இந்த வலையில் தேடவும்

Tuesday, November 19, 2013

கலைடாஸ்கோப் -102

கலைடாஸ்கோப் -102 உங்களை வரவேற்கிறது.

பெங்களூருவில் நவம்பர் மாதத்திலும் வெயில் கொளுத்துகிறது. மழையும் கிடையாது!வியர்க்கிறது !! என்ன தான் காரணம்.செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி சாமிக் குத்தம் ஏதேனும் செய்து விட்டோமா?

Global warming என்பதே கட்டுக்கதை என்று ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டிருக்கிறது. பூமியின் வெப்பநிலை எப்போதும் இப்படி அப்படி அல்லாடிக் கொண்டே வந்துள்ளது;Global temperature என்பது ஒரு சிக்கலான விஷயம் என்றும் அதை ஒரு குறுகிய கால அளவில் அளவிட்டு வெப்பம் அதிகரித்து விட்டது என்றும் சொல்வது சரியல்ல என்கிறார்கள்.

GW என்றால் இதுதான் சுருக்கமாக: நம் பூமி சூரியனிடமிருந்து தனக்கு வரும் வெப்பத்தை அப்படியே உள் வாங்கிக் கொள்ளாமல் ஒரு கணிசமான அளவை திரும்ப வெளிக்கு அனுப்பி விடுகிறது. இந்த வெப்பத்தை விடாப்பிடியாக சில வாயுக்கள் விட்டேனா பார் என்று கிரகித்துக் கொண்டு மீண்டும் பூமிக்குத் திரும்ப அனுப்புகின்றன. இப்படித் திரும்ப அனுப்பாவிட்டால் பூமி ரொம்பவும் குளிராக இருக்கும். நேரடியான சூரிய வெப்பத்தை விட இந்த திருப்பி அனுப்பப்பட்டு u turn அடித்து வரும்  அகச்சிவப்பு (கட்புலனாகாத) கதிரியக்கம் பூமியின் வெப்ப நிலையில் கணிசமான பங்கு வகிக்கிறது. நாம் தொழில் வளர்ச்சி, industrial revolution அது இது என்று ஏதோதோ செய்து வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை சகட்டு மேனிக்கு கொட்டிக் கொண்டிருக்கிறோம்.

anyway 

சில பேர், பூமி இன்னொரு ice age (பூமி முழுவதும் பனி) நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள். பூமி குளிர்ந்து கொண்டிருக்க வேண்டும். இந்த extra green house விளைவு மற்றும் வெப்பமானது பூமி குளிர்ந்து போகாமல் வைத்துக் கொள்ள வேண்டுமானால் உதவலாம்  என்கிறார்கள். அதாவது நாம் இப்போது ஒரு பள்ளத் தாக்கில் உருண்டு விழுந்து கொண்டிருக்கிறோம். வெப்பம் அதிகரித்து விட்டது என்று சொல்வது பள்ளத்தில் அவ்வப்போது தோன்றும் சின்னச் சின்ன மேடுகள்.மேலும் உல்டா விளைவாக , பூமியின் வெப்பம் அதிகரித்தால் அது ice age வருவதற்கு உதவி செய்யுமாம். அதிக வெப்பம் என்றால் அதிக ஆவியாதல். அதிக ஆவியாதல் என்றால் அதிக மேகங்கள். (மிகக் கடுமையான வெயிலுக்குப் பிறகு அதிக மழை வருவது போல!)அதிக மேகம் என்றால் அதிகப்  பனிப்பொழிவு. (மழை என்பதும் பனி தான். வரும் போது உருகி விடுகிறது!)அப்படி ஒரு ice age வந்தால் அது அடுத்த 10000 வருடங்களுக்கு நீடிக்குமாம். ஜாலி தான்! பூமியில் மனிதன் நடக்கத் தொடங்கிய போது ஒரு நீண்ட ice age ஐ எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எப்படியோ தப்பித்தோம். இன்னொரு ice age இல் 700 கோடி மக்கள் பிழைக்க முடியாது என்கிறார்கள். ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டே முக்கால்வாசி மனித இனம் அழிந்து விடும்.ice age இல் நம் சென்னை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் போலிருக்கிறது !


*******




சுட்டி டி .வி யில் தினமும் இரவு 9 மணிக்கு Penguins of Madagascar வருகிறது.  பாருங்கள். ஜூ -வில் நான்கு பென்குவின்கள் செம ரகளை பண்ணுகின்றன. பார்ப்பவர்களை மீண்டும் சிறுவர்களாக மாற்றி விடுகிறது இந்த அனிமேஷன்  தொடர். அதிலும் ஜூலியன் என்ற வாயாடி லெமூர் தன்னை ஜூவின் ராஜா என்று சொல்லிக் கொன்று அடிக்கும் கூத்துகள் அதகளம்.அது தன்னுடன் எப்போதும் இரண்டு அல்லக்கை -களை வைத்துக் கொண்டு அடிக்கடி வடிவேலு வசனங்கள் பேசி கூத்தடிக்கிறது.

ஜூ -வுக்குப் போவது என்பது (எனக்கு)கொஞ்சம் சலிப்பான விஷயம். பெங்களூருவில் பன்னேருகட்டா ஜூ -வுக்குக் கண்டிப்பாகப் போகாதீர்கள். அங்கே ஒன்றுமே இல்லை.வேஸ்ட்.சபாரி அது இது என்று பணம் பிடுங்குகிறார்கள்! மைசூர் ஜூ ஓரளவு நன்றாக இருக்கிறது. ஒட்டகச் சிவிங்கி ஒன்று தான் என்னைக் கவர்ந்தது. என்ன ஒரு கம்பீரம்! 'சத்தம் போடாதீர்கள்' என்று அங்கங்கே எழுதிப் போட்டிருந்தாலும் வாண்டுகள் பயங்கரமாக  சத்தம் போடுகின்றன.பெரும்பாலான கூண்டுகளில் சம்பந்தப்பட்ட பறவை/ மிருகம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. எவன் பார்த்தால்  என்ன never mind  என்று ஏதோ ஒரு மூலையில் குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டுள்ளன. குரங்கு ஒன்று மட்டும் தான் active ஆக எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறது. சில முதலைகள் உண்மையில் இது சிலை தான் என்று முடிவுக்கு வரும் அளவுக்கு அசையாமல் போஸ் கொடுக்கின்றன. கூச்சலுக்கு மத்தியிலும் கம்பிகளுக்கு இடையேயும் எதையும் ரசிக்க முடிவதில்லை. மைசூர் ஜூவை ஓரளவு நன்றாகவே maintain செய்கிறார்கள். வானம் முழுவதையும் சொந்தம் கொண்டாட வல்ல பறவைகளை அடைத்து வைத்திருப்பது மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், சில மிருகங்கள் காட்டில் இருப்பதை விட இங்கே சந்தோஷமாக இருக்கின்றன என்று தோன்றுகிறது. வேளாவேளைக்கு சாப்பாடு கிடைத்து விடுவதால். 'நமக்கு உரிய எல்லை' இதுதான் என்று ஒரு வழியாக compromise செய்து கொண்டு அதற்குள்ளேயே சந்தோஷமாக வாழப் பழகிக் கொள்கின்றன. சொல்லப் போனால் நாமெல்லாரும் அப்படித் தான். ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லையை வரைந்து கொண்டு அதற்குள்ளாக வாழப் பழகிக் கொள்கிறோம் .

ஜூவில் ஒரு டைனோசர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
பில் ப்ரைஸன்  ஒன்று சொல்கிறார். " We must be living in a very boring age of Universe and solar system. No super novae , no asteroid impact, no ice age, no dinosaurs, all are either in distance past or in distance future!"

மைசூரில் wax museum ஒன்றும் இருக்கிறது. போய்ப் பாருங்கள்.

****************
ராக ரஞ்சனி

இந்த ராக ரஞ்சனி எபிஸோடில் நாம் பார்க்க இருக்கும் ராகம். நாட்டைக் குறிஞ்சி.

கோயிலுக்குப் போகிறோம். சாமியை நன்றாகத் தான் பார்க்கிறோம். ஆனாலும் கடவுளை as it as பார்க்க முடியாமல் ஒரு மாடு இடையே எப்போதும் மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை நம் ஈகோ, ஆணவம் என்று சொல்லலாம். மாயை என்றும் சொல்லலாம். நம்மில் சில பேர் நந்தியின் காதுகளுக்கு இடையே கடவுளை தரிசிக்கக் கூட கற்றுக் கொண்டு விட்டோம்.நந்தனார் என்னும் திருநாளைப்போவார் இந்த நந்தியுடன் compromise செய்து கொள்ள முயலவில்லை என்று தோன்றுகிறது.

எந்த விதத் தடையும் இடையில் இருக்காமல் அப்படியே கடவுளைப் பார்ப்பது தான் உண்மையான தரிசனம் என்கிறார் போலும் நந்தனார்.

வழி மறைத்திருக்குதே மலை போல் ஒரு
மாடு படுத்திருக்குதே




ராகம் நாட்டைக் குறிஞ்சி..ரஞ்சனி காயத்ரி பாடுவதைக் கீழே கேட்கலாம்.



நந்தனார் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தாழ்ந்த ஜாதிக்காரர்.சிதம்பரம் போய் ஈசனை தரிசிக்க ஆசைப்படுகிறார். அவரது எஜமானரோ மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா என்கிறார்.இவரோ சிதம்பரம் நாளை போவேன் நாளை போவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.மீதிக்கதை இங்கே டி .எஸ்.பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் :-



நாட்டைக் குறிஞ்சியில் மிகவும் பிரபலமான திரையிசைப் பாடல் ஒன்று.

