இந்த வலையில் தேடவும்

Monday, March 25, 2013

கலைடாஸ்கோப்-87

லைடாஸ்கோப்-87 உங்களை வரவேற்கிறது.


சென்னையில் ஒரு blog நண்பர் இருக்கிறார். (பேரை சொல்லக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்!) சென்னை விப்ரோவில் இருக்கிறார். அடிக்கடி மெயில் செய்து சந்தேகங்களைக் கேட்பார். இல்லை என்றால் 'ரொம்பவே போர் அடிக்கிறது பாஸ், எதாச்சும் சுவாரஸ்யமான மேட்டர் சொல்லுங்க" என்பார். நானும் 'உளுந்து வடையின் உள்ளே உள்ள ஓட்டை வடைக்கு சொந்தமானதா, பிரபஞ்சத்துக்கு சொந்தமானதா என்று யோசியுங்கள் என்றோ , James while John had had had had had had had had had had had a better effect on the teacher இது எப்படி சரியான வாக்கியம் என்று யோசியுங்கள் என்றோ ஏதோ சொல்லி எஸ்கேப் ஆகி விடுவேன். இந்த முறை, MATH ERROR அல்லது 1/0 அல்லது முடிவிலி பற்றி சொல்லுங்கள் என்றார். அவருக்கு சொன்னதை இங்கே பகிர்கிறேன் :

முடிவிலி (infinity )என்பது அறிவியலாளர்களையும் , கணித அறிஞர்களையும்,  ஏன் ஆன்மீக வாதிகளையும் ரொம்பவே தொந்தரவு செய்து வந்துள்ளது.தன்னுடைய எல்லைக்குள் வராததை, தன்னுடைய கற்பனைக்குள் சிக்காததை மனித மனம் மிகவும் சங்கடத்தோடு அணுகுகிறது.

முடிவிலியுடன் எதை சேர்த்தாலும் முடிவிலியே வரும்; முடிவிலியில் இருந்து எதை  நீக்கிலாலும் முடிவிலியே வரும் என்று கற்பனை செய்வது கஷ்டமாக இருக்கிறது. கணித மொழியில் X+1 =X அல்லது X-1 = X என்ற சமன்பாடுகளுக்கு எந்த தீர்வும் இல்லை.


X + 1 = X


இரண்டு பக்கமும் X ஆல் வகுக்க,


1 +1/X = 1 அல்லது 1/X  = 0  ; X =1/0 என்று வருகிறது. எனவே முடிவிலியை, ஒரு வடிவத்தில் கொண்டு வரவும், கணித ரீதியாக அணுகவும் 1/0 என்று குறிப்பிடுகிறோம்.  கால்குலேட்டர்கள் 1/0=? என்று கேட்டால் வெறுமனே MATH ERROR என்று சொல்லி விடும். அதை மேலும் ஆழமாகப் பார்த்தால் சில விஷயங்கள் புலனாகும்.

வகுத்தல் என்பது தொடர்ச்சியான கழித்தல். 10 / 2 = 5 என்றால் பத்தில் இருந்து தொடர்ச்சியாக 2 ஐ ஐந்து முறை 'எடுக்க' முடியும் என்று சொல்கிறோம் .  இதை 1/0 என்பதற்குப் பார்த்தால் ஒன்றில்  இருந்து நாம் எதையுமே எடுப்பதில்லை (0) எனவே , அதிலிருந்து பூஜ்ஜியத்தை முடிவில்லாமல் எடுத்துக் கொண்டே இருக்கலாம். எனவே 1/0 =∞. 1/∞ = ஒன்றில் இருந்து மிக மிகப் பெரிய எண் ஒன்றை பூஜ்ஜிய முறை எடுக்கலாம் என்று வருகிறது. 1/∞ =0

1/∞ என்பதை ஒரு பொருளை முடிவில்லாத நபர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொருவருக்கும் மிக மிக மிகக் குறைவான பொருளே (கிட்டத்தட்ட பூஜ்ஜியம்) கிடைக்கும் அல்லவா. எனவே  1/∞ =0 என்று சொல்லலாம். 1/0 என்பதை ஒரு பொருளை 'பூஜ்ஜிய' நபர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் என்ன வரும்? யோசிக்க முடியவில்லை அல்லவா? ஒரு பொருளை பூஜ்ஜிய நபர்களுக்கு எப்படிப் பகிர்ந்து கொடுப்பது? அப்படிப் பகிர்ந்து கொடுத்தாலும்  மீண்டும் அந்தப் பொருள் அப்படியே இருக்கும் அல்லவா? எனவே இந்திய கணிதவியலாளர் மஹாவீரர் , X /0 = X ஒரு எண்ணை பூஜ்ஜியத்தால் வகுத்தால் அந்த எண்ணே வரும் என்கிறார். அதாவ்து 1 / 0 = 1. இன்னொரு விதத்தில் சொன்னால் 1 / 0 = 1 என்றால் பூஜ்ஜியத்தை 1 முறை ஒன்றில்  இருந்து கழித்தால் ஒன்றும் இல்லை. ஆனால் நம் காமன் சென்ஸ் , பூஜ்ஜியத்தை ஒரு முறை ஒன்றில் இருந்து கழித்தால் ஒன்று தானே வரும் (1-1.0=1)என்று கேட்கும். ஒரு முறை கழித்தால் ஒன்று வரும். இரண்டு முறையும் ஒன்றுதான் வரும்...பத்து முறை, நூறு முறை , லட்சம் முறை, கோடி முறை இப்படி தொடர்ச்சியாக பிரபஞ்சத்தின் ஆயுள் வரை தொடர்ந்து இடை விடாமல் கழித்துக் கொண்டிருந்தால் ஒன்று வராமல் பூஜ்ஜியம் வந்து விடும்.எறும்பு ஊரக் கல்லும் தேயும்...பூஜ்ஜியம் ஒன்றும் இல்லை தான்... ஆனால் அதை நாம் முடிவில்லாமல் ஒன்றில் இருந்து கழிக்கும் போது அதுவும் ஒரு கணிசமான தொகையாக மாறி விடுகிறது. இதை கணித மொழியில் 1 - 0 . ∞ = 0 என்று எழுதலாம். எனவே 0 . ∞ = 1 அல்லது        ∞ = 1 / 0

