இந்த வலையில் தேடவும்

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, January 17, 2016

ஜோதிடம்


ஜோதிடம் கொஞ்சம் நெருடலான விஷயம். ஜோ. அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்டது என்கிறார் ஓஷோ. இந்தப்பக்கம் அறிவியல் அந்தப்பக்கம் ஆன்மிகம். முற்றிலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாத முற்றிலும் பொய் என்று ஒதுக்கி விட முடியாத ஒன்று ஜோதிடம். முதலில் ஜோதிடமும் வானவியலும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. வானியல் என்றால் ஒன்பது கிரகங்கள், சில நட்சத்திரங்கள் அவ்வளவே. இப்போது தான் காஸ்மாலஜியில் காலக்ஸிகள் , நெபுலாக்கள் , சூப்பர் நோவாக்கள் என்று போய் விட்டோம். பின்னர் சில சாமார்த்திய  ஆசாமிகள் ராஜாவை தாஜா செய்து எதிர்காலம் கணித்தல், போருக்கு செல்ல நல்ல நாள் குறித்துக் கொடுத்தல் போன்றவற்றை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். அது இன்று வரை 'பெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருப்பதால் கணவனிடம் சுகம் பெறுவதில்லை'  என்ற ரேஞ்சுக்கு படுக்கை அறை வரை டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது.

ஜோதிடம் ஆன்மிகம், அறிவியல் என்ற தன் இரண்டு துருவங்களில் இருந்தும் விமர்சனத்துக்கு ஆளாகி வந்துள்ளது. அறிவியல், கிரகங்கள் உயிரற்ற வெறும் பாறைகள். சூரியனுடைய பந்தத்தால் பிணைக்கப்பட்டு சுற்றி வருபவை உனக்கு திருமணம் எப்போது ஆகும் என்று அவை எப்படி நிர்ணயிக்கும் என்று கேட்கிறது. அடுத்த துருவத்தில் பக்தர்கள் , எனக்கு இறைவன் ஒருவன் போதும், நாள் நட்சத்திரம் எல்லாம் வேண்டாம். சந்திரனே அபிராமிக்கு குண்டலம் தானே!

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த        

கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு    
 தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்          
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

எல்லாமே கோள்கள் தான் என்றால் கடவுளுக்கு என்ன வேலை?

சரி...

நம்மைச் சுற்றிக் கவிழ்ந்திருக்கும் வானத்தில் அரைக் கோளத்தில் இந்த ஒன்பது கோள்கள் சுற்றுகின்றன. அந்தக் காலத்தில் இதை ஒரு வான கடிகாரமாகப் பயன்படுத்தினார்கள். அவ்வளவே. கடிகாரம், காலண்டர் எல்லாம் மிகவும் பின்னால் வந்த சமாச்சாரங்கள். அந்தக் காலங்களில் அறுவடைக்கு காலம்  தெரிய வேண்டி இருந்தது. விதைப்பதற்கு காலம் அறிய வேண்டி இருந்தது. திசை அறிய வேண்டி இருந்தது. ஒருவரின் வயது தெரிய வேண்டி இருந்தது. இஸ்லாமியர்கள் மெக்காவின் திசை நோக்கித் தொழ வேண்டி இருந்தது. இப்படி.. இதற்கெல்லாம் வானத்தைத் தான் பார்த்தார்கள். perfect clock !! உதாரணமாக திருவாதிரை நட்சத்திரம் எழும் போது மழை பொழியும். விதை விதைக்க ஏற்ற நேரம். ஆடிப்பட்டம் தேடி விதை. பன்னெடும்காலமாக Polaris எனப்படும் துருவ நட்சத்திரத்தை வைத்தே வட திசையை அறிந்து வந்துள்ளார்கள் பயணிகள். துருவ நட்சத்திரம் வானத்தில் கண்டபடி அலைந்து திரியாமல் வடக்குத் தொடுவானில் அப்படியே நிற்கும். எனவே காம்பாஸ் வரும்வரை அது ஒரு சிறந்த திசைகாட்டி.


சந்திரன் நம் பூமியை சுற்ற கிட்டத்தட்ட 27 நாட்கள் ஆகின்றன.இந்த 27 நாட்களும் சந்திரன் தன் பின்னணியில் இருக்கும் 27 நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து செல்கிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை கற்பனையாக கோடு இணைத்து வரைந்து குதிரைத்தலை (அஸ்வினி) , கை (ஹஸ்தம்) என்றெல்லாம் பெயர் இட்டார்கள். சில தனி விண்மீன்கள். (மகம், சித்தரை...) பல, பெரும்பாலும் விண்மீன் கூட்டங்கள். குழந்தை பிறக்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் பின்னணியில் இருக்கிறதோ அதுவே அந்தக் குழந்தையின் பர்த் ஸ்டார். சில நட்சத்திரங்கள் நல்ல நட்சத்திரங்கள் என்று சொல்வது நாம் முதலிலேயே கூறிய பருவ நிலைகளை வைத்துத் தான். சூரியன் தன் பின்னணியில் இந்த 27 நட்சத்திரங்களையும் கடந்து செல்ல ஓர் ஆண்டு ஆகிறது. உதாரணமாக இன்று சூரியன் மக நட்சத்திரத்தில் உள்ளது என்றால் சூரியன் இன்று எழும் போது கூடவே மகம் எழுந்தது என்று அர்த்தம். தோராயமாக இரண்டு வாரங்கள் சூரியன் மகத்தில் இருக்கும். சில நட்சத்திரங்கள் தோன்றும் போது நல்ல மழை பொழிந்து சுபிட்சம் ஏற்பட்டதால் அவை சுப நட்சத்திரங்கள் எனப்பட்டன. சில நட்சத்திரங்கள் தோன்றும் போது பஞ்சம் வந்தது. இவை ஐந்தாறு முறை ரிபீட் ஆனதும் அந்த நட்சத்திரம் கெட்டது ஆகி விட்டது. உண்மையில் எல்லா நட்சத்திரங்களும் எரியும் ஹைட்ரஜன் பந்துகள் அவ்வளவே. நல்லதாவது கெட்டதாவது !


பூமி சூரியனை சுற்றி வருவதால் ஒவ்வொரு மாதமும் சூரியனின் பின்னணியில் உள்ள விண்மீன்கள் மாறுகின்றன. இந்த சுற்றுவட்டப் பாதையை 12 பகுதிகளாகப் பிரித்து அதில் கற்பனை உருவங்களை வரைந்து அதை ராசி என்றார்கள். சில நட்சத்திரக் கூட்டங்கள் கற்பனையாக ஆட்டை உருவாக்கின. ( மேஷம்) சில ஒரு  குடத்தை. (கும்பம்) இப்படி.


இப்படி மாதம் ஒரு ராசி வீதம் சூரியன் ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் கடக்கிறது. (அல்லது கடப்பது போல தோன்றுகிறது)  ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சூரியன் செல்வது சூரியப் பெயர்ச்சி அல்லது சங்கராந்தி எனப்படுகிறது. நாம் பொங்கல் என்று அழைப்பது பொதுவாக சூரியன் மகர ராசியில் நுழைவது. எனவே பொங்கல் புத்தாண்டு கிடையாது. ராசி சக்கரத்தை முடித்து சூரியன் மீண்டும் மேஷத்தில் பிரவேசிக்கும் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டு. இதே போல மற்ற கிரகங்களும் இந்த ராசிக் கட்டங்களின் பின்னணியில் பயணம் மேற்கொள்கின்றன. ஒவ்வொரு ராசியையும் சந்திரன் சீக்கிரமாக 2 1/4 நாட்களில் கடந்து விடுகிறது. வியாழன் ஒரு ராசியைக் கடக்க 1 வருடம் ஆகிறது. சனி கடந்து செல்ல 2 1/2 ஆண்டுகள். சனி ரொம்ப ஸ்லோ. இதனால் தான் சனியின் காலை கொஞ்சம் ஊனமாக்கி வைத்தார்கள். சனியை வாரத்தின் கடைசி கிழமையாகவும் வைத்தார்கள். வருடம் ஒருமுறை நமக்குத் தவறாமல் ஜோதிட சிகாமணிகள் கணித்துத் தரும் குரு  பெயர்ச்சி பலனும் 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சிப் பலனும் கிடைத்து விடுகிறது. 2 நாட்களுக்கு ஒருமுறை 'சந்திரப் பெயர்ச்சிப் பலன்' என்று புத்தகம் போட்டால் அடிக்க வந்து விடுவார்கள். வாரத்தின் ஏழு நாட்களைத் தவிர இந்த ராகு மற்றும் கேது என்ற சாயா கிரகங்கள். சூரியன் பூமியை சுற்றும் நீள் வட்டமும் சந்திரன் சுற்றும் நீள்வட்டமும் எதிர் எதிர் புறங்களில் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளிகள். உண்மையில் சந்திரன் சுற்றும் வழி இங்கிருந்து 384000 கி .மீ தூரத்திலும் சூரிய சுற்று வழி இங்கிருந்து 15 கோடி கி .மீ தூரத்திலும் உள்ளதால் அறிவியல் படி தேர் ஈஸ் நோ ராகு-கேது ஸ்நேக்ஸ்.

ஒரு குழந்தை பிறக்கும் போது வானத்தில் கோள்கள் எந்த
நிலையில் உள்ளன என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியம். 9  கோள்களும் எந்தெந்த  ராசியின் பின்னணியில் இருக்கின்றன என்று பார்த்துக் குறித்து வைப்பார்கள். சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அதுவே அந்தக் குழந்தையின் ராசி. நம் ஜாதகக் கட்டம் என்பது 12 கட்டங்களைக் கொண்டது. இவை உண்மையில் வானத்தை கிழக்கில் இருந்து மேற்காக 12 பிரிவுகளாகப் பிரித்த கற்பனைப் பிரிவுகள். வானத்தில் மீனோ, ஆடோ, கன்னிப்பெண்ணோ எதுவும் இல்லை. நாம் பிறந்த கணத்தில் சில கோள்கள் மட்டுமே வானத்தில் பார்வைக்குக் கிடைக்கும். சில மேற்கு வானில் மறைந்து கொண்டிருக்கும். சில வானத்தில் தென்படாது.  நம் ராசிக் கட்டத்தில் சில கட்டங்கள் காலியாக இருக்கும். நாம் பிறந்த போது வானில் அந்த ராசிகள் தென்படவில்லை(அந்த ராசியின் பின்னணியில் எந்த கிரகமும் இல்லை) என்பது பொருள். பிறந்த நேரத்தில் கிழக்கில் எழும் ராசி தான் அந்தக் குழந்தையின் லக்னம் அல்லது முதல் வீடு. அதற்கு அடுத்தது இரண்டாம் வீடு. சிம்ம லக்னம் என்றால் குழந்தை பிறந்த சமயத்தில் கிழக்கு வானில் சிம்ம ராசி இருந்ததாக அர்த்தம். லக்னத்தில் இருந்தே clockwise ஆக வீடுகளை எண்ணுகிறார்கள்.



கீழே உள்ளது ராசிக்கட்டம். இதில் மேஷம் முதல் மீனம் வரை ராசிகள் கடிகாரமுள் திசையில் காட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அதிபதி. மேஷத்துக்கு செவ்வாய் . குழந்தை பிறந்த போது செவ்வாய்  மேஷத்தில் இருந்தால் அந்த மேஷத்துக்கு உரிய முதல் கட்டத்தில் "செ" என்று குறிப்பார்கள். இது ஆட்சி வீடு எனப்படும். கிரகங்கள் அவற்றின் ஆட்சி வீட்டில் இருப்பது நல்ல பலன்களைக் கொடுக்குமாம்.




ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் உச்சம் பெறுகிறது. உதாரணமாக சூரியன் மேஷத்திலும் செவ்வாய் மகரத்திலும் . may be , இந்த ராசியில் இருந்தால் அந்தக் கிரகம் ஒளி மிகுந்து இருக்கும் என்பதாக இருக்கலாம். சூரியன் மேஷத்தில் இருக்கும் சித்திரையில் தானே பலமாக தகிக்கிறது? சில கிரகங்கள் சில ராசிகளில் நீசம் அடைகின்றன. உதாரணமாக சூரியன் துலாம் ராசியில் நீசம் அடைகிறது. may be , இந்த ராசியில் இருந்தால் அந்தக் கிரகம் ஒளி குறைவாக  இருக்கும் என்பதாக இருக்கலாம். பிறந்த போது கிரகங்கள் அவற்றுக்கு உரிய உச்ச ராசிகளில் இருந்து விட்டால் அதிர்ஷ்டமாம். வானவியல் ரீதியாக குழந்தை பிறந்த போது ஒன்பது கிரகங்களும் பிரகாசமாக இருந்திருக்க வேண்டும். இப்படி யாருக்கும் நடக்காது. ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் என்று அடிக்கடி கேட்பீர்கள். அவன் தொட்டதெல்லாம் தங்கம் தானாம். உண்மையில் 2, 3 கிரகங்கள் உச்சத்தில் இருந்து
விட்டாலே பயங்கர அதிர்ஷ்டம் தானாம். என் ஜாதகத்தில் ஒரு கிரகம் கூட உச்சம் இல்லை.ஹிஹி ..


இது அம்மாவின் ஜாதகம். மகத்தில் பிறந்ததால் ஜகம் ஆகிறார். சுக்கிரன் மீனத்தில் உச்சம். அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் உள்ளதைக் கவனிக்க.
 
. கிரகம் வக்கிரம் ஆவது என்று ஒரு கான்செப்ட் உள்ளது. உண்மையில் கிரகங்கள் பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றுவதால் அவைகளின் வேக மாறுபாடு காரணமாக கிரகங்கள் u turn அடிப்பது போலத் தோன்றுவது. 



ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? 


