இந்த வலையில் தேடவும்

Friday, February 26, 2016

கலியன் -3

முதலில் இங்கே தான் எங்கோ பக்கத்தில் போய் இருப்பான் என்று நினைத்தோம்.

'பிரபா !'

'பிரபா !'

'பிரபா !'

 பதில் இல்லை. 

சிக்னல் கிடைக்காது என்று தெரிந்தும் விடாமல் அவனுக்கு போன் செய்தோம்.

'நோ யூஸ்!" என்றான் ஸ்டீபன். "ஹி லெப்ட் ஹிஸ் மொபைல் இன் தி டென்ட் "

எங்கள் சக்திக்கு உட்பட்ட வரை தேடினோம். ஊஹும்...

எங்களுக்கு காலை 10 மணி வரை பிரபா  கிடைக்கவில்லை. எங்கள் சந்தோஷம் எங்கள் உற்சாகம் எல்லாமே ஒரிரவில் பாழானது .நிலைமையின் விபரீதம் புரிந்ததும் கேர்ள் பிரண்டுகள் அப்பா கூப்பிடுவதாக கழன்று கொண்டார்கள். பத்து மணிக்கு சிக் மகளூர் போலீஸ் ஸ்டேஷனில் கம்பிளயன்ட் செய்தோம்.

இன்ஸ்பெக்டர் பெரிய மீசை வைத்திருந்தார். சிவப்பாக இருந்தார்.அவரது பேட்ச் அவர் பெயர் மஞ்சுநாதப்பா என்றது.

"திங்களு திங்களு இதே தொந்தரெ ..ஹுடுகரு ட்ரெக்கிங் பந்து நம் ப்ராணா திந்தாரே "

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

"தமிளா ?" என்று கேட்டு விட்டு உடைந்து போன தமிழில் பேசத் தொடங்கினார்.

"இதைப் பாருங்கோ.. 8 மிஸ்ஸிங் கேஸு இன்னும் முடிக்காம இருக்கு. இப்போ இது ஒண்ணு . பசங்க சும்மா இருக்காம ஆர்வத்துல காட்டுக்குள போறாங்கள்.. கரடி இருக்கு. சிறுத்தை இருக்கு. எலும்பு கூட மிஞ்சாது. ஆழமான வேலீஸ் இருக்கு. நான்வெஜ் சாப்பிடற மரம் கூட இருக்கு! மலைப்பாம்பு இருக்கு! ட்ரெக்கிங் போறீங்களே, இதெல்லாம் கேள்விப் பட்டது இல்லையா!? முதல்ல எங்களுக்கு தகவல் சொல்லணும். யார் சொல்றா? சொன்னா ஒரு கைடை அனுப்பி வைப்போம்! பாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட் பர்மிஷன் இருக்கா? இருந்தா தான் கேஸை எடுத்துக்க முடியும் "

நாங்கள் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தோம்.

"அப்படி உட்காருங்கோ!"

ரகு கெஞ்சினான். "சார், எப்படியாச்சும் கண்டுபிடிச்சு...!"

"பர்மிஷன் காபி வேணும்!"

நாங்கள் அதையெல்லாம் வாங்கி இருக்கவில்லை.

ஸ்டீபன் உடனே  பர்சில் இருந்து ஒரு ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து நீட்டி "சார், பணத்தைப் பற்றி கவலை வேண்டாம்..ப்ளீஸ். அட் எனி காஸ்ட்..."

அவர் முறைத்தார். "யாருக்கு லஞ்சம் கொடுக்கப் பார்க்கிறீர்கள்" என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார் -என்று சொல்ல ஆசை தான். ஆனால் அலுங்காமல் வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

இப்போது 5000 ரூபாய் பேசத் தொடங்கியது.

டீ கொண்டு வந்து வைத்த பையனிடம் "சாயபரிகே கூல் ட்ரிங்க்ஸ் தொகண்டு பா ஹோகு " என்றார்.

"மதிவே ஆய்தா, அவரிகே ?"

"..."

போட்டோ கேட்டார். அடையாளம் கேட்டார். ட்ரெஸ் கலர் கேட்டார்.

