இந்த வலையில் தேடவும்

Wednesday, February 24, 2016

கலியன்- 2

[ இது காலப்பயணம் பற்றிய கதை என்று நிறைய பேர் Guess செய்து இருந்தீர்கள். ரைட். guess செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம் :) கிளிஷே என்று தோன்றினால் படிக்காதீர்கள்.]



ந்த வினோத மனிதர் எதுவும் புரியாமல் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்....

ஸ்டீபன் எங்களைத் தனியாக அழைத்தான்.

"வெல் , ஹி லுக்ஸ் ஃபிஷ்ஷி. முடிந்த வரைக்கும் தங்கத்தை எடுத்துக்கிட்டு போலீஸ்ல சொல்லிடலாம். தெரியவா போகுது? லேட்டர் ,சம் ஒன் மைட் டர்ன் அப் லுக்கிங் ஃபார் ஹிம்!"

"கொஞ்சம் பொறு ஸ்டீபன் " என்றேன் நான். பிரபாவிடம் திரும்பி "அவரிடம் கொஞ்சம் தகவல் கறக்க முடியுமா பார்" என்றேன்.

அவர் சொன்ன தமிழில் சொன்னால் உங்களுக்குப் புரியாது. எனவே என் நடையில் சொல்கிறேன்.

"இவர் பெயர் கலியன். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்தவர். காயகல்ப மூலிகை எல்லாம் இல்லை. அந்தக் காலத்தை சேர்ந்த அமெச்சூர் விஞ்ஞானி ஒருவர் இவரை கால மெஷினில் ஏற்றி இங்கே சாரி, இப்போது அனுப்பி வைத்திருக்கிறார். எதிர்காலத்துக்கு ஒரு ஜாலி டூர்!

இதைக் கேள்விப்பட்டதும் ரகு துள்ளிக் குதித்து ஓடி வந்து விட்டான்.

"இதெல்லாம் சாத்தியம் தானா ரகு?" என்றேன்.

"கண்டிப்பா. இறந்த காலத்துக்குப் போவது சாத்தியம் இல்லை. குறைந்த பட்சம் கஷ்டம். எதிர் காலத்துக்கு போவது சாத்தியம் தான். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பு அந்த டெக்னாலஜி இருந்திருக்கிறது ன்னு நினைக்கவே முடியலை!அமேஸிங் !"

சந்துரு குறுக்கிட்டான்.

"இதெல்லாம் சுத்த புல்ஷிட். ஆள் ஏதோ ஒரு சைக்காலாஜிகல் வியாதியால பாதிக்கப் பட்டிருக்கிறார். அவ்ளோ தான்!"

மொத்தத்தில் மிஸ்டர். கலியன் எங்கள் எல்லாருடைய ஆராய்ச்சி விருப்பத்தையும் பூர்த்தி செய்தார் . எனக்கு வரலாறு, ரகுவுக்கு பிசிக்ஸ், சந்துருவுக்கு சைக்காலஜி, ஸ்டீபனுக்கு பணம், பிரபாவுக்கு தமிழ், அவரின் கலப்படமில்லாத தங்கத் தமிழ்!"

"ரகு, இதைப் பற்றி கொஞ்சம் விரிவா சொல்லேன்!" என்றேன்.

ரகு என்ன சொல்லப்போகிறான் என்று கேட்கத் தயார் ஆனோம்.

"நம்ம பொதுவா காலம், இறந்த காலத்தில் இருந்து எதிர் காலம் நோக்கி மெல்ல மெல்ல நகருவதாக நினைக்கறோம்.ஆனால் அது உண்மை அல்ல. காலம் நகருவதே இல்லை. இயற்பியல் காலம் மற்றும் வெளியை இணைத்து ஸ்பேஸ் -டைம் என்கிறது. இது எல்லா இடத்துலயும் பிரபஞ்சம் பூராவும் தொடர்ச்சியா ஒரு வலை மாதிரி பரவிக் கிடக்கு. இறந்த காலத்தில் இருந்து எதிர் காலத்துக்குப் போவது இங்கே ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு நகர்வது மாதிரி. இந்த ஸ்பேஸ்டைம் கண்டின்யூயம் -இதுல இறந்த காலத்துல நடந்தது எல்லாம் அப்படியே ஸ்பேஷி யல் பாயண்ட்ஸ் -ஆ அப்படியே இருக்கு. ஒரு விதத்துல நம்முடைய இறந்த காலம், எதிர்காலம் எல்லாம் ஏதோ ஒரு ஒருங்கிணைந்த ஸ்பேஸ்டைம்ல இப்ப நடந்துட்டு இருக்கு. உதாரணமா, இயேசு பிறந்தது, இந்தியாவுக்கு கஜினி படையெடுத்து வந்தது, பாபர் ஆண்டது, தாஜ்மஹால் கட்டப்பட்டது, காந்தி தண்டி யாத்திரை போனது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது  இதெல்லாம் இன்னும் ஒரு நுட்பமான தளத்துல இன்னும் நடந்துட்டு இருக்கு!"