தத்துவத்தில், முடிவிலி, 'ஜீனோ' புதிர் என்று சொல்லப்படும்  ஒரு விஷயத்தில் வருகிறது. பந்தயத்தில் மெதுவாக ஓடும் ஒருவர், வேகமாக ஓடும் ஒருவரை முந்திச் செல்ல முடியாது என்று இது சொல்கிறது. இருவருக்கும் இடையே உள்ள தூரத்தை இரண்டாக பகுக்க முடியும். அந்த தூரத்தை மீண்டும் இரண்டாக பகுக்க முடியும். இப்படி , முடிவில்லாத தூரங்களின் தொகுப்பை கடக்க வேண்டும் என்பதால் முந்த முடியாது. ஆனால் இந்த லாஜிக்கை எல்லாம் இயற்கை பார்ப்பதில்லை!Nature has her own logic! அப்போதைய கிரேக்க தத்துவ வாதிகள் லாஜிக்கின்படி ஒரு ஆண் மற்றொரு ஆணையே விரும்ப வேண்டும் என்று கருதினர்..ஆனால் இயற்கை ஆண் ,பெண்ணை விரும்பச் செய்கிறது!


முடிவிலியின் விஷயத்தில் ஒரு ஆறுதலான விஷயம் என்ன என்றால் ஒரு சார்புக்கு முடிவிலி 'எல்லை' என்ன என்பதை நிர்ணயிக்க முடியும்.

1 + 1/2 + 1/4 + 1/8 + 1/16...........இந்த தொடரின் எல்லை '2' என்று சொல்ல முடியும்....(ஆனால் 1+1/2+1/3+1/4+1/5....என்பதற்கு குறிப்பிட்ட எல்லை இல்லை என்பதை கவனியுங்கள்) 

பல்கோணம் ஒன்றுக்கு வட்டமே எல்லை என்று சொல்வதைப் போல! பலகோணத்தின் பக்கங்களை அதிகரிக்க அதிகரிக்க அது வட்டத்தை நெருங்குகிறது. மேலும், ஆச்சரியமாக வட்டம் ஒன்றின் எல்லை மீண்டும் நேர்கோடாகிறது !படத்தைப் பாருங்கள்!வட்டத்தின் மையம் விலகிச் செல்லச் செல்ல , அதன் ஆரம் அதிகரித்து , முடிவில்லாத தூரத்தில் மையம் கொண்டுள்ள வட்டத்தின் வளைவு நேர்க்கோடாக மாறி விடுகிறது. ஆம், எல்லாமே ஒரு வட்டம்!



முடிவிலியில் ஒரு குழப்பமும் உண்டு.

உதாரணம் 1-1+1-1+1-1+1-1.......∞ என்பதன் மதிப்பு என்ன?? பூஜ்ஜியம் தானே?-இதையே 1 + (-1+1) + (-1+1) +(-1+1).....என்று எடுத்துக் கொண்டால் இதன் மதிப்பு 1 என்று வரும்..அப்படியானால் 1=0???!?



.ப.பு :-



கவிஞர் வாலியின் 'ராமானுஜ காவியம்'..

வாலியின் பாண்டவர் பூமி , கிருஷ்ண விஜயம் போன்ற கவிதை நூல்கள் வரிசையில் மற்றுமொரு விருந்து!வாலியின் வழக்கமான எதுகை, மோனை, சந்தம் கொஞ்சும் எழுத்து நடை!

சில சுவாரஸ்ய உதாரணங்கள்:


*வனம் முழுக்க  
விழுங்கி விட்டதாக
மார்தட்டிக் கொண்டிருந்த  
மையிருட்டின் முகத்தில்
அவ்வப்போது - 
கரியை அப்பிக் கொண்டிருந்தன  
வால் பகுதியில்  
விளக்குகளை வைத்தபடி
செடிக்குச் செடி 
சிறகடித்துப் பறந்த 
சின்னச் சின்ன மின்மினிகள்!