வான்மழை விழும் போது மலை கொண்டு காத்தாய் -என் 
கண்மழை விழும் போது எதில் என்னைக் காப்பாய் 

கண்ணன் கறுப்பு என்பதை நயமாக சுட்டிக் காட்டுகிறாள் (ர் )

பாற்கடலில் ஆடிய பின்னும் -உன் 
வண்ணம் மாறவில்லை இன்னும் 
என் நெஞ்சில் கூடியே உன் நிறம் மாறவா 








இந்த ராகத்தைப் பற்றிய விரிவான அலசல் ஆங்கிலத்தில்:


குறிஞ்சி முதல் பாலை வரை ஐந்து நிலங்களை தமிழ்  இலக்கியம் சொல்கிறது.

குறிஞ்சி -மலை 
முல்லை - காடு 
மருதம் - வயல் 
நெய்தல் - கடல் 
பாலை- பாலைவனம் 

சில பேருக்கு குறிஞ்சி romantic ஆக தெரியலாம். முருகன் , ரெண்டு பெண்டாட்டி,hill station , கூடலும் கூடல் நிமித்தமும்! :)

ஆனால்  எனக்கு மிகவும் romantic -ஆகத் தெரிவது இந்த 'முல்லை' தான்.

playboy ஆன கண்ணன் திணைக் கடவுள்.
முல்லைப்பண் (மோகனம்) பாடல் 
முல்லை மலர் 
மான் முயல் 
மாடு மேய்த்தல் 

எல்லாவற்றுக்கும் highlight ஆக romantic ஆன கார்காலம் !!

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்! காதலன் வருவதற்காக காத்திருத்தல்!
காத்திருத்தலே ஒரு சுகம் தானே!

முல்லைத் திணைக்கான ஒரு பாடல். குறுந்தொகையில் இருந்து.

பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்ற நோக்கி மாலை
மடக்கட் குழவி யணவந் தன்ன
நோயே மாகுத லறிந்தும்
சேயர் தோழி சேய்நாட் டோரே



மேயப்போன பசுக்கள் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கன்றுகள் போல தொலைவில் பொருள் தேடப் போனவரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பசுக்கள் மாலை ஆனதும் சமர்த்தாக வீடு திரும்பிவிடும். அவர் இன்னும் வரவில்லையே!

வீடு திரும்புதல் ஒரு சுகம் தான்.சுகம் தான். ஒரு ஜென் ஹைக்கூ 

-பயணம்  கடினமாய்த் தான் 
இருக்கிறது.
அனாலும் 
வீடு திரும்பலின் 
சுகம்!



****

Negative Energy பற்றிப் பேசுகிறது Pizza -II தி வில்லா .

பில்லி, சூனியம், தகடு புதைத்தல் , மந்திரித்தல் எல்லாம் அறிவியல் பூர்வமாக உண்மைதான் என்கிறது இந்தப் படம்.டி -ப்ராக்லி  என்ற விஞ்ஞானி சொல்வது போல எல்லாமே அலைகள் தான் ;மனம் என்பதும் அலைகள் தான் என்று எடுத்துக் கொண்டால் இது ஓரளவு உண்மை.

இயற்பியல் பொதுவாக ஆற்றலை பாஸிடிவ் , நெகடிவ் என்று பிரிப்பதில்லை. எலக்ட்ரான் பாசிடிவ் , ப்ரோடான் நெகடிவ் என்று சொல்வதெல்லாம் ஒரு convenience -க்கு தான்.நிறை (mass ) பாசிடிவ் ஆக இருப்பதாலும் பெரும்பாலான energy சமன்பாடுகள் quadratic ஆக இருப்பதாலும் (உதாரணம் E =m C 2, E =1/2 m V 2) விடை negative இல் வர வாய்ப்பு இல்லை.

ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியலில் நெகடிவ் எனர்ஜி யை நம்புகிறார். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆற்றல் ஜீரோவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். பிரபஞ்சத்தின் ஆற்றலை ஈர்ப்பு ஒரு negative energy யாக இருந்து balance செய்கிறது என்கிறார். btw , gravity படம் பார்த்தீர்களா? எல்லாரும் ஆஹா ஓஹோ என்கிறார்கள். எனக்கென்னவோ சுமாராகத் தான் தோன்றியது.!

இப்போது ஒரு கவிதை!

I hate gravity
for it pulls me down
for it makes me
jealous of birds
for it makes me
earth bound

I hate gravity
for it makes me fall
for it makes me crawl
for it brings me
again where I started

I hate gravity
for it makes me heavy
for it denies me stars
for it makes my 
antiques break 

 but I love gravity-yes
for it gave me a beautiful moon!

ஓஷோ ஜோக் 


ஒரு சேல்ஸ்மேன் ஆபீஸ் ஒன்றுக்கு சென்றான். அங்கே யாரும் இல்லை. ஒரே ஒரு பூனை மட்டும் பைல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அப்போது அந்தப் பூனை அவனைப் பார்த்து ' ஆச்சரியப்படாதப்பா , இந்த ஆபீஸில் ஒழுங்கா வேலை செய்யறது நான் ஒருத்தி தான் ' என்றது.

இப்போது சேல்ஸ்மேன் இன்னும் ஆச்சரியப்பட்டு ' அய்யோ பூனை பேசுதே, என்ன அதிசயம், என்ன ஒரு அதிசயப் பூனையை வச்சிருக்கார் இந்த ஆபீஸ் மேனேஜர் ' என்றான்.

பூனை இப்போது 'தயவு செய்து நான் பேசும் விஷயத்தை அவர் கிட்ட  சொல்லி விடாதப்பா ...அப்பறம் அவர் போன் கால் எல்லாம் நான் தான் அட்டன்ட் பண்ண வேண்டி இருக்கும்' என்றது.

சமுத்ரா ....

Sunday, October 20, 2013

கலைடாஸ்கோப் -101

கலைடாஸ்கோப் -101 உங்களை வரவேற்கிறது.

 சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நரி சொன்னதாக நாமெல்லாம் படித்திருப்போம்.இதை ஆங்கிலத்தில் ஸ்டைலாக Cognitive dissonance என்கிறார்கள்.நம்மால் முடியாவிட்டால் சூழ்நிலை மீதோ அடுத்தவர் மீதோ கிரகங்கள் மீதோ பழிபோட்டு விடுவது! ஆக்ஸிடென்ட் ஆகி விட்டால் நான் நேராகத்தான் போனேன். அடுத்தவன் தான் என் மீது வந்து மோதி விட்டான் என்று சொல்வது.பிசினஸ் சரியாக நடக்கவில்லை என்றால் கேது விரய ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இப்படித் தான் இருக்கும் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வது. உப்புமா சரியாக செய்ய வரவில்லை என்றால் இந்த தரம் அண்ணாச்சிக் கடை ரவை ரொம்ப மோசம் என்று சொல்லி விடுவது! ஏதேனும் தவறு நடந்து விட்டால் அதற்கு நாம் 100% பொறுப்பேற்பதே இல்லை என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம், சரி இப்படியெல்லாம் நடக்கனும்னு விதி! நீயா பண்ணலை , ஏதோ கிரகம் ஆட்டி வைக்குது போ! என்று சமாதானம் சொல்லிக் கொள்வது.

பொருட்களை மட்டும் அல்ல..மனிதர்களையும் சில சமயம் இப்படித்தான் இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுக்கி விடுகிறோம்.!!!காதல் தோற்றுப் போய் விட்டால், 'பொண்ணா அவ, ராட்சஸி ' என்கிறோம்! 

****************

கவிதையில் சொல்லப்பட்ட வரிகளை விட்ட சொல்லப்படாத வரிகள் அதிகம் இருக்க வேண்டும் என்கிறார் சுஜாதா.

உதாரணமாக:

ஒன்றையொன்று தொடாதவாறு
அருகருகே நடப்பட்டிருக்கின்றன
இரண்டு வேல்கள்.
ஒன்று சக்தி மற்றொன்று சிவம்.
இரண்டின் நிழல்களும் 
ஒன்றன்மீது ஒன்றாகக்கிடக்கின்றன 
தரையில் சூரியன் சரியசரிய.
திடீரென நீண்டுகொண்டே போகிறாள் சக்தி
துரத்திக்கொண்டே போய் 
சிவம்மூச்சிரைத்துக்கொண்டிருக்க
அந்தி வருகிறது
இருளில் மறைகிறார்கள் இருவரும்.- 

இளங்கோ கிருஷ்ணன் 

இதில் சொல்லப்படாத வரிகள் என்ன என்று யோசித்துப் பாருங்கள்.

இனிமேல் கவிதை எழுதும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சொல்லப்படாத வரிகள்...கதைக்கு அப்படியே opposite .கதைக்கு சொல்லப்படும் வரிகள் , detail ,வர்ணனை முக்கியம்.

சங்க இலக்கியத்தில் ஒரு பிரபலமான பாடல் .

 அற்றைத் திங்கள் அந்நிலவில்  

அந்த மாதம் அந்த நிலவில்
தந்தை இருந்தார் குன்றும் இருந்தது.
இந்த மாதம் இந்த வெண்ணிலவில் 
வெற்றி முரசு வேந்தர்கள்
குன்றும் கொண்டனர் எங்கள் தந்தையும் இல்லையே!

