இந்த வலையில் தேடவும்
Thursday, September 16, 2010
அணு, அண்டம், அறிவியல்-1
அணு, அண்டம், அறிவியல் என்ற தொடருக்கு அன்புடன் வரவேற்கிறேன்....
மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா -பஜ கோவிந்தம்
[உனக்கு இருக்கும் செல்வம், சுற்றம், இளமை இவைகளை நினைத்து கர்வம் கொள்ளாதே! காலன்(யமன்)நினைத்தால் இவைகளை உன்னிடத்திலிருந்து நிமிடத்தில் எடுத்துக் கொண்டு விட முடியும்...(எனவே)இந்த உலகமே மாயை என்பதை உணர்ந்து கொண்டு பிரம்மபதத்தில் புகுவாயாக]
என்னடா அணு அறிவியல் என்றெல்லாம் சொல்லி விட்டு வேதாந்தத் தொடர் எதாவது எழுதப் போகிறேனா என்றால் இல்லை....இது அறிவியல் தொடர் தான்...ஓஷோ கூறியது போல மேற்கின் அறிவியலும் கிழக்கின் ஆன்மீகமும் ஒன்று சேராத வரை ஒரு புதிய மனிதனின் பிறப்பு நிகழாது....அதாவது சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரை அறிவியல் வல்லுனர்கள் நினைத்துக் கொண்டிருந்தது (ஏன் ,இன்றும் கூட சிலர் நினைத்துக் கொண்டிருப்பது) என்னவென்றால் அறிவியல் என்பது முழுக்க முழுக்க மனித அறிவு சம்பந்தப் பட்டது...மனிதனால் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விடை கண்டு விட முடியும்...அறிவியலால் பிரபஞ்சத்தின் இரகசியத்தையே அறிந்து கொள்ள முடியும்...எனவே அறிவியலில் தேவையில்லாமல் ஆன்மிகம், கடவுள், மாயை போன்ற நெருடலான சமாச்சாரங்களை ஒரு போதும் நுழைத்து விடக் கூடாது" என்பது தான்...அறிவியலாளர்களின் இந்த நினைப்பு வெறும் 'வெட்டி பந்தா' என்று நினைத்துக் கொண்டு விடாதீர்கள்....கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள்...
நாம் வாழும் இந்த உலகம் ஒரு மெகா சைஸ் ஆமை மேல் நின்று கொண்டிருக்கிறது (அல்லது இந்து மதம் சொல்வது போல உலகம் ஆதிசேஷன் தலை மேல் தாங்கப் படுகிறது) நம் உலகம் தான் இந்த மகா பிரபஞ்சத்தின் மையம் , கடவுளின் படைப்பான நம்மை தான் சூரியனும் நட்சத்திரங்களும் செக்கு மாடு மாதிரி சதா தேமே என்று சுற்றி வந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் தப்புத் தப்பாக (அபாரமான கற்பனை வளத்துடன்) மக்கள் புளுகிக் கொண்டு திரிந்த காலத்திலிருந்து ஆரம்பித்து இன்று பிரபஞ்சத்தில் உள்ள கோடிக் கணக்கான 'காலக்சி' (galaxy , விண்மீன் மந்தைகள் )களில் ஒன்றான ஒரு சுருள் வடிவ பால்வெளி காலக்ஸியின் (milky way galaxy )விளிம்பில் உள்ள ஒரு சாதாரண மஞ்சள் விண்மீனைச் (சூரியன்) சுற்றும் ஒரு தக்குனூண்டு கோள் தான் நம் பூமி என்று (கொஞ்சம் ஓவராப் போய்டாங்களோ?) கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கர்வப் படுவதில் தவறென்ன இருக்கிறது?
உதாரணமாக நியூட்டனின் (Newton ) இயக்கவியல் விதிகளை வைத்துக் கொண்டு நம்மால் சாணி எறிவதில் இருந்து சாட்டிலைட் விடுவது வரை அனைத்தையும் விவரிக்க முடியும்...இந்த தைரியத்தில் தான் லாப்லாஸ்(marquis de Laplace 1749 – 1827) என்ற அறிவியலாளர் Determinism என்ற கருத்தை நம்பினார்.அதாவது பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக மனிதனால் அறிந்து கொண்டு விட முடியும் என்பதில் திடமான நம்பிக்கையுடன் இருந்தார்... அவர் சொன்னதன் தமிழாக்கம் கீழே:
"பிரபஞ்சத்தின் இப்போதைய நிலை என்பது அதன் முந்தைய நிலைகளின் விளைவு மட்டும் அல்ல; அதன் வருங்கால நிகழ்வுகளின் காரணமும் ஆகும்...நுண்ணறிவு கொண்ட ஒருவர் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் எல்லா விசைகளையும் , பிரபஞ்சத்தை ஆக்கிய எல்லாத் துகள்களின் நிலைகளையும் இன்று இல்லா விட்டால் நாளை அறிந்து கொண்டு விட முடியும்...பிரபஞ்சத்தின் இந்தத் தரவுகளை (data ) கவனமாக அலசி ஆராய்ந்தால் நம்மால் பிரபஞ்சத்தின் சூத்திரத்தை அறிந்து கொண்டு விட முடியும்..இந்த சூத்திரமானது பிரபஞ்சத்தின் மிகப் பெரிய பொருட்களில் இருந்து மிகச் சிறிய அணுவின் அசைவு வரை அனைத்தையும் அனாயாசமாக விளக்கும்...இந்த அறிவின் துணையால் நமக்கு எதுவுமே நிச்சயமின்றி இருக்காது...நாம் நமது இறந்த காலத்தை தெளிவாகப் பார்க்க முடிவது போல் ,எதிர் காலத்தையும் பார்ப்போம்"...
லாப்லாசின் பேய் (Laplace demon ) என்ற ஒரு கொள்கை ஆய்வு ( thought experiment ) அறிவியலில் உண்டு.(ஓ அறிவியலில் கூட பேயெல்லாம் வருமா?) .. அந்த பேய் என்ன செய்யும் என்றால் மற்ற பேய்களைப் போலவே ராத்திரியில் வந்து பயம் காட்டும்....சாரி இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாத் துகள்களின் நிலைகளையும்,வேகங்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு அந்தத் தகவலை வைத்துக் கொண்டு பிரபஞ்சத்தின் எதிர் காலம் என்ன? பிரபஞ்சத்தின் ரகசியம் என்ன என்ற கேள்விகளுக்கு கால்குலேட்டரில் கணக்கு போட்டு விடை கண்டு பிடிக்கும்....(சோ சிம்பிள் நோ?)