*வெட்டவெளிப் பொட்டலெனும்
புற்றிலிருந்து புறப்பட்ட-
வெளிச்சக் கரையான்கள்
வெகு வேகமாக
உண்ண உண்ண
இற்று விழுமளவு  
இருட்டுமரம் உளுத்தது ;  
உடன்  
ஊருலகு வெளுத்தது!

*அவதார புருஷர்களாகி  
அவனிக்கு வந்தவர்களே-  
அரிதார புருஷர்களாகி  
ஆடவேண்டியதை ஆடிவிட்டு
ஏறியிருக்கின்றனர் வானம்;  
எம்மாத்திரம் நீயும் நானும்?

*மெய்ப்பொருள் யாதெனில்  
மெய்ப்பொருள் ஒன்றே
மெய்ப்பொருள் - மற்றபடி -
கைப்பொருள் என்பதும்  
பைப் பொருள் என்பதும்  
பொய்ப் பொருள்!

ஹ்ம்ம்..இரண்டே இரண்டு சிறு குறைகளைத் தவிர வேறேதும் இல்லை இந்த ராமானுஜ காவியத்தில்

* ஒவ்வொரு வாக்கியத்துக்கும் எதுகை எழுதியே தீருவேன் என்று எழுதியிருப்பது . நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு சந்தங்கள் வருவது. உதாரணம்:


ராமானுஜா ! 
ரொம்பவும் ரோசக்காரனடா நீ!  
அப்படியிருப்பது அதிசயமல்ல...

மன்னன் முனிய - 
ஊர்விட்டு மழிசை 
முனிவர் சென்றதுபோல்-
மானமுடைய மாந்தர் மண்டிக் கிடக்கின்ற
தேசுடைய - 
தொண்டை தேசக்காரனடா நீ!


இன்னொன்று முடிக்கும் போது தெரியும் ஒரு தலைபோகும்  அவசரம். .ராமானுஜரின் இளமைக் கால சம்பவங்களை விலா வாரியாக விளக்கி விட்டு , அவர்  முக்தி அடைவதை அரைப் பக்கத்துக்குள் சொல்லிவிடும் அவசரம் ஏனோ?

* ராமானுஜரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்வமான சம்பவங்கள்:- ( இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு முன் இவை எனக்குத் தெரியாது!)

=திருமாலின் சிவந்த கண்களை குரங்கின் குதத்துடன் ஒப்பிடுகிறார் ராமானுஜரின் குரு யாதவப் பிரகாசர். (கப்யாசம் புண்டரீகம்). இதை ராமானுஜர் மறுக்க, அவருக்கும் குருவுக்கும் தொடங்குகிறது பனிப்போர். ஒரு கட்டத்தில் யாதவப் பிரகாசர் ராமானுஜரை கொலை செய்யத் துணியும் அளவு முற்றுகிறது.

= ஆளவந்தாரைக் காண்பதற்கு ஸ்ரீரங்கம் செல்கிறார் ராமானுஜர். ஆனால் அவர், ராமானுஜர் வரும் முன்பே முக்தி அடைத்து விடுகிறார். ஆளவந்தாரின் பூத உடலை மட்டுமே ராமானுஜரால் தரிசிக்க முடிகிறது. அவர் சடலத்தில் கையின் மூன்று விரல்கள் மட்டும் மடங்கிக் காணப்படுகின்றன. ராமானுஜர் எல்லார் முன்னிலையிலும் மூன்று உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக நிமிர்கின்றன!

=  தன் மனைவி மீது அவ்வளவு பாசம் உறங்காவில்லி என்பவனுக்கு.  ஒருநாள் தெருவில் தன் மனைவிக்கு குடை பிடித்துக் கொண்டு, அவள்   பாதத்துக்கு தன் அங்க வஸ்திரத்தை கம்பளமாக விரித்துக் கொண்டு செல்கிறான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராமானுஜர் அவனை மடத்துக்கு அழைத்து ' மனையாள் மீது இத்தனை பிரியமா?' என்கிறார். உறங்காவல்லி , "ஆம், ஸ்வாமி , அவளது அழகிய கண்களுக்கு நான் அடிமை" என்கிறான். ராமானுஜர் அவனை ரங்கநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமாலின் கண்ணழகைக் காட்டுகிறார். அதைப் பார்த்து பிரமித்துப் போகும் உறங்காவல்லி, ராமானுஜரின் சீடனாக மாறி விடுகிறான்.

= வரதாழ்வான் என்னும் பக்தன் ஒருவன். அவன் இல்லாத நேரம் பார்த்து அவன் அகத்துக்கு வந்துவிடுகிறார் ராமானுஜர். வீட்டிலோ பரம தரித்திரம். வரதாழ்வான் மனைவி உடையவரை உபதரிசித்து ஸ்நானம் செய்து வந்ததும் திருவமுது தயாராய் இருக்கும் என்று சொல்லிவிடுகிறாள் . வீட்டில் அரிசி, பருப்பு, புளி மிளகாய், மேகி நூடுல்ஸ்  ஒன்று கிடையாது. ஓடுகிறாள் வணிகன் கடைக்கு...வணிகனுக்கு அவள் மீது ஒரு கண்...'நீ என் வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பினால் யதிராஜர் குடற்பசி தீர்ப்பேன்; அப்படியே இன்று இரவு உன்னிடம் வந்து உன் உடற்பசி தீர்ப்பேன்' என்கிறாள். அவனும் வாயெல்லாம் பல்லாய் இளித்து, வேண்டுமட்டும் சாமான் அனுப்புகிறான். அவளும் எதிராஜருக்கு இன்சுவை விருந்து படைக்கிறாள் .வரதாழ்வானும் வீடு திரும்பி ஸ்வாமிகளை சேவிக்கிறான். பிறகு நடந்ததை அறிந்த ராமானுஜர், தன் பிரசாதத்தை வணிகனிடம் கொடுத்து விடும்படி சொல்லி விடைபெறுகிறார்.

