இந்த வலையில் தேடவும்

Tuesday, August 24, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்-VI





அது தான் நான்கு விசைகளைப் பற்றியும் சொல்லியாகி விட்டதே? இன்னும் எதற்கு 'ஆறாம்' பாகம் என்றால் இதில்தான் முக்கியமான மேட்டரே உள்ளது..இன்றைய அறிவியல் உலகின் 'Hot' topic என்னவென்றால் இந்த நான்கு விசைகளை எப்படி சம்பந்தப் படுத்துவது என்பதுதான்... இந்த விசைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் டி.வி.சீரியல்களில் வரும் மாமியார் மருமகள் போல விறைத்துக் கொண்டு உள்ளன... அதனால் இந்த விசைகளுக்கு இடையே உள்ள தொடர்பு என்னப்பா? என்று விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டு உள்ளார்கள்....


அறிவியலின் முக்கிய நோக்கம் என்ன என்றால் இயற்கையை ஆராய்ந்து அறிந்து அதில் நிலவும் மாறாத விதிகளைக் கண்டறிவது தான்.... இன்றைக்கு அறிவியலில் கிட்டத் தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட 'விதிகள்' உள்ளன....(ஆர்கிமிடிஸ் விதியில் இருந்து ஐன்ஸ்டீன் விதிகள் வரை) இத்தனையையும் ஒன்று படுத்தி ஒரே விதியில் அடக்கி விட முடியுமா (பார்வதி சிவனிடம் சகல வேதங்களையும் சுருக்கி ஓர் இரண்டு எழுத்தில் சொல்லுங்கள் என்றதற்கு அவர் கூலாக 'ராம' என்று கூறியது போல) என்று விஞ்ஞானிகள் நப்பாசைப் பட்டுக் கொண்டு உள்ளார்கள்... அதாவது பிரபஞ்சத்தின் ரகசியத்தை சுருக்கி (கதை கதையாக சிவப்பு அட்டை போட்ட தடிமனான புத்தகங்களில் எல்லாம் எழுதாமல்) ஒரு எட்டணா போஸ்ட் கார்டில் எழுதிவிட முடியுமா என்று சின்சியராக உழைத்துக் கொண்டு உள்ளார்கள்...அதற்கு 'theory of everything '(TOE )’ என்று இப்போதே அதிகப்பிரசங்கித் தனமாக பேரெல்லாம் வைத்து விட்டார்கள்...

இந்த 'விசை' என்றால் என்ன என்று முதலில் பாப்போம்...விசை என்றவுடன் அது என்னவோ போட்டோவில் 'வெங்கடாஜலபதி' கையில் இருந்து டார்ச் லைட் வெளிச்சம் மாதிரி ஒன்று வருமே ? அந்த மாதிரி ஒரு பொருளில் இருந்து கிளம்பும் என்று நினைக்க வேண்டாம்... விஞ்ஞானிகள் விசை என்பதை இரண்டு பொருட்களுக்கு இடையே நடக்கும் 'துகள்' பரிமாற்றம் என்கின்றனர்.... அதாவது இரண்டு பொருட்கள் இடை விடாமல் ஒன்று மாற்றி ஒன்று இந்தத் 'துகள்' களை 'exchange ' செய்து கொண்டே இருக்கும் போது அவை இரண்டுக்கும் நடுவே 'விசை' செயல் படுகிறது என்று வைத்துக் கொள்ளலாம்.... [உங்களுக்கு பாங்கில்(bank ) பற்று-வரவுப் பரிமாற்றம்(transactions ) இருக்கும் வரை உங்களுக்கும் பாங்குக்கும் ஒரு invisible 'விசை' இருப்பதாகக் கொள்ளலாம்... பாங்கில் எதையுமே போடவில்லை எதையுமே எடுக்கவில்லை என்றால் அந்த 'force ' முடிந்து விடுகிறது...]ஓகே... இந்தத் துகள் துகள் என்கிறீர்களே அப்படி என்றால் என்ன என்று கேட்டால், 'துகள்' என்பது மேலும் பிளக்க முடியாத 'இயற்கையின்' படைப்பு.... உதாரணமாக ரோட்டில் உள்ள ஒரு கல்லை இரண்டாக உடைக்க முடியும்....இந்த இரண்டு துண்டுகளையும் இரண்டாக உடைக்க முடியும்....அப்படியே உடைத்துக் கொண்டே போனால் கடைசியில் உங்களுக்கு ஒரு குட்டி 'சிலிகான்' அணு கிடைக்கலாம்(பிரஹலாதன் சொன்ன படி மஹா விஷ்ணு எல்லாம் இருப்பாரா என்பது தெரியாது....) ... அதாவது பதினாலு 'ப்ரோட்டான்' பதினாலு 'ந்யூட்ரான்' கொண்ட அமைப்பை (கரு) பதினாலு எலக்ட்ரான்கள் (2 ,8 ,4 என்ற மட்டங்களில் ) கடனே என்று சுற்றி வரும் ஒரு அமைப்பைப் பார்க்கலாம்... இதில் இந்த எலக்ட்ரானை மேலும் உடைக்க முடியாது.... எலக்ட்ரானுக்கு உள்ளே என்ன இருக்கும் என்று இதுவரை தெரியவில்லை.... எனவே எலக்ட்ரான் ஒரு 'துகள்' ஆகும்.... (அடிப்படைத் துகள்) இந்தப் ப்ரோடானையும் ந்யூட்ரானையும் நன்றாக சுத்தியல் வைத்து உடைத்துப் பார்த்தால்,அதற்கு உள்ளே 'குவா குவா' என்று 'குவார்க்குகள்' கும்மாளம் அடிப்பதைப் பார்க்கலாம்... அதாவது ப்ரோடான் என்பது இரண்டு 'மேல்' குவார்க் + ஒரு 'கீழ்' குவார்க் சேர்ந்தது... ந்யூட்ரான் என்பது ஒரு 'மேல்' குவார்க் + இரண்டு 'கீழ்' குவார்க் சேர்ந்தது...


இந்த 'குவார்க்' குகளுடன் சேர்ந்து 'லெப்டான்' எனப்படும் அடிப்படைத் துகள்கள் 'பெர்மியான்' (fermions) என்று அழைக்கப்படுகின்றன... இந்த 'பெர்மியான்'கள் (12 'பெர்மியான்'கள் + அவற்றின் 12 உல்டா 'பெர்மியான்' (anti fermions ) கள்....மொத்தம் 24 ) சேர்ந்து இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைப் பொருட்களையும் (உங்கள் வீட்டில் உள்ள பூனைக் குட்டியில் இருந்து அண்ட வெளியில் உலவும் விண்மீன்கள் வரை) உருவாக்குகின்றன.... அடுத்து 'போசான்' (boson) எனப்படும் அடிப்படைத் துகள்கள் நான்கு ஆதார விசைகளை உருவாக்குகின்றன... எனவே தான் அறிவியல் இந்த விசைகளை 'விசைகள்' என்று அழைக்காமல் 'பரிமாற்றங்கள்' என்று அழைக்கிறது... (fundamental interactions)


ஞானிகள் காலம் காலமாகக் கேட்கும் 'நான் யார்?' என்ற கேள்வியை அப்படியே அறிவியலிடம் கேட்டால் அது,அது வந்துப்பா, நீ யாரென்றால் பெர்மியான்களும் (fermions) போசான்களும் (bosons )சேர்ந்து உருவான ஒரு கலவை என்று ரொம்ப ஈசியாகக் கூறி விடும்....(இந்தப் பிரபஞ்சத்தில் பெர்மியான் மற்றும் போசானைத் தவிர எதுவுமே இல்லை.... டென்சன் ஆகாதீர்கள் ....அறிவியல் இப்படித் தான் சொல்கிறது.... ) அதாவது பெர்மியான்கள் எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்ற பொருளின் அடிப்படைத் துகள்களை உருவாக்குகின்றன.... போசான்கள் அவற்றுக்கு இடையே 'exchange ' செய்யப்பட்டு பொருட்கள் ஒன்றை ஒன்று ஈர்த்தோ விலக்கியோ செய்து இந்தப் பிரபஞ்சத்தை நிலை நிறுத்துகின்றன... அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஒரு திரைப்படமாகக் கற்பனை செய்தால் பெர்மியான்கள் தான் நடிகர்கள், நடிகைகள், காமெடியன்கள், வில்லன்கள் .... போசான்கள் என்பவை அவர்கள் பேசும் வசனங்கள், அவர்கள் பாடும் டூயட்டுகள், அவர்கள் போடும் சண்டைகள் என்று வைத்துக் கொள்ளலாம்... டைரக்டர் தான் யாரென்று தெரியவில்லை..... (அந்த ஆளைத் தான் கையில் அருவாளை வைத்துக் கொண்டு நிறைய பேர் தேடி வருவதாகக் கேள்வி...)

இங்கே ஒரு விஷயம்.... பெர்மியான்களும் போசான்களும் வேறு... பெர்மியான்கள் போசான்களைத் தோற்றுவிப்பது இல்லை...(சாமி ஆள விடு! தெரியாம இந்த பிளாக்குக்கு வந்துட்டேன்! என்றெல்லாம் புலம்பக் கூடாது ஆமாம்) நாம் பார்த்த உதாரணத்தில் பெர்மியான்கள் என்பவை நடிகர்கள் போல போசான்கள் என்பவை அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் போல என்று பார்த்தோம்.... இது அவ்வளவு சரி இல்லை (அப்புறம் ஏன் சொன்னாய் ? என்கிறீர்களா?) ஏன் என்றால் வசனங்கள் நடிகர்களிடம் இருந்தே வருகின்றன....(டப்பிங் தவிர) ஆனால் இந்த போசான்கள் பெர்மியான்களிடமிருந்து புறப்படுவது இல்லை.... இரண்டு பெர்மியான்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இந்த போசான்களை வெளியில் இருந்து எடுத்து உபயோகித்துக் கொள்கின்றன... கீழே பெர்மியான்களும் போசான்களும் கொடுக்கப் பட்டுள்ளன....