நாமெல்லாம் மரத்தடி ஜோசியர் ஒருவர் நம் கையைப் பார்த்து "உங்களக்கு கூடிவ விரைவில் செல்வம் வந்து கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது" என்று கூறி விட்டால் போதும்...அது உடான்ஸ் என்று தெரிந்தாலும் அதை நம்ப ஆரம்பித்து விடுவோம் இல்லையா? லாப்லாஸ் போன்ற பழுத்த அறிவியல் மேதை சூடம் அணைக்காத குறையாக சொல்கிறார் என்றால்? அவர் கூற்று சரியாகத் தான் இருக்கும் என்று பிற அறிவியல் வல்லுனர்களும் மெதுவாக இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டு பகல் கனவு காண ஆரம்பித்தனர்...
'நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும்' என்பார்களே, இந்த நினைப்பு ரொம்ப காலத்திற்கு நிலைக்கவில்லை....லாப்லாசின் பேயையும் முழுங்கிச் சாப்பிடும் வல்லமை பெற்ற பிரம்ம ராட்சசன் ஒன்று மெல்ல மெல்ல உயிர் பெற்றுக் கொண்டிருந்தது மாக்ஸ் பிளாங்க் (Max Planck 1858 -1947 )என்பவரின் ஆய்வுக் கூடத்தில் ...அந்த பிரம்ம ராட்சசனின் பெயர் 'குவாண்டம்' .... வேடிக்கை என்னவென்றால் அறிவியலில் 'குவாண்டம்' என்றால் மிக மிக மிகச் சிறிய என்று அர்த்தம்.... :)
இந்த ராட்சசனின் பிறப்பு தான் பின்னர் பெரிய அறிவியல் மேதைகளைக் கூட "வாழ்வே மாயம்' என்று சில சமயம் தலையைப் பிய்த்துக் கொண்டு ரோட்டில் ஓடாத குறையாகப் புலம்ப வைத்தது....
தொடரும்....
Tuesday, September 14, 2010
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
[ அந்த நாள் அந்த வெண்ணிலா...
எங்கள் தந்தையும் இருந்தார் எங்கள் குன்றும் இருந்தது
இந்த நாள் இந்த வெண்ணிலா...
பகைவர் எங்கள் குன்றைக் கைப்பற்றினர்; எங்கள் தந்தையும் இல்லை....
பாரி மகளிர் தம் தந்தையை இழந்த போது பாடியது]
இந்தப் பாடலில் உள்ள எளிமையைப் பாருங்கள்.... "அய்யோ! அப்பா போய் விட்டாரே! இனி மேல் எவ்வாறு வாழ்வோம்? அய்யோ எப்படியெல்லாம் இருந்தோம் எப்படியெல்லாம் அவர் வாரி வழங்கினார்...எல்லாம் போச்சே! கடவுள் குருடாகி விட்டாரா? எங்கள் குன்றைப் பறித்தவர்கள் நாசமாப் போக! அவர்கள் தலையில் இடி விழ!
என்றெல்லாம் ஓவராக சீன் காட்டாமல் சுருக்கமாக "அன்றைக்கும் இதே பௌர்ணமி வெண்ணிலா தான் வந்தது...எல்லாரும் சந்தோசமாக இருந்தோம் இன்றைக்கும் இதே வெண்ணிலாதான் ...ஆனால் இன்றோ எம்முடன் எங்கள் நாடும் இல்லை ,அப்பாவும் இல்லை" இவ்வளவுதான் பாட்டே...
ஒரு கவிதை என்பது எல்லாவற்றையும் 'கோனார்' நோட்ஸ் ரேஞ்சுக்கு விவரிக்கக் கூடாது... நாம் சொல்ல நினைப்பதை சுருக்கமாக சொல்லி விட்டு அதே சமயம் கவிதையின் மையக் கருத்தை நேரடியாகக் கூறாமல் படிப்பவர்களின் கற்பனைக்கு இடம் கொடுத்து அதை அவர்கள் தங்கள் திறமையால் உணரும் படிச் செய்ய வேண்டும்...அதாவது ஒரு 'நல்ல' கவிதை எழுதுபவனை மட்டும் அல்ல படிப்பவனையும் சிந்திக்க வைக்க வேண்டும்...
பாரி மகளிர் தங்கள் (ஒப்பாரிக்) கவிதையை வெறும் ஐந்து வரிகளில் முடித்து விட்டாலும் அதன் பின்னால் அவர்கள் வாழ்ந்து வந்த மலையை விட அதிகமான சோகம் மறைந்திருக்கிறது... இந்த நாகரிகமான பாடலின் பின்னே "அய்யோ ! அப்பா போய் விட்டாரே, என்று ஆரம்பிக்கும் ஒரு நீண்ட ஒப்பாரியே மறைந்துள்ளதைக் கவனிக்கவும்...
நம்மில் எத்தனையோ பேர் அப்பாவுடனான நிலாவையும் அப்பா இல்லாத நிலாவையும் பார்த்திருக்கக் கூடும்...(எத்தனை பேர் அப்பா அம்மாவுடன் நிலவின் அடியில் அமர்ந்து பேசுகிறார்கள் என்பது வேறு விஷயம்... )ஜடப் பொருட்கள் எல்லாம் குத்துக் கல்(?) போல் அப்படியே இருக்க மனிதர்களை மாத்திரம் அல்ப ஆயுசில் இயற்கை விழுங்கி விடுவது கொடுமை...இதனால் தானோ என்னவோ ஒருவர் இறக்கும் போது அவர் பயன் படுத்திய முக்கியமான பொருட்கள் சிலவற்றை அவருடன் சேர்த்தே எரித்து விடுகிறார்கள்....அவர் உணவருந்திய தட்டு, விரும்பி உடுத்திய உடை, சில சமயம் நகை மோதிரம் உட்பட....இல்லையென்றால் அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் வந்து உறுத்தும்...(கொஞ்ச காலத்திற்காவது) அதற்காக பாரி நிலவில் தன் மக்களுடன் மகிழ்ந்திருந்தான் என்பதற்காக அவன் இறந்ததும் அவனுடன் நிலவையுமா சேர்த்து எரிக்க முடியும்???