அன்று இரவு, வரதாழ்வான் மனைவியை வணிகனின் வீட்டில் விடச் செல்கிறான். பிரசாத்தை உண்டதும் வணிகனுக்கு தன்  கண் முன் சாட்சாத் நாராயணனும் திருமகளும் நிற்பதாகத் தோன்றுகிறது. மனம் மாறும் வணிகன் இனி பரஸ்த்ரீகளை ஏறெடுத்தும் பாரேன் என்று சத்தியம் செய்கிறான்.

=சிறுவயதில் இருக்கும்  ஆளவந்தாருக்கும் , பண்டித கர்வம் நிறைந்திருக்கும் ராஜகுரு ஆக்கியாழ்வானுக்கும் நிகழ்ந்த வாதம் சுவாரஸ்வம். நான் மூன்று வாக்கியங்கள்சொல்வேன் அவற்றை நீங்கள் மறுத்தால் போதும் ' என்கிறார் ஆளவந்தார்.

1. உங்கள் தாய் ஒரு  மலடியல்ல.
2. நம் ராஜா நீதி நெறி தவறாமல் ஆள்பவன்.
3. நம் அரசி பதிவிரதை.

 

இந்த விஷயங்களை மறுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக் கொள்கிறான் ஆக்கியாழ்வான்.

உம்மால் மறுக்க முடியுமோ என்று அரசன் கேட்க , ஆளவந்தார்,

1. ஒரு மரம் தோப்பல்ல. ஒரு பிள்ளையும் பிள்ளை அல்ல. ஒரு பிள்ளை பெற்றவள் காலம் பூராம் என் பிள்ளைக்கு என்னாகுமோ ஏதாகுமோ என்று கவலையுடனே காலம்தள்ளுவதால் ஒரு பிள்ளை பெற்றவளும் மலடி தான்

2. மக்கள் செய்யும் பாவம் மன்னனை சேரும் என்பதால் நீதிமானான நம் அரசரும் தார்மீகர் இல்லை என்று வாதம் மறுக்கப்படுகிறது.

3. வைதீக முறைப்படி விவாகம் புரிந்து கொண்ட ஒரு பெண் முதல் நாள் சந்திரனுக்கு சொந்தம்; இரண்டாம் நாள் கந்தர்வனுக்கும் மூன்றாம் நாள் அக்கினுக்கும் சொந்தமாகி நான்காம் நாளில்தான் தன் கணவனுக்கு உரிமையாகிறாள். எனவே என் மூன்றாம் வாக்கியமும் பொய் என்று மறுக்கப்படுகிறது.

ராஜகுருவை வாதத்தில் வென்றதால் அவருக்கு ராஜ்ஜியத்தில் பாதி அளிக்கப்படுகிறது. பின்னர் ஆளவந்தார் ராஜ்ஜியத்தை துறந்து விட்டு , ஸ்ரீவைஷ்ணவராகிறார்.

 சரி. ராமானுஜரின் விஷயத்தில் சில சந்தேகங்கள் :

* ராமானுஜர் எல்லா வர்ணத்தவர்களையும் ஆதரிக்கிறார். ஏன், டில்லியில் இஸ்லாமிய பெண் ஒருத்தியைக் கூட  அரவணைத்து துலுக்க நாச்சியாராய் உயர்த்துகிறார். ஆனால்,சைவர்கள் மீது மட்டும் ஏன் வெறுப்பு? திருப்பதி தெய்வம் சிவனா விஷ்ணுவா என்ற சண்டையைத் தீர்க்க , சைவர்களும் வைணவர்களும் இரவில் சிவ சின்னங்களையும் விஷ்ணு சின்னங்களையும் உள்ளே  வைத்து கதவைப் பூட்டுகிறார்கள் .  மறுநாள் தெய்வம் விஷ்ணு சின்னங்களை எடுத்து அணிந்து கொண்டிருக்க, திருப்பதி தெய்வம் பெருமாளே என்று ஊர்ஜிதமாகிறது. சில பேர் , ராமானுஜர் தான் இரவில் பாம்பாக மாறி கருவறைக்கு உள்ளே சென்று சிவ சின்னங்களை உடைத்துப் போட்டார் என்றும் சொல்வார்கள்.

* தமது உற்ற நண்பர்களான கூரத்தாள்வானையும் , பெரிய நம்பியையும் அதோ கதியாக கொடுங்கோல் மன்னனிடம் விட்டு விட்டு ராமானுஜர் அவசரம் அவசரமாக மேல்கோட்டை செல்லும் அவசியம் என்ன? அரசனிடம் சென்று பேசி இருக்கலாமே?

 * ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் ராமானுஜரின் 'தானான திருமேனி' அவரது mummify செய்யப்பட அசல் திருமேனி என்று சொல்கிறார்கள். இது எந்த அளவு உண்மை?

  ராமானுஜர், மத்வாச்சாரியார், அதி சங்கரர் இவர்களது தத்துவங்கள் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. சங்கரரது அத்வைதம் (இருமை அற்றது) முன்பே தோன்றி விட்டது. (8ஆம் நூற்றாண்டு) பிறகு, அத்வைதம் மற்றும் த்வைதம் இரண்டுக்கும் compromise செய்து கொள்ளும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் தோன்றுகிறது. (10 ஆம் நூற்றாண்டு ) பிறகே த்வைதம் மத்வாசாரியாரால் 12 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப் படுகிறது. இது கொஞ்சம் இடிக்கிறது. லாஜிக்கின் படி த்வைதம் - அத்வைதம் - விசிஷ்டாத் வைதம் என்று இருக்க வேண்டும். maybe , இவர்களுக்கு முன்னரே இந்தக் கொள்கைகள் இருந்திருக்க வேண்டும்...இவர்கள் இதை முழுமூச்சோடு பரப்பியிருக்க வேண்டும்..


அத்வைதம், உலகத்தை மாயை என்று சொல்கிறது. பிரம்மம் அல்லது நிர்குணப் பிரம்மமே எல்லாம் ,நான், நீ ,நான்-கடவுள் ஆர்யா எல்லாமே பிரம்மம் தான். நான், நீ, நான் ஒரு ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. மற்றபடி எல்லாமே பிரம்மம் தான். இந்த  வேறுபாடுகள் அவித்யையால் (அறியாமை) ஏற்படும் தோற்றப் பிழைகள் மட்டுமே. துணிக்கடை ஒன்றின் கண்ணாடியில் நீங்கள் உங்களைப் பார்க்கும் போது பல்வேறு பிம்பங்கள் தோன்றுமே..அப்படி பரமாத்மாவின் பிம்பங்கள் தான் நாம் என்கிறது அத்வைதம். ஒரு விதத்தில் இது உளுந்து வடையின் ஓட்டை போன்றது...வெட்டவெளி பரமாத்மா..அதை உளுந்து வடை தனக்குள் சிறை பிடிக்க முயல்வது போல ஜீவாத்மா.. இரண்டும் ஒன்றே...அல்லது, ஒரு காலிப்  பானையை குளத்தில் முங்கினால்  பானையின் உள்ளே இருக்கும் தண்ணீரும் வெளியே இருக்கும் தண்ணீரும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்கிறது அத்வைதம்.





'மாயை' என்பதற்கு சங்கரர் கொடுக்கும் உதாரணம் பாம்பு மற்றும் கயிறு. கயிறு, பாம்பு போலத் தோற்றமளிப்பது. ஆனால் ஓஷோ, இந்த உதாரணம் சரியானது அல்ல என்கிறார். ஒரு முறை இது பாம்பு அல்ல என்று தெரிந்து விட்டால் அதற்குப் பிறகு பார்க்கும் ஒவ்வொரு முறையும் அது கயிறு தான். மாயை என்பது தண்ணீரில் அழுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு கோலைப் போன்றது. அது வளைந்து தெரிகிறது. எத்தனை முறை பார்த்தாலும்! கோல் , வளையவில்லை என்று நம் அறிவு சொன்னாலும், அது நம் கண்களுக்கு வளைந்தே தெரிகிறது. அது போல மாயை!


ஸ்ரீ ஜெயதீர்த்தர் 


இதற்கு இன்னொரு extreme -ஆன த்வைதம், கொஞ்சம் infinity யின் பக்கம் வருகிறது..ஆம்..பரமாத்மா ஜீவாத்மா என்ற இணை கோடுகள் கண்டிப்பாக ஒன்றை ஒன்று ஒரு நாள் தொடும் ..ஆனால் அதற்கு முடிவில்லாத தூரம் பயணிக்க வேண்டும். they meet at infinity..ஜீவனின் எல்லை பரமாத்மா ..ஜீவன் பரமாத்மாவாக இயலாது! ஏன் ,ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவில் இருந்தும் இன்னொரு ஜடப்பொருளில் இருந்தும் கூட வேறுபட்டது; 

கடல்நீரும் உங்கள் மினரல் வாட்டர் பாட்டிலில் உள்ள நீரும் ஒன்றுதானா என்றால் ஒன்று அல்ல? of course ,ஒருநாள் எல்லாத் தண்ணீரும் கடலை சேர்ந்தே ஆக வேண்டும். சேர்ந்த பிறகு இரண்டும் ஒன்று ஆகலாம். (கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத்துளி மழைத்துளி !) ஆனால் அவ்வாறு ஒன்று சேர்வது எண்ணிறைந்த படிநிலைகள்  நிறைந்த ஒரு பயணம். தன் ஆன்மீக சாதகத்தைப் பொறுத்து கடவுளுடன் ஒரு ஜீவன் நெருங்க மட்டுமே முடியும். ஒன்றாக இயலாது. அதிக பட்சம் தாரதம்யத்தின் படி சமனா என்று அழைக்கப்படும் லக்ஷ்மியின் இடத்தை எட்ட முடியும்..but , நாராயணன்! முடியாது! அவன் சர்வோத்தமன்! எந்த நிலையிலும் பேதம் இருந்தே தீரும்.  

