இந்த வலையில் தேடவும்

Wednesday, February 27, 2013

கலைடாஸ்கோப்-85

லைடாஸ்கோப்-85 உங்களை வரவேற்கிறது.


இந்த வயலினை எத்தனை ரூபாய்க்கு விற்பீர்கள் ?


இதைப் பற்றி கடைசியில் பேசலாம்...

ஒருநாள் ஜன்னல் பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்போது 'johari window ' என்பதை யோசித்துப் பாருங்கள்.இந்த ஜன்னல் படத்தில் காட்டப்பட்டுள்ளது.இது நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது .



ஜன்னலின் முதல் பாகம் -(உள்ளங்கை நெல்லிக்காய்..)

தனக்கும் மற்றவர்களுக்கும் தெளிவாகத் தெரிவது...'அரங்கம்' என்று அழைக்கலாம். உதாரணமாக உங்களுக்கு திக்குவாய் இருந்தால் அது இருப்பது உங்களுக்கும் தெரியும் அடுத்தவருக்கும் தெரியும். உங்கள் உடலில் உள்ள ஒரு குறைபாடு, சில விநோதப் பழக்கங்கள் , போன்றவை இதில் வரும்  ..

இரண்டாம் பாகம்: (தலை முடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு குப்பை)

உங்களுக்குத் தெரியாமல் மற்றவருக்குத் தெரிவது.. இது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்...அனுமாருக்கு தன் உடலின் பலம் தனக்கே தெரியாதது மாதிரி..அதே போல சில பேருக்கு நாம் எவ்வளவு பெருந்தன்மையாக அல்லது கீழ்த்தரமாக நடந்து கொள்கிறோம் என்பதே தெரியாது...ஆனால் மற்றவர்கள் அதை எளிதில்  உணர்வார்கள்..உடலின் குறைபாடுகளில் சில , நம் பேச்சு போன்றவை கூட இதில் வரும்..சிறுவன் ஒருவனுக்கு தான் நார்மலாக பேசுவதாக , நடப்பதாக தோன்றுவது மற்றவர்களுக்கு என்ன அவன் பொம்பளைப் பிள்ளை மாதிரி நடக்கறான், பேசறான் என்று நினைக்க வைக்கும்..தான் சரியான உச்சரிப்புடன்தான் பேசுகிறேனா என்பது சிலருக்குத் தெரியாது..மலையாளிகளுக்கு தாங்கள் 'கோலேஜ் ' என்று சொல்வது தெரியுமா? ஒரிசாக் காரர்கள் ஒருமாதிரி பேசுவார்கள்...உதாரணமாக, 'I met her , she told me to test' என்பதை 'I mate her. she told me to taste' என்று ஏடாகூடமாக சொல்வார்கள்.. 'உங்களுக்கு அடிக்கடி கோபம் வருகிறதே' ' ஏன்  உன் கன்னத்தில் இருக்கும் மருவை தடவிக் கொண்டே இருக்கிறாய்' 'ஏன் காலை ஆட்டிக் கொண்டே இருக்கிறாய்'என்று கேட்டால் நாம் ஆச்சரியமாக 'அப்படியா?' என்போம்..

மூன்றாம் பாகம்: (நாம் போட்டிருக்கும் பனியன் பயங்கர ஓட்டை !)


நமக்குத் தெரிந்தது ;மற்றவர்களுக்குத் தெரியாதது...நிலாவைப் போல நம் எல்லாருக்கும் ஒரு இருண்ட பாகம் இருக்கிறது . அதை நாம் மட்டுமே பார்க்க முடியும்; உணர முடியும்..ஏதோ ஒன்றை நாம் யாரிடமும் சொல்லாமல் கடைசி வரை மறைத்தே வைக்கிறோம்.நமக்கு மிக நெருக்கமானவர்களிடம் கூட பகிர்ந்து கொள்வதில்லை..'நான் ரொம்பவே ஓப்பன் டைப்' 'என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்' என்று சொல்பவர்களிடம் கூட ஏதோ ஒரு ரகசியம் ஒளிந்திருக்கும்..'நம் எல்லோருக்குள்ளும் ஒரு சைக்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான் (ள் ) என்று ஒரு தியரி சொல்கிறது...சுஜாதாவின் 'முரண்' கதை படித்திருக்கிறீர்களா?