எந்தப் புலம்பல்களும் இல்லாத கச்சிதமான பாடல்....அப்பா இருந்தாரே இப்ப இல்லையே அய்யோ எல்லாம் போச்சே,மோசம் போயிட்டமே  மூவேந்தர்கள் நாசமாப்போக என்ற சீரியல் புலம்பல்கள் எல்லாம் இல்லை! சொல்லப்படாத வரிகள் அதிகம்...



சீரியல் என்றதும் நினைவுக்கு வருகிறது.பாலிமர் சானலில் ஹிந்தி சீரியல்களை கடமை உணர்ச்சியுடன் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள்.பெண்கள் பொறுமையின் அணிகலனாக இருப்பது இந்த சீரியல்களை பார்ப்பதாலோ என்னவோ என்று தோன்றுகிறது. பத்து நிமிடம் விடாமல் உங்களால் பார்க்க முடிந்தால் அவார்டே கொடுக்கலாம்.நடிப்பவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்று பார்ப்பது வேறு விஷயம் :) ஆண்கள் எப்போதும் வீட்டுக்குள் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டும் பெண்கள் full மேக்கப் உடனும் வலம் வருகிறார்கள்.சப்பாத்தி சாப்பிடுவது, கொரியர் வருவது, போன் பேசுவது, என்று indoor இல் விலாவாரியாக காட்டுகிறார்கள். 

 வாழ்க்கையில் இரண்டு அணுகுமுறைகள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று சின்னச் சின்ன விஷயங்களை, சாதாரண விஷயங்களை கணத்துக்கு கணம் அனுபவிப்பது. இன்னொன்று, அற்ப விஷயங்களில் ஆழ்ந்து போகாமல் தூரத்து விண்மீனை குறிக்கோளாக வைப்பது. நான் ரொட்டி சுடவும், தரை துடைக்கவும், குழந்தைக்கு கழுவி விடவும் பிறக்கவில்லை என்று நம்புவது! 

ஒரு ஜென் கதை. 

ஜென் குரு ஒருவரிடம் சீடர், 'குருவே, நீங்கள் மேற்கொள்ளும் தியானம் எது?' என்று கேட்கிறார்.குரு ," நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன், தண்ணீர் இறைக்கும் போது தண்ணீர் இறைக்கிறேன், தரை துடைக்கும் போது தரை துடைக்கிறேன் , தூங்கும் போது தூங்குகிறேன்" என்கிறார். 

நண்பர் ஒருவர் இந்தியா செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இறங்கி இருப்பது சரிதானா சார்? இங்கே ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் , அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மக்கள்? என்று கேட்டார்.மனிதன் கனவு காண வேண்டுமா? சிறகுகளை விரிக்க வேண்டுமா? இல்லை கிடைத்ததை அனுபவித்துக் கொண்டு வாழ வேண்டுமா என்பது கேள்வி. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்று தான். ஒரு மரத்தின் வேர்கள் எத்தனை கீழே செல்கின்றனவோ அதன் கிளைகள் அத்தனை மேலே செல்கின்றன. ஓஷோ ஒரு multi -faceted ஜோர்பா புத்தரை வரவேற்கிறார்.அவன் ஜென்னிலும் வாழ்வான்.விண்ணிலும் வாழ்வான்!

 well , அந்த ஜென் குரு சொல்வது போல சாப்பிடும் போது நாம் சாப்பிடுகிறோமா?? 

சாப்பிடுவதைப் பற்றி இப்படி சொல்கிறார் காஞ்சி பெரியவர்.


வயிற்று உபவாசம் மாதிரியே மௌனத்துக்கும் தர்ம சாஸ்திரத்திலே அனேக காலங்களை விதித்திருக்கிறது. "மௌநேந போக்தவ்யம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்குள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது இன்னொரு வேலையும் தரப்படாது.

 இப்படி விதித்த போதே ருசியையும் கட்டுப் படுத்தியதாக ஆகிறது. "இது வேண்டும். அது வேண்டாம் ; இதற்கு உப்பு போடு, அதற்கு நெய் விடு என்றல்லாம் சொல்ல முடியாதல்லவா? 

சோம வாரம், குரு வாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அனுஷ்டிக்கலாம் .சோமவாரம், குருவாரம், ஆபீஸ் இருப்பதால் ஞாயிற்றுக கிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒரு நாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஓர் example. 

மௌனமும் பட்டினியும், சேர்ந்தால் அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பார மார்க்கத்திலே நன்றாக ஈடுபடுவதை அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக    சிவராத்திரியோ, சஷ்டியோ, ஏகாதசியோ, பட்டினி கிடக்கிற போது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாசிக்கிறவர்கள் நவராத்திரி பூராவும் மௌனமாயிருப்பார்கள். 

 நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக் தேவியான சரஸ்வதிக்கு அபச்சாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நக்ஷத்திரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு. தினமுமே அரை மணியாவது மௌனமாகத் தியானம் பண்ண வேண்டும். 

நன்றி Facebook

 ******************

நண்பர் அப்துல் , ட்விட்டரில் சுகந்தியின் ட்விட்டுகளை படிக்கும்படி சொன்னார்.சில:

முடிந்தவுடன் தான் தெரிகிறது முடை நாற்றமும் ஊசிய முட்டை பிரியாணியும் அருகில் இருந்தது 

காட்டுத்தீயை அணைக்க வாயால் ஊதுகிறாய், பார்ப்போம்

 form -கள் தான் வேறு வேறு. சொல்ல வருவது என்னவோ ஒன்று தான்.

வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் 
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி, 
கொடுங் கோற் கல்லாக் கோவலர் ஊதும் 
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! என்னும் அகநானூறு ஆகட்டும் 

எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற சமகாலப் பாடலாகட்டும் 

"பக்கி, நான் இன்றோடு இறந்துவிடப்போவதில்லை..". மிச்சம் வை என்ற சுகந்தியின் ட்வீட் ஆகட்டும்....



காமம் தான் எல்லாமுமா? என்று கேட்டேன். இல்லை எல்லாவற்றிலும் காமம் இருக்கிறது என்றார்.பிராய்டின் unconscious subconscious pre-conscious சமாசாரம் போலிருக்கிறது என்று escape ஆகி விட்டேன்.

சரி...பிராய்டின் counter transference என்று ஒன்று இருக்கிறது. தன்னிடம் சிகிச்சைக்காக வரும் client இடமே மனவியல் மருத்துவர் காதல், அன்பு, பாசம் etc etc கொண்டு விடுவது. மருத்துவர் client ஐ influence செய்வதற்கு பதிலாக உல்டாவாக நடந்து விடுவது.

 ஆஸ்பத்திரி க்குப் போவதில் கூட செக்ஸ் மோடிவ் இருக்கிறது என்று பிராயிட் சொல்வதை எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. நர்ஸை /அல்லது டாக்டரை சைட் அடிக்கலாம் இப்படி ஏதாவது மோடிவ்...என்ன தான் இருந்தாலும் இதுவரை காமம் மற்றும் காதல் இவைகளுக்கு ஒரு clear cut boundary இல்லை....வாட்சன் என்ற மனோவியல் நிபுணர் காமம் ஒன்றாகிவிடும் முயற்சி ;காதல் இரண்டாகும் முயற்சி என்கிறார். காமம் அத்வைதம் காதல் துவைதம்! இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!நாம் பொதுவாக காதல்/அன்பு  தன்னை இழக்கும் முயற்சி என்று நினைத்து வந்துள்ளோம்.

 சரி..இப்போது ஒரு கவிதை...with translation 

He whom love touches
Can enjoy no stability.
And he will tasteMany a nameless hour 

உன்னை காதல் தீண்டினால் 
நிலையில்லாமல் போவாய் 
பெயரில்லாத தருணங்களுக்கு 
கைப்பாவை ஆவாய்

 Sometimes burning and sometimes cold,
Sometimes timid and sometimes bold,
The whims of Love are manifold. 

சில நேரம் எரியும் சிலநேரம் குளிரும் 
சிலநேரம் பதுங்கும் சிலநேரம் முழங்கும் 
காதலின் பைத்தியங்களுக்கு கணக்கே இல்லை! 

Sometimes gracious and sometimes cruel,
Sometimes far and sometimes near,
 Oh, how love With one sole act 
Both strikes and embraces!

 கருணை சிலநேரம் கொடூரம் சிலநேரம் 
அருகே சிலநேரம் தொலைவாய் சில சமயம் 
ஒரே ஆத்மா தான் காதலுக்கு 
ஏன் சில சமயம் அடிக்கிறது?
சில சமயம்  அணைக்கிறது?

 Sometimes light, sometimes heavy,
Sometimes somber and sometimes bright,
 In taking and giving,
Thus live the spirits,
Who wonder here below,
Along the paths of Love. 

சிலநேரம் மென்மை சிலநேரம் வன்மை 
இருட்டில் சிலநேரம் ஒளியில் சிலநேரம் 
காதலர்கள் கொடுத்தும் எடுத்தும் வாழ்கிறார்கள் 
அன்பில் பாதையில் ஆச்சரியத்துடன்! 

-Hadewijch of Antwerp

 ஓஷோ ஜோக்
===========

ஹோட்டலில் குழந்தை ஒன்று எப்படியோ ஒரு ரூபாய் காயனை முழுங்கி விட்டது.

அதன் தாய் 'யாராச்சும் காப்பாத்துங்க, சீக்கிரம்" என்று கதறினாள் .

யாராச்சும் டாக்டர் இருக்காங்களா என்று பரபரத்தனர் மற்றவர்கள்.

எங்கிருந்தோ கோட்டு சூட்டு அணிந்த ஆள் ஒருவன் வந்தான்.

