$#@@#%^ 



Your most important sale in life is to sell yourself to yourself.
Maxwell Maltz 

இந்த offer -கள் என்றாலே எனக்கு ஏனோ ஒரு அலர்ஜி. சில பேர் இருக்கிறார்கள். எங்கே, எந்தக் கடையில் எத்தனை பர்சண்ட் offer என்று up -to -date ஆக இருப்பார்கள். எனக்கு offer , discount ,sale ,reduction sale ,clearance sale ,weekend sale ,புதன் கிழமை டிஸ்கவுண்ட் மண்ணாங்கட்டி இவைகளில் சுத்தமாக  நம்பிக்கை கிடையாது. ஷாப்பிங் போக வேண்டும் என்று தோன்றினால் கிளம்பிப் போய் என்ன வேண்டுமோ வாங்கிக் கொண்டு வந்து விடுவேன். பில்லைக் கூட நோண்டி நோண்டிப் பார்க்க மாட்டேன்.அவ்வளவு தான். அதே போல இந்தப் பேரம் பேசும் சமாச்சாரமும் பிடிப்பதில்லை. மாலில் சொன்ன விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் மாம்பழம் விற்கும் பாட்டியிடம் பேரம் பேசுவது அபத்தமாக இருக்கிறது.

I was long brought up to think that it was nothing short of a crime to miss a sale.- James Cash Penney 

இந்தக் கலியுகத்தில் இப்படி அப்பாவியாக இருக்கிறாயே என்று கேட்கிறீர்களா?

சரி.

கலி யுகத்தில் தர்மம் தன் ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறது என்பார்கள். இன்று நம் அரசியல்வாதிகள் ஏதோ தத்தித் தத்தி நடந்து கொண்டிருக்கும் தர்மத்தின் அந்த ஒரு காலையும் எப்படியாவது உடைத்து விட்டு தர்மத்தை total முடமாக ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

வெயிட்,, முடமான சாதுப் பசு தர்மம் மீண்டும் நாலு கால் பாய்ச்சல் சிறுத்தையாக மாறி ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டுடா என்ற டயலாக்குடன் 
களமிறங்கும் என்றெல்லாம் சொல்லாதீர்கள். பாரதியார் காலத்தில் இருந்தே இது சலித்துப் போய் விட்டது.

தருமத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் 
தருமம் மறுபடி வெல்லும்-


மறுபடி எப்போ வெல்லும் சார்? இளமைக் காலங்களில் கஷ்டப்பட்டு விட்டு பல் விழுந்த 
பழுத்த கிழம் ஆனதற்கு பிறகு தருமம் வென்று என்ன ஆகப் போகிறது? பதினான்கு ஆண்டுகள் ராமன் தன் இளமையை செலவழித்து கஷ்டப்பட்டு விட்டு அப்புறம் தர்மம் வென்று என்ன ஆகப் போகிறது? பாண்டவர்கள் பதிமூன்று வருடம் கஷ்டப்பட்டு நாய் படாத பாடு பட்ட  பின்னர் தர்மம் வென்று என்ன ஆகப் போகிறது? 'பார், தர்மம் வென்றது' என்று சொல்லிக் காட்டக் கூட எதிரிகள் கூட  யாரும் மிஞ்சி இருக்கவில்லை.

இந்த விஷயம் the so called நல்லவர்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. கெட்டவர்கள், அநியாயம் செய்பவர்கள், தர்மத்தின் காலை உடைத்து முடமாக்குபவர்கள் , எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள்? ஏதோ ஒரு நாள் அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம். ஆனால் இன்று சுகமாகத் தானே இருக்கிறார்கள்? சத்தியம், தர்மம், நீதி,நியாயம் எல்லாம் பொய் தானா?