அடுத்து இந்த செவ்வாய் தோஷம். ஜாதகரின் லக்னக் கட்டத்தில் இருந்து எண்ணும் போது அல்லது சந்திரனில் இருந்து எண்ணும் போது  2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.இப்படி இருந்தால் வாழ்க்கைத் துணை மரணம், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு இவைகள் அமையுமாம். :)  கீழே செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகம் காட்டப்பட்டுள்ளது. சந்திரனில்  இருந்து 7 ஆம் வீட்டில் செவ்வாய் உள்ளது.

சரி. கடைசியாக இவை எல்லாம் எந்த அளவு உண்மை என்று விவாதிக்கலாம். முதலில் அறிவியல் ரீதியாக கோள்கள் நம்மை ஈர்ப்பு மற்றும் காஸ்மிக் கதிர்களால் மட்டுமே பாதிக்க முடியும். ஜோதிடம் பூமியை நிலையானது என்று கருத்தில் கொண்டு உருவான ஒன்று. ஆனால் பூமி அண்ட வெளியில் சுற்றும் ஒரு சின்னப்பையன் அவ்வளவே. மேலும் சூரியன் தவிர மற்ற கிரகங்களின் ஒளி சூரிய ஒளியே. இந்த லட்சணத்தில் குரு லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார் என்றால் என்ன அர்த்தம்? ஆனால் அந்த பாதிப்புகள் பூமியில் உள்ள எல்லாருக்கும் பொதுவாகவே இருக்கும். மேலும் ஏன் ஒரு ஜாதகருக்கு ராஜ வாழ்க்கை? இன்னொருவருக்கு நாய்ப்பாடு? இதற்கு போன ஜென்மத்தைக் காரணம் காட்டுகிறார்கள். சரி, போன ஜென்மத்தின் கணக்குப்படி நான் இந்த ஜென்மத்தை வாழ்ந்து முடிக்கிறேன். அப்படியென்றால் இந்த ஜென்மம் எப்படி அடுத்த ஜென்மத்தை பாதிக்கும்? போன ஜென்மத்தில் இந்த குழந்தை இந்தப் பாவம் செய்தது, எனவே இது பிறக்கும் போது நாம் 7ஆம் இடத்தில் போய் நின்று கொள்வோம் என்று செவ்வாய் நினைக்குமா? மேலும் ஜோதிடத்திலேயே ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள், விதிகள், விதி விலக்குகள், பரிகாரங்கள்.. செவ்வாய் தோஷத்துக்கே 1008 விதி விலக்குகள் உள்ளன. எது உண்மை?எல்லாமே கிரகங்கள் என்றால் மனித முயற்சிக்கு என்ன மதிப்பு?

ஜோதிடம் statistics படி வேலை செய்கிறது. 10 பேரில் 6 பேருக்கு கணிப்பு சரியாக அமைந்து விட்டால் ஆகா ! ஜோதிட சிரோன்மணி சொன்னது பலித்து விட்டது!  தப்பாக அமைந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். 
எனிவே, எதுவும் கெட்டது நடந்து விடவில்லை. மே பி , கடவுளின் கருணை! ஒரு நிகழ்ச்சி. 1186 ஆம் ஆண்டில் ஏழு கோள்கள் ஒரே ராசியில் கூடும் எனவும் அப்போது பெரும் சூறாவளி வரும் எனவும் இங்கிலாந்தில் ஜோதிடர்கள் பயமுறுத்தினார்கள். ஐரோப்பாவில் பல இடங்களில் தரைக்கடியில் பதுங்கு அறைகள் அமைக்கப்பட்டன. மக்கள் உண்ணாநோன்பு இருக்கப் பணிக்கப் படுகிறார்கள். ஆனால் அஞ்சியது போல எதுவும் நடக்கவில்லை, அன்றைய நாளில். இதைக் கிண்டலடித்து யோர்க் க்ரோனிகள் என்னும் பத்திரிகையில் ஒரு பாதிரியார் இவ்வாறு எழுதுகிறார்: "மேடையில் இருந்து பேராயர் விட்ட குசுவைத் தவிர வேறெந்த காற்றும் அடிக்கவில்லை".. :)

10 க்கு 8 குசுக்கள் வந்தாலும் கோ -இன்சிடன்ஸ் ஆக வரும் 2 சூறாவளிகளால் ஜோதிடம் இன்னும் பிழைத்துக் கொண்டுள்ளது. ஜோதிடர்களின் பணப்பையையும் நிரப்பி வருகிறது. அடியேன் எப்போதும் நாள் என் செயும் கட்சி மட்டுமே.

சமுத்ரா ..







Thursday, January 7, 2016

பாண்டிச்சேரி - பயணக் கட்டுரை

நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாக்-இல் சந்திக்கிறோம். :)

If traveling was free, you will never see me again என்பது எனக்குப் பொருந்தும். :) புதிய இடங்களை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரங்களை எக்ஸ்ப்ளோர் செய்வது மிகவும் பிடிக்கும். பொதுவாக, தனியாகவே கிளம்பி விடுவேன். தனியாகச் செல்வதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. செலவுகளை ஒருவரே ஏற்க வேண்டும். உடம்புக்கு ஏதாவது என்றால் ரிஸ்க். ஆனாலும் அதில் கொஞ்சம் சவுகரியங்கள் இருக்கவே செய்கின்றன. நானே ராஜா நானே மந்திரி. யாருக்காகவும் காத்திருக்கத் தேவை இல்லை. நினைத்த இடங்களுக்குச் செல்லலாம். பாண்டிச்சேரிக்கு ஒரு சோலோ ட்ரிப் கிளம்பி விட்டேன். பெங்களூரு கிருஷ்ண ராஜ புறத்தில் இருந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் .11005 பெங்களூருவில் பயங்கரக் குளிர். இரண்டு ஜாக்கெட்டுகள் போட்டுக் கொண்டிருந்தாலும் குளிர் ஊடுருவிக் கொண்டு உள்ளே பாய்கிறது. அந்தக் குளிரிலும் பிளாட் பாரத்தில் ஒருவர் லேசான சட்டை மட்டுமே அணிந்து படுத்திருந்தார். "சுர மந்திர தரு மூல நிவாஸ :" என்று ஆதி சங்கரர் சொல்வது போல. வானமே கூரையாய் ...நமக்குத் தான் ஜாக்கெட், ஸ்வட்டர், ஷூ என்று ஆயிரம் சுமைகள். எனிவே, டிரெயின் சரியாக 10:30 க்கு குறித்த நேரத்தில் பந்து சேரி விட்டது. மும்பையில் இருந்து வந்தாலும். குர்லா குர்லா என்று பெங்களூருவில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் உண்டு. மறுநாள் கோயமுத்தூரில் ஏதேனும் அவசர வேலை என்றால் அதை தயவு செய்து புக்கி விடாதீர்கள். ஸ்கெட்யூல் டைம் 22:15 தான். அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருநாள் SBC க்கு அதிகாலை 3:30 மணிக்கு சாவகாசமாக வந்து சேர்ந்தது. ஆற அமற கோவைக்கு காலை 11:30 க்குப் போய்ச் சேர்ந்தது.

ம்ம்ம்..

கூட்டம் அதிகம் இல்லை. வீக் டே என்பதால். லோயர் பர்த் . எதிர் சைடு லோயரில் ஆர். ஏ  .ஸி என்று 3 பெண்கள் ஒன்றாக அமர்ந்திருந்து அரட்டை அடித்துக் கொண்டே வந்தார்கள். அடுத்ததில் நண்பர்கள் குழாம் ஒன்று சிரத்தையாக சீட் ஆடிக் கொண்டிருந்தார்கள். லைட்டை அணைக்கவில்லை. ட்ரையின் பயணத்தின் போது எனக்கு இந்த அரட்டை ஆசாமிகள் அலர்ஜி. கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பர்த்தை மேலே மாட்டி லைட்டை அணைத்து தூங்கி விட வேண்டும் எனக்கு. நல்ல வேளையாக அரட்டை ஆசாமிகள் காட்பாடியில் இறங்கி விட்டார்கள்.

சரியாக ஏழு மணிக்கு புதுச்சேரியை அடைந்து நின்றது வண்டி.

ஆட்டோ வாலாக்கள் லிட்டெரல் ஆக பகல் கொள்ளை அடிக்கிறார்கள். பாண்டியில் முழுவதும் ஆட்டோ ராஜ்ஜியம் தான் போலும். சிடி பஸ்கள் மருந்துக்கும் கண்ணில் தென்படவில்லை. பிளாட்பாரத்துக்கே வந்து ஆட்டோ வாலாக்கள் பையைப் பிடுங்குகிறார்கள். ஸ்டேஷனுக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் unofficial ஆக நின்று கொண்டு வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஈ .ஸி .ஆர் போவதற்கு வாய் கூசாமல் 200-250 கேட்கிறார்கள். ஸ்பெஷலாக அங்கே நிற்பதற்கு அவர்கள் பணம் கட்ட வேண்டும் என்று சொல்வது நம்ப முடியவில்லை. மீட்டர் என்ற ஜந்துவை எதற்கு வம்பு என்று நன்றாக பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி வைத்து விட்டார்கள். மீட்டர் என்றால் ஏதோ கெட்ட வார்த்தையை செவி மடுத்தது போல முகம் சுளிக்கிறார்கள் .சரி. நமக்கு முதல் ட்ரிப் என்பதால் வேறு வழி இன்றி ஏறினேன். தெரியாமல் லாஸ்பெட்டில் ஹோட்டல் புக் செய்து விட்டேன். 

முதலில் மங்கலகரமான மீன் வாசனையுடன் உங்களை வரவேற்கிறது புதுச்சேரி.
சாலைகள் சுத்தமாக இருக்கின்றன. காலைக் குளிர் கொஞ்சம் காற்றில் கலந்திருந்தது. எம்.ஜி.ஆர் ரீகென்சி என்ற விதோனப் பெயர் கொண்ட ஹோட்டல். ஹோட்டலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு மதியம் 12 மணி வாக்கில் ஆரவில் கடற்கரைக்கு சென்றேன்.
வாவ். கடற்கரை மனித நடமாட்டம் இல்லாமல் அழகாக  இருந்தது. சென்னை கடற்கரையைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு பாண்டிச்சேரியின் சுத்தமான கடற்கரைகள் ஆச்சரியத்தைத் தரும். வெயில் அதிகம் என்பதால் திரும்பி வந்து விட்டேன். வழியில் வெளிநாட்டுப் பெண்கள் ஜோராக பைக்குகளில் பறக்கிறார்கள். ஒரு நல்ல வெஜ் ஹோட்டலுக்குச் செல்லுமாறு ஆட்டோவைப் பணித்தேன். அவர் சர்குரு என்ற ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழையத் தயக்கமாக இருந்தது. ஏனெனில் உள்ளே முழுவதும் வெளிநாட்டுக் காரர்கள். நம் நாடுதான் என்றாலும் அவர்கள் உளவியல் ரீதியாக நமக்குள் ஒரு inferiority யை ஏற்படுத்தி விடுகிறார்கள். சர்வர்களும் வெளி நாட்டவர்களை கொஞ்சம் எக்ஸ்டிரா கவனத்துடன் கவனித்தார்கள். இருப்பினும் அவர்கள் நம் சவுத் இன்டியன் மீலை வெறும் கைகளில் பிசைந்து சாப்பிடுவது பார்க்க அழகாக இருக்கிறது. யுவதி ஒருவர் பெரிய அப்பளத்தைக் கையில் வைத்துக் கொண்டு இந்த வஸ்துவை கடிப்பதா, உடைப்பதா, என்று தெரியாமல் நோக்கிக் கொண்டிருந்தார். பாண்டியில் எல்லா இடங்களும் ஒருவித exotic (தமிழில் என்னவோ) இருக்கின்றன. இந்த உணவகமும் அப்படியே. பில் 180 
ரூபாய் வந்தது. உணவு நன்றாகவே இருக்கிறது.ஐரனி என்ன என்றால் நம் நாட்டுக் காரர்கள் ஒன் நூடுல்ஸ் ப்ளீஸ் என்று ஆர்டர் செய்து கொண்டிருக்க அவர்கள் நம்மூர் பூண்டு ரசத்தை இன்னும் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உணவகத்தின் வெளியே லோக்கல் பெண்கள் சுருக்குப் பைகளை பரப்பி வைத்து விற்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் அதை ஆர்வமுடன் வாங்குகிறார்கள். 



ஆட்டோ எம். ஜி. ரோடு வழியே செல்கிறது. எம்.ஜி ரோடு பழமையும் புதுமையும் கலந்து அழகாக இருக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத சிறிய பொதுக்கூட்டம் ஒன்றில் ஒருவர் கர்ம சிரத்தையுடன் ஜெயலலிதாவை திட்டிக் கொண்டிருக்கிறார். பழங்காலக் கட்டிடங்கள் காணக் கிடைக்கின்றன. சைக்கிள் ரிக்ஷாக்கள் இருக்கின்றன. அதில் யாரும் பயணிப்பதாகத் தெரியவில்லை. வழியெங்கிலும் ஏழை மாரியம்மன், ரட்சக மாரியம்மன் என்று வினோதப் பெயர்கள் கொண்ட கோயில்கள் காணக் கிடைக்கின்றன. அம்மாவைப் புகழும் போஸ்டர்கள் ஒன்றிரண்டு அங்கேயும் விதிவிலக்கு இல்லை போலும். ஆட்டோக்காரர் இப்போது காந்தி சிலை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.

