இந்த வலையில் தேடவும்

Tuesday, November 19, 2013

கலைடாஸ்கோப் -102

கலைடாஸ்கோப் -102 உங்களை வரவேற்கிறது.

பெங்களூருவில் நவம்பர் மாதத்திலும் வெயில் கொளுத்துகிறது. மழையும் கிடையாது!வியர்க்கிறது !! என்ன தான் காரணம்.செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி சாமிக் குத்தம் ஏதேனும் செய்து விட்டோமா?

Global warming என்பதே கட்டுக்கதை என்று ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டிருக்கிறது. பூமியின் வெப்பநிலை எப்போதும் இப்படி அப்படி அல்லாடிக் கொண்டே வந்துள்ளது;Global temperature என்பது ஒரு சிக்கலான விஷயம் என்றும் அதை ஒரு குறுகிய கால அளவில் அளவிட்டு வெப்பம் அதிகரித்து விட்டது என்றும் சொல்வது சரியல்ல என்கிறார்கள்.

GW என்றால் இதுதான் சுருக்கமாக: நம் பூமி சூரியனிடமிருந்து தனக்கு வரும் வெப்பத்தை அப்படியே உள் வாங்கிக் கொள்ளாமல் ஒரு கணிசமான அளவை திரும்ப வெளிக்கு அனுப்பி விடுகிறது. இந்த வெப்பத்தை விடாப்பிடியாக சில வாயுக்கள் விட்டேனா பார் என்று கிரகித்துக் கொண்டு மீண்டும் பூமிக்குத் திரும்ப அனுப்புகின்றன. இப்படித் திரும்ப அனுப்பாவிட்டால் பூமி ரொம்பவும் குளிராக இருக்கும். நேரடியான சூரிய வெப்பத்தை விட இந்த திருப்பி அனுப்பப்பட்டு u turn அடித்து வரும்  அகச்சிவப்பு (கட்புலனாகாத) கதிரியக்கம் பூமியின் வெப்ப நிலையில் கணிசமான பங்கு வகிக்கிறது. நாம் தொழில் வளர்ச்சி, industrial revolution அது இது என்று ஏதோதோ செய்து வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை சகட்டு மேனிக்கு கொட்டிக் கொண்டிருக்கிறோம்.

anyway 

சில பேர், பூமி இன்னொரு ice age (பூமி முழுவதும் பனி) நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள். பூமி குளிர்ந்து கொண்டிருக்க வேண்டும். இந்த extra green house விளைவு மற்றும் வெப்பமானது பூமி குளிர்ந்து போகாமல் வைத்துக் கொள்ள வேண்டுமானால் உதவலாம்  என்கிறார்கள். அதாவது நாம் இப்போது ஒரு பள்ளத் தாக்கில் உருண்டு விழுந்து கொண்டிருக்கிறோம். வெப்பம் அதிகரித்து விட்டது என்று சொல்வது பள்ளத்தில் அவ்வப்போது தோன்றும் சின்னச் சின்ன மேடுகள்.மேலும் உல்டா விளைவாக , பூமியின் வெப்பம் அதிகரித்தால் அது ice age வருவதற்கு உதவி செய்யுமாம். அதிக வெப்பம் என்றால் அதிக ஆவியாதல். அதிக ஆவியாதல் என்றால் அதிக மேகங்கள். (மிகக் கடுமையான வெயிலுக்குப் பிறகு அதிக மழை வருவது போல!)அதிக மேகம் என்றால் அதிகப்  பனிப்பொழிவு. (மழை என்பதும் பனி தான். வரும் போது உருகி விடுகிறது!)அப்படி ஒரு ice age வந்தால் அது அடுத்த 10000 வருடங்களுக்கு நீடிக்குமாம். ஜாலி தான்! பூமியில் மனிதன் நடக்கத் தொடங்கிய போது ஒரு நீண்ட ice age ஐ எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எப்படியோ தப்பித்தோம். இன்னொரு ice age இல் 700 கோடி மக்கள் பிழைக்க முடியாது என்கிறார்கள். ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டே முக்கால்வாசி மனித இனம் அழிந்து விடும்.ice age இல் நம் சென்னை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் போலிருக்கிறது !