பெர்மியான்கள்
=============

குவார்க்குகள்- மேல்(up), கீழ்(down), அழகான(charm), வித்யாசமான(Strange), உயர்ந்த(top), அடங்கிய(bottom)

லெப்டான்கள் - எலக்ட்ரான், எலக்ட்ரான் நியூட்ரினோ ,ம்யுயான், ம்யுயான் நியூட்ரினோ, டவ், டவ் நியூட்ரினோ

போசான்கள்

=========

க்ளுஆன், W அண்ட்Z போசான், போடான், கிராவிடான்


இந்த அடிப்படைத் துகள்களுக்கு இருக்கும் ஒரு பண்பு 'SPIN ' எனப்படும் 'சுழற்சி' என்பது.(மற்ற பண்புகள் அதற்கு உள்ள 'மின்னூட்டம் ' (charge) அதன் நிலை நிறை (rest mass) போன்றவை .....பெர்மியான்கள் சுழற்சி "அரை முழு ஒற்றை எண் (half integer)" போசான்களின் சுழற்சி ஒரு "முழு எண்...(integer )" ஆகவும் உள்ளது... அதாவது சுழற்சி அரை என்பது (1 /2 SPIN ) அந்த துகளை இரண்டு தடவை ஒரு முழு சுற்று சுற்றினால் (720 டிகிரி) தான் அந்தத் துகள் முன்பு இருந்த மாதிரியே இருக்கும் என்பதாகும்... (அது எப்படி? 360 டிகிரியிலேயே,ஒரு சுற்றிலேயே, அது தனது பழைய நிலைக்கு வந்து விடுமே என்று நீங்கள் அதிகப் பிரசங்கித் தனமாகக் கேட்டால் அதற்கு ரெடிமேடாக probability amplitude என்றெல்லாம் கூறிக் குழப்பி விட்டு விடுவார்கள்...எனவே அவர்கள் எது சொன்னாலும் சரி சரி என்று தலையாட்டி விடுங்கள்) சுழற்சி ஒன்று (SPIN 1 ) என்பது அந்த துகளை ஒரு முழு சுற்று சுற்றினால்(360 டிகிரி) அது முதலில் இருந்த படியே இருக்கும் என்பது..


நாம் பார்த்த நான்கு ஆதார விசைகளும் (அணுக்கரு வலிய விசை,அணுக்கரு வலுக்குறைந்த விசை, மின் காந்த விசை, ஈர்ப்பு விசை) கீழ்க்கண்ட அடிப்படைத் துகள்கள் 'பெர்மியான்' களுக்கு இடையே கடத்தப்படுவதால் உருவாகின்றன...(ஐயோ எனக்கே இந்தப் பதிவை எப்போது முடிப்பேன் என்று உள்ளது!இதை எல்லாம் புட்டுப் புட்டு வைக்க வேண்டும் என்றால் quantum mechanics -இல் டாக்டர் பட்டம் எல்லாம் வாங்கி இருக்க வேண்டும் ....நாமெல்லாம் டாக்டர் விடுங்கள் ஆஸ்பத்திரியின் 'பியூன்' பட்டம் கூட வாங்க முடியாது )


அணுக்கரு வலிய விசை- க்ளுஆன்கள் அணுக்கரு மெலிய விசை - W மற்றும் Z போசான்கள் மின் காந்த விசை - போட்டான்கள் ஈர்ப்பு விசை - க்ராவிடான்கள் (இவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.... உங்கள் வீட்டின் கொல்லைப் பக்கத்தில் நாளை முதல் ஏதாவது துகள் அலைந்து கொண்டிருந்தால் அதைப் பார்த்து "ஏம்ப்பா, உன் பேர் க்ராவிடானா ? என்று கேட்கவும்....உம் என்றால் அப்படியே ஒரு சாக்குப் பையில் பிடித்து வைத்துக் கொண்டு 'stephen Hawking ' அவர்களுக்கு mail செய்யவும் ...

போசான்களை 'exchange ' செய்யும் கலவரத்தில் நம் 'பெர்மியான்களின்' திசை வேகம், மின்னூட்டம் முதலிய பண்புகள் சற்று மாற்றம் அடைந்து exchange முடிந்த பின் பெர்மியான்கள் கொஞ்சம் (சில சமயங்களில் முற்றிலுமாக ) மாறி விடுகின்றன,,,, இந்த 'மாறிய ' பெர்மியான்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவோ விலக்கவோ செய்யும்... சரி ஒரு எலக்ட்ரான் இன்னொரு எலக்ட்ரானை ஏன் விலக்க வேண்டும்? "மின் காந்த விசை","ஒரே மின் சுமை உள்ள துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கும்" என்றெல்லாம் நீங்கள் சிம்பளாகக் கூறி தப்பித்துக் கொள்ள முடியாது! அந்த மின் காந்த விசை என்றால் என்ன? நான்கு அடிப்படை விசைகளில் ஒன்று... அதாவது அடிப்படைத் துகளான எலக்ட்ரானும் இன்னொரு எலக்ட்ரானும் இன்னொரு அடிப்படைத் துகளான 'போடான்'' என்ற துகளைப் பரிமாறிக் கொள்ளும் போது அவற்றின் குவாண்டம் நிலைகள் (quantum states ) முன்பு இருந்ததை போல் இல்லாமல் மாறி விடுகிறது...

quantum mechanics -இல் ஒரு முக்கியமான விதி உள்ளது... அதை 'Pauli 's exclusion principle ' என்று கூறி பயமுறுத்துவார்கள்....அதாவது இரண்டு ஒரே மாதிரியான 'பெர்மியான்கள்' (ஒரே சுழற்சி உள்ளவை) ஒரே சமயத்தில் ஒரே குவாண்டம் நிலையில் இருக்க முடியாது....(இந்த குவாண்டும் நிலை என்றால் என்ன என்பதை இப்போதைக்கு என்னால் விளக்க முடியாது...ச்சே! மணி ஆறரை ஆகிறது ,இந்த தலை சுற்றும் விஷயங்களை எல்லாம் மூடி வைத்து விட்டு, கண் மூடிக் கொண்டு நேதுநூரியின் 'எவரி மாட' காம்போஜியில் கேட்டு மெய் மறக்கலாம் என்று தோன்றுகிறது...) போடான்களை உமிழ்ந்த பின் எலக்ட்ரான்களின் குவாண்டம் நிலைகள் மாறி விடுவதால் அவைகள் பவ்லியின் விதிக்கு உட்பட்டு “சரிப்பா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே குவாண்டம் ஸ்டேட்டாம்....எதுக்கு வம்பு! அப்பறம் அந்த பவ்லி மைக்ரோ ஸ்கோப்பை தூக்கிகினு வந்துரப் போறான் நம்ம அப்பால போயிறலாம்” என்று ஓடுகின்றன.... அது தான் வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு எலக்ட்ரான்கள் ஒன்றை ஒன்று விலக்குவதாகத் தெரிகிறது....


ஓகே இன்னும் சுலபமாகக் கூற வேண்டும் என்றால்... நீங்களும் உங்கள் நண்பரும் ஓர் ஏரியில் படகில் (boat ) சென்று கொண்டு இருப்பதாகக் கொள்வோம்... இருவரும் தனித்தனி படகில் ... அப்போது நீங்கள் உங்களிடம் உள்ள கனமான பந்து ஒன்றை உங்கள் நண்பரிடம் வீசினால் உங்கள் படகு பின்னால் (அவரது படகை விட்டு விலகி) செல்லும் அல்லவா? அதே போல உங்கள் நண்பர் உங்களை நோக்கி பந்தை எறிந்தால் அவரது படகும் உங்களை விட்டு விலகும்... இதைப் பார்த்து விட்டு 'இரண்டு படகுகளும்' ஒன்றை ஒன்று விலக்குகின்றன என்று சொல்ல முடியாது அல்லவா?(பந்தை தூரத்தில் இருந்து கவனிக்காமல்)ஓகே இங்கே 'படகு' என்பது நமது 'எலக்ட்ரான்' 'குவார்க்' போன்ற 'பெர்மியான்கள்'..பந்து தான் அவற்றுக்கு இடையே கடத்தப் படும் 'போசான்கள்'

இது ஓர் தோராயமான உதாரணம் தான்...குவாண்டம் உலகில் எல்லாம் கொஞ்சம் சொதப்பலாக உள்ளன.... அதே போல் ஒரு ப்ரோடானும் ஓர் எலக்ட்ரானும் ஏன் ஒன்றை ஒன்று ஈர்க்க வேண்டும் என்றால் நாம் quantum electrodynamics (QED ) பென்மேன் படங்கள் (Feynman diagram ) என்றெல்லாம் போக வேண்டும்... (நம்ம லெவலுக்கு இங்கேயே நிறுத்திக் கொள்வோம்...இன்னொரு பதிவில் quantum mechanics பற்றி விரிவாகப் (?) பார்க்கலாம் ) இப்போதைக்கு அந்த 'படகு' உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் பந்தை எறிந்த பின் இரண்டு படகுகளும் ஒன்றை நோக்கி ஒன்று கிட்டத்தில் வருவதாக வேண்டுமானால்(common சென்சுக்கு எதிராக) வைத்துக் கொள்ளலாம்....

