இந்த வலையில் தேடவும்

Tuesday, November 15, 2011

கலைடாஸ்கோப் -44

லைடாஸ்கோப் -44 உங்களை வரவேற்கிறது.

ஒன்று
=======

உலகில் பெரும்பாலான குழந்தைகள் மார்ச்-இல் இருந்து ஜூன் வரை உள்ள மாதங்களில் பிறக்கின்றன என்று சொல்கிறார்கள்.
(கோடைக்காலத்தில்) இது அவர்களுடைய பெற்றோர்கள் அதற்கு முந்தைய கோடையில் இணைந்திருக்கவேண்டும் என்பதை
தெளிவாக்குகிறது. 'லாஜிக்' கின் படி பார்த்தால் உலகின் பெரும்பாலான குழந்தைகள் குளிர்காலத்தில் தான் பிறக்க வேண்டும் (ஹி ஹி)மேலும் குளிர் அதிகம் உள்ள நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகம் இருக்க வேண்டும்.ஆனால் உல்டாவாக குளிர் அதிகம் உள்ள நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருக்க வெய்யில் வாட்டி எடுக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ம.தொ. நிரம்பி வழிகிறது. இதற்கு விடையாக
ஓஷோவின் 'காமத்தில் இருந்து கடவுளுக்கு' புத்தகத்தில் (From Sex to Super consciousness) இருந்து ஒரு விளக்கம்:

"காமம் அல்லது பாலுணர்வுக்கும் சூரியனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. காமத்தின் இலக்கணமான காமசூத்ரா வெப்ப நாடான இந்தியாவிலேயே தோன்றியது.மிக அதிக கற்பனைத்திறன் மிக்க பாலியல் கதைகள் அரேபியா போன்ற மிக சூடான பிரதேசங்களில் தான் தோன்றின.சூரியன் தன் அதிகபட்ச சக்தியில் இருக்கும்போது உங்கள் ஆசையும் தூண்டப்படுகிறது. சூரியன் மேகங்களால் மறைக்கப்பட்டோ பனி மூடியோ மப்பும் மந்தாரமுமாக இருக்கும் போது உங்கள் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சரிவர வேலைசெய்வதில்லை. எனவேதான் மதங்கள் சூரியனை உயிர்களின் தந்தை என்று அழைக்கின்றன .அறிவியல் ரீதியாக இது சரி என்ற போதிலும் உளவியல் ரீதியாகவும் இது பொருந்தும்."


- இனிமேல் ஊட்டி கொடைக்கானலுக்கு ஹனிமூன் போனால் இரண்டு மூன்று நாட்களில் சென்னைக்கு திரும்பி வந்து விடுங்கள்.இங்கேயே இருந்தால் எத்தனை ரொமாண்டிக் ஆக இருக்கும் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள்.


இரண்டு
========

இரண்டு (ஆங்கிலத்) திரைப்படங்கள் பற்றி பேசலாம்.

The Enchanted :-


புராண கேரக்டர்கள் சிலர் (எமன், சித்ரகுப்தன் etc) நவீன உலகத்துக்கு வந்தால் என்ன நடக்கும் என்று திரைப்படங்கள் தமிழில் பார்த்திருக்கிறோம்.குழந்தைகளின் கார்டூன் உலகத்தில் வாழும் கேரக்டர்கள் நிஜ வாழ்க்கையில் வந்தால் எப்படி இருக்கும்?

சிட்னி இளவரசி ஜிசலே வும் இளவரசன் எட்வர்ட்-டும் காதலர்கள். எட்வர்டின் சித்தி சூனியக்காரி நரிசா அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் தன் சக்திகள் அழிந்து போய்விடும் என்பதால்
ஜிசலேவைக் கொல்ல முயற்சிக்கிறாள்.அவர்கள் திருமணத்துக்கு முன்னர் அவளைத் தனியாக அழைத்துச் சென்று ஒரு மாயக்கிணற்றுக்குள் தள்ளி விட்டு விடுகிறாள். அதில் விழும் ஜிசலே,இன்றைய நியூயார்க் நகரில் வந்து விழுகிறாள்.இதுவரை கார்டூனாக இருந்த ஜிசலே ,இப்போது நிஜப்பெண்ணாக
மாறுகிறாள்.நவீன உலகத்தின் கார்கள், கட்டிடங்கள் ,மனிதர்கள் இவற்றின் அறிமுகம் இல்லாதததால் மிகவும் சிரமப்படுகிறாள்.அவள் அணிந்திருந்த திருமண நகைகள் திருடப்படுகின்றன.இறுதியில் நல்ல மனம் கொண்ட ராபர்ட் என்ற (டைவர்ஸ் ஆன )ஒருவரை சந்திக்கிறாள்.

ராபர்ட்டின் மகள் மார்கனுக்கு அவளை மிகவும் பிடித்து விடுகிறது. தன் இளவரசன் எட்வர்ட் வரும்வரை தனக்கு அடைக்கலம் தரும்படி
ஜிசலே,ராபர்டைக் கேட்டுக் கொள்கிறாள்.இதை விரும்பாத ராபர்டின் காதலி நான்சி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறுகிறாள்.சூனியக்காரி நரிசா, இளவரசியை கொல்ல ஒரு வில்லனை (காமெடியன்) நவீன உலகுக்கு அனுப்புகிறாள். அவன் ஜிசலேயைக் கொல்ல செய்யும் முயற்சிகள் காமெடி பீசாக முடிகின்றன.இது வேலைக்கு ஆகாது என்று
தானே அங்கே வருகிறாள் நரிசா . இளவரசன் எட்வர்டும் நவீன உலகத்துக்கு வந்து சேருகிறான்.இதற்கிடையில்
ஜிசலே-விற்கும் ராபர்ட் டிற்கும் மெல்லிய காதல் வளர்ந்து விட்டிருக்கிறது.