சுஜாதாவின் தலைப்பு ஒன்று நினைவில் வருகிறது

'வாய்மையே வெல்லும் - சில சமயங்களில்'


சில சமயங்களில் வாழ்க்கை நமக்கு எதிர்பாராத சில ஆச்சரியங்களைத் தருகிறது....இப்ப தான் லாட்டரியைத் தடை பண்ணிட்டாங்களே என்று கேட்காதீர்கள்...பணம் மட்டுமே எல்லாம் அல்ல. முன் பின் தெரியாத ஒருவர் உங்களைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைக்கிறார். அதுவும் கூட வாழ்வின் சின்ன சந்தோஷம் தான். என்றைக்கும் பயங்கர கூட்டத்துடன் வரும் பஸ் இன்று நிறைய காலி சீட்டுகளுடன் வருகிறது. ...அது கூட எதிர்பாராத சின்ன சந்தோஷம் தான். கேண்டீனில் இன்று உங்களுக்கு மிகவும் பிடித்த இட்லி உப்புமா ..அதுவும் கூட...

“For every minute you are angry you lose sixty seconds of happiness.” 
― Ralph Waldo Emerson

“One of the keys to happiness is a bad memory.” 
― Rita Mae Brown

ஜென் குரு ஒருவர், தன் இரண்டு சீடர்களை அழைத்து ஒரு அறையைக் காட்டி 'இதைப் பற்றி சொல்லுங்கள்' என்றார்.

ஒரு சீடன் ' குருவே, இந்த அறை ஒன்றுமில்லாமல் காலியாக இருக்கிறது' என்றான்.

இன்னொருவன் ' குருவே, இந்த அறை வெறுமையால் நிரம்பி இருக்கிறது' என்றான்.

ஆம்..

Do not enter without permission என்பதும்

Please enter with permission

என்பதும் ஒன்று தான். ஆனால் சொல்லும் விதத்தில் எத்தனை வித்தியாசம்!


எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது.

உண்மை , சத்தியம் அல்லது truth என்றால் என்ன என்று இரண்டு விதத்தில் இங்கே சிந்திக்க முடியும். (கேள்வி கேட்டவர்  : https://twitter.com/ammuthalib)

ஒன்று புத்தர் சொல்வது போல 'உண்மை என்பது பொய் இல்லாமை' அவ்வளவு தான். உன்னிடம் உள்ள பொய் என்னும் ஆடைகள் கழன்று விழுந்து விட்டால் வரக் கூடிய நிர்வாணம் தான் 'உண்மை' என்கிறார் அவர். உண்மை என்று தனியாக எதுவும் கிடையாது. பொய் மறைந்து விட்டால் அந்த நிலை தான் உண்மை...வெங்காயம் ஒன்றை உரிப்பது போன்றது இது..இது நானா? உடல் நானா? எண்ணங்கள் நானா? உணர்ச்சிகள் நானா? இல்லை இல்லை என்று மறுத்துக் கொண்டே போகப் போக கடைசியில் இருக்கும் ஒன்றுமின்மை 'அனத்தா ' - அதுவே சத்தியம்..இந்த அணுகுமுறையில் உண்மை என்பதற்கு ஒரு இருத்தல் இல்லை. ஒரு வித நெகடிவ் அப்ரோச்...பொய் தான் இருக்கிறது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இதற்கு இன்னொரு அணுகுமுறை உண்டு. அதாவது, பொய் என்பது பொய் உண்மை தான் உண்மை (?) என்று சொல்வது. உண்மை மட்டுமே உள்ளது. பொய் அல்லது அசத்தியம் , மாயை என்று ஒன்றுமே இல்லை. இருட்டு என்று ஒன்றுமே இல்லை.ஒளி மட்டுமே இருக்கிறது..விளக்கை கொண்டு வந்தால் இருட்டு தானாக விலகி விடும். எனவே உன்னிடம் இருக்கும் பொய்களை கைவிட முயற்சி செய்யாதே...(இல்லாததை எப்படி துறக்க முடியும்?) முதலில் உண்மையை நாடு. உண்மையின் தரிசனம் கிடைத்ததும் பொய் தானாகவே விலகி விடும் என்று சொல்வது.ஜெ .கிருஷ்ண மூர்த்தி யின் அணுகுமுறை...