 'பதட்டப் படாதீங்க' என்றவன் குழந்தையின் அருகில் சென்று அதை எங்கெங்கோ தட்டினான். சில நிமிடம் கழித்து அந்த காயன் டங் என்ற சத்தத்துடன் வெளியில் வந்து விழுந்தது. 

நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதன் அம்மா, "ரொம்ப நன்றி " "சார், நீங்க யாரு? டாக்டரா, இல்லை மாய மந்திரம் கற்றவரா?" என்றாள் . 

அந்த ஆள் "இரண்டும் இல்லை..நான் இன்கம்டாக்ஸ்-ஸில் வேலை செய்கிறேன் " என்றான். 

சமுத்ரா 

Monday, September 30, 2013

அணு அண்டம் அறிவியல் -74

அணு அண்டம் அறிவியல் -74 உங்களை வரவேற்கிறது.

அறிவியலில் உள்ள ஒரு பெரிய oddity என்ன என்றால், மனிதன், தொலைதூர காலக்ஸிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளான்.ஆனால் அவன் காலின் கீழே இருக்கும் பூமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. The closer a thing is, the little we know about! நமக்கு இன்றும் பூமியின் உள்ளே என்ன இருக்கிறது என்று துல்லியமாகத் தெரியாது. யூகங்களின் பேரில் பூமியை ஒரு மெகா வெங்காயம் போல உருவகித்து நான்கு அடுக்குகளாகப் பிரித்துள்ளார்கள். நாமெல்லாம் இருக்கும் கடினமான ஒரு பாறை அடுக்கு, அடுத்து பாறைகள் உருகி திடமும் அல்லாத திரவமும் அல்லாத ஒரு குழம்பு போன்ற அடுக்கு, அடுத்து முற்றிலும் திரவ அடுக்கு, கடைசியில் , மையத்தில் கடினமான மற்றொரு அடுக்கு.


 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே மனிதன்   நூற்றுக்கணக்கான விண்மீன்களை தெரிந்து வைத்திருந்தாலும் அப்போது பூமியைப் பற்றிய அவன் அறிவு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தது. தோண்டினால் தண்ணீர் வரும், கிணறு வெட்டலாம் அவ்வப்போது நிலநடுக்கும் வருகிறது  என்று மட்டும் தெரிந்திருந்தது.பூமிக்குக் கீழே பாதாள லோகம் + பாதாள பைரவி etc etc இருக்கும் என்று இந்தியாவில் நம்பி வந்தார்கள். சில நாகரீகங்கள் பூமிக்கு அடியில் மனிதனை விட பலமடங்கு சக்தி வாய்ந்த உயிரினங்கள் வாழ்ந்து வந்ததாக நம்பின. இன்று கூட இப்படி 
Fiction திரைப்படங்கள் வருகின்றன!

எட்மன்ட் ஹேலி என்பவர் நம் பூமி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் கீழ் வெறும் வெற்று உருண்டை என்கிறார்.!(Hollow earth !) ஒரு பிளாஸ்டிக் பந்து போல! இந்தக் கொள்கை இப்போது நிராகரிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் சில பேர் இதை நம்புகிறார்கள். extreme ஆன இன்னொரு  தியரி, பற்றி இங்கே கொஞ்சம் பேசலாம்.


The Concave Earth Hypothesis


பிரபஞ்சம் என்பது பூமிக்கு வெளியே இல்லை. உள்ளே இருக்கிறது என்று சொல்கிறது இது . பூமியைத் தவிர வேறொன்றும் இல்லை. பூமி தான் பிரபஞ்சம் என்ற பழைய Geo -centrism கோட்பாடு! பழைய ஒயின் புதிய கோப்பையில்!


 நீண்ட நெடுங்காலமாக மக்கள் பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பி வந்தார்கள்.

என்று படித்திருக்கிறோம். obvious ! சூரியன், சந்திரன் எல்லாம் பூமியை சுற்றுகிறது. கீழே தரை ஆடாமல் அசையாமல் உறுதியாக நிற்கிறது.மேலும் பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்பது நம் ஈகோ-வையும் பூர்த்தி செய்கிறது.சில அதிகப் பிரசிங்கிகள் மட்டும் அவ்வப்போது 'இல்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது (distrust the obvious!) என்று சவுண்டு கொடுத்துக் கொண்டிருந்தாலும் கீழ்க்கண்ட மூன்று காரணங்களால் பூமி தான் மையம் என்று முடிவு கட்டி விட்டனர் .

* பூமி பயணித்துக் கொண்டிருந்தால் நாம் அதன் திசைக்கு எதிரான , ஒரு காற்றோடத்தை உணர வேண்டும். டூ-வீலரில் போகும் போது காற்று நம்மீது வந்து மோதுமே அப்படி. மேலும் பூமி நகரும் போது அந்த அழுத்தத்தை நம் கால்கள் உணர வேண்டும். இப்படியெல்லாம் நடப்பதாகத் தெரியவில்லை.


* பூமி பிரபஞ்சத்தின் மையம். எனவே எல்லாமே மையத்தை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். அருகில் உள்ள பொருட்கள் (உதா: மரத்தில் இருந்து விழும் ஆப்பிள்) பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கப்பட, தொலைவில் உள்ளவை பூமியை  சுற்றி வருகின்றன. ஒருவேளை ,பூமி நிலையாக இல்லை, அது சூரியனை (மையம்) சுற்றுகிறது என்றால் சூரியன் தான் மையம் என்றாகிறது. அப்படி என்றால் ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? அது சூரியனை நோக்கி மேலே அல்லவா போக வேண்டும்?


* பூமி சூரியனை சுற்றும் போது நட்சத்திரங்களின் இருப்பிடம் மாற வேண்டும். (stellar aberration)ஆனால் அப்படி மாறுவதாகத் தெரியவில்லை. எல்லாமே எல்லாப் பருவங்களிலும் அப்படியே நிலை மாறாமல் இருக்கின்றன.



 இந்த வாதங்கள் மிகவும் வலுவானதாக இருந்ததால் இதை எதிர்த்து யாராலும் சூரிய மையக் கொள்கையை நிலைநாட்ட இயலவில்லை. இன்று நமக்கு இந்த மூன்றும் தவறு என்று தெரியும்.

-பூமி, நகரும் போது எல்லாமே ஒட்டு மொத்தமாக நகருகிறது. வளிமண்டலம் உட்பட. எனவே நம்மால் காற்றை உணர முடியவில்லை.


- எல்லாப் பொருட்களும் பிரபஞ்சத்தின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை. பக்கத்தில் உள்ள கனமான பொருளின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படும். எனவே ஆப்பிள் மேலே போவதில்லை.


-நட்சத்திரங்களின் இடமாற்றம் அவை நம்மிடம் இருந்து எத்தனை தொலைவில் இருக்கின்றன என்பதைப் பொருத்தது. பூமி- சூரியன் தொலைவுடன் ஒப்பிடும்போது நட்சத்திரங்கள் மிக மிக அதிக தூரத்தில் இருப்பதால் பூமி எங்கிருந்தாலும் அவைகளின் நிலைகள் அவ்வளவாக மாறுவதில்லை. இதை விளக்க ஒரு எளிமையான சோதனை செய்து பார்க்கலாம்.உங்கள் இடது கை கட்டை விரலை இரண்டு கண்களுக்கு இடையே உள்ள இடத்தில் கண்களுக்கு மிக அருகில் பிடிக்கவும். இப்போது இடது கண்ணை மூடிக் கொண்டு வலது கண்ணால் விரலைப் பார்க்கவும். 
பிறகு வலது கண்ணை மூடிக் கொண்டு இடது கண்ணால் விரலைப் பார்க்கவும். இரண்டு நிலைகளில் விரல் இடம் மாறி இருப்பது அப்பட்டமாகத் தெரியும். தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை (ஜன்னல்) நீங்கள் reference ஆக எடுத்துக் கொள்ளலாம். இப்போது அதே விரலை கண்களில் இருந்து அதிக தொலைவில் கையை எத்தனை நீட்ட முடியுமோ அத்தனை தொலைவில் பிடிக்கவும். இப்போது மீண்டும் பழைய படி செய்யவும். விரல் கண்களில் இருந்து தூரம் இருப்பதால் இரண்டு நிலைகளில் பெரும்பாலும் மாற்றம் இருப்பதில்லை!அதே போல, விண்மீன் நமக்கு அருகில் இருந்தால் அதன் நிலை பூமி நகரும் போது வானில் அடிக்கடி மாறும்.தூரத்தில் இருந்தால் நம் வெற்றுக் கண்களால் உணர முடியாத படி ரொம்பக் குறைவாகவே இடம் மாறும்.

-

 சரி. The Concave Earth Hypothesisஎன்ற இந்தக் கோட்பாடு, நாம் பூமியின் வெளி அடுக்கில் வாழ்வதில்லை. காலியான பூமியின் உள் அடுக்கில் இருக்கிறோம் என்கிறது . சூரியன், சந்திரன், நட்சத்திரம் , பிரபஞ்சம் எல்லாம் உள்ளே!படத்தைப் பார்க்கவும்.concave என்றால் வெளியே குவிக்கப்பட்ட என்று அர்த்தம்.