"போன் கொண்டு போயிருந்தாரா?"

"இல்லை சார், அதான் பிரச்சினை!"

"ஓகே..இப்பவே நான் செர்ச் ஆபரேஷன் ஸ்டார்ட் பண்றேன். ஒரு க்ரூப் காட்டுக்குள்ள தேடுவாங்க. இன்னொரு டீம் சிடி-ல. எல்லா ஸ்டேஷன்களுக்கும் டோல் கேட்டுக்கும் தகவல் அனுப்பறோம்...தட்ஸ் ஆல் வி கேன் டூ "

"ப்ளீஸ்,,!"

போலீஸுடன் நாங்களும் இரவு முழுக்கத் தேடினோம். காடுகளில், மலைகளில், குகைகளில், நீர் வீழ்ச்சிகளில்,குட்டைகளில் ...எங்கள் பிரபா கிடைக்கவே இல்லை.

ஆயாசமாக இருந்தது. அச்சமாக இருந்தது. அவன் பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?


மறுநாள் காலை கொஞ்சமே கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் தேடினோம்.

காட்டுக்குள் ஒரு இடத்தில் புதர் ஒன்றின் அருகே சில உடைகள் கிடந்தன.

ஒரு டீ ஷர்ட், பேன்ட் , வாட்ச், உள்ளாடைகள், ஷூ, பெல்ட்...

"இதெல்லாம் உங்க பிரெண்ட் டுது தானா?"

அவனுடைய ஹாமில்டன் வாட்ச், யூ .ஸி .பி ஷூக்கள் இது பிரபாவுடையது தான் என்றன.

"ஆமாம்!" என்றோம்.

உடைகள் தான் கிடைத்தன . ஆள் கிடைக்கவில்லை. எங்கே போனான்? விலங்கு அடித்திருந்தால் அது வாட்ச் உட்பட எல்லாவற்றையும் கழற்றி விட்டா சாப்பிட்டிருக்கும்?இல்லை ஹாரர் படங்களில் வருவது போல யாரோ ஒரு சைக்கோ?...

பிரபா மர்மமான முறையில் எங்களை விட்டு மறைந்து போனான்.

மஞ்சுநாதப்பா இன்னும் ஒரு வாரத்தில் நல்ல தகவல் வரும் ஊருக்கு போங்கோ என்று நம்பிக்கை சொல்லி அனுப்பினார். ஒரு மாதத்திலும் வரவில்லை. போலீஸ் நாய்கள் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

பிரபாவின் அப்பா அம்மா வந்து ஒரு பட்டம் அழுதார்கள். விதியை நொந்து கொண்டார்கள். எங்களை சபித்தார்கள். நாங்களே தேடிக் கொள்கிறோம் என்றார்கள்.

பிரபா கிடைக்கவே இல்லை.

ஒருநாள் ஆபீஸில் ரகு என்னை அழைத்தான்.

"எல்லாமே அந்த கலியனால் தான்" என்றான்.

"நீயே யோசி, நமக்கு இது நாள் வரை ஏதாவது பிரச்சினை வந்திருக்கா? காலேஜ் டைம்ல இருந்து எல்லாரும் ஜாலியா தானே இருந்தோம்? அந்த ஆள் வந்ததில் இருந்து எதுவுமே சரியில்லை. பணம் தான் கிடைச்சது. மத்தபடி எதுவுமே நல்லா இல்லை. வருணோட அப்பா போயிட்டார். சந்துருவோட அக்கா டைவர்ஸ் வாங்கினாங்க..இப்ப பிரபா மிஸ்ஸிங் ! அவரை முதல்ல வீட்டை விட்டு அனுப்பனும்!"

எனக்கும் அவன் சொன்னது சரியென்றே பட்டது.

அன்றிரவு கலியனிடம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களை எங்களுடன் வைத்துக் கொள்ள முடியாது என்றோம்.

மனிதர் அழுதார். "எங்கே போவேன்?" என்றார்.

"சரி, விதி விட்ட வழியே போகிறேன், நான் கொணர்ந்த பொன் மொத்தத்தையும் கொடுத்து விடுங்கள்!" என்றார். ஆள் கொஞ்சம் பேசக் கற்றுக் கொண்டு விட்டார்.