அறிவியலில் ஒரு லெவலுக்கு மேல் 'ஏன்' என்ற கேள்வியைக் கேட்க முடியாது..கேட்கக் கூடாது... அந்த லெவலுக்கு தான் 'விதி '(law ) என்று பெயர் இடுகிறார்கள்... உதாரணமாக பூமி ஏன் சூரியனைச் சுற்றி வருகிறது என்று கேட்டால் போன நூற்றாண்டில் நியூட்டன் முதல் விதிப்படி என்றார்கள் . அதாவது எந்த ஒரு பொருளும் வெளி விசை ஒன்று அதன் மேல் வந்து செயல்படும் வரை அது ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும் என்பது(இங்கே 'விதி' வருவதால் அதை நீங்கள் ஏன் அப்படி நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும் என்று கேட்கக் கூடாது )...பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு (universal law of gravitation ... )அந்த விசை பூமி சூரியனுக்குள் போய் விழுந்து விடும் அளவு பெரிசாகவும் இல்லாமல் ,பூமி சூரியனை விட்டு 'எஸ்கேப்' என்று கூறிக் கொண்டு ஓடி விடும் அளவு சிறியதாகவும் இல்லாமல் ஒரு மீடியமாக இருப்பதால் அந்த விசை பூமியின் நேர்கோட்டுப் பாதையை மாற்றி தொடர்ச்சியாக பூமியை ஒரு நீள் வட்டத்தில் சுற்றி வர வைக்கிறது... இந்த நூற்றாண்டில் 'ஐன்ஸ்டீன்' சொன்ன படி ஈர்ப்பு என்பது காலவெளியில் ஏற்படும் பள்ளங்கள்,,,,இங்கேயும் நீங்கள் 'ஏன்' என்று கேட்க முடியாது.... நாம் முன்பு கூறிய படி 'எல்லாவற்றிற்கும் ஆன கொள்கை' (TOE ) ஒன்று கண்டுபிடிக்கப் பட்டால் கூட அதையும் நாம் 'ஏன் 'என்று கேட்க முடியாது.... ஆனால் இதில் சிக்கல் என்ன என்றால் எல்லாவற்றிற்கும் ஆன கொள்கை (TOE ) என்றால் அது 'ஏன்' என்ற கேள்விக்கும் விடை அளிக்க வேண்டியிருக்கும்... விடை அளிக்கவில்லை என்றால் அது TOE இல்லை...அதாவது எல்லாவற்றிற்கும்...இன்றைக்கு காலையில் உங்கள் வீட்டுக்கு ஏன் வேலைக்காரி வரவில்லை என்பதிலிருந்து பிரபஞ்சத்தில் ஏன் விண்மீன்கள் 'red -shift ' காட்டி விலகி ஓடுகின்றன என்பது வரை எல்லாம்.....:-)

இப்போது இந்த நான்கு விசைகள் (sorry பரிமாற்றங்கள்) எந்த 'range ' வரை செல்லும் என்று பார்க்கலாம்...

------------------------------------------------------------------
விசை உச்ச வரம்பு
-------------------------------------------------------------
வலு விசை 10−15
மெலிய விசை 10−18
மி.கா. விசை முடிவிலா தூரம்
ஈர்ப்பு விசை முடிவிலா தூரம்
-------------------------------------------------

விசைகளின் ஒருங்கிணைப்பு
----------------------------------------
மேலே உள்ள டேபிளைப் பார்க்கவும்... வலுவான மற்றும் வலுக்குறைந்த அணு விசைகள் மிக மிக குறுகிய மனப்பான்மையுடன் செயல் படுகின்றன.... அதாவது அணுக்கருவின் விட்டம் வரை தான்,,,, அதைத் தாண்டினால் மி.கா.விசை மற்றும் ஈர்ப்பு இவை ரெண்டும் தான்... பின்னைய இந்த இரண்டு விசைகளும் முடிவிலாத தூரம் வரை பாயக் கூடியவை....(என்னே பரந்த மனப்பான்மை?) இந்த விஷயம் தான் இந்த நான்கு விசைகளையும் ஒருங்கிணைக்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் விஞ்ஞானிகளை பிரேக் போட்டு நிறுத்துகிறது.... அதாவது முதல் இரண்டு விசைகளும் (என்ன தான் வலுவாக இருந்தாலும்) குவாண்டம் தூரங்களில் செயல்படுகின்றன.....அந்த தூரங்களில் நடக்கும் விசயங்களை 'குவாண்டம் மெக்கானிக்ஸ்' மட்டுமே விளக்க முடியும்... 'குவாண்டம் மெக்கானிக்ஸ்' கூட 'இது தாம்பா ,இப்படி தாம்ப்பா' என்றெல்லாம் சூடம் அணைத்து சத்தியம் எல்லாம் செய்யாமல் இப்படி நடப்பதற்கு தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ரொம்ப தன்னடக்கத்துடன் கூறுகிறது....(sum over possibilities)

அதாவது ஒரு எலக்ட்ரான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் சென்றால் அது இப்படி தான் போச்சு என்று சர்வ நிச்சயமாக யாராலும் படம் வரைந்து காட்ட முடியாது...அது ஒரு கிறுக்கு பிடித்த துகள்....(ஏன் எல்லா அடிப்படை துகள்களும் கிறுக்கு தான்) சில சமயங்களில் 'short cut ' டில் செல்லும.... சில சமயத்தில் ஊரெல்லாம் சுற்றி விட்டு ,சிக்கன் பிரியாணிஎல்லாம் சாப்பிட்டு விட்டு மெதுவாக வந்து சேரும்...தேவை இருந்தால் அலையாக மாறி ஒரே எலக்ட்ரான் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பாதைகளில் (கிருஷ்ண பரமாத்மா சரச லீலை செய்வது போல்) பயணம் செய்து ஸ்டாப் வந்தவுடன் திரும்பவும் ஒரு துகளாக மாறி எதுவுமே தெரியாத மாதிரி உட்கார்ந்து கொள்ளு ம்..போதாக் குறைக்கு ஹைசன்பெர்க் என்ற ஆசாமி பொழுது போகாமல் கண்டு பிடித்த 'நிச்சயமில்லாத் தத்துவம்' (uncertainty principle ) வேறு....[நிச்சயமில்லாத் தத்துவம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்]


தூரம் அதிகரிக்க அதிகரிக்க எல்லாம் கொஞ்சம் தெளிவாகின்றன.... ஒரு கல்லை இங்கிருந்து அங்கு எறிந்து விட்டு அது எந்தப் பாதையில் சென்றது என்று 90 % சரியாகக் கூற முடியும்...(அடப் பாவி இங்கயும் 90 % தானா?) அல்லது பூமி சூரியனை இந்தப் பாதையில் தான் சுற்றுகிறது என்று துல்லியமாகக் கூற முடியும்....எனவே இங்கே சவால் என்ன என்றால் 'குட்டியூண்டு' தூரத்தில் செயல் படும் குவாண்டும் விதிகளையும் பிரம்மாண்ட தூரங்களில் ஆட்டம் போடும் ஈர்ப்பின் 'general theory of relativity ' யையும் எப்படி சம்பந்தப் படுத்துவது என்பது தான்....


காந்த விசையையும் மின் விசையையும் வெற்றிகரமாக இணைத்து 'மின் காந்த விசை' ஆக்கியது போல இப்போதைய பிளான் என்ன என்றால் 'அணுக்கரு மெலிய விசையையும் மி.கா.விசையையும் இணைத்து 'மின் மெலிய கொள்கை' (electro weak theory ) ஒன்றை உருவாக்குவது... இந்த மி.மெ. விசையை மின் வலிய விசையுடன் இணைத்து ஒரு 'பெரிய ஒருங்கிணைந்த கொள்கை' (grand unified theory ) யை உருவாக்குவது... இந்த பெ.ஒ. கொள்கையை குவாண்டம் ஈர்ப்புடன் (quantum gravity ) இணைத்து 'எல்லாவற்றிற்கும் ஆன கொள்கை' (theory of everything ) ஒன்றை உருவாக்குவது.... ஆஹா! ரொம்ப ஈஸி ஆகத் தெரிகிறதா? ஓகே try பண்ணுங்கள்...


குவாண்டம் விதிகளையும் மிக அதிக தூரங்களில் செயல்படும் ஈர்ப்பின் ரகசியங்களையும் ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் 'கிராவிடான்' என்ற துகளை உற்சாகமாகத் தேடிக் கொண்டு உள்ளார்கள்...சற்று முன் சொன்ன படி உங்களுக்கு எங்காவது 'கிராவிடான்' கிடைத்தால் விட்டு விடாதீர்கள்... அதன் மூலம் உங்களுக்கு ஒரு பெரிய தொகை பரிசாகக் கிடைக்கலாம்...


(அப்பா ஒரு வழியாக இந்த பதிவும் 'பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்' தொடரும் இனிதே(?)முடிவடைந்தன...)


~சமுத்ரா

Friday, August 20, 2010

எங்கே எதுகை???

ஸ்கூலில் ' எதுகை மோனை ' பற்றியெல்லாம் படிக்காதவர்களுக்கு ஓர் எளிய அறிமுகம்:

கீழ்க்கண்ட கவிதையைப் படிக்கவும்:

குப்பு சாமி எம் மவனே
தப்புத் தண்டா பண்ணாதே
அப்பா சட்டைப் பைலேர்ந்து
டப்பு திருடித் தின்னாதே!

முரட்டுப் பயக கூட சேந்து
சுருட்டுப் பத்த வெக்காதே
திருட்டுப் பயக சோடி சேந்து
இருட்டுனப்பறம் சுத்தாதே !

மாடா உழச்சு வர்றவரை
வாடா போடா என்காதே
பீடாக் கடை வாசலில் நின்னு
ஏடா கூடமாய் பேசாதே!

கலெக்டராக வராட்டியும்
களவாணியாய் வராதே
ஆபீசராய் ஆகாட்டியும்
அன்னக்காவடி ஆகாதே!


(இந்தக் 'கவிதையை' எழுதினது யார் என்று கூகுளில் எல்லாம் தேடவேண்டாம் ப்ளீஸ்)


இரண்டு சொற்களுக்கு முதல் எழுத்து வேறாக இருந்து இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி இருந்தால் அது 'எதுகை' ...அதாவது மேற்கண்ட கவிதையில் குப்பு' 'தப்பு' 'டப்பு' என்பவையெல்லாம் எதுகைகள்....(வேற உதாரணமே கிடைக்கலையா?) ' என்ன பண்றது, எதுகையைப் பற்றி விளக்க நான் பாட்டுக்கு

"அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்"
என்றெல்லாம் உதாரணம் காட்டினால் அடிக்க வருவீர்கள்...எனவே ஒரு சொந்தக் கவிதையை எடுத்து விட்டேன் ....

முதல் எழுத்து வேறாக இருந்து அதன் பின் எத்தனை எழுத்துக்கள் ஒன்றாக வருகின்றனவோ அந்த அளவு 'எதுகை' அழகாக இருக்கும்...

உதாரணமாக

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு...

என்ற திருக்குறளில் 'அகர' மற்றும் 'பகவன்' என்பவை எதுகைகள்... இதற்குப் பதிலாக வள்ளுவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஓகே ஓகே
ஃபிகர கரெக்ட் பண்ணு ஃபஸ்டு...