இரண்டு பேரும் அடையும் இடம் ஒன்று தான். ஆனால் நாம் செல்லும் பாதை ஏன்  வறண்டதாக , சோகமானதாக, சலிப்புடையதாக  பரதேசி திரைப்படம் போல பாலைவனப் பயணமாக இருக்க வேண்டும்? ஏன் அது சோலைகளின் வழியே , நந்தவனங்களின் வழியே, மலர்களின் இடையே பறவைகளின் கானத்துடன் இருக்கக் கூடாது? மாயையை கை விடு என்று சொல்வது negative approach உண்மையை அடைந்து விடு என்று சொல்வது positive ...

ஓஷோ இரண்டு விதமான தியான முறைகளை சொல்கிறார்.

ஒன்று, நான் ஒன்றுமே இல்லை...ஜீரோ...பூச்சியம் என்று பாவித்துக் கொள்வது. இன்னொன்று நான் தான் எல்லாம் , நான் தான் பிரபஞ்சம்..நான் எங்கும் வியாபித்தவன் என்று பாவித்துக் கொள்வது.  முதலாவது அகங்காரம் அற்றதாகவும் இரண்டாவது அகங்காரம் கொண்ட வாக்கியமாகவும் தோன்றலாம். ஆனால் அகங்காரம் எப்போதும் பின்வாசல் வழியே வருகிறது என்று சொல்கிறார் ஓஷோ. நான் ஒன்றுமே இல்லை...நான் பூச்சியம்..நான் கால் தூசி பெறாதவன் என்னும் போது அகங்காரம் மறைமுகமாக வெளிப்படுகிறது. நான் தான் எல்லாம் என்று சொல்லும் போது அங்கே அகங்காரம் இருப்பதில்லை.நான் தான் எல்லாம் நீ கூட இல்லை. நீயே இல்லாத போது அகங்காரத்தின் தேவை என்ன??

மற்றொரு நண்பர் கேட்டார்..கீதையில் கண்ணன் எப்படி 'நான் விலங்குகளில் சிங்கம், மாதங்களில் மார்கழி, பறவைகளில் கருடன், அசுரர்களில் பிரகலாதன் ' என்று சொல்லலாம்? I 'm the best என்னும் கர்வமா?அப்படியானால் சிங்கம் மட்டும் தான் கண்ணனா? பூனை, பன்றி நாய் இவைகளை பகவான் கீழ் என்று சொல்கிறாரா???பாரபட்சம் பார்க்கிறாரா? கீதை மறைமுகமாக துவைத சித்தாந்தத்தை சொல்கிறதா?

-எனக்கு இதற்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை...may be , பகவான் தன்னை பரிணாமத்தின் சீரிய வடிவம் என்று சொல்கிறார் போலும் என்று சொன்னேன். பறவை என்று சொன்னால் கருடன் பறவைக்கு  உரித்தான பரிணாமத்தின் உச்சத்தை அடைந்து விட்டது என்று சொல்லலாம். அகன்ற இறக்கைகள், கூர்மையான பார்வை...கழுகுக்கு மேல் இன்னொரு பறவையைப் படைத்தால் அதன் பெரும்பாலான feature -கள் redundant-ஆகவே இருக்கும் என்றேன்...இதை நண்பர் ஒப்புக் கொள்ளவில்லை. அதெப்படி...காக்கா பரிமாண வளர்ச்சி பெறவில்லையா? காக்கா கழுகாக மாற வேண்டுமா ஒருநாள்? அப்படியானால் பகவான் கழுகுகளையே படைக்கலாமே?...