ஆச்சரியமாக ,வெளியே இருக்கும் பிரபஞ்சத்துக்கு பொருந்தும் இயற்பியல் விதிகள் பிரபஞ்சம் உள்ளே இருந்தாலும் பொருந்துகின்றன. 'வெளியே இருப்பது எதுவோ அதுவே உள்ளேயும்  இருக்கிறது' என்று உபநிஷத் கூறுவது போல. பிரபஞ்சவியலில் உள்ளே வெளியே என்பவை அர்த்தமற்றவை என்பதால் இப்படி இருக்கவும் சாத்தியம் இருக்கிறது. இந்த மாடல், பிரபஞ்சமே ஒரு Optical illusion என்கிறது. நிலா, விண்மீன், நெபுல்லா எல்லாமே பூமிக்கு உள்ளே (?) இருக்கும் சூரியனின் ஒளி வளைந்து வளைந்து வருவதால் ஏற்படும் 'காட்சிப் பிழைகள்' that's  it !ஒரு விண்மீன் நமக்கு, நம் கண்களுக்குத் தெரிகிறது என்பதால் மட்டுமே அது 'இருக்கிறது' என்று எப்படி சொல்ல முடியும்? ஆதி மனிதன் வானம் முழுவதும் வெளிச்சம் என்றும் அதை ஒரு கறுப்புப் போர்வை மறைக்கிறது என்றும் நம்பினான்.அந்தப் போர்வையில் உள்ள வித
வித ஓட்டைகள் தான் சூரியன் சந்திரன் , நட்சத்திரங்கள் என்றும் நினைத்தான். இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்க மாடல்தான். அறிவியலில் எந்த மாடலையும் நாம் சரி என்றோ தவறு என்றோ சொல்லிவிட முடியாது. இந்த மாடல் நம் ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறது என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும். ஹாக்கிங் சொல்வது போல அணுவுக்குள் அணுக்கரு இருக்கிறது; அதை எலக்ட்ரான் சுற்றுகிறது என்று சொல்வது தவறு. அணு ஒன்று அதனுள் அணுக்கரு இருந்தால் அதை எதிர்த் துகள் ஒன்று சுற்றி வந்தால் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி நடந்து கொள்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும். 



கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.



 இந்தப் படத்தில் இருக்கும் கீழ் நோக்கிய முக்கோணம் உண்மையில் இல்லவே இல்லை !


எனவே, நாம் பார்ப்பது ஒன்றினால் மட்டுமே ஒரு பொருளின் இருப்பை உறுதி செய்ய முடியாது. அதே போல நாம் பார்க்க முடியாததால் ஒரு பொருள் இல்லை என்றும் சொல்லிவிட இயலாது.
சில பேர், நகர்வு (motion ) என்பதையே மாயை என்கிறார்கள். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 



அதுவும் ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கைக்குப் பிறகு நிலையான பொருளுக்கும் சீராக நகரும் பொருளுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. Motion ஆச்சரியமாக 'நகர்தல்' என்பதற்கு வரையறைகள் இல்லை...motion mountain என்று ஒரு e -book வருகிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.  நிலையாக இருக்கும் போதும் அதிவேக இயக்கத்தில் இருக்கும் போதும் ஒரு பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு மாறுவதில்லை. இயற்கையின் விதிகளும் மாறுவதில்லை.வேகமாக நகரும் பொருளுக்கும் உள்ளே அணுக்கள் இயங்கும். ப்ரோட்டான் எலக்ட்ரானை இழுக்கும். ஈர்ப்பு வேலை செய்யும். சிலருக்கு பஸ்ஸில் போனால் வாந்தி வருகிறதே என்றால் அதற்கு வேறு சின்னச் சின்ன லௌகீக காரணங்கள் மட்டுமே. மற்றபடி நீங்கள் 70-A பஸ்ஸில் தாம்பரம் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்கள் உடம்பில் உள்ள அணுக்களுக்குத் தெரியாது. இயக்கத்தின் special case ஆன Acceleration என்பது கொஞ்சம் விஷயங்களை சிக்கலாக்குகிறது. பஸ்ஸில் (ஒழுங்கான வேகத்தில்) போனால் அது நமக்குத் தெரியாது சரி. பஸ் சடன் பிரேக் போட்டால் ஏன் முன்னே போய் விழுகிறோம்? இதை வைத்து நாம் இயக்கத்தில் இருக்கிறோம் அல்லது இருந்தோம் என்று சொல்லி விட முடியும் அல்லவா?





நியூட்டன் காலத்தில் இருந்தே ஒரு விஷயம் புதிராக இருந்து வந்துள்ளது. அது என்ன என்றால் 
Symmetrical differential equations in an accelerated and inertial frames of motion.. சும்மா பயமுறுத்த சொன்னேன்.அப்படி எதுவும் கிடையாது. அது என்ன என்றால் பக்கெட். ஆம் நாம் பாத் ரூமில் உபயோகிக்கும் பக்கெட்.நம்மாட்கள் பக்கெட்டில் விழுந்த ஓட்டையை எப்படி அடைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, நியூட்டன், பக்கெட்டை வைத்து பிரபஞ்சத்தின் ஒரு ஆதாரமான புதிரை யோசித்துக் கொண்டிருந்தார் Newton's bucket என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு எளிமையானது. நீர் நிறைந்த ஒரு பக்கெட்டை கயிற்றில் கட்டி தொங்க விட்டு முறுக்கி விட வேண்டியது. முறுக்கப்பட்ட கயிறு விடுபடும் போது பக்கெட்டில் உள்ள தண்ணீர் நடுவில் குழிந்து ஒரு கிண்ணம் போன்ற ஒரு concave வடிவத்தை எட்டுகிறது.தண்ணீர் ஏன் இந்த வடிவத்தை ஏற்க வேண்டும் என்பது நியூட்டனின் கேள்வி...பக்கெட் சுழல்வதால் அப்படி நடக்கிறது என்று சுலபமாக சொல்லி விட முடியாது.ஆனால் நியூட்டன், தண்ணீர் 'எதைப் பொறுத்து' சுழல்கிறது என்று கேட்கிறார்..தண்ணீர் , பாக்கெட்டைப் பொறுத்து சுழல முடியாது. ஏனென்றால் பக்கெட்டின் சுவரும் அதே வேகத்தில் சுழல்கிறது...

நியூட்டன், நீரின் வடிவம் அது absolute space எனப்படும் மாறாத வெளியைப் பொறுத்து சுழல்வதால் ஏற்படுகிறது என்று எண்ணினார். ஒரு பொருள் நிலையாக இருக்கும் போது அது absolute space ஐப் பொறுத்து நிலையாக இருக்கிறது; நகரும் போது absolute space -ஐப் பொறுத்து நகர்கிறது. முடுக்கத்தின் போது (acceleration )absolute space ஐப் பொறுத்து முடுக்கப்படுகிறது என்று உறுதியாக நம்பினார்.

ஆனால், absolute space என்பது என்ன என்பதை நியூட்டன் சரியாக வரையறுக்க வில்லை.

Leibniz என்னும் ஜெர்மன் இயற்பியல் அறிர், வெளி, absolute space என்ற ஒன்று கிடையாது என்று வாதிடுகிறார். வெளி என்பது பொருட்களை குறிப்பிட உதவும் ஒரு concept அவ்வளவே என்கிறார். பிரபஞ்சத்தில் பொருட்களே இல்லை என்றால் வெளி என்பதற்கு எந்த அர்த்தமும் இருக்க முடியாது என்றும் சொல்கிறார்.மேலும் அவர், வெளி என்பது absolute ஆக எல்லாவற்றுக்கும் ஒரு பின்புல reference ஆக இருக்கும் பட்சத்தில், கடவுள் அந்த அனந்த வெளியில் பிரபஞ்சத்தை எங்கே உருவாக்குவது என்று எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்கிறார்.

நியூட்டன், absolute space என்ற ஒரு reference ஐ எடுத்துக் கொண்டது ஒரு தேவையில்லாத broad step என்கிறார்கள். பக்கெட்டில் உள்ள தண்ணீர் ஆய்வு நடந்து கொண்டிருக்கும் அறையின் சுவர்களைப் பொறுத்து சுழல்கிறது என்று அந்த சுவர்களை ஒரு reference ஆக வைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது பூமியை அல்லது தொலைவில் உள்ள ஒரு நிலையான நட்சத்திரத்தை....! absolute space என்பதற்கு எந்த அவசியமும் இல்லை!

இதே ஆய்வை பூமியில் இருந்து விலகி,  எந்த பொருட்களும் இல்லாத வெட்ட வெளியில் செய்வதாகக் கொள்வோம். அப்போது சுழலும் பக்கெட்டில் உள்ள நீர் எந்த வடிவத்தை ஏற்கும்?? அப்போது கூட நாம் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்களை reference ஆக வைத்துக் கொண்டு நிலையான நட்சத்திரத்தை பொறுத்து தண்ணீர் சுழல்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதுவும் இல்லாத எதுவுமே இல்லாத வெட்ட வெளியில் தண்ணீர் சுழலாமல் அப்படியே இருக்கும் என்கிறார் மாக் என்னும் விஞ்ஞானி.

Ernest Mach , நாம் இயக்கத்தை, சுழற்சியை, acceleration ஐ  உணர்வது பிரபஞ்சத்தில் இருக்கும் இன்ன பிற பொருட்களின் இருப்பினால் தான் என்கிறார். அதாவது பிரபஞ்சத்திலேயே நம்முடைய பேருந்து மாத்திரம் இருப்பதாகக் கொள்வோம். அப்போது அது நகர்ந்தாலோ அல்லது நகரும் போது சடன் பிரேக் போட்டாலோ அதை நாம் உணர மாட்டோம். அந்த பஸ்ஸினுள் பிடித்துக் கொள்ள கம்பிகள் எதுவும் தேவையில்லை என்கிறார் மாக்.