 நான்காவது பாகம்: (விதி!)

நமக்கும் தெரியாதது, மற்றவர்களுக்கும் தெரியாதது..சில சமயம் நாம் ஏன் இப்படி நடந்து கொண்டோம், ஏன் இப்படி நடந்து கொள்கிறோம், எதனால் நாம் உந்தப்படுகிறோம் எது நம்மை இழுக்கிறது , என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரியாது (மற்றவர்களுக்கும்) இந்த நான்காவது quadrant -இல் தான் விதி, கர்மா, ஜன்ம பந்தம், ஆத்மா போன்றவை வருகின்றன  போலிருக்கிறது. 


சரி...இன்னொருவர் நம்மை எப்படிப் பார்க்கிறாரோ அப்படி நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நமக்குள் இருக்கிறதாம்.. போட்டோவிலோ வீடியோவிலோ இல்லாமல் நேரிலேயே!

ஒரு ஹைக்கூ :-

கூட்டமான 
வியர்வை கசியும் பேருந்து ஒன்றில் 
ஸ்பீக்கர் பாடலை 
திரும்ப பாடும் 
ஒரு ஆள்..

 When it's early , it's never too early ; When it's late, it's always too late - Murphy

 பெங்களூருவில் bus day என்று ஒருநாளை கொண்டாடுகிறார்கள்..ஒரு நாள் மட்டும் எல்லாரும் தங்கள் கார்களையும் ஸ்கூட்டர்களையும்,பின்னால் அமர்ந்து வரும் கேர்ள் பிரண்டையும்  மறந்து விட்டு bmtc பஸ்களில்  வாருங்கள்,,ட்ராபிக் -கை குறையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.. சில பேர்களுக்கு பஸ்ஸில் பயணித்தே பலநாட்கள் ஆகிவிட்டதால் பஸ் பயணம் அவர்களின் அலர்ஜி லிஸ்டில் சேர்ந்து விட்டது. அய்யே பஸ்ஸா ? (கோவை சரளா வாய்சில் படிக்கவும்)..எனவே, பஸ் டேயாவது, கிஸ் டேயாவது , நாங்கள் வழக்கம் போல் ஏ .சி. போட்டுக் கொண்டு, தேவை இல்லாமல் ஹாரன் செய்து கொண்டு, சிக்னலில் கை ஏந்துபவர்களை குப்பை போல் பார்த்துக் கொண்டு காரில் தான் வருவோம் என்று சிலர் வருகிறார்கள்...சரி..


பஸ்களில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள்!

 * எந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று தெரியாமல் போனால் ஒரு தலைவலி..'இங்கிருந்து மூணாவது ஸ்டாப் சார்' என்று சொன்னால் , பஸ் நடுவில் எங்காவது ஜாம் ஆகி நின்று விட்டால் குழப்பம் தான்.. மேலும் ,  'ஸ்டாப் இது தான்னு நினைக்கிறன் , எதுக்கும் கண்டக்டரை ஒரு வாட்டி கேட்டுக்கங்க' என்று சிலபேர் சொல்வார்கள்.

* நகர்ந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் சாகசம் செய்து ,அரக்கப் பறக்க ஏறி உட்கார்ந்து கொண்டால் , ஒரு பத்தடி நகர்ந்து போய் பஸ் அரைமணி நேரம் நிற்கும்..

* கூட்டம் வழியும் எந்த ஒரு பஸ்சிலும் பயமுறுத்தும் ஆயுதங்களுடன் யாரோ ஒரு தொழிலாளி ஏறி, அவருடைய கடப்பாரை போன்ற ஆயுதங்களை நம் காலடியிலேயே வைத்து கதிகலங்க வைப்பார்..