தான் இறந்த பின்னும் இந்த உலகம் எந்த வித மாற்றங்களும் இன்றித் தொடர்கிறது என்ற விஷயம் மனிதனை நெருடுகிறது...அவன் இறந்து போன அடுத்த நாளும் சூரியன் வரும் ...அவன் இறந்து போன பின்னும் தொலைக் காட்சிச் சானல்கள் 'இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக' என்று கூவிக் கொண்டிருக்கும்...பஸ்கள், ரயில்கள் வழக்கமான உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும், விளம்பரங்களில் சோப்பைப் பயன்படுத்திய மறு வாரமே சுமாரான ஒரு பெண் உலக அழகியாவது தொடர்ந்து கொண்டிருக்கும் ,மொத்தத்தில் எதுவுமே மாறாது....நான் சில சமயம் நினைத்துப் பார்ப்பது உண்டு... இந்த சூரியன் (அல்லது நிலவு) தனக்குக் கீழே எவ்வளவு மனிதர்களைப் பார்த்திருக்கும்? ஆதி மனிதன் ,அலெக்சாண்டர், ஹிட்லர் என்று 'எனக்கு அழிவே இல்லை' என்று கூவிய எவ்வளவு முட்டாள்களைப் பார்த்திருக்கும்? எவ்வளவு போர்களை மேலே இருந்து வேடிக்கை பார்த்திருக்கும்? அதற்கு மட்டும் உயிர் இருந்தால் பூமியின் ரகசியங்களை எல்லாம் நாம் அதனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம்...
எவ்வளவு தான் இது போல வேதாந்தம் பேசி மனதைத் தேற்றிக் கொண்டாலும் தந்தை இல்லாத 'இற்றைத் திங்கள் இந்நிலவு 'தந்தை இருந்த அற்றைத் திங்கள் அந்நிலவு' போல் இருப்பதில்லை தான்...நிலவு என்னவோ அதே தான்...காற்று இல்லாமல் உயிர்கள் இல்லாமல் லூசுத் தனமாக ஒரே மாதிரி பூமியைச் சுற்றும் அதே நிலவு தான்...ஆனால் அன்று பார்த்த அந்த ஓளி, அந்த அழகு, அந்த மகிழ்ச்சி ஆகியவை இன்று ஏனோ இல்லை....காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்களைக் கேட்டால் தேனிலவில் தோன்றிய நிலவு வேறு, கல்யாணம் ஆகிப் பத்து வருடம் கழித்து இன்று கிரகணத்தை வேடிக்கை பார்க்கும் போது தெரியும் நிலவு வேறு என்று தான் கூறுவார்கள்....
நம் குழந்தைப் பருவத்தில் மிக மிக அதிசயமாக, பிரம்மாண்டமாகத் தோன்றிய விஷயங்கள் இப்போது சாதாரணமாக ஆகி விடுகின்றன,,,நான் சிறியவனாக இருந்த போது
(ஆறு ஏழு வயது இருக்கலாம்) திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்றது நினைவிருக்கிறது ...அதைப் போல மகிழ்ச்சியான டிரிப்பை இது வரை நான் போனது இல்லை...கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பே உற்சாகம் தொற்றிக் கொண்டு விட்டது,,, இத்தனைக்கும் அப்போது 'reservation ' எல்லாம் இல்லை...கூட்டத்தோடு கோவிந்தாவாக ரயிலில் ஏற வேண்டியது தான்...
உற்சாகத்துடன் உடைகளைப் பாக்(pack ) செய்தது...துள்ளிக் குதித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு சென்றது, ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தது, கியூவில் நிற்கும் போதும் குதூகலத்துடன் நகர்ந்தது ,,,, ஹோட்டலில் தங்கியிருந்த போது பெய்த மழையில் அம்மாவுக்குத் தெரியாமல் நானும் அக்காவும் நடந்தது, பிளாட்பாரத்தில் அமர்ந்து பூரி சாப்பிட்டது, பத்து ரூபாய்க்கு பைனாகுலர் வாங்கி விட்டு ஏதோ உலகில் விலையுயர்ந்த கேமரா ஒன்றை வாங்கி விட்டது போல குதித்தது, எல்லாம் அப்படியே நினைவிருக்கிறது....
இன்றும் கூடத் தான் எவ்வளவோ ரயில்களிலும், விமானங்களிலும் முன் பதிவுடன் செல்கிறேன் ...அந்த உற்சாகத்தைக் காணவில்லை.... இன்றும் கூட திருப்பதி செல்கிறேன்,,, மழையும் பெய்து கொண்டுதான் உள்ளது...அன்று பெய்த மழையை ஏனோ காணவில்லை...க்யூவில் நிற்கும் போது எரிச்சல் தான் வருகிறது.... இன்று எத்தனையோ ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டால் கூட அன்று பாட்டி தாத்தாவுடன் சாப்பிட்ட அந்த பூரியின் சுவை எந்த உணவிலும் கிடைப்பதில்லை....
அப்போதெல்லாம் வியாழக் கிழமைகளில் கோவிலுக்கு தாத்தா பாட்டியுடன் வீதியில் உள்ள பொடிசுகள் எல்லாம் 'பஜனை' க்குச் செல்வோம்...அதில் தான் எவ்வளவு சந்தோஷம்? பாட்டி கல்யாணியில் பாடினாலும், காம்போதியில் பாடினாலும், கமாசில் பாடினாலும் நாங்கள் பின் பாட்டு ஒரே மாதிரி ஜொய் என்று பாடுவோம்... பாட்டி சிரித்துக் கொண்டே அதைப் பார்த்து ரசிப்பாள்...இன்றும் வியாழக் கிழமைகள் வருகின்றன, இன்றும் அதே கோவில் அதே ராகவேந்திரர்...but something is missing !
கல்யாணங்களுக்கு சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்! கல்யாண மண்டபம் என்பது ஒரு தனி உலகம்...யாருடன் வந்தோம் என்பதே மறந்து விடும் அளவு ஓடுவது...பலூன் வாங்கி வாங்கி உடைப்பது, பட்சணம் தின்பது என்று தொடரும்....இன்று அதே கல்யாணங்கள், கல்யாண மண்டபங்கள் தான்...ஆனால் வயதும் வாலிபமும் வந்து விட்ட நமக்கு வேறு விதமான நினைவுகள் தான் வருகின்றன....