"இண்டரெஸ்டிங் " என்றான் ஸ்டீபன்.

ரகு மேலும் தொடர்ந்தான்.

"டிரெயின்ல போயிட்டு இருக்கோம். அப்ப ஒரு மரமோ மலையோ நம்மை விட்டு நகர்ந்து போவது மாதிரி தோணுது.

உண்மையில் அது அங்கே தான் இருக்கு. நகர்வது இல்லை. வேறொரு வியூ பாயிண்டில் அந்த மரம் நிலையா இருக்கு. அது மாதிரி நம்முடைய பிரேம் ஆப் ரிபெரன்ஸ் ல காலம் நகர்வது மாதிரி இருக்கு. இன்னொருத்தருக்கு காலம் என்பது நிலையான இன்னொரு பரிமாணம் தட்ஸ் ஆல்."

"இதெல்லாம் தத்துவம் மாதிரி இருக்கு. உண்மையில் இதை எப்படி டெக்னாலஜி வாயிலா அச்சீவ் பண்ண முடியும்?" என்றேன்.

"வெல் .இதற்கு நாம நம்முடைய இந்த யூஷுவல் வியூ பாயண்ட் ல இருந்து வெளியேறனும் . இதை அவங்க எப்படி அச்சீவ் பண்ணாங்களோ தெரியலை. இவர் கிட்ட கொஞ்சம் பேசி இவருக்கு டெக்னிகலா எதாச்சும் தெரியுதா-ன்னு பாக்கணும்"

பிரபா அவரிடம் திரும்பி "அய்யா, எப்படி இந்தக் காலத்துக்கு வந்தீர்?" என்றான்.

"என்னால் பூடகமாகவே சொல்ல இயலும்!"

" நேரடியா சொன்னாலும் விளங்கிறவா போகுது!" என்றான் சந்துரு.

"மூன்றிலாது நான்கில் ஐந்தில் ஆறில் 
 முடிச்செனக் காலம் தனக்குள் சுருண்டதே
தோன்றுமோ உனக்கது திறவுகோல் இன்றியே
திணித்ததை கிழித்தெறி திறந்திடலாமே!"

"சுத்தம் "என்றான் ஸ்டீபன்.

"இது என்ன ஏதோ சித்தர் பாட்டு மாதிரி இருக்கு!" என்றான் ரகு.

"என்னை அனுப்பியவர் எழுதியது!"

பிரபா அதன் லிடெரல் மீனிங்கை சொன்னதும் ரகு கண்கள் விரித்தான்.

"வாவ், 5,6,7 இதெல்லாம் ஸ்ட்ரிங் தியரியின் எக்ஸ்ட்ரா ஸ்பேஷியல் டைமென்ஷன்ஸ் . திணித்தது ன்னா ப்ளாக்-ஹோல் மோஸ்ட்லி இவர் குவாண்டம் teleportation மூலம் இப்ப வந்திருக்கணும் "

"எப்படியோ இங்கே வந்திட்டார்,  விடுங்களேன்!" என்றான் ஸ்டீபன்.

"நான் இவரை ஹிப்னடைஸ் பண்ணி விஷயத்தை கறக்க முடியுமா பார்க்கறேன். டைம் டிராவல் எல்லாம் புல் ஷிட் " என்றான் சந்துரு.

எங்களுக்குள் மெதுவாக ஒரு conflict உருவாக ஆரம்பித்திருந்தது.

ரகு அவரை ஒரு இயற்பியல் விஞ்ஞானியிடம் ஒப்படைத்து விடலாம் என்றான்.

சந்துரு தடுத்தான்.

"ரகு, ஆள் பார்க்கவே அப்பிராணியா இருக்கார். இவரை உலகம் மியூசியத்தில் வைத்து காட்சிப் பொருளாக்க உனக்கு விருப்பமா?"

கடைசியாக நாங்கள் அவரை ஒருமனதாக எங்களுடன் வைத்துக் கொள்ளத் தீர்மானித்தோம். அவர் சமையல் நன்றாக செய்வார் என்று அறிந்தோம். கொஞ்ச காலம் சங்ககால சமையலை சாப்பிட்டு உடம்பைத் தேற்றலாமே. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு ஆர்கானிக் ஸ்டோர் இருந்தது!

சில மாதங்கள் கடந்து விட்டிருந்தன.