கார்டூன் இளவரசியும் கார்டூன் இளவரசனும் நிஜ உலகில் சந்திக்கிறார்கள்.ராபர்ட் -டிடம் விடை பெற்றுக்கொண்டு பிரிந்து செல்கிறார்கள். தங்கள் உலகத்துக்கு திரும்பி விடலாம் என்று இளவரசன் எட்வர்ட் சொல்ல ,ஜிசலே தான் இந்த நகரத்தை விரும்புவதாகவும் இங்கேயே இருக்கலாமே என்றும் கேட்டுக் கொள்கிறாள்.

ஜிசலே-எட்வர்ட் மற்றும் ராபர்ட்-நான்சி இரண்டு ஜோடிகளும் ஒரு டான்ஸ் பார்ட்டியில் சந்திக்கிறார்கள். எல்லாரும் தங்கள் ஜோடியை மாற்றி நடனமாடும்படி அங்கே ஒரு அறிவிப்பு வருகிறது . எட்வர்ட் நான்சியுடனும் ஜிசலே ராபர்டுடனும் இப்போது ஆடுகிறார்கள். இந்த புது ஜோடிகளுக்கிடையே கெமிஸ்ட்ரி (?) மலர்கிறது.அப்போது அங்கே வரும் சூனியக்காரி நல்லவள் போல வேடமிட்டு ஜிசலேவை விஷ-ஆப்பிள் ஒன்றைக் கடிக்க வைக்கிறாள். ஜிசலே மயக்கமடைந்து கீழே விழுகிறாள்.
இன்னும் ஒரு நிமிடத்தில் அவள் இறந்து விடுவாள் என்று எல்லாரையும் மிரட்டுகிறாள். இளவரசன் எட்வர்ட் உண்மையான காதலின் முத்தம் (true love 's kiss ) மட்டுமே அவளை காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டு அவளை முத்தமிடுகிறான். ஆனால் இளவரசி கண் திறக்கவில்லை. நொடிகள் நகருகின்றன.இன்னும் பத்து வினாடிகளே இருக்கின்றன.சூனியக்காரி ஏளனமாகச் சிரிக்கிறாள்.எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்க, திடீரென்று ராபர்ட் எழுந்துபோய் அவளை முத்தமிடுகிறான். இளவரசி பிழைக்கிறாள். சூனியக்காரி கடைசியில் அழிகிறாள்.

ஜிசலே ராபர்டை மணந்து கொண்டு நியூயார்க்கிலேயே தங்கி விடுகிறாள். எட்வர்டை மணந்து கொள்ளும் நான்சி கார்ட்டூன் உலகத்துக்கு சென்று அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறாள் ;அலறும் தன் செல்போனை தூக்கி எறிகிறாள்!

-நாம் சில சமயம் இந்த நகர வாழ்க்கையை வெறுத்து கார்டூன் உலகுக்கு சென்று விடமாட்டோமா,பறக்கும் குதிரை ,மான்கள் இழுத்துச் செல்லும் ரதம், பேசும் பூனை,நமக்கு உடை அணிவிக்கும் குருவிகள், மந்திரக்கோல்,தங்க நீர்சீழ்ச்சி,சித்திரக்குள்ளன் இதையெல்லாம் பார்க்க மாட்டோமா என்று ஏங்குகிறோம். ஆனால் கார்டூன் கேரக்டர்கள் நம் உலகிற்கு வந்தால் நம் ரியலிஸ்டிக்- ஆன,இயல்பான வாழ்க்கைமுறையை விரும்பக்கூடும் ,இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்கிறது இந்த திரைப்படம்.

மூன்று
=======
The Evolution :-


ஒரு பெரிய விண்கல் பூமியில் விழுகிறது. உயிரியல் துறை பேராசிரியராக இருக்கும் இராவும் மண்வளத்துறையில் இருக்கும் அவர் நண்பர் ஹாரியும் அந்தப்பாறையை ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள்.அந்தப் பாறையில் இருந்து ஒருவிதமான நீல நிற திரவம் கசிகிறது.அதை தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறார் இரா. அந்த திரவத்தை லாபில் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது அதில் நைட்ரஜனை ஆதாரமாகக் கொண்ட ஒருசெல் உயிரிகள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் .சில மணி நேரங்களிலேயே அவை பலசெல் உயிரிகளாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. இரா, அரசாங்கத்துக்குத் தெரியாமல் தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடரலாம் என்று முடிவெடுக்கிறார்.மீண்டும் பாறையின் ஸ்பெசிமனை எடுக்க பாறை இருந்த இடத்துக்கு செல்லும் போது அதை அரசாங்க அதிகாரிகள் ஆக்கிரமித்து விட்டிருப்பதைப் பார்க்கிறார் இரா.அவரை உள்ளே விட மறுக்கிறார்கள் அதிகாரிகள்.

இதனிடையே பல செல் உயிரினங்கள் இரண்டாகப் பிரிந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. பேராசிரியர் இராவும், ஹாரியும் ஒருநாள் இரவு பாறை இருக்கும் சுரங்கத்துக்கு யாருக்கும் தெரியாமல் செல்கிறார்கள்.அங்கே சென்று பார்க்கும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே பலவகையான மாமிசம் தின்னும் தாவரங்களும், விலங்குகளும் ஏகத்துக்கு வளர்ந்து விட்டிருக்கின்றன.அவை ஒன்றை ஒன்று தின்று உயிர் வாழப் பழகி விட்டிருக்கின்றன. எப்படியோ உயிரினங்கள் சுரங்கத்தை விட்டு வெளியே வந்து மனிதர்களைத் தாக்குகின்றன.