என்று ஏடாகூடமாக எழுதினால் தான் full எதுகை வரும்....ஆனால் கீழ்க்கண்டபாட்டைப் பாருங்கள்



இரண்டு புலவர்கள்; நண்பர்கள்; ஒருவர் நொண்டி ;இன்னொருவர் குருடு..வறுமை வேறு !(great combination ! என்கிறீர்களா?)

அப்படியே கால்நடையாகப் போய் ஏதாவது ராஜாவைப் பார்த்துப் பாட்டுப் பாடிகாசு வாங்கி வரலாம் என்று இருவரும் புறப்படுகிறார்கள்....

குருடர் முடவரைச் சுமந்து கொள்ள ,முடவர் குருடருக்கு வழிசொல்லுவார்....வழியில் ஒரு சிறு நதி வருகிறது....இருவரும் அதில் இறங்கி குளித்து விட்டு , தங்கள் (ஒரே) துணியை துவைக்கிறார்கள்.... குருடர் ஏற்கனவே கிழிந்து போய் இருந்த தம் ஆடையை நன்றாக Surf excel எல்லாம்போட்டு தேய் தேய் என்று தேய்க்கிறார் ... அப்போது அது மேலும் கிழிந்து ஆறோடு ஆறாகப் போய் விடுகிறது.... இதைப் பார்த்துக் கொண்டிருந்தமுடவர் பாடுகிறார்...


அப்பிலே தேய்த்தெடுத்து அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ?
(தோ பாருப்பா ராஜா முன்னாண்ட 'பளீச்சு' ன்னு போனுங்காண்டி இருந்த ஒத்தக் கைலியையும் தேச்சுச் தேச்சு ஆத்தோட உட்டுட்ட யேப்பா? படா பேஜாரா கீது)

குருடர் ஒரு 'மோனாலிசா' டைப் புன்னகையை உதிர்த்து விட்டு மீதிப்பாட்டைப் பாடுகிறார்...


செப்பக்கேள்

இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை....
(அய்யே லூசுல உடு தோஸ்து! கைலி தான எஸ்கேப் ஆச்சு? நம்மாண்ட அந்தமுனியாண்டி சாமி 'அருளு' கீதல்ல, அது காப்பாத்திக்கும்...நட ஜோலியப்பாக்கலாம்....) (வறுமையில் செம்மை என்பது இது தானா????)


இந்தக் கதையை எதற்காகக் ' கஷ்டப் பட்டு ' சொன்னேன் என்றால்இந்தப்பாட்டில் வரும் இக்கலிங்கம்
மற்றும் சொக்கலிங்கம் என்பவை perfect எதுகைகள்.....(முதல் எழுத்தைத்தவிரஅனைத்து எழுத்துக்களும் ஒன்றி வருவதால்)


ஓகே இப்போதெல்லாம் 'எதுகை'யைப் பார்ப்பது அரிதாகி வருகிறது...
புதுக் கவிதைகளில் உரை நடையையே பிய்த்துப் பிய்த்து ஏழெட்டு வரிகளில்எழுதி விட்டு 'கவிதை' என்கிறார்கள்.... எதுகை மோனை எல்லாம்வந்தால் எங்கே நம்மை 'பழைய' கேஸ், கர்நாடகம் என்றெல்லாம் சொல்லி விடுவார்களோ என்றுபயப்படுகிறார்களோ என்னவோ! மேலும் புதுக்கவிதைகளில் எதுகை மோனை வந்தால் அதன் கருத்து கொஞ்சம் குறைந்துதான் விடுகிறது... உதாரணமாக பொன். சுதா அவர்களின் ஒரு ஹைக்கூ :


என்
குழந்தை
உறங்கும் போது தான் தெரிகிறது
உலகம்
எத்தனை
என்று....
இரைச்சலானது என்று.....


இதில் வழ வழ கொள கொள என்று 'எதுகை' 'மோனை' எல்லாம் எங்கே சேர்ப்பது? எதுகையெல்லாம் சேர்த்துத் தான் ஆக வேண்டும் என்றால் சொல்ல வந்த கருத்தில் 'சொதப்பல்' ஏற்பட்டு விடுகிறது.... அதாவது நாம் நினைக்கும் கருத்துக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தால் அந்த சொல் 'எதுகை' க் குப் பொருந்துவதில்லை.... ஒரு perfect எதுகையைத் தேர்ந்தெடுத்தால் கருத்தில் குறைபாடு ஏற்படுகிறது....

இப்போது நாம் ஆங்கிலத்தில் வருவது போல 'Rhythm' அதாவது 'கடை எதுகை' யை கொஞ்சம் பயன்படுத்துகிறோம்....

.தா.

நந்த வனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி !


(என்னடா ஆண்டி , போண்டி என்றெல்லாம் வருகிறதே என்று எண்ண வேண்டாம்... இது ஓர் அற்புதமான தத்துவப் பாடல்.... அர்த்தம் தெரியாதவர்கள் உங்கள் பாட்டியைக் கேட்கவும்...)


சினிமா பாடல்களிலும் பல்லவியின் முதல் அடியும் அனு பல்லவியின் முதல்அடியும் 'எதுகை'யாக வர வேண்டும் என்ற
'கர்நாடக' விதிமுறையை எப்போதோ விட்டு விட்டோம் என்று தோன்றுகிறது....

சில அதரப் பழசான பாடல்களில் தான் இந்த விதி எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதி இருக்கிறார்கள்...


. தா

()
சிந்தனை செய் மனமே!- செய்தால்
தீவினை அகன்றிடுமே !! -சிவகாமி மகனை சண்முகனை


(. )

அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே அரு மறை பரவிய சரவண பவ குகனை...


இதில் சிந்தனை, அந்தகன் மற்றும் மகனை, முகனை, வினை, துணை, குகனை என்பவை எல்லாம் பாட்டுக்கு அழகு சேர்க்கும் 'எதுகை' அணிகள்....

இப்போதைய சினிமாப் பாட்டுக்களில் இந்த மாதிரி எல்லாம் விட்டு விட்டு இங்கிலீஷ் போயம் லெவலுக்கு ரிதம் எல்லாம் வைத்து

'கண்ணும் கண்ணும் நோக்கியா
கொள்ளை கொள்ளும் மாஃபியா'

என்றெலாம் எழுதிக் கொண்டு இருக்கிறோம்....


எது எப்படியோ

யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்
தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப................



என்று கம்பீரமாகப் பாடிய இளங்கோவடிகளின் தமிழை

'நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட'


என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து இருக்கிறோம்... இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?


~சமுத்ரா




Monday, August 9, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள் - V

எத்தனை பேர் இந்த blog-ஐ follow செய்கிறார்கள் என்று ஆபீசில் கேட்டார்கள் ... என்னையும் சேர்த்து ஒருவர் தான் என்றேன்..இந்த blog-ஐ ஆரம்பித்ததற்கு முதல் காரணம் அறிவியலை (எனக்குத் தெரிந்த வரைக்கும்) தமிழில் எழுதுவது தான்... அறிவியலை அறிந்து கொள்ள எத்தனையோ நல்ல web-site கள்,புத்தகங்கள் உள்ளன... ஆனாலும் பெரும்பாலானவை என்னென்னவோ குறிகளைஎல்லாம் சமன்பாடுகளில் போட்டு பயமுறுத்துகின்றன...சில தமிழ்-அறிவியல் சைட்டுகளோ , Fluctuations in Matter Density என்பதை "பிண்டத் திணிவு ஏற்ற இறக்கம்" என்றெல்லாம் கூறி மொழி பெயர்ப்பதில் தம் திறமைகளைக் காட்ட முயல்கின்றன...இப்படியெல்லாம் செய்யாமல் ஏதோ நமக்குத் தெரிந்த வரை அறிவியலை எளிமையாக்கிக் கூறினால் அறிவியல் தாகம் கொண்ட ஏதேனும் ஒரு ஜீவனாவது சந்தோஷப்படும் என்ற ஒரே நம்பிக்கையில் தொடர்ந்து எழுதுகிறேன்..]



பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் நான்கு விசைகளில் மூன்றைப் பார்த்து விட்டோம்.. (அப்பாடா!) இனி நான்காவதாக வரும் gravity எனப்படும் "ஈர்ப்பு விசை"....என்னதான் இந்த விசை பிரம்மாண்டமான நம் பூமியையே சூரியனை சமர்த்தாக சுற்றி வரச் செய்தாலும் ,அண்ட வெளியில் கிரகங்களும் விண்மீன்களும் கன்னாபின்னா வென்று சிதறி ஓடாமல் தடுத்து அடங்கி இருக்க வைத்தாலும் , அறிவியல் இந்த விசையை நான்கு விசைகளில் மிகவும் 'வீக்' ஆன விசையாகத்தான் பார்க்கிறது... மிக மிகப் பெரிய பரிமாணங்களில் (macroscopic scale) மட்டுமே இந்த விசை உள்ளே வருகிறது... எனவே மிகச் சிறிய தூரங்களிலும் (quantum distance) , மிக மிக மிக குட்டியான எலக்ட்ரான் முதலிய துகள்களுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனைகளின் (interaction between atomic particles) போதும் அறிவியல் இந்த விசையை 'நீ ஒன்னும் வேணாம் போ" என்று ஒதுக்கி வைத்து விடுகிறது... இதற்கு ஒரு காரணம்: ஈர்ப்பு விசை அது செயல்படும் பொருட்களின் நிறையுடன் நேரடித் தொடர்பு உடையது....எலக்ட்ரான் போன்ற துகள்கள் கிட்டத்தட்ட 'நிறையற்ற' (massless) துகள்கள் என்பதால் இந்த விசையும் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் ....அதாவது இரண்டு எலக்ட்ரான்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒன்றை ஒன்று ஈர்க்கவே செய்கின்றன.... ஆனால் நாம் முன்பு பார்த்த 'மின் காந்த விசை" (electromagnetic interaction) யின் முன்பு ஈர்ப்பு எல்லாம் ஜுஜுபி... நம் மி.கா. விசை இரண்டு எலக்ட்ரான்களுக்கு மத்தியில் செயல்பட்டு அவற்றை (இரண்டும் ஒரே இனம் என்பதால்) ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடச் செய்கிறது...இன்னொரு விஷயம் மற்ற விசைகளை நம்மால் உணரவும் , detect செய்யவும் முடியும்... உதாரணமாக ,மின் காந்த விசையை உணர்வதற்கு ஒரு மெல்லிய இரும்புக் கம்பியை கொண்டு போய் உங்கள் வீட்டில் உள்ள plug point ஒன்றின் துளையில் நுழைக்கவும்... (Disclaimar: பின் விளைவுகளுக்கு இந்த blog பொறுப்பல்ல...) ஆனால் ஈர்ப்பு விசையை 'உணரவோ' ஒரு கருவியின் மூலம் detect செய்யவோ முடியாது.... அதனால் தான் நியூட்டனுக்கு முன்னர் மக்கள் 'ஆப்பிள்' மரத்திலிருந்து 'கீழே' தானே விழும்? விசையும் கிடையாது பசையும் கிடையாது என்று நினைத்துக் கொண்டு இருந்தனர்...