விசிச்டாத்வைதம் ,இரண்டிற்கும் கொஞ்சம் இசைந்து கொடுத்து ஜீவன் என்பது பலூனில் அடைக்கப்பட்ட காற்று..அது , வெளியே உள்ள காற்றில்  (ஈஸ்வர) இருந்து பொதுவாக வேறுபட்டது. ஆனால் முக்தி அடைந்த ஜீவன் பலூனில் இருந்து வெளியே வந்த காற்று போல..மீண்டும் அதை கண்டுபிடுத்து அதே காற்றை அதே பலூனில் அடைப்பது கடினம்.எனவே ஒரு ஜீவனின் அறியாமை நிலையில் பேதம் நிலவுகிறது...ஞானம் அடைந்தபின் ஜீவனும் பரமனும் ஒன்றே என்கிறது...சரி..don't get சீரியஸ்!



  தித்யா சானலின்  சில நிகழ்ச்சிகள் புன்னகைக்க வைக்கின்றன..

$ டாடி எனக்கொரு டவுட்டு:




சில சமயம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை.

இந்த நிகழ்ச்சி ஒரு அப்பாவிடம் ஸ்கூல் பையன் ஏடாகூடமாக சந்தேகம் கேட்பது போல இருக்கிறது.பையன் கேட்கும் டவுட்டுகளில் சில:

* வாக்கிங் போனால் வெயிட் குறையும் அப்படீன்னா யானை தினமும் காட்ல வாக்கிங் போகுதே...அதுக்கு ஏன் குறைய மாட்டேங்குது?

* தலையை அடமானம் வைத்தாவது இதை செய்வேன் அப்படீங்கறாங்களே ,எந்த அடகுக் கடையில் தலையை அடகு வைக்க முடியும்? தலையை அடகு வெச்சுட்டு வெறும் உடம்போட எப்படி இருக்க முடியும்?

* ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சுருக்கான் அப்படீங்கறாங்களே, அப்படின்னா, மாட்டுக்கு குதிரைக்கெல்லாம் அளக்காமலா வெச்சிருக்கான்??

*கணக்குல புலி அப்படீங்கறாங்களே, கணக்குல சிங்கம் கணக்குல காண்டாமிருகம் அப்படியெல்லாம் ஏன் சொல்றதில்லை?


$ கொஞ்சம் நடிங்க பாஸ் :

எத்தனை நடிகர்களை நாம் விமர்சித்திருப்போம்? அந்த இடத்துல அதர்வாவுக்கு  expression பத்தலை மச்சி! 'தமிழ்நாட்டில் ஏழு கோடி பேர் சினிமா விமர்சகர்களாக இருக்கிறார்கள் ' என்று கிண்டலடிக்கிறது ஒரு ட்விட்டு ..ஆனால் நம்மை நடிக்கச் சொன்னால்? அப்போது தான் நடிப்பது எத்தனை கஷ்டம் என்று தெரியும்.இந்த  நிகழ்ச்சியில் நிறைய பேர் நடிக்க வராமல் சொதப்புகிறார்கள்.

நடிப்பு என்பது ordinary அல்லது extra -ordinary ? 'இயல்பான நடிப்பு' என்பது ஒரு ஆக்ஸிமோரான் :) உதாரணமாக, சினிமாவில் காதலன் ஒருவன் காதலியிடம் உருகி உருகி காதலாகிக்  கண்ணீர் மல்கி டயாலக் பேசினால் ஆஹா எத்தனை இயல்பா இருக்கு என்போம். அதையே நிஜத்தில் ஒரு காதலன் காதலியிடம் செய்தால் அவள் 'சும்மா நடிக்காதே' என்று சொல்ல பெரும்பாலும் சாத்தியம் இருக்கிறது..


  
$ சொல்லுங்கண்ணே சொல்லுங்க:-




இமான்  அண்ணாச்சியின் இந்த நிகழ்ச்சி எல்லாரையும் சிரிக்க வைக்கிறது. ஜுஜுபி மேட்டர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நமக்கு உண்மையில் தெரியவே இல்லை என்று விளங்க வைக்கிறது..'wi -fi ' எதன் மூலம் வேலை செய்கிறது? கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் பெயர் என்ன? 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்றால் என்ன? மொரார்ஜி தேசாய் யார்? என்றெல்லாம். சில சமயம் இங்க்லீஷ் சொற்களுக்கு  தமிழில் என்ன என்று கேட்டும் தர்ம சங்கடப் படுத்துகிறார் இமான். DVD player , projector இவற்றுக்கு தமிழில் என்ன?

பிரம்மச்சாரியாகவே இருந்த இந்தியப் பிரதமர் யார்?