ஒரு பெரிய வெடிகுண்டைப் போட்டு அந்த வேற்றுக்ரக உயிரினங்களை அழிக்க அமெரிக்க ராணுவம் முடிவெடுக்கிறது.இங்கே இராவும் அவரது நண்பர்களும் உயிரினங்களை அழிக்க ரகசிய திட்டம் தீட்டுகிறார்கள். அந்த உயிரினங்கள் நைட்ரஜன் மூலங்களால் ஆனவை என்றும் செலினியம் என்ற தனிமம் மட்டுமே அவற்றை விஷம் போல அழிக்கவல்லது என்றும் இரா கண்டுபிடிக்கிறார்.லாபில் இருந்த உயிரி சாம்பிளின் மீது ஹாரி ஒரு எரிந்த தீக்குச்சியை தற்செயலாக வீச அது ஊதிப் பெருத்து வளர்ந்து விடுகிறது. வெப்பம் அந்த வேற்றுக் கிரக உயிரிகளின் பரிணாம வளர்ச்சிக்கு வெகுவாக துணை புரியும் என்றும் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். ராணுவம் அந்த உயிர்கள் மீது அணுகுண்டு போடுவதை எப்படியாவது தடுக்க
வேண்டும் (இல்லையென்றால் அந்த உயிர்கள் பெருத்து உலகத்தையே அழித்துவிடும்)என்று(ம்) அவர்கள் முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையில் அந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு மனிதக்குரங்கு அளவுக்கு வந்துவிடுகின்றன.

நைட்ரஜன் வளர்சிதை மாற்றத்தை தடுக்கவல்ல செலினியம் அவர்களுக்கு 5000 காலன் தேவைப்படுகிறது.அதை எங்கே திரட்டுவது என்று எல்லாரும் கவலைப்பட, ஒரு மாணவன் அது ஒரு ஷாம்பூவில் வேதிப்பொருளாக இருக்கிறது என்கிறான். இரவோடு இரவாக அவர்கள் ஷாம்பூ பாட்டில்களைப்பிதுக்கி அதை ஒரு வண்டியில் சேகரிக்கிறார்கள். அவர்கள் ஸ்பாட்டுக்கு வரும் முன்னரே ராணுவம் முந்திக் கொண்டு வெடிகுண்டை வீசி விடுகிறது. வெடிகுண்டின் வெப்பத்தின் துணையால் அந்த உயிரினம் பலமைல்கள் தூரத்துக்கு அகன்று பூதாகாரமாக ஊதிப் பெருக்க ஆரம்பிக்கிறது.பேராசிரியர் இராவின் குழு வண்டியில் வேகமாகச் சென்று அந்த உயிரியின் ஆசனவாயில் ஷாம்புவைப் பீச்சுகிறது. உயிரினம் செலினியத்தால் சிதைவடைந்து வெடித்துச் சிதறுகிறது.இதே முறையில் பூமியில் உள்ள வேற்றுக் கிரக உயிரினங்களை அழிக்க முடியும் என்று எல்லாரும் ஆறுதல் அடைகின்றனர்.

சரி.

பரிணாமம் என்பது ஒரு அற்புதமான விஷயம்.இந்தப் படத்தில் வருவது போல ஒரே வாரத்தில் ஈறு பேனாகி பேன் பெருமாளாகும் கதையெல்லாம் உண்மையில் நடக்காது. ஒரு செல் உயிரினத்தில் இருந்து மனுஷப்பயல் வருவதற்கு கிட்டத்தட்ட 20 கோடி வருடங்கள் ஆகி இருக்கிறது. மனிதன் வரவேண்டும் என்றுதான் இயற்கை இத்தனை தவமிருந்து மெனக்கெட்டதாக ஒரு கோஷ்டி சொல்கிறது.இன்னொரு கோஷ்டி அதெல்லாம் இல்லை; தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி கூடிக் கிழப்பருவம் எய்தி மடியும் அற்ப மனிதப்பயலைப் படைக்க இயற்கை மெனக் கெடவில்லை. இயற்கையின் படி எடுப்பதில் ஏற்பட்ட(சிறு) பிழைகளால் வந்த தற்செயல் தான் நாம் என்கிறது.

அதாவது இயற்கை அன்னை தன் சமையல் குறிப்பு புத்தகத்தில் இருந்து விதிமுறை மாறாமல் அளவு மாறாமல் கிரமம் தவறாமல் ingredients ஐச் சேர்த்து சமையல் செய்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் கவனக் குறைவாக ஏதோ ஒன்றை மாற்றிப் போட்டு விட்டாள் என்று வைத்துக் கொள்வோம்.(சீரகத்துக்கு பதில் பெருங்காயம்) அய்யோ தவறு செய்து விட்டோமே என்று பதைபதைத்து அயிட்டத்தை வாயில் வைத்துப் பார்க்கும் போது அது முன்னதை விட இன்னும் சுவையாக இருக்கிறது. அட! இது பரவாயிலையே என்று புதிய ரெசிபியை (யும்) செய்ய ஆரம்பிக்கிறாள் அவள்.இது மாதிரி தான் பரிணாம வளர்ச்சியும். தப்பிப் பிறந்த குழந்தைகள் போல நாமெல்லாம் தப்பில் பிறந்த குழந்தைகள்!

நான்கு
=======

'இந்தியாவில் மட்டும்' என்ற தலைப்பில் வந்திருந்த இ- மெயிலில் எனக்குப் பிடித்த இரண்டு புகைப்படங்கள்.

(ரெண்டாவது படத்தில் உட்கார்ந்திருப்பவர் கண்டிப்பாக மைக்-செட் காரராக இருக்க வேண்டும்)


ஐந்து
=====

வழக்கம் போல ஓஷோ ஜோக்.

ஒரு ஹிப்பி ராணுவத்தில் சேர விரும்பினான். உடற்தகுதி தேர்வுக்கு சென்ற அவனை அதிகாரி 'பாருப்பா நீ தேவைக்கு அதிகமா ஆறு கிலோ வெயிட் இருக்க .அதிக எடையை குறைக்கறக்கு முன்னாடி உன்னை சேர்த்துக்க முடியாது' என்று கறாராக சொல்லி விட்டார்.

ஹிப்பி உடனே ஒரு சலூனுக்கு சென்று கட்டிங் செய்து கொண்டு ஓடி வந்தான். அதிகாரி அவனை மீண்டும் எடை பார்த்ததில் மூன்று கிலோ குறைந்திருந்தான்.

'இதைப்பாருப்பா ரூல்ஸ் ரூல்ஸ் தான், இன்னும் நீ மூணு கிலோ வெயிட் அதிகம் இருக்க, போய் குறைச்சுட்டு வா' என்றார் அதிகாரி.