ஆனால் நியூட்டன் கொஞ்சம் மாற்றி யோசித்ததால் (அதாவது: மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்..பூமியின் மேற்பரப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு (A) ஆப்பிள் 'கீழே' விழுகிறது... பூமி ஒரு உருண்டை என்பதால் அவருக்கு நேர் எதிரே பூமியின் அடுத்த பக்கத்தில் (தலை கீழாக) உட்கார்ந்து கொண்டுள்ள ஒருவருக்கும் (B ) அது 'கீழே' (அம்புக் குறி காட்டி உள்ளது போல்) தானே விழ வேண்டும்? அப்படியென்றால் 'B' க்கு ஆப்பிள் கிடைக்கவே கிடைக்காது... அது விண் வெளியில் பறந்து போய் விடும்,,,, எனவே நியூட்டன் எல்லாப் பொருள்களையும் பூமி 'தன்னை' நோக்கி இழுக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்... மேலும் பூமி மாத்திரம் ஆப்பிளை இழுப்பதில்லை.... ஆப்பிளும் பூமியை இழுக்கிறது என்று கண்டு பிடித்தார்... ஆப்பிளை நோக்கி பூமி மேலே வருவது கொஞ்சம் ஓவர்... ஏன் வருவதில்லை என்பதை உங்கள் ஹை ஸ்கூல் டீச்சரிடம் கேட்டுக் கொள்ளவும்,,,



தாவது 'R' தொலைவில் வைக்கப்பட்டுள்ள 'M1'நிறையுள்ள ஒரு பொருளுக்கும் 'M2' நிறையுள்ள ஒரு பொருளுக்கும் இடையே செயல் படும் ஈர்ப்பு விசையை கணக்கிட F=G M1M2 / (R*R) ..இங்கே G= ஈர்ப்பு மாறிலி.. என்ற சூத்திரத்தை உபயோக்கிறார்கள்...



கலிலியோவிற்கு முன் மக்கள் கனமான ஒரு பொருள் வேகமாகவும் லேசான ஒரு பொருள் மெதுவாகவும் கீழே விழும் என்று நம்பினர்.... கலிலியோ இதைத் தவறு என்று நிரூபித்து இரண்டும் ஒரே சமயத்தில் தரையை அடையும் என்றார்.... (ஆனால் ஏன் ஒரு கோழி இறகு ஒரு கல்லை விட மெதுவாக விழுகிறது என்றால் அது காற்றின் தடை என்றார்... (நிலாவுக்கு ச் சென்ற விண்வெளி வீரர்கள் நிலவில் இந்த ஆய்வைச் செய்து இரண்டும் ஒரே நேரத்தில் விழுவதைக் கண்டதாகக் கேள்வி...) இது ஏன் என்று டீச்சரை எல்லாம் கேட்க வேண்டாம்...நானே சொல்கிறேன்... அதாவது கல்லும் ,கோழி இறகும் ஒரே 'முடுக்கத்தில்' (g ) கீழே இழுக்கப் படுகின்றன... (acceleration) கல் ஒன்றை கீழே போட்ட முதல் நொடியில் அதன் வேகம் ஒரு செகண்டுக்கு 9.81 மீட்டராகவும் அடுத்த நொடியில் வேகம் ஒரு நொடிக்கு 2 x 9.81 மீட்டராகவும் அடுத்த நொடியில் வேகம் ஒரு நொடிக்கு 3 x 9.81 மீட்டராகவும் இருக்கிறது... இறகுக்கும் இதே கேஸ் தான் .... இந்த முடுக்கம், acceleration என்பது விசை மற்றும் பொருளின் நிறை இரண்டின் விகிதம் ஆகும் ...அதாவது: a = F/M... (இதை ந்யூட்டனின் இயக்கவியல் இரண்டாம் விதி என்பார்கள்)
கனமான பொருளுக்கு M அதிகம்... எனவே அதைப் புவி இழுக்கும் F உம் அதிகம்... லேசான பொருளுக்கு M குறைவு... எனவே அதைப் புவி இழுக்கும் விசை F உம் குறைவு... எனவே இரண்டு கேசிலும் a என்பது மாறாமல் உள்ளது...
(அதாவது 2/4= 1024567890/ 2049135780 என்பது போல...)




இரண்டாவது விஷயம் ஈர்ப்பு எப்போதும் positive...(what an optimist!) அதாவது ஈர்ப்பு இரண்டு பொருட்களை ஈர்க்குமே தவிர விலக்காது... ஓகே அப்படியென்றால் நான்கு விசைகள் இருந்தாலும் நீங்களும் உங்கள் பக்கத்து சீட்டில் அமர்ந்து வேலை பார்க்கும் பெண்ணும் ஏன் ஒன்றை ஒன்று ஈர்க்கப்பட்டு ஒட்டிக் கொள்வதில்லை? ( im NOT talking about biology now) முதல் இரண்டு அணுக்கரு விசைகளும் அணுவின் கருவைத் தாண்டி கூட வாரா... அப்படி இருக்கும் போது உங்களைத் தாண்டி எப்படி அடுத்தவரிடம் போகும்? ஈர்ப்பு விசை உங்கள் நிறையைச் சார்ந்தது என்பதால் உங்கள் 6.5 kg நிறை (64 kg எடை) எல்லாம் ஒட்டிக் கொள்ளும் அளவு விசையை எல்லாம் தோற்றுவிக்காது... அடுத்தது மின் காந்த விசை கொஞ்சம் மனசு வைத்தால் நீங்களும் உங்கள் பக்கத்து சீட் ஆர்த்தியும் ஒட்டிக் கொள்ள முடியும்... ஆனால் பாருங்கள் உங்கள் உடலில் உள்ள எலக்ட்ரான்கள் ஆர்த்தியின் உடலில் உள்ள எலக்ட்ரான்களை எதிர்க்கின்றன... உங்கள் உடலில் உள்ள எலக்ட்ரான்கள் ஆர்த்தியின் உடலில் உள்ள ப்ரோடான்- களை ஈர்க்கின்றன... ஆர்த்தியின் உடலில் உள்ள ப்ரோடான்கள் உங்கள் உடலில் உள்ள எலக்ட்ரான்களை ஈர்க்கின்றன... இதற்கு மேல் சொன்னால் அடிக்க வருவீர்கள்... எனவே இந்த விசைகள் கச்சிதமாக 'கான்செல் ' ஆகி விடுவதால் நீங்களும் ஆர்த்தியும் ஒட்டிக் கொள்வதில்லை....


OK..இதுவரை நியூட்டன் பார்வையில் ஈர்ப்பைப் பற்றிப் பார்த்தோம்...இனி ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று பார்க்கலாம்... இதற்கு நீங்கள் இதுவரை கற்பனை செய்திராத ஒரு 'நான்காம்' பரிமாணத்தை (fourth dimension ) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது... இந்த நான்காம் பரிமாணம் வேறொன்றும் இல்லை... சில சமயம் நாம் துச்சமாக மதிக்கும் , சில சமயம் ஐயோ போய் விட்டதே என்று வருந்தும் 'காலம்' (time ) தான்...ஐன்ஸ்டீன் சொன்னது நம்மை சுற்றி வெறும் வெளி(space ) மட்டும் இல்லை..வெளியும் காலமும் பின்னிப் பிணைந்த சிக்கலான 'காலவெளி' (spacetime ) யாக உள்ளது...அதாவது நியூட்டனின் படி காலமும் வெளியும் எப்போதும் மாறாதவை... எதனாலும் பாதிக்கப் படாதவை... ஆனால் ஐன்ஸ்டீன் வந்த பிறகு பொருள்கள் தம்மைச் சுற்றி உள்ள வெளியையும் காலத்தையும் மாற்றக் கூடும் என்பது தெரிந்தது... ஈர்ப்பைப் பற்றி இரண்டு கேள்விகளை ஐன்ஸ்டீன் கேட்டதாகக் கூறுகிறார்கள்..ஒன்று: அது ஏன் எப்போதும் பொருட்களை ஈர்க்கிறது? ஏன் விலக்குவதில்லை? இரண்டு: இரண்டு பொருட்களுக்கு இடையில் உள்ள தூரத்தை மாற்றினால் அவைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு 'விசை' உடனடியாக மாற வேண்டும்... அதாவது ஈர்ப்பு விசை முடிவே இல்லாத பயங்கர வேகத்தில் பயணிக்க வேண்டும்... ஆனால் சார்பியல் கொள்கைப்படி (relativity theory ) பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும் 'ஒளி' யை விட வேகமாகப் பயணிக்க முடியாது...