ஆகவே, இயக்கம் என்பதே கிட்டத்தட்ட மாயை என்று சொல்லலாம் போலிருக்கிறது.


புத்தர் எத்தனை பேர் சொன்னாலும் கேட்காமல் அங்குலிமாலன் இருக்கும் காட்டுக்குள் நடந்து வருகிறார்.அவன் ஒரு பாறை மேல் உட்கார்ந்திருக்கிறான்.

கொலைகார அங்குலி மாலன், "நில், நகராதே, அசையாதே, அங்கேயே நில் " என்று கத்துகிறான்.

புத்தரோ , "நான் நகரவே இல்லையப்பா.. நான் நகர்வதை என்றோ நிறுத்தி விட்டேன். நீ தான் நகர்ந்து கொண்டு இருக்கிறாய்' என்கிறார்.





ok....பூமிக்குத் திரும்புவோம். 


மனிதனால் உள்ளே நுழைந்து என்ன இருக்கிறது என்று நேரடியாகப் பார்க்க முடியாது.காரணம்: கொதிக்கும் வெப்பம் மற்றும் அழுத்தம்! (சில பேர் பூமியின் உள்ளக வெப்பத்துக்கு அங்கே நடந்து கொண்டிருக்கும் cold fusion காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். உள்ளே ஒரு சூரியன்! )சயின்ஸ் பிக்சன் கதைகளில் மட்டுமே இது சாத்தியம் பார்க்க :Journey to the Center of the Earth -Jules Verne. படிக்க மிகவும் சுவாரஸ்யமான புத்தகம்!


பின்னர் எப்படி பூமிக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள் என்றால் டைனமைட் போன்ற சமாச்சாரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட இயந்திர அதிர்வுகளை பூமிக்குள் அனுப்பி அவைகள் எப்படி திரும்பி வருகின்றன என்பதை வைத்து பூமிக்குள் இந்த இந்த அடுக்குகள் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கிறார்கள்.(சோனார் போல!)மேலும் பூகம்பங்கள் இயற்கையாகவே ஒரு seismic waves போல செயல்படுகின்றன. நில நடுக்கத்துப் பிறகு வீடு போச்சே சித்தப்பா உள்ள போயிட்டாரே என்ற  லௌகீக கவலைகளை விட்டு விட்டு சின்சியராக சில ஜியாலஜிஸ்ட்கள் சீஸ்மோகிராப் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.



Samudra


Tuesday, September 3, 2013

அணு அண்டம் அறிவியல் -73

அணு அண்டம் அறிவியல் -73 உங்களை வரவேற்கிறது.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணு அண்டம் அறிவியல் -73 உங்களை வரவேற்கிறது.

உங்களை (என்னையும்) ஒரு form -இற்கு கொண்டு வர, மீண்டும் ஓட்டத்தில் இணைய சில விஷயங்களை இந்தப்  பதிவில் பேசலாம்.

விஸ்வரூபம்! 
=============

“Nature and Nature's laws lay hid in night:
God said, Let Newton be! and all was light.”
― Alexander Pope

அறிவியல், குறிப்பாக இயற்பியல் ,பொதுவாக , ஒரு bottom -up அணுகு முறையை கடைபிடித்து வந்துள்ளது என்று சொல்லலாம்.   குறிப்பாக 'இயற்பியல்' என்று ஏன் சொல்கிறேன் என்றால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் இயற்பியல் ஒரு hot subject ஆக இருந்தது. மாணவர்கள் எல்லாரும் இயற்பியல் படிக்கவே விரும்பினார்கள். எர்னெஸ்ட் ரூதர்போர்ட், "All science is either physics or stamp collecting" என்று சொன்னார். இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு கொஞ்சம் இதனால் தலைக்கனம் கூட வந்து விட்டிருந்தது. தொலைதூர காலக்ஸிகள் , பிரபஞ்சம், சூரிய மண்டலம், அணுவின் உள்ளே உள்ள விசித்திர உலகம் குவார்க்குகள் என்று 'கடவுளின் ஏரியாவில்' அவர்கள் ஆராயத் தலைப் பட்டதால்  வெறும் டெஸ்ட் ட்யூப்களை வைத்துக் கொண்டு திரியும் chemist -களையும் மண்ணை வைத்து நோண்டிக் கொண்டிருக்கும் geologist -களையும் அவர்கள் துச்சமாக மதித்தார்கள் என்று சொல்லலாம். யூனிவர்சிடிகளில் வேதியியல், நிலவியல் பிரிவுகளில் ஈ ஓட்ட ஆள் இல்லை. ஒன்றிரண்டு பிடிவாத ப்ரொபசர்கள் மட்டுமே டிபார்ட்மெண்டில் காலம் தள்ளிக் கொண்டிருந்தார்கள். ஆர்தர் ஹோம்ஸ் என்ற ஜியாலஜிஸ்ட் ரேடியோ ஐசோடோப்-முறையில் பாறைகளை ஆராய்ந்து பூமியின் வயதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு தேவையான உபகரணங்களை கொடுக்க அவரது யூனிவர்சிடி மறுத்து விட்டது. ஒரு கால்குலேட்டர் இயந்திரத்தைப் பெற அவர் ஓரிரு வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்தக் காலத்தில் (1920) கால்குலேட்டர் ஒரு ரூம் சைஸுக்கு இருக்கும்!

சரி.

இயற்பியல் ஒரு bottom -up அணுகுமுறையில் வளர்ந்தது என்று சொன்னோம். அப்படி என்றால் ,பல்வேறு விஞ்ஞானிகள் பல்வேறு காலகட்டங்களில் தனித் தனியாக கண்டுபிடித்த விஷயங்களை , மேலே செல்லச் செல்ல ஒரு கோபுரம் போல ஒன்று சேர்க்கும் முயற்சி.  இந்த முயற்சி இப்போது கர்வத்தில் திளைத்திருந்த (இயற்பியல்) விஞ்ஞானிககளை 'கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ' என்று சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒவ்வொரு கொள்கையும் (theory ) தனித்தனியாக நன்றாக வேலை செய்கிறது. ஆனால் ஒன்று சேர்த்தால் சொதப்பி விடுகிறது. நியூட்டன் ஈர்ப்பு விதியைக் கண்டுபிடித்த போது அவருக்கு அணுக்களைப் பற்றித் தெரியாது. மாக்ஸ்வெல் -லுக்கு எலக்ட்ரான் என்றால் என்ன என்று தெரியாது.  ஐன்ஸ்டீனுக்கு  குவாண்டம் உலகில் வெகுவாக செறிந்து கிடக்கும் துகள்கள் (sub atomic particle ) பற்றித் தெரியாது. இன்று, Particle Zoo  என்று சொல்லும் அளவு நூற்றுகணக்கான துகள்கள் உள்ளன. பையான், ஆன்டி பையான் , மியூயான் , நியூட்ரினோ ,ஆன்டி நியூட்ரினோ ...இப்படி வாய்க்கு வந்த பெயர்களில்..இவைகள் உண்மையிலேயே தேவை தானா? இவைகளின் அர்த்தம் என்ன என்று இதுவரை யாருக்கும் தெரியாது. கடவுள் இத்தனை சிக்கலாகவா பிரபஞ்சத்தைப் படைப்பார்? அறிவியல் என்பது பொதுவாக எளிமைப்படுத்துதல். ஆனால் இப்போது அது அதற்கு எதிர்திசையில் , சிக்கலாகப் போய்க் கொண்டிருக்கிறது. இத்தனை அடிப்படைத் துகள்கள் எதற்காக? அதாவது பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதை.

இந்தத் துகள்களில் பெரும்பாலானவை ,இருப்பது போல் இருந்து இல்லாமல் போய் விடுகின்றன. மியூயான் என்ற துகளின் ஆயுள் காலமே 3x 10^-8 வினாடிகள் தான். வினாடியில் கோடியில் ஒரு பங்கு. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் மூன்று  வினாடியில் அது கோடி முறை பிறந்து இறந்து விடுகிறது. well , இங்கே காலம் என்பது relative என்பதால் இது பெரிய மேட்டர் அல்ல. அத்தனை சிறிய காலத்தில் அது காலேஜுக்கு சென்று படித்து, காதலில் விழுந்து, குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு, போதுமடா சாமி இந்த நீண்ட(?) வாழ்க்கை என்று மரணப் படுக்கையில் வீழ்ந்து சுற்றம் சூழ  கல்யாண சாவாக செத்துப் போகலாம். அதே போல ஒரு மேலான தளத்தில் (dimension ) இருந்து பார்க்கும் யாரோ ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு நாமெல்லாம் 3x 10^-8 lifetime கொண்ட அற்பமாக செத்து செத்து மடியும் மியூயான்கள் போலத் தெரியலாம். 