ஓகே...அந்த நாட்கள் திரும்பி வருமா என்று தெரியாது...but we do still have some hope ...எப்படி? நம் குழந்தைகள் வழியாக,,, இனிமேல் உங்கள் குழந்தைகள் தேவையில்லாமல் சத்தம் போடுவதாகக் கோபித்துக் கொள்ளாதீர்கள்...கல்யாண மண்டபங்களில் இங்கும் அங்கும் ஓடினால் 'வானரமே' என்று திட்டாதீர்கள்....வெளியே கூட்டிப் போகும் போது 'எல்லாம் வேண்டுமா சனியனே', என்று திட்டாதீர்கள்....அவர்களை இயந்திர வாழ்வில் திணிக்கும் முன்னர் 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்' என்று பாடுவதற்காகவாவது அவர்களுக்கு ஒரு சில உற்சாகமான கணங்களை விட்டு வையுங்கள் ....
Wednesday, September 8, 2010
என்னை நான் சந்தித்தேன்...
கனவு என் வீட்டிலிருந்து தொடங்குகிறது...அடுத்த ஷாட்டில் திடீரென்று நான் ஏதோ ஒரு புதிரான , மிகவும் புதியதான நகரத்தில் இருக்கிறேன்...அப்போது வீட்டிலிருந்து 'உடனே வருமாறு' எனக்கு போன் வருகிறது...ஒரு பேருந்தும் ரெடியாக வந்து நிற்கிறது...அப்போது தான் தெரிகிறது நான் என் bag - ஐ வீட்டிலேயே (?) விட்டு வந்து விட்டேன் என்று...வண்டி புறப்பட இன்னும் சிறிது நேரம் ஆகும் என்பதால் பையை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி விட்டு வேக வேகமாக நடக்கிறேன்....திரும்பி வரும் போது ஒரு நான்காகப் பிரியும் சந்திப்பு வருகிறது.... எனக்கு எப்படிப் போவது என்ற வழி மறந்து விடுகிறது....அந்த இடம் ஒரே கூட்டமாகவும், கோவில்கள் சந்தைகள் கொண்டதாகவும் இருக்கிறது....நான் எல்லாரிடமும் கேட்கிறேன்..."எனக்காக பேருந்து காத்திருக்கிறது , மெயின் ரோடுக்கு எப்படிப் போக வேண்டும்?" என்று...பலர் தெரியாது என்கின்றனர்... பலர் தவறான பாதையைக் காட்டுகிறார்கள்...அதில் நடந்து நடந்து மெயின் ரோடு வராததால் மறுபடியும் அந்த சந்திப்புக்கு வருகிறேன்,,,, அப்போது தான் நான் ஒரு கடையில் என்னையே பார்கிறேன்.... ஆமாம் நான் ஒரு கடையில் உட்கார்ந்திருப்பதை நானே பார்க்கிறேன்.... கடையில் இருக்கும் நான் வழி கேட்கும் என்னைப் பார்த்து 'இந்த வழியில் போ, இது தான் சரியான வழி, என்கிறது...(அல்லது என்கிறேன்) அந்த வழியில் செல்லும் போது அழகாக இருக்கிறது... கோவில்களும் சாமியார்களும் வருகின்றனர் ...எந்த லக்கேஜுக்காக நான் வந்தேனோ அது அப்போது என் கையில் இருப்பதில்லை... கடைசியில் ரோடு வருகிறது,,, பஸ்சும் சரியாக அந்த இடத்துக்கு வந்து என்னை ஏற்றிச் செல்கிறது....நான் பின்னால் திரும்பி அந்த நகரத்தைப் பார்க்கிறேன்.. மெல்ல மெல்ல எனக்குப் பின் அந்த நகரம் புள்ளியாகி மறைகிறது...
இது என்ன கேனத்தனமான கனவு? என்று நீங்கள் கேட்கலாம்... நானும் அப்படித் தான் நினைத்தேன்... ஆனால் காலையில் எழுந்ததும் இந்தக் கனவு எதையோ எனக்குச் சொல்ல வருவதாகத் தோன்றியது.... அந்தக் கனவில் வரும் காட்சிகளுக்கு நான் நினைக்கும் அர்த்தம் இது தான்... கனவு இந்த அர்த்தத்தில் தான் வந்ததா என்பது தெரியாவிட்டாலும் கனவுக்கு இந்த கற்பிதம் நன்றாகப் பொருந்தி வருகிறது...
அந்தப் புதிரான நகரம் தான் இந்தப் பூமி...வீட்டிலிருந்து வரும் போன், இறைத்தன்மை (godliness ) நம்மை மீண்டும் ஒன்று கலக்க அழைக்கும் அழைப்பு.... (கனவின் முதலில் நான் வீட்டில் இருந்தது 'இறைத்தன்மையில்' இருந்து தான் நான் பூமிக்கு வந்தேன் என்று சொல்வதாக இருக்கலாம் ) பஸ் மரணத்தைக் குறிக்கிறது... [சிக்மண்ட் பிராய்டின் கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர் கனவில் வரும் பேருந்து,ரயில் ஆகியவை மரணத்தின் குறியீடுகள் என்றும், நாம் மரணம் அடைந்தே தீர வேண்டும் என்று கனவு நமக்கு நினைவு படுத்துகிறது என்றும், ரயிலைத் தவற விடுவதாக வருவது நமது வாழும் ஆசையைக் குறிக்கலாம் என்றும் கண்டுபித்தார்..] அப்போதே பஸ்ஸில் ஏறாமல் நான் லக்கேஜை மறந்து விட்டேன் என்று கூறுவது நமது மரணத்தை விரும்பாத மனோநிலையைக் குறிக்கலாம்... அந்த லக்கேஜ், நமது நிறைவேறாத உதவாக்கரை ஆசைகள்... அவைகளினால் ஈர்க்கப்பட்டு மரணத்தை (ஞானத்தை) (பஸ்) நாம் தள்ளிப் போட்டு விட்டு மீண்டும் அந்த மாயா நகரத்தில் (வாழ்க்கை) லக்கேஜைத் தேடி நுழைகிறோம்... அந்தத் தேடலில் நாம் நமக்கான வழியை மறந்து விடுகிறோம்...நாம் எங்கே , எப்படிப் போக வேண்டும் என்பதை... யார் யாரோ நமக்கு வழி சொன்னாலும் எதுவும் சரியான பாதையாக இருப்பதில்லை... அப்போது தான் நாம் நம்மையே பார்க்கிறோம்...(உன்னை நீயே பார் என்று ஞானிகள் சொல்வது இது தானோ) கடையில் நான் என்னையே பார்ப்பது தியானத்தின் மூலம் 'நான் யார்'? என்பதை நாம் அறிந்து கொள்வதைக் குறிக்கலாம்..அந்த 'உண்மையான' நான் தான் நமக்கு எந்த வழி சரியானது என்று காட்ட முடியும்...