இன்னோர் அழகிய கடற்கரை. இங்கே மணல் இல்லை. நுரை ததும்பும் பெரிய அலைகள் மெகா சைஸ் கருங்கற்களை மோதி மோதி பாலிஷ் செய்கின்றன. கடலில் இறங்க இந்த அபாயகரமான கற்களைக் கடந்து செல்ல வேண்டும். தைரிய இளைஞர்கள் சிலர் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள். காந்தி சிலைக்கு எதிரே பாண்டிச்சேரி அரசின் சார்பில் சர்வதேச யோகா பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கே ஈயாடியது. ஏழெட்டு தலைகள் அங்கே வெயிலுக்கு ஒதுங்கி விருந்தன. மைக்கில் ஒரு பெண்மணி கடமை உணர்ச்சியுடன் கிட்டத்தட்ட தமிழ் போல் இருந்த ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தார். concentrate  anagatha chakra; concentrate  moolaadhar chakra என்றெல்லாம். எனக்கு உண்மையில் சக்ரா கோல்ட் டீ தான் சாப்பிட வேண்டும் போலிருந்தது. குண்டலினி எழும்புகிறதா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மட்ட மட்ட மத்தியான வேளையில். வெல் எனக்கு ஏப்பம் தான் எழும்பியது.



நிற்க. இப்படி பல்க் ஆக யோகாவை கற்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது குரு சீடன் இருவருக்கு இடையேயான one -to -one relationship . மருத்துவர் ஒருவர் ஆயிரம் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு மாஸ் வைத்தியம் பார்த்தால் எப்படி இருக்கும்? அது போலத்தான் இது. ஒவ்வொருவரின் உடல் மன சித்தங்கள் வேறு பட்டவை. எனிவே மாஸ் யோகாவில் ஒரு அரை மணிநேரம் பொழுது போனது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள சில கபே க்கள் நம்மை அரை நூற்றாண்டு பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. ஹிலாரியஸ்! 



மீண்டும் ஹோட்டல் அறைக்குத் திரும்பி லோக்கல் சானல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
தூக்கம் வரவில்லை. மாலை 5:15 மணிக்கு மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பி விட்டேன். கொண்டுவந்த பணத்தில் பெரும்பாலான பகுதி ஆட்டோவுக்கே கரைந்து கொண்டிருந்தது. ஆசிரமம் மற்றும் கணேஷா டெம்பிளுக்கு மீண்டும் ஒரு 150/-


அரவிந்தரின் ஆசிரமம் நகருக்கு நடுவே அமைதியான இடத்தில் சுத்தமான சுற்றுப் புறத்தில் வீற்றிருக்கிறது. சாலைகள் அதி சுத்தம். ஆசிரமத்தின் 10% பகுதி மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப் படுகிறது. அதுவும் மாலை ஆறு மணிவரை மட்டுமே. நான் போகும் போது  5:40 ஆகி விட்டிருந்தது. ஆசிரமத்தின் உள்ளே ஒரு பெரியவர் நின்று கொண்டு பேஷாதீர்கள் என்று உதட்டின் மேல் விரல் வைத்து செல்லமாக அதட்டிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஈஷா யோக மைய தியான லிங்க மண்டபம் போல் இருக்கிறது. அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அதைச் சுற்றிலும் மக்கள் மண்டியிட்டு அமர்ந்து வணங்குகிறார்கள். சுற்றிலும் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். பறவைகளின் ஒலி அந்த சூழ்நிலைக்கு அழகு சேர்க்கிறது. வாசனை ஊதுபத்தி எரிகிறது. சமாதி மேல் இலைதழைகள் விழாமல் இருக்க வலைகளைக் கட்டி உள்ளார்கள். கூன் விழுந்த பாட்டிகள் தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். 75% வெளிநாட்டவர்கள் தான். பெரும்பாலான இடங்கள் No Access !
 ஆசிரமத்தில் ஒருவித பாசிடிவ் அதிர்வுகள் நம்மைத் தொற்றிக் கொள்வது உண்மை. மாலையில் கொஞ்சம் மூட் அவுட் ஆகி இருந்தேன். what am I doing with my life என்று. ஆசிரம விசிட்-டிற்குப் பிறகு அப்படி ஒரு உற்சாகம். 



அடுத்து ஆசிரமத்தை ஒட்டி உள்ள, புகழ் பெற்ற மணக்குள விநாயகர் திருக்கோயில். கோயிலின் முன்னே லக்ஷ்மி என்ற பெயர் தாங்கிய கம்பீர யானை ஒன்று நிற்கிறது. அதை மக்கள் போட்டோ எடுத்தும், ஆசீர்வாதம் வாங்கியும் இம்சித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு இந்தக் கோயில்களில் யானைகளை இம்சிப்பது பிடிக்கவே பிடிக்காது. உள்ளே விநாயகரை வணங்கி விட்டு வெளியே யானையை வேடிக்கைப் பொருளாக வைத்திருப்பது மிகப்பெரிய ஐவரி சாரி ஐரனி . வெளிநாட்டுப் பெண்கள் flash களுடன் போட்டோ எடுக்கிறார்கள். பாவம் யானை! அவர்களுக்கு யானை அபூர்வம் போல. ஒருவித மினி டைனோசர் !

கோயில் ஒரு மிகப்பெரிய திருமண மண்டபம் போல இருக்கிறது. சுவர்களில் விதம் விதமான விநாயகர் உருவங்கள். முருகனுடன் பில்லியனில் அமர்ந்து செல்லும் விநாயகர், தாய்லாந்து விநாயகர், இந்தோனேஷியா விநாயகர், அன்ன வாகனம் கொண்ட பிரம்ம விநாயகர், மயூர விநாயகர், லக்ஷ்மி விநாயகர், ஹேரம்ப விநாயகர், டுண்டி விநாயகர், வாதாபி விநாயகர், சிங்கமுகம் கொண்ட விநாயகர்(இது கொஞ்சம் ஓவர்) , இரண்டுமுக, மூன்றுமுக , ஆறுமுக விநாயகர் இப்படியெல்லாம். கடவுள்களிலேயே இப்படிப்பட்ட ஒரு பாலிமார்பிசம் விநாயகருக்கு மட்டுமே வாய்த்துள்ளது. மேற்கூரையில் திருமால் விநாயகரிடம் பாஞ்சஜன்யம் வாங்குதல் கஜமுகாசுர வாதம் ஞானக்கனி பெறுதல் போன்ற ஓவியங்கள். விநாயகர் கோலாகலமான கடவுள். கருவறையில் மணக்குள விநாயகர் சப்பணமிட்டு அருள் பாலிக்கிறார். சுற்றிலும் முருகன், மற்றும் உற்சவர் சந்நிதிகள். சிறிய கோயில் தான். சிறிய கோயில் என்றாலும் அங்கே சைடில் ஒரு சிறப்பு தரிசனக் க்யூ நகர்ந்து கொண்டிருக்கிறது. கான்ட் ஹெல்ப்.

ஆசிரமத்தை சுற்றியுள்ள வீதிகளில் பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். புத்தகம் மற்றும் துணிக் கடைகள். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். எல்லாமே வெளிநாட்டவர் வருகையால் கொள்ளை விலை. எத்தனை சொன்னாலும் அவர்கள் புன் முறுவலுடன் பேரம் பேசாமல் வாங்கி விடுகிறார்கள். அருகில் அடையாறு ஆனந்த பவன். அங்கே பிரபலமான கொழுக்கட்டை சாப்பிட்டேன். மீண்டும் கடற்கரை விசிட். இரவில் கடற்கரை அழகாக ஜொலிக்கிறது. வெண்ணிற நுரைகளுடன் இத்தனை பெரிய அலைகளை பாண்டியில் தான் பார்க்கிறேன். கடலைப் பார்க்கப் பார்க்க பரவசம். அது எல்லைகள் இல்லாமல் விரிந்து இருப்பதாலோ என்னவோ. நாம் எல்லைகளுடன் உள்ளவைகளையே பார்த்துப் பழகி விட்டோம். கடல் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. என்னதான் இருந்தாலும் அது நமது பிறந்த வீடு அல்லவா? 
கடற்கரை உணவகம் ஒன்றில் பிரைடு ரைஸ் சாப்பிட்டு பாண்டியில் ஒருநாள் இனிதே முடிந்தது. ஆட்டோக் காரர் சைக்கிள் கேப்பில் "சார், மசாஜ் சார், கேர்ள்ஸ் , சூப்பரா இருக்கும், போலாமா " என்றார். பெங்களூரில் இல்லாததா அய்யா என்று கேட்டவுடன் அமைதியாகி விட்டார். என் பர்ஸ் மட்டும் தலைவனை எண்ணி வாடும் தலைவியின் இடை போல சிறுத்துக் கொண்டே வந்தது. 

ஹோட்டலின் மெத்து மெத்தென்ற படுக்கையில் நன்றாகத் தூங்கிப் போனேன். மசாஜ் பார்லர் செல்வது போல கனவு வந்தது.

கடைசியாக ஆரோவில். மறுநாள். ஈ .ஸி .ஆர். இல் இருந்து ஆரோவில் செல்ல ரூ.550/- ஆட்டோ கட்டணம்.! :)



உலகம் முழுவதையும் ஒரே சமுதாயமாக அமைத்துப் பார்க்கும் ஒரு பரிசோதனை முயற்சி ஆரோவில். ஓஷோ கூட இதை கம்யூன் என்ற பெயரில் முயற்சித்து இருக்கிறார். அரசியல், குடும்பம், பணம், மூடப் பழக்கங்கள் இவைகள் இல்லாத ஒரு அட்வான்ஸ்ட் கான்செப்ட் இவை. இங்கே யாவரும் சமம். பிரிவினை பேதங்கள் இல்லை. வாசுதேவ குடும்பகம். ஆனால் இவையெல்லாம் நடைமுறைக்கு வர இன்னும் 500 வருடங்கள் ஆகலாம். பறந்து விரிந்த நிலப்பரப்பு ஆரோவில். நடப்பவர்கள் நடக்கலாம். சில பேர் சைக்கிள்களில் செல்கிறார்கள். சிலர் ஆசிரம வண்டிகளில். ஏரியா முழுவதும் சுத்தம் அமைதி, ஏகாந்தம், சௌந்தர்யம், பசுமை... இங்கேயும் பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். வழி நெடுகிலும் கிளை பரப்பிய ஆல மரங்கள். தோட்டங்கள். இதன் மெயின் மேட்டர் க்ளோப் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு ஜொலிக்கும் தியான மண்டபம். போகும் வழியெங்கும் சாதகனுக்கு இருக்க வேண்டிய 12 அவசிய குணங்களைக் தாங்கிய போர்டுகள். Sincerity , humility , courage இப்படியெல்லாம். பார்வையாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி. வரும் வழியில் கடைகள், உணவகங்கள், காபி ஷாப்கள்...as usual கொள்ளை விலை. 






 கோளத்தைப் பார்த்து மூன்று பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.


"உள்ளே என்னடி இருக்கு?"

"பெரிய புதையல் இருக்காம்"

"உள்ளே சாமி இருக்காம்"

மூன்றாம் பெண்:

"உள்ளே ஒண்ணுமே இல்லை!"

-ஒரு ஜென் கதைக்கான தகுதி இந்த சம்பவத்துக்கு இருக்கிறது.




இத்துடன் என் பாண்டிச்சேரி பயணம் இனிதே நிறைவேறியது. மீண்டும் பெங்களூருவுக்கு 
தாதர் எக்ஸ்பிரஸ். ரயில் முழுவதும் சிறுவர் சிறுமியர்களால் நிரம்பி இருந்தது. கையில் யோகா மேட் . கேட்டால் யோகா காம்பெடிஷன் என்றார்கள். யோகாவிலும் போட்டியை நுழைத்து விட்டார்கள் நம் ஆட்கள்.

மொத்தத்தில் தன்னை நாடி வருபவர்களை ஏமாற்றாத ஓர் அழகிய அமைதியான கடற்கரை நகரம் பாண்டிச்சேரி.


~சமுத்ரா 

















Wednesday, November 7, 2012

பேய் இருக்கிறதா? ...


 பேயை விட பேய் வரும் அறிகுறிகள் தான் திகிலானவை -யாரோ 

ஒரு சிறந்த திரைப்படம் எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? படம் முடிவை நெருங்கும் சில நிமிடங்களுக்கு முன்பே ஆடியன்ஸ் முடிவை ஒருவாறு ஊகித்து படம் விட்டதும் கிளம்புவதற்கு வசதியாக கழற்றி வைத்த ஷூவை அணிந்து கொள்ள , பாப் கார்ன் -ஐ  அவசரமாக காலி செய்ய வைக்கும் படி இருக்க வேண்டுமா?இல்லை படம் முடிந்து பெயர் போட்டதும் ஒ படம் முடிந்து விட்டதா என்ற சர்ப்ரைஸ் தரவேண்டுமா?சமீபத்தில் பார்த்த 'பிட்சா' படம் அந்த இரண்டாவது வகை சர்ப்ரைசை தந்தது. ..


பேய் பிசாசு அமானுஷ்யம் என்று எழுதப்படும் நாவல்களில் அல்லது எடுக்கப்படும் திரைப்படங்களில் கண்டிப்பாக ஏதேனும் ஒரு சமூக விரோத சமாச்சாரம் Default ஆக இருந்தே தீரும். சுஜாதா , ராஜேஷ் குமார் , இந்திரா சௌந்தர ராஜன் யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ..பேய் ஆவி பிசாசு என்று சூடு பிடிக்கும் கதைக்குள், பின் புலத்தில்  மெயின் மோடிவ் -ஆக வைரம் கடத்துவதோ போதைப் பொருளோ சிலை கடத்தலோ கொலையோ கொள்ளையோ இருக்கும்.அதாவது விஷயம் பண்ணுவது சாமி அல்ல ஆசாமி தான் என்று தெரிய வரும்.பிட்சா திரைப்படமும் இதற்கு விதி விலக்கு  இல்லை என்று தோன்றுகிறது.