எனவே , ஐன்ஸ்டீன் 'GRAVITY ' என்பது ஒரு விசை மாதிரி அல்ல ..பூமி போன்ற கனமான பொருள்கள் தங்களைச் சுற்றியுள்ள காலவெளியில் ஏற்படுத்தும் 'பள்ளம்' என்று கூறினார்... நியூட்டன் முதல் விதிப்படி எந்த ஒரு பொருளும் தன் மேல் ஏதேனும் தடை செயல் படும் வரை நேர்கோட்டில் சென்று கொண்டே இருக்கும்....(அல்லது சிவனே என்று உட்கார்ந்து கொண்டு இருக்கும்) பூமியும் தான் உண்டான அந்த நாளில் எந்த வேகத்துடன் தூக்கி எறியப்பட்டதோ (சூரியனிடமிருந்து) அதே வேகத்தில் இன்றும் நேர்கோட்டில்(?!) பயணித்துக் கொண்டு உள்ளது... ஏனென்றால் அதைத் தடுத்து நிறுத்த வெளியிலிருந்து எந்த விசையும் இல்லை... ஆனால் பாருங்கள் இந்த சூரியன் தன் பூதாகாரமான நிறை காரணமாக தன்னைச் சுற்றியுள்ள (கால) வெளியை வளைக்கிறது...(உங்கள் பெட்டின் (பெட்) மேல் கனமான ஒரு பந்தை வைத்தால் ஒரு குழி ஏற்படுமே அது போல) எனவே நம் பூமியின் பயணப் பாதை சூரியனால் வளைக்கப் பட்டு ஒரு நீள் வட்டமாக உள்ளது... ஆனால் நான்கு பரிமாணத்தில் நம் பூமியின் பயணப் பாதை ஒரு 'நேர் கோடு' தான்.....for example , பூமியின் மேற்பரப்பில் நீங்கள் நேர்கோட்டில் நடந்து செல்வதாகக் கொள்வோம்... நம் பூமி ஓர் உருண்டை என்பதை நீங்கள் உணரவே மாட்டீர்கள் ...உங்கள் பாதை எப்போதும் நேர்கோடாகவே இருக்கும்... ஆனாலும் நீங்கள் பூமியை வட்டமாக சுற்றி வந்து கொண்டே இருப்பீர்கள்.. இதே போல் தான் பூமி தான் ஒரு நேர்க்கோட்டில் செல்வதாக ஜாலியாக நினைத்துக் கொண்டு இருந்தாலும் அது சூரியன் உண்டாக்கும் கால வெளிப் பள்ளத்துக்குள் (spacetime distortion ) அகப்பட்டு ஒரு நீள் வட்டப் பாதையிலேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு உள்ளது....
ஓகே இன்றைக்கு இது போதும்... மீண்டும் 'பிரபஞ்சத்தின் ஆதார விசைகள் -VI இல் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது

சமுத்ரா











Saturday, August 7, 2010

ஈசன் கணக்கு...

கோவிந்தன்
வங்கி சென்று இரண்டு லட்சம் டெபாசிட் செய்தார்...
வரும் வழியில் இரண்டு பிளைட் டிக்கெட் புக் செய்தார்...
மகளுக்கு போன் செய்து
"நான் இருக்கிறேன் கவலைப்படாதே" என்றார்...
கார் ஷோ ரூமில் லேட்டஸ்ட் காரின் விலை விசாரித்தார்...
வீடு வந்து சாப்பிட்டு
நெஞ்சு வலி என்று சரிந்தார்...
டாக்டர் வந்து பார்த்து விட்டு
"ஆள் போய் பத்து நிமிடம் ஆச்சு " என்றார்...

~சமுத்ரா

Thursday, August 5, 2010

Inception...




'Inception ' திரைப்படம் சமீபத்தில் பார்த்தேன்.. தியேட்டருக்குப் போவதென்றால்
எப்படியும் late ஆகி விடுகிறது. பெங்களூர் போன்ற நகரங்களில் காலை 10 மணி காட்சிக்கு எட்டரை மணிக்கே கிளம்ப வேண்டியுள்ளது.. .(முந்தா நாள் ராத்திரி எட்டரைக்கே அல்ல...அந்த நிலைமையும் கூடிய சீக்கிரம் வந்து விடும் என்று நினைக்கிறேன்) எப்படியோ அரக்கப் பறக்க 10:10 மணிக்கு உள்ளே ஓடி வந்து 'அப்பாடா' என்று உட்கார்ந்தால் திரையில் 'கட்டா மிட்டா' படம் ஓடிக் கொண்டிருந்தது.(சே ரொம்ப plan செய்தால் இப்படி தான் ஆகுமோ?)பிறகு ஹால் மாறி 'Inception ' னுக்குப் போய் உட்கார்ந்தால் 20 நிமிட படம் போய் விட்டிருந்தது.. (ஐயோ மொதல்ல இருந்து பாத்தாலே அந்தப் படம் புரியாதே! என்று யாரோ புலம்புவது கேட்கிறது) என்ன செய்வது? கண்ணைக் கறுப்புத் துணி கட்டி காட்டில் விட்டார்ப் போல் இருந்தது.. எப்படியோ சுதாரித்துக் கொண்டு பார்த்ததில் கொஞ்சம் புரிந்தது..

ஆபீசில் சிலர் அந்தப் படத்தை பார்த்து விட்டு வந்து என்னவோ சிக்மண்ட் பிராய்டிடம் சிக்ஸ் years assistant -ஆக இருந்த லெவலுக்கு அலட்டிக் கொண்டார்கள்... நமக்கெலாம் படத்தைப் பார்த்து விட்டு வந்து 'விக்கிபீடியா'வில் ஒரு தரம் படித்தால் தான் படத்தின் கதையே புரிகிறது.. என்ன தான் 'Science fiction ' கதைகளை அவர்கள் அதிக செலவு செய்து வேலை மெனக்கெட்டு திரைப்படமாக எடுத்தாலும் நமக்கு அதனுடன் 'ஒன்றுவது' கஷ்டமாக உள்ளது... (ஒரு தற்காலிக 'excitement ' ஐ மட்டுமே நமக்குத் தருகிறது.."Titanic" படத்தையே 'காதல்' இல்லாவிட்டால் அத்தனை பேர் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்)

ஓகே படத்தின் சாரம் இது தான்: மனவியல் துறையில் வல்லுனர்கள் சிலர் "பிசினஸ்Magnet" ஒருவரை வசப்படுத்தி அவரின் கனவுக்குள் புகுந்து, அவரின் ஆழ் மனதுக்குள் சென்று 'இந்த பிசினஸ் எல்லாம் வேண்டாம்..விட்டு விடு' என்று கட்டளை இடுகிறார்கள்..அவரின் ஆழ் மனம் வரை செல்ல வேண்டும் என்றோ என்னவோ ஒரு கனவு போதாதென்று கனவு, கனவுக்குள் கனவு, கனவுக்குள் கனவுக்குள் கனவு , என்று கனவு உலகங்களில் கூட்டிச் சென்று படம் பார்க்கும் அப்பாவிகள் நாம் படம் பார்ப்பதே கனவா நனவா என்று குழம்பும் படி செய்து விடுகிறார்கள்...


அவர்கள் எடுத்துக் கொண்ட ஒரே லாஜிக் இதுதான்: "நிஜ வாழ்க்கையின் timings மற்றும் கனவின் timings ஒரே மாதிரி இருப்பதில்லை..அதாவது தூங்கும் போது ஒரு 'ஐந்து' நிமிடங்களுக்குக் கனவு காணும் ஒருவர் அந்தக் கனவில் தன் காதலியைச் சந்தித்து , இருவரும் பானி பூரி சாப்பிட்டு,'கண்கள் இரண்டால்...' என்று டூயட்டெல்லாம் பாடி மாதக் கணக்கில் லவ் பண்ணி ,ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு ஏன் அவர்கள் குழந்தை L.K.G போகும் வரை கூட அந்தக் கனவில் காணலாம்...(எல்லாம் அந்த 'ஐந்து' நிமிடங்களில்) [ 'மாயை' பற்றிய ஒரு புராணக் கதை கூட படித்திருக்கிறேன்... அதாவது: கிருஷ்ண பரமாத்மாவும் நாரதரும் ஒரு நீண்ட பாலைவனம் வழியாகப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.. (எதற்கு என்று எனக்குத் தெரியாது...பாலை வனத்திலும் ஒரு நங்கையை நம் கிருஷ்ணர் set -up செய்து விட்டாரோ என்னவோ) அப்போது கிருஷ்ணர் களைத்துப் போய் அப்படியே உட்கார்ந்து விடுகிறார்... 'நாரதா நாரதா, ரொம்ப தாகமாக உள்ளது.. நீ போய் பெப்சியோ,கோக்கோ கிடைக்கிறதா என்று பார்த்து வா' என்று நாரதரை அனுப்புகிறார்... நாரதரும் தண்ணீர் தேடி அலைகிறார்... அப்படியே பாலைவனம் தாண்டி ஊருக்குள் வந்து விடுகிறார்...அங்குள்ள கிணறு ஒன்றில் அழகான பெண் ஒருத்தி நீர் எடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.. "முதன் முதலில் பார்த்தேன் , காதல் வந்தது" கேஸ் ஆகி இருவரும் காதலில் விழுகிறார்கள்.. (கிருஷ்ணர் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும் , தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் அறவே மறந்து விடுகிறார் நாரதர்.. ) இருவரும் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தை குட்டிகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்....ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்த ஊருக்குள் வெள்ளம் வந்து விடுகிறது... எல்லாரும் அடித்துச் செல்லப் படுகிறார்கள்..நாரதர் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களும் வெள்ளத்தில் சென்று விடுகிறார்கள்..நாரதர் அந்த அதிர்ச்சியில் மயங்கி விடுகிறார்... கண் விழித்துப் பார்கையில் தான் அவருக்குத் தான் கிருஷ்ணருக்காகத் தண்ணீர் தேடி வந்தது நினைவில் வருகிறது...உடனே நீர் எடுத்துக் கொண்டு அந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று பார்க்கிறார்... கிருஷ்ணர் இன்னமும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்..."நாரதா ஏன் இவ்வளவு நேரம்? அரை மணி நேரமாகக் காத்திருக்கிறேன், என்கிறார் கிருஷ்ணர்..நாரதரின் குழப்பத்தை உணர்ந்த அவர், மகனே,உன் காலமும் என் காலமும் வேறு...உன்னுடையது மாயை என்னுடையது உண்மை என்கிறார்..(ஐன்ஸ்டீன் சொன்னதை அப்பவே சொல்லி விட்டார் பாருங்கள்...)நாரதர் அப்போது தான் "மாயை" என்றால் என்ன என்பதை உணர்கிறார்]


Ok back to Inception ... கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது...மனிதனுக்குப் புரியாமல் குழப்பும் விஷயங்களில் மரணத்தை அடுத்து வருவது கனவு தான் என்று நினைக்கிறேன்..எனவே பிராய்டு லெவலுக்கு கனவுகளை ஆராயாமல் Inception திரைப் படத்தில் வருவது போல் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமா என்று மட்டும் பார்க்கலாம்...