வரும் வழியில் நான் காணும் கோவில்களும் சாமியார்களும் நமக்கு ஏற்படும் ஆன்மீக அனுபவத்தைக் குறிக்கலாம்...கடைசியில் சரியாக வந்து நிற்கும் பேருந்து தான் நம் உண்மையான புறப்பாடு...திரும்பி வரும் போது நான் வெறும் கையுடன் நடந்து வருவது ஞானம் அடைந்த பின் ஆசைகள் நம்மை விட்டு விலகி விடுவதைக் குறிக்கலாம்...பேருந்தில் ஏறித் திரும்பிப் பார்க்கும் போது, பின்னால் அந்த நகரமே மெல்ல மெல்ல மாறிகிறது...இந்த காட்சியானது நாம் ஞானமடைந்தவர்களாக மரணிக்கும் போது மீண்டும் இந்த உலகத்துக்கு திரும்பி வர வேண்டியது இல்லை என்ற தத்துவத்தை குறிக்கிறது....
இந்தக் கனவில் வரும் ஒரு காட்சி கூட நான் பின்னால் கற்பனை செய்து எழுதியது இல்லை....எல்லாமே நிஜமாகக் (?) கனவில் வந்தவை தான்...
ஓஷோ கனவுகளில் நாலைந்து வகைகள் இருப்பதாகக் கூறுகிறார்...
1 அர்த்தமற்ற வெறும் குப்பைக் கனவுகள்
2 அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக வரும் கனவுகள்
3 எதிர்காலத்தைக் குறிப்பால் உணர்த்தும் கனவுகள்
4 நமக்கு மேலே உள்ள பிரபஞ்ச சக்தி நமக்கு ஏதேனும் அறிவிக்கும் கனவுகள்
சரி இதில் எனக்கு வந்த கனவு வெறும் முதலாம் வகையாக இருக்கலாம்... அல்லது நான்காவதாகவும் இருக்கலாம்...
~சமுத்ரா
Tuesday, September 7, 2010
அஜ்ஜிபிக்கா...
எனக்கு ஒரு வேலை கிடைத்தது....
குழந்தைகளுக்கான உலகத்தைப்
படைப்பவன் வேலை...
வேலை எளிதாகத் தான் இருந்தது...
பெரிதாக ஒன்றும் இல்லை...
வீட்டுக்கு வெளியில் ஒரு பூச்சாண்டி,
கண்ணைக் குத்த ஒரு உம்மாச்சி ,
சாப்பிடாவிட்டால் வந்து கடிக்க ஒரு பல்லிப் பூச்சி,
தோ தோ, மியாவ், ஆனை, ஆட்டோ
எல்லாவற்றையும் படைத்து விட்டு
வந்து அமர்ந்தேன்...
குழந்தை திடீரென்று
அஜ்ஜிபிக்கா வேணும் அஜ்ஜிபிக்கா வேணும்
என்று அழ ஆரம்பித்தது...
அஜ்ஜிபிக்காவை
எப்படிப் படைப்பது
என்று -
சத்தியமாகத்
தெரியவில்லை எனக்கு....
~சமுத்ரா
Monday, August 30, 2010
சுகர் ஃப்ரீ யும் குரங்கு பொம்மையும்.....
ஊருக்குப் போகையில்
பாட்டிக்கு ஒரு
எம். எல். வி காசெட்...
தம்பிக்கு ஒரு
டி-ஷர்ட்...
அக்காவுக்கு ஒரு பர்ஸ்...
அக்காவின் குழந்தைக்கு
ஒரு பிரவுன் கலர்
குரங்கு பொம்மை...
அப்பாவுக்கு ஒரு
சுஜாதா புத்தகம்....
பெரியம்மாவுக்கு சுகர்-ஃப்ரீ ....
இத்தனையும் வாங்கிச் சென்றேன்..
அம்மாவைப் பார்த்து
உனக்கு ஏதும் வாங்கி வரவில்லையே என்றேன்....
'என் மகன் -
சம்பாதித்து
இத்தனையையும் வாங்கி வருகிறான்
என்ற சந்தோஷத்தை
எனக்கு வாங்கி வந்திருக்கிறாயே
என்றாள் அம்மா....
~சமுத்ரா
Saturday, August 28, 2010
ரயிலுக்குள் உலகங்கள்...

ஓடும் ரயில் ஒன்றின் பொது வகுப்புப் பெட்டி சிறியது தான்...அதற்குள் தான் எத்தனை உலகங்கள்?
*போன நிறுத்தத்தில் வாங்கித் தந்த
பலூன் உடைந்ததற்கு
அழுகின்ற குழந்தையின் உலகம்...
* சுமந்து வந்த முறுக்குக் கூடையை
கீழே வைக்க இடம் தேடும்
மூதாட்டியின் உலகம்...
* தரையை சுத்தம் செய்து
பயணிகளின் பாதம் பிடிக்கும்
போலியோ சிறுவனின் உலகம்...
* கதவருகே நின்று
கொண்டு வெளியே
வானத்தை வெறிக்கும்
இளைஞனின் உலகம்.....
* ஜன்னல் அருகே அமர்ந்து
பத்திரிக்கை படிக்கும்
மூக்குக் கண்ணாடி மனிதரின் உலகம்....
*அருகே அமர்ந்துள்ள
அத்தனை பேரையும்
விரோதமாகப் பார்க்கும்
பச்சைச் சேலை பெண்மணியின் உலகம்...
* கழிப்பறை அருகே
அழுக்கு உடையுடன்
செய்தித் தாள் விரித்து படுத்திருக்கும் கிழவரின் உலகம்....
* காதில் இயர்-போன்
மாட்டிக் கண்ணயர்ந்து விட்ட
வாலிபரின் உலகம்...
*'கரம் சாயா ' என்று சட்டைப் பையில்
சில்லறை குலங்க வந்து
கொண்டிருக்கும்வியாபாரியின் உலகம்....
*சக பயணியுடன் அரசியல்
பேசிக் கொண்டு
வரும் பெரியவரின் உலகம்....
இந்த உலகங்கள்
சிறிது நேரம் அருகருகே
வந்து விட்டுப் பின்னர்
மிக தூரம் மிக தூரம் விலகிச் செல்லும்
ரயில் நின்றதும்....
~சமுத்ரா
Friday, August 27, 2010
தமிழனென்று சொல்லடா!
Hello
------------------
Thank you for your interest in Google AdSense. Unfortunately, after reviewing your application, we're unable to accept you into Google AdSense at this time.