காலம் முன்னேற முன்னேற பேய் பிசாசு சாமி விஷயங்களை நாவல்களிலும் திரைப்படங்களிலும் மிகவும் சூசகமாக மக்கள்  நம்பும்படி கையாள வேண்டி இருக்கிறது....பேயை நேரடியாகக் காட்டினால் அது அன் ரியலிஸ்டிக் ஆகி விடும்! சில பேர் பேய்ப்படம் என்றால் பேயை காட்டவே கூடாது என்று கூட வரையறை சொல்வார்கள்.ஈவில் டெத் போல க்ளோஸ் அப்பில் பேயைக் காட்டினால் இன்று அது காமெடி பீஸ் ஆகி விடும். காஞ்சனா கூட பேய்க்காக ஓடாமல் காமெடிக்காக ஓடியது என்று நினைக்கிறேன்.

பிட்ஸாவில் கூட நிறைய இடங்களில் ஆடியன்ஸ் சிரிக்கிறார்கள்! நம் மக்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறேன்.அல்லது  They have become matured...பேய் என்பது இப்போது காமெடி சப்ஜெக்ட் ஆகி விட்டது....இந்தத் திரைப்படத்தில் ஹீரோயும் ஹீரோயினும் ஹீரோவின் முதலாளியின் பேய் வீக்னசை காமெடி செய்கிறார்கள்!மேலும் நம் மக்களை கன்வின்ஸ் செய்வதும் கஷ்டம். பேயை காட்டவில்லை என்றால் 'என்னடா மச்சா ஒரு இடத்துல கூட பேயே வரலை,,,காசு வேஸ்ட்' என்பார்கள்.. (அதான் ஒரு சீனில் ஹீரோயின் மேக்கப் இல்லாமல் வந்தார்களே அது போதாதா என்ற ஜோக் Apart !)பேயை சும்மா சும்மா காட்டினால் பயம் போய் விடும். படத்தில் வடிவேலு அல்லது காமெடியனின் ரோலை பேயே செய்து விடும்....எனவே மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து ஓரளவு நம்பும்படியான பேய்க்கதையை தந்ததற்கு Pizza இயக்குனருக்குப் பாராட்டுகள்...

அறிவியல் ரீதியாக இந்த பேய் சமாசாரத்தை அணுகுபவர்கள் மிகக் குறைவு....முதலில் ஒன்று! மனிதன் இறந்து மீண்டும் பிறக்கும் இடைவெளிக்குள் இருக்கும் நிலையை மட்டுமே இப்போது நாம் பேய் பிசாசு அல்லது ஆவி whatever என்று வரையறை செய்வோம்.
இதைத்தவிர தனியாக பேய் என்று ஒன்று இல்லை...அல்லது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் பேய் என்ற ஒன்று தேவையில்லை என்று இயற்கை நினைத்திருக்கலாம். கறுப்பு சாரி உடுத்தி காலை எழுந்து கண்ணாடியின் முன் தலை சீவும் மனைவியை பார்க்கும் பேறு உங்களுக்குக் கிடைத்திருந்தால் ஏன் இயற்கை பரிணாம வளர்ச்சியில் பேயை தனியாக சேர்க்கவில்லை என்று விளங்கும் . இதன் மூலம் பெண்கள் பேய் என்று சொல்ல வரவில்லை. நாம் எல்லாருமே சில சமயங்களில் பேய் மாதிரிதான் காட்சி அளிப்போம்! cant help !

மனிதன் இறந்த பின் நீடிக்கும் மர்மம் ,பல்வேறு கற்பனைகளுக்கு இடமளிக்கிறது.இறந்தவனுக்கு இதை செய் அதை செய் என்று சொல்லும்  பணத்தாசை பிடித்தவர்களை இந்த மர்மம் தான் வாழ வைக்கிறது. 'உன் அப்பா உன்னைக் கொன்று விடுவார்' என்று சொன்னால் அப்பா உயிருடன் இருந்தால் எந்த மகனும் நம்ப மாட்டான்! உன் அப்பாவின் ஆவியால் உனக்கு ஆபத்து! ஆயிரம் ரூபாய் செலவு செய்து பரிகாரம் செய் என்றால் நூறில் தொண்ணூறு பேர் எதற்கு வம்பு என்று செய்து விடுவார்கள்.பேய் பிசாசு சமாச்சாரங்களையும் இந்த மர்மம் தான் இதுவரை ஏதோ ஒரு உருவில் நம் நாவல்களிலும் டி .வியிலும் திரைப்படங்களிலும் வாழ வைக்கிறது!


அறிவியல் பேயை நம்புவதில்லை . பார்க்க முடிந்த உணர முடிந்த புலன்களுக்கோ கருவிகளுக்கோ தட்டுப்படக் கூடிய விஷயங்களை மட்டுமே அறிவியல் நம்புகிறது.பேய் வந்தால் மீட்டரின் முள் அசைவது கட்டுக் கதை தான்.உடல் அழிந்ததும் எல்லாம் பூஜ்ஜியம் என்று சொல்லி கணக்கை முடித்து விடுகிறது அறிவியல்.உடலின் கார்பன் இரும்பு போன்ற தனிமங்கள் மெல்ல மெல்ல Recycle ஆகி பிரபஞ்சத்தில் வேறுவிதத்தில் உலவும் அவ்வளவே. திரைப்படங்களில் காட்டுவது போல செத்தபின்  ஆசாமி மீண்டும் அப்படியே உயிர் பெற்று வருவது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிக்கு (Second law of thermodynamics)எதிரானது. உயிருடன் இருப்பது என்பது ஒரு வித Orderly state! ஆள் செத்ததும் உடல் அவசரமாக Disorderly state ஐ நோக்கி நகர ஆரம்பிக்கிறது. பார்யா பிப்யதி தஸ்மின் காயே என்று பஜகோவிந்தம் சொல்வது போல மனைவியே பயப்படும் அளவு உடல் மிக வேகமாக அழுகத் தொடங்குகிறது; கிருமிகள் எங்கிருந்தோ ஆள் செத்து  விட்டான் என்று தெரிந்து கொண்டு அட்டாக் செய்ய ஆரம்பிக்கின்றன  ..எனவே இத்தகைய ஒழுங்கு குலைந்த நிலையில் இருந்து மீண்டும் ஆள் புதுப் பொலிவோடு திரும்பி வருவது கனவில் மட்டுமே நடக்கும்.அல்லது அப்படி நடப்பதற்கு போதுமான வெளிப்புற ஆற்றலை இயற்கை செலவு செய்ய வேண்டி இருக்கும். இயற்கை சில சமயங்களில் ரொம்பவே கஞ்சம்!
எனவே மாண்டவர் மீள்வதில்லை (பேயாகக் கூட!)
 
ஆனால் ஆன்மிகம் உடலின் வெளிப்புற அடுக்கு மட்டுமே அழிகிறது என்கிறது. ஆள் பூஜ்ஜியம் என்றால் அவன் செத்ததும் -1,-2,-3...
என்று உல்டாவாக இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்கிறது. புனரபி ஜனனம்!  முற்றும் ஞானம் அடைந்த யோகிகள் மட்டுமே தமது ஏழு உடம்புகளையும் துறந்து விட்டு பிரபஞ்சத்தில் கலக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.நம்மைப் போன்ற பாவிகள் ஆசா பாசங்களுக்கு அடிமையாகி நள்ளிரவில் பிட்டுப் படம் பார்த்தவர்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம்
ஏழு உடலையும் உருவிப் போட்டு விட முடியாது. சாகும் போது வேறு வழி இன்றி நம் மேற்புற அடுக்கு பிரிகிறது. அப்புறம் சூக்சும சரீரம் சாகாமல் அப்படியே இருக்கிறதாம்!

இந்த சூக்சும சரீரம் பெரும்பாலானவர்களுக்கு,இயற்கையாக இறந்தவர்களுக்கு  relaxed ஆக , unconscious ஆக இருப்பதால் அதை பிறர் உணர முடிவதில்லை.அவை விழித்துக் கொள்ளும் முன்பே இன்னொரு கருப்பையில் புகுந்து விடலாம்!ஆனால் சாகவே இஷ்டம் இல்லாமல் செத்தவர்கள் , ஆக்சிடெண்டில் போனவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் இவர்களின் சூக்சும சரீரம் மிகவும் துடிப்போடு மற்றொரு அல்லது தனது  பழைய பௌதீக சரீரத்தைப் பெற உயிர்ப்போடு இருக்கலாம். அந்த சமயங்களி
ல் அவர்களது இருப்பை சிலரால் (எல்லோராலும் அல்ல) (தியான நிலையில் உள்ளவர்களால் ) உணர முடியும்...உண்மையில் எந்த அளவு நாம் விழிப்பின்றி இருக்கிறோமோ அந்த அளவு நாம் ஆவிகளை உணரும் வாய்ப்பு குறைவு என்கிறார் ஓஷோ. எனவே பிட்சா விற்பவருக்கோ குடிகாரருக்கோ ஆவி கண்ணில் தெரிவது ரொம்பவே அபூர்வம். மேலும் ஆவி பேய் என்பதெல்லாம் Subjective experiences!கனவு போல பிரத்யேகமானது. என் கண்ணுக்கு ஆவி தெரிந்தால் அது உங்களுக்கும் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை....

ஒருவரை பேய் அல்லது ஆவி பிடிப்பது உண்மை என்கிறார் ஓஷோ. மிகுந்த பயந்த ஸ்வாபம் உள்ள ஒருவர் கடுமையான பயத்தில் இருக்கும் போது அவரது உயிர் மிகவும் சுருங்கிப் போய் விடுகிறது. அப்போது அருகே இருக்கும் சரீர வேட்கை மிகுந்த ஆத்மாக்கள் அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்து விட முடியும் என்கிறார். மேலும் விவரங்களுக்கு ஓஷோவின் Dimensions beyond the known படித்துப் பார்க்கவும்.


எனவே பேய் இருக்கிறதா? என்று கேட்டால் ஒரு விதத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். ரெம்யா நம்பீசன் சொல்வது போல அது அவரவர் அனுபவங்களைப் பொருத்தது.பேயும் கடவுள் போன்றது தான் ..நம் அனுபவத்தில் உணரப்படும் வரை அது கற்பனை தான்..



[N.B:


படத்தில் வரும் ஹீரோவுக்கு நிகழ்வது போல நாம் பிட்சா டெலிவரி செய்யப் போன இடத்தில் ஒரு வீட்டினுள் இருட்டில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வோம்? ப்ளாக்கில் ரொம்ப matured  ஆக பேயாவது பிசாசாவது என்று கோவை சரளா மாதிரி வசனம் பேசும் நாம் உண்மையில் ஆடித் தான் போவோம்! 

தனிமையும் இருட்டும் நம்மை எவ்வளவு பயப்படுத்தி வைத்திருக்கின்றன? எத்தனை வயதானாலும் இவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன ! உண்மையில் இவை இரண்டும் அழகான விஷயங்கள்! தியானத்துக்கு உதவக் கூடிய விஷயங்கள்...ஆனால் இவை இரண்டையும் நாம் எவ்வளவு அசிங்கமாக மாற்றி வைத்திருக்கிறோம்! உண்மையில் தனிமையிலும் இருட்டிலும் ஏற்படும் பயம் நம்மைப் பற்றிய பயம் தான் என்கிறார் ஓஷோ.பேய் என்பது ஒரு சாக்கு தான். நம்மை நாமே நேருக்கு நேர் பார்க்க பயப்படுகிறோம் அவ்வளவு தான். பகலிலும் பிறரது கம்பெனி- யிலும் நாம் நம்மையே avoid செய்கிறோம்..பிட்சா டெலிவரி செய்யப் போகும் இடத்தில் உள்ளே அடைபட்டு கரண்டும் போய்  விட்டால் நம்மைத் தவிர யாருமே இல்லை. எல்லையில்லாத நான் !அந்த 'நான்' ஐ நாம் எந்தவித மறுப்பும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.காதலி இல்லை..நண்பர்கள் இல்லை. டி . வி இல்லை.. தன்னைப் பற்றிய பயமே மனிதனை கொன்று விடுகிறது..

தனிமையை இருட்டை பயம் இன்றி எதிர் கொள்ளும் கலையை நாம் நம் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். இருட்டை நண்பனாக்கிக் கொள்வது எப்படி என்று கற்றுத் தர வேண்டும்.. இருட்டில் போகாதே, பூச்சாண்டி தூக்கிட்டுப் போயிடுவான் என்று சொல்லி வளர்க்கக் கூடாது. அம்மா வயிற்றில் நீ இருட்டில் தான் இருந்தாய்...இருட்டு உனக்கு இன்னொரு தாய்...ஆகவே பயப்படாமல் இருட்டில் போய் வா என்று சொல்ல வேண்டும். வீட்டில் யாரும் இல்லாத தனிமையில் தனக்குள்ளே உற்றுப் பார்க்கும் தியானத்தை குழந்தைக்கு நாம் தான் சொல்லித் தர வேண்டும்...

அப்படி வளர்த்தால் தான் யாரும் இல்லாத வீட்டில் கரண்ட் போய் விட்டால் கூட கொண்டாட்டத்துடன்  தியானத்தில் மூழ்கும் முதிர்ச்சியான மனிதனை நம்மால் உருவாக்க முடியும்.]