* இன்னொருவர் கனவை அறிவது ( extraction ): நமக்கே நமக்கு என்று பிரத்யேகமாக உள்ள விஷயங்களில் கனவும் ஒன்று...அதையும் அடுத்தவன் பார்த்து விட்டால்? பிரச்சனை தான் (நீங்கள் நமீதாவுடன் கனவில் டான்ஸ் ஆடுவதை உங்கள் மனைவி அறிந்து கொள்ள முடியும்) இப்போதைய மனவியல் வளர்ச்சியின் படி, நீங்கள் கனவில் உளறினால் ஒழிய நீங்கள் என்ன கனவு காண்கிறீர்கள் என்று மற்றவர் அறிய முடியாது..கனவின் போது மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை மின்சாரமாக மாற்றி நீங்கள் எந்த விதமான கனவு( 'இன்பமானதா' 'பயமானதா' 'வேதனையானதா' )காண்கிறீர்கள் என்று வேண்டுமானால் ஊகிக்கலாமே ஒழிய கனவில் என்ன கலர் சட்டை போட்டுக் கொண்டு இருந்தீர்கள் என்றெல்லாம் கூற முடியாது..

* இன்னொருவர் கனவில் நுழைவது : அடுத்தவன் கனவை அறியவே முடியாத போது நுழைவதாவது?

* இன்னொருவர் கனவை தீர்மானிப்பது: நம் கனவையே நாம் தீர்மானிக்க முடியாத போது அடுத்தவன் கனவை எவ்வாறு தீர்மானிப்பது? வெளியிலிருந்து தூண்டுதல்கள் மூலம் சில விஷயங்களை கனவில் உணரும் படி செய்யலாமே தவிர, (உதாரணமாக தூங்கும் போது உங்கள் உள்ளங்காலில் பனிக்கட்டி ஒன்றை வைத்தால் நீங்கள் இமய மலையில் 'ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' என்று பாடுவதாகக் கனவு வரலாம்.. ) வெளியிலிருந்து சில கெமிக்கல்களைக் கொடுத்து உங்கள் கனவை மணிரத்தினம் போல 'டைரக்ட்' எல்லாம் செய்ய முடியாது...
* கனவுக்குள் கனவு: கனவு என்பதே ஒரு மர்மப் பிரதேசம்.. மேகம் போல ரொம்ப 'Volatile ' கனவு வருவதற்குப் பின்னணியில் நிலையான ஒன்று தேவை...(உண்மை மட்டுமே கனவு காண முடியும்...மாயை அல்ல) மாஜிக்கில் வரும் கோழியை 'சிக்கன் 65 ' செய்ய முயல்வது போலத்தான்..எனவே கனவுக்குள் அதிக பட்சம் நாம் தூங்குவதாக வேண்டுமானாலும் வரலாம்.. கனவுக்குள் ஒரு கனவு வரும் அளவு,அந்த முதல் கனவு ஸ்திரமானது அல்ல...

*கனவின் மூலம் அடுத்தவருக்கு உத்தரவிடுவது: இதற்கு அவரை ஹிப்னாடிசம் செய்து அவரின் ஆழ் மனதிற்குக் கட்டளையிட்டு விடலாமே? எதற்கு கனவில் எல்லாம் புகுந்து கஷ்டப் பட வேண்டும்?

"நினைவு எங்கோ நீந்திச் செல்ல

கனவு வந்து கண்ணைக் கிள்ள

நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே..." -உயிரின் உயிரே(காக்க காக்க)


இந்தப் பாடல் காதலின் அனுபவத்தை விளக்கும் படி எழுதப் பட்டிருந்தாலும் இதைக் கேட்கும் போதல்லாம் எனக்கு ஒருவித தியான அனுபவம் வருகிறது... தனக்குள் ஆழ்ந்து சென்று தியானிக்கும் ஒரு சாதகனின் ஆரம்ப கட்ட அனுபவங்களை விளக்குவது போல் இந்தப் பாடல் உள்ளது...இதை எழுதியவருக்கும் , இசை அமைத்தவருக்கும், பாடியவருக்கும் நன்றிகள்...


~சமுத்ரா

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் ....







ஊருக்குப் போன போது சில கவிதைகள் தோன்றின....

கவிதையெல்லாம் ஊருக்குப் போகும் போது தான் தோன்றுமா
என்றால் அது கொஞ்சம் நிஜம் தான்...IT கம்பெனி ஒன்றின் உள்ளே உலகம்
மிக அழகாகத் தான் தெரிகிறது... பாய் பிரண்டுகள் கேர்ள் பிரண்டுகளுடனும்
கேர்ள் பிரண்டுகள் தங்கள் பாய் பிரண்டுகளுடனும் உலகிலேயே
மகிழ்ச்சியான ஜீவன்கள் போல உலாவிக் கொண்டு உள்ளார்கள்....

புத்தர் வெளி உலக அவலங்கள் தெரியாமல் வளர்க்கப் பட்டது
போல இவர்கள் எல்லாம் IT கம்பெனியின் உள்ளே 'ராமன் ஆண்டால்
என்ன விக்ரம் ஆண்டால் எனக்கென்ன' , Onsite போனோமா பணம்
பார்த்தோமா , வாரம் ஒரு முறை PVR சினிமா போனோமா என்ற மனப்பான்மையில்
இருக்கிறார்கள்...

ஆனால் கவிதைகள் மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் அதிகம்
தோன்றுவதில்லை... மகிழ்ச்சியாக எழுதினாலும் அதைப் படிப்பவர்களுக்கு அதனுடன் ஒன்ற முடிவதில்லை... 'வானில் மிதந்தேன், இறகுகள் இன்றிப் பறந்தேன்' என்றெல்லாம் எழுதினால் "எத்தன மில்லி போட்டாய்" என்று கேட்பார்கள்..
அதே சமயம் "கண்ணீரில் நான் படகு ஓட்டுகிறேன்" ,
உன் நினைவுகளையே நூடுல்ஸ் மாதிரி சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன் என்றெல்லாம் எழுதினால்
"சோ சோ என்னமா எழுதி இருக்கான்,அற்புதம் அற்புதம்" என்பார்கள்...


ஓகே இனி கவிதைகள்...
(இவை கவிதைகள் தான் என்று தயவு செய்து ஒத்துக் கொள்ளவும்)

* என்
கண்கள் என்னவோ
கறுப்பு வெள்ளை தான்..
அவை காட்டுவதோ
ஆயிரம் வண்ணங்கள்


*வேலம்பாளையம் கிராமத்தின்
திரையரங்கின் முன்னால்
சர்டிங் சூட்டிங்
விளம்பரத்தில்
வெளிநாட்டு ஆண்...


* நண்பனிடம் கடன் வாங்கிக் கொண்டு
இடித்துத் தள்ளும் கூட்டத்தை விட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி,
கையேந்தும் கிழவியைக் கடந்து சென்று,
ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்
அப்பாவை பார்க்கச் செல்கின்ற எனக்கு
நம்புவது கஷ்டமாக உள்ளது
"வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்" என்று
ஞானிகள் சொல்வதை..



~சமுத்ரா


Wednesday, August 4, 2010

ஒரு நிமிஷம் Mr.ஹீரோ!


சில நாட்களுக்கு முன் விகடனிலோ எதிலோ படித்த ஒரு கவிதை
ஞாபகம் வருகிறது:(வார்த்தைகள் மாறி இருக்கலாம்)...

வில்லன் பத்து பேரை அடித்தால்
ஹீரோ நூறு பேரை அடிக்கிறான்
வில்லன் பெண்கள் ஆடும் குத்தாட்டத்தை ரசிக்கிறான்
ஹீரோவும் ரசிக்கிறான்
வில்லன் குடித்து விட்டு டான்ஸ் ஆடுகிறான்
ஹீரோவும் ஆடுகிறான்-ஆனால்
படத்தின் கடைசியில் ஹீரோ மட்டும் வெற்றி பெற்று
ஹீரோயினை மணக்கிறான்...

இது இந்தக் காலத் திரைப் படங்களுக்கு எவ்வளவு உண்மை என்று
நினைத்துப் பார்க்கவும்....

நமது மண்ணின் மைந்தர்களான "ஹீரோ' க்களின் கடமை என்ன?
ஆட்டு மந்தைகள் போல் ரசிகர்களை வரவழைத்து அவர்களை
இரண்டு மணி நேரம் 'பன்ச்' டயலாக்குகளால் 'Entertain ' செய்வது மட்டும் தானா?
இல்லை 'எனக்கு எதிலும் கிக் இருக்க வேண்டும்' 'எனக்கு எல்லாமே பெஸ்ட் தான்
வேண்டும்' என்ற நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத தத்துவங்களை ரசிகர்களின் மனத்தில் விதைப்பதா?

ஒரு சாதாரண, நடுத்தரக் குடும்பத்தின் இளைஞன், ஒரு திரைப் படத்தைப் பார்க்கும் போது அந்த ஹீரோவுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான் என்ற சாதாரண "Psychology ' கூட
அவர்களுக்கு ஏன் தெரிவதில்லை? ஹீரோ திரைப்படத்தில் இயற்பியல் விதிகளை எல்லாம் மீறி
பறந்து பறந்து நூறு பேரை அடிக்கும் போது நம் பாவப் பட்ட இளைஞன் மனத்தில் 'நாமும் இவன் போல எதிரிகளை (?) அடித்து நொறுக்க வேண்டும்" என்ற ஆசை முளைத்து அடி மனதில் குடி புகுந்து கொள்ளலாம். ஆனால் நிஜ வாழ்கையில் அவனுக்குப் பாவம் எதிரிகள் தான் கிடைப்பதில்லை.. அந்த "ஆழ் மன" வன்முறையை அவன் மறை முகமாகத் தன் குழந்தைகளிடம் காட்டலாம்... அலுவலகத்தில் காட்டலாம்... தன் மனைவியிடம் காட்டலாம்... என் கேள்வி என்ன என்றால் நமது ஹீரோக்களின் லூசுத்தனமான நடவடிக்கைகளால்,மித மிஞ்சிய 'ஹீரோயிசத்தால்' சமுதாயத்தில் ஏற்படும் மனவியல் ரீதியான விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?