கலியன் எங்களுடன் நன்றாகவே கலந்து விட்டிருந்தார். வேட்டி சட்டை அணியக் கற்றுக் கொண்டார். டி .வி. பிரிட்ஜ் போன்றவைகளை இயக்கக் கற்றுக் கொண்டார்.தற்கால தமிழை சீக்கிரம் கற்றுக் கொண்டு விட்டார். எங்களுக்குத் தான் அவர் தமிழ் வரவில்லை. ருசியாக சமைத்தார். சுறுசுறுப்பாக இருந்தார். வீட்டை சுத்தமாக வைத்திருந்தார். 


லேப்டாப்-பை இயக்கக் கூடக் கற்றுக் கொண்டார். திருக்குறள் முழுவதும் அதில் வருவதைக் கண்டு வியந்தார்.

"அய்யன் வள்ளுவர் பனை ஓலைகளை வைத்துக் கொண்டு இடர்ப்பட்டார்!" என்றார்."இது கண்டால் எத்துனை மகிழ்வார்?"
 
சுருக்கமாக சொன்னால் கலியன் சம்பளம் வாங்காத தங்கம் கொட்டிக் கொடுத்த வேலைக்காரர்!"

"எங்கிருந்தோ வந்தான்; என் பெயர் கலியன் என்றான்!

இங்கிவனை யான் பெறவே ...."

ஸ்டீபனின் சாமார்த்தியத்தால் தங்கம் சந்தேகம் வராதபடி கொஞ்சம் கொஞ்சமாகப் பணமாக மாறி வந்தது. சங்க காலத்து சொக்கத் தங்கம் என்றால் சும்மாவா!

எங்கள் லைப் ஸ்டைல் உயர்ந்தது. கார் வாங்கி விட்டோம். நிறையக் குடித்தோம். கேர்ள் பிரண்டுகள் கிடைத்தார்கள். நிறைய ஊர் சுற்றினோம். வாழ்க கலியன்..

ஒருநாள் 5 பேரும் வீக்-எண்டுக்கு கர்நாடகா சிக் மகளூரு அருகே ட்ரெக் செய்யலாம் என்று தீர்மானித்தோம்.

கலியனையும் எங்களுடன் அழைத்துச் சென்றோம், காரில்...சமைக்க ஆள் வேண்டுமே..ஸ்டீபனும் சந்துருவும் அவர்கள் கேர்ள் பிரண்டுகளை கூட அழைத்து வந்தார்கள்.

காரில் உற்சாகமாகப் பயணித்தோம்.  கலியன்,அந்த குதிரை இல்லாத அதிவேக வண்டியை அவர் மிகவும் ரசித்தார். மனிதர்களை, நகரங்களை விநோதமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.

காரை கீழே ஒரு ஹோட்டலில் விட்டு விட்டு ,சனிக்கிழமை அதிகாலையில் காலை முள்ளானகிரி மலை ஏறத் தொடங்கினோம். மாலையில் மேலே இருந்தோம். அங்கே இருந்த சிற்றோடையில் உற்சாகமாகக் குளியல் போட்டோம்.

"பரவாயில்லையே..இன்னும் இந்த மாதிரி இடங்களை விட்டு வைத்திருக்கிறீர்கள்!" என்றார் கலியன்.

இரவு கலியனின் அருமையான வரகரிசி சாதம், கீரைக் கூட்டு  கிழங்குக் கறி , மிளகு ரசம், பானகம்,..

தீமூட்டி குளிர் காய்ந்தோம். போலீஸ் கண்ணில் படாமல் கொண்டு வந்த உ .பா அருந்தினோம். டேன்ஸ் ஆடினோம்.

டெண்டில் படுத்து உறங்கினோம்.

மறுநாள் காலைப்பொழுது ரம்மியமாக விடிந்தது. அப்போதுதான் அந்த விஷயத்தை கவனித்தோம்.











எங்களுடன் உறங்கிக் கொண்டிருந்த பிரபாவைக் காணவில்லை!



தொடரும்..

5 comments:

G.M Balasubramaniam said...

பௌதிக ஆர்வலருக்குக் கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது தொடர்கிறேன் ஆமாம் அவரது பொறிபற்றி அவர் மீண்டும் விசாரிக்க வில்லையா

சமுத்ரா said...

மறந்துட்டார் சார்.நன்றி.

Unknown said...

wow... very interesting..

ARUN PRAKASH.A said...

Waiting for kalian-3

BASU said...

சுஜதா வை காணும் பொற்பேறு,பின்வரும் சொற்களிளும் நடையிலும்!
--
//கலியன்//

//சகல வசதிகளுடன்
ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வேறு. ஹிஹி.. //

//"லீவ் ஹிம் அலோன் பார் சம் டைம், காலைல தெளிஞ்சுரும், மஸ்ட் பி ஸ்டோன்ட் , ஹை ஆன் வீட் " என்றான் ஸ்டீபன்.//

// நேரடியா சொன்னாலும் விளங்கிறவா போகுது!" என்றான் சந்துரு . // ---- இங்கே வசந்த் என்று போட்டுக்கொள்ளவும். ஹி ஹி