ஹிப்பி உடனே 'அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை சார், இப்பவே போயி ஒரு பப்ளிக் பாத்ரூம்ல குளிச்சுட்டு ஓடி வந்துர்றேன்' என்றான்.

சமுத்ரா

24 comments:

பூமி said...

மீ த பர்ஸ்ட்... :)

Katz said...
This comment has been removed by the author.
Katz said...

:-)

Jayadev Das said...

\\சூரியன் மேகங்களால் மறைக்கப்பட்டோ பனி மூடியோ மப்பும் மந்தாரமுமாக இருக்கும் போது உங்கள் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சரிவர வேலைசெய்வதில்லை.\\ பெங்களூருக்கும் சென்னைக்குமே நிறைய வித்தியாசம் உள்ளது. அங்கு நன்கு பசிக்கும், சுறுசுறுப்பாக இருக்கும், இருக்கும் வியாதிகள் கூட மட்டுபட்டது போல இருக்கும். பெங்களூருக்கு வந்துவிட்டாலே போதும், சுறுசுறுப்பு போய்விடும், சாப்பிட்டது அப்படியே ஏழு மணி நேரத்துக்கு இருக்கும். இதுவே இப்படி என்றால் மற்றதெல்லாம் எங்கே...?????

Jayadev Das said...

\\பரிணாமம் என்பது ஒரு அற்புதமான விஷயம்.\\ இது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. பரிணாமம் உண்மை என்றால்...... என்ற தலைப்பில் பல பதில் சொல்லமுடியாத கேள்விகளை பலர் கேட்கின்றனர். உதாரணத்திற்கு அதில் ஒன்று, ஏன் இரண்டு இனத்திருக்கு இடைப்பட்ட இனத்தின் Fossil கள் இல்லை என்பதே. உதாணத்திற்கு குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று வைத்துக் கொள்வோம். அது நடக்க இருநூறு கோடி வருடங்களாகிறது என்று வைத்துக் கொள்வோம். இது ஒரே இரவில் நண்டது அல்ல, இந்த இருநூறு கோடி வருடங்களில் சிறிது சிறிதாக மாற்றமடைந்தது. அப்படியானால், குரங்கும் இல்லாத, மனிதனும் இல்லாத ஒரு இனம் இருந்திருக்க வேண்டுமல்லாவா? அதற்க்கான Fossil எங்கே? கிடைக்கும் Fossil கள் எல்லாம் ஒன்று மனிதனாகவோ அல்லது குரங்கினுடையதாகவோதான் இருக்கிறதே தவிர இடைப்பட்ட பரிணாம நிலையில் ஒன்று கூட இல்லை. அப்படியே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று வைத்துக்கொண்டாலும், எல்லா குரங்கும் மனிதனாகவோ வேறோன்றாகவோ மாறியிருக்க வேண்டுமே, ஆனால் குரங்குகளும் இன்னமும் திரிகின்றனவே?

naren said...

நல்ல kaleidoscope!!!!!!

இந்திய ஜனத்தொகைக்கும், சூரியனுக்கும் சம்பந்தமா? சூரியனை இழுத்து மூடுங்கப்பா!

CS. Mohan Kumar said...

//இது அவர்களுடைய பெற்றோர்கள் அதற்கு முந்தைய கோடையில் இணைந்திருக்கவேண்டும் என்பதை
தெளிவாக்குகிறது. //

இல்லீங்கோ. கர்ப்ப காலம் 280 நாட்கள் தான் . பலருக்கு இது குறையவும் செய்கிறது. அநேகமாய் 9 மாதங்கள் தான்! எனவே மார்ச் டு ஜூன் குழந்தை பிறக்கிறதென்றால் கூடியது ஜூலை முதல் அக்டோபருக்குள் இருக்கும் ! இது இந்தியாவில் குளிர் காலம் தானுங்களே ! ஆனா நீங்க சொன்ன தகவல் உலகம் முழுக்க என்கிறது! எனவே தட்ப வெப்பம் மாறலாம் !

Photoes ரசித்தேன்

பால கணேஷ் said...

அந்தக் கடைசிப் படம் அருமை. ’என்சான்டிங்’ கதையைக் கேட்டதுமே படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. கலைடாஸ்கோப் இம்முறையும் ஏமாற்றவில்லை. நன்று.

Aba said...

@Jayadev Das,

//அதற்கான Fossil எங்கே? கிடைக்கும் Fossil கள் எல்லாம் ஒன்று மனிதனாகவோ அல்லது குரங்கினுடையதாகவோதான் இருக்கிறதே தவிர இடைப்பட்ட பரிணாம நிலையில் ஒன்று கூட இல்லை. //

இது பரிணாமத்தை முழுதாகப் புரிந்து கொள்ளாதவர்கள் பரிணாமத்தை எதிர்க்கும் நோக்கோடு மட்டும் கேட்கும் கேள்விகள்.

Missing Links அதிகம் கிடைக்காததற்கு அந்த இடைக்கால உயிரினம் அதிக காலம் நிலையாக இல்லாதது காரணமாக இருக்கலாம். ஆனால் பல Missing links கிடைத்துள்ளன: http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils#Human_evolution அவற்றில் முக்கியமானது, Origin of Species வெளிவந்த இரண்டே வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்-பறவை படிமம்.


//எல்லா குரங்கும் மனிதனாகவோ வேறோன்றாகவோ மாறியிருக்க வேண்டுமே, ஆனால் குரங்குகளும் இன்னமும் திரிகின்றனவே?//

பரிணாமம் என்பது ஒரு உயிரின் தற்காலச் சூழலால் உந்தப்படும் இயற்கைத் தேர்வால் இடம்பெறுகின்றது. அக்கால குரங்கு மூதாதையரின் சூழல், மனிதன் இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டபின் மீண்டும் அவைகளுக்குச் சார்பாக மாறியிருக்கக்கூடும். அல்லது, மனிதன் குரங்கு மூதாதையரைவிட வேறொரு சூழலைத் (உணவு, உறைவிடம்) தெரிவு செய்தமையால் போட்டி குறைந்து, குரங்கு மூதாதையர் பிழைத்திருக்கலாம்.