[காலம் ஒரு பெரிய விஷயம் இல்லை என்று ஏன் சொன்னேன் என்றால் நீங்கள் மாகி நூடுல்ஸ் செய்கிறீர்களே! அந்த 2 நிமிடத்தில் நம் ஒட்டு மொத்த பிரபஞ்சமே தோன்றி விட்டது என்கிறார்கள் ! சும்மா ஒரு ரயில் பிடிக்கும் அவசரம். கடவுள் பிளான் போட்டு தன் இன்ஜினியர்களை ஆலோசித்து வருடக்கணக்கில் திட்டமிட்டு இது உருவாகவில்லை போலும்!அதன் 99% பருப் பொருட்களுடன் 2 நிமிடத்தில் ! (ஏன் இத்தனை அவசரம் என்று தெரியவில்லை). பிறகு அது கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக(?)வளர்ந்து ஏனோ 10^ -35 வினாடிகள் கழித்து பயங்கரமாக கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. அதன் விரிவடைதல் linear ஆக இல்லாமல் அத்தனை சிறிய காலத்தில் அது தன் கன அளவில் 10^ 78 மடங்கு பெருத்து விட்டது என்கிறார்கள். (பார்க்க: inflation theory ) அதாவது, ஒரு எலுமிச்சம் பழ அளவு இருந்தது வினாடியில் ஐந்து கோடி பகுதி நேரத்தில் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு பெருத்து வளர்ந்து விட்டது. இதுதான் உண்மையான விஸ்வரூபம்! சினிமா ஹீரோக்கள் எடுக்கும் விஸ்வரூபம் சும்மா கமர்ஷியல் குப்பை! இந்த அபார விரிவடைதல் ஒரு விதத்தில் நல்லது ..linear ஆக slow motion இல் விரிந்திருந்தால் அதன் பாரம் தாங்காமல் ஒரு கட்டத்தில் தனக்குள் தானே ஒடுங்கி இருக்கும். ஏனென்றால் ஈர்ப்பு விசை முந்திரிக் கொட்டை போல பிரபஞ்சத்துடன் கிட்டத்தட்ட ஒரு இரட்டைப் பிறவி போலவே  பிறந்து விட்டது. அந்த நொடியில் இருந்து இன்று வரை அது தன் கடமை மாறாமல் கண்ணாடி குடுவைகளை கீழே போட்டு unromantic ஆக உடைத்துக் கொண்டிருக்கிறது!]


 சரி. (நம்மைப் பொறுத்த அளவில் )இத்தனை குறுகிய ஆயுள் கொண்ட இந்த துகள்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் இவை அதிர்ஷ்ட வசமாக trace எனப்படும் பாதைகளை விட்டுச் செல்கின்றன. ஜெட் விமானம் பறந்து சென்றதும் ஏற்படும் புகைப் பாதை போல! 
ஹீலியம் அணுக்கருவினுள் க்ளூவான்கள்


ஏராளமான இந்த அடிப்படைத் துகள்கள்  விஞ்ஞானிகளைக் குழப்புகின்றன. 
கடவுள் இவற்றை நோக்கமே இல்லாமல் சும்மானாச்சும் மனிதனை கடுப்படிக்க என்று படைத்தாரா? சும்மா விளையாட்டுக்காகவா? இது, கடவுள் அல்லது இயற்கை அவ்வளவு effective ஆன சிவில் இஞ்சினியர் இல்லை என்று காட்டுகிறது. இஞ்சினியரை விட்டு வீடு கட்டச் சொன்னால் அவர் பொதுவாக ஒரே மாதிரி இருக்கும் செங்கல்லோ ஹாலோ ப்ளாக்கோ வைத்து சிமெண்டையும் பயன்படுத்தி வீடு கட்டினால்தான் அவருக்கும் லாபம். வீடு கட்டுபவருக்கும் லாபம். அனால் நம்மிடம் இருக்கும் ஏராளமான அடிப்படைத் துகள்களை வைத்துப் பார்க்கும் போது , அந்த இஞ்சினியர் crazy ஆக கலர் கலராக , விதம் விதமான வெவ்வேறு சைஸ்களில் பெரியதும் சிறியதுமான தொடர்பே இல்லாத கற்களை வைத்து கட்டி இருக்கிறார் (no simplicity )என்று தோன்றுகிறது. இருந்து விட்டுப் போகட்டுமே , அதனால் என்ன என்கிறார்கள் சிலர்..பிரபஞ்சம் is not a business ..ஆன்டி பையான் (anti -pion )அதுபாட்டுக்கு ஒரு ஓரத்தில் சிவனே என்று இருந்து விட்டுப் போகட்டுமே? அது என்ன நம்மை தொந்தரவு செய்கிறதா என்ன? நியூட்ரினோ என்று ஒன்று பாவம் இருக்கும் இடமே தெரியாது. மில்லயன் கணக்கில் நியூட்ரினோக்கள் நம்மை அனாயாசமாக கடந்து சென்று விடும். ஏன் , பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் சரேல் என்று நானோ செகண்டில் கடந்து போய் விடும், ஏதோ பூமி என்ற ஒன்றே அதன் பாதையில் இல்லை  என்பது போல...! (ஆம்... நியூட்ரினோக்கள் பார்வையில் பூமியே இல்லை! நாமெல்லாம் இல்லை! மாயை! பழனி சாமியா? யாரது ? நான் வழியில் பார்க்கவே இல்லையே என்று சொல்லும்! )  அது இருக்கட்டுமே...என்ன வந்தது ? சும்மா fun -னுக்காக அதை கடவுள் படைத்தார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு விதமான காஸ்மிக் ராமபாணம் நியூட்ரினோ. சும்மா கடவுளின் குழந்தைகளுக்கு விளையாட்டு அம்பு  என்று வைத்துக் கொள்ளலாமே?kind of 

"ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது,"

ஏழு உலகங்களுக்கு அப்புறம் துளைக்க எதுவும் இல்லை என்று திரும்பி வந்து விட்டதாம் ராம பாணம் . நியூட்ரினோ அப்படி வராது!

 இப்போது பூமியில் மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்க , சில பேர் மண்ணுக்கடியில் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆம்..இந்த slippery நியூட்ரினோக்களை வழியில் தடுத்து நிறுத்தி பிடித்து 'இன்னாப்பா ,இன்னாத்துக்கு இப்டி எகிறுனுகீற? குந்திகினு ரெஸ்ட் எடு' என்று சொல்லி சிறைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மண்ணுக்கடியில் ஆழ சுரங்கங்களில் ராட்சஸ தொட்டிகளில் கன நீரை (heavy water )(டியூடிரியம்)  நிரப்பி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.   எப்போதாவது பில்லியன் நியூட்ரினோ-க்களில் ஒன்று மட்டும் மனிதன் மேல் மட்டற்ற கருணை வைத்து பிழைத்துப் போகட்டும் மனிதப்பயல் .. நாம் அவன் கனநீர் தவத்துக்கு கணநேர தரிசனம் அருள்வோம் என்று நீரின் அணுக்கருவைத் தாக்கி ஆல்பா துகளை (ஆற்றலை) வெளித் தள்ளுகின்றன. (அதுவும் மறைமுக தரிசனம் தான் !!) தொட்டிகள் மற்ற ஆற்றல் மூலங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஆழத்தில் கும்மிருட்டில் இருப்பதால் அதில் மற்ற காஸ்மிக் கதிர்கள் தாக்க முடியாது. எனவே தொட்டிகளில் எப்போதாவது வெளிப்படும் ஆல்பா output (அதை வெளியே ஒரு கம்ப்யூட்டர் கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருக்கும்) நியூட்ரினோ இருப்பை உறுதி செய்யும். இதுவரை விழலுக்கு இறைத்த (கன) நீர் தான்!தமிழ்நாட்டில் கூட நியூட்ரினோ ஆய்வு மையம் ஒன்று வருவதாகக் கேள்விப்பட்டேன்.(தேனி )

குட்டிக் குட்டித்  துகள்களை கண்டுபிடிக்க இத்தனை செலவு அவசியமா? என்று ஒரு கோஷ்டி கேட்டுக் கொண்டிருந்தாலும் இன்னொன்று, கடவுள் அல்லது இயற்கை எதையும் காரணம் இன்றி படைக்காது என்று சொல்கிறது. ஏதோ ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இந்த அடிப்படைத் துகள்களில் இருக்க வேண்டும் என்கிறது. அது இன்னும் நம் ஸ்லோ மூளைக்கு எட்டவில்லை. அல்லது எப்போதும் எட்டாது! சும்மா விளையாட்டுக்காக இயற்கை இந்த துகள்களைப் படைக்காது ! ஒரு கை தேர்ந்த தையல்காரர் நம் சட்டையை எப்படி கச்சிதமாக செய்கிறார்? ஏதேனும் ஒரு extra fitting இருக்கிறதா? அது போல பிரபஞ்சமும் கச்சிதமாக படைக்கப் பட்டிருக்கிறது !God has Occum 's razor என்கிறார்கள்.

Standard Model எனப்படும் இந்த  அமைப்பு, இந்த துகள்கள் யாவற்றையும் ஒரு zoo போல காட்சிக்கு வைக்கிறது. இந்தத் துகள்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன? இதுவரை ஒருத்தருக்கும் தெரியாது.விஞ்ஞானி ஒருவர்  We have all the numbers now. but we don't know what they mean' என்கிறார். ஒவ்வொரு துகளுக்கும் சமர்த்தாக நிறை, சார்ஜ், ஸ்பின் (சுழற்சி) எல்லாம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவை என்ன என்று புரியவில்லை. அணுக்கருவை அல்லது குறைந்த பட்சம் ப்ரோடான் , நியூட்ரான் துகள்களை நோண்டிப் பார்க்காமல் இருந்திருக்கலாமோ என்று அங்கலாய்கிறார்கள். There is a deep feeling that the picture is not beautiful என்கிறார் லெடர் மேன் ..இன்னொருவர் எனக்கு இந்தத் துகள்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ளும் சக்தி இருந்திருந்தால் நான் ஒரு பாடனிஸ்ட் ஆகி இருப்பேன் போங்கடா என்றார்!அதாவது, புதிய துகள் ஒன்றின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு இப்போது மகிழ்ச்சி அளிப்பதில்லை. மாறாக 'இதை எங்கே கொண்டு போய் பொருத்துவது' என்று தலைவலியையே கொடுக்கிறது.!



bottom -up approach இன் தலைவலி இது. ஏழெட்டு மாணவர்களை எங்கெங்கோ வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு சப்ஜெக்ட்-களில் படிக்க அனுப்பி விட்டு அவர்களுக்குள் எந்த தொடர்பையும் அனுமதிக்காமல் ஆண்டுகள் கழித்து அவர்களை ஒன்று சேர்ந்து ஒரு phD செய்யுங்கள் என்று சொல்வதைப் போன்றது.