ஆனால் கிருஷ்ணன், 'பறவைகளில் நான் காகம்' என்று சொல்லி இருந்தால் அது கொஞ்சம் உறுத்தும். என்னடா நட்டு கழன்ற கேஸா என்று நினைப்போம். பறவைகளில் நான் எல்லாம்...காகம், கிளி, குருவி, கருடன் எல்லாம் நான் தான் என்று சொல்லி இருந்தால் அதுவும் அசுவாரசியம். எல்லாமே நான் தான் என்று சொல்லி விட்டுப் போகலாமே...பேதம் சில சமயங்களில் சுவாரஸ்யமாக இருக்கிறது.. உயிரின் ஆதாரமே பேதம் தான். ஏதோ ஒரு விதத்தில் பேதம் இருக்கும் வரை வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இருக்கும் .



அப்பன்னாசாரியார் இயற்றிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம்:

[மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் மரிக்கும் போது இன்னொருவரைப் பிரித்து விடும் என்பார்கள். எனக்கு பாட்டியின் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது.ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நேரத்தில் அப்பனாசாரியார் அவர் அருகில் இல்லை..ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்தில் டெல்லி கணேஷ் நதியைக் கடந்து ஓடி வருவதை பார்த்திருப்பீர்கள்]

"ஜீவேஷ பேத குண பூர்த்தி ஜகத் ஸு சத்வ
நீசோச்ச பாவ முக நக்ர கனைஹி சமேத
துர்வாதி அஜாபதி கிலைஹி குரு ராகவேந்த்ர "

- இதற்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள். ஒன்று literal :

ஜீவ ஈஷ  - உயிர்களில் பெரியது -i .e ..யானை
பேத - யானையை கிழித்துப் போடும் வல்லமை பெற்ற முதலை
நீசோச்ச பாவ முக - முதலையின் மேல், கீழ் தாடை
அஜாபதி - பெரிய ஆடு

அதாவது, தன்னை எதிர்த்து வாதிடுபவர்களுக்கு (ஆடுகளுக்கு)(அத்வைதிகளுக்கு)  முதலை போன்றவர் ராகவேந்திரர்.

மற்றொன்று subtle ..

ஜீவனும் ஈசனும் வேறு...இறைவன் குண பூர்த்தி ஆனவன். உலகம் உண்மை என்ற துவைதக் கருத்துகளை நிலை நாட்டியவர்.


well..அத்வைதம் இறைவனை நிர்குண பிரம்மம்  என்கிறது. துவைதம் , பரம குண பூரணன் என்கிறது. குணமற்றவன், குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று இறைவனை நினைப்பது ஒரு அணுகுமுறை. இது கொஞ்சம் boring 
என்னடா ஒரு குணமும் இல்லையா? யார் அவன்?சுரணை அற்றவனா?
எத்தகையவன் அவன் என்று நினைக்கத் தோன்றும்.

...எல்லா குணங்களும் நிரம்பியன் என்று நினைப்பது இன்னொன்று. இரண்டாவது கொஞ்சம் கொண்டாட்டமானது. எல்லா குணங்களும் இறைவனுக்கும் உண்டு .கோபம், அன்பு, காமம், கருணை, வாத்சல்யம், வெறுப்பு,விரக்தி  என்று.நிர்குணப் பிரம்மத்தால் அல்ல குண பூர்ண பிரம்மத்தால் மட்டுமே பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க முடியும் என்று துவைதம் நம்புகிறது.

