இந்த வலையில் தேடவும்

Tuesday, November 22, 2011

அணு அண்டம் அறிவியல் -53

அணு அண்டம் அறிவியல் -53 உங்களை வரவேற்கிறது.


முதன்முறை கேட்கும் போது ஒரு கருத்து உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றவில்லை என்றால் பின்னர் அது வெற்றி பெறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை -ஐன்ஸ்டீன்.


INVISIBILITY - யின் முடிவுரையைப் பார்த்து விட்டு பிரபஞ்சம் பற்றிய நம் உரையாடல்களைத் தொடரலாம்.


ஹோலோக்ராம் (hologram ) என்பது ஒருவிதமான புகைப்படம்.ஆனால் அது சாதாரண ஒளியை வைத்து எடுக்கப்படாமல் லேசரை வைத்து எடுக்கப்படும்.ஹோலோக்ராமின் சிறப்பு என்ன என்றால் அதன் புகைப்படங்கள் 3D விளைவு தரும்படி இருக்கும்.நிறைய புத்தகங்களில் ஹோலோக்ராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.சில நாடுகளின் கரன்சியில் கூட இது இருக்கும்.ஒரு சக்திவாய்ந்த லேசர் ஒளிக்கற்றையை இரண்டு கற்றைகளாகப் பிரிக்கிறார்கள். ஒரு புகைப்படப்பிலிம் மீது ஒரு பகுதி பட்டு அதை ஒளிரச் செய்கிறது.பிரிந்து சென்ற இன்னொரு ஒளிக்கற்றை ஒரு கண்ணாடியால் எதிரொளிக்கப்பட்டு மீண்டும் அதே பிலிம் மீது பட்டு ஒளிருகிறது. இரண்டு ஓளிக்கற்றைகளின் குறுக்கீடு (INTERFERENCE)விளைவு காரணமாக இப்போது பொருளின் முப்பரிமாண பிம்பம் நமக்குக் கிடைக்கும். சாதாரண ஃபோட்டோவில் ஒருவரை ஒரே ஒரு கோணத்தில் தான் பார்க்கலாம். ஆனால் ஹோலோக்ராமில் நிஜத்தில் பார்ப்பது போலவே அவரின் வெவ்வேறு கோணங்களைப் பார்க்க முடியும்.சரி இதை வைத்துக் கொண்டு எப்படி ஒருஆளை மறைப்பது?


ஒரு ஆளுக்கு முன்னால் கச்சிதமாக அவர் அளவே உள்ள ஒரு ஹோலோக்ராபிக் திரையை வைக்க வேண்டியது.அவருக்குப் பின்னால் இருக்கும் காட்சிகளை (அவரால் மறைக்கப்படும் காட்சிகளை மட்டும் ) ஹோலோக்ராபி மூலம் படம் எடுத்து இப்போது திரையில் அதை ப்ராஜெக்ட் செய்ய வேண்டியது.அந்த பிம்பம் 3D பிம்பம் என்பதால் இப்போது அந்த ஆள் நம் கண்களில் இருந்து மறைந்து விட்டது போலத் தோன்றும். துணியில் உள்ள ஓட்டையை மறைக்க அதே மாதிரி உள்ள துண்டுத் துணி ஒன்றை அதன் மீது ஒட்டித் தைக்கிறோமே அது போல.இப்போதெல்லாம் திரையே தேவையில்லை.வெற்றிடத்த்தில் கூட ஹோலோக்ராம் இமேஜை ஒளிரச்செய்ய முடியும்!இது ஒளியானது அந்த ஆளை ஊடுருவிச்சென்று விட்டதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கும்.