அத்தோடு, முக்கியமாக, மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றான் எனும் கருத்து ஏற்றுக்கொள்ளப்படாதது. மனிதணும் குரங்கும் ஒரே மூதாதையரிலிருந்து தோன்றினர் என்பதே சரி. (அதாவது குரங்குகள் நமக்கு அப்பா-அம்மா இல்லை, அண்ணன்-தம்பிகளே) அந்த மூதாதையர் இப்போது அழிந்து விட்டன.



கடைசியாக, பரிணாமம் நிகழ்ந்ததா என்பது இன்னும் யாருக்கும் உறுதியாகத் தெரியாது. அதற்காக பரிணாமம் நிகழவில்லை என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், பரிணாமத்தை வைத்து இதுவரை கிடைத்த தரவுகள் எல்லாவற்றையும் விளக்க முடிகிறது. எனவே, இப்போதைக்கு பரிணாமம் சரி என வைத்துக்கொள்கிறார்கள்.

அறிவியலின் எல்லா கொள்கைகளும் இப்படித்தான். 1919 சூரிய கிரகணம் வரை நியூட்டனின் ஈர்ப்பு பற்றிய கொள்கைகள் சரி. அதற்குப்பின் ஐன்ஸ்டீனின் ஈர்ப்புக்கொள்கை சரி. நாளைக்கே இயற்கை ஐன்ஸ்டீன் கொள்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால், நீங்களோ நானோ ஒரு புதிய கொள்கையைக் கொண்டுவரலாம். ஆனால் என்ன, இதுவரை கிடைத்த எல்லாத் தரவுகளையும் நம் கொள்கை விளக்க வேண்டும். அவ்வளவே.

[சமுத்ரா சார் மன்னிக்க வேண்டும். உங்களுடைய ப்ளாக்கில் இப்படி அதிகப்பிரசங்கித்தினமாக பின்னூட்டிக் கொண்டிருப்பதற்கு. :)]

Jayadev Das said...

@ Abarajithan
அழகாக பதிலளித்தமைக்கு நன்றி நண்பரே.
\\அத்தோடு, முக்கியமாக, மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றான் எனும் கருத்து ஏற்றுக்கொள்ளப்படாதது. மனிதணும் குரங்கும் ஒரே மூதாதையரிலிருந்து தோன்றினர் என்பதே சரி. (அதாவது குரங்குகள் நமக்கு அப்பா-அம்மா இல்லை, அண்ணன்-தம்பிகளே).\\ தற்போதைய பரிணாம வாதிகளின் நிலை இதுதான். ஆனாலும், ஒரு உதாரணத்துக்காக எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் "குரங்கிலிருந்து மனிதன் வந்தான்" என்பதை சொன்னேன். அது ஏற்கப் படாதது என்றால் பரவாயில்லை, அதை விடுத்து வேறு எந்த இரண்டு உயிரினத்துக்கும் இடையேயான நிலையில் Fossil ஆதாரங்கள் உள்ளனவா என்று பார்த்தால் ஒன்று கூட இல்லையே? நீங்கள் இருப்பதாக ஆதாரம் கூறுகிறீர்கள், அப்படி ஒன்று இருந்திருந்தால் அது பெரிய Breaking News ஆகி இருக்கும், அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

\\ அந்த மூதாதையர் இப்போது அழிந்து விட்டன. \\ அடுத்த வரியிலேயே
நீங்களே சொல்லி விட்டீர்கள், உங்களுக்கு பதிலும் இதுதான், \\பரிணாமம் நிகழ்ந்ததா என்பது இன்னும் யாருக்கும் உறுதியாகத் தெரியாது\\ எனும் பட்சத்தில் common ancestors என்பதற்கு அர்த்தமேயில்லை.

Jayadev Das said...

\\Missing Links அதிகம் கிடைக்காததற்கு அந்த இடைக்கால உயிரினம் அதிக காலம் நிலையாக இல்லாதது காரணமாக இருக்கலாம். ஆனால் பல Missing links கிடைத்துள்ளன: http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils#Human_evolution அவற்றில் முக்கியமானது, Origin of Species வெளிவந்த இரண்டே வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்-பறவை படிமம்.\\ அங்கே, This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. என்று முதலிலேயே கூறியுள்ளனர், ஏற்கத்தக்க ஆதாரம் அல்ல.

Jayadev Das said...

\\பரிணாமம் என்பது ஒரு உயிரின் தற்காலச் சூழலால் உந்தப்படும் இயற்கைத் தேர்வால் இடம்பெறுகின்றது. அக்கால குரங்கு மூதாதையரின் சூழல், மனிதன் இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டபின் மீண்டும் அவைகளுக்குச் சார்பாக மாறியிருக்கக்கூடும். அல்லது, மனிதன் குரங்கு மூதாதையரைவிட வேறொரு சூழலைத் (உணவு, உறைவிடம்) தெரிவு செய்தமையால் போட்டி குறைந்து, குரங்கு மூதாதையர் பிழைத்திருக்கலாம். \\ பரிணாமம் என்பது தொடர்ந்து நடப்பது என்றல்லவா சொல்கிறார்கள்? அது இல்லாத காலகட்டமே இல்லை என்கிறார்களே? தற்போதும் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம் என்கிறார்களே? அந்த குரங்குகள் வேறேதாவது ஒன்றாக ஆகியிருக்கலாமே? எந்த ஒரு கால கட்டத்திலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்றால் உயிரினங்கள் Transitional stage -ல் தான் இருந்துகொண்டேயிருக்கின்றன என்று அர்த்தம், அதெப்படி எல்லா Fossil களும் முழு வளர்ச்சி பெற்ற உயிரினத்துடையதாகவே இருக்கிறது?

Jayadev Das said...