 இதற்கு எதிரான Top-down அணுகுமுறையை கையாண்டிருந்தால் விஷயங்கள் எளிமையாக இருந்திருக்கும். ஆனால் அது சாத்தியம் அற்றது. உதாரணமாக இந்தியாவில் சங்கீதம் ,குறிப்பாக கர்நாடக இசை இந்த top town அணுகு முறைப்படி வளர்க்கப்பட்டது. இஷ்டத்துக்கு ஒருவர் உள்ளே  நுழைந்து பைரவிக்கு இனிமேல் சதுஸ்ருதி தைவதம் வேண்டாம் என்று இலக்கணங்களை மாற்றும் அனுமதி அதில் இல்லை. வெங்கட மகி என்பவரால் வகுக்கப்பட்ட 72 மேள கர்த்தா ராகங்கள் , பகுப்புகள், தொகுப்புகள் இன்றும் பின்பற்றப் படுகின்றன. இன்றும் ஒருவர் புதிய ராகத்தை கண்டுபிடித்தாலும் அது இந்த scheme -இல் பொருந்தும். ஆனால் இந்த அப்ரோச் அறிவியலுக்கு சரி வராது. மாண்டலோவின் தனிம வரிசை அட்டவணை ஓரளவு top -down என்று சொல்லலாம்.


தனித்தனியாக விஞ்ஞானிகள் செயல்பட்டு வந்தாலும் ,தங்கள் ஆராய்ச்சிகளில் முழுமையாக இருந்திருக்கிறார்கள். ஆராய்ச்சிகளுக்காக முழு வாழ்வையே அர்பணித் திருக்கிறார்கள். சில உதாரணங்கள் தருகிறேன்.



சூப்பர் நோவா:

 சூப்பர் நோவா என்பது ஒரு அரிதான பிரபஞ்ச நிகழ்வு. ஏன், 'மிக' அரிதான என்று சொல்லலாம். ஒரு நட்சத்திரம் (குறிப்பிட்ட நிறை கொண்ட நட்சத்திரம்) தன் வாழ்நாள் முடிந்ததும் தாறுமாறாக வெடித்துச் சிதறுவது!(இதைப் பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்) வெகு நாட்களாக ஒரு விஷயம் புதிராக இருந்து வந்தது. big bang எனப்படும் பெருவெடிப்பின் போது இருந்த வெப்பம் (ஆற்றல்) கனமான தனிமங்கள் உருவாக போதுமானதாக இல்லை. மேலும், விண்மீன்களில் ஏற்படும் அணுக்கரு இணைவு (fusion ) மூலம் இரும்பை விட கனமான தனிமங்கள் உருவாவதில்லை. ஆனால் நாமெல்லாம் (உயிர்கள், intelligent civilization ) உருவாக கனமான தனிமங்கள் தேவை...(நிக்கல், காப்பர்..) இவை சூப்பர் நோவா விளைவு மூலம் வந்திருக்கலாம் என்று ஒருவழியாக கண்டுபிடித்தார்கள். (நாம் விரும்பி அணிந்து கொள்ளும், கல்யாண்  ஜுவல்லரி மூலம் புரட்சி செய்யும் தங்கம் உண்மையில் பூமியில் பிறந்தது அல்ல. அது சூப்பர் நோவா தந்த வரம். வைரம் தான் பூமியின் சொந்தம்! )இது neutron capture எனப்படும் விளைவு (இப்போது வேண்டாம்) . ஒரு நட்சத்திரம் தன் வாழ்நாள் முழுவதும் வெயிடும் ஆற்றலை சூப்பர் நோவா ஒரு வாரத்தில் வெளியிட்டு முடித்து விடுகிறது! பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளில் ஒன்றாக அவைகளிடம் இருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவுக்கு எந்த சூப்பர் நோவாவும் நிகழக் கூடாது என்று சொல்கிறார்கள். ஒரு பேச்சக்கு நம் அருகில் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய நட்சத்திரம் ஒன்று இப்போது இந்தக் கணம் வெடித்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம்.  2113 செப்டம்பர் 4 அன்று  நமக்கு அழிவு காலம் தான். [விளைவு நமக்கு வர குறைந்தது  100 வருடம் ஆகும்]அன்றில் இருந்து பூமியில் இரவு என்பதே இருக்காது. நம் இரவு (பகல்) ஆயிரம் மடங்கு அதிக வெளிச்சத்துடன் இருக்கும். பார்க்கலாமே நல்லா இருக்கு என்று வெளியே போனால் சூப்பர் நோவா நம் தோலை உருக்கி deep fry செய்து விடும். ஒரு வாரத்தில் பூமி சுடுகாடு! 

 வானத்தில் இவைகளை கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல. உங்களிடம் கோடிக்கணக்கான புள்ளிகளைக் கொண்ட ஒரு பெரிய ராட்சத பலூன் கொடுக்கப்படுகிறது . ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பலூனில்  இப்போது புதிதாக ஏதேனும் புள்ளிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்று உங்களிடம் கேட்டால் பதில் சொல்வது கஷ்டம் தானே? இப்படித் தான் சூப்பர் நோவாக்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. வானத்தில் வெற்றிடம் ஒன்றில் ஒளிப்புள்ளிகள் புதிதாக ஏதேனும் தோன்றி உள்ளனவா என்று கண்டுபிடிப்பது. இதை ஆரம்பித்து வைத்தவர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி இவான்ஸ் ! தன்னுடைய ஸ்கேல் சைஸ் டெலஸ்கோப்பை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 சூப்பர் நோவாக்களை ரெக்கார்ட் செய்திருந்தார். இவான்ஸ் சூப்பர் நோவாக்களுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்தார் . தினமும் நைட் ஷிப்ட் தான் ! காலையில் தான் தூங்குவது !1987 இல் சால் பெர்ல்மட்டர் என்பவர் சூப்பர் நோவாக்களை கண்டறிய கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் ஒன்றை கண்டுபிடித்தார். கேமரா , தினமும் இரவு நூற்றுகணக்கான படங்கள் எடுத்து கம்ப்யூட்டருக்கு அனுப்ப, அது புதிதாக முளைத்துள்ள வெளிச்சப்புள்ளிகளை automated program மூலம் தேடும்...! இந்த புதிய முறை பற்றி அறிந்த இவான்ஸ் , it took all the romance out of it! என்று சொல்லிவிட்டு கடைசி வரை தன் 10 இன்ச் டெலஸ்கோப் -உடனேயே ரொமான்ஸ் செய்தார். ரொமான்ஸ் என்பது இங்கே சரியான வார்த்தை என்று தோன்றுகிறது.வானவியல் விஞ்ஞானிகள்  வின்மீன்களுடனும் , நெபுல்லாக்களுடனும் , காலக்சிகளுடனும் அளவு கடந்த காதலில் திளைத்தார்கள்!

இன்று நமக்கு எல்லாமே விரல் நுனியில் கிடைக்கிறது. இவான்ஸ்-க்கு கம்ப்யூட்டர் தெரியாது. அவர் தன் குறிப்புகளை கையால்தான் எழுதினார். 
இன்று நமக்கு  பிரபஞ்சம் மிகப்பெரியது என்று தெரியும். (well , சில பேர் , பிரபஞ்சம் நாம் நினைப்பது போல அவ்வளவு பெரியது அல்ல..என்கிறார்கள். தொலைநோக்கியில் தெரியும் தூரத்து காலக்ஸிகள் உண்மையில் நம் பக்கத்து காலக்ஸிகளின் பிம்பம் தான். ஒளி பிரபஞ்சத்தின் எல்லை வரை பயணித்து வளைவதால் நாம் பார்த்த காலக்ஸிகளை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம் என்கிறார்கள். குழந்தை கண்ணாடியில் பார்த்து விட்டு உள்ளே இன்னொரு பாப்பா இருப்பதாக நினைத்துக் கொள்வது போல! சில பேர், extreme ஆக சென்று இருப்பது நம் பால்வெளி காலக்ஸி ஒன்று மட்டுமே தான் என்கிறார்கள். சரி இந்த mirror -effect பற்றி பிறகு பேசலாம்) ஒண்ணரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலமே ரொம்பப் பெரியது. ஏன் பூமியே கூட! பூமியின் நிறை, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம், பூமியின் சுற்றளவு , வயது இவைகளை கண்டறியவே மண்டையை உடைத்துக் கொண்டார்கள். பூமியின் சுற்றளவை ஒரு பெரிய கயிறை பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் வரை ஓட்டை போட்டு உள்ளே விட்டு அதை அளந்து அந்த மதிப்பை Pi யால் பெருக்கி கண்டறிந்தார்கள். lol , சும்மா சொன்னேன். இந்த மதிப்புகளை அந்தக் காலத்திலேயே கம்ப்யூட்டர், கால்குலேட்டர், லேசர் இவைகள் இன்றி எப்படி துல்லியமாக கண்டறிந்தார்கள் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
Physics is interesting! 



சமுத்ரா .