Holographic principle என்று ஒரு தத்துவம் இயற்பியலில் இருக்கிறது.எப்படி சினிமா திரை இரண்டு பரிமாணமாக இருந்து கொண்டு உள்ளே முப்பரிமாணக் காட்சிகளைக் காட்டுகிறதோ ,அதேபோல நம் பிரபஞ்சத்தை ஒரு ஹோலோக்ராபிக் ஸ்டிக்கர் என்கிறது இந்த தத்துவம்.The Mirror என்ற பேய்ப்படம் பார்த்திருக்கிறீர்களா? இரண்டு பரிமாணம் என்று நாம் நினைக்கும் கண்ணாடிகளுக்குள் ஒரு பெரிய உலகம் இருக்கிறது என்று சொல்கிறது அந்தப்படம். ஹீரோ சும்மா இருக்காமல் ஒரு பாழடைந்த கட்டிடத்துக்கு சென்று அங்கே ஒரு கண்ணாடி மட்டும் தூசு படியாமல் இருப்பதைப்பார்க்கிறார்.அதை நோண்டி உள்ளே இருந்த பேய்களை உசுப்பி விட்டுவிடுகிறார்.கண்ணாடி உலகத்தில் இருந்த பேய்கள் வெளியே வந்து ஹீரோவையும் அவன் குடும்பத்தையும் பயமுறுத்தும்.கடைசியில் எல்லாக் கண்ணாடிகளையும் பெயிண்ட் பூசி மறைப்பார்கள்; தெருவில் போட்டு உடைப்பார்கள். கடைசியில் ஹீரோ பேய்களை அழிக்க மாட்டார்.ஹீரோ கண்ணாடி உலகத்துக்குள் புகுந்து பேயாகவே மாறி விடுவார்.( Objects in the mirror are closer than they appear என்பது படத்தில் டைட்டில் லைன்!)

இந்தத் தத்துவத்துக்கு இது மிகச்சரியான உதாரணம் இல்லை என்றாலும் Black hole entropy என்று நமக்குத் (எனக்குத்) தெரியாத டாபிக்கில் எல்லாம் ஆழம் தெரியாமல் காலை விட விரும்பவில்லை. சுருக்கமாக சொல்வது என்றால் ஒரு முப்பரிமாண பரப்பைப் (பிரபஞ்சம் உட்பட)பற்றிய எல்லா விஷயங்களும்அதன் இருபரிமாண விளிம்பில் பூசப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறது இந்தத்தத்துவம்.உதாரணமாக ஒரு வீட்டுக்குள் என்ன நடக்கிறது (சண்டைபோடுகிறார்களா, காதல் செய்கிறார்களா, பாத்திரங்களை எடுத்து வீசிக்கொள்கிறார்களா) என்று சுவரில் தெரியும் அவர்களின் 2-D நிழலை வைத்தே சொல்லி விடலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் ,மனைவி ஒரு கத்தியை எடுத்து கணவனுக்கு பக்கவாட்டில் அசைத்தாலும் நிழலைப் பார்ப்பவர்களுக்கு கணவனைக் கத்தியால் குத்தி விட்டது போலத் தவறாகத் தோன்றும்)இதைப் பற்றி இன்னும் தெரிய வேண்டும் என்றால் ஸ்டீபன் ஹாகிங் அவர்களுக்கு மெயில் செய்து கேட்கவும்.
S.W.Hawking@damtp.cam.ac.uk என்னை விட்டு விடவும்


ஒரு ஆளை சுலபமாக மறையச் செய்ய இன்னொரு வழி அவரை சில உயர்ந்த பரிமாணங்களுக்கு (higher dimensions ) அனுப்புவது.உதாரணமாக 2D திரையில்(சினிமாவில்) எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கும் போது ஹீரோ திரையைக் கிழித்துக் கொண்டு நம்மை நோக்கி முப்பரிமாண உலகத்துக்கு வந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவரை திரையில் இருக்கும் இருபரிமாண மனிதர்கள் பார்க்க முடியாது.(படத்தில்) இரண்டு பூச்சிகள் ஒரு தட்டையான இருபரிமாண வெளியில் (நீளம் அகலம்)உலவுகின்றன.ஆனால் அந்த தட்டையான பரப்பின் முனையில் ஒரு மிகச் சிறிய அளவே உள்ளே மூன்றாம் பரிமாணம் உள்ளது (உயரம்)அதன் வழியே ஒரு பூச்சி பயணிக்குமானால் அதைப் பார்க்கும் இன்னொரு பூச்சியின் இருபரிமாண பார்வையில் இருந்து அது மறைந்து விடும்!


ஆவிகள், ஆத்மா போன்ற ஆராய்சிகளில் ஈடுபடும் சிலர் , (குறிப்பாக மரணத்துக்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான் என்று)அவை மனிதனால் காண முடியாத நான்காம் அல்லது ஐந்தாம் பரிமாணத்தில் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.(எனவே நீங்கள் வீட்டில் தனியாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் தலைக்குமேல் குறைந்தபட்சம் நூறு பேய்களாவது சுற்றிக் கொண்டிருக்கலாம். (சும்மா தான் சொன்னேன்..எங்காவது இன்றைக்கு ராத்திரி பயந்து உச்சா போய் விடாதீர்கள்).