* டிக்கெட்டின் பின்பக்கம் ஒருரூபாய் இரண்டு ரூபாய் என்று எழுதி இருந்தால் அதை மறந்து விட வேண்டியது தான்...நான் ஐந்து ரூபாய்க்கு கம்மியாக எழுதி இருந்தால் திரும்பிக் கேட்கவே மாட்டேன்...பணம் நிறைய இருக்கிறதா என்று கேட்க வேண்டாம்...ஒருவித கூச்சம் தான்.

* சிக்னல் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று இறங்கித் தொலைத்தால் அடுத்த நிமிடம் சிக்னல் கிளியர் ஆகி பேருந்து நகர ஆரம்பிக்கும்.

* இடம் இருந்தாலும் முன் சீட்டில் மட்டும் உட்கார்ந்து விடாதீர்கள்.. கண்டிப்பாக ஒரு பெண் வந்து 'இது லேடீஸ் சீட்' என்று சைகை செய்வார்.. அது எத்தனை பெரிய முன்னேறிய நகரமாக இருந்தாலும்! 

* தலைகால் புரியாமல் முதன்முதலில் ஒரு புதிய ரூட் பஸ்ஸில் ஏறிக் கொண்டு எங்கே இறங்க வேண்டுமோ என்று தவித்துக் கொண்டிருந்தால் மிகச் சரியாக உங்களிடம் ஒருவர் வந்து 'சார், இந்த இண்டெல் ஆபீஸ்  ஸ்டாப் எங்கே' என்று கேட்டு வைப்பார்..

*பஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த பாட்டு வந்து பாலைவனச் சோலை போல உணர்ந்தால் அடுத்த நிமிடம் டிரைவர் ஸ்டேஷனை மாற்றி விடுவார் 

* சிலருக்கு பஸ்ஸில் ஏறியதும் தான் செல்போன் என்ற வஸ்து இருப்பதே ஞாபகம் வரும் போல..அரிசி விலையில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தல் வரை பேசுவார்கள்..  
 * பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விட்டோம்..டிக்கெட் வாங்கவில்லை...பஸ் எடுக்க கொஞ்ச நேரம் ஆகும்போல் தெரிகிறது.இப்போது இன்னொரு பஸ் புறப்படத் தயாராக அருகில் வந்து நிற்கிறது... இப்போது இதிலேயே இருக்கலாமா இல்லை கொஞ்சம் சர்க்கஸ் வேலை செய்து அதில் போகலாமா என்பது ஒரு பெரிய போராட்டம்...இதிலேயே இருக்கலாம் எதற்கு ரிஸ்க் எடுக்கணும்,ஆபீசில் நமக்காக ஒபாமாவா வெயிட் பண்றார்? என்று நினைத்தால் நமக்கு வயசாகி விட்டது என்று அர்த்தம்...



If it looks like a duck, swims like a duck, and quacks like a duck, then it probably is a duck.


  Inductive reasoning என்று ஒரு சமாசாரம் இருக்கிறது.கீழிருந்து மேலே (bottom up )வாலைப் பிடித்துக் கொண்டு தலையை அனுமானம் செய்யும் ஒரு முயற்சி...கண்ணை மூடிக் கொண்டு ஒரு மாட்டு வாலை பிடித்துப் பார்க்கிறீர்கள்.. பிறகு அது ஒரு மாடு என்று அதன் முகத்தைக் காட்டுகிறார்கள்... பிறகு, இன்னொரு சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டு மாட்டு வாலைத் தொட்டுப் பார்த்து 'இது மாடு தான் ' என்று சத்தியம் செய்கிறது இந்த அணுகுமுறை.. ஒரு குழந்தை தனக்கு சுற்றிலும் நடக்கும் விஷயங்களைக் கற்றுக் கொள்வது இந்த முறையில் தான் என்கிறார்கள்...