சமுத்ரா

Monday, March 5, 2012

சமுத்ரா திமிர் பிடித்தவரா? -ஓர் அலசல்

இந்த ப்ளாக்கின் ஓனர் (அது நான் தான் என்று நினைக்கிறேன்) மேல் வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகள்:

அவர் :


* திமிர் பிடித்தவர்
* மற்ற யாருடைய ப்ளாக்கிற்கும் சென்று பின்னூட்டம் போடாதவர்
* தனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாதவர்
* காப்பி அடித்து எழுதுபவர்
* ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்த்து அப்படியே தமிழில் எழுதுபவர்

-இன்னும் ஏதாவது இருந்தால் இப்போதே சொல்லிவிடவும். ஏனென்றால் நான் பாட்டுக்கு நான் அபாரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; கூடிய சீக்கிரம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்து விடும் என்று கற்பனைக் குதிரையை கட்டுப்பாடின்றி தறிகெட்டுப் பறக்க விட்டுக் கொண்டிருந்தேன். என் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் இட்டு கட்டுப்படுத்தியதற்கு
உங்களுக்கெல்லாம் முதலில் நன்றிகள்!

மேலே கூறிய குற்றச்சாட்டுகள் ஓரளவு உண்மை தான். எனவே இவற்றைத் தவறு என்று நிரூபிக்கப் போவதில்லை. ஆனால் இதில் உள்ளே நிதர்சனங்கள் என்ன என்று சொல்லி விடுகிறேன்.

பெரிய எழுத்தாளர் ஆக வேண்டும் என்றோ , ஒரு நாள் தமிழ்த் திரைப்பட இயக்குனர் யாராவது என் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதித் தருவீர்களா என்று கேட்பார் என்ற ஆசையிலோ நான் எழுத ஆரம்பிக்கவில்லை.மனிதனுக்கு மொழி என்பது ஒரு camouflage என்று மதன் (ஹாய் மதன்) சொல்கிறார். அதாவது தான் மனதில் நினைப்பதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு தான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான். அது போல தான் எழுத்தும். நம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த தான் எழுதுகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எழுத்தும் ஒரு மறைப்பு தான். நாம் எதுவாக இல்லையோ அதைப்பற்றி தான் எழுதுகிறோம். உதாரணமாக நான் ஓஷோ பற்றி இவ்வளவு எழுதுகிறேன். அப்படியென்றால் நான் ஓஷோவை சரியாக இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். இயற்பியல் பற்றி எழுதுவது எனக்கு இன்னும் இயற்பியல் சரியாகத் தெரியாது என்பதையே காட்டுகிறது.எனவே ஒரு camouflage ஆகத்தான் நான் எழுதத் தொடங்கினேன்.என் எழுத்தின் மூலம் என்னை மறைத்துக் கொள்ள!!ஆனாலும் இந்த ப்ளாக்கின் ஆரம்ப கால பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் நான் ஒரு அமெச்சூர்-ஆக இருந்திருக்கிறேன் என்பது தெரியவரும் (இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன் என்பது வேறு விஷயம்) மறுமொழி எழுதுங்கள் என்று கிட்டத்தட்ட கெஞ்சியிருப்பேன். யாராவது கமென்ட் போடுகிறார்களா என்று தினமும் எதிர்பார்ப்பேன்.இது தவிர்க்க முடியாத ஒன்று. புது ப்ளாக் மோகம்.முப்பது நாளில் போய் விடும் . ஆனால் இப்போதெல்லாம் I'm used to reality.ப்ளாக் எழுதுவதால் பெரிதாக லாபம் எதுவும் கிடைக்காது ; தமிழில் எழுதுவதால் Ad -sense விளம்பரங்கள் மூலம் காசும் சம்பாதிக்க முடியாது என்பதெல்லாம் தெரிய வந்துள்ளது. எழுதி தான் காசு சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. பன்னாட்டு நிறுவனத்தில் இருப்பதால் ஓரளவு DECENT LIVING -கிற்கு வகை இருக்கிறது.'செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டி' என்று பட்டினத்தார் சொல்லும் நிலைமை இன்னும் வரவில்லை.

ஐ.டி. கம்பெனியில் வேலையில் இருந்து கொண்டு 'இல்பொருள் உவமை அணி' 'எலக்ட்ரான் -ஃபோட்டான் வினைகள்' என்று தமிழில் வேலை மெனக்கெட்டு ப்ளாக் எழுத வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. In fact இப்படி எழுதுவதால் நிறைய வாய்ப்புகள் கைநழுவிப் போயிருக்கின்றன.
ப்ளாக் எழுதும் நேரத்தில் ஒரு ஃபிகரை 'கரெக்ட்' செய்து சுற்றி இருக்கலாம். அவளையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம்.முன்பின் தெரியாத பெண் ஒருத்தி 'உன் BANK பேலன்ஸ் என்ன? சொந்த வீடு இருக்கிறதா? கார் இருக்கிறதா என்று தனியே அழைத்துக் கேட்கும் சங்கடங்களாவது இல்லாமல் இருந்திருக்கும்.ப்ளாக் எழுதும் நேரத்தில் மேனஜரை தாஜா செய்தோ கஸ்டமரை தாஜா செய்தோ இந்நேரத்தில் வெளிநாடு ஒன்றில் நான் உண்டு என் குடும்பம் உண்டு, இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது என்ற மனப்பான்மையுடன் செட்டில் ஆகி இருக்கலாம் தான் . இந்த ப்ளாக்கில் இருந்தே ஒரு கவிதை:

கம்பன் விற்பனைக்கு:

பெண் பார்க்கச் சென்ற போது
சம்பளம் எவ்வளவு என்று கேட்டார்கள்..
சொந்த வீடு இன்னும் வாங்கவில்லையா?
லோன் ஏதாவது இருக்கிறதா?
வெளிநாடு எதேனும் சென்றிருக்கிறாயா?
அப்பாவுக்கு பென்சன் வருகிறதா? என்றெல்லாம்...
ரிலேடிவிட்டி தியரியும்
கம்பன் இலக்கியமும்
பஞ்சரத்ன கீர்த்தனைகளும்
ப்ளாக் எழுதுவதற்கு மட்டும் பயன்படுகின்றன.....


ஆனால் ஏன் இப்படி லூசு மாதிரி எழுதுகிறேன்? பிழை எதுவும் இல்லையே என்று மூன்று முறை படித்துப் பார்த்து பப்ளிஷ் செய்கிறேன்? DONNO. MAY BE நான் எழுதியதைப் படித்த ஒரு நூறு உதடுகளில் ஒரு இரண்டு உதடுகளிலாவது படித்து முடித்ததும் ஒரு சிறு புன்னகை அரும்பி இருக்குமானால் அது தான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி. திமிர், கர்வம் , தலைக்கனம் எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. சரக்கு இருந்தால் தானே திமிர் இருக்கும்? நான் செய்வதெல்லாம் அங்கங்கே கிடக்கும் மலர்களை கோர்த்து சரமாக முடிப்பது மட்டுமே.மேலும் தமிழில் எழுதுவதற்கு எனக்கெல்லாம் அருகதை இருக்கிறதா என்றே தெரியவில்லை.

'விண் பறக்கும் கழுகுகண்டு வேட்கை கொண்டு
வீட்டு ஈ யதன் சிறகை விரித்தல் போல
கண்பறிக்கும் கதிர்கண்ட கானகத்து மின்மினியும்
களிப்புற்று ஒளிச்சிறகைக் காட்டல் போல
கம்பன் வாய்த்தமிழை கவிக்கோமான் இளங்கோவின்
கவித்தமிழை வள்ளுவனின் வண்டமிழை
கொம்பன் யான் எழுதப் புகுந்தேன் காசினியில்
கற்றுணர்ந்த சான்றோர்காள்
பொறுத்தருள்வீரே !

என்று சொல்வது போல நானும் ஏதோ எழுதுகிறேன் அவ்வளவு தான்.


ஒரு விதத்தில் பார்த்தால் எழுத்து ஒருவகை இசை. மௌன சங்கீதம். வாத்தியம் வாசிப்பதை நிறுத்திய பின் வரும் சங்கீதத்தைக் கேள் என்று தான்சேனின் குரு சொல்வதுண்டாம் .சில வகையான சங்கீதங்களைக் கேட்டால் உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விடும். அது போல சிலபேரின் எழுத்துகளைப் படித்தாலும் தான்.இனிமையான சங்கீதம் போல எழுத்தும் உங்களுக்கு கவலையை மறக்க வைத்து புத்துணர்வு அளிக்கக்கூடும். மனசு சரியில்லை என்றால் நம்மில் பெரும்பாலானோர் இசையையே விரும்புவோம் .சில பேருக்கு 'க்ஷீர சாகர சயனா' சில பேருக்கு இளையராஜா சில பேருக்கு ரகுமான் சில பேருக்கு குத்துப்பாட்டு; ஆனால் அது எல்லாமும் இசை தான். அதே போல சிலரின் எழுத்துகளும் உங்களுக்கு RELAXATION கொடுக்க முடியும்.மனசு சரியில்லை என்றால் எஸ்.ரா வையோ ஜெயகாந்தனையோ சாரு நிவேதிதாவையோ நீங்கள் படிக்கக் கூடாது. அவை உங்களை மேலும் கவலை கொள்ள வைத்து விடும்.சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்கலாம். அவை ஒரு மாஜிக் போல செயல் பட்டு உங்கள் கவலையை இருந்த இடம் தெரியாமல் விரட்டி விடும்.சாரு (நிவேதிதா)நன்றாகவே எழுதுகிறார். ஆனால் அதைப் படிப்பதற்கு நாம் வேறு ஒரு தளத்தில் இயங்க வேண்டியுள்ளது. நவீன ஓவியம் போன்றது அது. சாதாரண ரசிகர்கள் பார்த்தால் பைத்தியம் பிடித்து விடும். ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் என் எழுத்தைப் படித்து யாராவது ஒருவர் , ஒரே ஒருவர் தன் கவலையை மறந்து RELAXED ஆக FEEL செய்தார் என்றால் அதுதான் எனக்கு நூறு பிரமோஷன் கிடைத்த நூறு கோடி சம்பாதித்த சந்தோஷம்.

அடுத்து இந்தப் பின்னூட்டம், கருத்துரை, மறுமொழி WHATEVER ..ஒரு பத்திரிகையில் ஒரு நல்ல கதை படிக்கிறீர்கள். அதை எழுதியவரை உடனுக்குடனே நீங்கள் பாராட்ட முடியாது.வாசகர் கடிதம் எழுதிப் போட்டு அடுத்த வாரம் வரை வெயிட் செய்ய வேண்டும். அந்தப் பாராட்டையும் அதை எழுதியவர் படிப்பாரா என்பது தெரியாது.ஆனால் வலைப்பூ ஒன்றில் உடனுக்குடன் பாராட்ட முடியும் அல்லது திட்ட முடியும். அதை எழுதியவரும் நன்றி என்று உடனடியாக சொல்ல முடியும்.எனக்கு இந்த கமென்ட் செய்வது கொஞ்சம் பேஜாரான விஷயம். I 'M LAZY ...நீ என்ன என் எழுத்தைப் பற்றி கமென்ட் செய்வது என்ற திமிரெல்லாம் கிடையாது.யாருடைய பதிவாவது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் நிச்சயம் என் சோம்பேறித் தனத்தையும் மீறி கமென்ட் போடுவேன். அதுவும் GOOD ONE , NICE POST என்றெல்லாம் தான்.அந்த எழுத்து உங்களை பாதித்தது. அதை எழுதியவருக்கு நீங்கள் என்னதான் செய்ய முடியும்? ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் உங்களால் உங்கள் நன்றியை வெளிப்படுத்த முடியாது. எனவே கமென்ட் போடுவது என்பது ஒரு ACKNOWLEDGMENT அவ்வளவே.

நான் மறுமொழி சொல்ல மாட்டேன் என்று தெரிந்திருந்தும் என் பதிவுகளுக்கு கமென்ட் செய்பவர்கள் தான் (என்) உண்மையான வாசகர்கள். மற்றவர்கள் எல்லாம் GIVE AND TAKE வியாபாரிகள். இந்த ப்ளாக்கிலும் அப்படிப்பட்ட வியாபாரிகள் வந்தார்கள் ; வருகிறார்கள்; நன்றாக இருக்கிறது என்று கமென்ட் போட்டு விட்டு எங்கள் கடைப்பக்கம் கொஞ்சம் வாருங்கள் என்று அழைப்பார்கள். எனக்கு இந்த வியாபாரம் பிடிக்கவில்லை.அவ்வளவு தான். இதைத் திமிர் என்று நீங்கள் நினைத்தால் I CANT HELP ..நான் அவர்கள் ப்ளாக்கில் கமென்ட் போடமாட்டேன் ; நன்றி சொல்ல மாட்டேன் திமிர் பிடித்த ஆசாமி என்று தெரிந்ததும் அவர்கள் மீண்டும் இங்கே வருவதை நிறுத்திக் கொண்டார்கள். சரி அது அவர்கள் விருப்பம். அதே சமயம் ஒருவரை நீங்கள் பாராட்டுகிறீர்கள் அதற்கு அவர் THANKS கூட சொல்லாமல் இடித்தபுளி போல இருந்தால் உங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.WHAT TO DO ? என் நிலைமையில் இருந்தும் கொஞ்சம் யோசியுங்கள்.ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஓர் அரிய இசைக்கலைன் ஒருவன் ஒரு நாட்டில் தன் இசைக்கச்சேரி நடத்த ஒப்புக் கொண்டானாம். ஒரு கண்டிஷனின் பேரில். அதாவது இசையைக் கேட்கும் மக்களில் ஒருவர் கூட மெய்மறந்து தலையை அசைக்கக் கூடாது; மீறி அசைத்தால் அப்போதே அவர்கள் தலை வெட்டப்படும் என்று. நிறைய காவலர்கள் வாளுடன் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்; யார் தலை ஆடுகிறது என்று.கச்சேரி தொடங்கியது. அவன் பாடியது அத்தனை இனிமையாக இருந்தது; ஆனாலும் பயத்தில் ஒருவரும் கண்ணைக் கூட இமைக்கவில்லை.ஆனால் அந்த இசையின் இனிமையை அதன் இன்பத்தை உள்ளே அடக்கி வைக்க முடியாமல் கடைசியில் ஒரு நாலைந்து பேர் கண்டிஷனை மறந்து தலை அசைத்து விடுகிறார்கள். அரசன் அவர்களைக் கொல்ல ஆணையிடுகிறான்.அப்போது
இசைக்கலைன் தடுத்து, இந்த நாலைந்து பேரைத் தவிர மற்ற எல்லாரையும் துரத்தி விட்டு விடுங்கள். இவர்கள் தான் என் உண்மையான ரசிகர்கள். உயிர் போய்விடும் என்று தெரிந்தும் என் இசையை ரசித்த மகாத்மாக்கள் " என்று சொல்கிறான். அது போல நான் எந்த வித மறுமொழியும் சொல்ல மாட்டேன்; அவர்கள் ப்ளாகிற்கு போக மாட்டேன் என்று தெரிந்தும் கூட என்னை ஆதரிக்கும் , உற்சாகப்படுத்தும் அந்த நாலைந்து பேர் தான் உண்மையான வாசகர்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இப்படிப்பட்ட கைம்மாறு கருதாத வாசக வட்டம் தான் உண்மையான சொத்து.