நவீன இயற்பியலின் முக்கியமான ஒரு கொள்கை ஸ்ட்ரிங் தியரி எனப்படும் இழைக்கொள்கை. பிரபஞ்சம் முழுவதும் ஊடாடும் ஒரு மெல்லிய இழை தன் அதிர்வுகளுக்கு (Vibrations )ஏற்ப எலக்ட்ரானாகவும் ப்ரோட்டானாகவும் பழனிச்சாமியாகவும் தெரிகிறது என்று நம்பும் கொள்கை. வயலினில் கம்பி ஒன்று தான். கம்பிக்கு அழுத்தம் கொடுக்காமல் போ(bow )வை தேய்த்தால் ஸா கேட்கிறது. கொஞ்சம் அழுத்தம் (இன்னொரு விரலால்)கொடுத்தால் ரி.இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் காந்தாரம்.இப்படி அந்த இழை (Whatever it is)தன் அதிர்வுகளுக்கு ஏற்ப துகள்களாக வெளிப்படுகிறது என்கிறார்கள்.சரி இந்த இழைக் கொள்கை கேட்பதற்கு பிரமாதமாக இருந்தாலும் இதை உண்மையாக்க நமக்கு குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட பரிமாணங்கள் தேவைப்படுகின்றன.இன்றும் கூட சில விஞ்ஞானிகள் நான்கு பரிமாணங்களுக்கு மேல் பிரபஞ்சத்தில் இல்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.இது ஏன் என்றால் ஐந்தாம் பரிமாணத்தை ஒப்புக் கொண்டால் ஆத்மா, கடவுள் போன்ற விஷயங்களுக்கு எங்கே இடம் கொடுத்து விடுவோமோ என்ற பயம் தான்.








Theodor Kaluza

Theodor Kaluza என்ற ஜெர்மன் விஞ்ஞானி, ஐன்ஸ்டீனின் ஈர்ப்பியல் சமன்பாடுகளை எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு பரிமாணம் கூடுதலாக அளித்து ஐந்து பரிமாணத்தில் கணக்கிட்ட போது ஆச்சரியமாக மாக்ஸ் வெல்லின் மின்காந்த (ஒளி) சமன்பாடுகள் விடையாகக் கிடைத்தன. ஒளியையும் ஈர்ப்பையும் இணைக்கும் பாலமாக ஐந்தாம் பரிமாணம் இருக்கலாம் என்ற ரகசியத்தை இது வெளியிட்டது.குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையார் வந்த கதையாக சந்தோஷமடைந்து இதை அவர் ஐன்ஸ்டீனிடம் சொல்ல ஐன்ஸ்டீன் அவரை உற்சாகப் படுத்தி ஐந்தாம் பரிமாணம் பற்றிய கட்டுரைகளை சர்வதேச அறிவியல் அரங்குகளில் சமர்பிக்கச் சொன்னார்.ஆனால் வழக்கம் போல சில தலைமை விஞ்ஞானிகள், ஐந்தாவது பரிமாணமாவது மண்ணாவது , அப்படியே ஓடிப்போயிரு,ஏதோ ஐன்ஸ்டீன் சொன்னாரே என்று உன் பேப்பரை போர்டுக்கு எடுத்துக் கொண்டோம் என்று திட்டி அனுப்பி விட்டனர்! [நிறைய விஞ்ஞானிகள், இயற்பியல் வரலாற்றில் இப்படி அவமானத்தையும் வேதனையையும் அனுபவித்திருக்கிறார்கள். வெப்பவியக்கவியலின் விதிகளை வகுத்த போல்ட்ஸ்மான் என்ற ஒரு அரிய விஞ்ஞானியை தற்கொலை செய்ய வைத்து விட்டு சினிமா நடிகர்களை கௌரவிக்கும் சமுதாயம் இது!]

இயற்பியலின் புதிர்களை விடுவிக்க வேண்டும் என்றால் உயர்ந்த பரிமாணங்களை கருத்தில் கொண்டே ஆகவேண்டும் என்ற பார்வைக்கு கலூசாவின் கொள்கை வித்திட்டது.உதாரணமாக ஒளி என்பது இன்றுவரை மனிதனுக்குப் புதிராக இருக்கிறது.அது துகளா,அலையா , ஏன் அது எப்போதும் ஒரே வேகத்தில் செல்கிறது போன்ற புதிர்கள்.நம்மால் ஒருவேளை ஐந்தாம் பரிமாணத்தில் நுழைய முடிந்தால் ஒளியின் அத்தனை ரகசியங்களும் வெளிப்படுமோ என்னவோ!