சில தத்துவ அறிஞர்கள் , as usual , இதை எதிர்க்கிறார்கள்...அது எப்படி? ஏற்கனவே நமக்கு உள்ள , கொள்கை ரீதியான, அறிவை வைத்துக் கொண்டு ஒரு விஷயத்தை முடிவெடுக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார்கள்? ஒரு பறவை வாத்து போல நடக்கிறது, வாத்து போல கத்துகிறது, வாத்து போல நீந்துகிறது என்றால் அது 100% வாத்து தான் என்று எப்படிச் சொல்ல முடியும்...அது பேட்டரியில் இயங்கும் வாத்து பொம்மையாகக் கூட இருக்கலாம்!



 
 தொடர்ச்சியாக, காக்கை புதிர் (Raven  paradox )ஒன்றை சொல்கிறார்கள். அது இப்படிப் போகிறது..

1. எல்லாக் காக்கைகளும் கறுப்பு 

2. கறுப்பாக இல்லாமல் இருக்கும் பொருட்கள் காக்கை அல்ல.

3. இந்த ஆப்பிள் சிவப்பாக இருக்கிறது. எனவே இது காக்கை அல்ல..

இங்கே, வாக்கியம்  (3)  வாக்கியம் (1) ஐ மறைமுகமாக நிரூபிக்கிறது... அதாவது இந்த ஆப்பிள் சிவப்பாக இருப்பதே எல்லாக் காக்கையும் கறுப்பு தான் என்ற கூற்றுக்கு வலு சேர்த்து  அபத்தமாக நிரூபித்து விடுகிறது.( ஆப்பிளுக்கும் காக்கைக்கும் சம்பந்தம் இல்லை என்ற போதிலும்) 

A = B , B =C என்றால் A =C யா? தர்க்கம்(லாஜிக்) அப்படித் தான் சொல்கிறது...அது எப்போதும் சரியல்ல...
ஒரு உதாரணம் 2=√ 4 மேலும் √ 4= -2 எனவே 2= -2 அதாவது 4=0 என்று நிரூபிப்பது...


சரி, காக்கையைப் பார்த்து 

   

இப்படியெல்லாம் கணக்கு போடுவது சிறந்ததா? அல்லது 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா ' என்று அத்வைதத்தில் உருகும் பக்தி நிலை சிறந்ததா?




 தர்க்கம் என்பது ஒரு விபச்சாரியைப் போன்றது என்கிறார் ஓஷோ. இரண்டு பக்கமும் சாயும்..உதாரணமாக, ஒருத்தர் சின்ன வயதிலேயே செத்துப் போவது நல்லதா இல்லையா என்பதை இரண்டு பக்கமும் பேசலாம்...

1. நல்லது.. ஏனென்றால் அவருடன் நாம் கொஞ்ச காலமே இருக்கிறோம்..அவர் நிறைய காலம் இருந்தால் அவருடன் நாம் இனிமையான கணங்கள் நிறைய களித்திருப்போம்.எனவே வயதாக ஆக ஒருவரை பிரிவது மிகுந்த கஷ்டம்..மேலும் ஒருவர் வயதாக ஆக அவரது matured face ஐப் பார்க்கிறோம்..அவரது வழிநடத்துதல்கள் நமக்கு மிக உதவியாக இருக்கின்றன..அவர் வெறுமனே படுக்கையில் படுத்திருந்தாலும் வீட்டில் பெரிய தலை ஒன்று இருப்பது  நமக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கிறது. அவரது இறப்புக்குப் பின் அவைகளை நாம் இழக்கிறோம்.


2. நல்லதல்ல...ஒருவர் வயதாகி சாகும் போது ஏதோ ஒன்று பூர்த்தியாகி விடுகிறது. சின்ன வயதில் ஒருவர் சாகும்போது அவரை மட்டும் நாம் இழப்பதில்லை...அவர் என்ன என்னவாக ஆகி இருக்க முடியுமோ அந்த சாத்தியத்தையும் இழக்கிறோம் ..எனவே சின்ன வயதில் ஒருவர் சாவது மிகக் கொடுமையானது ...