ஒரு காலேஜ் மாணவி சொன்ன பதில்: டாக்டர். அப்துல் கலாம்!

சில சமயம் விடுகதையும் கேட்கிறார்:

"வீட்டுக்குள்ளேயே இருப்பாள்; வினோதமாய்ப் பேசுவாள்; வந்தவரை வா என்பாள்; அவள் யார்"?

"ஓராயிரம் வீரர்களுக்கு ஒரே ஒரு கால்" அது என்ன?

கூகிள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பதே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்போம்..அனால், அதைப் பற்றிப் பேசச் சொன்னால் ஒரு நாலு வரிக்கு மேல் நாக்கு படுத்து விடும்..'இதுவா, இதெல்லாம் சப்பை மேட்டர்..எனக்குத் தெரியாததா ' என்று அலட்சியமாய் இருப்பது எத்தனை அறியாமை!நாம் ஓட்டும் கார் எப்படி ஓடுகிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இதே விஷயம் உறவுகளுக்கும் பொருந்தும்.நம் மனைவியைப் பற்றி, கணவனைப் பற்றி , குழந்தைகளைப் பற்றி எல்லாம் தெரியும் என்று அலட்சியமாக இருக்கிறோம்..'அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்!" ஒரு நாள் அவர்கள் மாறுபட்டுப் போனால், மாலையும் கழுத்துமாய் வந்து காலிங் பெல்லை அடித்தால் பின்னர்  கலங்குகிறோம்.ப்ரூ விளம்பரம் சொல்வதைப் போல ' உங்களுக்குப் பிரியமானவர்களை உங்களுக்கு எத்தனை நல்லாத் தெரியும்?'

எனவே never take things for granted!ஒரு விஷயம் உங்களுக்கு எத்தனை நன்றாகத் தெரிந்திருந்தாலும், finger டிப்பில் இருந்தாலும்  அதைப் பற்றி பேசும் முன் அல்லது அதை exhibit செய்வதற்கு முன் ஒரு முறை ரிவைஸ் செய்து பார்த்து விடுங்கள். 'பாடச் சொன்னால் உடனே பல்லவியை ஆரம்பித்து விடாதே...ஒரு முறை முழு லிரிக்சையும் மனசுக்குள் சொல்லிக் கொண்டு எல்லாம் தெரிந்தால் மட்டுமே பாடு!' இது பாட்டி சொல்லிக் கொடுத்த அட்வைஸ்..

மனவ்யால கிஞ்சராதடே என்று நளின காந்தியில் ஜம்மென்று ஆரம்பித்து விட்டு கர்மகாண்டமதா என்று சரணம் நாக்குக்கு வரவில்லை என்றால் கர்ம காண்டம் ஆகி விடும்!குரல் அங்கே இங்கே மக்கர் பண்ணினாலும் ஆடியன்ஸ் பொறுத்துக் கொள்வார்கள்.. நடுவில் லிரிக்ஸ் மறந்து விட்டால் அது ஒரு விதமான அவமானம்!சரி...

இந்த மாதிரி நிகழ்ச்சிகளும் ஆதித்யாவில் தான் வருகின்றன.

நம்ம அடுத்த காலர் யாருன்னு பார்ப்போம்!

'ஹலோ!'

'ஹலோ, யார் பேசறது?'

'நான் ஆகாஷ்'

'என்ன பண்ணறீங்க ஆகாஷ்?'

'நானா?'

'இல்லை..உங்க வீட்டு ஆட்டுக்குட்டி..டி .வி.வால்யூம் கம்மி பண்ணுறீங்களா? '

'நான்.. சிக்ஸ்த் படிக்கறேன்'

'சரி..இன்னிக்கு என்ன கடிஜோக் சொல்லப் போறீங்க?'

'சாமிக்கும் மாமிக்கும் என்ன வித்தியாசம்?'

'தெரியலையே ஆகாஷ்...'

'சாமின்னா ஜம்முன்னு இருக்கும்; மாமின்னா கும்முன்னு இருக்கும்'

Oh God !

ரு விளம்பரம்:

இரண்டு தாத்தாக்கள் தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மேஜை மேல் நிறைய குட்டி குட்டி பொம்மைகள் உள்ளன...தம்மிடம் உள்ள பொம்மைகளை exchange செய்து கொள்கிறார்கள். 'ஒரு டாக்டர் பாண்டாவுக்கு அஞ்சு பாண்டாவா' என்று கேட்கிறார் ஒரு தாத்தா.

முதலில் இது ஏதோ இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் அல்லது ஏதோ ஒரு  ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் விளம்பரம் என்று நினைத்தேன். அது உண்மையில் ஒரு மிட்டாய் விளம்பரம்..மிட்டாயுடன் குட்டி பொம்மைகள் இலவசமாம்... பொம்மைகளை வைத்து விளையாட வயது இல்லை என்று முடிகிறது எந்த விளம்பரம்.

நாம் ஏன் ஒரு விஷயத்தை நேரடியாகப் பார்க்க முடிவதில்லை? ஏன் அது வேறு ஏதோ ஒன்றை சுட்டிக் காட்டுவதாகவே எண்ணிக் கொள்கிறோம்? காதலி, போனில் நான் பிஸியாய் இருக்கிறேன் என்றால் அவள் உண்மையிலேயே பிஸியாய் இருக்கலாம். நாம் ஏன் நம்மை அவாய்ட் செய்வதாக எண்ணிக் கொள்கிறோம்?