அடுத்து இந்த காப்பி அடித்தல் , இங்க்லீஷில் இருப்பதை அப்படியே தமிழில் எழுதுதல் etc ., உண்மை சொன்னால் எல்லாமே காப்பி தான். காப்பி அடிக்காமல் யாராலும் எழுத முடியாது. காபி அடிப்பது மொழிபெயர்ப்பது போன்றவை இன்று அங்கீகரிக்கப்பட்ட கலைகள் (ARTS ). காப்பி அடித்ததில் உங்கள் சொந்த வண்ணங்களை எப்படி லாவகமாக கண்ணை உறுத்தாமல் சேர்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.யாருமே காப்பி அடிக்கக் கூடாது என்றால் உலகில் இலக்கியங்களே இருக்காது. வெறும் டிக்சனரிகள் தான் இருக்கும். உதாரணம் :"செவ்வாயில் ஜீவராசி உள்ளதா என்று வி
ஞ்ஞானிகள் தேடல் " என்பது ஒரு செய்தி. இதை யார் வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம். ஆனால் காப்பி அடித்ததை ஒரு அழகிய கவிதையாக மாற்ற வைரமுத்துவால் மட்டுமே முடிந்தது.(பாடலை சொல்ல அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்) .ஆங்கில டிக்சினரியில் இல்லாத வார்த்தைகளையா சேக்ஸ்பியர் எழுதி விட்டார்? ஆனால் எல்லாராலும் ஏன் ஒரு சேக்ஸ்பியர் ஆக முடியவில்லை? ஜாய் ஆலுக்காஸில் 45 கிலோ தங்கநகை திருட்டு என்பது செய்தி. அதை காப்பி அடித்து ஜாய் ஆலுக்காஸில் 45 கிலோ தங்கநகை திருட்டு. #கல்யாண் ஜீவர்லர்ஸோட புரட்சிப் படையோட வேலையா இருக்குமோ என்ற சுவையான ட்விட்டாகத் தர ஒரு ட்விட்டரால் மட்டுமே முடிகிறது.

TRANSLATION : இதைப் பற்றி முன்பே சொல்லி இருக்கிறோம்.Spinning Technology என்பதற்கு பன்னல் நுட்பியல் என்று மொழிபெயர்த்து எழுதலாம் தப்பில்லை. ஆனால் யாருக்கும் புரியாது. Autumn equinox = கூதிர் ஒக்கம் என்று எழுதினால் சில பேர் அடிக்கக் கூட வரலாம். கீழே ஏதாவது புரிகிறதா பாருங்கள். இது ஃபிரிட்ஜாப் கேப்ராவின் TAO of PHYSICS இன் ஒரு பகுதியின் தமிழாக்கம்:

"நியூக்ளியான்கள் தம்முடைய வலிமையான உள்வினை ஆற்றல் காரணமாக இத்தகைய சுய உள்வினை செயல்முறை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன; உண்மையைச் சொல்வதென்றால் நியூக்ளியான்கள் கருத்தியலான துமிகளை சதா உமிழ்ந்து கொண்டும் உட்கிரகித்துக் கொண்டும் இருக்கின்றன.புலக் கொள்கைப்படி , கருத்தியலான துமி மேகங்கள் சூழ்ந்துள்ள இடையறாச் செயல்பாட்டு மையங்களாக அவை கருதப்படுகின்றன.கருத்தியலான மேசான்கள் தாம் தோற்றுவிக்கப்பட்ட , மீச்சிறு தருணத்திற்குள் மறைந்து விடுகின்றன.மேஸான் மேகம் எனப்படுவது மீச்சிறிய ஒன்று. அதன் புறப்பரப்புகளில் இலகுவான மேசான்கள் பெரும்பாலும் பையான்கள் நிரம்பி உள்ளன.மீச்சிறு காலத்துக்குப் பின்னர் உட்கிரகிக்கப் படக்கூடிய கனத்த மேசான்கள் மேகத்தின் உட்பகுதியில் உள்ளன"

-குறைந்த பட்சம் இது எதைப்பற்றி சொல்கிறது என்று நீங்கள் ஊகித்தாலே உங்களுக்கு VERSATILE BLOGGER அவார்டு கொடுக்கலாம்.


கடைசியாக VERSATILITY ... it 's a myth !யாராலும் VERSATILE ஆக ,அது சுஜாதாவாகவே இருந்தாலும் எழுத முடியாது.நீங்கள் எதைப்பற்றி எழுதினாலும் உங்கள் 'டச்' அதில் நிழல் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சுதாதாவின் ஒரு பத்து கதைகளை தொடர்ந்து வாசித்தால் ஒருவிதமான சலிப்பு தட்டுவதை நீங்கள் உணரமுடியும்.

என் பக்கம் உள்ள நியாயங்களை சொல்லி விட்டேன். இதையும் மீறி , யாருடைய மனதையாவது என் எழுத்தின் மூலம் புண்படுத்தி இருந்தால் அவர்களிடம் பகிரங்கமாக மனப்பூர்வமான மன்னிப்பு கோருகிறேன்.

சமுத்ரா

Monday, February 13, 2012

அச்சமுண்டு அச்சமுண்டு




'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ' என்ற பாரதியாரின் (OVER ) confidence எப்போதும் பொருந்தாது என்று யோசிக்க வைத்தது சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம். சினேகா மற்றும் பிரசன்னா நடித்த படம்.

படத்தின் ஒரு ரத்தினச் சுருக்கம்: பிரசன்னா சினேகா தம்பதிகள் தம் பெண் குழந்தையுடன் வெளிநாடு ஒன்றில் தனியாக வசிக்கிறார்கள்.பிரசன்னா வேலை செய்கிறார். சினேகா ஹவுஸ் WIFE . சினேகா இரண்டாம் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். முதல் குழந்தை என்பதால் அந்தப் பெண் குழந்தை மீது சினேகா அளவுக்கதிகமாகவே பாசம் வைத்திருக்கிறார். அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று எப்போதும் பயப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இதை விரும்பாத பிரசன்னா இது தன் மனைவியின் அதீத மனக்கற்பனை என்று உதாசீனம் செய்து அந்தக் குழந்தையை கராத்தே பயிற்சி பள்ளியில் சேர்த்து தைரியமாக வளர்க்க நினைக்கிறார். இதற்கிடையில் தம் வீட்டை பெயின்ட் செய்ய ஒரு வெளிநாட்டு ஆளை (வில்லன்) அவர்கள் நியமிக்கிறார்கள். அவன் மிகவும் நல்லவனாக இருப்பதாலும் அடிமாட்டு விலைக்கு வீட்டை பெயின்ட் செய்ய ஒத்துக் கொள்வதாலும் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் அந்த ஆள் குழந்தைகளைக் கடத்தி அவர்களை பாலியல் வன்முறை செய்யும் ஒரு சைக்கோ. இது தெரியாமல் வீட்டுக்குள்ளேயே வினையை வைத்துக் கொண்டு வளைய வருகிறார்கள் இருவரும். ஒரு நாள் பிரசன்னா வெளியூர் போய் விட்டார் என்ற தைரியத்தில் சைக்கோ
குழந்தையை கடத்த முடிவெடுக்கிறான். ஆனால் ஏனோ பிரசன்னா வெளியூர் போகாமல் அன்று வீட்டிலேயே இருக்கிறார். வில்லன் தன் கடத்தல் பிளானை அரங்கேற்றுகிறான். சினேகாவை காலில் சுட்டு விட்டு குழந்தையை கடத்தும் போது (உள்ளே குளித்துக் கொண்டிருக்கும்)பிரசன்னா எதிரில் வந்து சண்டை போட்டு கடைசியில் வேறு வழி இன்றி அவனை வன்முறையுடன் சுட்டு வீழ்த்தி குழந்தையைக் காப்பாற்றுகிறார்.சினேகா ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்படுகிறார்.

இதிலிருந்து மூன்று விஷயங்களைப் பேசுவோம்.முதலில் இந்த திரைப்படம் கூறும் சில சுருக்கமான நீதிகள் :-

* வெளியூரிலேயோ வெளிநாட்டிலேயோ தனியாக வசிக்கும் போது வெளியாள்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். இப்படி சொல்வதால் எல்லாரையும் சந்தேகப்படுங்கள் என்று அர்த்தம் இல்லை. யார் மீதும் அசட்டுத்தனமான குருட்டு நம்பிக்கை வைக்க வேண்டாம்.

* உங்கள் மனதில் எதை திரும்பத் திரும்ப நினைக்கிறீர்களோ அதுதான் நடக்கும். (நல்லதோ கெட்டதோ)

* சில சமயம் உங்கள் உன்மனது (intuition ) சொல்வதற்கு செவி சாய்க்கவும்.

*குழந்தைகளை தைரியமாக வளர்க்கவும். பாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் அந்த பாசமே அவர்கள் வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடாது.

௮-1
====

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுப்போகும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது என்னவோ உண்மை தான்.இந்த நெருப்பு பெற்றோரின் Maturity level ஐப் பொறுத்து குழந்தை பெரியவனா(ளா)கும் வரையோ இல்லை சாகும் வரையோ தொடரும்.(50 வயது மகன் இன்னும் ஆபீசில் இருந்து வரவில்லையே என்று புலம்பும் பாட்டிகளும் உண்டு!) 'கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே' என்று பாடுகிறாள் ஆண்டாள். கம்சன் வயிற்றில் மட்டும் அல்ல. யசோதையின் வயிற்றிலும் தினம் தினம் நெருப்பு தான். மாடு மேய்க்கச் சென்ற தன் பிள்ளை இன்னும் வரவில்லையே என்று தோழியிடம் இவ்வாறு புலம்புகிறாள்:

ராகம்: பூர்வி கல்யாணி

என்னாச்சுதோ ஏதாச்சுதோ -என் கண்மணிக்
கென்னாச்சுதோ
ஏதாச்சுதோ

விண்ணாளும் பரிதி விளையும் பொழுதில் சென்றான்
மண்ணாளும் கம்சன் மாமன் துயர் செய்தானோ (என்னா)

எழிலாடும் வதனி பூதனி என்றொருத்தி வந்தாள்
உடுத்த உடை விலக்கி எடுத்து விஷப்பால் தந்தாள்
பழியாய்க் கிடப்பார் பார் பாரில் அவ்வரக்கரெல்லாம்
பாலனன்றோ என் மகன் பரிதவிக்குதே நெஞ்சம்
(என்னா)

தன் பிள்ளைதான் உலகாளும் பரமாத்மா என்று அரசல் புரசலாகத் தெரிந்த யசோதையே இப்படிப் பாடும் போது சாதாரண குழந்தைகளின் தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருப்பார்கள் ? சரி . சின்னப்பாப்பா என்றால் நாம் தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு (5 +)பெற்றோர்கள் தான் இதுமாதிரி விஷயங்களில் கொஞ்சம் ட்ரைனிங் கொடுக்க வேண்டும். வீட்டு அட்ரஸ் என்ன? , அப்பாவின் போன் நம்பர் என்ன?, எப்படி மொபைல் போனை உபயோகிப்பது, தவறான நோக்கத்துடன் தொடுபவர்களை, பழகுபவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது,யாராவது ஏதாவது சாப்பிடக் கொடுத்தால் பறக்காவெட்டி போல வாங்கிக் கொள்ளாமல் எப்படி சாரி அங்கிள் என்று சொல்லி மறுப்பது என்றெல்லாம்.

௮-2
====

'எனக்காக என்ன செய்தாய்'? என்று அப்பா அம்மாவைப் பார்த்து நீங்கள் கேட்பதற்கு முன் ஒரு விஷயம். உங்களை உடம்பிலும்
மனத்திலும் ஒரு குறை இல்லாமல் இது வரை வளர்த்து ஆளாக்கியதே ரொம்பப் பெரிய விஷயம். ஸ்கூலில் இருந்து நம் பையன்/பெண் நல்லபடியாகத் திரும்பி வரவேண்டுமே , டூருக்கு சென்ற பிள்ளை எந்த அசம்பாவிதமும் இன்றி நல்லபடியாக வந்து சேரவேண்டுமே என்று உங்கள் பெற்றோர்களும் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு நிறைய நாட்கள் வருந்தி இருப்பார்கள். தெய்வங்களை வேண்டி இருப்பார்கள். கண்ணீர் விட்டிருப்பார்கள்.

மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து -சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்? -என்கிறார் பட்டினத்தார்.

பிள்ளை பித்தானாலும் பரவாயில்லை. பின்னொருநாள் 'நீ எனக்காக என்ன செய்தாய் (செய்து கிழித்தாய்)?' என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் அவர்கள் தாங்க மாட்டார்கள்.