*******




சுட்டி டி .வி யில் தினமும் இரவு 9 மணிக்கு Penguins of Madagascar வருகிறது.  பாருங்கள். ஜூ -வில் நான்கு பென்குவின்கள் செம ரகளை பண்ணுகின்றன. பார்ப்பவர்களை மீண்டும் சிறுவர்களாக மாற்றி விடுகிறது இந்த அனிமேஷன்  தொடர். அதிலும் ஜூலியன் என்ற வாயாடி லெமூர் தன்னை ஜூவின் ராஜா என்று சொல்லிக் கொன்று அடிக்கும் கூத்துகள் அதகளம்.அது தன்னுடன் எப்போதும் இரண்டு அல்லக்கை -களை வைத்துக் கொண்டு அடிக்கடி வடிவேலு வசனங்கள் பேசி கூத்தடிக்கிறது.

ஜூ -வுக்குப் போவது என்பது (எனக்கு)கொஞ்சம் சலிப்பான விஷயம். பெங்களூருவில் பன்னேருகட்டா ஜூ -வுக்குக் கண்டிப்பாகப் போகாதீர்கள். அங்கே ஒன்றுமே இல்லை.வேஸ்ட்.சபாரி அது இது என்று பணம் பிடுங்குகிறார்கள்! மைசூர் ஜூ ஓரளவு நன்றாக இருக்கிறது. ஒட்டகச் சிவிங்கி ஒன்று தான் என்னைக் கவர்ந்தது. என்ன ஒரு கம்பீரம்! 'சத்தம் போடாதீர்கள்' என்று அங்கங்கே எழுதிப் போட்டிருந்தாலும் வாண்டுகள் பயங்கரமாக  சத்தம் போடுகின்றன.பெரும்பாலான கூண்டுகளில் சம்பந்தப்பட்ட பறவை/ மிருகம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. எவன் பார்த்தால்  என்ன never mind  என்று ஏதோ ஒரு மூலையில் குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டுள்ளன. குரங்கு ஒன்று மட்டும் தான் active ஆக எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறது. சில முதலைகள் உண்மையில் இது சிலை தான் என்று முடிவுக்கு வரும் அளவுக்கு அசையாமல் போஸ் கொடுக்கின்றன. கூச்சலுக்கு மத்தியிலும் கம்பிகளுக்கு இடையேயும் எதையும் ரசிக்க முடிவதில்லை. மைசூர் ஜூவை ஓரளவு நன்றாகவே maintain செய்கிறார்கள். வானம் முழுவதையும் சொந்தம் கொண்டாட வல்ல பறவைகளை அடைத்து வைத்திருப்பது மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், சில மிருகங்கள் காட்டில் இருப்பதை விட இங்கே சந்தோஷமாக இருக்கின்றன என்று தோன்றுகிறது. வேளாவேளைக்கு சாப்பாடு கிடைத்து விடுவதால். 'நமக்கு உரிய எல்லை' இதுதான் என்று ஒரு வழியாக compromise செய்து கொண்டு அதற்குள்ளேயே சந்தோஷமாக வாழப் பழகிக் கொள்கின்றன. சொல்லப் போனால் நாமெல்லாரும் அப்படித் தான். ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லையை வரைந்து கொண்டு அதற்குள்ளாக வாழப் பழகிக் கொள்கிறோம் .

ஜூவில் ஒரு டைனோசர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
பில் ப்ரைஸன்  ஒன்று சொல்கிறார். " We must be living in a very boring age of Universe and solar system. No super novae , no asteroid impact, no ice age, no dinosaurs, all are either in distance past or in distance future!"

மைசூரில் wax museum ஒன்றும் இருக்கிறது. போய்ப் பாருங்கள்.

****************
ராக ரஞ்சனி

இந்த ராக ரஞ்சனி எபிஸோடில் நாம் பார்க்க இருக்கும் ராகம். நாட்டைக் குறிஞ்சி.

கோயிலுக்குப் போகிறோம். சாமியை நன்றாகத் தான் பார்க்கிறோம். ஆனாலும் கடவுளை as it as பார்க்க முடியாமல் ஒரு மாடு இடையே எப்போதும் மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை நம் ஈகோ, ஆணவம் என்று சொல்லலாம். மாயை என்றும் சொல்லலாம். நம்மில் சில பேர் நந்தியின் காதுகளுக்கு இடையே கடவுளை தரிசிக்கக் கூட கற்றுக் கொண்டு விட்டோம்.நந்தனார் என்னும் திருநாளைப்போவார் இந்த நந்தியுடன் compromise செய்து கொள்ள முயலவில்லை என்று தோன்றுகிறது.