Of course , தன் இயல்பு வாழ்கையில் நடை பெறாத சுவாரஸ்யமான , அசாத்தியமான விஷயங்கள் சிலவற்றை திரைப்படத்தின் மூலம் ஒரு சாதாரணன் எதிர் பார்கிறான்.
அங்கேயும் நமது ஹீரோ டெய்லி ஆபீஸ்- சென்று ஒரே வேலை செய்து 17 -B பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து அம்மா அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து என்று இருந்தால் , அந்தப் படத்தை யார் பார்பார்கள்?

ஆனாலும் சினிமாவில் விஷயங்கள் எந்த அளவிற்கு நடை முறையை விட்டு விலகி இருக்கலாம்
என்ற 'Deflection index ' ஐ யார் தீர்மானிப்பது? ("A good movie is one that not only entertains but also enlightens " )

உதாரணமாக, சமீபத்திய திரைப் படம் ஒன்றில் (பெயர் வேண்டாம்) வரும் பிரபலமான 'பன்ச்':
'ஓங்கி அடிச்சா ஒன்ட்ற டன் வைட்டு டா" என்பது... வெளி நாட்டிலெல்லாம்
சாதாரண அறிவியலின் முன்னேற்றமாக, "Science Fiction " கதைகளை படமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது நம் ஹீரோக்கள் என்னடா என்றால்
சாதாரண அறிவியல் கூடத் தெரியாமல் பன்ச் டயலாக்குகள் விடுகிறார்கள்..என்னதான் ஓங்கி அடித்தாலும் 'ஒண்ணரை' டன் வெயிட் எப்படி வரும்? மேலும் ஒருவரை அடிக்கும் போது உணரப் படுவது
விசையே (Force ) தவிர எடை (weight ) அல்ல...சரி நம் ஹீரோ,
"ஐன்ஸ்டீன்" எப்படி gravity யும் acceleration ம் ஒன்று தான் என்று கண்டு பிடித்தாரோ அது மாதிரி ஏதாவது ஆராய்ச்சி கீராய்சி செய்து 'விசையும்' 'எடையும்' ஒன்று தான் என்று கண்டு பிடித்து விட்டார் என்றே வைத்துக் கொண்டால் , வில்லனை அடிக்கும் போது 'ஒண்ணரை' டன் நியூட்டன் விசை எப்படி வரும்? ஹீரோ அப்படியே வில்லன் மீது விழுவதாக வைத்துக் கொண்டாலும் ,வில்லன் உணரும் விசை
ஹீரோவை பூமி இழுக்கும் விசைக்குச் சமம்... அதாவது நியூட்டன் இரண்டாம் விதிப்படி , F=MA ...ஹீரோ 70kg என்று வைத்துக் கொண்டால்
M = 70 / 9 .8 kg , A = 9 .8 M /S2 எனவே F = 70N ..70 நியூட்டன் தானே வருகிறது? மேலும் நியூட்டன் மூன்றாவது விதிப்படி ,ஹீரோ 'ஒண்ணரை' டன் விசையுடன் வில்லனை அடித்தால் அதே விசையை ஹீரோவும்
தன் கையில்/உடலில் உணர மாட்டாரா? இதையெல்லாம் யோசிக்காமல் நாம் தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு என்னவோ நம் ஹீரோ பிரபஞ்ச ரகசியத்தை விடுவித்து விட்டது போல கைகள் தேயும் வரை கைதட்டிக் கொண்டு இருக்கிறோம்..

அடுத்தது, திரைப் படங்களில் வரும் கல்லூரிகள்.... பாடம் நடத்தும்
Professors எல்லாம் பெரும்பாலும் லூசுகளாக இருக்கும், மாணவர்களுடன் சேர்ந்து lady professors ஆட்டம் போடும் கல்லூரிகள் நிஜ வாழ்க்கையில் எங்கே இருக்கின்றன? இந்த மாதிரி கல்லூரிகளைத் திரைப்படங்களில் பார்த்து விட்டு தன் 'day -to -day ' காலேஜுக்குச் செல்லும் ஒரு இளைஞன்
ஏமாற்றம் அடைகிறான்... படத்தில் வருவது போல தமன்னா போன்ற பெண் ஒருத்தி அவனிடம் வந்து 'நான் அழகா இருக்கேனா? என்றெல்லாம்
கேட்பதில்லை... ஹும் இன்னொன்று நம் தமிழ்த் திரையுலகின் ஹீரோயின்கள்...ஹீரோக்களாவது படம் முழுக்க ரவுடிகள் போலத் திரிந்தாலும் படத்தின் இறுதியில் சமர்த்தாக பிரதமர்/ முதல் அமைச்சர் கைகளால் விருது வாங்கி விடுகிறார்கள்... ஹீரோயின்கள் படம் முழுவதும் அறை லூசுகளாகவே உலா வருகிறார்கள்... ஹீரோக்களை
அடிக்கடி வந்து entertain செய்வதற்கு sixth sense , common sense எல்லாம் எதற்கு தேவையில்லாமல்? என்று டைரக்டர் நினைத்து விடுகிறார் போலும்..(பெண்களை இப்படி லூசுகளாகக் காட்டுவதை ஏன் 'பெண்ணீய
வாதிகள்' எதிர்க்கவில்லை? )ஒரு பெண்ணை மையமாக வைத்து ஏன் ஒரு திரைப்படம் கூட இல்லை? ஹீரோவுக்கு ஊறுகாயாக வருவதை விட்டு
அவளுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லையா? இதன் 'பழி வாங்கலாகவோ'
என்னவோ சின்னத் திரையில் (மெகாஆஆஆ சீரியல்கள்) எல்லா கதைகளும் பெண்களை மையமாகக் கொண்டு 'கோகிலா' , 'காவேரி'
'முனியம்மா' என்ற டைட்டில்களுடன் வந்து , அதன் டைட்டில் சாங்குகளில்
பெண்கள் 'slow motion ' னில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்... ( டைட்டில் சாங்கில் 'உலகை வெல்வோம்' 'தடைகளை காலில் போட்டு மிதிப்போம்' என்றெல்லாம் ஜான்சி ராணி லெவலுக்குப் பாடி விட்டு சீரியலில் வீட்டின் மூலையில் உட்கார்ந்து கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பது வேறு விஷயம்)

அடுத்தது "காமெடியன்கள்' ....ஓகே இவர்களை விட்டு விடலாம் பாவம்...
(சிரிப்பதற்கு Logic பார்க்க வேண்டாம் என்பதால் அவர்கள் சொல்லும்
'இப்பவே கண்ணக் கட்டுதே' ' கெளம்பிட்டாய்ங்க' போன்றவை நன்றாகவே உள்ளன...Keep it up .. )

தமிழன் 'மூவாயிரம்' ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறள் எழுதி விட்டான், மனிதன் குரங்காக இருந்து விட்டு வால் அறுந்து 'மனுஷப்'
பயலாக மாறிய அடுத்த நாளே 'நாலடியார்' எழுத ஆரம்பித்து விட்டான் என்று
முழங்கும் அரசியல் வாதிகள் பேச்சைக் குறைத்துக் கொண்டு
கீழ்க்கண்ட விசயங்களை தமிழ்த் திரைப் படங்களில் தடை செய்ய உத்தரவு போட வேண்டும்(போர்க் கால அடிப்படையில்)

* "நான் அடிச்சா தாங்க மாட்ட , நாலு மாசம் டாய்லெட் போக மாட்ட" போன்ற பன்ச் டையலாக்குகள்

* எம் பேரு "சாமி' பக்கத்து வீட்ல 'மாமி ' என்றெல்லாம் (மொக்கை எதுகை மோனைகளுடன்) தன்னைத் தானே
அறிமுகம் செய்து உயர்த்திக் கொண்டு பாடும் டைட்டில் சாங்குகள்

* கதைக்கு சம்பந்தமே இல்லாமல் லாரிகள் மேலேயும் ரயில் மேலேயும் கும்பலாக நின்று கொண்டு ஆண் குரலில் பெண் பாடகிகள் பாடும் 'கரடி வந்தால் என்ன செய்வ , கரப்பாம் பூச்சி வந்தால் என்ன செய்வ" ? என்று கேட்கும் பாட்டுக்கள்..

* கிருஷ்ண பரமாத்மா வாய் திறந்து அகில உலகங்களும் காட்டியது போல
க்ளோசப்பில் வாய் பிளந்து 'வாஆஆஅ டாஆஆஆ' என்று வில்லன்கள்
கத்தும் காட்சிகள் (அகில உலகங்களாவது? வாயில் உள்ள சொத்தைபல் தான் தெளிவாகத் தெரிகிறது) (இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு அழும் குழந்தைகளை சமாளிப்பது பாவம் தாய்மார்களுக்கு
எவ்ளோ கஷ்டம்?)

* ஞான சூன்யமாக ஹீரோவைக் காட்டி விட்டு ஒரு சமயத்தில் ஹீரோயின் முன்பு ( 'காளி தாசன்' அருள் பெற்றது போல) ஹீரோ
செந்தமிழ்க் கவிதைகளை மூச்சு விடாமல் பாடும் பாடல்கள்...

* கிளைமாக்ஸ் நெருங்கி விட்டது என்ற ஒரே காரணத்திற்காக
தேவை இல்லாமல் 'Formula -1 ' ரேஞ்சுக்கு நடக்கும் கார் சேசிங்குகள்
தேவை இல்லாமல் உருட்டப்படும்,எரிக்கப்படும் வாகனங்கள்...

* Not to mention , புவி ஈர்ப்பு விசையை மீறி நடக்கும் சண்டைகள்...
etc

~சமுத்ரா