இன்னொரு விஷயம் என்ன என்றால் உயர்ந்த பரிமாணத்தில் இருப்பவர் ஒருவர் தனக்குக் கீழே இருக்கும் பரிமாணங்களை ஒரே பார்வையில் பார்க்க முடியும். கீழே இருப்பவர் உயர்ந்த பரிமாணத்தில் இருக்கும் விஷயங்களைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமான ஒன்று என்ன என்றால் காலம் நான்காம் பரிமாணம் என்றால் ஐந்தாம் பரிமாணத்தில் இருப்பவர் காலத்தையும் கடந்த காலம் எதிர்காலம் என்ற வேறுபாடு இன்றி சுலபமாகப் பார்க்க முடியும்.(Precognition )

சரி.. இப்போது back to பிரபஞ்சம்.


அறிவியலில் நிறைய கண்டுபிடிப்புகள் தற்செயலாகத்தான் நிகழ்ந்துள்ளன.(உ.தா: பென்சிலின்) இதுவும் அப்படித்தான்.


1964 ஆம் ஆண்டு அர்னோ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் என்ற இரு இயற்பியல் மாணவர்கள் எகோ சாட்டிலைட்டில் இருந்து வரும் ரேடியோ சிக்னல்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.எகோ சாட்டிலைட் என்பது டெலிவிஷன் சிக்னல்களைத் திருப்பி விடும் நாசாவின் ஒரு சிறிய சாட்டிலைட்.சிக்னல்களை உள்வாங்க மிகத் துல்லியமான ஒரு ஹார்ன் ஆன்டெனா அவர்களுக்கு உதவியது.சிக்னல்களின் தரம் துல்லியமாக இருக்க வேண்டும் என்று மிகக் கவனமாக அந்த ரேடியோ/மைக்ரோவேவ் ரிசீவர் வடிவமைக்கப்பட்டிருந்தது.ரிசீவரின் வெப்பம் தேவையில்லாத குறுக்கீடுகளை உருவாக்கும் என்று அது மிக மிகக் குறைந்த வெப்ப நிலைக்கு (4K )குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு செய்த போதும் அந்த ரிசீவர் ஒரு சீரான மங்கலான NOISE ஐ உள்வாங்கியபடி இருந்தது.இந்த ஆய்வை இரவில் செய்த போதும் அந்த சீரான மைக்ரோவேவ் துடிப்பு தொடர்ந்தது.ஆறுமாதங்கள் கழித்து (துடிப்பு தூரத்து விண்மீனில் இருந்து வந்திருக்கலாம் என்பதால்) செய்த போதும் அந்த சீரான மைக்ரோவேவ் துடிப்பு தொடர்ந்தது.ஆன்டெனாவில் இருந்த குப்பைகளை அகற்றி, எல்லாவற்றையும் மறுபடி சுத்தம் செய்து பார்த்தபோதும் துடிப்பு தொடர்ந்தது.இந்த தேவையில்லாத குளிர் மைக்ரோவேவ் சத்தம் (3K noise ) அவர்கள் ஆராய்ச்சிக்கு ஒரு தலைவலியாக இருந்தது.(சோப்பு போட்டு எத்தனை முறை தேய்த்தாலும் போகாத அழுக்கு போல).ஆனால் இந்தத் தலைவலி தான் பின்னாளில் தங்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தரப் போகிறது என்று அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.....




சமுத்ரா

16 comments:

'பசி'பரமசிவம் said...

அரிய அறிவியல் செய்திகளை எளிய நடையில் சுவையாகச் சொல்கிறீர்கள்.

இயற்கை பற்றிச் சிந்திப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல விருந்து.

தொடர்ந்து எழுதுங்கள்.

அகல்விளக்கு said...

Well written...
Keep going....
:))

Katz said...

;-)

SURYAJEEVA said...

ஹோலோ கிராம் குறித்து புதிய பார்வை அறிந்து கொண்டேன்... தொடர்கிறேன்

Jayadev Das said...

\\ஆனால் இந்தத் தலைவலி தான் பின்னாளில் தங்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தரப் போகிறது என்று அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.....\\ Ended with a suspense...!!!

Subash said...

excellent bro,
கடவுள் 12ம் பரிமாண சக்தியென்று ஏதோவொருவிடத்தில் வாசித்த ஞாபகம்.
lol. but i dont know bout it.
waiting for your next post.

Anonymous said...

Excellent Article! Good job..

Waiting eagerly for your next post.

Regards,
Arunkumar
Abu dhabi

naren said...