Question :How many mathematicians does it take to change a light bulb?
Answer :  0.99999999999999999999999999...........


Inductive reasoning கணிதத்தில் proof by induction என்று அழைக்கப் படுகிறது...பழமொழியில் சொல்வதானால் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...+1 அல்லது +2 வில் இதைப் படித்திருப்போம்...அதாவது ஒரு சார்பு p (k ) , k =0 மற்றும் k =1ஆகிய மதிப்புகளுக்கு உண்மை என்று முதலில் நிரூபிக்க வேண்டும்...எனவே k என்ற மதிப்புக்கு p (k ) உண்மை என்றால் (k =1), p (k +1)  உம் உண்மை என்று நிரூபித்தால் போதும்... பின்னர் k யின் அத்தனை மதிப்புகளுக்கும் p (k ) உண்மை என்று ஆகி விடும்.[ஏனென்றால் k+2 = (k+1) +1 , k+3 = (k+2) +1 etc.,] உதாரணமாக, எல்லாருக்கும் தெரிந்த p (a )=(a+1)2 = a2+2a+1 என்பதை எடுத்துக் கொள்வோம்...இதை உண்மை என்று நிரூபிக்க (0+1)2 = 0^2+2.0+1 1=1 எனவே p (0) உண்மை ...
p(1)=(1+1)2= 1^2+2.1+1^2  2^2=1+2+1 4=4 p(1)உம் உண்மை... மேலும் இது p(k+1)க்கு உண்மை என்று நிரூபித்தால் போதும் ...
பார்க்க படம் 




இதற்கு எதிர்மாறாக இன்னொன்று proof by contradiction என்று அழைக்கப்படுகிறது...reductio ad absurdum...
அதாவது ஒரு கூற்று தவறு என்று  அதை ஏற்றுக் கொள்வதால் கிடைக்கும் பொருளற்ற நம்ப இயலாத  விளைவை  (result ) வைத்து நிரூபிப்பது.. அல்லது ஒரு கூற்று சரி என்று அதை மறுப்பதால் வரும்  பொருளற்ற நம்ப இயலாத  விளைவை  (result ) வைத்து நிரூபிப்பது.உதாரணமாக , 'அங்கே இருக்கும் அந்த மனிதன் நார்மல் தான்' என்று நிரூபி என்று சொன்னால், 'அவன் நார்மல் தான் என்னைப் பார்த்து புன்னகைத்து ஹலோ சொன்னான்' என்று சொல்வது proof by induction...'அவன் நார்மல் தான்.. இல்லை  என்றால் அவன் தனக்குத் தானே மேலே பார்த்து சிரித்துக் கொண்டிருப்பான்' என்று சொல்வது proof  by contradiction ..கணிதத்தில் இதற்கு மிக அழகான ஒரு உபயோகம் இருக்கிறது.....
 
√ 2 என்பது ஒரு irrational number என்பது நமக்குத் தெரியும்..அதாவது அதன் மதிப்பு முடிவின்றி, மீண்டு வராமல்  தொடர்ந்து கொண்டே இருக்கும்...(1.4142135623746....)அதாவது அதை இரண்டு முழு எண்களின் பின்னமாக (a /b )நம்மால் எழுத முடியாது...இதை நிரூபிப்பதற்கு முதலில் நாம்
√ 2 என்பது ஒரு rational number என்று கருதுவோம்...(தவறாக) எனவே      √ 2= a/b ...இங்கே a மற்றும் b என்பவை முழு எண்கள் மேலும் a/b என்பதை மேலும் சுருக்க முடியாது...எனவே இங்கே a அல்லது b இரண்டில் ஒன்று கண்டிப்பாக ஒற்றை எண்ணாக இருக்க வேண்டும்..(0)அதாவது, 8/6 என்பதை மேலும் சுருக்க முடியும்...8/3 என்பதை சுருக்க முடியாது...