எந்த விதத் தடையும் இடையில் இருக்காமல் அப்படியே கடவுளைப் பார்ப்பது தான் உண்மையான தரிசனம் என்கிறார் போலும் நந்தனார்.

வழி மறைத்திருக்குதே மலை போல் ஒரு
மாடு படுத்திருக்குதே




ராகம் நாட்டைக் குறிஞ்சி..ரஞ்சனி காயத்ரி பாடுவதைக் கீழே கேட்கலாம்.



நந்தனார் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தாழ்ந்த ஜாதிக்காரர்.சிதம்பரம் போய் ஈசனை தரிசிக்க ஆசைப்படுகிறார். அவரது எஜமானரோ மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா என்கிறார்.இவரோ சிதம்பரம் நாளை போவேன் நாளை போவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.மீதிக்கதை இங்கே டி .எஸ்.பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் :-



நாட்டைக் குறிஞ்சியில் மிகவும் பிரபலமான திரையிசைப் பாடல் ஒன்று.

வான்மழை விழும் போது மலை கொண்டு காத்தாய் -என் 
கண்மழை விழும் போது எதில் என்னைக் காப்பாய் 

கண்ணன் கறுப்பு என்பதை நயமாக சுட்டிக் காட்டுகிறாள் (ர் )

பாற்கடலில் ஆடிய பின்னும் -உன் 
வண்ணம் மாறவில்லை இன்னும் 
என் நெஞ்சில் கூடியே உன் நிறம் மாறவா 








இந்த ராகத்தைப் பற்றிய விரிவான அலசல் ஆங்கிலத்தில்:


குறிஞ்சி முதல் பாலை வரை ஐந்து நிலங்களை தமிழ்  இலக்கியம் சொல்கிறது.

குறிஞ்சி -மலை 
முல்லை - காடு 
மருதம் - வயல் 
நெய்தல் - கடல் 
பாலை- பாலைவனம் 

சில பேருக்கு குறிஞ்சி romantic ஆக தெரியலாம். முருகன் , ரெண்டு பெண்டாட்டி,hill station , கூடலும் கூடல் நிமித்தமும்! :)

ஆனால்  எனக்கு மிகவும் romantic -ஆகத் தெரிவது இந்த 'முல்லை' தான்.

playboy ஆன கண்ணன் திணைக் கடவுள்.
முல்லைப்பண் (மோகனம்) பாடல் 
முல்லை மலர் 
மான் முயல் 
மாடு மேய்த்தல் 

எல்லாவற்றுக்கும் highlight ஆக romantic ஆன கார்காலம் !!

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்! காதலன் வருவதற்காக காத்திருத்தல்!
காத்திருத்தலே ஒரு சுகம் தானே!

முல்லைத் திணைக்கான ஒரு பாடல். குறுந்தொகையில் இருந்து.

பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்ற நோக்கி மாலை
மடக்கட் குழவி யணவந் தன்ன
நோயே மாகுத லறிந்தும்
சேயர் தோழி சேய்நாட் டோரே



மேயப்போன பசுக்கள் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கன்றுகள் போல தொலைவில் பொருள் தேடப் போனவரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பசுக்கள் மாலை ஆனதும் சமர்த்தாக வீடு திரும்பிவிடும். அவர் இன்னும் வரவில்லையே!

வீடு திரும்புதல் ஒரு சுகம் தான்.சுகம் தான். ஒரு ஜென் ஹைக்கூ 

-பயணம்  கடினமாய்த் தான் 
இருக்கிறது.
அனாலும் 
வீடு திரும்பலின் 
சுகம்!



****

Negative Energy பற்றிப் பேசுகிறது Pizza -II தி வில்லா .

பில்லி, சூனியம், தகடு புதைத்தல் , மந்திரித்தல் எல்லாம் அறிவியல் பூர்வமாக உண்மைதான் என்கிறது இந்தப் படம்.டி -ப்ராக்லி  என்ற விஞ்ஞானி சொல்வது போல எல்லாமே அலைகள் தான் ;மனம் என்பதும் அலைகள் தான் என்று எடுத்துக் கொண்டால் இது ஓரளவு உண்மை.