கடவுளுக்கு குணமே இல்லை என்றால் குணங்களை உடைய மனிதர்களை எப்படிப் படைக்க முடியும்? ஒன்றைப் படைப்பதற்கு முன்னால் அதை அனுபவத்தில் உணர்ந்திருக்க வேண்டாமா? காதல் கதை எழுதும் முன்னர் உங்களுக்கு காதலின் அனுபவம் இருந்திருக்க வேண்டாமா? என்கிறது அது. அப்படியானால் இந்தக் குணங்கள் எல்லாமும் பரமாத்மாவுக்கும் உண்டு என்றால் அதற்கும்   ஜீவனுக்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்பது புரிகிறது.ஜீவனுக்கு உள்ள குணங்கள் அனைத்தும் பரமாத்மாவுக்கும் உண்டு. ஆனாலும் இரண்டும் சமம் அல்ல....ஜீவனைக் காட்டிலும் மேலானது பரமாத்மா. உதாரணமாக, ஜாவா இஞ்சினியர் வரவில்லை என்று ஒரு நாள் ரிசர்ச் அனலிஸ்ட் ப்ரோக்ராம் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எழுதுவது தானே இவரும் எழுதுகிறார்? அதே கோடிங் ஸ்டைலை தானே பின் பற்றுகிறார்? in fact கொஞ்சம் ஸ்லோவாக டைப் செய்கிறார்? என்று கேட்கலாம். எஸ் ...இப்போது இருவருமே ஒன்று போலத் தோன்றலாம். ஆனால் அனலிஸ்ட் என்பவர் டிரெய்னியை விட பல மடங்கு உயர்ந்தவர்...

சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆனாலும் அவர் அனலிஸ்ட் -ஐ விடத் 
தாழ்ந்தவர்.

லக்ஷ்மியே ஆனாலும் அவள் ஸ்ரீமன் நாராயணை விடத் தாழ்ந்தவள்.



ராமன் ரொம்ப anthropic ஆகத் தெரிகிறானே?நமக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பெண்டாட்டி காணாமல் போனதற்கு

மீண்டு மீண்டு வெதுப்ப, வெதும்பினான்,
'வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்?' 

என்றெல்லாம் புலம்புகிறான்.

அப்புறம் நமக்கும் ராமனுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம்.
நாமெல்லாம் டிரெய்னி..ராமன் பிசினஸ் அனலிஸ்ட்....

அத்வைதம் த்வைதம் இவற்றை கீழே உள்ள படத்தில் விளக்க முயல்கிறேன்.




 

எல்லாமே பிசினஸ் தான் போலிருக்கிறது உலகத்தில்:


எல்லாப் பிரச்சனைக்கும் இப்படி எளிய தீர்வு இருந்தால் எப்படி இருக்கும்?!





ச.முத்துவேலின் ஒரு கவிதை இப்போது:

வீட்டுக்குள் புகுந்த பாம்பு
ஒளிந்துகொண்டது எங்கோ
கண்டுபிடித்துவிட்டால்
ஒளிந்திருக்கும் பாம்புக்கு
ஒன்றே இருப்பிடம்
காணாத பாம்புக்கு
வீடெங்கும் இடங்கள்
நூறு நூறு உடல்கள்
நூறு நூறு தலைகள்
நூறு நூறு அசைவுகள்.



ஜோக்.


டீச்சர் ஒருத்தியின் பிறந்த நாளைக்கு ஸ்கூலில் குழந்தைகள் எல்லாரும் பரிசு கொடுத்தார்கள்.

மலர் வியாபாரியின் குழந்தை ஒன்று ஒரு பரிசுப் பெட்டியைக் கொண்டு வந்து 'மிஸ்...இதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்' என்றது.

அவள்....'flowers ' என்றாள் ...உள்ளே மலர்கள் இருந்ததன..

சாக்லேட் வியாபாரியின் குழந்தை ஒன்று ஒரு பரிசுப் பெட்டியைக் கொண்டு வந்து 'மிஸ்...இதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்' என்றது.

அவள் சாக்கலேட் என்றாள் ...உள்ளே சாக்கலேட்கள் இருந்ததன..

மதுபான வியாபாரியின் குழந்தை ஒன்று ஒரு பரிசுப் பெட்டியைக் கொண்டு வந்து 'மிஸ்...இதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்' என்றது.

அவள், பெட்டியை உயரத் தூக்கிப் பிடித்து அதில் இருந்து ஒழுகிய திரவத்தை வாயில் பிடித்தாள் ...நன்றாக சுவைத்துப் பார்த்து விட்டு, "பீர்" என்றாள் ..