√ 2= p / q (1)

இரண்டு புறமும் வர்க்கப்படுத்தினால்,

2 = p2/q2 or  p 2 = 2. q  2   (2)

p2 = 2  q^2 என்று வருகிறது...p2 என்பது q2 இன் இரண்டு மடங்காக இருப்பதால் p2 ஒரு இரட்டை எண்ணாக இருக்க வேண்டும்...p2 இரட்டை என்பதால் p யும் கண்டிப்பாக இரட்டை எண்ணாக இருக்க வேண்டும்.. எனவே நாம் p என்பதை p =2s என்று எழுத முடியும்...(இங்கே s என்பது இன்னொரு இரட்டை முழு எண் )

(2) =

 p 2 = 2. q 2 


(2s )2 = 2(q2)

q2 = 2s2  எனவே , இங்கே, 2 வருவதால் q2 ஒரு இரட்டை எண் ..எனவே q ஒரு இரட்டை எண் ...ஆனால் இது நம்முடைய கூற்று (0) உடன் முற்றிலும் முரண்படுகிறது...p மற்றும் q இரண்டில் ஒன்று கண்டிப்பாக ஒற்றை எண் என்று (0) சொல்கிறது...ஆனால் (2) இரண்டுமே இரட்டை எண் என்று சொல்கிறது...இந்த முரண்பாடான விளைவு வருவதால் நம்முடைய ஊகம் √ 2=a/b என்பது அதாவது √ 2 ஒரு rational நம்பர் என்பது தவறு என்று ஆகிறது...எனவே √ 2 must be irrational ...







உங்கள் தாத்தா வாசித்த இந்த வயலினை எத்தனை ரூபாய்க்கு விற்பீர்கள் ?


இப்போது உடனே உங்கள் பழைய பதிலை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் தானே? மனிதர்கள் தாங்கள் உபயோகிக்கும் பொருள்களுக்கு ஏன் இப்படி தங்கள் emotion , உணர்வுகளை attach செய்ய வேண்டும்?என்று ஒரு கேள்வி உலவுகிறது . ஒரு பொருளின் விலை என்பது பொதுவாக அதன் மூலப் பொருட்களின் விலை + செய்கூலி அல்லவா? ஆனால் அதில் தேவை இல்லாமல் உணர்சிகளை இணைப்பதால் அதன் விலை கண்டபடி உயர்கிறது...ஏன், அது விலை மதிப்பற்றதாகக் கூட ஆகிறது...காந்தியின் கண்ணாடி, ஹிட்லரின் கடிகாரம், அக்பரின் செருப்பு  என்று சில பொருட்கள் கொள்ளை விலைக்கு ஏலம் விடப்படுவதைப் பார்த்திருப்போம்...ஏன் இந்த emotional attachment ? செருப்பு வெறும் செருப்பு தான்! ஒரு சட்டைக்கு, ஒரு வாட்சுக்கு , ஒரு செருப்புக்கு, நாம் யாரிடம் இருக்கிறோம் என்பது தெரியுமா? ஒரு வீட்டுக்கு அதன் ஓனரைப் பற்றி ஏதாவது தகவல் தெரியுமா? நீங்கள் அதை விற்று விட்டு வெளியூருக்கு குடி பெயர்ந்தால் அது கண்ணீர் விடுமா?பொருட்களை விடுங்கள்...உங்கள் உடலுக்கே உங்களைப் பற்றி ஏதாவது idea இருக்குமா? உங்கள் உடலில் உள்ள செல்களுக்கு எஜமானன் இவன்தான் என்று என்றைக்காவது செய்தி சொல்லப் பட்டிருக்கிறதா? இல்லையே! ஒரு பேனாவை எப்படி நாம் உரிமை கொண்டாட முடியாதோ அதே போலதான் உடலையும்..