\\கடைசியாக, பரிணாமம் நிகழ்ந்ததா என்பது இன்னும் யாருக்கும் உறுதியாகத் தெரியாது. அதற்காக பரிணாமம் நிகழவில்லை என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், பரிணாமத்தை வைத்து இதுவரை கிடைத்த தரவுகள் எல்லாவற்றையும் விளக்க முடிகிறது. எனவே, இப்போதைக்கு பரிணாமம் சரி என வைத்துக்கொள்கிறார்கள். அறிவியலின் எல்லா கொள்கைகளும் இப்படித்தான். 1919 சூரிய கிரகணம் வரை நியூட்டனின் ஈர்ப்பு பற்றிய கொள்கைகள் சரி. அதற்குப்பின் ஐன்ஸ்டீனின் ஈர்ப்புக்கொள்கை சரி. நாளைக்கே இயற்கை ஐன்ஸ்டீன் கொள்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால், நீங்களோ நானோ ஒரு புதிய கொள்கையைக் கொண்டுவரலாம். ஆனால் என்ன, இதுவரை கிடைத்த எல்லாத் தரவுகளையும் நம் கொள்கை விளக்க வேண்டும். அவ்வளவே.\\ இந்த மாதிரியான தவறான கருத்து புரளியாக எல்லா இடங்களிலும் உலவி வருகிறது. விஞ்ஞானம் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டுல்லாதா என்றால் கொள்ளவில்லை என்பதே பதில். நியூட்டன் விதி மாதிரியோ, ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை மாதிரியோ பரிணாமக் கொள்கை என்பது அறிவியல் ரீதியாக சோதனைகளை வென்று நிறுவப் பட்ட ஒரு Theory இல்லை. அது வெறும் postulate என்ற அளவிலேயே இருக்கிறது, சிலர் இதற்க்கு ஆதரவாக இருக்கிறார்கள், சிலர் எதிர்க்கிறார்கள், அது அவர்களது சொந்த விருப்பு வெறுப்பு, அதற்கும் அறிவியலுக்கும் சம்பந்தமில்லை.

Jayadev Das said...

முடிந்தால் Forbidden Archelogy என்ற புத்தகத்தை தரவிறக்கி வாசிக்கவும் .

http://www.4shared.com/document/qp99lVeX/Forbidden_Archeology.html

Videos on this subject:

http://www.youtube.com/watch?v=wKQ06Fyz6DU&feature=related
http://www.youtube.com/watch?v=QiwnkHp90mc

சமுத்ரா said...

//உங்களுடைய ப்ளாக்கில் இப்படி அதிகப்பிரசங்கித்தினமாக பின்னூட்டிக் கொண்டிருப்பதற்கு//என்னுடைய ப்ளாக்கா? பாஸ்வர்ட் மட்டும் தான்
என்னுடையது..மற்றபடி இது உங்களுடைய ப்ளாக்!

Aba said...

@Jayadev Das,

எனது துறை உயிரியல் அல்ல. எனது curiosity-ஐ தணிக்கும் ஒரு முயற்சியாகத்தான் உயிரியல் பற்றி கொஞ்சம் படித்து விவாதிக்கிறேன். எனது கருத்துக்களில் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன். Missing Links பற்றி எனக்குச் சரியான புரிதல் இல்லை. விக்கியிலும் வேறு வெப்சைட்களிலும் பார்த்ததைத்தான் இங்கு முன்வைக்கிறேன்.

//பரிணாமம் என்பது தொடர்ந்து நடப்பது என்றல்லவா சொல்கிறார்கள்? அது இல்லாத காலகட்டமே இல்லை என்கிறார்களே? தற்போதும் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம் என்கிறார்களே? அந்த குரங்குகள் வேறேதாவது ஒன்றாக ஆகியிருக்கலாமே?//

பரிணாமம் முழுமையாக நிகழ்வதற்கு மிக அதிக காலம் எடுக்கும் எனும் காரணத்தினாலேயே மிக அதிக காலத்தில் பரிணாமம் நிச்சயம் நிகழும் எனச் சொல்ல முடியாது. மனிதர்கள் தொடர்ந்து மாற்றமடைந்து சில மில்லியன் ஆண்டுகளுக்குமுன்தான் முழுமையான மனிதர்களாக வந்திருக்கிறார்கள். ஆனால், கரப்பான்பூச்சி போன்ற உயிரினங்கள் பலநூறு மில்லியன் வருடங்களாக அப்படியே இருக்கின்றன. இதற்கு கரப்பான்பூச்சி பரிணமித்த போது பெற்ற தற்செயல் இணக்கப்பாடுகள் மிகத் தற்செயலாக பலநூறு மில்லியன் வருடங்களாக அது எதிர்நோக்கக்கூடிய சூழல் இடர்ப்பாடுகளை வெற்றிகொள்ளும் வகையில் அதிர்ஷடகரமாக அமைந்திருந்ததே காரணம். அல்லது அதிஷ்டவசமாக பலநூறு மில்லியன் ஆண்டுகளில் வந்த இடர்ப்பாடுகள் எதுவும் கரப்பன்பூச்சியின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை எனவும் கொள்ளலாம்.

அதுபோல, Variations தொடர்ந்து நடந்துகொண்டிருந்தாலும் இயற்கைத்தேர்வை உந்தக்கூடிய சூழல் பிரச்சனைகளை குரங்கினம் இதுவரை சந்திக்காமல் இருக்கலாம். விளைவாக Variationகள் minor scaleகளிலேயே நின்றுவிடுவதால், பாரிய பரிணாமம் நிகழாமல் இருக்கலாம்.

Jayadev Das said...

\\அறிவியலின் எல்லா கொள்கைகளும் இப்படித்தான். 1919 சூரிய கிரகணம் வரை நியூட்டனின் ஈர்ப்பு பற்றிய கொள்கைகள் சரி. அதற்குப்பின் ஐன்ஸ்டீனின் ஈர்ப்புக்கொள்கை சரி. நாளைக்கே இயற்கை ஐன்ஸ்டீன் கொள்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால், நீங்களோ நானோ ஒரு புதிய கொள்கையைக் கொண்டுவரலாம். ஆனால் என்ன, இதுவரை கிடைத்த எல்லாத் தரவுகளையும் நம் கொள்கை விளக்க வேண்டும். அவ்வளவே.\\ அறிவியலால் ஏற்கப் பட்ட theory -களுக்கே எந்த நேரமும் தூக்கியெறியப்படலாம் என்ற நிலை என்றால் \\கடைசியாக, பரிணாமம் நிகழ்ந்ததா என்பது இன்னும் யாருக்கும் உறுதியாகத் தெரியாது.\\ என்ற உறுதியற்ற நிலையில் உள்ள ஒரு theory -யைப் பற்றி என்ன சொல்வது?