"இல்லை" என்றது குழந்தை.

அவள் மீண்டும் உயரத் தூக்கிப் பிடித்து அதில் இருந்து ஒழுகிய திரவத்தை சுவைத்தாள் ...நன்றாக சுவைத்துப் பார்த்து விட்டு, "ஒயின்"" என்றாள் ..


இல்லை என்ற குழந்தை, 'மிஸ் , அது ஒரு நாய்க்குட்டி" என்றது.

நன்றி: everythingfunny.org 



சமுத்ரா 

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

போலிருக்கிறது அல்ல... எல்லாமே பிசினஸ் தான் ஆகி விட்டது உலகத்தில்...!

விஷ பாம்புகள் அதிகம் ஆகி விட்டதும் உண்மை...

"நல்ல" ஜோக்...!

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

நிலாமகள் said...

எல்லாவற்றிலும் உங்க எளிமையான அனுகுமுறையுடனான எழுத்தாற்றல் வியப்புடன் தலையாட்டி ரசிக்கச் செய்கிறது எங்களை.

Kavinaya said...

//மாலில் சொன்ன விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் மாம்பழம் விற்கும் பாட்டியிடம் பேரம் பேசுவது அபத்தமாக இருக்கிறது.//

உண்மை.

//இந்தக் கலியுகத்தில் இப்படி அப்பாவியாக இருக்கிறாயே என்று கேட்கிறீர்களா?//

துணைக்கு நானும் இருக்கேன் :)

/பகவான் தன்னை பரிணாமத்தின் சீரிய வடிவம் என்று சொல்கிறார் போலும் என்று சொன்னேன். //

சீரிய சிந்தனை.

ஒன்றைத் தொட்டு ஒன்றைத் தொட்டு உங்கள் எண்ணங்களோடு செய்த பயணம் நன்று. நன்றி.

G.M Balasubramaniam said...


பல சித்தாந்தங்களைக் கேட்டால் தெளிவு பிறப்பதில்லை. confusion ஏ கூடுகிறது. தர்மம் வெல்லும். உண்மை ஜெயிக்கும் என்றெல்லாம் கேட்கும்போது கூடவே எப்போ என்னும் கேள்வியும் எழுகிறது.பரிணாமத்தின் சீரிய வடிவம் எப்போதெல்லாம் அதர்மம் ஜெயித்து தர்மம் தலை குனிகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட மறுபடியும் மறுபடியும் அவதரிப்பேன் என்று சொன்னவர் அவ்வாறு அவதரிக்காமல் இருக்கக் காரணம் கடைசியில் தர்மம் வெல்லும் என்னும் கோட்பாடா. ?

சில நாட்களுக்கு முன் வலையில் மேய்ந்து கொண்டிருந்தபோது இன்னொரு சமுத்திராவைக் கண்டேன்....!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Vijayan Durai said...

//Do not enter without permission என்பதும்

Please enter with permission

என்பதும் ஒன்று தான். ஆனால் சொல்லும் விதத்தில் எத்தனை வித்தியாசம்//

சொல்லும் விதத்தில் சொல்லும் போது சொல் பேச்சு கேட்காதவர்கள் கூட கேட்பார்கள்...
//may be , பகவான் தன்னை பரிணாமத்தின் சீரிய வடிவம் என்று சொல்கிறார் போலும் என்று சொன்னேன்.//
இருக்கலாம்...

நாய்க்குட்டி பரிசு " செம ! இந்த ஜோக் எனக்கு முன்பே பரிச்சயம், முதன்முறை படித்தபோது சிரிப்பு வந்தது, இப்ப இல்லை :(

//பேதம் சில சமயங்களில் சுவாரஸ்யமாக இருக்கிறது.. உயிரின் ஆதாரமே பேதம் தான். ஏதோ ஒரு விதத்தில் பேதம் இருக்கும் வரை வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இருக்கும் .//