We did not approve your application for the reasons listed below.
Issues:
- Unsupported Language
---------------------
Further detail:
Unsupported Language: We've found that the majority of your site’s content is in a language we do not currently support.
ஓ! தமிழில் எழுதினால் இந்த சலுகைஎல்லாம் கிடையாது போலிருக்கிறது.... தமிழ் மட்டும் அல்ல..அந்த தபாலில் கொடுத்திருந்த 'supported language ' பட்டியலில் எந்த இந்திய மொழியும் இல்லை.... (ச்சே! குறைந்த பட்சம் ஹிந்தியாவது இருந்திருந்தால் 'என்னே தமிழனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை! மறத்தமிழா! மானம் காக்கப் பொங்கி எழு! என்று அரசியல்வாதி ரேஞ்சுக்கு சவுண்டு எல்லாம் கொடுத்திருக்கலாம்!)
சரி இந்த AdSense விஷயம் ஒரு புறம் இருக்கட்டும்.... 'நான் ஒரு blog - ஆரம்பித்திருக்கிறேன்' என்று ஆபீசில் சொன்னால் 'அப்படியா ரொம்ப சந்தோஷம்! URL கொடு! எப்பவாவது அழணும் போல் தோன்றினால் படிக்கிறேன்! என்று கேட்பார்கள்..."அது வந்து,அடியேன் தமிழில் தான் எழுதுகிறேன்” என்றால் 'அய்யே! தமிழா?‘என்கிறார்கள்....(தமிழர்களே கூட)
மேலும் 'இங்கிலீஷுல எழுத வராதா?' 'copy - paste பண்ணி எழுதறதெல்லாம் இங்கிலீஷுல எழுதுனா தெரிஞ்சுருமா?’ என்றெல்லாம் கேட்டு கடுப்பேற்றுகிறார்கள்... AdSense லிருந்து வந்த பதிலை இரண்டொருவரிடம் காட்டிய போது அவர்கள் அனுப்பிய விடைகள் கீழே:(
______________________________________________________
From: XXX
Sent: Thursday, August 26, 2010 4:15 PM
To: YYY;ZZZ
Subject: RE: unsupported language???:( :( :(
That is alien 's language ..pls use appropriate language
__________________________________________________________
From: YYY (WT01 - Testing Services)
Sent: Thursday, August 26, 2010 4:05 PM
To: XXX; ZZZ
Subject: RE: unsupported language???:( :( :(
Write in a language, which humans can understand.
___________________________________________________________
என்னதான் நாம் 'தமிழ் முதுமொழி', 'செம்மொழி' , 'டைனோசர் தோன்றி சிம்பான்சி தோன்றாக் காலத்திலேயே தமிழ் தோன்றி விட்டது' 'தமிழில் இருந்து தான் சமஸ்கிருதமே வந்தது'என்றெல்லாம் அரற்றிக் கொண்டு திரிந்தாலும் , 'fact ' என்ன என்றால் ஒரு தமிழன் தமிழ் நாட்டின் எல்லை தாண்டிச் சென்றால், ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்து விட்டவன் போல் தான் சிலர் அவனைப் பார்க்கிறார்கள்...
'விருந்தினர்கள் நம் வீட்டுக்கு வந்து எத்தனை நாள் ' டேரா' போட்டாலும் அவர்களை சிரித்த முகம் மாறாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்..கொஞ்சம் கூட பார்க்கும் பார்வையில் மாற்றம் இருந்து விடக் கூடாது' என்ற உயர்ந்த 'விருந்தோம்பல்' தத்துவத்தை உலகுக்கு சொன்னது தமிழ் தான்...
("மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து")
ஆனால் இன்று தமிழனுக்கு உள்ள பெயர் என்ன தெரியுமா? 'ஆதி வாசி' 'ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து வந்தவன்' 'நாகரிகம் குறைந்தவன்' 'பொது இடத்தில் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியாதவன்' .........(அதாவது தமிழ் நாட்டுக் காரர்கள் இலையில் விழுந்த எல்லா அயிட்டங்களையும் ஒன்றாகக் குழப்பி பத்து விரல்களையும் உபயோகித்துப் பிசைந்து அடிப்பவர்களாம்....)
ஆபீசில் நம் சீட்டுக்குப் பக்கத்தில் கிறுக்குவதற்கு என்று ஒரு போர்டு இருக்குமே? அங்கே நான் சும்மா இருக்காமல் கீழே உள்ள பாட்டை எழுதி வைத்திருந்தேன்...
"தமிழ் எங்கள் இளமைக்குப் பால்---அந்தத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -அந்தத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!"
இதைப் பார்த்து விட்டு தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் மாநிலத்துக்காரர்கள் (சக ஊழியர்கள் தான்) சிலர் வந்து "இதை இப்போதே அழிக்கிறாயா இல்லையா? " என்று மல்லுக்கு நின்றார்கள்... " இது என் சீட்டில் எனக்காக ஒதுக்கப் பட்ட சிறிய இடம்...அதில் எனக்குப் பிடித்த நாலு வரியை எழுதிக் கொள்ள இந்திய நாட்டில் எனக்கு சுதந்திரம் இல்லையா? என்று கேட்டு விட்டு "வேண்டுமானால் உங்கள் போர்டிலும் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்" என்று கூறினேன்... அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் அவர்கள் இல்லை....ஏளனமாக , "நாங்கள் கழுவி விடும் தண்ணீரை......" ஓகே வேண்டாம் அதையெல்லாம் எதற்கு எழுதிக் கொண்டு? “இந்த மொழியை இங்கே எழுத முடியாது அவ்வளவு தான் ...அழிக்கிறாயா இல்லையா?” என்றனர்.... நான் "சரி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் ....கூடவே உங்கள் மொழியையும் எழுதி விடுகிறேன்..." என்றேன்.. ஓகே எங்கள் பாஷையை தான் முதலில் எழுத வேண்டும் என்று கூறி அரை மனதாக ஒப்புக் கொண்டனர்....
மத்தியானம் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்ததில் போர்ட் சுத்தமாக அழிக்கப் பட்டிருந்தது...