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி இங்கே 
ஒருத்தரையும் பொல்லாங்கு சொல்லாதே - பருத்த தொந்தி 
நம்மதென்று நாமிருக்க நாய் நரி பேய் கழுகு 
தம்மதென்று தாமிருக்கும் தான்

என்று சித்தர் பாடல் பாடினால் என்னை அடிக்க வருவீர்கள்...

.it 's always one-way !!! ரம்பா தன் தொடையழகை எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளலாம்...ஆனால் அந்தத் தொடைக்கு, தொடை எலும்புக்கு  ரம்பா என்று ஒரு ஜந்து இருப்பதே தெரியாது...உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் ஸ்கூல் , உங்கள் காலேஜ் , உங்கள் 18b பஸ் , உங்கள் டியூசன் சென்டர் , உங்கள் மயிலிறகு, போன்றவை emotionally முக்கியமாக இருக்கலாம்...ஆனால் அவைகளுக்கு நீங்கள் இருந்தது, இருப்பது ஒன்றும் தெரியாது...பூமிக்கு , சூரியனுக்கு நாம் இருப்பதே தெரியுமா?  'பொருட்களை உபயோகியுங்கள் , மனிதர்களை உரிமை கொண்டாடுங்கள்'...நாமோ பொருட்களை உரிமை கொண்டாடுகிறோம்; மனிதர்களை உபயோகிக்கிறோம்..


ஓஷோ ஜோக்...

   
இரண்டு ஆண்கள் தங்கள் மனைவிகளை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தொலைத்து விட்டனர்...

ஒருவன், இன்னொருவனைப் பார்த்து , "சார், என் மனைவியைப் பார்த்தீர்களா? காணாமல் போய் விட்டாள் , அவளைத் தேடுகிறேன்" என்றான்....

இன்னொருவன் "அப்படியா, என்ன ஆச்சரியம்,,, என் மனைவியும் இங்கே காணாமல் போய் விட்டாள், நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.. " என்றான்...

முதலாமவன் " உங்கள் மனைவி எப்படி இருப்பார்கள்?" என்றான்...

இவன் " அவள் உயரமாக செக்ஸ்சியாக இருப்பாள்...நல்ல நிறம், ஜூசி லிப்ஸ், நீண்ட முடி, பெரிய மார்பு, டைட்டான பின்புறம்; சரி உங்கள் மனைவி எப்படி இருப்பார்கள்? "என்றான்..

முதல் ஆள், 'அதை ஏன் சார் இப்ப கேட்டுக்கிட்டு , முதலில் டைம் வேஸ்ட் பண்ணாமல் உங்கள் மனைவியைத் தேடலாம்" என்றான்...

சமுத்ரா ...

5 comments:

G.M Balasubramaniam said...


The range of your thoughts surprises me.I could enjoy all except those mathematical examples because I find it difficult to appreciate them.

Nara said...

அவியல், மசாலா, புரோட்டான்னு எத்தனையோ பேர் எழுதுறாங்க. அதெல்லாம் ஒரு வகை ஆனா உங்க கலைடாஸ்கோப் அவற்றிலிருந்து ரொம்ப வித்தியாசப்படிருக்கிறது. நீங்கள் தொடும் விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமானவை.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தருமி, டோண்டு தளங்களில் மட்டுமே அவர்களின் பழைய பதிவுகளை படிப்பது வழக்கம் இப்போது உங்கள் பழைய பதிவுகளையும் மெல்லப்படித்து வருகிறேன்.

வெறுப்பேத்தாத நடையில் எளிதாய் புரிகிறமாதிரி அறிவியல்.

Caricaturelives said...

Enjoyable :D

Uma said...

Hello SamudraSukhi,

Got to your blog through vikatan long time back, have been reading for a while. Man, you are an awesome writer, giving interesting info for the readers. Sometimes I wonder how much different aspects you are touching upon, your parents should be really proud of you. Way to go.




Anonymous said...

kanakku vaathiyare ..........
why this kanakku veri