ஒரு ஜென் கதை.இதன் மேல் தியானம் செய்யுங்கள்.

ஒரு நாள் ஒரு ஜென் குரு ஒரு கோழி முட்டையை கையில் பிடித்துக் கொண்டு 'இதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது' என்று கேட்டார்.

ஒரு சீடன் . " நாளையில் இருந்து மதிய உணவில் முட்டை போடப் போகிறீர்களா குருவே' என்றான்.

இன்னொரு சீடன் " முட்டையின் ஓடு போல் நம் மனம் வெண்மையாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும்' என்று சொன்னான்.

மூன்றாமவன் " குருவே, இது ஜீவன் முக்தியைக் குறிக்கிறது..நம்மை சுற்றி உள்ள அறியாமை என்ற ஓடு உடைந்தால் உள்ளே இருக்கும் ஆத்மா கோழிக்குஞ்சு போல புதிதாய்ப் பிறக்கும்' என்றான்.

குரு 'இது ஒரு கோழி முட்டை' என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்..


ஷோ ஜோக்:

முல்லாவிடம் ஒரு நாள் அவர் நண்பர் 'ஒரு பெண்ணுக்கு எப்படி நீச்சல் கற்றுத் தருவது?' என்றார்.

'நான் சொல்றேன் கேளு ; முதல்ல அவளுக்கு நீச்சல் உடை அணிவி. மெல்ல அவளை பாதி அணைத்துக் கொண்டு வலது கையை அவள் இடுப்பை சுற்றிப் போடு! அப்புறம் இடது கையை மெல்ல , நிதானமாய் அவள்...'

'அந்தப் பெண் என் தங்கை'

'அப்படியா?, அப்படீன்னா , அப்படியே பின்னால் இருந்து தண்ணியில் தள்ளி விட்டுடு போதும்'

சமுத்ரா
 

7 comments:

Anonymous said...

enakku therinchu tamil nattuleye neenga than sir seriyana mandai.
vaalththukkal...........

Sakthi
Tiruppur.

HVL said...

இராமானுஜ காவியம் படித்துப் பார்க்க வேண்டும்.
//ஆளவந்தாருக்கும் , பண்டித கர்வம் நிறைந்திருக்கும் ராஜகுரு ஆக்கியாழ்வானுக்கும் நிகழ்ந்த வாதம் சுவாரஸ்வம்.//
உண்மையிலேயே சுவாரஸ்யம்.
ஓஷோவின் மாயை யோசிக்க வைத்தது.
இமான் அண்ணாச்சியின் நிகழ்ச்சி சில நேரங்களில் சொல்லி வைத்து செய்தது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் அனைத்தும் நன்றாய் இருந்தது.

Caricaturelives said...

// ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் ராமானுஜரின் 'தானான திருமேனி' அவரது mummify செய்யப்பட அசல் திருமேனி என்று சொல்கிறார்கள். இது எந்த அளவு உண்மை?//
உண்மை என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் பிறர் குழப்புகிறார்கள்.
(நான் திருச்சியில்தான் இருக்கிறேன். ஸ்ரீ ரங்கத்தில் குடியிருந்தேன்)
---

ஆக Enjoyed with Article :)
@சுகுமார்ஜி

chandru said...

It is more than kaleidoscope, like a fractal design it expands and expands...wonderful

இராய செல்லப்பா said...

ராமானுஜரையும் வைஷ்ணவத்தையும் பற்றிப் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

Aba said...

ஆளவந்தாரின் வாதமும் முடிவிலியும் சுவாரஸ்யம்.

//ஒரு பொருளை பூஜ்ஜிய நபர்களுக்கு எப்படிப் பகிர்ந்து கொடுப்பது? அப்படிப் பகிர்ந்து கொடுத்தாலும் மீண்டும் அந்தப் பொருள் அப்படியே இருக்கும் அல்லவா?//

1/0 இல் வகுத்தல் என்றால். ஒரு பொருளை பூஜ்ஜியம் பேருக்கு பகிர்ந்தால் 'ஒருவரிடம்' எத்தனை பொருள் இருக்கும் என்பது. இது பதில் சொல்ல முடியாத கேள்வி. பேசாமல் 1/0 is undefined என்றுவிட்டு போய்விடலாம். ஒரு defined value ஆக இல்லாத முடிவிலியை algebraic சமன்பாடுகளூடாக விளக்க முயற்சிப்பது முரண்பாடு போலிருக்கிறது. tends to என அம்புக்குறி போட்டு விளக்குவது மூலம் முடிவிலியின் உண்மைக் குணங்களை காட்டலாம் என்று நினைக்கிறேன்.

ஜென் கதை அற்புதம்....

நந்தாகுமாரன் said...

// உளுந்து வடையின் உள்ளே உள்ள ஓட்டை வடைக்கு சொந்தமானதா, பிரபஞ்சத்துக்கு சொந்தமானதா //

Very Interesting :)