\\அதற்காக பரிணாமம் நிகழவில்லை என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை.\\ நீங்கள் ஒரு கொள்கையை முன்வைக்கிறீர்கள் என்றால், அது உண்மை என்று நிரூபிப்பது உங்களுடைய முழு பொறுப்பு, அதை விடுத்து, "இதை பொய் என்று நீ நிரூபி, முடியாவிட்டால் சரி என்றுஏற்றுக் கொள்" என்று சொல்ல முடியாது. ஆயிரம் சோதனை முடிவுகள் ஒரு கொள்கையின் Predictions படியே வந்தாலும் அது அந்தக் கொள்கையை நிரூபிப்பதாக அர்த்தமாகாது, ஆனால், ஒரே ஒரு பரிசோதனையின் முடிவு அந்தக் கொள்கைக்கு எதிராக வந்தாலும் அது அந்தக் கொள்கையை தவறு என்று நிரூபிப்பதற்கான ஆதாரமாகும் என்று ஐன்ஸ்டீன் கூறுகிறார்.

டார்வின் பல ஆதாரங்களை சரியாக திரட்டியிருக்கிறார், ஆன போதிலும் அவற்றை அவர் interpret செய்த விதத்தில் தவறு செய்திருக்கிறார். ஒரு செல் உயிரிலிருந்து மனிதன் வரை உயிர்கள் பரிணாமம் அடைந்துள்ளதாக டார்வின் கொள்கை கூறுகிறது, இத்தனை Links இருந்தும், மில்லியன் கணக்கான ஆண்டுகளின் Fossil கள் இருந்த போதிலும் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாறும் நிலையிலுள்ள Fossil கள் ஒன்று கூடவா இல்லை என்பதே கேள்வி. இதற்க்கு பதிலாக, சமீபத்தில் அவ்வாறு, குரங்குக்கும், மனிதனுக்கும் இடையேயான ஒரு இனம் என்று ஒரு Fossil ஐ ஒருத்தர் சமர்ப்பித்தார். பின்னர்தான் தெரிந்தது, மனிதனின் மடையோட்டையும், குரங்க்கின் இரண்டு பற்களையும் வைத்து அவராக தாயாரித்த போலி ஆதாரம் அது என்று. இது மட்டுமல்ல, பரிணாமத்திற்கு எதிராக பதிலில்லாத பல்வேறு கேள்விகள்இன்னமும் உள்ளன. அறிவியலால் ஏற்றுக் கொள்ளப் படாத ஒரு கொள்கையைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை என்பதால் அவற்றை இங்கே குறிப்பிட வில்ல. நன்றி, நண்பரே.

Aba said...

//ஆனால், ஒரே ஒரு பரிசோதனையின் முடிவு அந்தக் கொள்கைக்கு எதிராக வந்தாலும் அது அந்தக் கொள்கையை தவறு என்று நிரூபிப்பதற்கான ஆதாரமாகும்//

உண்மைதான். பரிணாமத்தை ஆதரிக்க missing links இல்லையே தவிர, அதனை எதிர்க்கும் பிற கொள்கைகளுக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. எனவேதான், பரிணாமம் பலரால் ஏற்கப்படுகின்றது.

//டார்வின் பல ஆதாரங்களை சரியாக திரட்டியிருக்கிறார், ஆன போதிலும் அவற்றை அவர் interpret செய்த விதத்தில் தவறு செய்திருக்கிறார்.//

டார்வினின் கொள்கைதான் பரிணாமம் என்பது முழுதும் சரியல்ல. அவரது சில கருத்துக்கள் தவறானவை. அல்லது விளக்கப்படாதவை. அவருடைய கொள்கையை மேலும் மெருகூட்டியே தற்போதைய பரிணாமக் கொள்கை முன்வைக்கப்படுகின்றது. உதாரணமாக, டார்வினின் இனவாதம் தற்காலத்தில் ஏற்கப்படுவதில்லை.

//மனிதனின் மடையோட்டையும், குரங்க்கின் இரண்டு பற்களையும் வைத்து அவராக தாயாரித்த போலி ஆதாரம் அது என்று.//

நானும் படித்தேன். வெறும் புகழுக்காகவோ பணத்திற்காகவோ அவர் இதனைச் செய்திருக்கலாம். மதத்தலைவர்கள் தங்கள் மதத்தை வலுப்படுத்த போலி ஆதாரங்கள் காட்டுவதில்லையா?

// அறிவியலால் ஏற்றுக் கொள்ளப் படாத ஒரு கொள்கையை//

ஆனால் இக்கொள்கை அறிவியலால் நிராகரிக்கப்படவும் இல்லையே?

//இது மட்டுமல்ல, பரிணாமத்திற்கு எதிராக பதிலில்லாத பல்வேறு கேள்விகள் இன்னமும் உள்ளன//

கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டுபிடிக்கிறார்கள். பொறுத்திருப்போம். அவ்வாறு பரிணாமம் நிராகரிக்கப்பட்டு புதுக் கொள்கையொன்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அறிவியல் மாணவன் என்ற அடிப்படையில் நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.


அத்தோடு, உயிரின் தோற்றம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை அறியாமல் விவாதிப்பது சிறிது அசௌகரியமாக உள்ளது. நீங்கள் படைப்புக் கொள்கையை அல்லது வேறொரு கொள்கையை நம்புபவரானால் தயவுசெய்து உங்கள் நிலைப்பாட்டையும் முன்வையுங்கள்.

Aba said...