௮-3
====

இந்தியாவில் தான் CHILD ABUSE எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் என்று அந்த திரைப்படத்தில் சொல்கிறார்கள்.சரி. குற்றங்களின் அறிகுறிகளை (symptom ) அழிப்பதில் தான் நாம் எப்போதும் கவனம் செலுத்துகிறோம்.
குற்றவாளியை அடித்து உதைப்பது, நீ எல்லாம் அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா என்று திட்டுவது தூக்கு தண்டனை அளிப்பது இப்படி. குற்றங்களின் வேர்கள் (Cause )எங்கே என்பதை நாம் மறந்து விடுகிறோம். Eliminate the causes; not the symptoms! திரைப்படங்களும் வில்லனை ஹீரோ வெறியுடன் கொன்று விடுகிறான் சுபம் என்று முடிந்து விடுகின்றன!

நாம் என்னவோ இயேசுவின், புத்தனின் நேரடி வாரிசுகள் மாதிரி நம்மை சில சமயங்களில் நினைத்துக் கொள்கிறோம். .பொது இடத்தில் நாம் பத்தோடு பதினொன்றாக பர்ஸ் திருடியவனை அடிப்பது ஒருவித PSYCHOLOGICAL PROTECTION என்கிறார் ஓஷோ. அதாவது நான் நல்லவன் நான் ஒழுக்கமானவன் நான் எதையும் திருடவில்லை என்று மறைமுகமாக சொல்வது. அடிக்காமல் ஒதுங்கி நின்றால் தன்னையும் திருடன் என்று சமுதாயம் நினைத்து விடுமோ என்ற பயம்.

நாம் எல்லாக் குற்றங்களையும் (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, CHILD ABUSE ) என்றாவது ஒருநாள் மனதளவில் கண்டிப்பாக செய்திருப்போம்.
அதை உடலளவில் செய்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக குற்றவாளியை அருவருப்பாக பார்க்கிறோம். ஆம்..They need a treatment..not punishment. சமூகத்தில் நடக்கும் ஓவ்வொரு குற்றத்துக்கும் நாமும் ஏதோ ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்கிறான் பாரதி.நார்மலான (?) மனிதன் ஒருவன் பிஞ்சுக் குழந்தைகளைக் கற்பழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் யார்? அவனுக்கு தாள முடியாத தனிமையை,இயலாமையை பரிசளித்தது யார்? இயல்பாக கிடைக்கும் வாழ்வின் சின்னச்சின்ன சந்தோஷங்களை அவனுக்கு மறுத்தது யார்? நாம் தான்!




சிக்காட்டிலோ என்ற சீரியல் கில்லர் பற்றித் தெரியுமா? படத்தில் அப்பாவியாக போஸ் கொடுக்கிறானே அவன் தான்.அவன் குறிவைத்தது பெரும்பாலும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியரைத்தான் . 'நீ ஆண்மை அற்றவன்' 'நீ ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவன்' என்று அவன் மனைவி அவனை அடிக்கடி திட்டியது அவன் உள்மனதில் ரணமாக உறுத்தி இருக்கிறது. எனவே ஒவ்வொரு கொலையை செய்யும் போது
ம் அவன் தன் ஆண்மையின் உச்சத்தை உணர்ந்து இருக்கிறான். அவனது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு கடைசியில் அவனுக்குதான் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவனை மனதளவில்
உளைச்சலுக்கு உள்ளாக்கிய மனைவிக்கு வெறும் கண்டனங்கள் தான்.

இன்னொரு சீரியல் கில்லர் கோர்டில் இப்படி வெடித்தான். "இப்போது என்னை எல்லாரும் இத்தனை பிரபலமாக கவனிக்கிறீர்களே? கேமராவைத் தூக்கிக் கொண்டு வந்து படம் பிடிக்கிறீர்களே? இதே சமுதாயம் தான் என்னை என் சிறுவயதில் புறக்கணித்தது. தனிமையில் , இருட்டில் , இயலாமையில் என்னை குமுற வைத்தது. சாப்பாடு இல்லாமல் தெருக்களில் அலைய வைத்தது. அப்போது எங்கே இருந்தது இந்த சமுதாயம்? நீங்கள் வைத்திருக்கும் கேமெராக்கள் ஒன்றின் விலையில் எனக்கு சாப்பாடு வாங்கித் தந்திருந்தால் இந்த அவல நிலைக்கு நான் வந்திருப்பேனா?"

நார்மலான ஒரு மனிதன் மனத்தில் CHILD ABUSE , HOMO SEXUALITY போன்ற பாலியல் விகாரங்கள் உருவாவதற்கு இந்த சமுதாயம் தான் முழுக்க முழுக்க பொறுப்பு.

விவேக் கோர்டில் வசனம் பேசுவதை நாம் எல்லாரும் காமெடியாகத் தான் பார்க்கிறோம்.ஆனால் அதன் பின்னே இருக்கும் கசப்பான உண்மைகளை மறந்து விடுகிறோம்.


~சமுத்ரா



Wednesday, August 24, 2011

மெல்லத் தமிழ் இனி வாழும்!!!

இது மணற்கேணி- 2010 இற்கு அனுப்பிய கட்டுரை. வழக்கம் போல ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. எனவே 'யான் பெற்ற
துன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நல்ல எண்ணத்தில் இதை வெளியிடுகிறேன்.


மெல்லத் தமிழ் இனி வாழும்
===============================

முதலில் என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது தான். ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகக் கேட்டிருக்கிறோம் ...தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. தமிழுக்கு இணையான தொன்மையுடையதாய்க் கருதப்படும் சமஸ்கிருதம் கூட இன்று பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்கிறது.

ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல் (continuously updated ) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது வியப்பு மேலிடுகிறது.

இன்றைய ஆதிக்க மொழிகள் பல விதை வடிவில் தூங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழ் விருட்சமாக வளர்ந்து நின்று "எழுத்து எனப்படுவ அகரம் முதல்" என்று ஆரம்பித்து செம்மையான ஒரு இலக்கண நூலை வடிக்கும் அளவு உயர்ந்திருந்தது என்பது தமிழர்கள் பெருமைப்படவேண்டிய ஒரு விஷயம்.

அரிதான ஒரு பொருள் நம் அருகில் இருந்தால் அதன் மதிப்பு நமக்குத் தெரியாது என்பார்கள்.நம் தாய்மொழியைப் பொறுத்தவரை அது உண்மையென்றே தோன்றுகிறது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஓர் உயர்ந்த மொழியைப் பேசுகிறோம் என்ற கர்வம் கலந்த பெருமை தமிழ்நாட்டில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ் நாட்டிலேயே திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.நாடாளுமன்றங்களில் தமிழில் பேச மந்திரிகள் தர்மசங்கடமாக உணர வேண்டியுள்ளது

"மெல்லத் தமிழினி வாழும்"- இந்த வாக்கியத்தை இப்போது கொஞ்சம் அலசலாம்..இப்போது தமிழ் எங்கெல்லாம் 'வாழ்ந்து' கொண்டிருக்கிறது என்று முதலில் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.பாடப் புத்தகங்களில் தமிழ் பன்னிரண்டாம் வகுப்பு வரை வாழ்ந்து விட்டு பின்னர் மறைந்து விடுகிறது. மொழிப் பாடமாகக் கூட தமிழை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை .அப்படியே போனால் போகட்டும் தமிழையும் படிப்போம் என்று தேர்ந்தெடுத்தாலும் மதிப்பெண்களுக்காக மட்டும் "தேரா மன்னா செப்புவதுடையேன்" என்று மனப்பாடம் செய்து விட்டு, தேர்வு முடிந்த மறுநாளே மாணவர்கள் கண்ணகியை மறந்து விடுகிறார்கள். "வாயிற் கடைமணி நடுநா நடுங்க" என்று வாசிக்கும் போது எத்தனை பேருக்கு பரவசத்தில் மனதுக்குள் மணி ஒலிக்கும் என்பது தெரியவில்லை.

அறிவியல் தமிழின் நிலைமை இன்னும் பரிதாபம். "Mass Density Variation " என்பதை 'பிண்டத் திணிவு ஏற்ற இறக்கம்" என்றெல்லாம் சொல்ல வேண்டி வருமோ என்று பயந்தே மாணவர்கள் பலர் தமிழ் வழிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதில்லை போலும்..

தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டியதுமே தமிழ் தன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது என்பதுதான்.வணிக மயமாகிவிட்ட இன்றைய உலகத்தில் ஆங்கிலம் போன்ற "வணிக ரீதியான" மொழிகளுக்கு முன் தமிழ் போன்ற "கவித்துவமான" மொழிகள் "Utilitarianism" என்ற கொள்கையின் படி பின் தள்ளப்பட்டு விடுகின்றன.

தமிழ்த் திரைப்படங்களில் தமிழ் வாழ்கிறதா என்றால் அவைகளின் தலைப்பிலும் அவ்வப்போது அரிதாகக் கேட்கும் "முன்பே வா என் அன்பே வா" போன்ற பாடல்களிலும் ஓரளவு வாழ்கிறது எனலாம். பாடப் புத்தகங்களால் செய்ய முடியாதவற்றை திரைப்படப் பாடல்கள் சில சமயங்களில் செய்து விடுகின்றன. "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்" என்ற திருவாசகமும் "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து" என்ற ஆண்டாள் திருவாய்மொழியும் திரையிசை இல்லாவிட்டால் இளைஞர்களின் வாயில் நுழைந்திருக்குமா என்பது சந்தேகம்.

தொலைக்காட்சிகளில் தமிழ் வாழ்கிறதா என்றால் 'சீரியல்கள்' மூலம் ஓரளவு வாழ்கிறது என்று தோன்றுகிறது. பொதிகை போன்ற சானல்கள் மட்டும் திருக்குறளையும் பாரதியின் கவிதைகளையும் அவ்வப்போது விடாப்பிடியாக நினைவுபடுத்துகின்றன. சில சானல்கள் தமிழ் பேசினால் தங்கக் காசு என்றெல்லாம் கூட அறிவிக்கின்றன.. புத்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் தமிழ் ஓரளவு செழிப்புடனேயே இருக்கிறது. என்ன தான் ஆங்கில நாளிதழ்கள் இருந்தாலும் கையில் ஒரு டம்ளர் தேநீருடன் தமிழ் நாளிதழ் ஒன்றைக் காலை வேளையில் புரட்டும் சுகமே தனி அல்லவா?

சரி இனி தமிழிசைக்கு வருவோம்..இது விவாதத்திற்கு உரிய ஒரு தலைப்பு. சுருக்கமாகச் சொன்னால் கச்சேரிகளில் போனால் போகட்டும் என்று பாடகர்கள் பாடும் "யாரோ இவர் யாரோ", "தாயே யசோதா" போன்ற பாடல்களில் தமிழின் உயிர் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் தாளத்தோடு ஒட்டி வர வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை பகுபத உறுப்பிலக்கணம் செய்து விடுகிறார்கள் பாடகர்கள்..

ஆச்சரியப் படுத்தும் இன்னொரு விஷயம் பேச்சு வழக்கில் எவ்வளவோ மருவி கொச்சைப்படுத்தப்பட்டு பல இடங்களில் பலவாறு பேசப்பட்டு வந்தாலும் எழுதுவதற்கு எல்லாரும் "செந்தமிழ்" என்ற 'standard ' ஐ பயன்படுத்துவது தான். பேச்சு வழக்கில் 'உன் மகன் எங்கே?' என்று கேட்டல் 'சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்" என்று ஆரம்பித்து கவிதை பாடுவது என்பது அசாதாரணமான ஒன்று தான்.

அடுத்தபடியாக 'blogspot ' என்று அழைக்கப்படும் வலைப்பூக்களில் தமிழ் கொஞ்சம் தவழ்கிறது. அவற்றில் பெரும்பாலானவை பொழுதுபோக்குக்காக எழுதப்பட்ட குப்பைகள் என்று ஒரு கருத்து நிலவினாலும் தமிழார்வம் கொண்ட வலைப்பதிவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

சரி, இவைகளால் மட்டும் தமிழ் இனி வாழ்ந்து விடும் என்று நாம் மெத்தனமாக இருந்து விட முடியுமா? 'மெல்லத் தமிழினி வாழும்' என்று நூறு சதவிகிதம் நம்பிக்கையுடன் நாம் சொல்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.

'மொழி' என்பது வெறுமனே நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு சாதனம் மட்டும் அன்று. (நிறைய பேர் அப்படி நினைப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று) மொழி என்பது நம்முடன் மனோதத்துவ ரீதியாக இணைக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. முன்பின் தெரியாத வெளிநாடு ஒன்றில் எங்கேனும் நம் தாய்மொழி கேட்டால் நாம் பாலைவனச் சோலை போல உணர்வது இதனால் தான். கவிஞர்கள் 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று புளகாங்கிதமடைந்து பாடுவதும் இதனால் தான்.