பிற மொழிகள் மீது துவேசம் காட்டுவதைத் தான் அவர்கள் மொழிக்கு செய்யும் மிகப் பெரிய சேவை என்று நினைக்கிறார்கள் போலும் .... இவ்வளவு தாய்மொழிப் 'பற்று' இருந்தால் உங்கள் மொழியில் உள்ள இலக்கியங்களை எல்லாம் படித்து அதில் ஏதாவது PhD செய்ய வேண்டியது தானே? உங்கள் மொழியில் கவிதை, அறிவியல் தொழில் நுட்ப கட்டுரைகளை எழுதி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக எதாவது செய்ய வேண்டியது தானே? உஹும் ..எதுவும் இல்லை... I understand ...அவர்களுக்குத் தங்கள் கண் முன்னால் தங்கள் நகரத்தில் பிற மாநிலத்தவர்கள் 'MNC ' களைக் காரணம் காட்டி வந்து சேர்ந்து கொண்டு,அதன் காரணமாகத், தங்கள் தாய்மொழி கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருவது வேதனையாகத் தான் இருக்கும்,,,, அதை எப்படி ஆக்கப்
பூர்வமாக சமாளித்து சரிப்படுத்தலாம் என்று யோசிக்க வேண்டுமே தவிர , இப்படி பிற மொழியினர் மீது பேதம் காட்டினால் அது மேலும் மோசமான பின் விளைவுகளைத் தான் உருவாக்கும் என்பதை அவர்கள் அறிய வேண்டும்...
அடுத்து எங்கள் 'ப்ராஜெக்ட்' ஒன்று வெற்றிகரமாக (?) முடிவடைந்தது என்று 'team outing ' குக்காக சென்றிருந்தோம்... அதில் நான் பாடுவதாக ஏற்பாடு.... (இது தெரிந்து 'ஏன் risk எடுக்க வேண்டும்' என்று பல பேர் அவுட்டிங்கே வேண்டாம் என்று வராமல் இருந்து விட்டதாகப் பின்னால் அறிந்து கொண்டேன்) அதில் 'ஒரு நாள் போதுமா' என்ற பாட்டைப் பாடி நம் இசைத்திறமை எல்லாம் வெளிப்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் [[[மைக் முன்னால் நின்றவுடன் 'தோடி' 'மோகனம்' 'தர்பார்' எல்லாம் ஒரு மாதிரி வந்தது வேறு விஷயம்' மைக்கை பிடுங்கிக் கொள்ளாத குறை தான் :-( ]]] அதே கோஷ்டி என்னிடம் வந்து 'எந்த மொழியில் பாடுகிறாய்?' என்றனர்....'சந்தேகமே வேண்டாம் 'தமிழ்' தான் என்றேன்...(உங்க தமிழ்ப் பற்றுக்கு ஒரு அளவே இல்லையா? என்று கேட்கக் கூடாது ஆமாம்... )"சாரி அப்படியானால் உனக்கு மைக் இல்லை” என்று மீண்டும் மல்லுக்கு நின்றனர்.... எங்கள் மொழியில் ஏதாவது பாடு, அது கர்ண கடூரமாக இருந்தாலும் கை தட்டுவோம்...at least ஹிந்தியில் பாடு , தெலுங்கு என்றாலும் ஓகே... என்றனர்... "இது என்ன விதமான லாஜிக் என்று புரியவில்லை... தமிழ் மட்டும் என்ன பாவம் செய்தது?" என்றேன்.... "அது எல்லாம் எங்களுக்குத் தெரியாது, அந்த 'அசுர பாஷை' மட்டும் வேண்டாம்..." என்றனர்... "இல்லை எனக்கு அந்தப் பாட்டு ஒன்று தான் தெரியும் என்றதற்கு "சரி ஒரே பாட்டை இரண்டு மொழிகளிலும் பாடுவதானால் ஓகே" என்று ஒரு வழியாக ஒப்புக் கொண்டனர்...
'தமிழ்' 'தமிழன்' என்றால் என்ன இளக்காரம் என்று இன்னும் தெரியவில்லை.....(தமிழ் மக்களே! இன்னொரு மாநிலத்துக்கு வேலைக்குச் சென்றால் உங்கள் தாய் மொழிப் பற்றை ஓவராகக் காட்டாமல் இருக்கவும்... மேலும் அவர்கள் மொழியையோ அல்லது ஹிந்தியையோ 'முப்பது நாட்களில்' என்று தொடங்கும் பாலாஜி புத்தகம் வாங்கி அரை குறையாகவேனும் படித்துக் கொண்டு செல்லவும்)
இன்னொரு சம்பவம்...
தமிழ் நாட்டின் நகரங்களுக்கும் (சென்னை, கோவை, மதுரை....) பெங்களூருக்கும் இடையே கர்நாடக அரசு நடத்தும் பஸ் சர்வீஸ் உண்டு.... தமிழ் நாட்டின் நகரங்கள் இந்த ' குளு குளு ' நகரத்தை ஒப்பிடும் போது சற்று வெப்பமானவை தான்... ஒப்புக் கொள்ளலாம்...இந்த ஒன்றை வைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே? 'அந்த கிளைமேட்டில் மனுஷன் இருப்பானா' 'ஐயோ தப்பித் தவறி போய் விட்டேன், எப்ப தான் இங்கே திரும்பி வருவமோ என்று இருந்தது' ,” "நரகத்தில் வாணலிச் சட்டியில் வறுப்பது போல உடம்பெல்லாம் எரிந்தது" என்று இவர்கள் எல்லாம் 'சொர்கத்தில் இருந்து நேரடியாக வந்தது போல’ ஓவராக அலட்டிக் கொள்வது... இந்தக் கிளைமேட்டில் இருந்து கொண்டு இத்தனை காலம் குப்பை கொட்டியவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? என்று நமக்கே சந்தேகம் வருகிறது....பெங்களூருவில் வெய்யிலே வருவதில்லையா என்ன ? அடுத்து தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவில் யாருமே கறுப்பாகப் பிறப்பதில்லையா என்ன ? நம் கலரெல்லாம் தொட்டால் கையில் ஒட்டிக் கொள்கிற அட்டைக் கரியாம்... சரி தான், இவர்கள் தங்கள் அதிகப் படியான கலரைக் குறைத்துக் கொள்ள தினமும் 'sun bath ' எடுக்கிறார்களோ என்னவோ?