@Jayadev Das,

உங்களுடைய பல கேள்விகளுக்கு நேரம் காரணமாக பதிலளிக்க முடியவில்லை. இன்னும் இருபது நாட்களில் எழுதவேண்டிய ஒரு முக்கியமான பொதுப்பரீட்சைக்காக படித்துக்கொண்டிருக்கிறேன். கடந்தசில நாட்களாக முன்னோடிப்பரீட்சை ஒன்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். பொதுப்பரீட்சை முடிந்ததும், இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் வந்து பதிலளிக்க முயற்சிக்கிறேன். இன்னொன்று, உங்களை என்று விளிப்பது எனத் தெரியவில்லை. நீங்கள் என்னை அழைப்பதுபோல நண்பரே என்று அழைக்க எனது சிறுவயது தடையாக இருக்கிறது. எனது தொனியிலோ கருத்துக்களிலோ மரியாதை மீறல் தென்பட்டால் தயவுசெய்து மன்னித்துத்துவிடுங்கள்.

நன்றி

Aba said...
This comment has been removed by the author.
Aba said...

@சமுத்ரா சார்,

மேலே சொன்ன காரணத்தால்தான் உங்கள் பதிவுகளை அடிக்கடி படிக்க முடியவில்லை. ரீடரிலிருந்தும் எல்லாருடைய ப்ளாக்குகளையும் தற்காலிகமாக நீக்கியிருக்கிறேன். பொதுப்பரீட்சை முடிந்ததும் மீண்டும் வருகிறேன்.

நீங்களும் எனது பதில்களில் தொனிக்கும் அதிகப்பிரசங்கித்தனத்தையும் முட்டாள்தனத்தையும், மரியாதை மீறல்களையும் தயவுசெய்து பெருந்தன்மையோடு சுட்டிக்காட்டிவிட்டு மன்னித்துவிடுங்கள். பத்மஹரி சார் உள்ளிட்ட சிலர் இவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். (ஹரி சார் ஒரு கட்டத்துக்குமேல் பொறுமையிழந்து இனிமேல் பொறுக்க மாட்டேன் எனக் கத்தியது வேறு விஷயம்) இவற்றிற்கு வயதும், அனுபவமின்மையுமே காரணம் என்றாலும் நிச்சயம் இயன்றவரை திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நன்றி

Jayadev Das said...

\\ பரிணாமத்தை ஆதரிக்க missing links இல்லையே தவிர, அதனை எதிர்க்கும் பிற கொள்கைகளுக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. எனவேதான், பரிணாமம் பலரால் ஏற்கப்படுகின்றது.\\ ஆனால், அறிவியல் அதை ஏற்கவில்லை, அதுதான் முக்கியம்.

\\நானும் படித்தேன். வெறும் புகழுக்காகவோ பணத்திற்காகவோ அவர் இதனைச் செய்திருக்கலாம். மதத்தலைவர்கள் தங்கள் மதத்தை வலுப்படுத்த போலி ஆதாரங்கள் காட்டுவதில்லையா? \\ மதத் தலைவர்களை இவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?

\\ஆனால் இக்கொள்கை அறிவியலால் நிராகரிக்கப்படவும் இல்லையே? \\ இதற்க்கு முன்னரே சொல்லிவிட்டேன், கொள்கை [Theory] நிரூபிக்கப் பட வேண்டுமேயன்றி, நிராகரிக்கப் படவில்லை என்பதை வைத்து, அதை ஏற்றுக் கொள்ளலாம் என ஆகாது.

\\கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டுபிடிக்கிறார்கள். பொறுத்திருப்போம். அவ்வாறு பரிணாமம் நிராகரிக்கப்பட்டு புதுக் கொள்கையொன்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அறிவியல் மாணவன் என்ற அடிப்படையில் நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.\\ எப்படியாவது, இதை நிரூபித்து விட மாட்டார்களா என்ற ஏக்கம் உங்கள் கண்களில் தெரிகிறது!!

\\அத்தோடு, உயிரின் தோற்றம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை அறியாமல் விவாதிப்பது சிறிது அசௌகரியமாக உள்ளது. நீங்கள் படைப்புக் கொள்கையை அல்லது வேறொரு கொள்கையை நம்புபவரானால் தயவுசெய்து உங்கள் நிலைப்பாட்டையும் முன்வையுங்கள். \\ இது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது என்பதே முக்கியம். நான் ஏதாவது சொன்னால் அது எனது சொந்தக் கருத்தே தவிர அறிவியல் அல்ல. இங்கே அறிவியலைப் பேசுவோம், சொந்த விருப்பு வெறுப்புகளை அல்ல. இன்றைய தேதியில் பரிணாமக் கொள்கையை அறிவியல் ஏற்றுக் கொள்ள வில்லை, நானும் ஏற்றுக் கொள்ளவில்லை, இதுதான் என் நிலைப்பாடு.

Jayadev Das said...

\\ஹரி சார் ஒரு கட்டத்துக்குமேல் பொறுமையிழந்து இனிமேல் பொறுக்க மாட்டேன் எனக் கத்தியது வேறு விஷயம்.\\ \\ஹரி சார் ஒரு கட்டத்துக்குமேல் பொறுமையிழந்து இனிமேல் பொறுக்க மாட்டேன் எனக் கத்தியது வேறு விஷயம்.\\ அவர் Ph.D., பண்றவர் [இப்போ முடிச்சிட்டார்], அந்த மாதிரி இருப்பவர்களிடம், ஓரிரு தடவைகளுக்கு மேல் சந்தேகம், கேள்விகள் கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்துவிடும். நானும் இதை அனுபவித்திருக்கிறேன்!! நான் இருவருமே அந்த விதத்தில் ஒரே இனம், உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்,மேலும் , என்னை நீங்கள் ஜெயதேவ் என்றே அழைக்கலாம்!!

Jayadev Das said...

மற்றவர்கள் மனம் புண் படும்படி பேசி விடுவோமோ என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் உங்கள் பண்பு அபாரம் அபராஜிதன்!! தாங்கள் வசிப்பது எந்த நாட்டில் என்று சொல்ல முடியுமா? தேர்வில் செமையாக எழுதி வெற்றி பெற எனது "Best of Luck".