ஆனால் தாய்மொழியின் மீது உள்ள அதீதமான உணர்ச்சிப்பூர்வமான பற்றே அதன் வளர்ச்சிக்கு சில சமயம் தடையாக அமைந்து விடலாம் என்பதை நாம் மறுக்கக் கூடாது. உதாரணமாக உலகெங்கிலும் வியாபித்திருக்கும் மொழியான ஆங்கிலத்தில் எந்த ஒரு கவிஞரும் குறைந்த பட்சம் "I Love English " என்று பாடியிருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் இந்த அதீதமான தமிழ்ப் பற்று ஏனோ சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளிடமும், ஆதாயம் தேடும் கவிஞர்களிடமும் ,இலக்கிய வாதிகளிடமும் மட்டுமே மிகுதியாக இருக்கிறது. மற்ற தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்களுக்கு தமிழ் என்பது வெறும் உணர்சிகளை வெளிக்காட்டும் ஒரு சாதனமாகவே இருக்கிறது. அரசியலில் இல்லாத,கவிஞரல்லாத,இலக்கிய வாதியாக இல்லாத ஒருவர் சிறிதே தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினாலும் அவரை தனிமைப்படுத்திப் பார்க்கும் மனோபாவம் ஏனோ நம்மிடம் இருக்கிறது. உதாரணமாக சமீபத்திய நாளிதழ் ஒன்றில் படித்த ஒரு சம்பவம்: தமிழ்ப்பற்று கொண்ட
பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளிடம் தூய தமிழில் "ஐயா, அமருங்கள், அனைவரும் பயணச் சீட்டு வாங்கி விட்டீர்களா" என்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாராம். அவர் அப்படிப் பேசுவதைக் கேட்டு பயணிகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம். தமிழ் நாட்டில் தமிழில் பேசினால் சிரிக்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனைக்குரிய ஒரு செய்தி? இதே பிரான்சு நாட்டில் பிரெஞ்சில் பேசினாலோ, வட மாநிலம் ஒன்றில் ஹிந்தியில் பேசினாலோ இவ்வளவு ஏன் , கர்நாடகத்தில் "சீட்டி தொகளி" என்று ஆங்கிலம் கலக்காமல் பேசினாலோ யாரும் சிரிப்பதாகத் தெரியவில்லை.

எனவே "மெல்லத் தமிழினி சாகும்" என்று பாரதி பயந்தது நடந்து விடாமல் இருக்க நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். முதலாவது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். தமிழர்கள் தான் உலகின் பூர்வீகக் குடிகள்...தமிழைப் பழிப்பவனை வெட்டு, குத்து என்றெல்லாம் உணர்ச்சிப் பூர்வமாக மக்களை உசுப்பி விடுவதை நிறுத்த வேண்டும். அரசியல் சேர்க்கை காரணமாக தமிழனுக்கு வெளி மாநிலங்களில் மதிப்பும் வரவேற்பும் குறைகிறது என்பதை மறுக்க முடியாது. சென்னையில் சர்வக்யர் சிலையை வைத்த பின்னரே பெங்களூருவில் திருவள்ளுவரின் சிலையை நம்மால் திறக்க முடிகிறது.

தமிழர்கள் 'இந்தி' எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது முன்னோக்குப் பார்வையற்ற ஒரு செயல் என்று கருதுகிறேன். இதன் காரணமாகவே தமிழன் என்றால் முரடன்; பிற மொழிகளை வெறுப்பவன் என்ற முத்திரை நம் மீது குத்தப்பட்டு விட்டது. உண்மை என்னவென்றால் தமிழை உண்மையாக ஒருவர் நேசித்தால் அவர் மற்ற மொழிகளையும் நேசிப்பார் என்பது தான். 'தமிழைத் தவிர மற்ற எல்லா மொழிகளையும் விரட்டு' என்று கூக்குரலிட்டால் அவர் தமிழையும் நேசிக்கவில்லை என்று சொல்ல முடியும்.

அடுத்து தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் தமிழை வலுக்கட்டாயமாக நுழைக்க முயல்வது. அறிவியல் நூல்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் படுத்தப்பட்டு தொல்காப்பியம் போன்று எழுதப்பட்டிருந்தால் அவற்றை யார் தான் படிப்பார்கள்?..எழுதியவர் கூட இன்னொரு முறை படிக்க மாட்டார். "Magnetic Dipole Reversal simulation "என்பதை "காந்த இரட்டை துருவ திருப்புதலின் போலி கணித வடிவம்" என்றெல்லாம் கூறுவது. சில சமயங்களில் பாடப் புத்தகங்களில் கூட இப்படியே கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று மாணவர்களிடையே தமிழின் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறோம் நாம். தமிழ் போன்ற மொழிகள் கவித்துவமான மொழிகள். உணர்வு சார்ந்த மொழிகள். இவற்றை தொழில்நுட்ப மொழிகளின் தரத்திற்கு உயர்த்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவது தேவையற்ற ஒரு செயல். அவ்வாறு செய்வதன் மூலம் நம் மொழியின் இயற்கை அழகையே நாம் அழித்து விடுவோம். உதாரணமாக தமிழில் அன்பு,பாசம்,காதல்,நேசம் என்று பல சொற்கள் இருந்தாலும் ஆங்கிலத்தில் 'love ' மட்டுமே.ஆங்கிலத்தில் ஆதார துகள்களை சொல்லும் போது Electron,Quark,Proton,Neutron,Neutrino,Photon,Muon,Lepton என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். தமிழில் அதிக பட்சம் 'துகள்' என்று மட்டுமே கூற முடியும். எனவே மாணவர்கள் அறிவியலை, தொழில்நுட்பத்தை ஆங்கிலத்திலேயே படிக்கட்டும். இது ஒன்றும் தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி அல்ல. புரியவில்லை என்றால் ஓரளவு தமிழ்ப்படுத்தி எடுத்துச் சொல்லுங்கள். இது அவர்களின் வருங்காலத்திருக்கும் உதவியாக இருக்கும்

அப்புறம் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் வரவேற்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படும் ஒரு வாதம். பாரதி காலத்தில் இருந்தே இது தொடர்வதாகத்தான் தெரிகிறது. தாகூரின் எழுத்துகளுக்கு நிகராக, ஏன் ஒரு படி மேலேயே சென்று நோபல் பரிசு பெரும் தரம் பாரதியின் எழுத்துகளுக்கு இருந்தாலும் அவரது காலத்தில் அவர் கவனிப்பாரற்று தான் இருந்தார். இன்றும் தமிழ் நாட்டில் ஒரு திரைப்பட நடிகருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு கிடைக்கும் வரவேற்பு தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை. நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாடலாசிரியர்கள் ஒரு லட்சம் கேட்டால் 'அவ்வளவா?' என்று கேட்கிறார்களாம்

"தமிழ்" இனி வாழ்வதற்கு நாம் தமிழ் மீதான ஈடுபாட்டை குழந்தைப் பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும். குழந்தை திருக்குறள் ஒப்புவித்தால் "இதெல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் ரைம்ஸ் சொல்லு" என்று சொல்லும் மனோபாவத்தை நாம் விட வேண்டும். உண்மை என்னவென்றால் இன்று தமிழ் நாட்டில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் பேருந்துகளில் தமிழில் எழுதியிருக்கும் வழித்தடங்களைக் கூட படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். வெளி மாளிலம் ஒன்றுக்கு செல்லும் போது அந்த மொழியைப் படிக்க முடியவில்லை என்றால் நியாயம். நம் மாநிலத்தில் நம் மொழியையே படிக்க முடியவில்லை என்றால்?

பிள்ளைகளை தமிழ் புத்தகங்கள் , செய்தித்தாள்கள்(ளையும்) படிக்கும் படி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்ன தான் சில தமிழ் நாளிதழ்கள் நாங்கள் தான் விற்பனையில் முதலிடம் என்று கூவினாலும் இளைஞர்களில் பெரும்பாலானோர் இன்று தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிப்பதை கொஞ்சம் தரக்குறைவாக நினைக்கிறார்கள். இது ஏன்? தமிழ் நாட்டுக்குள்ளேயே நடக்கும் நிகழ்ச்சிகளையே கூட "Tamilnadu education minister inagurated Tamil sangam " என்று ஆங்கிலத்தில் படிக்கும் நிலைமையே இருக்கிறது

பள்ளிகளில் மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தமிழாசிரியர்களுக்கு தான். ஏனென்றால் மறுபடியும் 'utilitarianism '.. இயற்பியல் படித்தால் பொறியாளராகலாம். ஆங்கிலம் படித்தால் உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். உயிரியல் படித்தால் மருத்துவராகலாம். தமிழ் படித்தால் ? கிரிக்கெட் போட்டி ஒன்று வைத்தால் வகுப்பில் பாதி மாணவர்கள் உடனே பெயரைப் பதிவு செய்கிறார்கள். "கவிதைப் போட்டி" வைத்தால் , ஒரு மாணவன் பதிவு செய்தாலே பெரிய விஷயம். அதுவும் அந்த மாணவன் ஒரு 'stand out ' போல நடத்தப்படுவதும் வேதனை.

சரி. மெதுவாகவோ, வேகமாகவோ தமிழ் இனி வாழ்வதற்கு ஒவ்வொருவரும் செய்தே ஆக வேண்டிய சில கடமைகள்:

ஆசிரியர்கள்
============
இதில் ஆசிரியர்களின் பங்கு தான் மிக அதிகம் . அவர்கள் கடமைக்காக தமிழைக் கற்றுத் தராமல் ஒரு தெய்வீக மொழியைப் போதிக்கிறோம் என்ற உணர்வுடன் சங்கீதம் கற்றுத் தருவதைப் போல பாடங்களை அனுபவித்து நடத்த வேண்டும். "நேர் நேர் தேமா நிறை நேர் புளிமா, எல்லாரும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்" என்று ஆசிரியரே கூறினால் மாணவர்களுக்கு எவ்வாறு தமிழின் மீது ஈடுபாடு வரும்? தமிழின் எழிலையும் இலக்கியத்தின் நளினங்களையும் நடிகர்.சிவக்குமார் "கம்பன் என் காதலன்" என்ற தலைப்பில் உணர்சிப்பட பேசியிருப்பாரே அது போல சொல்லித் தர வேண்டும். தமிழில் வெளியாகும் நல்ல படைப்புகளை மாணவர்களுக்கு அவர்களே அறிமுகப்படுத்த வேண்டும். இலக்கியங்கள் குறித்து வகுப்பறைகளில் சுவையான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழில் தரமான கதை, கட்டுரைகளை எழுத மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அரசாங்கம்
==========
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்து விட்டால் போதும்.உள்ளே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். தமிழைக் கொலை செய்யும் பாடல்களையும் வசனங்களையும் தயவு தாட்சிண்யம் இன்றி தடை செய்ய வேண்டும். (இன்னும் தமிழ் நாட்டில் நிறைய பேர் தமிழில் ஒரே ஒரு லகரம் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (பாடலாசிரியர்கள் உட்பட)) .அரசியல் கலக்காத செம்மொழி மாநாடுகளை நிறைய நடத்த வேண்டும். கருத்தரங்குகள் சலிப்பு மிக்க இலக்கிய அரங்குகளாக மட்டும் இல்லாமல் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் படி சுவையாக அமைக்கப்பட வேண்டும். தமிழ்ப் பாடப் புத்தகத்தை இன்னும் எளிமையாகவும் சுவையாகவும் அமைக்க வேண்டும். அரசியல் வாதிகளையும் ஒரு குறிப்பிட்ட கவிஞரையும் மட்டுமே சதா புகழ்ந்து கொண்டிருக்காமல் ,தமிழில் எழுதும் புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். தமிழின் படைப்புகளை மொழிபெயர்த்து உலகுக்கு அறிவிக்க முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்
==============================
===========
இவர்கள் தங்கள் தமிழ் எழுத்துகளால் மக்களை வசீகரிக்க வேண்டும். இளங்கோவடிகள் காலத்து தமிழை எழுதி மக்களை சலிப்புறச் செய்யாமலும் ,'நாக்க முக்க' அளவுக்கு கீழே இறங்காமலும் தமிழை ஓரளவு தரத்துடன் வழங்க வேண்டும். தமிழ் இவ்வளவு அழகான மொழியா என்று படிப்பவர்கள் நினைக்கும் படி எழுத வேண்டும். எழுத்தாளர். சுஜாதா செய்தது போல் புறநானூறு போன்ற இலக்கியங்களை அவற்றின் சுவை மாறாமல் புரியும் படி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

பொதுமக்கள்
===========
இரண்டு பேர் சந்திக்கும் போது இருவருக்கும் தமிழ் தெரிந்திருந்தால் அலட்டிக் கொள்ளாமல் தமிழிலேயே பேச வேண்டும். சினிமாவுக்கும், ஓட்டல்களுக்கும் செலவழிப்பதில் ஒரு பகுதியையாவது நல்ல தமிழ்ப்புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தங்களுக்குத் தெரிந்த இலக்கியங்களையும், தமிழ்ப்பாடல்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்

மாணவர்கள்
============
தமிழை மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்காமல் அதன் அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்டு மொழிப்பற்றுடன் கற்க வேண்டும்

தொழில் அதிபர்கள், அலுவலர்கள், என்.ஆர்.ஐ கள்
==============================
==============
தமிழுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை;நாம் பங்குச் சந்தை நிலவரத்தை கவனிப்போம் என்றில்லாமல் தமிழை வளர்க்க பொருளாதார ரீதியாக இவர்கள் உதவி செய்ய வேண்டும். கவிதை எழுதத் தெரியாவிட்டாலும் தமிழை ரசிக்கும் தன்மையையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும்

தமிழ் நாட்டின் இசைக் கலைஞர்கள்
==============================
=
திரும்பத் திரும்ப அருணாச்சலக் கவியையும் ,ஊத்துக்காடு பாடல்களையும் பாபநாசம் சிவனையும் பாடிக் கொண்டிருக்காமல் தமிழில் புதிய தெய்வீகப் பாடல்களை அறிமுகப்படுத்த வேண்டும். சாகித்தியம் எழுதுவதற்கு ஒருவர் முற்றும் துறந்த முனிவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனத்தூய்மையுடன் இறைவனை நினைத்து எழுதினால் தமிழ் பலவித ராகங்களில் அருவியாகப் பொழியாதா என்ன? கர்நாடக இசை என்றாலே தெலுங்கு தான் என்ற நிலையை இவர்கள் மாற்றிக் காட்ட வேண்டும்.

சமுத்ரா