சரி சம்பவத்துக்கு வருவோம்...ஒரு நன்னாளில் , அந்த பஸ் சர்வீசில் வந்த தமிழ் மட்டுமே தெரிந்த அப்பாவிப் பயணி ஒருவர் பஸ் எப்போதும் நிறுத்தும் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றதும் கண்டக்டரைப் பார்த்து 'என்னம்மா,இங்க நிறுத்துங்க" என்றார்....அதற்கு கண்டக்டர் பெண்மணி "இங்கே எல்லாம் ஸ்டாப் கிடையாது , அடுத்து மெஜஸ்டிக் தான் "என்று தமிழ் மாதிரி இருந்த ஒரு பாஷையில் அலட்சியமாகக் கூறினார்... மெஜஸ்டிக் என்பது இன்னும் ஆறேழு கிலோ -மீட்டர்கள் இருந்தது... அந்தப் பயணி கடுப்பாகி 'டிக்கெட்' ல போட்டிருக்கே ஸ்டாப் இருக்குன்னு? என்று கேட்டதற்கு அவ்வளவு தான் அந்த மாது சிரோன்மணி தன் திருவாய் திறந்து கன்னடத்தில் அர்ச்சனை செய்யத் தொடங்கினார்... "டேய் எங்க வந்து யாரை மிரட்டற? இவ்வளவு ரோசம் இருந்தால் உங்க கச்சடா ஊர்லையே (இவர்கள் ஊரெல்லாம் மயன் நிர்மாணித்த சொர்க்க புரியாம்)இருக்கே வேண்டியது தான? ...உனக்கு............ [நாகரிகம் கருதி கொடுக்கப்படவில்லை]” என்று மெஜஸ்டிக் வரும் வரை தன் அர்ச்சனையைத் தொடர்ந்தார்...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பாடிய தமிழனுக்கு மதிப்பு இவ்வளவு தானா ??? அந்த பஸ்ஸில் இருந்த சொற்ப ஜனங்களும் (அடியேன் உட்பட) நமது கண்டக்டர் பெண்மணியின் ‘மஹா காளி’ அவதாரத்தை எதிர்க்கத் துணிவு இன்றி 'கப் -சிப்' என்று வேறு பக்கம் பார்த்த வண்ணம் உட்கார்ந்து கொண்டு விட்டனர்... கார்பரேசனில் இறங்க இருந்தவர்கள் கூட 'எதற்கு வம்பு' என்று மெஜஸ்டிக்கிலேயே இறங்கிக் கொண்டனர்...
யோசிக்க வேண்டிய சில விஷயங்கள் கடைசியில்:
* மலையாள மக்களின் முக்கியமான திருவிழாவான 'ஓணம்' இங்கே (பெங்களூருவில்) விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது... 'பூக்களம்' போட்டிகள், கேரளத்தின் பாரம்பரிய உடையணிதல் முதலியன....அதே போல ஒரு 'தமிழ் வருடப் பிறப்பையோ' 'பொங்கலையோ' விமரிசையாக இங்கே எடுத்துக் கொண்டு கொண்டாட முடியுமா என்று யோசிக்கிறேன்...
*தமிழ்நாட்டில் தான் பெரும்பாலும் த்யாகராஜருடைய தெலுங்குக் கீர்த்தனைகள் பாடப் படுகின்றன... தமிழ் நாட்டில் 'கன்னட' மாத்துவர்கள் அக்கிரஹாரம் இல்லாத ஊர்களே இல்லை எனலாம்... (அந்த மடங்கள் எல்லாம் தமிழ் நாட்டிலேயே இருந்தாலும் மடத்தின் உள்ளே ஒரு தமிழ் வார்த்தை கூட allow இல்லை) தமிழ் நாட்டில் மலையாள நாயர் இல்லாத டீக்கடைகள் இல்லை....இது போல எல்லாம் இல்லை என்றாலும் வேறு ஒரு மாநிலத்தில் குறைந்த பட்சம் ஸ்பீக்கரில் ஒரு தமிழ்ப் பாட்டு போட்டு விட முடியுமா?
*அண்டை மாநிலத்தில் ஒரு திருவள்ளுவர் சிலை ஜம்மென்று வைத்து விட்டால் போதும்... எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்களா அரசியல் வாதிகள்?தமிழை விட இங்கிலீஷ் அதிகம் பேசுகின்ற தமிழ் சினிமா ஒன்றை உலகம் முழுதும் திரையிடுவதன் மூலம் மட்டும் தமிழின் 'புகழ் ' பரவி விடும் என்று சினிமாக் காரர்கள் நினைக்கிறார்களா?
*வெளி மாநிலம் ஒன்றிலோ வெளி நாடு ஒன்றிலோ 'I 'm from Tamil Nadu ' என்றால் 'Oh ! Tamil Nadu ! ரஜினிகாந்த் ! கமலஹாசன்'! என்கிறார்கள்....
ஏன் " ஓ! தமிழ் நாடு! the great திருக்குறள்! M .S .சுப்புலக்ஷ்மி ,பாரதி! என்றெல்லாம் சொல்வதில்லை???
* நம்மிடையே ஏன் ஒற்றுமை இல்லை? குறைந்த பட்சம் அடுத்தவனை எதிர்க்கும் போது மற்ற மாநிலத்தவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்...தமிழர்கள் அது கூட இல்லை... நமக்கு ஏன் வம்பு? என்று தேவையானால் 'I don’t know Tamil' என்று சொல்வதற்குக் கூட தயாராய் இருக்கிறார்கள்...
* இதே போல பேருந்தில் ஒரு மலையாளியோ , கன்னடத்துக் காரரோ அவமானப் பட்டிருந்தால் (வேறு மாநிலமானாலும்) சக மொழிப் பயணிகள் பார்துக் கொண்டு சும்மா இருந்திருப்பார்களா? (நம்மிடையே ஏன் அந்த 'belongingness ' இல்லை?
*தமிழர்கள் ஏன் வேற்று மொழி ஒன்றைக் கற்றுக் கொள்வதில் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள்? தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் போதும்...உலகம் முழுவதும் சுற்றி வந்து விடலாம் என்று நினைக்கிறார்களா? ஐந்து வருடம் டெல்லியில் இருந்தாலும் பத்து வருடம் பெங்களூருவில் இருந்தாலும் சிலர் அந்தந்த பாஷைகளைக் கற்றுக் கொள்வது இல்லையே? நாம் அவர்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் அவர்கள் தமிழ் பேச வேண்டும் என்று நினைப்பது சரியா?
*அடுத்தது சிலர் பொதுவாகச் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு: தமிழ்நாட்டவர்கள் யாருடனும் 'mingle ' ஆவதில்லை....ஒரு 'குரூப்' அகவே திரிகிறார்கள் என்பது...இது நிஜமா?
இதையெல்லாம் யோசித்துப் பார்த்துக் கொஞ்சம் திருத்திக் கொண்டால்தான் நாம் நிஜமாகவே 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று சொல்ல முடியும்...
~Samudra