இயற்பியல் பொதுவாக ஆற்றலை பாஸிடிவ் , நெகடிவ் என்று பிரிப்பதில்லை. எலக்ட்ரான் பாசிடிவ் , ப்ரோடான் நெகடிவ் என்று சொல்வதெல்லாம் ஒரு convenience -க்கு தான்.நிறை (mass ) பாசிடிவ் ஆக இருப்பதாலும் பெரும்பாலான energy சமன்பாடுகள் quadratic ஆக இருப்பதாலும் (உதாரணம் E =m C 2, E =1/2 m V 2) விடை negative இல் வர வாய்ப்பு இல்லை.

ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியலில் நெகடிவ் எனர்ஜி யை நம்புகிறார். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆற்றல் ஜீரோவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். பிரபஞ்சத்தின் ஆற்றலை ஈர்ப்பு ஒரு negative energy யாக இருந்து balance செய்கிறது என்கிறார். btw , gravity படம் பார்த்தீர்களா? எல்லாரும் ஆஹா ஓஹோ என்கிறார்கள். எனக்கென்னவோ சுமாராகத் தான் தோன்றியது.!

இப்போது ஒரு கவிதை!

I hate gravity
for it pulls me down
for it makes me
jealous of birds
for it makes me
earth bound

I hate gravity
for it makes me fall
for it makes me crawl
for it brings me
again where I started

I hate gravity
for it makes me heavy
for it denies me stars
for it makes my 
antiques break 

 but I love gravity-yes
for it gave me a beautiful moon!

ஓஷோ ஜோக் 


ஒரு சேல்ஸ்மேன் ஆபீஸ் ஒன்றுக்கு சென்றான். அங்கே யாரும் இல்லை. ஒரே ஒரு பூனை மட்டும் பைல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அப்போது அந்தப் பூனை அவனைப் பார்த்து ' ஆச்சரியப்படாதப்பா , இந்த ஆபீஸில் ஒழுங்கா வேலை செய்யறது நான் ஒருத்தி தான் ' என்றது.

இப்போது சேல்ஸ்மேன் இன்னும் ஆச்சரியப்பட்டு ' அய்யோ பூனை பேசுதே, என்ன அதிசயம், என்ன ஒரு அதிசயப் பூனையை வச்சிருக்கார் இந்த ஆபீஸ் மேனேஜர் ' என்றான்.

பூனை இப்போது 'தயவு செய்து நான் பேசும் விஷயத்தை அவர் கிட்ட  சொல்லி விடாதப்பா ...அப்பறம் அவர் போன் கால் எல்லாம் நான் தான் அட்டன்ட் பண்ண வேண்டி இருக்கும்' என்றது.

சமுத்ரா ....

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

கலைடாஸ்கோப் வண்ணங்கள் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... நன்றி...

G.M Balasubramaniam said...

படித்துக்கொண்டே வரும்போது அங்காங்கே பௌதிகப் பாடம் கேட்கிறோமோ என்று தோன்றுகிறது. நலமா.?பார்த்து இரண்டாண்டுகளுக்கும் மேலாகி விட்டதே. வரவை எதிர் நோக்கலாமா.?

Anonymous said...

Very interesting..& Worth Reading..
Write more & Frequent..

Raj.

பால கணேஷ் said...

ஜுவில் டைனோசர் இருந்தால் நன்றாக இருக்கும்....???!!! ஓஷோவின் ஜோக் வெகு ஜோர்! கலைடாஸ்கோப்பின் மற்ற வண்ணங்களையும் ரசித்தேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

சீனு said...

வாத்தியார் பாலகணேசின் வலைச்சர அறிமுகம் மூலம் வந்தேன்... கலைடாஸ்கோப்பை எப்படித் தவறவிட்டேன் என்று தெரியவில்லை.. இனி தவறாது தொடர்கிறேன்

நன்றி

Jegan said...

"gravity படம் பார்த்தீர்களா? எல்லாரும் ஆஹா ஓஹோ என்கிறார்கள். எனக்கென்னவோ சுமாராகத் தான் தோன்றியது."

Me too