அறவியலை மர்மம் நாவல் போல எழுதிக் வருவதற்கு பாராட்டுக்கள். கொஞ்சம் அலுப்பு தட்டாமல் படித்த அறவியல் சம்பந்தமான பதிவுகள் இந்த பிளாக்கில் தான்.

பதிவிற்கு நன்றி, அடுத்தது என்ன என்று காத்தியிருக்கிறேன்.

அப்பாதுரை said...

சீரான நடை. பிரமிக்க வைக்கும் தமிழ்ப் பிடிப்பு. superposition அசலில் உண்டு என்றே நம்புகிறேன். இதை சாதாரணமாக உணரும் காலத்தில் நான் இருக்கச் சாத்தியமில்லையே என்ற லேசான வருத்தம் இருந்தாலும், இன்னொரு பரிமாணத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம் என்ற ஆறுதலும் இருக்கிறது. உங்களைச் சுற்றும் பேய் என்னைப் போலிருந்தால் அஞ்ச வேண்டாம் :)

J.Bagirathan, Pondicherry said...

Excellant explanation, Please continue same kind of physics posts

Radhakrishnan said...

மிகவும் சிறப்பாக இருக்கிறது. பரிமாணங்கள் பற்றிய விசயங்களும், கண்ணாடி பற்றிய விசயங்களும் என மிகவும் அருமை.

பரிமாணங்கள் எனப்படுவது பார்வை சம்பந்தப்பட்டதா?

அதாவது நீங்கள் என் முன்னர் நின்று இருக்க, உங்களை தாண்டி உங்களால் மறைக்கப்பட்டு இருக்கும் பொருளை என்னால் காண இயலுமா?

ஒரு பொருளை காண்பது ஒளி சிதறல் மூலம் எனும் பட்சத்தில் இது சாத்தியமா?

//ஒரு ஆளை சுலபமாக மறையச் செய்ய இன்னொரு வழி அவரை சில உயர்ந்த பரிமாணங்களுக்கு (higher dimensions ) அனுப்புவது.உதாரணமாக 2D திரையில்(சினிமாவில்) எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கும் போது ஹீரோ திரையைக் கிழித்துக் கொண்டு நம்மை நோக்கி முப்பரிமாண உலகத்துக்கு வந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவரை திரையில் இருக்கும் இருபரிமாண மனிதர்கள் பார்க்க முடியாது.(படத்தில்) இரண்டு பூச்சிகள் ஒரு தட்டையான இருபரிமாண வெளியில் (நீளம் அகலம்)உலவுகின்றன.ஆனால் அந்த தட்டையான பரப்பின் முனையில் ஒரு மிகச் சிறிய அளவே உள்ளே மூன்றாம் பரிமாணம் உள்ளது (உயரம்)அதன் வழியே ஒரு பூச்சி பயணிக்குமானால் அதைப் பார்க்கும் இன்னொரு பூச்சியின் இருபரிமாண பார்வையில் இருந்து அது மறைந்து விடும்!//

அதாவது இப்படி போகாமல் செய்ய கூடிய சாத்தியம் இருக்கிறது அல்லவா? எதற்கு 3D கண்ணாடி தருகிறார்கள்?

நன்றி.

johnferdi said...

நல்ல அழகிய தமிழ் நடையில் , எளிதாக புரியும் வண்ணம் இயற்பியல் மட்டுறம் இயற்கை தெளிவு படுத்தியமைக்கு நன்றி

ஷர்புதீன் said...

keep going

Anonymous said...

excellent.. waiting for the next post

சிவகுமாரன் said...

உங்கள் அணு அண்டம் அறிவியலை , நூலாக வெளியிடும் உத்தேசம் உண்டா ? வரும் தலைமுறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்

Unknown said...

ஆவி ஆத்மா எப்போதிலிருந்து உருவான சிந்தனைகள்?


மனிதன் குரங்கிலிருந்து பரிணமிக்கும் முன்னரே மனிதகுரங்காவிகள் இருந்ததா!?


அது சரி ஒரு செல் உயிரி வைரஸ் பாக்டீரியா ஆடு மாடு கோழி டைனோசர்
என எல்லாவற்றிற்கும் ஆவி ஆத்மா உண்டா!?


ஆன்மாவை உணர்ந்ததாக யாரேனும் தெரிந்தால் கூறுங்கள்
வரலாற்றில் மறைக்கபட்ட பல சம்பவங்களுக்கு விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கு நியூட்டன் ஐன்ஸ்டைனிடமும் பேச வேண்டியிருக்கு!?