அதற்குப் பின் அவரை வீட்டை விட்டுப் போக ஸ்டீபன் அனுமதித்து இருப்பான் என்றா நினைக்கிறீர்கள்? 

ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டன. பிரபா கிடைக்கவில்லை. போலீஸிடம் இருந்து அதே புளித்துப் போன பதில்.எங்கள் பணபலத்தால்  அமைச்சர் வரை சென்று பார்த்தோம். யார் தேடினால் என்ன? ஆள் கிடைத்தால் தானே!?பணம் லட்சங்களில் வீணானது தான் மிச்சம்.

ஒருநாள் கலியன் என்னை அழைத்தார். சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

"உங்களிடம் சற்று உரையாட வேண்டும்!"

"சொல்லுங்க!"

ஏனோ தடுமாறினார். "இல்லை, நாளை சொல்கிறேன், ஏனோ பாதத்தில் நிரம்ப வலிக்கிறது!"

கலியனுக்கு மறுநாள்  கால் வீங்கிக் கொண்டது. நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

அதே சரியானது.

அடிக்கடி சோர்வாக படுத்துக் கொண்டார்.

அடுத்த வாரம் முகம் முழுவதும் வீங்கிக் கொண்டது. நம்பர் ஒன் வரவே இல்லை என்றும் வந்தாலும் பயங்கரமாக எரிகிறது என்றும் சொன்னார். டாக்டரிடம் காட்டினோம். ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்தார்கள்.

வீக்கம் அடிக்கடி தொடர்ந்தது.

ரிசல்ட் வந்த பிறகு டாக்டர்கள் அவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாயும், மாற்று சிறுநீரகம் பொருத்தினாலும் உயிர் வாழ 5% வாய்ப்பு தான் இருப்பதாயும் சொன்னார்கள்.

ஒரு கெட்ட நாளில் அல்லது நல்ல நாளில் கலியனும் எங்களை விட்டுப் போய் விட்டார். எங்களுக்கு அவர் மரணம் ஒருவித திருப்தியையே தந்தது என்று தான் சொல்ல வேண்டும்  .

இறப்பதற்கு முன் கலியன்  எங்களை அழைத்தார். வேலைப்பாடுகள் உள்ள ஒரு சிறிய மரப் பெட்டியைக் கையில் கொடுத்தார்.

"??!!!?"

"வைத்துக் கொள்ளுங்கள், பயன்படும்!"
 
அழுதார்!கண்களில் நீர் விடாமல் வழிந்து கொண்டிருந்தது. "கோதை! கோதை! "என்றார்.

எங்களிடம் என்னவோ சொல்ல வந்தார். நாக்கு குழறியது. "முடிச்சு, முடிச்சு "என்றார். எங்களை ஓடிப்போகும்படி செய்கை செய்தார்.

இந்த மர்ம மனிதர் யார்? காலப் பயணியா ? வேற்றுக் கிரக வாசியா? ஏன் எங்கள் வாழ்வில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தி இப்போது செத்துப் போயிருக்கிறார்?ஒன்றுமே புரியவில்லை.

இதெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் உருண்டோடி விட்டிருந்தது. பிரபா கிட்டத்தட்ட இறந்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டான். 

ஒருநாள் தலை வலிக்கிறது என்று ஆபீசில் அரை நாள் லீவு போட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்டில் யாரும் இல்லை.

என் படுக்கைக்கு சென்றேன். அதன் மேல் கலியன் கொடுத்த பெட்டி இருந்தது.

இதை யார் இங்கே கொண்டு வந்து வைத்தார்கள்?

ஏதோ ஒரு உத்வேகத்தில் அதைத் திறந்தேன்.

பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...



தொடரும்.....

2 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

படிக்க படிக்க விறுவிறுப்பு அடுத்தவரி அடுத்த வரியெனெ துரத்துகிறது .நிச்சய்மாய் புத்தகமாய் வரவேண்டிய தொடர்கள்.

Yowan1977 said...

Great narration boss...